சித்தார்த் அபிமன்யு பதில் சொல்லாமல் இப்போது மனைவியை அழுத்தமாக பார்த்தபடி நின்றிருக்கவும், வேறு வழியில்லாமல் எழுந்து தயாரானாள். மகேந்திரனும் சிவக்குமாரும் ஏற்கனவே கல்லூரிக்கு சென்று விட்டிருந்தனர்.
மனைவி மகனுடன் தன் ரோல்ஸ்ராய்ஸ் காரில் வந்திறங்கிய சித்தார்த் அபிமன்யு, மகன் ராகவ் பிரசாத்தை கைகளில் தூக்கிக் கொண்டு, மறுகையில் மனைவியின் கரத்தை இறுக்கி பிடித்தபடி நடந்துச் சென்றான்.
“வாங்க சித்தார்த், ஏன் இவ்வளவு லேட்” என்று கேட்டபடி வாசல் வரை வந்து வரவேற்றார் கல்லூரி முதல்வர் தயாளன்.
நயனியின் மேடிட்ட வயிற்றை பார்த்தவர் சித்தார்த்தின் காதருகே வந்து, “என்ன டாக்டர் சித்தார்த்? உங்க மனைவிக்கு கல்லூரி பாடத்தோட காதல் பாடம் தான் அதிகம் எடுத்திருக்கீங்க போலிருக்கு. மனைவி படிப்பு முடியறதுக்குள்ள நீங்க டபுள் புரமோஷன் வாங்கிட்டீங்களே” என்று கலாய்க்கவும், சித்தார்த்தின் முகம் சிவந்து போனது.
“அப்படியெல்லாம் இல்ல சார்” என்று திணறினான். கணவனின் திணறலை பார்த்தவள் பக்கென்று சிரித்து விட்டாள்.
“ஏய் சோடாபுட்டி சும்மா இருடி” என்றான் அவள் காதருகே குனிந்து
அவன் அப்படி சொன்னதும் கோபம் கொண்டவளாக அவன் இடையில் கிள்ளினாள். சித்தார்த் வலியில் முகம் சுருக்கி, உடலை திருப்பி மனைவியை முறைத்தான். அவள் எப்போதும் போல தன் நயனங்களால் கணவனை வசீகரமாக பார்த்தாள்.
மனைவியின் மான்விழிப்பார்வையில் சிக்குண்டவனாய் சித்தார்த் அவளையே பார்த்துக் கொண்டு அப்படியே நின்றிருக்கவும் தயாளன் தொண்டையை கனைத்தார்.
“க்கும்,. சித்தார்த் நீங்க இரண்டு பேரும் வேணும்னா என்னோட ரூம்ல வெயிட் பண்ணுங்க. நேத்ராவோட டர்ன் வரும்போது உங்களுக்கு போன் பண்றேன், நீங்க பொறுமையா அழைச்சிட்டு வாங்க” என்றார்.
“ஓகே சார்” என்று அவன் மனைவி மகனுடன் நடக்கவும், “உங்க மகனை என்கிட்ட கொடுங்க, உங்க அப்பா மகேந்திரன் சாரும் மேடையில் தான் இருக்காரு. அவர்கிட்ட கொடுத்திடுறேன்” என்று ராகவ் பிரசாத்தை வாங்கி கொண்டார்.
ராகவ்வும் தாத்தாவின் பெயரை சொன்னதும், மறுக்காமல் அவருடன் சென்றான். சித்தார்த் மனைவியை அழைத்துக் கொண்டு, தயாளன் அறைக்கு சென்றான். “ஆனாலும் இந்த தயா சார் சூப்பர்டி, நமக்கு எப்போ எல்லாம் தனிமை வேணும்னு புரிஞ்சுட்டு உடனே செஞ்சு கொடுக்கிறார் பாரேன்” என்றபடி மனைவியின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
நயனியும் கணவனின் மார்பில் வாகாக சாய்ந்துக் கொண்டாள்.
“அபி, என் கனவை நிறைவேற்றி கொடுத்திருக்கீங்க, ரொம்ப தேங்க்ஸ் லவ்யூ சோ மச்” என்றாள்.
அவள் கன்னத்தை தன் கைகளில் ஆவேசமாக ஏந்தியபடி, “ஏன்டி முதல்முறையா லவ்யூனு சொல்றே, அதை வீட்டில் சொல்லக்கூடாதா? என்று கூறியபடி மனைவியின் இதழ் நோக்கி குனிந்தான்.
அப்போது தயாளனிடமிருந்து போன் வந்தது. “நயனி, உன்னை வரச்சொல்ல தான் போன் பண்றாங்க, கிளம்பு” என்று அவளை அழைத்துக் கொண்டு விழா நடக்கும் அரங்கத்திற்கு சென்றான்.
