47
பெயர் மட்டுமல்ல அவளது கடந்த கால நிகழ்வுகள் அனைத்தையும் அவள் மனதில் இருந்து அகற்றவே நினைத்தான்.
மதி, அவனை அங்கிருந்து அழைத்துச் செல்ல, உள்ளே சென்று கதவினை தாழிட்டுக் கொண்டாள் சங்கவி.
அடுத்த நாள் இரவு உணவை உண்டு முடித்ததும் பாட்டி உறங்கி விட்டார். ஆனால் சங்கவிக்கு உறக்கம் வரவில்லை. அறைக்குள்ளும் இருக்க முடியவில்லை. கண்களை மூடினாலே அந்த ஊரின் ஞாபகமும், அந்த இரவின் நினைவும் கண்முன் வந்து அச்சத்தை கொடுத்தது. மூச்சு முட்டியது போல இருந்தது. இதற்கு மேலும் அறைக்குள் இருந்தால் மன அழுத்தம் அதிகமாகி பைத்தியம் பிடித்து விடும் போன்று தோன்றியது. உடனே அறைக்கதவை திறந்து கொண்டாள். மதி வெளியே தான் படுத்துக் கொண்டிருந்தான். அவனைத் தாண்டி அங்கிருந்து செல்ல நினைத்தாள். சிறிது நேரம் குளிர்ந்த காற்று முகத்தில் பட்டால், மனம் சற்று அமைதி அடையும் என்று நினைத்திருந்தாள். அவள் தன்னை கடந்து சென்றதும் சட்டென கண்களை திறந்து கொண்டான் மதி.
"எங்க போற?" என்று எழுந்து அமர்ந்து கேட்டவனை கண்டு திடுக்கிட்டு போனாள் சங்கவி.. பயத்தில் நெஞ்சை பிடித்துக் கொண்டாள்.
"நீங்க இன்னும் தூங்கலையா?" என்று ஒரு வித படபடப்புடன் கேட்டாள் சங்கவி.
"அதை நானும் கேட்கலாம் நீ இன்னும் தூங்கலையா?"
"இல்லை, கண்ணை மூடுனாலே அந்த ஊரும், அங்கு நடந்த விஷயமும் தான் என் கண்ணு முன்னாடி வந்து போகுது... தூங்கவே முடியல பயமா இருக்கு" என்றவளின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
"சரி, இப்போ எங்க போற?"
" வெளியே கொஞ்சம் காத்தாட நடந்துட்டு வந்தா, மனசு கொஞ்சம் அமைதியாகும்னு நினைச்சேன்" என்றவளை இரு நொடி அமைதியாக பார்த்தவன் எழுந்து கொண்டான்.
"நானும் வரேன்... இனிமேல் இப்படி நைட் நேரத்துல தனியா எங்கேயும் எழுந்து போகாத... அப்படியே போகணும்னு தோணுச்சுன்னா என்ன கூப்பிடு" என்றவன் அவள் அருகில் வந்து நின்று கொண்டான்.
"மன்னிச்சிடுங்க உங்க தூக்கத்தை கலைச்சிட்டேன்"
"அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல... நான் நிம்மதியா தூங்கி ரொம்ப வருஷம் இருக்கும்" என்றவன் நடக்க ஆரம்பிக்க, அவனுடன் சேர்ந்து அவளும் நடக்க ஆரம்பித்தாள். பெரிய வளாகம் அது சுற்றியும் மரங்கள் இருந்தது... அந்த இடத்தை சுற்றியே இருவரும் அமைதியாக நடந்து கொண்டிருந்தனர்.
அவளது முகம் இன்னுமே வாட்டமாகத்தான் இருந்தது. அதனை கவனித்த மதி " தேவை இல்லாமல் எதை பத்தியும் யோசிச்சு மனச போட்டுக் குழப்பிக்காத" என்ற ஆறுதலாக பேச முன்வந்தான்.
"எப்படி எதையும் யோசிக்காமல் இருக்க முடியும்?... நான் ஒரு கொலை பண்ணி இருக்கேன்" என்றவளின் கண்களில் அவளையும் அறியாமல் ஒரு துளி கண்ணீர் வழிந்தது.
"அதுல நீ எந்த தப்பும் பண்ணல" என்ற அவசரமாக இடைமறித்தான் மதி.
