மான்விழி - 20
அதிர்ந்து ஒரு வார்த்தைக்கூட பேசாதவள் இப்போது லோக்கல் ரவுடி போல பேசறாளே என்று இமைக்காமல் மனைவியையே அழுத்தமாக பார்த்திருந்தான் சித்தார்த்.
பவிஷ்காவிற்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை. பொங்கி வந்த சிரிப்பை தம்பியின் முறைப்பால் அப்படியே கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தாள். மகேந்திரனுக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே நின்றிருந்தார்.
“சொல்லுங்க, உங்க தம்பி எங்கே? அவர்கிட்ட நான் பேசியே ஆகணும், எதுக்கு என்னை அப்படி கூப்பிட்டாருனு கேட்கணும்” என்றாள் நேத்ரநயனி.
பவிஷ்கா இப்போது தம்பியை என்ன செய்யட்டும் என்பது போல பார்க்க, அவனோ தொண்டையை செருமிக் கொண்டு, “நயனி, இவங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற கெஸ்ட், வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்படி தான் மரியாதை இல்லாமல் நடந்துப்பியா?” என்றான் சற்று அழுத்தமான குரலில்.
“என்னது கெஸ்டா?” என்று பவிஷ்காவும் மகேந்திரனும் அதிர்ந்து போய் சித்தார்த்தை பார்க்க, அவனோ கண்களால் இமைத் தட்டினான்.
“இல்லங்க அதுவந்து ரொம்ப நாளா இவங்களையும் இவங்க தம்பியையும் மனசுக்குள்ள திட்டிட்டே இருந்ததால நேர்ல பார்த்ததும் படபடன்னு பேசிட்டேன். இவங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற கெஸ்டா? எதுக்காக வந்திருக்காங்க?” என்றாள் கணவனை பார்த்து.
“அது” என்றவன் தலையை கோதியபடி, “இவங்களும் டாக்டர் தான். இவங்களோட ஹஸ்பண்ட் என்னோட பிரண்ட், நம்ம ஆஸ்பிட்டல்ல இவங்களுக்கு வேலை போட்டு கொடுக்க சொன்னான். அது சம்மந்தமா பேச வந்திருப்பாங்கனு நினைக்கிறேன்” என்றபடி அவன் கெஞ்சுதலாய் அக்காவை பார்க்க, அவள் அவனை எரித்து விடுவது போல முறைத்துக் கொண்டிருந்தாள்.
நிலைமையை அப்போதைக்கு அப்படியே சமாளிக்க எண்ணிய மகேந்திரனும் பவிஷ்காவை பார்த்து, “உள்ளே வாம்மா” என்றார்.
நேத்ரா எதுவும் பேசாமல் ஒரு வித இறுக்கத்துடன் நின்றிருக்க, பவிஷ்கா தன் தந்தையையும் தம்பியையும் முறைத்தபடி உள்ளே வந்தாள்.
அதே சமயம் பவிஷ்காவை வீட்டில் டிராப் செய்ய வந்திருந்தான், பவிஷ்காவின் மச்சினன் சங்கர். காரை பார்க் பண்ணி விட்டு ரம்யாவை கையில் தூக்கியபடி உள்ளே வந்தவன், “அண்ணி எனக்கு அவசரமா வேலை இருக்கு. நான் அப்புறமா வந்து உங்களை பார்க்கிறேன்” என்றபடி ரம்யாவை கீழே இறக்கி விட்டு
“ஹாய் அபி, ஹவ் ஆர் யு? சாரி இப்போ அவசரமா கிளம்பறேன். இன்னொரு நாள் முறையா வந்து உன்னையும் உன் மனைவியையும் விருந்துக்கு அழைக்கிறேன்” என்று சித்தார்த்தை பார்த்து சொன்னான்.
