ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொஞ்சி தீர்க்கவா பெண்ணே _கதை திரி

Status
Not open for further replies.

Mythili MP

Well-known member
Wonderland writer
54


அன்று நடந்த நிகழ்வுகளை அசை போட்டு பார்த்த தர்மனின் மனம் முழுவதும் கோபம் நிரம்பியிருந்தது. அவனது கைகளோ மெல்ல மேலெழுந்து அவன் நெஞ்சில் இருந்த தழும்பினை வருடி கொண்டது.


முகத்தோற்றம் மாறிய சங்கவியின் மீது தர்மனுக்கு எப்போதும் ஒரு வகை ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. அவனையும் மீறி அவளிடம் நெருங்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. ஏற்கனவே பெண் பித்து கொண்டவன், சங்கவியின் வசீகரத்தில் அதீத ஆர்வம் கொண்டிருந்தான்.


தற்போதெல்லாம் ‘அவள் வேண்டும்’ என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் ஆழமாக இருந்தது. மதியைப் பற்றிய சிந்தனையே அவனுக்கு இல்லை.


இப்படியான ஒரு நாளில் மதியை வெளி வேலை விஷயமாக வேறு ஊருக்கு அனுப்பி வைத்திருந்தான் தர்மன். இந்த நேரத்தை பயன்படுத்தி மதியின் வீட்டிற்குள் நுழைந்து இருந்தான் தர்மன்.


அவனை மீறிய அதீத போதையில் இருந்தான்… அப்போது கதவை திறந்த சங்கவி அவனது கண்களில் விழுந்தாள்.


அவனது பார்வையையும், நடவடிக்கையும் கண்டு அச்சம் கொண்ட சங்கவி… அமைதியாக இரு அடி பின்னே நகர்ந்தாள்.


“என்ன விஷயம்? அவர் வீட்டுல இல்லை” என்று சொன்ன சங்கவியை பார்த்தபடி அறைக்குள் நுழைந்தவன் தன் கையில் வைத்திருந்த மது பாட்டிலை அருகில் இருந்த டேபிளில் வைத்தபடி, கவியை நோக்கி கரத்தினை நீட்டி “அது தெரிஞ்சு தானே வந்திருக்கேன்”என்று சொல்லி புன்னகைத்தபடியே அவளை நெருங்க முற்பட்டான்… சட்டென சுதாரித்துக் கொண்ட சங்கவி அவனை வெளியே தள்ளி கதவை தாழிட முற்பட்டாள்.


ஆனால் முடியவில்லை அதற்குள் தர்மன் நடு வீட்டிற்குள் புகுந்து, அவனே கதவை உள் தாழ்பாள் போட்டு கொண்டான்.


“எதுக்கு இப்படி பண்ணுறீங்க? முதலில் வெளியே போங்க” என்றவளின் கரத்தை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்த தருமன் அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தான். அவனிடமிருந்து விலக முற்பட்டவள் ஒரு கட்டத்தில் தன் இதழ் நோக்கி குனிந்தவனின் முகத்தில் காரி உமிழ்ந்து இருந்தாள்.


அவளது செயலில் கோவம் அடைந்த தர்மன் அவளது கன்னத்தில் மாறி மாறி அறைந்தான். அடி வாங்கிய வேகத்தில் அவளது கண்கள் இருண்டு கொண்டு வந்தது.


தடுமாறி நின்று கொண்டிருந்தவளின் உச்ச முடியை கொத்தாகப் பிடித்தவன்… அவளது ஆடைகளை களைய ஆரம்பித்தான். எவ்வளவோ தடுத்து பார்த்தாள் முடியவில்லை. கடந்த கால நிகழ்வுகள் வேறு அவள் கண் முன்னே வந்து போனது. இந்த கேவலமானவனின் செயல்கள் அவளது முதலாளி முத்துவை இவளுக்கு மீண்டும் நினைவு படுத்தியது.


எந்த விஷயத்தை மறக்க வேண்டும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ அதே விஷயம் மீண்டும் அவள் வாழ்வில் நடப்பதை நினைத்து துடித்துக் கொண்டிருந்தாள். அன்று அவளிடம் எத்தகைய எதிர்வினை இருந்ததோ அதே தான் இன்றும் அவளிடம் இருந்தது.



தப்பிக்க முயன்று பார்த்தவளின் கைகளில் கத்தி போன்ற கூர்மையான ஒரு பொருள் கிடைத்தது. அடுத்த நொடி தாமதிக்காமல் அதனைக் கொண்டு அவன் நெஞ்சை கிழித்திருந்தாள். வழியில் துடித்தவன் அவளை விட்டு விலகி நின்று தன் நெஞ்சில் வடியும் ரத்தத்தினை தொட்டு பார்க்க… தலை கலைந்து, உடை கலைந்து கண்கள் அக்னி போல் கோபத்தில் சிவந்து கொலை வெறியுடன் அவனைப் பார்த்தபடி எதிரில் நின்று கொண்டிருந்தாள் சங்கவி.


அவள் தன்னை காயப்படுத்திய கோபத்தில் தகாத வார்த்தைகள் சொல்லி அவளை திட்டியபடியே அவளை அடிக்க பாய்ந்து இருந்தான் தர்மன்.


அப்போது அவன் வீட்டிற்குள் வரும் போது கொண்டு வந்திருந்த மது பாட்டில் டேபிளில் இருந்தது. அதனை கையில் எடுத்தவள், அதனை உடைத்து அவனது முகத்தில் குத்த சென்றாள். நொடி பொழுதில் நிகழ்ந்த அந்த செயலை கண்டு தர்மனே அதிர்ந்து போனான்.


அவனது கண்களுக்கும், பாட்டிலின் கூர்முனைக்கும் நூலிழை அளவு இடைவெளி தான் இருந்தது. அவளது செயலில் அப்படியே ஆடிப் போய் நின்றான்.


“வெளியே போயிடு… இன்னொரு முறை என்னை நெருங்கணும்னு நெனச்ச அடுத்த நொடி உன் உடம்புல உயிர் இருக்காது” என்றபடி ஆக்ரோஷமாக நின்றவளையும் அந்த பாட்டிலையும் மாறி மாறி பார்த்தவன் உண்மையில் அச்சம் கொண்டு அப்படியே இரண்டு அடிகள் பின்னே நகர்ந்தான்… அவன் விலகி விட்டான்! என்ற எண்ணத்தில் பாட்டிலை அவள் சற்று கீழே இறக்க, அந்த நேரத்திற்காக காத்திருந்தது போல வெறிபிடித்துப்போய் அவளது தலை முடியை பிடித்து சுவரில் ஓங்கி மோதினான். இன்னும் இரண்டு அடி இதேபோன்று பலமாக விழுந்திருந்தால் சங்கவியின் உயிர் அதே இடத்தில் பிரிந்து இருக்கும்.


அந்நொடியில் தனது மொத்த பலத்தையும் கொண்டு பின் பக்கமாக அவனை முட்டி தள்ளியவள், மீண்டும் அவன் தன்னை நெருங்கிய கணம் சட்டென அவனது இடுப்புக்கு கீழே பாட்டிலை சொருகி இருந்தாள் சங்கவி.


