“சித்தார்த் இந்தியா வந்த பிறகு, ஸ்டீவன் ரிச்சர்ட் எனக்கு புதுசா அறிமுகம் ஆனான். அவன் பெரிய மருந்து கம்பெனியோட முதலாளி என்பதால சித்தார்த்தை மறந்துட்டு ரிச்சர்ட்டோட பழக ஆரம்பிச்சேன்.
அவனோட கம்பெனியில், அவனும் சில ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து சில மருந்துகள் கண்டுபிடிச்சிருக்காங்க. அதை யுஎஸ் கவர்ன்மென்ட் அப்ரூவ் தரலைனு சொல்லி வருத்தப்பட்டான். நிறைய மருந்துகள் தயாரிச்சதுல பணம் வீணானதோடு, அவங்களோட கண்டுபிடிப்போட ரிசல்ட்ம் சரியா தெரியலைனு சொன்னான்.
அந்த மருந்துகளை சாப்பிட்டால் உடனே எல்லா நோயும் குணமாயிடும். ஆனால் சில பக்க விளைவுகள் வரும். பக்க விளைவுகள் இல்லாத மருந்துகள் இருக்கா என்னனு என்கிட்ட பேசிட்டு இருந்தான். அப்போ தான் அவனுக்கு ஒரு யோசனை வந்தது.
இந்த மருந்துகள் எல்லாம் யுஎஸ்ல தானே தடை பண்ணியிருக்காங்க. வேற நாட்டில் புழக்கத்தில் விட்டால் என்னனு யோசிச்சான். அதுக்காக அவன் வளர்ச்சியடையாத நாடுகளில் இருக்கும் மருந்துகளுக்கான டீலர்கள் எல்லாரிடமும் பேசினான்.
அதுல ஒருத்தர் தான் டாக்டர் கிருஷ்ணன், அவர்கிட்ட பேசும் போது அவர் சொன்ன மருத்துவமனையோட பேரு நலமுடன் மருத்துவமனை. நான் உடனே இது சித்தார்த்தோட மருத்துவமனைனு சொன்னதும், “எலிசா, நீ எனக்காக இந்த சித்தார்த்தோட மருத்துவமனைக்கு போய், என்னோட எல்லா மருந்துகளையும் அந்த நாட்டில் பயன்படுத்தறதுக்கு ஏற்பாடு செய். எல்லா மருந்துகளும் விற்பனை ஆயிட்டால், எனக்கு எந்த அழுத்தமும் இருக்காது. நாம இரண்டு பேரும் திருமணம் செய்துக்கலாம், என்னோட மொத்த சாம்ராஜ்யத்துக்கும் நீ தான் பிரின்சஸ், என்ன சொல்றே?” என்றான் ரிச்சர்ட்.
எலிசாவின் கண்களில் பேராசை தோன்றியது. பெரிய பணக்காரர்களில் ஒருவனான ஸ்டீவன் ரிச்சர்ட் உடன் டேட்டிங் கிடைத்ததையே பெரிய அதிர்ஷ்டமாக நினைத்துக் கொண்டிருந்தாள். அவனுடைய கேர்ள் பிரண்ட் என்பதற்கே அவளுடைய சகாக்கள் எல்லாம் வாயை பிளந்தனர். அப்படி பட்டவன் அவளை திருமணம் செய்துக் கொள்ள போகிறானாமே. அத்தனை சொத்துக்கும் அவன் ராஜா என்றால் அவள் ராணி அல்லவா?
கண்களில் ஆர்வத்துடன் அவனை பார்த்தவள், “ரிச்சர்ட், எனக்கு ஓகே தான். ஆனால் சித்தார்த் என்னை அவனோட ஆஸ்பிட்டல்ல அனுமதிப்பான்னு எனக்கு தோணலை” என்றாள் யோசனையோடு
“ஓகே பேபி, ஜஸ்ட் அவன்கிட்ட நடிச்சு, அந்த மருத்துவமனைக்குள் நுழைய பாரு. அப்படி முடியலைனா டோன்ட் வொர்ரி. வேற ஆஸ்பிட்டல்ல சேர்ந்திடு. மருந்துகளை புழக்கத்தில் விடுவதற்கு டாக்டர் கிருஷ்ணன் உனக்கு உதவி செய்வார்” என்றான் ரிச்சர்ட்.
