அத்தியாயம் 35
ஆரியன் சிறைக்கு சென்ற பிறகு, மாணிக்கத்தின் உதவியுடன் கந்தன் நீலகண்டனின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தான். ஆரியன் இந்த உதவியை மாணிக்கத்திடம் கேட்டிருந்தான்.
'தனக்கு உடல் நலம் சரி இல்லை தனது இடத்தில் இருந்து சிறிது காலம் இவர் வீட்டின் வேலையை பார்த்துக் கொள்வார், இவர் எனது தூரத்து உறவு முறை' என்று வேதாசலத்திடம் கூறி அவனை எப்படியோ நம்பவைத்து கந்தனை வேலைக்கு சேர்த்து விட்டார் மாணிக்கம்.
மலர்கனையாள் தன் சகோதரனை பார்த்துக் கொண்டு அந்த காட்டு பகுதியிலேயே வசித்து வந்தாள். அப்போது அவளுக்கு பதினேழு வயது தான்! இருந்தும் தன் சகோதரனின் உயிரை காப்பாற்றி கொடுத்த ஆரியனுக்காக தங்களால் முடிந்த ஏதேனும் உதவியை செய்து விட வேண்டும் என்று நினைத்தனர்.
ஒருமாத காலம் மாணிக்கத்தின் இடத்தில் இருந்து கந்தன் நீலகண்டனின் வீட்டு வேலைகளை பார்த்தார்.
பெருமளவு கடினப்பட்டு ஒவ்வொரு நாளும் வேதாசலத்தை பற்றி அறிய முயற்சி மேற்கொண்டார்.
வேதாசலம், நீலகண்டனின் அருகில் ஒருவரையும் அனுமதிப்பது இல்லை... எத்தனையோ முறை அவரிடம் பேச வேண்டும் என்று கந்தன் முயற்சி செய்தார் ஆனால் அது முடியாமல் போனது.
இப்படியே நாட்கள் சென்றது... கந்தன் அங்கு வேலைக்கு சேர்ந்து வெகுநாட்கள் ஆனது. தனக்கு ஒதுக்கப்படும் பாதி சம்பளத்தை கொண்டு மாணிக்கத்தால் தன்னை பார்த்துக் கொள்ள முடியாமல் போனது. கந்தனுக்கு வரும் வருமானத்தில் ஆளுக்கு பாதியாக எடுத்துக் கொள்ளலாம் என்று தான் பேசி வைத்திருந்தனர் ஆனால் இப்போது அந்த பாதி சம்பளத்தை வைத்து மருந்து மாத்திரை என எதையும் முழுமையாக வாங்கிக் கொள்ள முடியாமல் மாணிக்கம் கஷ்டப்பட்டார்.
அதனால் அவ்வப்போது இருவருமாக வேலைக்கு வந்தனர், அதனை கவனித்த வேதாச்சலம் "ரெண்டு பேருக்கு இங்க வேலை கிடையாது ஒன்னு நீ இந்த வேலையை பாரு இல்ல அவன் பார்க்கட்டும்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான்.
வேறு வழி இல்லாத மாணிக்கமும் இந்த மாத இறுதிவரை மட்டும் தனக்கு பதிலாக கந்தனை அங்கு வேலை செய்யச் சொன்னார். அவரது நிலமை கந்தனுக்கு நன்கு புரிந்தது, வருமானம் போதவில்லை எனும் போது என்ன செய்ய முடியும்? என்று புரிந்து கொண்டவர் இருக்கின்ற நாளைக்குள் எப்படியாவது நீலகண்டனிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்தார்.
அப்படியான ஒரு நாளில் மயக்கமடையக்கூடிய மூலிகையின் சாறை யாரும் அறியாத வண்ணம் வேதாசலம் குடிக்கும் பாலில் கலந்தான் கந்தன். அந்தப் பாலை குடித்துவிட்டு வேதாச்சலம் அவரது அறையில் மயங்கிப் போனார். அந்த நேரத்தை பயன்படுத்தி வீட்டில் உள்ள மற்ற வேலைக்காரர்கள் யார் கண்ணிலும் படாமல் நீலகண்டனின் அறைக்குள் நுழைந்தான் கந்தன்.
கை கால் அசைவின்றி மெத்தையில் கண்ணீர் வடிய தூக்கம் தொலைத்து படுத்து கொண்டிருந்தார் நீலகண்டன்.