வழியில் துடித்துப் போன தர்மன், ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் அதே இடத்தில் மயங்கி சரிந்தான். அப்போது அவளின் வீட்டின் கதவு தட்டப்பட்டது.


வெளியே நின்று கொண்டிருந்தது நிர்மலா தான். “வைஷு” என்று அழைத்தபடி அவள் வெளியே நின்று கொண்டிருக்க… இதுவரை கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் மெல்ல அவள் கண்களில் இருந்து வெளியேறியது. ஓடி வந்து கதவை திறந்தாள்.


சுற்றி இருந்த சூழல்… நடந்த நிகழ்வுகளை நிர்மலாவிடம் சொல்லாமல் சொல்லியது. சங்கவிக்கு ஆறுதல் கூறிவிட்டு தர்மனின் நிலையை ஆராய அவன் அருகே சென்றாள். தர்மனுக்கு உயிர் இருந்தது.


அப்போதுதான் உண்மையில் சங்கவிக்கு மூச்சே வந்தது… மீண்டும் ஒரு கொலை செய்து விட்டு இந்த வாழ்க்கையையும் இழக்க அவள் தயாராக இல்லை.


என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்… குணமாகி திரும்பி வந்து அவன் தன்னைக் கொன்றால் கூட பரவாயில்லை… ஆனால் மீண்டும் ஒரு கொலைப் பழியை சுமக்க சங்கவி தயாராக இல்லை.



அதனால் ஆட்களின் உதவியுடன் தர்மனை அழைத்துக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.


எந்த ஆண்மையின் திமிரில் அவளை நெருங்கினோ அந்த ஆண்மையை அவள் சிதைத்து இருந்தாள்.


இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து கண் விழித்தான் தர்மன். அதற்குள் ஊருக்கு சென்ற மதியும் அங்கு திரும்பி வந்திருந்தான்.


கண்விழித்த தர்மனால் தனக்கு நடந்த இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்போதே அவளை கொல்ல வேண்டும் என்ற ஆத்திரம் வந்தது. ஆனால் தான் எப்படி வாழ்நாள் முழுவதும் இனி துன்பப்பட போகிறோமோ அதே போல அவளும் அவளது வாழ்க்கையை எண்ணி எண்ணி துன்பப்பட வேண்டும் என்று நினைத்தான். தான் இழந்ததை விட ஆயிரம் மடங்கு அவள் இழந்து நிற்க வேண்டும் என்று நினைத்தான். அவளிடமிருந்து அனைத்தையும் பறித்துக் கொண்டு “ஏன் வாழ்கிறோம்” என்ற நிலைக்கு அவளை தள்ள வேண்டும் என்று நினைத்தான்.


நடந்த விஷயமறிந்து மதி வந்து அவனை மிரட்டிய போது கூட, “போதையில் தவறாக நடந்து கொண்டேன்” என்று மன்னிப்பு கேட்டு பின் வாங்கினான் தர்மன்.


ஆரம்பத்தில் அவனது மன்னிப்பை மதி நம்பவில்லை. ஆனால் அதன் பிறகான நாட்களில் அவன் மதியிடம் நடந்து கொண்ட முறை அவனை நம்ப வைத்தது.


மதி விஷயத்தில் மட்டுமல்ல… எந்தவித தவறான காரியத்தையும் செய்யாமல் தர்மன் அனைத்திலும் இருந்து சற்று விலகியே இருந்தான். சங்கவியின் பக்கம் அவன் தலை கூட திரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல் பாண்டியன் விடுதலையாகி வந்தவுடன் மதிக்கும், சங்கவிக்கும் அவர் தலைமையில் விரைவில் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்றும் பேசியிருந்தான். மதி மட்டுமல்ல அங்கிருந்த பலரும் தர்மன் மாறிவிட்டதாக தான் நம்பினர்.


ஒரு பெண்ணால் தனது ஆண்மை பறிபோய்விட்டது என்பதை வெளியே சொல்ல வெட்கப்பட்டு அவமானப்பட்டு நின்ற தருமன்… அன்று சங்கவியின் வீட்டில் நடந்த நிகழ்வை யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. அதில் சம்பந்தப்பட்ட பிறரும் அதனை வெளியே பேசிக்கொள்ளவில்லை.


என்னதான் வெளியில் நல்முறையில் நடித்து கொண்டு இருந்தாலும், அவன் இழந்த அந்த விஷயமும் அடைந்த அவமானமும் அவனது மனதில் காட்டுத் தீயென எரிந்து கொண்டிருந்தது.


சங்கவியை பழி தீர்க்க சரியான சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பாண்டியனின் விஷயம் மிகப்பெரும் உதவியாக இருந்தது.


***


உன் ஆருயிர் காதலியை தனது பகைக்காக பாண்டியன் பகடையாக்க நினைக்கிறார் என்பதை மதியிடம் வேறு வகையில் போட்டு உடைத்தான் தர்மன்.


பாண்டியனும் தன் குடும்ப வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் மதியிடம் கூறினான். அனைத்தையும் கேட்டு முடித்த பின்பும் மதி அதற்கு சம்மதிக்கவில்லை.


மதி சம்மதிக்கவில்லை என்பது பாண்டியனுக்கு பெரும் ஏமாற்றம்தான். ஆனால் அதற்காக அவனை வெருக்கத் தோணவில்லை.


“உனக்கு வேண்டாம் என்றால் வேண்டாம்” என்று கூறி அவனை அங்கிருந்து அனுப்பி வைத்திருந்தார்.


***


“மதிக்கு இதுல விருப்பம் இல்ல… நீ வேற ஆளை பாரு” என்று கூறியபடி பாண்டியன் அங்கிருந்து செல்ல.. தர்மன் தனது அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்தான்.


“நான் இதை உங்க கிட்ட சொல்ல வேண்டாம்னு தான் நினைச்சேன்… எனக்கு இப்ப அதை சொல்லியே ஆகணும்னு தோணுது. நீங்க நினைக்கிற அளவுக்கு மதி உங்களுக்கு உண்மையா இல்ல… அன்னைக்கும் அந்த கயல் விஷயத்துல உங்களை கைது பண்ணும் போது, உங்க கூட இருந்த எல்லாரும் மாட்டிக்கிட்டாங்க… ஆனா மதி மட்டும் தப்பிச்சிட்டான்.. அவன் தான் போலீஸ்ல தகவல் கொடுத்து உங்களை மாட்ட வச்சிருக்கான். அவனுக்கும் அந்த குடும்பத்துக்குமே கூட எதாவது சம்மந்தம் இருக்கலாம்னு தோணுது… இல்லனா பணத்துக்காக கூட அதை அவன் பண்ணி இருக்கலாம். காரணம் இல்லாம பொய்யா பழி போடுறன்னு நினைக்காதீங்க… நம்ம டிரைவர் ரெண்டு மூணு தடவை வேதா கூட மதிய பார்த்ததா சொன்னான்… அன்னைக்கு மதி யார்கிட்டயோ கால் பண்ணி கயல் அங்க இருக்க விஷயத்தை சொன்னதை அவன் கேட்டு இருக்கான்”


என்று யார் உண்மையில் வேதாவுக்கு தகவல் கொடுத்தாரோ அதே ஆளை பொய் சாட்சியாக பாண்டியன் முன்னே கொண்டு வந்து நிறுத்தினான் தர்மன்.

