மான்விழி - 18
நேத்ராவின் மனதில் இருந்ததை பட்டென்று வெளிப்படையாக கேட்டுவிட்டாள், அதற்கு சித்தார்த் இவ்வளவு கோபப்படுவான் என்று அவள் யோசித்திருக்கவில்லை. காதலுடன் அணைக்கிறானா? மனைவி என்ற உரிமையில் காமத்திற்காக அணைக்கிறானா? என்று அவன் மனநிலை தெரியாமல் எப்படி அவனுடன் அவளால் ஒன்றியிருக்க முடியும்? காதல் இல்லாத சங்கமம் அவளை பொறுத்தவரை அருவருக்கத்தக்கது.
சித்தார்த்துடனே அவ்வளவு எளிதாக தன்னால் பொருந்திக் கொள்ள முடியவில்லையே, பாண்டி மட்டும் அவள் கணவனாகி இருந்தால் வாழ்க்கை எவ்வளவு கொடூரமாய் இருந்திருக்கும்? நேத்ராவால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. உண்மையில் அப்படிப்பட்டவன் இடமிருந்து காப்பாற்றி தன் காதலையும் தியாகம் செய்து அவள் கழுத்தில் தாலி கட்டிய சித்தார்த்துக்கு அவள் காலம் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறாள்
ஒரு நீண்ட பெருமூச்சுடன் தன் படுக்கைக்கு சென்று படுத்துக் கொண்டாள், பார்வை மட்டும் கணவனின் வருகைக்காக அறைக்கதவிலேயே நிலைத்திருந்தது.
மணி பன்னிரண்டு ஆகியும், சித்தார்த் அறைக்குள் வரவே இல்லை. எனவே நயனி எழுந்து மெல்ல பால்கனி வழியே கீழே எட்டிப் பார்த்தாள். அவள் நினைத்தது போலவே சித்தார்த் அங்கே இருந்த தோட்டத்தில் நடைப்பயின்றுக் கொண்டிருந்தான். நயனியின் பேச்சில் இருந்த உண்மை அவன் மனதை சுட்டு விட்டது.
அவள் கேட்டது நியாயமாக இருக்கலாம், ஆனால் முன்னாள் காதலியை நினைத்துக் கொண்டு, இந்நாள் மனைவியை ஒதுக்கி வைக்க வேண்டுமா என்ன? மனைவி என்றான பின் இன்று இல்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் அவர்களின் உறவு தொடங்கித்தானே ஆக வேண்டும்? அப்போதும் இதே கேள்வியை தான் கேட்பாளா? இவ்வளவு நாட்கள் அவகாசத்தில் தான் முன்னாள் காதலியை மறக்க முடியும் என்று எதாவது அளவுகோல் இருக்கிறதா என்ன?
ஒரு நாளாகட்டும் ஒரு வருடமாகட்டும், ஏன் ஒரு யுகமாகட்டும், காதலை மறப்பது என்பது அதன் உண்மை தன்மையில் இருக்கிறது. உண்மைக் காதலை என்றுமே மறக்க முடியாது! எப்போது நயனியின் கணவனாகி போனானோ, அன்றிலிருந்தே எலிசாவின் நினைவே எழவில்லை என்பது தான் உண்மை. பவிஷ்கா சொன்னது போல, எலிசாவிடமிருந்தது வெறும் உடல்தேடல் மட்டும் தான் போலும். ஆனால் நயனியிடம் அவன் தேடுவது காதல்!
அவன் ஒண்ணும் உரிமையில்லாதவளை தொடவில்லையே! எப்போது நயனியின் கழுத்தில் தாலிக் கட்டிவிட்டானோ அப்போதே அவனையும் அறியாமல் தன் மனைவி என்ற உரிமை உணர்வு வந்து விட்டதே!