இப்போது அவரை சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்துக்கும் காரணகர்த்தா அவர்தான் என்பதை அவரும் நன்கு அறிவார். இருந்தும் நடக்கும் எதையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள மனம் மறுத்தது.
அன்று இவர் தம்பி செய்த தவறுக்காக இன்று இவரது குடும்பமே சின்னா பின்னமாக சிதறி கிடக்கிறது. இப்படி ஒரு நிலை வரும் என்று முன்பே இவருக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் குணாவின் தவறிற்கு தண்டனை கொடுத்து இருப்பார்.
ஆனால் காலம் கடந்த ஞானம் யாருக்கும் பயன்பட போவதில்லை.
நீலகண்டனின் அறைக்கு வந்து கதவை தாழிட்ட கந்தன் அவரிடம் பேச முயற்சித்தான்.. திடீரென இந்நேரத்தில் அவரை அங்கு கண்டதும் முதலில் நீலகண்டன் அதிர்ச்சி அடைந்தார்.. பின்னர் உடனே கந்தன் "உங்க பையன் ஆரியன் தான் என்னை இங்கு அனுப்பி வைத்தார்" என்று சொல்லவும் நீலகண்டன் சற்று ஆசுவாசமானார்.
"என்ன நடந்தது யார் அவர்?" என்று வேதாச்சலத்தை குறிப்பிட்டு கந்தன் கேட்க, நீலகண்டன் எதையோ சொல்ல முயற்சி செய்தார்! ஆனால் அவரது உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை? அவர் சொல்ல வருவது கந்தனுக்கும் சரியாக விளங்கவில்லை.
நான் சொல்ல வருவது இவருக்கு புரியவில்லை என்பதை உணர்ந்து கொண்ட நீலகண்டன் ஒரு அலமாரியை நோக்கி தனது கரத்தை நீட்டினார்.
அவரது கரம் காட்டும் திசை பார்த்த கந்தனும் அந்த அலமாரியை திறந்து அதனுள் ஏதாவது இருக்குமா? என தேட ஆரம்பித்தார்.
அந்த அலமாரி முழுக்க துணிகளும் பைல்களும் மட்டுமே இருந்தது அவர் எதை குறிப்பிடுகிறார் என்பதை கந்தனால் புரிந்துகொள்ள முடியவில்லை...
கந்தனுக்கு தன் மனதில் உள்ளதை புரிய வைக்க முயற்சி செய்து தோற்றப் போன நீலகண்டனின் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்தது.
அடுத்து தனது குடும்ப புகைப்படத்தை நோக்கி கரத்தினை நீட்டினார் நீலகண்டன். அதனைப் புரிந்து கந்தன் அந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அவர் அருகில் செல்ல.. அதில் குணாவை குறிப்பிட்டு எதையோ சொல்ல முனைந்தார்.
ஆனால் முழுவதுமாக அவரால் சொல்லி முடிக்க முடியவில்லை. அவர் உதடு தாண்டி வார்த்தை வர மறுத்தது... தனது இயலாமையை எண்ணி தன்னைத்தானே நொந்து கொண்டார்.
நல்ல வேளையாக கந்தன் கலைத்துப் போட்ட அலமாரியிலிருந்து விழுந்த விசிட்டிங் கார்டு ஒன்று சரியாக நீலகண்டனின் கண்ணில் பட்டது.
அதனைக் கண்டதும் கண்ணீருடன் புன்னகைத்த நீலகண்டன் "ஆஆ... து" என்று குதூகலமாகி வேகமாக அந்த விசிட்டிங் கார்டை நோக்கி கரத்தை நீட்டினார்.
அவர் கைகாட்டிய இடத்தில் நிறைய பைல்களும் இருந்தது, இதுவா? இதுவா? என்று கந்தன் ஒவ்வொன்றையும் கேட்டு கேட்டு கடைசியாக அந்த விசிட்டிக்கார்டை குறிப்பிட்டு காட்டினான்.
அதனை கையில் எடுத்ததும் நீலகண்டன் "ஆமாம்" என்று வேகமாக தலையாட்ட அதனை அவரிடம் கொண்டு வந்தான் கந்தன்.