மேடிட்ட வயிற்றோடு நேத்ரநயனி மேடை ஏறவும் கீழே அமர்ந்திருந்த அவளுடைய கல்லூரி தோழர்கள் ஆரவாரத்துடன் கைத்தட்டி விசிலடித்தனர். “என்ன நேத்ரா, காலேஜ்ல ஸ்டடிஸ் முடிஞ்சும் பிராக்டிகல் கிளாஸ் முடியல போலிருக்கே” என்று ஒருத்தி சத்தமாக கிண்டல் செய்யவும் சித்தார்த் அவர்கள் அமர்ந்திருந்த பக்கத்திற்கு எதிரில் வந்து கைகளை கட்டியபடி அனைவரையும் அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான்.
உடனே அங்கிருந்த மொத்த ஸ்டென்ட்டுகளும் அமைதியாகி விட்டனர். இப்போது தான் நயனிக்கு நிம்மதியாக இருந்தது. மகேந்திரனின் கையால் தான் மருத்துவர் ஆனதற்கு சான்றாக இருந்த பட்டத்தை வாங்கிக் கொண்டு அவரிடமும் தன் தந்தையிடமும் ஆசி வாங்கினாள்.
சிவக்குமாரின் நெஞ்சம் நெகிழ்ந்து போயிருந்தது. எப்படியோ இருந்த தன் மகளை இன்று மருத்துவராக்கி, அன்பான கணவனையும் அழகான குழந்தைகளையும் அவள் பெற்று இன்புற்று வாழ்வதற்கு காரணமான தன் நண்பனை ஆனந்த கண்ணீருடன் ஆரத்தழுவிக் கொண்டார்.
“டேய் சிவா, எதுக்குடா இப்படி உணர்ச்சி வசப்படறே. எல்லாரும் பார்க்கிறாங்க பாரு” என்று நண்பனை கடிந்து கொண்டார் மகேந்திரன்.
“பார்த்தால் பார்த்துட்டு போகட்டும் போடா. நீ மட்டும் இல்லைனா என் மகளோட வாழ்க்கை அந்த பாண்டி கையில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கும். உனக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை மகி” என்றார் சிவா தழுதழுத்த குரலில்.
“நான் கூட உனக்கு நன்றி சொல்லணும்டா, சரியான நேரத்தில் நேத்ராவை என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலைனா, அந்த எலிசாவை பத்தி முழுசா தெரிஞ்சுக்காமல், அவளை கல்யாணம் கட்டிக்கிறேன்னு வந்திருப்பான் என் மகன். எப்படியோ வழிமாறி போக இருந்த இரண்டுபேராட வாழ்க்கை, இப்போ அவங்க கல்யாணத்தால தான் சரியாகி இருக்கு. நாம இரண்டு பேரும் அந்த பாண்டிக்கு தான்டா நன்றி சொல்லணும். அவன் குடிச்சுட்டு விழுந்து கிடந்ததால தான் நம்ம பிள்ளைங்களுக்கு கல்யாணம் ஆச்சு” என்றார் மகேந்திரன்.
கல்லூரியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்ததால் நேத்ரநயனியை சில வார்த்தைகள் பேச சொன்னார்கள், “என்னோட வெற்றிக்கு முழு காரணம் என் கணவர் டாக்டர் சித்தார்த் அபிமன்யு. அவரில்லாமல் நான் இல்லை. அவரோட சம்மத்ததோட ஏழை மாணவர்கள் யாருக்கெல்லாம் மருத்துவம் படிக்கணும்னு ஆசையா இருக்கோ, அவங்களுக்கு இலவச கோச்சிங் சென்டர் வச்சி கொடுக்க போறேன்.
உண்மையிலேயே திறமையும் ஆர்வமும் இருக்கிறவங்களுக்கு மருத்துவம் படிக்க உதவியும் செய்வோம். சும்மா உதவி செய்திட்டு போக முடியாது இல்லயா? டாக்டர் படிச்சு முடிச்சதும் எங்களோட டிரஸ்ட் மூலமாக நடத்தற இலவச மருத்துவ முகாம்களுக்கு அவங்க இரண்டு வருஷங்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கணும்ங்கிற கண்டிஷனோட நாங்க உதவி செய்வோம். யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுதோ நலமுடன் மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த விஷயத்தை உங்க பகுதியில் இருக்கும் நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் பகிருங்கள் நண்பர்களே” என்று நேத்ரநயனி பேசவும் கைத்தட்டலால் மொத்த அரங்கமே அதிர்ந்தது.