நயனி தன் மருண்ட விழிகளால் அவனை பார்க்கும் போதும், அவன் அருகாமையில் உடல் நடுங்க நிற்கும் கோலமும், அவன் மனதை பித்தம் கொள்ள வைக்கிறதே! அவன் அருகாமைக்கே உடலும் உள்ளமும் சிலிர்த்து நிற்பவளை அள்ளிக் கொள்ளவே அவன் மனமும் கைகளும் பரபரக்கிறது. ஒரு பெருமூச்சுடன் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு, அங்கே இருந்த சிமெண்ட் பெஞ்சில் கால் நீட்டிப் படுத்தான்.
ஒற்றைக் கையை மடக்கி தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களை ரசித்துக் கொண்டிருந்தான். நடு இரவில் இப்படி பனியில் படுத்துக் கிடக்கிறானே என்று உள்ளம் பதைக்க பால்கனியில் நின்று பார்த்திருந்த நயனிக்கு உள்ளம் வலித்தது.
ஏதேச்சையாக திரும்பி பார்த்த சித்தார்த்துக்கு நயனி பால்கனியில் நின்று கைகளை பிசைந்துக் கொண்டு தவிப்புடன் நிற்பது நிழலுருவமாய் தெரிந்தது. பின்பு எழுந்து உள்ளே சென்றான். அவன் வருகிறான் என்று தெரிந்ததும், அவசரமாக படுக்கையில் போய் படுத்துக் கொண்டு போர்வையால் தன்னை மூடிக் கொண்டாள்.
அழுத்தமான காலடிகளுடன் உள்ளே வந்த சித்தார்த் மீண்டும் அவள் கட்டில் இருந்த பக்கமாக வரவும், நயனியின் இதயம் தாறுமாறாக துடிக்க தொடங்கியது. போர்வையின் உள்ளே இருக்கும் அவள் உடல் நடுங்குவதை அவனால் உணர முடிந்தது. சற்றுநேரம் கைகளை கட்டிக் கொண்டு அவளையே பார்த்திருந்தான்
“நீ இன்னும் தூங்கலனு எனக்கு நல்லா தெரியும், இன்னைக்கு உன்கிட்ட நடந்துக்கிட்டதுக்கு சாரி” என்று அழுத்தமான குரலில் சொல்லிவிட்டு தன் கட்டிலுக்கு சென்று படுத்துக் கொண்டான்.
சித்தார்த்தின் மனதில் எப்போதோ நயனி குடியேறிவிட்டாள், அது எப்போது என்று அவனாலே சொல்ல முடியாது. அவன் விளக்கி சொன்னாலும் அவளால் புரிந்துக் கொள்ள முடியாது, ஏனென்றால் அவள் மனதில் இன்னும் அந்த காதல் மலரவில்லை. அதனால் தான் அவன் மனதை அவளால் அறிய முடியவில்லை. சொல்லிபுரிய வைப்பதை விட அவன் காதலை அவளாக உணர வேண்டும்.
நயனியின் மருண்ட பார்வை எப்போது காதல் பார்வையாக மாறுகிறதோ, அப்போது தான் அவன் பார்வையின் அர்த்தமும் அவளுக்கு புரியவரும், அதுவரை காத்திருக்க தயாராகிவிட்டான் அவள் கணவன்.
********
மறுநாள் சித்தார்த் குளித்து தயாராகி வந்த பின்பும், நேத்ரா உறங்கி கொண்டே இருக்கவும், “நயனி” என்று சத்தமாக அழைத்தான்.
திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து அவனை பார்த்து பேந்த பேந்த விழித்தாள். “ரிலாக்ஸ், ஏன் இந்த பதட்டம்? நாம கொஞ்சம் வெளியில் போகணும். லேட்டாகுது, நீ தூங்கிட்டே இருக்கியேனு தான் கூப்பிட்டேன்” என்றான்.
“எஎங்கே போகணும்?” என்றாள் தயங்கிய குரலில்.
“ரெடியாயிட்டு கீழே வா, சொல்றேன்” என்று மட்டும் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான்.
