அவள் பதில் சொல்லாமல் மெளனமாக இருக்கவும், அவளின் தாடையை பற்றி நிமிர்த்தி அவனை பார்க்க செய்தான். அவள் கண்களோடு அவன் கண்களை கலக்கவிட்டபடி, “என்னவெல்லாம் நினைப்பாங்கனு எனக்கு விளக்கமா சொல்லு” என்றபடி தன் ஒற்றை விரலால் அவள் இதழை வருடினான்.
“என்னங்க நீங்க? போங்க” என்று வெட்கத்துடன் சிணுங்கியபடி தலையை குனிந்து கொண்டாள்.
“ஏய் நயனி, இப்படி எல்லாம் வெட்கப்பட்டு என்னை டெம்ப்ட் பண்ணாதடி. ஏற்கனவே என்னை கன்ட்ரோல் பண்ணிக்க முடியாமல் காஞ்சு போய் கிடக்கிறேன். அப்படியே உன் மேல பாய்ஞ்சுட போறேன்” என்று வேகமாக அவள் இடையை பற்றி இழுத்து அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
தன் இரு கைகளால் அவன் நெஞ்சில் குத்தினாள், “என்ன இது? ஹாஸ்பிட்டல்ல இப்படி எல்லாம் நடந்துக்கிறீங்க” என்று அவள் சிணுங்கி கொண்டே சொன்னாலும் அவனை விட்டு விலகவில்லை. அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அதற்கு மேல் முன்னேறினால் தன்னாலும் கட்டுப்பாடோடு இருக்கமுடியாது என்பதால் மனைவியை அணைத்தவாறே அப்படியே நின்றிருந்தான் கணவன்.
பவிஷ்கா சொன்னது போல, அவன் சந்தோஷத்தை யாருக்காகவோ ஏன் தள்ளி வைக்க வேண்டும் என்று தோன்றியது. எலிசா, ஐனனி, வசந்தி, பாண்டி, ஜமுனா என்று அவர்கள் வாழ்க்கையில் யார் குறுக்கே வந்தாலும் அவன் வாழ்க்கை அவன் கையில் தானே இருக்கிறது?
கணவன் மனைவி இருவரின் மன ஓசைகளும் ஓரே கீதத்தை வாசிக்க காத்திருக்கும் போது, இனியும் ஏன் மனைவியை விட்டு தனித்திருக்க வேண்டும்? வீணையாக அவள் இருக்க, அதை மீட்டும் விரல்கள் அவனிடம் தானே இருக்கிறது? காதல் கீதம் வாசிக்க அது போதாதா? அவர்களின் அன்புக்கும் அணைப்புக்கும் யாரால் அணை போட முடியும்?
“நயனி, ஒன்னு கேட்கட்டுமா?” என்றான்.
“என்னங்க?” என்றாள்.
தான் கேட்க வந்ததை மறந்து “என்ன புதுசா அப்படி கூப்பிடுறே?” என்றான். “எப்படி?” என்றாள் அவள் ஒன்றும் புரியாமல்.
“என்னங்க” என்று அவள் அழைப்பது போல ராகமாய் அழைத்து காண்பித்தான். வெட்கத்தில் மேலும் அவன் மார்பில் புதைந்தாள்.
“எங்க ஊரு பக்கம் எல்லாம் பொண்ணுங்க அவங்க புருஷனை அப்படி தான் கூப்பிடுவாங்க. அதுமட்டுமில்லாமல் உங்களை எப்படி கூப்பிறதுனு எனக்கு தெரியல. பேர் சொல்லி கூப்பிடவும் மனசுவரலை” என்றாள் அவன் மேலிருந்து தலையை நிமிர்த்தாமல்.
“நீ அப்படி கூப்பிறது என்னவோ கிக்கா தான் இருக்கு. தனியா இருக்கும் போது ஓகே. ஆனால் வெளில எல்லார் முன்னாடியும் பேர் சொல்லி கூப்பிடு” என்றான். சம்மதமாக தலையை மட்டும் ஆட்டினாள்.
“என்ன சொல்லி கூப்பிடுவ?” என்றான். “அபி” என்றாள் மேலும் அவனுள் புதைந்துக் காெண்டு.
“நயனி, இன்னும் கொஞ்ச நேரம் நாம அப்படியே இருந்தால் நான் ஆஸ்பிட்டல்னு எல்லாம் பார்க்க மாட்டேன்” என்றான் ஒருமாதிரி குரலில்.