டிரைவர் தான் வேதாவுக்கு தகவல் கொடுத்தது என்பதை அறிந்து கொண்ட தர்மன் அவனை மிரட்டி அந்த பழியை மதியின் மீது போடுமாறு எச்சரித்தான். அவனும் உயிருக்கு பயந்து தான் செய்த செயலை மதி செய்ததாக கூறி அவன் மீது பழி சுமத்தினான்.


தான் கைதாகும் போது மதி அங்கு இல்லை என்பதே பாண்டியனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய விஷயம் என்று வரும்போது மதியின் தரப்பிலிருந்து சிந்திக்க பாண்டியன் ஒரு நொடியும் யோசிக்கவில்லை.


இவர்கள் இருவரும் பேசிக் கொள்ள அவகாசம் கிடைத்தால் நிச்சயம் இந்த விஷயம் திசை மாறிவிடும் என்பதை நன்கு உணர்ந்து இருந்த தர்மன் அந்த நேரம் மதியினை ஒரு வழக்கில் கைதாக வைத்தான். அப்போது மதியை வெளியே எடுக்க பாண்டியன் தரப்பிலிருந்து எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஏற்கனவே மதியின் மீது சந்தேகத்தில் இருந்த பாண்டியனும் அதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. மதியை அப்படியே விட்டு விட்டார்.


மதியை எப்படியாவது அந்த வழக்கில் இருந்து வெளியே எடுத்து விட வேண்டும் என்று நிர்மலாவும் சங்கவியும் தான் போராடிக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.


தனித்துவிடப்பட்டாள் சங்கவி, மதி இல்லாத ஒவ்வொரு நொடியும் அவளுக்கு நரகமாக நகர்ந்தது… நிம்மதி இழந்து வாடினாள்.


***


“நீங்க இப்படியே அமைதியா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டிங்களா?” என்று பாண்டியனிடம் கேட்டான் தர்மன்.


“ புரியல என்ன சொல்ல வர”


“அதான் அன்னைக்கு அந்த ஆரியன் விஷயத்தில ஒரு பிளான் சொல்லி இருந்தேனே”


“அதுக்கு தான் வேற ஒரு பொண்ணை ஏற்பாடு பண்ண சொல்லி இருந்தேனே”


“நம்பிக்கையானவங்க வேற யாரும் கிடைக்கல நீங்க சரின்னு மட்டும் சொல்லுங்க மீதி எல்லா விஷத்தையும் நான் பார்த்துகிறேன்”


மதியின் விஷயம் இன்னும் பாண்டியனின் மனதை அறுத்துக் கொண்டிருந்தது. முழுதாக மதிய அவரால் சந்தேகபடவும் முடியவில்லை.. அதே சமயம் அவனை முழுவதுமாக நம்பவும் முடியவில்லை.


வெகு நேரம் யோசித்தவரின் கண் முன் தனது மகனின் புகைப்படம் இருந்தது. அதைப் பார்த்தவரின் கண்கள் இரத்தமென சிவந்து போனது… ‘தவறே ஆனாலும் சரி’ தன் மகனுக்காக இதனை தான் செய்து தானாக வேண்டும் என்று முடிவு எடுத்தார்.


“என்ன பண்ணணுமோ பண்ணு எனக்கு அந்த குடும்பத்துல ஒருத்தனும் நிம்மதியாவும் இருக்க கூடாது, உயிரோடவும் இருக்க கூடாது” என்று கூறியபடி அங்கிருந்து எழுந்து சென்றார்.



***


சங்கவியை அடித்து பணியவைக்க தர்மன் முடிவு செய்யவில்லை.


தன் வீட்டிற்கு வந்த தர்மனை பார்த்து சற்று அதிர்ந்து போனாள் சங்கவி. நிர்மலாவும் இப்போது அவளுடன் தான் இருந்தாள்.


“நீயும் இங்க தான் இருக்கியா?” என்று நிர்மலாவை பார்த்து கேட்டபடி வீட்டிற்குள் நுழைந்தான் தர்மன்.


“என்ன விஷயம் எதுக்காக வந்து இருக்கீங்க? அதான் மதி விஷயத்தில் எந்த உதவியும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டீங்கல்ல, அப்புறம் உங்களுக்கு இங்க என்ன வேலை?” என்று கேட்டாள் நிர்மலா.


“நான் உன்கிட்ட பேச வரல” என்றவனின் பார்வை சங்கவியை நோக்கி திரும்பியது “ மதியை ரொம்ப எதிர்பார்க்கிற போல… உன்னுடைய எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்து வைக்கிறேன்… ஆனால் அதுக்கு நீ ஒரு உதவி பண்ணனும்” என்றதும் சற்று அச்சம் கொண்டு அவனது முகத்தைப் பார்த்தாள் சங்கவி.


“தப்பா எதுவும் கேக்க மாட்டேன் பயப்படாதே… அப்படியே ஏதாவது கேக்கலாம்னு தோணுனாலும் என்னால தான் எதுவும் பண்ண முடியாதே… சரி அதை விடு… நான் சொல்ற ஒருத்தருக்கு நீ பொண்ணா நடிக்கணும்… அப்புறம் ஒருத்தனுக்கு பொண்டாட்டியாவும் நடிக்கணும்” குழப்பமான சங்கவி “என்ன பேசிட்டு இருக்க நீ? நீ சொல்ற எதையும் பண்ணனும் எனக்கு எந்த அவசியமும் இல்லை… உனக்கு பயந்து எதையும் செய்யணும்னு எனக்கு எந்த தேவையும் இல்லை” என்று துணிச்சலாக பதில் கூறினாள் சங்கவி


“ஓ அப்படியா? “ என்றபடி தன் இடையில் சொருகி இருந்த கத்தியை எடுத்து நிர்மலாவின் வயிற்றில் ஓங்கி குத்து இருந்தான் தர்மன்.


ரத்தம் வடிய வயிற்றை பிடித்துக் கொண்டு நிர்மலா அப்படியே கீழே அமர… கதறி துடித்தபடி அவள் அருகில் செல்ல பார்த்த சங்கவியின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தினான் தர்மன்.


“சும்மா உன்ன மிரட்டிட்டு போகலாம் நான் இங்க வரல இப்ப நான் சொல்ல போற விஷயத்தை நீ செய்யலன்னா என்ன நடக்குங்கறத்துக்கான ஒரு சின்ன முன்னோட்டம் தான் இது… நான் சொல்லுறபடி எல்லாம் நீ நடந்துக்கணும் அப்படி இல்லன்னா இதே நிலைமை ஜெயிலுக்குள்ள இருக்க மதிக்கும் வரும். கடைசில அவனோட பிணத்தைக் கூட உன்னால பார்க்க முடியாது… அந்த அளவு ஆக்கிடுவேன்…”


“ நீ என்ன சொன்னாலும் அதை நான் செய்றேன் ஆனா தயவு செஞ்சு நிர்மலாவை காப்பாத்து” கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிரிந்து கொண்டிருந்த நிர்மலாவை பார்த்து கதறினாள் சங்கவி.


