அத்தியாயம் 40
ஆரியன் சிறையில் இருப்பதை நினைத்து வாடிய நீலகண்டன் இப்போதெல்லாம் சரியாக அலுவலகத்திற்கு செல்வதில்லை. தொழிலை முழுமையாக வேதா தான் பார்த்துக் கொண்டார்.
இப்போதெல்லாம் வேதா இல்லாமல் அலுவலகத்தில் சிறு தூசி கூட அசையாது என்ற நிலைதான். வேலையாளாக அலுவலகத்துக்குள் நுழைந்தவன் இப்போது பங்குதாரராகவும் மாறினான்.
ஆரியன் கைது செய்யப்பட்டவுடன் அய்யாகண்ணு வீட்டில் இருந்த தனது மகள் கயல் விழியை தன்னோடு அழைத்து வந்து விட்டாள் சாருலதா.
மதுப்பழக்கம் அதிகம் இல்லாத நீலகண்டன் இப்போதெல்லாம் எப்போதும் மது பாட்டலும் கையுமாகவே இருந்தார். அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத சாருலதா "எதுக்காக இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க?" என்று ஒரு நாள் நேரடியாகவே கேட்டு விட்டாள்.
நாற்காலியில் அமர்ந்தபடியே அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவர் எதுவும் பேசவில்லை அமைதியாக மீண்டும் மதுபானத்தை அருந்த தொடங்கியிருந்தார். தனது பேச்சுக்கு மரியாதை இல்லாமல் அவர் செய்யும் செயலில் சினம் கொண்ட சாருலதா அவர் கையில் இருந்த மது குவலையை தட்டி விட்டாள். அதில் கோபமடைந்த நீலகண்டன் அவளை அடிக்க கை ஓங்கினார். ஆனால் அவளது கூர்மையான பார்வையில் நீண்ட கை அப்படியே பின் வாங்கியது.
"எதுக்கு நிறுத்திட்டீங்க? அடிங்க, அடிங்க மிஸ்டர் நீலகண்டன். தைரியம் இருந்தா அடிச்சு பாருங்க, நீங்க அடிச்சா அமைதியா வாங்கிட்டு போயிடுவேன்னு நினைக்காதீங்க, உங்களுக்கு நல்லா தெரியும் நான் மத்த பொண்ணுங்களை மாதிரி கிடையாது" என்று அவள் நிமிர்ந்து பேச, சலித்துக் கொண்ட நீலகண்டன் அங்கிருந்து செல்ல பார்த்தார்.
"எங்க போறீங்க? உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்"
"உண்மைதான் நீ மத்த பொண்ணுங்கள மாதிரி கிடையாது என் பிரச்சனையே அது தான்" என்று திரும்பி நின்றபடி அவர் பேச, அவரது கரத்தை பிடித்து இழுத்து தன் பக்கம் திருப்பிய சாருலதா
"என்ன சொல்லணும்னாலும் நேரடியா சொல்லுங்க" என்றாள்..
அவளது கரத்தை ஆக்ரோஷமாக உதறி விட்டவர் "என்ன சொல்ல சொல்ற? ஹான் என்ன சொல்ல சொல்லுற? நம்ம பையன் இப்ப ஜெயில்ல இருக்கான் அந்த கவலை உனக்கு வேணா இல்லாம இருக்கலாம் ஆனா என்னால உன்னை மாதிரி சாதாரணமா இருக்க முடியாது. அவன் என் பையன், என் ரத்தம் எனக்கு வலிக்கத்தான் செய்யும்.. அதை மறக்க தான் இந்த கருமத்தை குடிச்சிட்டு இருக்கேன், இதுக்கெல்லாம் உனக்கு விளக்கம் கொடுக்கணுங்கிற அவசியம் எனக்கு கிடையாது. என்ன சொன்ன அடிச்சா அமைதியா இருக்க மாட்ட! ம்ம்ம் சரி தான். உன்னை அடிக்கிற அளவுக்கு எல்லாம் எனக்கு தைரியம் இல்லைம்மா தாயே... இது என் வீடு!! இங்க நான் இப்படித்தான் இருப்பேன். உனக்கு விருப்பம் இருந்தா இங்க இருக்கலாம் இல்லையா தாராளமா நீ இங்க இருந்து கிளம்பலாம், நான் உன்னை தடுக்க மாட்டேன்" என்று அவர் சொல்ல கண்கள் சிவக்க அவரையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்த சாருலதா உடனே தன் அறைக்குச் சென்று தனது உடமைகளை எல்லாம் எடுத்து அடுக்க ஆரம்பித்தாள். அவளது செயல் புரிந்ததும், விட்டத்தை பார்த்து பெருமூச்சு விட்ட நீலகண்டன் அப்படியே ஓய்ந்து போய் நாற்காலியில் அமர்ந்தார்.
தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்லும் சாருலதாவை பார்த்தபடியே அமைதியாக இருந்தார் நீலகண்டன். அவள் வாசல் தாண்டி வெளியே செல்லவும், கயல்விழி வீட்டுக்குள் வரவும் நேரம் சரியாக இருந்தது.