சட்டென விலகி நின்றாள் மனைவி. அவளை பார்த்து சிரித்தவன், “கொஞ்ச நேரத்துல இங்கே நம்ம ஆடிட்டர் அட்வகேட் எல்லாம் வரப்போறாங்க அதனால தான், அது முடிச்சுட்டு நேரா வீட்டுக்குதான். இன்னைக்கு காலேஜ்க்கு லீவு சொல்லிடு” என்றான்.
“எதுக்கு காலேஜ் லீவு போட சொல்றீங்க? ஆடிட்டர் அட்வகேட் எல்லாம் எதுக்கு இப்போ வர்றாங்க?” என்று கேட்டாள் புரியாமல்.
மனைவியை அழுத்தமாக பார்த்துக் கொண்டே முதல் கேள்விக்கு பதில் சொல்லாமல், “நீயும் நம்ம ஹாஸ்பிட்டல் நிர்வாகத்துல ஒரு பார்ட்னராக இருக்கணும். அதற்கான டாக்குமென்டை தயார் பண்ணி எடுத்து வர சொல்லி இருக்கேன். அதுல நீ கையெழுத்து போட்டதும் நாம கிளம்பலாம்” என்றான்.
“என்ன? என்னை பார்டனரா ஆக்க போறீங்களா? அதெல்லாம் வேண்டாம். டாக்டருக்கு படிக்க வைக்கிறதே அதிகம். இதெல்லாம் என்னால ஒத்துக்க முடியாது. வாங்க போகலாம்” என்று திரும்பி நடக்க தொடங்கினாள்.
“அப்போ அந்த எலிசாவை இங்கே அனுமதிக்க முடியாது” என்றான் சித்தார்த் அழுத்தமாக.
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? அவங்களை இங்கே வரைக்கும் கூட்டிட்டு வந்து இப்போ இப்படி பேசினால் எப்படிங்க?” என்றாள் கணவனை நேராக பார்த்து வருத்தமான குரலில்.
“நீதானே அவளை இங்கே வேலையில் சேர்த்துக்கிறதா சொன்னே? நீ சொன்னதை செய்யறதுக்கான உரிமையை நான் உனக்கு கொடுக்கிறேன். எனக்கு இங்கே அவளை சேர்த்துக்கிறதுல உடன்பாடு இல்லை. அதனால நான் அவளோட அப்பாயின்மென்ட் லெட்டர்ல கையெழுத்து போட மாட்டேன். உனக்கு வேணும்னா நீ பார்டனரா பொறுப்பேத்துக்கிட்டு உன்னோட அதிகாரத்தால அவளை வேலைக்கு அமர்த்திக்கலாம். இல்லைனா இப்போவே அவளை அனுப்பியும் விடலாம். அது உன்னோட இஷ்டம்” என்று சொன்னான் திடமாக
“அச்சோ. இது எல்லாம் எதுக்கு? எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. இதை எதுவும் நான் எதிர்ப்பார்க்கல. மாமா, உங்க அக்கா இருக்கும் போது எனக்கு எதுக்கு இந்த பொறுப்பு எல்லாம்” என்று ஏதோதே பேசிக் கொண்டிருந்தவளை இடைமறித்தான்.
“பவிக்கா கொஞ்ச நாள் தான் இருப்பா, அவள் யுஎஸ் போயிடுவா. அப்பாவுக்கும் ரெஸ்ட் வேணும்ல நயனி” என்றான்.
அவன் சொல்வதும் நியாயமாக பட்டது. தனியொருவனாக இருந்து அவனும் எத்தனை விஷயங்களை தான் சமாளி்ப்பான். அதன்பிறகு அவனோடு எதிர்வாதம் செய்யாமல் அமைதியாகி போனாள்.
ஆடிட்டரும் அட்வகேட்டும் சித்தார்த்தின் அனுமதியோடு அறைக்குள் வந்தவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த டாக்குமென்டுகளில் எல்லாம் நயனியிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டு, மற்ற ஏற்பாடுகளை அவர்களே பார்த்துக் கொள்வதாக கூறிவிட்டு சென்றார்கள்.
அதன் பிறகு சித்தார்த் ஜனனிக்கு போன் செய்தான், “ஜனனி, இன்னைக்கு நம்ம ஸ்டாப் எல்லாருக்கும் ஒரு மாதம் சம்பளத்தை போனசா கொடுக்க ஏற்பாடு செய்யுங்க” என்றான்.
“என்ன சார் விஷேசம்” என்றாள் ஜனனி ஆர்வமாக.