“பச் இப்ப அவள காப்பாத்துற மூடுல நான் இல்ல… நாளைக்கு நீ ஒரு இடத்துக்கு போக வேண்டியது இருக்கும் ரெடியா இரு… நான் சொன்ன மாதிரி எல்லாம் நீ அங்க நடந்துக்கணும்… அங்கு ஏதாவது ஒரு சின்ன தப்பு நடந்தா கூட அன்னையோட மதியை நீ மறந்து விட வேண்டியதுதான்” என்றவன் நிர்மலாவின் கழுத்தில் ஓங்கி மிதித்தான். அவன் மிதித்த வேகத்தில் அவள் உயிர் பிரிந்திருந்தது.


“இதோ இதே போல மதியையும் முடிச்சுட்டு போயிட்டு இருப்பேன்” சங்கவிக்கு அழ கூட நேரம் கொடுக்காமல்… நிர்மலாவின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர் தர்மனின் ஆட்கள்.


கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்க ஆளில்லாமல் மீண்டும் நிற்கதியானாள் சங்கவி.


தன்னைக்காத்து நின்றவனின் உயிருக்காக அனைத்து பாவத்தையும் சுமந்து கொண்டு நிற்க தயாராகி ஆரியனின் வீட்டில் காலடி எடுத்து வைத்தால் சங்கவி இப்போது பல்லவியாக…

 

Mythili MP

Well-known member
Wonderland writer
55


ஆரியனின் வீட்டில் அவனுக்கு நம்பிக்கையான ஒரே பணியாள் என்றால் அது மாணிக்கம் தான். அதனை தனது ஆட்கள் மூலம் அறிந்து கொண்ட தர்மன், மாணிக்கத்தை பற்றி விசாரிக்க, மாணிக்கத்தின் மகன் தான் ரமேஷ் என்பது தெரியவந்தது. ரமேஷ் இவர்களின் அடியாட்களில் ஒருவன்.


மதியை வைத்து சங்கவியை மிரட்டியவர்கள், அதேபோல மாணிக்கத்தின் மகன் ரமேஷை வைத்து மாணிக்கத்தையும் மிரட்டினர்.


ஆனால் மாணிக்கம் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. இப்படி ஒரு மகன் தனக்கு இருந்தால் என்ன? இல்லை என்றால் என்ன? என்ற எண்ணம் தான் அவருக்கு! அதனால் ரமேஷிற்கு என்ன ஆனாலும் தனக்கு அதை பற்றி எந்தவித கவலையும் இல்லை என்று இவர்கள் கூறிய விஷயத்திற்கு உடன்பட மறுத்தார் மாணிக்கம்.


இந்த வகையில் மாணிக்கத்திடம் பேசினால் அவர் நிச்சயம் இத்தகைய செயலுக்கு ஒப்புக்கொள்ள மாட்டார். என்பதை தர்மனிடம் எடுத்துக் கூறினான் ரமேஷ் அதன் பிறகே ஒரு கொடூர திட்டத்தை தீட்டி இருந்தனர்.


ரமேஷின் குழந்தையை வைத்து மாணிக்கத்தை மிரட்ட ஆரம்பித்தனர். பிறந்து ஒரு வருடம் கூட ஆகாத குழந்தை உடல் நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு இருந்தது.


மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தது. குழந்தைக்கு அத்தகைய மூச்சு திணறலை உருவாக்கியதே ரமேஷ் தான். இந்த தகவல் கேள்விப்பட்டவுடன் அடித்து பிடித்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார் மாணிக்கம்


“நாங்கள் சொல்வது போல் எல்லாம் நீ நடந்து கொள்ளவில்லை என்றால் உன் பேரன் உனக்கு இல்லை” என்று தர்மன் மருத்துவமனைக்கு வந்து மிரட்டி விட்டு சென்று இருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி நின்றார் மாணிக்கம்.



இப்படி ஒரு தறுதலைக்கு மகனாக பிறந்ததைத் தவிர அந்த பச்சைக் குழந்தை வேறு என்ன பாவம் செய்தது? விசுவாசமா? இல்லை தன்னை நம்பி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பச்சிளம் குழந்தையா? என்று யோசித்தவர் இறுதியாக தனது விசுவாசத்தை புறம் தள்ளிவைக்க நினைத்தார். தன் பேரனை காக்க அவர்களின் சூழ்ச்சி அறியாமல் அவர்களின் திட்டத்தில் அவரும் ஒரு பகடை காயாக மாற துணிந்தார்.


தர்மனும் ரமேஷும் சேர்ந்து நடத்திய நாடகத்தின் படியே மாணிக்கத்தை இவர்கள் திட்டத்திற்குள் இழுத்துக் கொண்டனர்.


மாணிக்கத்தின் மகளாக பல்லவி, ஆரியனின் வீட்டுக்குள் நுழைந்திருந்தாள்.


தனது மகள் பல்லவி என்றும், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை இத்தனை வருடங்கள் பிரிந்து இருந்ததாகவும் இப்போது மனைவி இறந்து விட்டதாகவும் வேறு வழியில்லாமல் மகளை இப்போது இங்கே அழைத்து வந்ததாகவும் பொய் மேல் பொய் கூறி பல்லவியை ஆரியனுக்கு அறிமுகப்படுத்தி தன்னிடத்தில் தங்க வைத்துக் கொண்டார் மாணிக்கம்.


சங்கவியாக ஆரியனின் வாழ்வில் இருந்து மறைந்தவள், இப்போது பல்லவியாக அவனுடன் வாழ தயாராகி அவ்விடம் வந்திருந்தாள்


அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நாம் அறிந்தவையே… தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் ஆரியனை மயக்கவே சங்கவியை அங்கு அனுப்பி வைத்து இருந்தனர்.


ஆரியனுக்கு சங்கவியை சுத்தமாக அடையாளம் தெரியவில்லை… சங்கவிக்கோ அவனை எங்கோ பார்த்திருக்கிறோம் என்ற உறுத்தல் மட்டும் மனதில் எழுந்தது… ஆனால் தெளிவுற அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை… எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவனை சந்திக்கிறாள்… எப்படி இன்னும் அவனது இளம் பருவத்தின் முகம் அவள் மனதில் நிலைத்திருந்திருக்கக்கூடும்?


அதுமட்டுமில்லாமல் அவள் தற்போது இருந்த சூழ்நிலையில் வேறு எதை பற்றியும் சிந்திக்கும் நிலைமையில் அவள் இல்லை. அவள் மனம் முழுவதும் மதியை பற்றிய எண்ணம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது.


