மான்விழி - 12
அன்று காலை, நேத்ரநயனி எப்போதும் போல விடுதியில் இருந்து கிளம்பியவள், பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள்.
அப்போது அவள் எதிரே க்ரீச்சென்ற சத்தத்துடன் தீடிரென்று ஒரு டாக்சி வந்து நிற்கவும், பதறி நகர்ந்து நின்றாள்.
அந்த காரின் கண்ணாடியை இறக்கியபடி, உள்ளிருந்து எட்டி பார்த்து விகாரமாக சிரித்தான் பாண்டி.
“என்ன நேத்ரா, பயந்துட்டியா? நான் தான். உன்னை இங்கே பார்க்கவும் சடர்ன் ப்ரேக் போட்டேன். அதான்” என்றான்.
நேத்ரா ஒரு கணம் பாண்டியை கண்டு அதிர்ந்தாலும், நொடிகளில் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு, அவனை கவனிக்காதவாறு நகர்ந்து நின்று பஸ் வருகிறதா? என்று பார்த்தாள்.
மீண்டும் காரை அவளருகே கொண்டு சென்று நிறுத்தியவன் “நேத்ரா, ஏன் பேசமாட்டேங்கிறே. ஏதோ போதாத காலம் குடிச்சு தொலைச்சுட்டேன். குடி குடியை கெடுக்கும்னு சும்மாவா சொன்னாங்க. குடியால குடும்பத்தோடு இருக்க வேண்டிய நான் ஒத்தையில சுத்திட்டு இருக்கேன். நான் மட்டும் அன்னைக்கு குடிக்காம இருந்திருந்தா நாம இரண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி ஆகியிருப்போம், இந்நேரம் நீ வயித்த தள்ளிட்டு இருந்து இருப்பே” என்றான் அவளை வெறித்து பார்த்தபடி.
“ச்சே” அருவருப்புடன் முகத்தை சுழித்தவள், பஸ்ஸிற்காக காத்திருக்க விருப்பமில்லாமல், அங்கே செல்லும் ஆட்டோவை அழைக்க தொடங்கினாள்.
“நேத்ரா, ஏன் ஆட்டோவுக்கு எல்லாம் வீணா செலவு பண்றே, என்னோட டாக்சியில வா, நான் உன்னை டிராப் பண்றேன்” என்றான்.
அவள் பாண்டியை சிறிதும் சட்டை செய்யாமல் அங்கே வந்து நின்ற ஆட்டோவில் ஏறி சென்றாள்.
“எவ்வளவு திமிர்? நான் இவ்வளவு பேசறேன். ஒரு வார்த்தை பேசினாளா?” என்று பல்லை கடித்தான் பாண்டி.
நேத்ரா அவன் ஆட்டோவை பாலோ செய்கிறானோ என்று பயந்து பின்னால் திரும்பி பார்த்தபடி, “அண்ணா “நலமுடன்” மருத்துவமனைக்கு கொஞ்சம் சீக்கிரமா போங்க, நேரா மெயின்ரோடு பக்கமாக போகாமல் வேறே வழியிருந்தால் அந்த பக்கம் போங்க” என்றாள் சற்று பதட்டத்துடன்.
பாண்டியை கண்டதும் உள்ளுக்குள் பதட்டம் ஏற்பட்டாலும், அவனிடம் தன் பலவீனத்தை காட்டாமல் இருந்தாள். நிச்சயம் அந்த பஸ் நிறுத்தத்தில் ஏதாவது வம்பு செய்வான் என்றே அவள் ஆட்டோவில் ஏறிவிட்டாள். அவளை பின்தொடர்ந்து வந்து அவள் எங்கே வேலை செய்கிறாள் என்று அவன் தெரிந்து கொண்டால் பின்னர் தொடர்ந்து தொல்லை கொடுக்க தொடங்கிவிடுவான் என்பதாலேயே ஆட்டோ டிரைவரை மாற்று வழியில் செல்ல சொன்னாள்.
ஆனால் பாண்டி இதற்கு முன்பே அவள் வேலை செய்யும் மருத்துவமனையில் வைத்து அவளை பார்த்து விட்டான் என்பது நேத்ராவிற்கு தெரியவில்லை.