அவன் சொன்னபடி எலிசா முதலில் சித்தார்த்திடம் தன் காதல் நாடகத்தை அரங்கேற்றி இருந்தாள். ஆனால் அவனிடம் அவள் எதிர்பார்த்த எதிர்வினை இல்லாமல் போகவும் மருத்துவமனையில் வேலை கேட்டாள். நேத்ராவும் தன் இளகிய மனதால் எலிசாவை வேலையில் சேர்த்துக்கொள்ளுமாறு கணவனிடம் பரிந்துரைக்கவும் எலிசாவின் வேலை சுலபமாக முடிந்தது.
டாக்டர் கிருஷ்ணன் சித்தார்த்தின் மருத்துவமனையில் ஏற்கனவே பணிபுரிந்து இருந்ததால், எலிசாவிற்கு அவரால் நன்றாக உதவ முடிந்தது. மருந்துகளை மொத்தமாக வாங்க முதலில் ஜனனி தயங்கினாள் தான். ஆனால் டாக்டர் கிருஷ்ணன் அவளுக்கு பெரியதாக ஒரு தொகை தருவதாக சொன்னதும் அவள் ஒத்துக் கொண்டாள்.
ஆனால் ஜனனிக்கு எலிசா தருவித்த மருந்துகள் தடை செய்யப்பட்டவை என்று தெரியாது. எப்போதும் சில டீலர்கள் தங்களது மருந்துகளை வாங்க சொல்லி சிபாரிசு செய்வது உண்டு. அப்படி அவர்களிடம் மருந்துகள் வாங்கினால், அவர்கள் பரிசோ அல்லது பணமோ தருவது வாடிக்கை தான். டாக்டர் கிருஷ்ணன் இந்த மாதிரி டீலர்ஷிப்பில் இருப்பதும் அவள் அறிந்த விஷயம். எனவே கிருஷ்ணன் ஜனனிக்கு போன் செய்து சிபாரிசு செய்யவும், ஜனனி மொத்தமாக மருந்துகளை வாங்கி அதை எல்லா துறைகளுக்கும் விநியோகம் செய்திருந்தாள்.
அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை, ஒரு வாரம் சென்ற பின் அந்த மருந்துகளை மற்ற கடைகளிலும் விநியோகம் செய்வதே ஆகும். மருந்துகள் மொத்தமாக புழக்கத்திற்கு வந்த பின் மேலும் சில வாடிக்கையாளர்களையும் டீலர்களையும் கண்டறிந்து தங்கள் தொழிலை விரிவுப்படுத்திக் கொண்டு, மீண்டும் எலிசா யுஎஸ் கிளம்பிவிட வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார்கள்.
ஆனால் சித்தார்த் அதற்குள் அவர்களின் திட்டத்தை கண்டு பிடித்து விடுவான் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
எலிசா இவை அனைத்தும் சொல்லி முடிக்கும் போதே ஜனனியை விசாரித்துக் கொண்டிருந்த பெண் அதிகாரியும் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்து ஜனனியின் வாக்குமூலத்தை கூறினார். “சார் நான் நல்லா விசாரிச்சுட்டேன். இந்த பொண்ணு டாக்டர் சித்தார்த் சேம்பல் வாங்கறதுக்கு சொன்ன புரோசிட் (proceed) என்கிற வார்த்தையை பயன்படுத்தி மொத்த மருந்துகளையும் வாங்கி இருக்காள். ஆனால் அதுக்கு காரணம் எப்போதும் டீலர்ஷிப்பில் கிடைக்கும் கமிஷன் தான். மற்றபடி தடை செய்யப்பட்ட மருந்துனு அவளுக்கு தெரியாதாம்.
சித்தார்த் ஓகே சொன்ன மருந்து தானே, இதில் டாக்டர் கிருஷ்ணனும் பரிந்துரை செய்றாரேனு வாங்கிட்டதாக சொல்றா” என்றார் அந்த பெண் அதிகாரி.
தலைகுனிந்து நின்றிருந்த ஜனனியை பார்த்து “இருந்தாலும் நீங்க பண்ணது தப்பு தானே ஜனனி? ஹாஸ்பிட்டலோட விதிமுறையை நீங்க எப்படி மீறலாம்? சித்தார்த் ஒற்றை வார்த்தையில் புரோசிட்னு சொல்லியிருந்தாலும், அதை மொத்த மருந்துகளின் கொள்முதலுக்கான ஒப்புதல்னு நீங்களாவே எப்படி முடிவு செய்யலாம்? அவர்கிட்ட மீண்டும் விளக்கம் கேட்டிருக்கணும் தானே?” என்றான் விக்ரம் கடுமையான குரலில்.