சங்கரின் அபி என்ற அழைப்பில் நேத்ரா அதிர்ச்சியுடன் திரும்பி சித்தார்த்தை சந்தேகத்துடன் ஆராய்ச்சி பார்வை பார்த்தாள்.
சங்கர் இப்போது மகேந்திரனிடம் திரும்பி, “போய்ட்டு வர்றேன் மாமா, உடம்பை பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பினான். அவன் கைகளில் இருந்து இறங்கிய சிறுமி ரம்யா தன் மாமனை கண்டதும் ஓடிச் சென்று அவன் காலைக் கட்டிக் கொண்டாள்.
பவிஷ்கா “இப்போ என்ன சொல்ல போறே?” என்று கிண்டலுடன் தன் தம்பியை பார்த்தாள். சித்தார்த் ரம்யாவின் கரத்தை பற்றிக் கொண்டு, திடுக்கிடலோடு மனைவியை திரும்பி பார்த்தான்.
நயனியோ தன் நயனங்களால், சித்தார்த்தையும் ரம்யாவையும், பவிஷ்காவையும் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தாள். மகேந்திரன் தனக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை என்பது போல “சரி பேசிட்டு இருங்க, எனக்கு டயர்டா இருக்கு, நான் போய் படுக்கறேன்” என்றபடி எஸ் ஆகி போனார்.
சித்தார்த் தன்னை எப்போதும் போல தூக்கி கொஞ்சுவான் என்று தலையை நிமிர்ந்து மாமனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா. ஆனால் அவனோ நயனியையே பார்த்துக் கொண்டிருக்க, பொறுமையிழந்தவளாய், “மாமா, எவ்வளோ நேரம் அந்த ஆன்டியையே பார்த்திட்டு இருப்ப? தூக்கு என்னைய?” என்றாள் மழலைக் குரலில்.
சித்தார்த் நயனியை பார்த்தபடி ரம்யாவை தன் ஒற்றைக் கையால் தூக்கிக் கொண்டான். அவள் அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டபடி, “மாமா, உன் அக்கா ரொம்ப மோசம், ஒரு ஐஸ் கீரிம் கூட வாங்கி தரமாட்டேங்கிறாங்க. என்னை கூட்டிட்டு போய் ஐஸ் கீரம் வாங்கி தர்றீயா?” என்றபடி ரம்யா சித்தார்த்தின் கழுத்தை தன் கைகளால் மாலையாக கோர்த்துக் கொண்டு செல்லம் கொஞ்சினாள்.
நேத்ரநயனி அதிர்ச்சியுடன் இப்போது பவிஷ்காவையும் சித்தார்த்தையும் மாறி மாறி பார்த்தாள்.
“இவங்க உங்க பிரண்டோட மனைவினு சொன்னீங்க? இந்த பாப்பா உங்களை மாமானு கூப்பிடுறாளே?” என்றாள் சந்தேகத்துடன்.
பவிஷ்கா “கேளு கேளு நல்லா கேளு” என்று மனதிற்குள் கொக்கரித்தபடி தம்பியை பார்க்க, அவன் அக்காவை கண்களால் அடக்கியபடி, “இவளுக்கு அப்படியே கூப்பிட்டு பழக்கமாயிடுச்சு” என்று திணறினான்.
என்னை பார்த்து பயந்துகிட்டு புள்ளபூச்சி மாதிரி இருந்தா, இப்போ இவளுக்கெல்லாம் நான் பயப்படுற மாதிரி ஆயிடுச்சே என்று மனசுக்குள் புலம்பினான்.
ரம்யா, பவிஷ்காவை காட்டி அக்கானு சொன்னது நினைவில் வர, நேத்ரா நேரடியாக ரம்யாவை பார்த்து, “ஹாய் குட்டிமா, உங்க பேர் என்ன?” என்றாள்.
“ஐயம் ரம்யா டாட்டர் ஆப் செல்வா பவிஷ்கா ப்ரம் யுஎஸ்” என்றாள் மிடுக்குடன்.