தர்மன் க்ரூப் மதியை எதுவும் செய்யாமல் விட்டு விடுவார்கள் என்ற எண்ணம் இவள் மனதில் துளி கூட இல்லை… அவனை காக்க வேண்டியே வேறு வழியில்லாமல் தர்மன் சொன்னது போல எல்லாம் ஆரியனிடம் நடிக்க துவங்கி இருந்தாள் சங்கவி. இதனை செய்யாமல் போக அதனால் மதிக்கு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் அந்த குற்ற உணர்விலிருந்து இவளால் காலத்திற்கும் மீள முடியாது என்ற ஒரே காரணத்தினால் தனது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு இத்தகைய தவறை செய்யத் துணிந்து நின்றாள்.


ஆரியன் மீது காதல் வயப்பட்டது போல நடிக்க ஆரம்பித்தாள். என்னதான் நடிக்கின்றோம் என்ற எண்ணம் அவள் மனதில் இருந்தாலும், ஏதோ ஒன்று ஆரியனிடம் அவளை இழுத்துக் கொண்டுதான் இருந்தது. அவனது செயல்கள் வேறு யாரையோ அவளுக்கு நினைவு படுத்துவது போலவே இருந்தது. அவனுடைய பெயரும் அவளை அதிகம் சிந்தனைக்கு உள்ளாகியது ஆனால் அதையெல்லாம் அலசி ஆராய அவளுக்கு நேரமில்லாமல் போனது தான் விந்தை. ஒருவேளை அவன் யார்? என்று தெளிவுற அலசி ஆராய்ந்து இருந்தால் இன்று சங்கவிக்கோ ஆரியனுக்கோ இப்படி ஒரு நிலை நிச்சயம் வந்து இருக்காது.




ஆரியனின் வீட்டுக்குள்ளே பல்லவியும், மாணிக்கமும் தங்களுக்கு சாதகமாகத்தான் வேலை பார்க்கிறார்களா என்பதை ஆராயவே பாண்டியனின் இன்னொரு மகன் ஆரியனுக்கு கீழே பணிபுரிந்து கொண்டிருந்தான். அவன் அந்த வீட்டிற்குள்ளும் சகஜமாக வந்து போய்க் கொண்டிருக்க, இவர்களால் தனித்து எந்தவித முடிவும் எடுக்க முடியவில்லை. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் செய்ய வேண்டிய கட்டாயம்.


நாட்கள் அதன் போக்கில் சென்றது ஆனால் தர்மனின் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.. அதனை அறிந்து கொண்ட பாண்டியனுக்கு கோபம் தலைக்கேறியது… அவனது இரட்டை மகன்களில் ஒருவனின் நினைவு நாள் இன்று! அன்று கண்ணீருடன் அமர்ந்து கொண்டிருந்த பாண்டியனை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.


தன் மகனை கொன்றவனின் மகனும் அவனது குடும்பமும் எங்கோ நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று நினைக்க நினைக்க இவருக்கு நிம்மதி இல்லாமல் போனது… தனது திட்டமெல்லாம் வீணாகி விட்டதோ என்ற அச்சம் அவருக்குள் எழுந்தது.


“அந்த வேதாவை பற்றியோ இல்லை குணாவை பற்றியோ ஏதாவது தெரிஞ்சுக்க முடிஞ்சுதா? உன்ன நம்பி தானே இப்படி ஒரு விஷயத்தை செய்ய நான் சம்மதிச்சேன்… அப்படி இருந்து இன்னும் ஒண்ணுமே நடக்கல… சீக்கிரமா எனக்கு இதுக்கு ஒரு முடிவு கிடைக்கணும் இல்லன்னா நீ எதுக்குமே லாயக்கி இல்லன்னு முடிவு பண்ணிட்டு என் வழியிலே நான் இதை பார்த்துகிறேன்” என்று கோபமாக கூறிவிட்டு பாண்டியன் அங்கிருந்து சென்று விட்டார்.


முதல் முறை பாண்டியனின் கோபத்தை இப்படி நேருக்கு நேராக சந்திக்கிறான் தர்மன்.


தனது திட்டம் என்றும் தடம் மாறாது என்பதை பாண்டியனுக்கு நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் தர்மன்.


அதன் விளைவாக பல்லவியை ஒரு நாள் தனியாக சந்தித்து பேசினான். “இவ்வளவு நாளாகியும் ஒரு ஆம்பளையை மயக்க முடியலன்னா உன்னை எல்லாம் என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல? உன் போக்குல இப்படியே விட்டால் நீ சரிப்பட்டு வர மாட்ட, நீ இப்படியே மண்ணு மாதிரி இருந்தன்னா என் திட்டம் தான் வீணா போகும். இதையெல்லாம் சரி பண்றதுக்கான ஒரே வழி நீ அந்த ஆரியனை கல்யாணம் பண்றது தான். இங்க பாரு உனக்கு இன்னும் ஒரு மாசம் தான் டைம்! அதுக்குள்ள அவனை நீ எப்படியாவது மயக்கி அவனை கல்யாணம் பண்ணி ஆகணும். இப்படி தள்ளி நின்னு வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தா ஒன்னும் நடக்காது. அவன் கூட எப்படியாவது சேருவதற்கு பாரு? நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன். உங்களுக்குள்ள நடக்க வேண்டியது நடந்ததுன்னா கல்யாணம் கண்டிப்பா நடக்கும்… இல்ல, முடியாது நான் இதை பண்ண மாட்டேன் அப்படின்னு ஏதாவது பேசுன! மதிக்கு அது தான் கடைசி நாளா இருக்கும். நான் சும்மா மிரட்டுற ஆள் இல்லைன்னு உனக்கு தெரியும்… என்னால என்ன பண்ண முடியும்னு உனக்கு தெரியும் அதனால ஜாக்கிரதையா நடந்துக்கோ” என்று பல்லவியை தனியே அழைத்து மிரட்டினான் தர்மன்.


இப்படியான ஒரு சூழ்நிலையில் சங்கவியால் என்ன செய்ய முடியும்? கண்ணீர் விட்டு அழுவதை தவிர வேறு வழியில்லாமல் தவித்து நின்றாள்.


தர்மன் சொல்வதை போல கேட்கவில்லை என்றால் நிர்மலாவின் நிலை தான் மதிக்கும் வரும் என்பதை நினைத்து பார்க்கவே அவளுக்கு நெஞ்சம் எல்லாம் பதறியது…


மதி இல்லாத ஒரு வாழ்க்கையை அவளால் யோசித்து பார்க்க கூட முடியவில்லை. ‘ஆம்’ அவள் மனம் முழுவதும் மதி மட்டுமே நிரம்பி இருந்தான். அவனை தவிர்த்து ஒரு வாழ்க்கையும் அவளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலையில் அல்லாடினாள்.

 

Mythili MP

Well-known member
Wonderland writer
56


இப்படியான ஒருநாளில் ஆரியனின் வீட்டில் தொழில் நிமித்தமாக பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.


அந்த பார்ட்டியில் ஆரியன் குடிக்கும் ஜுஸில் போதை மருந்து கலந்து அவனுக்கு அது கொடுக்கப்பட்டது.


அதனை குடித்து முடித்தவன் தடுமாறியபடி நிற்க, அதனை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த பாண்டியனின் இன்னொரு மகன் பல்லவிக்கு கண் காட்டினான்.


அவர்கள் திட்டம் புரிந்த பல்லவியும் பல்லை கடித்துக் கொண்டு ஆர்யானை நோக்கி சென்றாள்.