நயனி குழப்பத்துடன் எழுந்து, குளித்து தயாராகி கீழே வந்தவளிடம், “நயனி அப்படியே உன்னோட சர்டிபிகேட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா” என்றான்.
எதற்கு என்று புரியாமல் மீண்டும் அறைக்கு சென்று தன்னுடைய படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் இருக்கும் பைலை எடுத்துக் கொண்டு வந்தாள். அவளிமிருந்து அவற்றை வாங்கி தன் லேப்டாப் பேகில் வைத்தபடி, “சீக்கிரம் வா, சாப்பிட்டு கிளம்பலாம், ஏற்கனவே நேரமாயிடுச்சு” என்றான்.
அவனையே பார்த்தபடி சென்று அவனருகில் அமர்ந்து காலை உணவை உண்டு முடித்தாள்.
காரில் செல்லும் போதும், அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் கேள்வியை உணர்ந்திருந்தாலும், சித்தார்த் அவள் பார்வையை தவிர்க்க எண்ணி பாதையிலேயே கவனத்தை பதித்திருந்தான்.
கார் ஒரு பெரிய மருத்துவகல்லூரியின் உள்ளே நுழைந்தது. பிரமிப்புடன் அங்கே பார்த்துக் கொண்டு வந்தாள். ஒரு வேளை இங்கே வேலை வாங்கி தருவதற்காக அழைத்து வந்திருக்கிறானோ? ஆனால் அவளுக்கு இங்கே என்ன வேலை தருவார்கள்? குழப்பத்துடன் அமர்ந்திருந்தவளிடம், “இறங்கி என் கூட வா” என்று கூறியபடி காரை விட்டு இறங்கினான் சித்தார்த்.
சித்தார்த் தன் மனைவியுடன் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் இருந்த அறைக்குள் நுழைந்தான். “ஹல்லோ சித்தார்த், வாங்க வாங்க” என்று பலத்த வரவேற்புடன் வந்து அவனை அணைத்துக் கொண்டார் அந்த கல்லூரி முதல்வர் தயானந்தன்.
தன் பின்னால் நின்றிருந்த மனைவியின் கரம்பற்றி இழுத்து தன் அருகே நிறுத்தியபடி “தயா சார், இவங்க என் மனைவி நேத்ரநயனி” என்று அவருக்கு தன் மனைவியை அறிமுகப்படுத்தினான்.
நயனி தன் கரங்களை கூப்பி அவரை வணங்கினாள்.
“ஓ இவங்களுக்கு தான் கல்லூரியில் படிக்க சீட் கேட்டு இருந்தீங்களா? ஓகே ஓகே, மனைவியை டாக்டராக்கி பாக்கணும்னு விரும்பறீங்க போல, நல்ல விஷயம் தான் யங் மேன்” என்று சித்தார்த்தின் தோளை தட்டினார் தயானந்தன்.
இருவரையும் தன் எதிரே இருந்த இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு தானும் தன் இருக்கையில் அமர்ந்தார்.
நேத்ரநயனி அதிர்ச்சியுடன் தன் அகன்ற கண்களை மேலும் அகல விரித்து சித்தார்த்தை ஆவென்று பார்த்துக் கொண்டே அமர்ந்தாள். “இவ வேற இப்படி பார்த்து பார்த்தே மனுஷனை டெம்ப்ட் பண்ணிட்டு அப்புறம் கிட்டவே வர விடமாட்டா” என்று மனதிற்குள் மனைவியை கரித்துக் கொட்டிக் கொண்டு அவளை கவனிக்காதவன் போல தயானந்தனிடம் திரும்பி சிரித்து பேசிக் கொண்டிருந்தான்.
ஆனால் நேத்ரநயனி அதிர்ச்சியிலிருந்து வெளிவராமல் சித்தார்த்தையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த தயானந்தன், “என்ன டாக்டர், உங்க மனைவிக்கு விஷயம் தெரியாதா? உங்களையே அதிர்ச்சியோடு பார்த்திட்டு இருக்காங்க” என்று சிரித்தார்.