“வெரி குட், எப்போ இந்தியா வந்தீங்க? யாரெல்லாம் வந்தீங்க?” என்றாள்
“நான் அம்மா, தாத்தா கூட வந்தேன். அப்பா யுஎஸ்ஸில் இருக்கார்” என்றாள் ரம்யா.
“உன் தாத்தா எங்கே? இங்கே வரலையா?” என்றாள் நயனி.
“இப்போ தானே டயர்டா இருக்குனு சொல்லிட்டு போனாரு, பார்க்கலையா நீங்க அவர?” என்றாள் ரம்யா
நேத்ரா கண்களால் சித்தார்த்தை காட்டி, “இவர் யாரு உனக்கு?” என்றாள்
“இவர் என் மாமா, என் அம்மாவோட தம்பி” என்று தன் அன்னையை காட்டினாள்.
பவிஷ்கா பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் தலையை குனிந்து கொண்டாள். நேத்ரநயனி இப்போது சித்தார்த்தை அழுத்தமாக பார்த்தபடி,
“நீங்க தானே அந்த அபி?” என்றாள் அடிக்குரலில்
சித்தார்த் மிடறு விழுங்கியபடி, தன் அக்காவை பார்த்தான். அவள் குனிந்த வாக்கில் சிரித்துக் கொண்டிருந்தாள்.
“பதில் சொல்லுங்க? கொஞ்ச முன்னாடி வந்தவர் கூட உங்களை அபின்னு தானே கூப்பிட்டார். இந்த பாப்பாவும் உங்களை மாமானு சொல்றா, அவங்களை அம்மான்னு சொல்றா? அதுமட்டுமில்லாமல் உங்களை அவங்களோட தம்பினு சொல்றாளே? ஆனா நீங்க உங்க பிரண்டோட மனைவினு சொல்றீங்க, எனக்கெதுவும் புரியல. என்கிட்ட மறைக்காமல் உண்மையை சொல்லுங்க? இவங்க உங்க அக்காவா? இல்ல பிரண்டோட மனைவியா?” என்றாள் அழுத்தமாக
தொண்டையை செருமியபடி, “இரண்டும் தான்” என்றான் பக்கவாட்டாக திரும்பிக் கொண்டு.
“எனக்கு புரியல? இரண்டும் தான்னா?” என்றாள் நேத்ரா மீண்டும்.
“அவன் பிரண்டோட மனைவியான நான் அவனோட அக்காவாகவும் இருக்கலாம் தானே” என்றாள் பவிஷ்கா தன் சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாக சிரித்துக் கொண்டே
இப்போது நேத்ரநயனி அதிர்ச்சியுடன் திரும்பி பவிஷ்காவை பார்க்க இனி மறைத்து என்ன ஆகி போகிறது என்று நினைத்துக் கொண்டு, “நீ இத்தனை வருஷமா திட்டிட்டு இருந்த அந்த அபி, சாட்சாத் உன்னோட புருஷன் சித்தார்த் அபிமன்யு தான்” என்றாள் பவிஷ்கா புன்னகையுடன்.
நயனி தன் நயனங்களால் எரித்து விடுபவள் போல இப்போது சித்தார்த்தை முறைக்க, அவன் தொண்டையை செருமிக் கொண்டு பலமாக இருமுவது போல பாவனை செய்து, “நயனி கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாயேன்” என்றான் இருமிக் கொண்டே
அசையாமல் அழுத்தமாக தன் கணவனை இப்போது தான் பார்ப்பது போல புருவத்தை சுருக்கி ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் நேத்ரநயனி. தன்னை சைக்கிளில் கிண்டல் செய்துவிட்டு போன நெடுநெடுவென்று வளர்ந்திருந்த மெலிந்த உருவத்திற்கும், இப்போது ஆஜானுபாகுவான உடற்கட்டுடன் நிற்கும் இந்த உருவத்திற்கும் ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் தான் இவன் என்று தெள்ள தெளிவாக புரிந்து போனது
இப்போது நயனியின் கண்களில் சிவப்பு ஏறியது, மூக்கு கோபத்தில் கிளி மூக்கு போல சிவந்து விடைத்துக் காெண்டது. காதில் புகை வராதது தான் குறை என்ற தோற்றத்தில் நின்றிருந்தவளின் முகம் ரத்தமென சிவந்து போக உடல் கோபத்தால் உஷ்ணமானது.