நேத்ரா மருத்துவமனையை அடையும் முன்பே பாண்டி அந்த இடத்தை அடைந்து விட்டு, காரை மறைவாக பார்க் செய்துவிட்டு, அங்கிருந்த செக்யூரிட்டி அறையின் பின்னால் ஒளிந்து நின்றான். நேத்ரா அவசரமாக ஆட்டோவில் இருந்து இறங்கி பணத்தை கொடுத்துவிட்டு சுற்றும் முற்றும் பாண்டியின் டாக்சி தெரிகிறதா என்று பார்த்தாள், அவன் இல்லை என்றதும் பெருமூச்சுடன் மருத்துவமனைக்குள் சென்றாள்.
உண்மையில் தான் தனியாக இருப்பது அவனுக்கு தெரியக்கூடாது என்று தான் அவள் பயமே. திருமணத்திற்கு முன்பே பொது இடம் என்றும் பாராமல் அவள் பின்னால் சுற்றித்திரிவான். இப்போது அவளின் உண்மை நிலை தெரிந்தால் அதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள தயங்க மாட்டான். அதுமட்டுமில்லாமல் தன் தந்தைக்கு போன் செய்து விஷயத்தை கூறிவிட்டால், அவர் உடல்நிலை என்னாகுமோ என்ற பயம் வேறு இருந்தது.
நேத்ரா செல்லும்வரை, ஒருவித குரூரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் பாண்டி.
நேத்ரா உள்ளே சென்றதும், ஜனனி அவளை அழைத்தாள், “மிஸ்.நேத்ரா வாழ்த்துக்கள், உங்க வேலையை டாக்டர் கன்பார்ம் பண்ணி இருக்கார். நீங்க வேணும்னா மருத்துவமனை வளாகத்தில் இருக்கிற ஹாஸ்டல்ல இலவசமாக தங்கிக்கலாம். இது உங்களோட சம்பள பணம்” என்று சொல்லி ஒரு கவரை நீட்டினாள்.
ஹாஸ்பிட்டலுக்கு உட்பட்ட விடுதியில் தங்குவதால், வாடகை பணம் இனி மாதாமாதம் மிச்சமாகும், ஆனாலும் சுதாவோடு இப்போது தான் நல்ல நட்பில் இணைந்திருக்கிறாள். அதற்குள் அவளை விட்டு பிரிய வேண்டுமா? என யோசித்தாள் நேத்ரா.
ஜனனியிடம் சம்பள கவரை வாங்கியபடி, “தேங்க்ஸ் சிஸ்டர். இப்போதைக்கு நான் ஏற்கனவே தங்கியிருக்கிற விடுதியில் தங்கிக்கிறேன். தேவைப்பட்டால் மீண்டும் உங்களிடம் வந்து கேட்கிறேன்” என்று சொல்லிவிட்டு யுனிபார்ம் மாற்றும் அறைக்கு சென்றாள்.
அவள் சென்றதும் ஜனனி, “டாக்டர் நீங்க சொன்னது போல, நம்ம மருத்துவமனை வளாகத்தில் இருக்கிற ஹாஸ்டல் இலவசம்னு சொல்லியும், நேத்ரா இப்போதைக்கு வேண்டாம், வேணும்னா சொல்றேன்னு சொல்லிட்டு போறாங்க டாக்டர்” என்றாள் ஜனனி
“சரி ஜனனி, அவங்க விருப்பம், கட்டாயப்படுத்த வேண்டாம்” என்று போனை வைத்தான் சித்தார்த்.
உண்மையில் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் விடுதியில் தங்க, குறைந்தது ஓராண்டாவது வேலை செய்து இருக்க வேண்டும். அப்போது தான் தங்க அனுமதி உண்டு. ஆனால் சித்தார்த், நேத்ராவிற்கு விடுதியை ஏற்பாடு செய்து தரும்படி போன வாரமே ஜனனிக்கு சொல்லியிருந்தான்.