"தப்போ?சரியோ? எல்லா விஷயத்துக்கும் தண்டனை இருக்கே... எனக்கு அந்த ஊரில என்ன நடக்குதுன்னு தெரியணும்? நான் அங்க இருந்து வந்துட்டேன்!அதுக்கப்புறம் அங்க என்ன நடந்திருக்கும்? இது மட்டும் தான் என் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு... நடந்த உண்மை எல்லாம் போலீசுக்கு தெரிஞ்சு அவங்க என்னை கண்டுபிடிச்சு வந்திடுவாங்களானு ஒவ்வொரு நொடியும் பயமா இருக்கு"
"அப்படியே வந்தாலும் உனக்கு எதுவும் ஆகாது உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன். என்னை நம்பு எந்த சூழ்நிலையிலும் உனக்கு பாதுகாப்பா நான் இருப்பேன்" என்றவன் அவளது கண்களை ஆழ்ந்து பார்த்தான். அவனது பார்வையில் அவளுக்கான அரவணைப்பையும், பாதுகாப்பையும் அவள் உணர்ந்து இருக்க வேண்டும்.
"இன்னொரு விஷயம் சொல்றேன்... நம்ம ஒரு தப்பு பண்ணிட்டு அங்கயிருந்து வந்துட்டோம்னா! அதுக்கப்புறம் அந்த இடத்துல என்ன நடக்கும்னு நம்ம தெரிஞ்சுக்க நினைக்கவே கூடாது... மறுபடியும் அந்த இடத்துல என்ன நடக்குதுன்னு நம்ம தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறது, நம்மளை நாமே காட்டிக் கொடுத்ததற்கு சமம். அங்க என்ன வேணாலும் நடந்திருக்கட்டும் ஆனால் அங்கு என்ன நடந்திருக்கும்னு நீ யோசிக்க மட்டும் செய்யாத... அதை தெரிஞ்சுக்கணும்னு நினைக்கவும் செய்யாதே... அதுதான் நல்லது" என்று சொன்னவனின் கூற்று அவளுக்கு புரிந்தது.
முறிந்த காலில் போடப்பட்டிருக்கும் கட்டினை ஒவ்வொரு முறையும் அவிழ்த்து பார்த்து எலும்புகள் சரியாக பொருந்தி இருக்குமா என்று சந்தேகிப்பது எந்த அளவுக்கு முட்டாள்தனமோ அதே அளவிற்கான முட்டாள்தனம் தான் இது.
தவறு செய்த இடத்தில் தவறியும் மீண்டும் நின்றுவிடக் கூடாது. அந்த தவறு நம்மை காவு கொடுக்க அங்கேயேதான் காத்துக் கொண்டிருக்கும்.
அவனிடம் பேசிவிட்டு அறைக்குள் வந்தவள் தனது பாட்டியின் கரத்தைப் பற்றிக் கொண்டு நிம்மதியாக உறங்கினாள்.
*****
அதற்கு அடுத்து வந்த நாட்கள் எப்போதும் போலவே கடந்தது... மதி எப்போதும் போல நியூஸ் பேப்பரை தரையில் விரித்து அவர்களது அறைக்கு வெளியே படுத்துக் கொண்டான். அறைக்கு உள்ளே பாட்டியின் கரத்தைப் பற்றிக்கொண்டு உறங்கினாள் சங்கவி.
ஐந்து நாட்கள் கடந்தது... கொண்டு வந்த அனைத்து ஆடைகளுக்கு அழுக்காகி போனது. அதனால் அதனை துவைக்க முடிவு செய்தாள் சங்கவி. பாத்ரூமின் உள்ளேயே வைத்து தன்னுடைய மற்றும் பாட்டியின் ஆடைகளை துவைத்து முடித்தாள். மீண்டும் அறைக்குள் வந்தவள் ஒரு மூலையில் கிடந்த மதியின் ஆடைகளை கவனித்தாள். முதலில் அதனை கடந்து செல்லவே யோசித்தாள். பின்னர் என்ன நினைத்தாளோ அவனுடைய துணியையும் எடுத்து துவைக்க ஆரம்பித்தாள்.
துவைத்து முடித்தவளுக்கு அதனை எங்கே காய போடுவது என்று தெரியவில்லை... உடனே வெளியே நின்ற மதியை அழைத்தாள். இப்போதெல்லாம் அவனை அழைப்பதற்கு அவள் தயங்குவதில்லை. ஒருநாளில், மூன்று நான்கு முறையாவது அவனை அழைத்து விடுவாள். அவளது தினசரி நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகப் போனது. இப்போது அவனைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உணர்ந்து தயக்கமுடைத்து பேச ஆரம்பித்திருந்தாள்.