“பாத்தீங்களா அப்பா உங்க மருமகளை? கண்டிஷனோட உதவி செய்யறளாம், மேடையில் என்னமா பேசறா? பார்க்கறதுக்கு தான்ப்பா அவ வெகுளி மாதிரி இருப்பா. ஆனால் அதி புத்திசாலி” என்றான் சித்தார்த் மனைவியை பார்த்து சிலாகித்தபடி.
“என் மருமகள் என்னோட தேர்வாச்சே, அப்படி தான் இருப்பா” என்றார் மகேந்திரனும் பெருமையாக மீசையை முறுக்கிவிட்டபடி
*********
சித்தார்த் அபிமன்யு உடன் இணைந்து நேத்ரநயனியும் ஆஸ்பிட்டல் நிர்வாகத்தில் பொறுப்பேற்றாள். பெண்களுக்கான தனிப்பிரிவில் இன்டர்னாக பணியாற்றிக் கொண்டே மருத்துவமனையில் தேவையான மாற்றங்களை செய்தாள். அதே நேரம் மாதத்திற்கு ஒரு முறை ஸ்டாஃப் மீட்டிங் வைத்து அவர்களின் நிறை குறைகளை மட்டுமின்றி அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்தாள். எப்போதும் சுதாவை தோழியாகவே நடத்தினாள்.
மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் போதே பிரசவ வலி வரவும், தன் இரண்டாவது குழந்தையையும் பெற்றெடுத்தாள். இப்போது பிறந்தது பெண் குழந்தை, அது சித்தார்த் ஆசைப்பட்டது போல நேத்ரநயனியை போலவே இருந்தது.
ஆசையுடன் தன் மகளை தூக்கி முத்தமிட்டவன் நயனியை பார்த்து, “ரொம்ப தேங்ஸ்டி, நான் கேட்ட மாதிரியே பெண் குழந்தையை கொடுத்ததுக்கு” என்றான் வாஞ்சையுடன்
“போங்க” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்
“ஏன்டி?” என்றான் எதுவும் புரியாமல்
“நம்ம ராகவ் பிறந்தப்ப, முதல்ல வந்து என் நெற்றியில் முத்தம் கொடுத்தீங்க. அப்புறமா தான் அவனை தூக்கி கொஞ்சனீங்க. இப்போ உங்க பொண்ணு தான் உங்களுக்கு முக்கியமா போயிட்டாளா? வந்ததும் நான் எப்படி இருக்கேன்னு பார்க்காமல் உங்க பொண்ணுக்கு முத்தம் கொடுக்கறீங்க?” என்றாள் உதட்டை சுழித்து.
“என்னடி நயனி இப்படி சொல்லிட்டே?” என்றவன் அவசரமாக வந்து மனைவியின் நெற்றியில் இதழ் பதித்தான்.
********
அன்று ஞாயிறு விடுமுறை என்பதால் ராகவ் பிரசாத் ஆறுமாத குழந்தையான தன் தங்கை மிருதுளாவுடன் ஹாலில் விளையாடி கொண்டிருந்தான். மகேந்திரன் இருவரையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
எங்கேயோ வெளியே சென்றுவிட்டு வந்த சித்தார்த் மூவரையும் ஹாலில் பார்த்ததும், “ராகவ், எங்கேடா உங்க அம்மா?” என்று கேட்டான்.
“அம்மா மாடி ரூம்ல இருக்காங்க டாடி, ஏதோ படிக்கணுமாம், என்கிட்ட பாப்பாவை பத்திரமாக பாத்துக்க சொன்னாங்க, அதான் நான் விளையாட போகாமல் இங்கேயே பாப்பாவை பார்த்துட்டு இருக்கேன்” என்றான் பெரிய மனுஷன் போல.
அவன் சொன்ன தினுசில் மகேந்திரனும் சித்தார்த்தும் சிரித்தனர்.
மகனிடம் குனிந்து “ராகவ் செல்லம், பாப்பாவை பத்திரமா பாத்துக்கோ, அம்மாவுக்கு பாடத்தில் எதாவது டவுட்னா சொல்லி தரணும். அதனால டாடி மாடிக்கு போறேன்” என்றான் ரகசியமாக அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
“ஓகே டாடி, நீங்க அம்மாவுக்கு கிளாஸ் எடுங்க, நான் பாப்பாவை பத்திரமா பாத்துக்கிறேன்” என்று சத்தமாக ராகவ் சொல்லவும் பதறிப்போனான் சித்தார்த்.