தடுமாறிய ஆரியனை தாங்கி பிடித்தாள்.


அவனை தனியே அவனது அறைக்குள் அழைத்து சென்றாள்.


அவனிடம் மயக்க கொண்டதை போல அவனை மெத்தையில் சரித்தாள்.


அந்நொடி பாண்டியனின் மகனின் கரம் அவர்களது அறைக் கதவை தாழிட்டு இருந்தது.


இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஆரியனிடம் உறவு கொள்ளவே பல்லவிக்கு அவர்கள் கட்டளை விதித்து இருந்தனர். ஆனால் பல்லவியால் அது முடியவில்லை?


போதையில் ஆரியன் அவளை முத்தமிட நெருங்கும் வேலையில் சங்கவியின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்தது. அவளால் முடியவில்லை. மதியின் முகம் கண்முன் வந்து போனது அதன் விளைவாக ஆர்யனை தன்னில் இருந்து பிரித்து விலக்கியவள் தன் இழி நிலையை எண்ணி தலையில் அடித்துக் கொண்டு கதறினாள்.


அவள் கதறி அழுத சத்தம் அறைக்கு வெளியே சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்த பாண்டியனின் மகனுக்கு கேட்டது.


அந்த சத்தத்தை கூர்ந்து கவனித்தவன் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வரவும், பல்லவி தன் கழுத்தை கத்தி கொண்டு அறுக்க காத்திருக்கவும் நேரம் சரியாக இருந்தது.


அவளது செயலை கண்டு பதறியவன், விரைந்து வந்து அவள் கையில் இருந்த கத்தியை பறித்து எடுத்தான்.


“ப்ளீஸ் என்னை விட்டுடுங்க என்னால இதை எல்லாம் பண்ண முடியாது. நான் செத்து கூட போயிடுறேன் ஆனால் இப்படி ஒரு கேவலத்தை என்னால பண்ண முடியாது” என்று அவனின் காலை பிடித்துக் கொண்டு கதறி அழுதாள் சங்கவி.


அவளது கண்ணீர் அவனின் மனதை கரைத்து இருக்க வேண்டும்… அவனும் சற்று கரைந்து தான் போனான். ஆழ்ந்த மூச்செடுத்தவன், ஆரியனுக்கும் பல்லவிக்கும் இடையே நடக்காத அந்த விஷயத்தை நடந்ததை போல காட்டி நடிக்க சொன்னான். அதற்கு பதிலாக இந்த விஷயத்தில் இருந்து உன்னையும் மதியையும் நிச்சயம் நான் காப்பாற்றுவேன் என்று அந்நொடி பல்லவிக்கு நம்பிக்கையும் கொடுத்திருந்தான் பாண்டியனின் மகன்.


வெகு நேரம் அவன் சொன்னதை பற்றி யோசித்தாள் பல்லவி.


‘இந்த விஷயத்தில் தன்னாலும் இதற்கு மேல் உங்களுக்கு உதவ முடியாது… உனது இறப்பு இதனை ஒரு சதவீதம் கூட மாற்ற போவது இல்லை… எனக்கும் இதனை விட்டால் வேறு வழி இல்லை’’ என்பதை பல்லவிக்கு புரிய வைத்து அவளை அப்படி நடிக்க சம்மதிக்க வைத்தான்.


தனது இறப்பு மட்டும் இதனை நிறுத்தி விடாது என்பதை அவன் மூலம் பல்லவியும் புரிந்து கொண்டாள். நடிக்க தயாரானாள்.


ஆரியன் குடும்பத்தில் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்துக்கு செய்த பாவத்திற்கு காரணமே இல்லாமல் வைஷ்ணவியையும், மதியையும் துன்பப்படுத்துவதில் ஆரம்பத்தில் இருந்தே பாண்டியனின் மகனுக்கு உடன்பாடு இல்லை… ஆனாலும் தன் தந்தைக்காக என பொறுத்து கொண்டு இருந்தான். ஆனால் இன்று சங்கவி விட்ட கண்ணீர் அவனை சற்று அசைத்தது.

அதனால் ஏதாவது ஒரு வகையில் இவளுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தான்.


***


அடுத்த நாள் ஆரியன் கண் விழிக்கையில், அவனும் பல்லவியும் ஆடைகள் இன்றி அருகருகே படுத்துக் கிடந்தனர்.


ஆரியனின் ஆடைகளை களைந்து விட்டு சென்றது பாண்டியனின் மகன் தான். ஆரியன் கண் விழித்து பார்க்கையில் அவன் அருகில் பல்லவி இருந்தாள். தனது ஆடையில்லா கோலத்தை பார்த்தவன் ஏதோ விபரீதம் நடந்ததாக எண்ணி கொதித்து போனான்.


பல்லவி மீது தன் மொத்த கோவத்தையும் காட்டினான். தகாத வார்த்தை பேசி அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பினான்.


தன்னிலை மறந்த நிலையில் தன்னை பயன்படுத்திக் கொண்டு அவள் தனக்கு துரோகம் இழைத்ததாக எண்ணி கொதித்து போனான்.


அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் யாவும் தர்மனை நம்பவைக்க பாண்டியனின் மகனும் பல்லவியும் சேர்ந்து நடத்திய நாடகம்.


தர்மன் மேலும் மேலும் சங்கவியை தொல்லை செய்ய, வேறு வழி இல்லாமல் பல்லவி கர்ப்பம் என்று பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் உருவானது. இப்படி ஏதாவது நடந்தால் தானே அவர்களை நம்பவைக்க முடியும்.


அந்த நாடகத்துக்கு பல்லவிக்கு உதவியது பாண்டியனின் இரண்டாவது மகன். போலி மருத்துவ ரிப்போர்ட்களை தயார் செய்து ஆரியானையும் நம்ப வைத்தான்.


அதன் விளைவாக தன் மகவுக்கு என்று நினைத்து பல்லவியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டான் ஆரியன்.


திருமணத்திற்கு பிறகும் பல்லவியின் முகத்தை கூட நேருக்கு நேராக பார்த்து நான்கு வார்த்தை பேசி இருக்க மாட்டான் ஆரியன். அவளை மனைவியாக ஏற்று கொள்ள அவனுக்கு சற்று கால அவகாசம் தேவைபட்டது.


அவளை விட்டு தள்ளி இருந்த போதிலும் அவள் மீது கொஞ்சம் கொஞ்சமாக அன்பு கொள்ளவும் ஆரம்பித்து இருந்தான். அதற்கு காரணம் அவளது கண்கள். அவளது கண்களை பார்க்கும் போதெல்லாம் சங்கவியின் நினைவு அவனுக்கு வந்து போனது. அந்த நினைவே அவள் மீது அன்பு கொள்ளவும் வைத்தது. அவளை விட்டு தள்ளி நிற்கவும் வைத்தது. பழைய நினைவுகள் ஆர்யனை நெருடியது அதனாலே சங்கவியாக எண்ணி இவளை நெருங்கி விடுவோமோ என்ற எண்ணத்தில் பல்லவியை நெருங்க தயங்கி நின்றான் ஆரியன். ஒரு கட்டத்தில் தான் தொலைத்த சங்கவியை பல்லவியிடம் தேட ஆரம்பித்த ஆரியன். பல்லவியை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள தயாராகி நின்றான். ஆனால் அந்த நாள் தான் அவர்கள் இந்த வீட்டில் சேர்ந்து இருந்த கடைசி நாளாக மாறியது.