அங்கிருப்பவர்கள் எல்லாம் அவர்களது துணியை வெறுமனமே தண்ணீரில் நனைத்து சுவரில் காயபோடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதனால் அவள் கேட்கும்போது அவனும் அதே சுவரை கை காட்ட, சங்கவியின் முகம் நொடியில் மாறியது. உடனே அதனை உணர்ந்து கொண்டவன் "என்ன ஆச்சு?" என்று கேட்டான்.
"இல்ல கயிறு மாதிரி ஏதாவது கிடைக்குமா?" என்று கேட்டாள்.
"எதுக்கு?"
"எதுக்குன்னு கேட்டா என்ன சொல்றது? துணி காயப்போட கொடி வேண்டாமா?" என்று சட்டென கேட்டாள். அது அவனது இதழில் மெல்லிய புன்னகையை அரும்ப செய்தது. தயக்கமுடைத்து பழையபடி கொஞ்சம் பேச ஆரம்பித்து இருந்தாள். அது அவனுக்கும் புரிந்தது.
உடனே கயிறினை எடுத்து வந்து அங்கிருந்த இரு மரங்களுக்கு நடுவே கொடியினை கட்டினான். அதனைப் பார்த்து கொண்டு அவர்களுக்கு பின்னால் நின்ற அவனது இரு கூட்டாளிகள் தங்களுக்குள்ளேயே பேசி சிரித்துக்கொண்டனர்.
"மதி, கடமை எல்லாம் செய்யுற போல?" கணவனின் கடமையை மனதில் வைத்துக் கொண்டு அவர்கள் கேலியாக பேசினர். இது சங்கவிக்கு புரியவில்லை ஆனால் மதிக்கு புரிந்து விட்டது. அவர்களை முறைத்துப் பார்த்தவன் " கொஞ்சம் அந்த பக்கம் போறீங்களா?" என்றபடி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தான்.
துணியை காய போடுவதற்கு முதற்கொண்டு அவன் தான் அவளுக்கு உதவி செய்தான். அதில் அவனது துணியும் இருப்பதை அப்போதுதான் அவன் கவனித்தான்.
அதனை கையில் எடுத்து வைத்துக் கொண்டு "இது என்னோட சட்டை மாதிரி இருக்கு?" என்று கேட்டபடி சங்கவியின் முகத்தை பார்த்தான்.
"ஆமா உங்களோடது தான்" என்றவள் அவளது வேலையை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
மதிக்கு இதெல்லாம் சற்று சங்கடமாக இருந்தது... உடனே "இனிமேல் இதெல்லாம் பண்ணாத" என்று முகத்தில் அடித்தார் போல சொன்னான்.
சட்டென அவனது முகத்தை திரும்பிப் பார்த்த சங்கவி 'ஏன்? எதற்கு?' என்று எதுவும் கேட்கவில்லை... அமைதியாக திரும்பியபடி "சரி" என்று மட்டும் பதில் கொடுத்தாள்.
அதன் பிறகு அவன் அங்கிருந்து செல்ல பார்க்க... சங்கவியன் குரல் அவனை தடுத்து நிறுத்தியது.
"இங்க வந்த இத்தனை நாள்ல நீங்க எனக்கு எத்தனையோ உதவி பண்ணியிருக்கீங்க? அதுக்காக இல்லனாலும் நீங்க எங்களுக்கு சாப்பாடு போட்டதுக்காகவாவது நான் ஏதாவது வேலை செய்யணும் இல்ல... சாப்பாட்டை என்னால பிச்சையா ஏத்துக்க முடியாது" என்று அவளும் அவன் சொன்ன தோரணையிலே பதில் சொல்ல, அவனுக்கு தனது சிறுவயது ஞாபகம் கண்முன் வந்து போனது. நெஞ்சில் சுறுக்கென்று ஒரு வித வலி ஊடுருவி சென்றது.
ஐம்பது யாசகர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக... பலூன் விற்றுக் கொண்டிருந்த இவனது கரத்தையும் பிடித்து இழுத்து வந்து வரிசையில் நிற்க வைத்து உணவு கொடுத்த பாண்டியனின் முகம் கண்முன் வந்து போனது.