வாசலில் மகளை கண்டவுடன் "கயல் வந்துட்டியா? சீக்கிரம் ட்ரெஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ணிட்டு வா, இங்கேயிருந்து கிளம்பணும்" என்று சொன்னாள்.
"எங்க மம்மி?" என்று குழந்தை புரியாமல் கேட்டது.
"உன் பாட்டி வீட்டுக்கு போறோம்"
"பெங்களூருல இருக்காங்களே அவங்க வீட்டுக்கா?"
"ப்ச் ஆமாம் டி சீக்கிரம் கிளம்பிவா?"
"எதுக்கு திடீர்னு கிளம்புறோம் மம்மி என்ன ஆச்சு?"
"சும்மா கேள்வி கேட்டுட்டு இருக்காத விழி, கிளம்பி வர சொன்னா வர வேண்டியது தானே? எதுக்கு இவ்ளோ கேள்வி கேட்டுட்டு இருக்க? போ" என்றவர் கயலின் முதுகில் கைவைத்து வலுக்கட்டாயமாக அவளை உள்ளே பிடித்து தள்ளினாள்.
அதனை கண்டா நீலகண்டன் "என் பொண்ணை எதுக்குடி கூப்பிடுற? அவள் எங்கேயும் வர மாட்டா, போகணும்னா நீ போ, என் பொண்ணு என்கூட தான் இருப்பாள்" என்று வாதம் புரிந்தார்.
அதற்கு சாருவும் "அவள் எனக்கும் பொண்ணுதான்.. அவள் என்கூட வர்றதுல உங்களுக்கு என்ன பிரச்சனை" என்று பதில் வாதம் புரிந்தாள்.
ஆனால் இவர்கள் இருவரது சண்டையையும் பார்க்கும் மனநிலையில் இல்லாத கயல்விழி அமைதியாக தன் அறை நோக்கிச் சென்று விட்டாள்.
இங்கு இத்தனை பிரச்சனை நடந்து கொண்டிருக்க அதனை பற்றி எல்லாம் கவலையே இல்லை என்பது போல முழு போதையில் தன் அறையில் சுருண்டு கிடந்தான் குணா.
வாசலில் கணவன் மனைவியின் சண்டை இன்னும் ஓயவில்லை.
"மரியாதையா கயலை என் கூட அனுப்பி வையுங்க" என்று ஆக்ரோஷமாக கத்தினாள் சாருலதா.
"முடியாது" என்று அவளுக்கு சற்றும் குறையாத வேகத்தில் பதில் சொன்னார் நீலகண்டன்.
"ஏன் முடியாது? உங்க பையனை போலவே இவள் வாழ்க்கையும் சீரழிஞ்சா தான் உங்களுக்கு சந்தோஷமா"
"என்னடி பேசுற நீ? ஒரு அம்மா மாதிரியா பேசுற?"
"நான் அவளோட அம்மாவா பேச போயி தான், நீங்க இப்படி தைரியமா நின்னு என்கிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க"
"கொஞ்சமும் உனக்கு ஆரியன் மேல அக்கறை இல்லையா லதா? ஏதோ மூணாவது மனுஷனை பத்தி பேசுற மாதிரி பேசுற?"
"என் அக்கறையையும், பாசத்தையும் எல்லார் கிட்டயும் வெளிச்சம் போட்டு காட்டணுங்குற அவசியம் எனக்கு இல்லை, உங்க பையன் தப்பு பண்ணான் அதுக்கான தண்டனையை இப்போ அனுபவிச்சிட்டு இருக்கான் அவ்ளோ தான்"
"எப்படி உன்னால இப்படி எல்லாம் பேச முடியுது? தப்பே பண்ணி இருந்தாலும் அவன் நம்ம பிள்ளை, அவனை காப்பாத்த வேண்டியது நம்ம கடமை லதா"
"அப்படி ஒரு கடமை எனக்கு கிடையாது... தப்பு பண்ணவன் யாராயிருந்தாலும் தண்டனை அனுபவிக்கணும். நம்ம பையன் அப்படிங்குறதால பண்ண தப்பு சரியாகிடுமா? இல்லை போன உயிர் தான் திரும்பி வந்திடுமா?"
"எதிர் தரப்பு வக்கீல் மாதிரி பேசாமல் நம்ம பையனுக்கு அம்மா மாதிரி யோசிச்சு பாரு அப்போதான் உனக்கு என் வலி புரியும்"
"என்னால அப்படி எல்லாம் யோசிக்க முடியாது. உங்க வலி உங்களுக்கு பெருசு, என் பையன் இப்படி கொலைகாரணா ஆகிட்டானேங்குற என்னோட வலி எனக்கு பெருசு, வெளியே தலை காட்ட முடியல, என்னோட ஜுனியர்ஸ் எல்லாம் என்னை முன்னாடி விட்டு பின்னாடி பேசுறாங்க, அந்த இடத்தில் அவமானப்பட்டு கூனி குறுகி நிற்கிற எனக்கு தான் உங்களை விட வலி அதிகம்" என்று பேசுபவளை கண்டு நீலகண்டனுக்கு எரிச்சலாக இருந்தது.
