மான்விழி - 05
சித்தார்த் அபிமன்யூ பேசிக் கொண்டே இருக்க, நேத்ராவின் மனதில் பல்வேறு விதமான யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தது. அவள் தந்தை எப்போதும் தன் நண்பன் மகேந்திரனை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருப்பார்.
திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு அவளிடம் வந்தவர் “நேத்ரா, என் நண்பன் சென்னையில் இருக்கிற மிகப் பெரிய மருத்துவமனையின் உரிமையாளர் தெரியுமா? நான் உனக்கு நர்ஸ் வேலை கேட்டிருக்கேன். அவனோட மகனும் வெளிநாட்டுக்கு போய் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு டாக்டரா இருக்காராம். அவர் கையாலேயே உன் வேலைக்கான அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை கொடுக்க வைக்கிறேன்னு மகி சொன்னான் மா. நீ சென்னைக்கு போனதும், வேலையில் சேர்ந்துக்க, பாண்டி டாக்சி ஓட்ற பணம் மட்டும் குடும்பம் நடத்த போதாது” என்று சிவக்குமார் தன் மகளிடம் சொல்லியிருந்தார்.
ஆக, வேலைக்கான ஆர்டரை கொடுக்க வந்த முதலாளியை எனக்கு கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள் இந்த இரு தகப்பன்களும். அவளை பொறுத்தவரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால், தந்தை கைகாட்டியவனை மணாளனாக ஏற்று கொள்ள தயாராகி விட்டாள்.
ஆனால் இவருக்கு அப்படி இருக்காதே, எத்தனையோ எதிர்பார்ப்புகள் இருக்கலாம். அவருடைய படிப்பிற்கும் அந்தஸ்திற்கும் எந்த வகையிலும் பொறுத்தமில்லாத என்னை அவருக்கு பிடிக்கும் என்று நான் எப்படி நினைத்தேன்? சற்று முன் தலையணையை அவள் முன்னாடி நீட்டிய கணவனின் முழங்கையில் கரு கருவென்று இருந்த முடிகளையும் தான்டி தெரிந்த சிவந்த நிறம் அவள் நினைவுக்கு வந்தது, தன்னுடைய மாநிறம் அவருக்கு எப்படி பிடிக்கும்? என் வாழ்க்கையை காப்பாற்றுவதாக எண்ணி, தந்தை இவரோட வாழ்க்கையை பணயம் வைத்து விட்டாரோ என்று கலங்கினாள் நேத்ரா.
இப்போது என்ன செய்வது? என் கணவனுக்கு என்னை பிடிக்கவில்லை என்று தெரிந்தால் என் அப்பாவால் தாங்கி கொள்ள முடியுமா? என்று தந்தையை நினைத்தவளுக்கு தானாக கண்களில் கண்ணீர் பெருகியது.
நேத்ராவின் சிறு வயதில் அவள் தாய் திலகாவிற்கு உடல் நன்றாக இருந்த போது தான் சிவக்குமார் மனம் விட்டு சிரித்தே பார்த்திருக்கிறாள். அதன் பிறகு அவர் சிரிப்பு எப்போதும் உதட்டளவில் மட்டும் தான். அவர்களுக்கென்று இருக்கும் கொஞ்ச நிலத்தில் படாதபாடுபட்டு விவசாயம் செய்து அவளை டிப்ளமா வரைக்குமே அவரால் படிக்க வைக்க முடிந்தது. அவரின் சம்பாத்தியம் மொத்தம் தாயின் வைத்திய செலவுக்கே போதவில்லை.
எப்போதும் கஷ்டத்தை தவிர வேறு எதையும் பார்த்திராத சிவக்குமாருக்கு மகளின் திருமணம் ஒன்றே லட்சியமாக இருந்தது.