தாய், தந்தையின்றி தெருவில் படுத்து கிடந்த சிறுவனான மதிக்கு அடைக்கலம் கொடுத்தது கால் ஊனமுற்ற ஒரு முதியவர். அவருக்காக தான் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தான் மதி.
"எந்த ஒரு நிலையிலும் உணவை மட்டும் பிச்சையாக வாங்கிவிட கூடாது" என்று அந்த முதியவர் சொன்ன வார்த்தை அந்த வயதிலேயே மதியின் மனதில் நன்றாக பதிந்து போனது... அதன் விளைவாக பாண்டியன் கொடுத்த உணவினை வாங்க மறுத்தவன், அவனிடம் அடி வாங்கியே திரும்பினான்.
அந்த நிகழ்வுகள் எல்லாம் அவன் மனதை பிசைய ஆரம்பித்தது. எதுவும் பேச முடியாத நிலையில் அமைதியாக அவ்விடம் விட்டு சென்றான்.
வாழ்க்கையில் இவன் சந்திக்காத வலிகளே கிடையாது. அடைக்கலம் கொடுத்த முதியவரும் இறந்துவிட, விதி இவனை பாண்டியனிடம் கொண்டு வந்து சேர்த்தது. 10 வயதில் இவர்களுடன் வந்து சேர்ந்தவன் இதோ இப்போது இவனுக்கு 22 வயது.
அவனது குழந்தை பருவத்தில் இருந்து வாலிப பருவம் வரை அனைத்தும் இவ்விடத்திலேயே கரைந்து கொண்டிருந்தது.
அடுத்த இரண்டு நாட்கள் சங்கவியும், மதியும் பேசிக்கொள்ளவே இல்லை... அவன் இவ்வாறு அமைதியாக இருக்கவே, இதற்கு மேலும் அவனிடத்தில் பாதுகாப்பிற்காக இப்படி அடைப்பட்டு கிடக்க, சங்கவிக்கு நெருடலாக இருந்தது. இங்கிருந்து எங்காவது சென்று விடலாமா என்று ஒரு உணர்வு வந்தது. ஆனால் எங்கே செல்வது என்ற கேள்வி? எப்போதும் போல தலையில் ஏறி நின்று கொண்டது.
ஒரு பெரு விழாவில் அழையா விருந்தாளியாக வந்து சபை நடுவில் நிற்பது போன்று இருந்தது அவளது மனநிலை... இப்படியான ஒரு நாளில் பாட்டிக்கு பயங்கரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டி மதியிடம் வந்தாள் சங்கவி.
அவனும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று திரும்பி வந்தான். வயது முதிர்ச்சியின் காரணமாக ஏற்படும் பாதிப்பு என்று மருத்துவர் சொன்னதை அப்படியே சங்கவியிடம் சொன்னான் மதி.
மருந்து, மாத்திரைகளை சங்கவியிடம் ஒப்படைத்தவன் அங்கிருந்து செல்ல பார்க்க... "ஒரு நிமிஷம்" என்றபடி அவனை தடுத்து நிறுத்தினாள் சங்கவி.
"எங்களுக்கு தனியா ஒரு வீடு மட்டும் ஏற்பாடு பண்ணி கொடுக்க முடியுமா? இங்கே இருக்கிறதுக்கு ஒரு மாதிரி இருக்கு" என்றவளின் கண்களில் சட்டென ஒரு துளி கண்ணீர் வடிந்தது.
"ஏன்? என்னாச்சு? இங்கே யாராவது ஏதாவது சொன்னாங்களா?" என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள்... "நாங்க இங்க இருக்கிறது உங்களுக்கு தான் கஷ்டம்.. அதனால தான் போகணும்னு சொல்றேன்" என்றாள்.
"போகணும்னா எங்க போறதா இருக்க? நீங்க இங்க இருக்கிறது எனக்கு கஷ்டமா இருக்குன்னு நான் சொல்லவே இல்லையே"
"உங்களுக்கு கஷ்டமா தான் இருக்கு. அதனால தானே நீங்க என்கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்கிறீங்க?" என்று அவள் சொன்னதும், இதுவரை தான் இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை நிதானமாக வெளியிட்டான்.