திருமணமான பிறகும் ஆரியனை பற்றிய எந்த வித தனிப்பட்ட ரகசியத்தையும் சங்கவியால் அறிந்து கொள்ள முடியவில்லை…


இவன் தான் தன் வாழ்வின் முதல் காதல் என்பதை இங்கு வந்த சில வாரங்களில் அறிந்து கொண்டாள். மாணிக்கத்தின் மூலமாகவும் ஆரியனின் தாத்தாவின் புகைப்படம் மற்றும் அவர்கள் பூர்வீக ஊரை பற்றி அறிந்து கொண்டதில் இவன் தான் “தான் அறிந்த ஆரியன்” என்பதை அறிந்து கொண்டாள் சங்கவி.


ஆனால் என்றோ அவன் மீது இருந்த அந்த பாட்டாம் பூச்சி பறக்கும் உணர்வு எல்லாம் இப்போது அவளுக்கு இல்லை… அவளது மனதில் தோன்றிய பட்டம்பூச்சிகள் எல்லாம் அந்த ஊரை விட்டு வந்த அன்றே தீயில் பொசுங்கி போய்விட்டன… அதன் பிறகு அவள் கடந்து வந்த பாதை பழைய ஆரியனை பற்றிய சிந்தனையை அவள் மனதில் முளைக்கவிடவே இல்லை.


அவன் தான் ஆரியன் என்பதை அறிந்து கொண்டவளுக்கு அது வெறும் ஒரு செய்தியாக இருந்ததே தவிர… மனதில் எந்த வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.


காரணம் இதையெல்லாம் மீறி இப்போது சங்கவியின் மனம் முழுவதும் நிறைந்து இருந்தது “மதிவாணன்” என்ற அந்த ஒற்றை நபர் மட்டுமே… அவனை பற்றிய சிந்தனையில் இருந்ததால் ஒரு நொடி கூட இவளது மனம் ஆரியனில் நிலைத்து இருக்க வில்லை.


மதியை மனதில் சுமந்து கொண்டு வலம் வந்தவளுக்கு ஆரியனிடம் இரண்டு வார்த்தை சாதாரனமாக பேசுவே மிகவும் கடினமாக இருந்தது. அப்படி இருக்க எப்படி அவனிடம் இருந்து வேதா மற்றும் குணாவை பற்றி கேட்டறிந்து கொள்ள முடியும்.


ஆரியனிடம் தான் யார் என்றும் அவள் வெளிப்படுத்தி கொள்ள விரும்பவில்லை. முடிந்த கதை முடிந்தாகவே இருக்கட்டும் என நிகழ்கால கதையை மட்டும் நகர்த்திக் கொண்டு இருந்தாள்.


யாரோ ஒருவரை கொலை செய்து விட்டு ஆரியன் ஏழு வருடங்கள் சிறையில் இருந்தான் என்றவரையான உண்மையை மாணிக்கத்தின் மூலம் அறிந்து கொண்டாள் சங்கவி. ஆனால் அவன் யாரை? எதற்காக கொலை செய்து விட்டு தண்டனையை அனுபவித்தான் என்பது எல்லாம் சங்கவிக்கு தெரியாது. ஆரியனே அந்த உண்மையை இன்று வரை யாரிடமும் சொன்னது இல்லை அப்படி இருக்க இவளுக்கு எப்படி அது தெரிய வாய்ப்பிருக்கும்.


ஒருவேளை ஆரியன் தன் மீது கொண்ட காதலால், தான் செய்த கொலையை அவன் செய்ததாக ஏற்று கொண்டு அவன் சிறை தண்டனை அனுபவித்தான் என்ற உண்மை இவளுக்கு தெரிய வந்து இருந்தால்! நிச்சயம் அவன் உயிரை காவு வாங்க இவள் துணிந்து இருக்க மாட்டாள்.



இத்தனை பொய்களை சுமந்து கொண்டு ஒவ்வொரு முறை ஆரியனின் முகத்தை பார்க்கும் பொழுதும் குற்ற உணர்வில் அவனிடம் பேச முடியாமல் தடுமாறி,

மொழியின்றி, வழியின்றி வலியுடன் பல்லவியாக அவனுடன் வாழ்ந்து கொண்டு இருந்தாள் சங்கவி.


இதோ பல்லவிக்கும் ஆரியனுக்கும் திருமணமாகி எட்டு மாதம் முடிந்து இருந்தது. நிறைமாதம் என்று பொய் கூறி அவன் இல்லத்தில் வலம் வந்து கொண்டிருந்த பல்லவிக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலை.


எப்போதும் மாணிக்கம் தான் பல்லவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வார். என்று மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது வருமோ அன்று தான் ஆரியனுக்கு திடீர் திடீரென வேலை வரும். அவசர வேலை என்று ஏதாவது சொல்லி அவனை அங்கிருந்து அழைத்து சென்று விடுவான் பாண்டியனின் மகன்.


பல்லவியின் பொய்யான மருத்துவ ரிப்போர்ட் மட்டுமே ஆரியன் கையில் வந்து சேரும்.


அதனை பார்க்கும் போதெல்லாம் இந்த டிராமா இன்றுடன் முடிந்து விட்டால் போதுமே என்ற எண்ணம் மட்டுமே பல்லவியின் மனதில் தோன்றிக் கொண்டு இருக்கும். மற்றபடி ஆரியன் தனக்கு தாலி கட்டிய கணவன் என்ற எண்ணம் எல்லாம் இவள் மனதில் துளி கூட இல்லை. மதியை மனதில் சுமந்து கொண்டு இருந்தவளுக்கு ஆரியன் கட்டிய தாலி பாரமாக தான் இருந்ததே தவிர வரமாக இல்லை.


ஆரியனை ஏமாற்றுகிறோம் என்ற குற்ற உணர்வு அவள் மனதில் இருந்ததே தவிர காதல் என்ற ஒன்றோ அன்பு என்ற ஒன்றோ தற்போது அவள் மனதில் துளி கூட இல்லாமல் தான் இருந்தது. ஆனால் ஒரு ஓரத்தில் அவன் மீது சற்று கருணை இருந்தது. ஆனால் அதுவும் அழிந்து போகும் காலம் வந்தது.


இப்படியான ஒரு நாளில் பாண்டியனின் முதல் மகனின் நினைவு நாள் வந்தது.


***


“என் மகனை கொன்ன அந்த நீலகண்டனோட மகன் கல்யாணம் பண்ணி பிள்ளை குட்டியோட வாழுறதை நான் பார்ங்குறது தான் உன் ப்ளேனா தர்மா” என்று கண்கள் சிவக்க கேட்டான் பாண்டியன்.