“என் மனைவி நேத்ரநயனி இன்னையிலிருந்து இந்த ஆஸ்பிட்டல் நிர்வாகத்தில் பொறுப்பேற்று இருக்காங்க, அதுக்காகத்தான்” என்றான்.
ஜனனிக்கு பேச்சே வரவில்லை. முதல்நாள் நேத்ரா வேலைக்காக அவள் முன்னே வந்து நின்ற கோலம் அவள் கண்முன் நிழலாடியது. இந்த பெண்ணுக்கு எப்பேர்ப்பட்ட வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று பெருமூச்சு விட்டாள்.
“என்ன ஜனனி, பதிலே காணோம்” என்றான்.
“ஒண்ணுமில்லை சார், மேடம்க்கு என்னோட வாழ்த்துக்களை சொல்லிடுங்க” என்றாள்.
“கண்டிப்பா சொல்லிடுறேன். அப்புறம் அங்கே எலிசானு ஒரு லேடி டாக்டர் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க, அவங்களை எமர்ஜென்சி வார்ட் டாக்டரா அப்பாயின்மென்ட் பண்ணியிருக்கேன். அவங்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டரை தயார் செய்து அதை வசந்தி நர்ஸ் கிட்ட கொடுத்து அனுப்புங்க” என்றான்.
எதற்கு நர்ஸிடம் கொடுத்து அனுப்ப சொல்கிறான் என்று தோன்றினாலும். “ஓகே சார், கொடுத்து அனுப்புறேன்” என்று சொல்லி போனை வைத்தாள் ஜனனி.
அடுத்த பத்து நிமிடத்தில் வசந்தி அந்த அறை கதவருகே வந்து நின்றாள்.
“யெஸ் கம் இன்” என்றான் சித்தார்த்.
உள்ளே வந்த வசந்தி சித்தார்த்தின் அருகே அமர்ந்திருந்த நேத்ராவை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய பாடபுத்தகத்தை படித்தபடி அமர்ந்திருந்தவளின் தோரணையை பார்த்து அயர்ந்து போனாள் வசந்தி.
அவர்கள் கிண்டல் கேலி செய்த அப்பாவி பெண்ணா இவள்? பார்க்கவே அழகாகவும் கம்பீரமான தோற்றத்துடன் அமர்ந்திருக்கிறாளே? இதே பெண்ணை எத்தனை முறை டீ, காபி, பஜ்ஜி எல்லாம் வாங்கி வரச்சொல்லி இருக்கிறாள். இன்று இந்த மருத்துவமனையின் முதலாளியோட மனைவியாக உரிமையுடன் அமர்ந்திருக்கிறாளே?
வசந்தி அதிர்ச்சியோடும் பொறாமையோடும் தன் மனைவியையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த சித்தார்த், “என்ன விஷயம் சிஸ்டர்?” என்று தெரியாதது போல கேட்டான்.
“சார், இந்த அப்பாய்மென்ட் லெட்டர்ல ஜனனி மேடம் உங்க கிட்ட சைன் வாங்கிட்டு வர சொன்னாங்க” என்றாள் வசந்தி தயங்கிய குரலில்.
“அப்படியா? அதை மேடம் கிட்ட கொடுங்க” என்று மனைவியை காண்பித்தான்.
நேத்ரா புத்தகத்தில் மூழ்கியிருந்தாள். வசந்தி வந்ததையோ, கணவனின் உரையாடலையோ அவள் கவனிக்கவில்லை. சித்தார்த்தும் மனைவியை அழைக்காமல் வேண்டுமென்றே வேலையிருப்பது போல லேப்டாப்பில் மூழ்கினான்.
சிறிது நேரம் பொறுமையாக நின்றிருந்த வசந்தி, அதற்கு மேல் நிற்க முடியாமலும் வேறு வழியில்லாமலும், “மேடம்” என்றாள் சத்தமாக. நேத்ரா சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள் வசந்தியை கண்டதும் முகம் மலர்ந்தாள். “சொல்லுங்க சிஸ்டர், எப்படி இருக்கீங்க?” என்றாள் புன்னைகையுடன்.
வசந்தி சற்றும் இதை எதிர்ப்பார்க்கவில்லை, முதலாளியின் மனைவி என்று திமிர் காட்டுவாள் என்றே நினைத்திருந்தாள். ஆனால் நொடியில் நேத்ராவின் முகம் புன்னைகையில் மலரவும், வசந்தியின் முகத்திலும் சிறு புன்னகை எட்டிப்பார்த்தது. “மேடம், இந்த லெட்டர்ல கையெழுத்து போடணும்” என்றாள்.