சங்கடத்துடன் அவசரமாக தந்தையை நிமிர்ந்து பார்க்க, அவரோ கவனிக்காதது போல தன் போனை பார்த்துக் கொண்டிருந்தார். மகனின் கன்னத்தில் அவசர முத்தம் ஒன்றை பதித்து விட்டு மாடிப்படிகளில் தாவி சென்றான்.
நேத்ரநயனி அப்போது தான் தலைக்கு குளித்து உடைமாற்றிக் கொண்டு, தன் நீண்ட கூந்தலை ஆற வைத்துக் கொண்டிருந்தாள்.
சத்தம் போடாமல் வந்தவன் மனைவியை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டு அவள் கூந்தலின் வாசம் பிடித்தான்.
மருத்துவமனையில் வேலையிருப்பதாக சொல்லி காலையிலேயே சென்றவன் திடீரென்று வந்து எதிர்பாராத நேரத்தில் அணைக்கவும் திகைத்து பக்கவாட்டாக திரும்பி கணவனை வியப்புடன் பார்த்தாள். அவன் கண்கள் காதல் மொழிகளை பேசவும், அகலமான தன் நயனங்களை இன்னும் விரித்து பார்த்தவளை மேலும் தனக்குள் இறுக்கினான்.
அவளை ஆழ்ந்து பார்த்தபடி, “நயனி என்னை இப்படி வெறிச்சு பார்க்காதடி. இந்த மான்விழிக்குள்ள என்ன தான்டி வச்சிருக்கே? முதன்முறையா அன்னிக்கு ஆஸ்பிட்டல்ல உங்கப்பா வந்து இருக்கார்னு உன் தோளில் கையை வச்சப்ப, நீ அதிர்ச்சியோடயும் நடுக்கத்தோடயும் இப்படி தான் பார்த்தே. அன்னைக்கு இந்த பார்வையில் விழுந்தவன் தான்டி, கரை சேரவே முடியாமல் நயனி என்னும் நதிக்குள் மூழ்கிபோயிட்டேன்” என்று கிசுகிசுப்பாக சொல்லியபடி அவள் கழுத்துவளைவில் முகம் புதைத்தான்.
திருமணம் ஆகி ஆறு வருடங்களுக்கு மேலாகியும் கணவன் இப்போதும் புதிதாக அவளை பார்ப்பது போல ரசனையுடன் அவளை வர்ணிப்பதும், அணைப்பதும், அணுகுவதும் நயனிக்கு மிகவும் பிடித்திருந்தது.
“என்னங்க” என்றாள்
“என்னடி” என்றான் கழுத்து வளைவில் இதழ் பதித்தபடி
“எல்லாரும் நம்மளை தான் பார்த்துட்டு இருக்காங்க” என்றாள் மெல்லிய குரலில்.
“கதவை சாத்திட்டு தானே வந்தேன்! மறுபடியும் யாருடி பூஜை வேளையில் க….?” என்று பதறிப்போய் சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த அறையில் யாருமில்லாததை பார்த்து மனைவியை முறைத்தான்.
“அங்கே இல்லைங்க, இதோ நம்ம கதையை படிச்சுட்டு இருக்கிறவங்க தான், நம்மளையே கவனிச்சுட்டு இருக்காங்க” என்றாள் மெல்லிய குரலில்.
“ஆரம்பத்திலிருந்து நம்ம பிரச்சனையை தெரிஞ்சவங்க, அவங்களே நமக்கு தனிமை கொடுப்பாங்க. நீ கவலைபடாதே” என்றபடி மனைவியின் கண்களோட தன் கண்களை கலக்கவிட்டான் சித்தார்த் அபிமன்யு.
சித்தார்த் அபிமன்யு நேத்ரநயனியின் அழகிய நயனங்களில் வீழ்ந்தவன் கரைசேர விருப்பமில்லாமல் தன் காதல் பயணத்தை அவளுக்குள் தொடர்ந்து கொண்டே இருப்பான்.
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் - பாரதிதாசன்
இதில் சித்தார்த் அபிமன்யு மட்டும் விதிவிலக்கா என்ன? சித்தார்த்தும் மனைவியின் மான்விழி பார்வையில் சிக்குண்டதால் காதலில் மட்டுமல்ல வாழ்க்கையில் அவன் சாதிக்க போகும் சாதனைகள் ஏராளம். அவர்களையும், இக்கதைக்கு ஆதரவு கொடுத்த அனைத்து வாசக செல்வங்களையும் வாழ்த்தி வணங்கி விடைபெறுகிறேன். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் வித்தியாசமாக கதைக்களத்தில் மீண்டும் சந்திப்போம், நன்றி! வணக்கம்!
சுபம்!