ஜனனிக்கும் சித்தார்த் எதற்காக நேத்ராவிற்கு சலுகை கொடுக்கிறான் என்ற கேள்வி தோன்றினாலும், அதைப்பற்றியெல்லாம் ஆராய்ச்சி எதற்கு என்று விட்டு விட்டாள். அதற்குள் ஜமுனா ஏற்படுத்தி இருந்த வதந்தி ஜனனிக்கும் தெரிய வந்தது. அவளுமே நேத்ராவை தவறாக தான் நினைத்தாள்.
ஆனால் தங்கும் அறை இலவசம் என்று சொல்லியும் மறுத்துவிட்டு செல்கிறாளே என்று ஆச்சரியமாக இருந்தது ஜனனிக்கு.
சித்தார்த் தான் கொதித்துக் கொண்டு இருந்தான். இரவெல்லாம் நேத்ரநயனின் விழிகளில் இருந்து நீந்தி கரையேற முடியாமல் தவித்து தூக்கத்தை தொலைத்திருந்தான்.
அவனும் எப்படியாவது அவளை நெருங்க தான் நினைக்கிறான். ஆனால் அவள் தான் அதற்காக எந்த வழியையும் கொடுக்காமல் தடை போட்டுக் கொண்டே இருக்கிறாள்.
விருப்பமில்லாத திருமணத்தை செய்து அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ள நானே தயாராக இருக்கும் போது விவாகரத்தை பற்றி பேசுகிறாள். திருமணமாகி கணவன் வீட்டிற்கு வராமல் அவளாக விடுதியில் சென்று தங்குகிறாள்.
நானா அவளை போக சொன்னேன்? அவள் எப்போது என்னை கணவன் என்று உணர்ந்து என்னுடன் வருகிறேன் என்று சொல்கிறாளோ அதுவரைக்கும் நானாக அவளை அழைக்கபோவதில்லை என்பது தான் சித்தார்த்தின் மன ஓட்டமாக இருந்தது. (ஆனால் அவனாகவே அவளை அவன் வீட்டிற்கு இழுத்துச் செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை அப்போது அவன் உணர்ந்திருக்கவில்லை).
தினமும் காலை அவசரமாக எழுந்து பஸ் பிடித்து மருத்துவமனைக்கு வந்து செல்கிறாளே, குறைந்தப்பட்சம் மருத்துவமனை விடுதியில் தங்கினால் அவளுக்கு அலைச்சல் இருக்காதே என்று எண்ணி தான் விதிமுறைகளை மீறி ஜனனியிடம் நேத்ராவிற்கு அறையை ஏற்பாடு செய்து கொடுக்கும்படி கூறியிருந்தான்.
ஆனால் மகாராணி அதுக்கு கூட ஒத்துக்க மாட்டாளாமே! திமிர், உடம்பெல்லாம் திமிர்! இனி இவளை நம்பி மனசை பறி கொடுக்காதே சித்தார்த்! முக்கியமா அவள் கண்ணை மட்டும் பார்க்காதே! அந்த இடம் மிகவும் ஆபத்தானது! என்று அவனுக்கு அவனே அறிவுரை சொல்லிக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினான்.
நேத்ரா சித்தார்த்தின் வருகைக்காக காத்திருந்தாள். ஒரு ஊழியராக அவனுக்கு அவள் நன்றி கூற வேண்டும் என்று தோன்றியது. நல்ல சம்பளம் கொடுத்ததோடு, தங்கும் விடுதிக்கும் ஏற்பாடு செய்ய சொல்லியிருக்கிறானே, என்று நினைத்தபடி வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சித்தார்த் நேராக உள் நோயாளிகள் இருக்கும் இடத்திற்கு செல்லவும், அவன் பின்னால் சென்றாள் நேத்ரா, ஆனால் அவன் அவளை கண்டுகொள்ளவே இல்லை. வேகமாக நோயாளிகளை பார்த்துவிட்டு, ஆபரேஷன் அறைக்கு சென்றான். நேத்ரா அப்போதும் அவன் பின்னாலேயே சென்றாள்.
அங்கே டாக்டர் கிருஷ்ணன் தனக்கு ஒதுக்கப்பட்ட அறுவைசிகிச்சையை முடித்துவிட்டு வெளியே வந்தவர், சித்தார்த்தின் பின்னால் நேத்ரா செல்வதும், அவன் வேண்டுமென்றே அவளை கவனியாதவன் போல மற்றவர்களிடம் கேள்வி கேட்பதையும் பார்த்தார்.