"சும்மா பேசிப்பேசி உன்னை தொல்லை பண்ண வேண்டாம்னு தான் நான் அமைதியா இருந்தேன்... அது மட்டும் இல்லாம நீ எனக்காக பண்ற சில விஷங்கள் எனக்கு ஒரு மாதிரி இருக்கு. என்ன? ஏதுன்னு சொல்ல தெரியல, தேவையில்லாத சில நினைவுகள் வருது, அது மட்டும் இல்லாமல்" என்றவன் எப்படி சொல்வது என்று தடுமாறியபடியே " இதெல்லாம் பழகிடுமோனு எனக்கு பயமா இருக்கு... எல்லாத்தையும் நான் எதிர்பார்க்க ஆரம்பிச்சுடுவேன்னோன்னு தோணுது" என்றவன் அவளது கண்களைப் பார்த்தான்.
இவன் பேசுவதன் அர்த்தம் அவளுக்கு ஒரு துளி கூட புரியவில்லை... அவளைப் பொறுத்தவரை அவள் கேட்ட கேள்விக்கான பதில் இது இல்லை.
"இருக்க சொல்லுறீங்களா? போக சொல்லுறீங்களா?" என்று நேராக கேட்டாள்.
ஆழ்ந்த மூச்செடுத்தவன் "சீக்கிரமே உங்களுக்கு வேற வீடு பார்க்கிறேன்" என்று சொன்னபடி அங்கிருந்து சென்றான்.
கொஞ்சம் கொஞ்சமாக சங்கவியை அவளது உறவாக அவன் நினைக்க ஆரம்பித்து இருந்தான். இது எப்போது நிகழ்ந்தது என்று அவனுக்கும் விளங்கவில்லை. ஆனால் தினமும் அவன் தேடும் ஒரே நபராக அவள் மட்டுமே இருந்தாள். ஆர்வமோ! ஈர்ப்போ! நட்போ! காதலோ! ஏதோ ஒன்று அவளிடத்தில் அவனை கட்டி போட்டது.
இவர்கள் இருவரையும் சுற்றி கொடூரமான சூழ்நிலைகள் உள்ளது. இருவருமே வெளியே இருந்தாலும் சிறை வாழ்க்கை வாழ்வது போல தான்... அப்படி இருந்த போதிலும் மனதில் ஒரு இதமான உணர்வு. ஏழு நொடியாயினும், ஏழு ஜென்மமாயினும் இந்த உணர்வு மரணம் வரையிலும் அவனது நினைவில் இருக்கும்.
அனைத்தையும் இழந்து விட்டு தனக்கென்று எதுவும் இல்லாத நிலையில் மரத்தடியில் அமர்ந்திருப்பவனை இதமாக தீண்டி செல்லும் தென்றல் போல தான் அவனுக்கு அவள்.
அடுத்த நொடி அவர்களது வாழ்வில் என்ன நடக்கும் என்று இருவருக்கும் தெரியாது... ஆனாலும் இந்த நொடி இதமாக இருந்தது. அதனை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அவன் மனம் நினைத்தாலும்... முழுவதுமாக ஏற்க முடியவில்லை. அதனால்தான் விலகி நின்றான்.
****
அடுத்த நாள் பாண்டியனின் பிறந்த நாள்... அதனால் இவர்கள் இருக்கும் இடத்திற்கு மது, மாது என அனைத்தும் வந்து சேர்ந்தது. சங்கவியும் அவளது பாட்டியும் அறைக்குள் இருந்தனர் அறைக்கு வெளியே மதி நின்று கொண்டிருந்தான்.
ஆளாளுக்கு ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு அவரவர்கள் அறைக்குள் சென்றுவிட்டனர். இவனைத் தேடி நிர்மலா வந்தாள்.
"என்னடா நல்லவனே? இன்னிக்கும் விரதமா?" என்று நக்கலாக கேட்டாள்.
"தயவு செய்து உனக்கு வேற ஏதாவது வேலை இருந்தா பாரு இல்லன்னா இங்க இருந்து கிளம்பு" என்றபடி அவளை அங்கிருந்து அனுப்பப் பார்த்தான் மதி.
அந்த நேரம் கடைசி அறையில் இருந்து விலைமாது ஒருவள், உள்ளே இருந்தவனை திட்டியபடியே வெளியே வந்தாள்.
"என்ன ஆச்சுடி?" என்று அவளை பார்த்து நிர்மலா கேட்க,
"அசிங்கம் பிடிச்சவன்டி இவன்... நான் கிளம்புறேன் காசும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்" என்றபடி அந்த பெண் விறுவிறுவென அங்கிருந்து சென்றாள். அவளைப் பின்தொடர்ந்தபடி அறைக்குள் இருந்தவன் வெளியே வந்தான்.