“எதுக்கு சிஸ்டர் மேடம்னு கூப்பிடறீங்க, நேத்ரானு எப்பவும் போல கூப்பிடுங்க. கொடுங்க” என்று வசந்தியின் கையில் இருந்த கடிதத்தை வாங்கி கையெழுத்து போட்டாள்.
ஆனால் சித்தார்த், “அதெப்படி நயனி, அவங்க முதலாளியை பேர் சொல்லி கூப்பிடுவாங்க? வேணும்னா நேத்ரா மேடம்னு கூப்பிடட்டும், சரி தானே வசந்தி சிஸ்டர்” என்றான். அவன் மனைவிக்கு எங்கேயும் மதிப்பும் மரியாதையும் குறைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
வசந்தி தடுமாற்றத்தோடு, “ஆமாம் டாக்டர், நீங்க சொல்றது கரெக்ட் தான்” என்று சொல்லிவிட்டு நேத்ராவின் கைகளில் இருந்து அந்த கடிதத்தை வாங்கி கொண்டு நடந்தாள்.
சித்தார்த் மீண்டும் “வசந்தி சிஸ்டர், உங்க பிரெண்ட் ஜமுனா எப்படி இருக்காங்க?” என்றான் வேண்டுமென்றே
“தெரியலை சார், அவங்க வீடு எனக்கு தெரியாது, ரொம்ப தூரம், நான் அவங்களோட பேச முடியறது இல்லை. ஆனால் அவங்களுக்கு உடம்பு சரியில்லைனு கேள்விப்பட்டேன்” என்றாள் வசந்தி.
“அப்படியா? சரி. இந்த ஆஸ்பிட்டல்ல இன்னொரு ஜமுனா உருவாகாமல் பாத்துக்கோங்க” என்றான் தன் லேப்டாப்பை பார்த்தபடி
ஜமுனாவை போல நீயும் எதையும் செய்து வைக்காதே என்று எச்சரிக்கை செய்கிறான் என்று வசந்திக்கு நன்றாகவே புரிந்தது. “அப்படி எதுவும் நடக்காது டாக்டர்” என்று சொல்லிவிட்டு அவள் செல்ல முனைந்தாலும் சித்தார்த்தின் குரல் மீண்டும் அவளை தடுத்து நிறுத்தியது.
“சிஸ்டர் மேடம் காலையில் சரியா சாப்பிடலை, கொஞ்சம் டீயும் பஜ்ஜியும் வாங்கிட்டு வர்றீங்களா?” என்றான்.
அதுவரை கணவனின் சம்பாஷனையில் குறுக்கிடாமல் இருந்த நேத்ரா இப்போது கணவனை முறைத்தாள். “பழி வாங்கறீங்களா? என்ன பழக்கம் இது?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கணவனை அதட்டினாள்.
“என் பொண்டாட்டியை மட்டும் அவங்க வேலை வாங்கலாம், நான் வேலை வாங்க கூடாதா?” என்றான் அவனும் மெல்லிய குரலில் லேப்டாப்பிலிருந்து பார்வையை திருப்பாமல்.
டாக்டர் குத்தி காட்டுகிறார் என்று இப்போது வசந்திக்கு நன்றாக புரிந்தது. “இதோ வாங்கிட்டு வரேன் டாக்டர்” என்று கதவருகே போன வசந்தியை நேத்ரா அழைத்தாள், “சிஸ்டர் அதெல்லாம் எதுவும் வேண்டாம். நாங்க இப்போ கிளம்ப போறோம். நீங்க உங்க வேலையை பாருங்க” என்று அனுப்பி வைத்தாள்.
வசந்தி சென்றதும் சித்தார்த்தின் தொடையில் கைவைத்து கிள்ளினாள். “ஏய் வலிக்குதுடி” என்றபடி துள்ளிக்கொண்டு இருக்கையிலிருந்து எழுந்தான்.
“சரி கிளம்பு போகலாம்” என்று மனைவியுடன் வெளியே வந்தவன் மீண்டும் ஜனனியை தனியாக அழைத்து, “டாக்டர் எலிசா நம்ம ஹாஸ்பிட்டலுக்கு புதுசுங்கறதால, அவங்களோட ஒவ்வொரு மூவ்மெண்ட்டும், எனக்கு உடனுக்குடன் அப்டேட் பண்ணிட்டே இருங்க. அவங்க தங்கப்போற விடுதியில் பர்சனல் ரூம் தவிர மத்த மறைவான இடங்களில் சிசிடிவி கேமரா பிக்ஸ் பண்ணிட்டு, அதுக்கப்புறம் அவங்களை அழைச்சிட்டு போங்க. அன்ட் அங்கே கேமரா பிக்ஸ் பண்ணியிருக்கிறது அவங்களுக்கு தெரிய கூடாது, புரியுதா?” என்றான் சித்தார்த்.