நேத்ரா பொறுமையிழந்து, “டாக்டர்” என்றாள் கொஞ்சம் சத்தமாகவே.
சித்தார்த்தோ சற்றும் நிமிர்ந்தும் பார்க்காமல், ஏதோ ரிப்போர்டடில் தன் பார்வையை பதித்தவாறே, “ம்ம் சொல்லுங்க” என்றான்.
“நான் உங்க கிட்ட தனியா பேசணும்” என்றாள் நேத்ரா. நன்றியும் சொல்லிவிட்டு அப்படியே பாண்டியை பற்றியும் கூற வேண்டும் என்று அவள் நினைத்திருந்தாள்.
“என்கிட்ட தனியா பேச என்ன இருக்கு மிஸ்.நயனி? இங்கே வேலை செய்யற நர்ஸ்கிட்ட எல்லாம் நான் தனியா பேசிட்டு இருந்தால் என் வேலையை யார் செய்வது? எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லுங்க” என்றான் எங்கேயோ பார்த்தபடி, அவள் பார்வையை தவிர்க்கிறானாம்!
சித்தார்த்தின் இந்த பதிலை நேத்ரா சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளை பார்க்க பிடிக்காதவன் போல முகத்தை திருப்பி கொள்கிறானே! ஆக சற்றுமுன் அவளை கவனிக்காத மாதிரி சென்றது எல்லாம், வேண்டும் என்று உதாசீனப்படுத்த தான் என்று புரிந்து கொண்டாள் நேத்ரா. ஒரு சாதாரண நர்ஸ்ஸிடம் அவன் ஏன் நின்று பேச வேண்டும்?
“சாரி சார் உங்க நேரத்தை வீணாக்கிட்டேன். உங்களுக்கு நன்றி சொல்ல தான் உங்க பின்னாடி வந்தேன். ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் நேத்ரா இறுக்கமான குரலில்.
“யு ஆர் மோஸ்ட் வெல்கம்” என்று அதைவிட இறுக்கமான குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டான் சித்தார்த்.
நன்றி சொல்றாளாம் நன்றி, இவ நன்றி யாருக்கு வேண்டும் உள்ளுக்குள் புகைந்தபடி சென்ற கணவனை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தாள் நேத்ரநயனி.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நின்றிருந்த டாக்டர் கிருஷ்ணன் சித்தார்த் சென்றதும் அவளருகில் வந்து, “என்ன நேத்ரா, டாக்டர் உன்னை கழட்டி விட்டாரா? நீ ஒன்னும் கவலைப்படாதே. நான் அவரை மாதிரி யூஸ் பண்ணிட்டு தூக்கி போடற ரகம் இல்லை. காலம்பூரா உன்னை பார்த்துப்பேன்” என்றார் பல்லைக்காட்டி.
நேத்ராவிற்று, அந்த கணமே அவரின் கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் என்று கைகள் பரபரத்தது. தன் விரல்களை உள்ளங்கையில் மடக்கி சுற்றும் முற்றும் பார்த்தாள். மருத்துவமனையே பரபரப்பாக இருந்தது.
ஒற்றை விரலை அவரிடம் நீட்டி, “இனி இந்த மாதிரி என்கிட்ட இன்னொரு முறை பேசினே பல்லை தட்டி கையில கொடுத்திடுவேன். ஜாக்கிரதை” என்று மிரட்டல் தொணியில் சொல்லிவிட்டுச் சென்றாள்.
கிருஷ்ணனுக்கு உடலும் மனமும் கோபத்தால் கொந்தளித்தது. “ப்பூனு ஊதுனா பறந்துடுவா, இவ என்னை அடித்து பல்லை விழ வச்சிடுவாளாமே? என்கிட்ட தானே வேலை பார்க்கணும். இருடி உன்னை எப்படி வழிக்கு வர வைக்கணும்னு எனக்கு தெரியும்” என்று உள்ளுக்குள் கறுவியபடி தன் அறைக்கு சென்றார்.