“ஆமாம் தயா சார், கொஞ்சம் சர்ப்ரைஸா இருக்கட்டுமேனு சொல்லலை” என்று சிரித்தபடி, அவள் தோளில் கைவைத்து, தன்னை நோக்கி இழுத்து காதில் கிசுகிசுத்தான், “அவர் முன்னாடி என்னை சைட் அடிச்சது போதும், ஷாக்கை குறை” என்று சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டாலும் அவள் தோளிலிருந்து கையை எடுக்காமல் அப்படியே இருந்தான்.
இப்போது அவன் தோளில் கைப்போட்டதற்கும், அவனை அவள் சைட் அடிப்பதாக சொன்னதற்கும் சேர்த்து மேலும் அதிர்ந்தவள், தன் அகன்ற பார்வையால் அவன் மனதை துளைத்தெடுக்க ஆரம்பித்துவிட்டாள்.
நயனியின் பார்வையையும் சித்தாரத்தின் அவஸ்தையையும் கவனித்த தயானந்தன் “சித்தார்த் நீங்க பேசிட்டு இருங்க, நான் இதோ அஞ்சு நிமிஷத்தில் வந்திடுறேன்” என்று சொல்லிக் கொண்டே எழுந்தார், “அஞ்சு நிமிஷம் போதுமா சித்தார்த்?” என்று மீண்டும் அவனையே கிண்டல் செய்து விட்டு சிரித்துக் கொண்டே எழுந்து வெளியேறினார்.
நயனியின் நயனங்களை தவிர்க்கும் பொருட்டு குனிந்தபடி நெற்றியில் தன் ஒற்றை விரலால் தேய்த்தக் கொண்டே, “எதுக்குடி இப்போ என்னை இப்படி பார்த்துட்டு இருக்கே? நேத்து ராத்திரி ஒரே அறையில் தானே இருந்தோம்? அப்போ எல்லாம் நல்லா போர்த்திட்டு தூங்கிட்டு, இங்கே வந்து ஏன் அப்படி வெறிச்சு பார்க்கிறே? அந்த ஆள் எப்படி கிண்டல் பண்ணிட்டு போறாரு பாரு” என்றான் மெல்லிய குரலில்.
அவன் வார்த்தைகளின் அர்த்தங்களை உணரும் நிலையில் எல்லாம் இல்லை. கண்களில் வழிந்துக் கொண்டிருக்கும் கண்ணீரை துடைக்க கூட முயற்சிக்காமல், சித்தார்த்தின் நெற்றியில் இருந்த கையை தன் இருகரத்தால் பற்றினாள். முதன் முறையாக தன்னவளின் கரம் அவன் மீது பட்டதில் ஒரு வித ஆவலோடு நிமிர்ந்து நேத்ராவை பார்த்தான் சித்தார்த்.
மனைவியின் கண்களில் காதலை தேடியவனுக்கு அங்கே நன்றி உணர்ச்சி தான் தெரிந்தது. நேத்ரநயனி தன் கணவனின் கரத்தை தன் இருக்கரத்தால் பற்றி தன் இரு நயனங்களிலும் ஒற்றிக் கொண்டாள். பின்பு அவன் புறங்கையில் தன் இதழை மெல்ல பதித்தாள்.
“எனக்கு சின்ன வயசுல இருந்து டாக்டருக்கு படிக்கணும்னு தான் ஆசை. ஆனால் அப்பாவுக்கு டிப்ளமா படிக்க வைக்கறதே ரொம்ப கஷ்டம். ஏழைகளுக்கு எல்லாம் மருத்துவர் ஆகலாம் என்கிற கனவே வரக்கூடாதுனு நினைச்சுப்பேன். நான் கேட்காமலே என்னோட ஆசையை நிறைவேத்தி வச்சிருக்கீங்க, இதுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை” என்றாள் கண்ணீருடன்.