இம்முறை தர்மன் தன் பிழையை ஒப்பு கொண்டான். தர்மனின் திட்டம் நிறைவேறியது ஆனால் பாண்டியனின் திட்டம் பூஜ்யமாகி நீண்டது.


மதியையும், வைஷ்ணவியையும் பிரிக்கவே ஆரியனின் வாழ்க்கையில் வைஷுவை கொண்டு வந்து சேர்த்தான் தர்மன்.


ஆரியனின் கருவை சுமந்து கொண்டு இருப்பவளை நிச்சயம் மதி ஏற்று கொள்ள மாட்டான். நாளை பல்லவி பற்றிய உண்மை தெரிய வரும் போது ஆரியனும் அவளை ஏற்று கொள்ள மாட்டான். தப்பி செல்ல வழி இல்லாமல் வைஷ்ணவி துடித்து தனித்து நிற்பாள் என்ற எதிர்பார்ப்பு தான் தர்மனின் திட்டம்! அந்த திட்டம் நிறைவேறி விடும் என்ற எண்ணத்தில் பாண்டியனிடம் தன் பிழையை ஒப்பு கொண்டான் தர்மன்.


“என்னை மன்னிச்சிடுங்க அண்ணா… இது இப்படி ஆகும்னு நான் நினைக்கல, இப்போ சொல்லுங்க நீங்க என்ன சொன்னாலும் அதை நான் பண்ணுறேன்”


“நாளைக்கு என் பையனோட நினைவு நாள். நாளைக்கே அந்த ஆரியன் சாகணும்… எப்படியும் அவன் செத்த பிறகு ஒளிஞ்சு இருக்கவங்க எல்லாம் வெளியே வந்து தானே ஆகணும்… என்ன வேணாலும் நடக்கட்டும் நாளைக்கு அவன் எனக்கு சாகணும்” என்று பாண்டியன் கூறி செல்ல அதற்காக அடுத்தகட்ட திட்டத்தை தீட்டினான் தர்மன்.


மேலும் நாளை தான் மதிவாணன் சிறையில் இருந்து விடுதலை அடைந்து வெளியே வருவதாக இருந்தது.


“மதி நாளைக்கு ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகுறான் அண்ணா” என்று தர்மனின் அடியாள் ஒருவன் கூறினான்.


“ம்ம்ம் தெரியும்”


“அவன் வெளியே வந்த பிறகு நீங்க அவன் காதலி விஷயத்தில பண்ணது எல்லாம் தெரிய வந்தா அவன் உங்களை சும்மா விடுவானு நினைக்கிறீங்களா?”


“கண்டிப்பா சும்மா விட மாட்டான். அவன் வந்து ஆட்டையை கலைக்கும் முன்னே அவனை கொன்னுட வேண்டியது தான்… நாளைக்கு தான் ஆரியனுக்கும் அந்த மதிக்கும் கடைசி நாளா இருக்கும். அப்புறம் அந்த வைஷ்ணவியோட குழந்தையை எவனுக்காவது வித்துட்டு, அவளையும் ரெட் லைட் ஏரியாவில் வித்திட வேண்டியது தான். நான் தொட முடியாமல் போன அவள் உடம்பு, நாற்பது பேர் கைப்பட நாய் படாத பாடு பட்டு அழுகி போகட்டும்” என்று கூறி சிரித்தபடியே மதுவை அருந்தினான் தர்மன்.


***


விடுதலை அடைந்த மதியை தங்கள் கட்டிப்பாட்டில் வைத்துக் கொண்டு பல்லவியையும் இவர்கள் திட்டத்துகுள்ள இழுத்து கொண்டனர். மதியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அதற்கு பதிலாக ஆரியனின் உயிரை பணயமாக கேட்டனர்.


மதியை தவிர வேறு எதுவும் இப்போதும் பல்லவியின் கண்களுக்கு தெரியவில்லை.


செய்த பாவங்களில் பெரும் பாவம் இது என்று தெரிந்தும் இதனை செய்ய முடிவு செய்தாள்.


முதல் முறை ஆர்யானை செக்கப்புகாக அழைத்து சென்றாள் பல்லவி. அந்த நாள் காலையில் மாணிக்கம் கலக்கி வைத்திருந்த ஜுஸில் தர்மன் கூறியதை போல மயக்க மருந்தை கலந்து வைத்து விட்டு வந்தாள். அதை அறியாத மாணிக்கம் அந்த ஜூஸை கொண்டு வந்து ஆரியனுக்கு கொடுத்தார்.


அதனை குடித்து முடித்தவன் பல்லவியை அழைத்து கொண்டு காரில் சென்றான்.


அப்போது தர்மன் சொன்ன இடத்தில் வண்டியை நிறுத்த செய்தாள் பல்லவி. ஆரியனும் அந்த இடத்தில் வண்டியை நிறுத்தினான். அந்நொடி ஆரியனின் கார் கீயையும் அவளே கைப்பற்றி வைத்து இருந்தாள்.


மயங்கம் வருவதாக நடித்த பல்லவிக்காக தண்ணீரை எடுக்க காரை நோக்கி வந்த போது தான் கார் சாவி இல்லாததை கவனித்தான் ஆரியன். தன்னை சுற்றி ஏதோ சதி வேலை நடக்கிறது என்பதை உணர்ந்து ஆரியன் சுதாரிப்பதற்குள் அவனை சுற்றி வளைத்திருந்தனர் தர்மனின் அடியாட்கள்.


ஆரியனுக்கு கொடுத்த மயக்க மருந்தும் வேலை செய்ய ஆரம்பித்து இருந்தது. அந்த நிலையில் ஆரியனால் ஒருகட்டதுக்கு மேல் அடியாட்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் போனது.


பல்லவியின் கண் முன்னே வண்டியால் அடித்து தூக்கபட்ட ஆரியன் உயிருக்கு போராடியபடி சாலையில் சரிந்தான். அப்போது அவன் அருகில் வந்து காரை நிறுத்திய தர்மன் அவன் நிலையை எண்ணி எள்ளி நகையாடினான். அதனை கண்டு குற்ற உணர்வில் துடித்து கதறினாள் சங்கவி. அவளால் அழ மட்டுமே முடிந்தது. சரி தவறு என்று பிரித்து பார்க்கும் நிலையில் அவள் இல்லை. அவளை பொறுத்தவரை மதி உயிரோடு இருக்க வேண்டும் அதற்க்காக எத்தகைய பாவத்தையும் மனதை கல்லாக்கி கொண்டு செய்ய தயாராக இருந்தவள் அதனை செய்தும் முடித்து இருந்தாள்.


தான் இப்படி ஒரு நிலையில் இருந்து இருந்தால் மதி தனக்காக என்ன வேண்டுமானாலும் செய்து இருப்பான் என்ற நம்பிக்கையை மதி மீது கொண்டு இருந்தவள், மதியை விட்டுக்கொடுக்க முடியாமல் இந்த எல்லை வரை வந்து இருந்தாள்.


அன்றும் சரி இன்றும் சரி அதே நம்பிக்கையை ஆரியன் மீது அவள் வைக்க தவறியது தான் விதி!! ஒருவேளை அதுவே அவள் இயல்பாகி போனதுவோ?
 
Status
Not open for further replies.
Top