“இத்தனை நாளாக அவள் மனதின் ஓரத்தில் எப்போதும் உறுத்திக் கொண்டிருந்தவன், அவளுடைய கணவனா? இவனா அவளை எப்போதும் சோடாபுட்டி என்று அழைத்தது? அதனால் தான் திருமணம் ஆன மறுநாளே அன்று கேண்டினில் வைத்து அவளை மீண்டும் சோடாபுட்டி என்று அழைத்திருக்கிறான்” என்று கோபத்துடன் கணவனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
நயனியின் நயனங்களில் மருண்ட பார்வையை மட்டுமே பார்த்திருந்தவன் இப்போது தான் முதல்முறையாக மனைவியின் கோபப்பார்வையை பார்க்கிறான். தவறு செய்துவிட்டு மாட்டிக்கொண்ட சிறுபிள்ளை போல திருதிருத்தபடி நின்று மனைவியை பாவமாக பார்த்தான் சித்தார்த் அபிமன்யு.
ரம்யா நிலைமை புரியாமல் இப்போது, “என்னை மட்டும் யாருனு கேட்டீங்க? நீங்க யாருனு சொல்லவே இல்லையே? உங்க பேரு என்ன?” என்றாள் மழலை குரலில்.
ரம்யாவின் கேள்வி நேத்ராவின் காதுகளில் விழுந்ததாக தெரியவில்லை, சித்தார்த்தை முறைத்துக் கொண்டு விறைப்புடன் நின்றிருந்தாள். அவள் எந்த பதிலும் சொல்லாததால் சித்தார்த்தின் கன்னத்தை திருப்பி தன்னை நோக்கி பார்க்க செய்த ரம்யா, “மாமா இவங்க யாரு? ஏன் நம்ம வீட்ல இருக்காங்க?” என்றாள்.
சித்தார்த் மனைவியையே பார்த்தபடி “இவங்க பேரு நேத்ரநயனி, நயனினு கூப்பிடுவோம், இவங்க தான் உன்னோட அத்தை” என்றான்.
“அத்தையா? இவங்க எப்படி திடீர்னு எனக்கு அத்தையானாங்க?” என்றாள் ரம்யா யோசனையுடன்.
“ரம்யா குட்டி, உன் சித்து மாமா, இவங்களை தான் கல்யாணம் கட்டிக்கிட்டான். மாமாவோட மனைவி உனக்கு அத்தை. அதனால நீ அவங்களை அத்தைனு கூப்பிடணும்” என்றாள் பவிஷ்கா தன் மகளுக்கு விளக்கும் குரலில்.
இப்போது மாமாவின் தாடையை பற்றி தன்னை நோக்கி மீண்டும் திருப்பியவள், “மாமா, நீ இவங்களையா கல்யாணம் பண்ணிக்கிட்டே?” என்றாள் தன் மாமனிடம் உறுதி செய்துக் கொள்ளும் நோக்கில்.
அவன் ஆமாம் என்று தலையாட்ட, “நீ அந்த எலிசா ஆன்ட்டியை தானே கல்யாணம் பண்ணிக்க போறதா ஒரு நாள் என்கிட்ட சொன்னே?” என்றாள் தாடையில் ஒற்றை விரலை தட்டிக் கொண்டே யோசிக்கும் பாவனையில்.
அதிர்ந்தே போனான் சித்தார்த் அபிமன்யு.