“ஓகே சார்” என்றாள் ஜனனி.
“அன்ட் கீப் இட் மோர் கான்பிடன்ஷியல்” என்றான். “ஷூயர் சார்” என்றாள் ஜனனி
அதன்பின் மீண்டும் நேத்ராவின் தோளில் கைப்போட்டபடி நடந்த கணவனை அண்ணாந்து பார்த்து கண்களை அகல விரித்தாள். “ஆரம்பிச்சுட்டியா? இப்போ எதுக்குடி உன் கண்ணை விரிச்சு முழுங்கிற மாதிரி பார்க்கிறே?” என்றான்.
“இல்லை, அந்த எலிசாவை என்னமோ தீவிரவாதி ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கறீங்களே எதுக்கு?” என்றாள். “எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான்” என்றவன், “சரி காலேஜூக்கு லீவு சொல்லிட்டியா?” என்றான்.
“ம் மெசேஜ் அனுப்பிட்டேன். ஆனால் எதுக்கு லீவு போட சொன்னீங்க?” என்றாள்.
“நானே உனக்கு பிராக்டிகல் க்ளாஸ் எடுக்கலாம்னு தான்” என்றான்.
“அப்போ நம்ம ஹாஸ்பிட்டலயே பிராக்டிகல் கிளாஸ் எடுக்கலாம் இல்ல? எனக்கு இன்னும் ஈசியா புரியும்” என்றாள் ஆர்வமாக.
மனைவியை திரும்பி ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு, பதில் பேசாமல் அவளை காரில் அழைத்து சென்றான். தம்பியும் தம்பி பொண்டாட்டியும் மீண்டும் வீட்டுக்குள் நுழைவதை பார்த்த பவிஷ்கா,
“என்னடா, நேத்ரா காலேஜுக்கு போகலையா இன்னைக்கு, உனக்கும் ஆஸ்பிட்டல்ல வேலையிருக்குமே, இரண்டு பேரும் வீட்டுக்கு வந்துட்டீங்க?” என்றாள் ஆச்சரியமாக.
“பவிக்கா, நீ அப்பாவையும், ரம்யாவையும் அழைச்சிட்டு மகாபலிபுரம் போயிட்டு வா. அங்கே ரிசார்ட் புக் பண்ணியிருக்கேன். ரம்யாவுக்கு அந்த இடத்தையெல்லாம் சுத்தி காட்டிட்டு இரண்டு நாள் இருந்துட்டு வாங்க. அவளுக்கும் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்த மாதிரி இருக்கும்” என்றான் சித்தார்த்.
“நான் என்ன கேட்கிறேன், நீ என்ன சொல்லிட்டு இருக்கே. சரி மகாபலிபுரம் போறதா இருந்தா வாங்க எல்லாரும் ஒண்ணா குடும்பத்தோடு போகலாம்” என்றாள் பவிஷ்கா
சித்தார்த் தமக்கையிடம் என்ன சொல்வது என்று புரியாமல், முகத்தை திரும்பிக் கொள்ள, “அண்ணி, எங்களால வரமுடியாது, அவர் எனக்கு கிளாஸ் எடுக்க போறார், அதுக்கு தான் காலேஜ் லீவு போட சொல்லிட்டார்” என்றவளை அதிர்ந்து போய் பார்த்தான் சித்தார்த். அவள் கரத்தை பிடித்து அழுத்தினான்.
அதற்குள் பவிஷ்கா, “என்ன கிளாஸ்?” என்று கேட்டாள்.
“ஏதோ பிராக்டிகல் கிளாசாம்” என்று நயனி சொன்னது தான் தாமதம் அங்கே நிற்க முடியாமல் சித்தார்த் மாடிப்படிகளில் தாவி ஏறிச் சென்றுவிட்டான்.
ஒரு கணம் பவிஷ்காவிற்கு ஒன்றும் புரியவில்லை. சித்தார்த் நிற்க முடியாமல் அங்கிருந்து ஓடுவதை பார்த்து விஷயம் புரிய சத்தமாக சிரித்தாள்.
நேத்ரநயனி, ‘இவள் எதற்கு இப்படி சிரிக்கிறாள்? நான் எந்த ஜோக்கும் சொல்லவில்லையே’ என்று திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தாள்.
(தொடரும்)