இப்படி ஒரு தாயை அவன் கற்பனையிலும் சிந்தித்து இருக்க மாட்டான். தன் மனைவி நீதி, நியாயம் என்று பேசுபவள் என்பது இவனுக்கு தெரியும், ஆனால் மகன் விஷயத்தில் கூடவா இப்படி இருப்பாள் என்று நினைக்கும் போது வேதனையாக இருந்தது.
இவர்களது சண்டை தடுப்பணை இல்லாத நதி போல நீண்டு கொண்டே இருந்தது, ஒருகட்டத்தில் தன் மகளையும் எதிர்பாராமல் அங்கிருந்து கிளம்பி இருந்தாள் சாருலதா.
அங்கு தன் அறைக்குள் வந்த கயல் விழி கதறி அழுது கொண்டிருந்தாள்.
எப்போதும் "அண்ணா, அண்ணா" என்று ஆரியன் பின்னே சுற்றி திரிந்த இந்த பட்டாம் பூச்சியின் வண்ணங்கள் எல்லாம் கலைந்து போயிருந்தது.
"ஆரியன் கொலை செய்திருக்க மாட்டான்" என்று நம்பிய இரு ஜீவனில் இவளும் ஒருவள். மற்றொருவன் விவேக்.
'ஆனால் அவன் ஏன் தன் மீது அக்கறை இல்லாமல் விட்டு சென்றான்' என்ற ஆதங்கமே அவளை இன்று இவ்வாறு அழ வைத்தது.
'இன்று அவன் மட்டும் என்னோடு இருந்திருந்தால் தாய், தந்தை என யாரையும் எதிர்பார்க்காமல் நிம்மதியாக இருந்திருப்பேனே' என்று யோசித்தவள் கலங்கி நின்றாள்.
அந்நொடி அவளது அலைபேசியில் 'டிங்' என்று ஒரு சத்தம். கண்ணீரை துடைத்துக் கொண்டு அதனை எடுத்து பார்த்தாள். ஒரு அலைபேசி எண்ணில் இருந்து இவளது எண்ணிற்கு இவளின் குளியல் வீடியோக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. அதனை பார்த்தவள் அப்படியே உறைந்து போனாள்.
இரண்டு நாட்களுக்கு முன்பாகவே இவளது எண்ணிற்கு அந்த குளியல் அறை புகைப்படத்தை ஒருவர் அனுப்பி வைத்திருந்தார். ஆனால் அந்த எண் அவளுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு எண் என்பதால் எதுவும் செய்யமுடியாத நிலையில் அமைதியாக இருந்தாள். அதனை யாரிடமும் அவளால் பகிர்ந்து கொள்ள கூட முடியவில்லை.
வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஒரு காரணம் என்றால், ஆர்யனை வைத்து எந்நேரமும் தாயும், தகப்பனும் கீரியும் பாம்புமாக சண்டையிட்டு கொள்வது இன்னொரு காரணம்.
அந்த நாள் முதல் தொடர்ந்து தவறான புகைப்படங்களும் குருஞ்செய்திகளும் கயலுக்கு வந்து கொண்டே இருந்தது. மேலும் ஆபாச வீடியோக்களை அனுப்பி "இது எப்படி இருக்கு? உனக்கு சம்மதமா?" என்பது போல எல்லாம் குருஞ்செய்தி வந்து கொண்டிருந்தது.
ஒருகட்டத்தில் பொருக்கமுடியாமல் அவள் அந்த நபரின் எண்ணை பிளாக் செய்தாள். அடுத்தநொடி அந்த நபரின் மற்றுமொரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
அழைப்பு வந்ததும் அவளது சப்த நாடிகளும் அடங்கியதை போல உணர்ந்தவள் அழைப்பை ஏற்க மறுத்தாள்.
கல்லூரி முடிந்ததும் அவள் வெளியே வர.. அங்கு அவளை அழைத்து செல்ல குணாவின் கார் நின்று கொண்டிருந்தது.
அதனை பார்த்தவள் உடனே அங்கிருந்து செல்ல பார்த்தாள். அவள் செல்லும் முன் அவளை அங்கு பார்த்துவிட்ட குணா "விழி செல்லம்" என்று அழைக்க, இவளுக்கு முகம் எல்லாம் வியர்த்து போனது.
காரணம் இவளுக்கு வந்த அத்தனை குறுஞ்செய்திகளும் குணாவின் தனிப்பட்ட அலைபேசி எண்ணில் இருந்து வந்ததாகும். அந்த எண் அவளது குடும்பத்தில் உள்ளவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது.
"விழி செல்லம் அங்க எங்க போற? நம்ம கார் இங்க இருக்கு" என்றவன் அவளது கரத்தை பிடித்து காருக்குள் இழுக்க, அவளோ செய்வதறியாது துடித்து நின்றாள்.