“இதுல நன்றி சொல்ல என்ன இருக்கு நயனி? என்னோட மனைவியை நான் படிக்க வைக்கிறேன், இது பெரிய விஷயம் இல்ல. நீ நல்லா படிச்சு, பெரிய டாக்டர் ஆகு, அப்புறம் உன்னை மாதிரி ஆசைப்பட்டு திறமையோட இருக்கிறவங்களை இனங்கண்டு அவங்களுக்கு உதவி செய், நானும் உன்னோட உறுதுணையா இருக்கேன்” என்றான்.
சம்மதமாக தலையாட்டினாள் நேத்ரநயனி. “சரி கண்ணை துடைச்சுக்கோ, நான் தயா சாரை கூப்பிடுறேன். ரொம்ப லேட்டாயிட்டால், அவர் கற்பனை எல்லை மீறிடப்போகுது” என்றபடி போனை எடுத்தான்.
“என்ன? அவர் கற்பனை எல்லை மீறிடுமா? அப்படி என்ன கற்பனை செஞ்சாரு?” என்றாள் யோசனையோடு.
“நீ உண்மையாவே டியூப்லைட்டா இல்லை நடிக்கிறியானே தெரியலையேடி! உண்மையான டியூப்லைட்டா இருந்தா… சித்தார்த் நீ செத்தேடா!” என்று மனதிற்குள் மனைவியை திட்டியபடி போனை காதில் வைத்து “தயா சார் உள்ளே வாங்க” என்றான்.
இப்போது தயானந்தனுடன் வேறாரு பேராசிரியை வந்திருந்தார். “மிஸஸ் கல்பனா, இவங்க நம்ம சித்தார்த்தோட மனைவி நேத்ரநயனி, இங்கே தான் எம்பிபிஎஸ் படிக்க போறாங்க. சித்தார்த் யாருனு தெரியும் இல்ல, நம்மளோட ஷேர் ஹோல்டர், நேத்ரநயனிக்கு இங்கே ஒரு குறையும் வரக்கூடாது. அவங்களை கொஞ்சம் ஸ்பெஷலா கவனிச்சுக்கோங்க, எதாச்சும் டவுட்னு வந்தால் சொல்லிக் கொடுங்க” என்றார் தயானந்தன்.
“ஐயோ தயா சார், சீட் கொடுத்ததே பெரிய விஷயம், மத்த ஸ்டுடென்ட் மாதிரி ட்ரீட் பண்ணுங்க அதுவே போதும். ஸ்பெஷல் கேர் எதுவும் வேணாம். நயனிக்கு எதாவது சந்தேகம்னா சொல்லிக் கொடுக்கத்தான் நான் இருக்கேனே” என்றான் சித்தார்த் அபிமன்யு.
“அதை மறந்துட்டேன் பாருங்க, காதல் பாடத்தோடு கல்லூரி பாடத்தையும் சேர்த்தே சொல்லிக் கொடுக்க டாக்டரான நீங்க இருக்கும் போது நான் கல்பனாகிட்ட கேட்டுட்டு இருக்கேன் பாருங்க” என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தார் தயானந்தன்.
தன் வெட்கத்தை மறைக்க தலையை கோதியபடி பக்கவாட்டில் இருந்த மனைவியை பார்த்தான் சித்தார்த் அபிமன்யு. நேத்ரநயனியின் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது. இதழ்களை பற்களால் அழுந்த கடித்தபடி அமர்ந்திருந்தாள்.
முதன்முறையாக மனைவியின் கன்னத்தில் வெட்கச்சிவப்பை கண்டு பிரமித்து போனான் சித்தார்த். இன்னும் சில நாட்களிலேயே அவளின் முகத்தில் கோபச்சிவப்பை காணப் போகிறான் என்று அவன் அப்போது உணர்ந்திருக்கவில்லை.
(தொடரும்)