ஜனனி கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே, “சார், என்னை மன்னிச்சுடுங்க. இந்த மாதிரி பிரச்சனை வரும்னு நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கலை, கமிஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படி செய்துட்டேன்” என்ற ஜனனியை நோக்கி தன் கையில் கிடைத்த பூச்சாடியை வீசினான் சித்தார்த்.
நொடியில் விக்ரம் அதை தடுத்திருந்தான். “சித்து, டோன்ட் பி எமோஷனல். நான் பார்த்துக்கிறேன்” என்றான். (Don't be emotional)
“உனக்கு கமிஷன் பணம் கிடைக்கணும்னு பொது மக்களோட உயிரை பணயம் வைப்பியா? யு டேமிட். உன்னை கொன்னால் கூட என் ஆத்திரம் தீராது. இந்த கடைசி நிமிடம் வரைக்கும் உன் மேல எனக்கு சந்தேகமே வரல. நீ ஏதோ கவனகுறைவால செய்திருப்பேன்னு நினைச்சேன். என் கண்ணு முன்னாடி நிக்காதே. மேடம் இவளை கூட்டிட்டு போங்க” என்றான் சித்தார்த் ஆத்திரத்துடன்.
விக்ரம் கண் ஜாடைக் காட்ட பெண் அதிகாரிகள் ஜனனியையும் எலிசாவையும் அழைத்துச் சென்றார்கள்.
“சித்து, இப்போ டாக்டர் கிருஷ்ணனை அரெஸ்ட் பண்ணிட்டா வேலை முடிஞ்சது. மற்றதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நோயாளிகளை கவனிச்சு அனுப்பி வை. கோர்ட் விசாரணைக்கு நீ வந்து சாட்சி சொல்ல வேண்டியிருக்கும். அப்புறம் உன் மனைவி நேத்ரா தான் எலிசாவை வேலைக்கு அப்பாயின்ட்மென்ட் பண்ணியிருக்காங்க. அவங்களும் வரவேண்டியிருக்கும்” என்றான் விக்ரம்.
“என்னடா சொல்றே? அவளுக்கு இங்கே நடப்பது எதுவும் தெரியாது. இந்த விஷயமே நான் அவள் கிட்ட சொல்ல போறது இல்ல. தெரிஞ்சா பயந்துடுவா, அப்புறம் நான் தானே எலிசாவுக்கு சிபாரிசு செய்தேன், எல்லாம் என்னால தான்னு சொல்லி வருத்துப்படுவாடா” என்றான் சித்தார்த்.
“சரி முடிஞ்சவரைக்கும் சிஸ்டருக்கு எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக்கிறேன். எதுக்கும் நேரம் கிடைக்கும் போது மெதுவா அவங்களுக்கு விஷயத்தை சொல்லிடு. கண்டிப்பா விசாரணைனு வந்தால், அவங்களோட வாக்குமூலமும் தேவைப்படும்” என்றான் விக்ரம்.
சித்தார்த் நெற்றியை தேய்த்தவாறு யோசனையில் ஆழ்ந்த போது அவன் போன் ஒலித்தது. பவிஷ்கா தான் போன் செய்திருந்தாள்.
“டேய் சித்து, என்னடா வீட்டை திறந்து போட்டுட்டு இரண்டு பேரும் எங்கே போனீங்க?” என்றாள் பதட்டத்துடன்.
அப்போதுதான் தன் கைகடிகாரத்தை பார்த்தான் சித்தார்த். மணி ஐந்தரையை காட்டியது. “பவிக்கா நீ எப்போ வந்தே? நான் நம்ம ஹாஸ்பிட்டல்ல இருக்கேன். ஒரு பிரச்சனை ஆயிடுச்சு” என்றான் சித்தார்த்.
“என்ன பிரச்சனை?” என்றாள் பவிஷ்கா பதறியபடி.
“நான் நேரில் வந்து விஷயத்தை சொல்றேன், நயனி அங்கே தான் இருப்பா பாரு, அவகிட்டயும் சொல்லிடு, இன்னும் அரைமணி நேரத்தில் வீட்டுக்கு வந்திடுவேன்” என்றான் சித்தார்த்.
“டேய் நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா? நயனி வீட்டில் இல்லை. வீடு திறந்து இருக்கு. யாருமே இல்லையேனு தான் நான் உனக்கு போன் செஞ்சதே” என்றாள் பவிஷ்கா சற்று எரிச்சலாக.
சித்தார்த் அதிர்ச்சியுடன் விக்ரமை திரும்பி பார்த்தான்.
(தொடரும்)