"இங்க போ... என் தம்பி" அந்த போட்டோவில் இருக்கும் குணாவின் முகத்தையும் அந்த விசிட்டிங் கார்டையும் குறிப்பிட்டு போ போ என்று அவர் சைகை செய்ய ஆரம்பத்தில் கந்தனுக்கு அது புரியவில்லை ஆனால் இந்த இடத்திற்கு இவர் தன்னை செல்ல சொல்கிறார் என்பதை மட்டும் கந்தனால் புரிந்து கொள்ள முடிந்தது.
உடனே அனைத்து பைல்களையும் எடுத்து அலமாரியிலேயே வைத்துவிட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்தியவன் அங்கிருந்து சென்றான்.
கந்தன் வேதாச்சலத்திற்கு கலந்து கொடுத்த மருந்து இயல்பான தூக்கத்தை மட்டுமே மனிதனுக்கு கொடுக்கும் அதனால் வேதாச்சலத்திற்கு பெரிய அளவுக்கு உடலில் அசதியோ அல்லது தன் நிலை எண்ணி பிறர் மீது சந்தேகமோ ஏற்படவில்லை.
அடுத்த நாளே அந்த விசிட்டிங் கார்டில் குறிப்பிட்டிருந்த விலாசத்திற்கு சென்றடைந்தான் கந்தன். செல்லும் முன் நீலகண்டன் குறிப்பிட்டு காட்டிய அந்த முகமுடையவர் யார் என்பதை மாணிக்கத்திடம் கேட்டறிந்து விட்டு தான் அங்கு சென்றான் "இவர் தான் நீலகண்டனின் தம்பி குணா" என்று மாணிக்கம் சொல்லியிருந்தார்.
அந்த விசிட்டிங் கார்டு இருக்கும் விலாசம் ஒரு மருத்துவமனையுடையது... அங்கு சென்று யாரிடம் எப்படி விசாரிப்பது என்று கந்தனுக்கு விளங்கவில்லை... காடு மலை என்று மட்டும் பார்த்து வளர்ந்தவனுக்கு அந்த இடம் சற்று மலைப்பாக இருந்தது.
அவனது நல்ல நேரமோ என்னவோ பிழைப்புத் தேடி, தங்களது காட்டுப் பகுதியில் இருந்து ஊருக்குள் வாழ வந்த ஒரு நபரை கண்டு கொண்டான்.
அங்கு அவர் துப்புரவு பணியாளராக இருந்தார். கந்தனை அவர்தான் முதலில் அடையாளம் கண்டு கொண்டார். இருவரும் சிறிது நேரம் தங்களது சொந்த விஷயங்களை பேசிவிட்டு இறுதியாக எனக்கு இப்படி ஒருவரை பற்றிய தகவல் தெரிய வேண்டும் என்று தான் வந்த விஷயத்தை பற்றி அவரிடம் கூறினார் கந்தன்.
அவரோ அங்கு தனக்குத் தெரிந்த பியூன் ஒருவருக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்து குணாவை பற்றி விசாரித்தான்.
"அவரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி இங்கதான் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருந்தாரு ஆனா ஒரு நாள் ஹாஸ்பிட்டல் உள்ள புகுந்து யாரோ அவரை கடத்திட்டாங்க, இது வெளியே தெரிஞ்சா ஹாஸ்பிட்டல் பேர் கெட்டுப் போயிடும்னு சொல்லி அவர் காணாமல் போனதாக அப்படியே அந்த விஷயத்தை மறைச்சிட்டாங்க" இதனைக் கேட்ட கந்தனும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி நின்றார்.
அப்போது அந்த பியூனோ ஏதோ நினைவு வந்தவனாக... "அவருடைய அறையில் ஒரு டைரி கிடைச்சது. பார்க்குறதுக்கு நல்லா இருந்தது, அதனால தூக்கி போட மனசு இல்லாமல் நான் தான் அதை எடுத்து வச்சேன்"
என்று அவர் சொன்னதும் உடனே அதை எடுத்து வரச் சொன்னான் கந்தன்.
அந்த டைரி முழுக்க ஆங்கிலத்தில் ஏதேதோ எழுதி இருந்தது.
அங்கிருந்த மூவருக்கும் ஆங்கிலம் படித்து புரிந்து கொள்ள தெரியாது என்பதால்... அதனை மட்டும் வாங்கிக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தான் கந்தான்.
அவன் மருத்துவமனையில் இருந்து வெளியே வருவதை தூரத்தில் காரில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் வேதாச்சலம்.