"ஏய் நில்லுடி ***" என்று தகாத வார்த்தை சொல்லி அவளை திட்டியபடியே அவன், அவளின் பின்னே செல்ல... பதிலுக்கு அவளும் அவனை திட்டியபடியே அங்கிருந்து வேகமாக சென்றாள்.
"நீ போனா போடி... எனக்கு என் நிம்மி இருக்கா" என்றபடி அவன் நிர்மலாவை நோக்கி வர, கையில் வைத்திருந்த ஹேண்ட் பேக்கை கொண்டு அவனது தலையில் ஓங்கி அடித்தாள் நிர்மலா.
"நீ எல்லாம் எனக்கு செட்டாக மாட்ட ஒழுங்கு மரியாதையா ஓடிப் போயிடு" என்று அவள் சொல்ல, அவர்கள் இருவருக்கும் இடையே கைகலப்பு உருவானது. அதனை மதி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
ஆனால் இந்த சத்தம் கேட்டு அறைக்குள் இருந்த சங்கவிக்கு நெஞ்சம் படபடக்க ஆரம்பித்தது. மதி தான் யாரிடமோ விவாதம் செய்கிறான் என்ற எண்ணத்தில் கதவின் பக்கத்தில் செவியை வைத்து வெளியே நடப்பதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
நிர்மலா மறுக்கவும், அதீத போதையில் இருந்த அந்த ஆள் அருகில் இருந்த ஒரு பெரிய கம்பியை எடுத்து நிர்மலாவை தாக்க வர... இடையே வந்த மதி அதனை தடுத்து பிடித்துக் கொண்டான். நூலிழையில் உயிர் தப்பினாள் நிர்மலா.
"என்னையே தடுக்கிறியா நீ?" என்று அந்த ஆள் எகிறிக் கொண்டு சண்டைக்கு வந்தான்.
"மரியாதையா உள்ள போயி தூங்கு" என்ற மதி அவனை அங்கிருந்து அழைத்துச் செல்ல பார்க்க... இருவருக்கும் நடந்த பலத்த மோதலில் சங்கவி இருக்கும் அறையின் கதவின் மீது யாரோ சாய்வது போன்று இருந்தது. வெளிய சத்தம் அதிகமாக கேட்கவே மதிக்குத்தான் ஏதோ பிரச்சனை போல என்ற எண்ணத்தில உடனே அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் சங்கவி.
வெளியே வந்தவளை பார்த்து ஏகாத்துக்கும் கோபம் அடைந்தான் மதிவாணன்... "எதுக்கு வெளியே வந்த?" என்று கேட்டான். எத்தனையோ இடங்களில் வீடு தேடி அலைந்து விட்டான் ஆனால் ரவுடிக்கு யார் வீடு தருவார்? வேறு வழி இல்லாமல் தான் இப்படி ஒரு சூழ்நிலையில் அவளை இங்கேயே அவன் தங்க வைத்திருந்தான். இன்று இப்படி ஏதாவது ஒன்று நடக்கும் என்று தெரிந்து தான் கதவினை பூட்டி வைத்துவிட்டு வெளியவே காவலுக்கு நின்றிருந்தான்.
அதனை உணராமல் அவள் கதவை திறந்து கொண்டு வெளியே வர...
மதியின் மீதிருந்து கரத்தை எடுத்த அந்த குடிகாரன் " இந்த பொண்ணு அழகா இருக்கே, இவளை உள்ள ஒளிச்சு வச்சுட்டு தான் நிம்மிக்காக என்கிட்ட சண்டை போடுறியா?... சரி நிம்மியை நீயே வச்சுக்கோ, இவளை நான் வச்சுக்கிறேன்" என்றவன் சட்டென சங்கவியின் கருத்தை பிடித்து இழுக்க... அவனது முகத்தில் ஓங்கி குத்தி இருந்தான் மதிவாணன்.
"*** யார் மேல கை வைக்கிற?" சங்கவிய பிடித்து தன் கைவளைவுக்குள் வைத்துக் கொண்டான்.
கீழே விழுந்தவனுக்கு அது பெரும் அவமானமாக இருந்தது... அவன் விழுந்த இடத்தில் கையில் கிடந்த மது பாட்டில் ஒன்றை கையில் எடுத்தவன் நொடியில் அதனை மதியின் தலையில் அடித்து உடைத்தான்.