தாலிகட்டும் நேரத்தில் திருமணம் தடை படவும் உடைந்து விட்டார் அவர். தந்தையின் நிலையை பார்த்து அவள் கண்களிலும் கண்ணீர் ஆறாக பெருகியது. மகேந்திரன் மாமாவால் நின்று போக இருந்த திருமணம் நடந்ததும் அவர் கண்களில் தான் எத்தனை நிம்மதி! இதோ சற்று முன் வெளியே மாமாவுடன் எப்படி எல்லாம் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். இப்படி அவளின் தந்தை சிரித்து பேசியே எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது.
தன் கட்டுப்பாட்டையும் மீறி கண்களில் வழியும் கண்ணீரை மறைக்க வழி தெரியாமல் தலையை குனிந்த படி நின்றிருந்தாள். அவளையே பார்த்தபடி பேசிக் கொண்டிருந்த சித்தார்த் அபிமன்யுவுக்கு தான் சொல்வதை அவள் கேட்கிறாளா இல்லையா? என்று சந்தேகம் வர,
“நான் சொல்றது புரியுதா?” என்றான் சற்று அழுத்தமான குரலில்.
அவள் ஆமாம் என்பது போல தலையாட்ட, “என்ன புரிஞ்சது?” என்றான்.
“இஷ்டமில்லாமல் நடந்த இந்த கல்யாணத்தை நினைச்சு நீங்க வருத்தப்படாதீங்க. பெரியவங்களோட ஏமாற்றத்தையும் பதட்டத்தையும் சமாளிக்க அந்த நேரத்திற்கு தேவையான ட்ரீட்மெண்டுக்காக என் கழுத்தில் தாலி கட்டியதாக நினைச்சுக்கோங்க.
நீங்க எப்போ கேட்டாலும் விவாகரத்து பத்திரத்துல கையெழுத்து போட்டு கொடுத்துடறேன். ஆனால் என் அப்பாவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியக் கூடாது. லேடீஸ் ஆஸ்டல்ல தங்கறதுக்கு மட்டும் கொஞ்சம் ஏற்பாடு செய்து கொடுங்க, அப்புறம் நான் உங்க மருத்துவமனையில் வேலையில் சேர்ந்துக்கலாம் தானே?” என்று கேட்டாள் நேத்ரா குனிந்த தலை நிமிராமல்.
எங்கே தலையை நிமிர்ந்து பார்த்தால் தன் கண்களில் உள்ள கண்ணீரை அவன் கண்டு விடுவானோ? தன்னுடைய பலவீனம் அவனுக்கு தெரியக்கூடாது என்று குனிந்த தலையை நிமிரவே இல்லை அவள்.
நேத்ராவின் பேச்சில் மலைத்து போனான் சித்தார்த் அபிமன்யூ. உண்மையில் அவன் மனதின் ஓரத்தில் இதே எண்ணம் தான் இருந்தது. ஆனால் அவன் தந்தை மகேந்திரன் செய்து வைத்த திருமணம் ஆயிற்றே. அவன் மகேந்திரனை ஏமாற்றினால், அது சிவக்குமாரை அவன் தந்தை ஏமாற்றியது போல் அல்லவா ஆகிவிடும்? அவனால் அவன் தந்தைக்கு எந்த தலைக்குனிவும் ஏற்படக்கூடாது என்பதால் இந்த திருமணத்தில் இருந்து விடுபடும் எண்ணமே அவனுக்கு இல்லை.
அதனால் தான் மனைவியிடம் தான் காதலித்த எலிசாவைப் பற்றி கூறினான். அவர்களின் காதல் எல்லை தாண்டியது வரை கூறிவிட்டான். அத்தனை எளிதாக அவளை மறந்து விட்டு உன்னை ஏற்றுக் கொள்ள முடியாது. அவளை மறந்து உன்னுடன் வாழ எனக்கு கால அவகாசம் வேண்டும், அதுவரை தனித்திருப்போம் என்று தான் அவன் பேசிக் கொண்டிருந்தான்.
ஆனால் இவள் பேசுவதை பார்த்தால் இவளுக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை போலிருக்கிறதே! ஒருவேளை இன்னொருத்தியை காதலித்து, அவளுடன் முறைதவறி இருந்தவனை எப்படி கணவனாக ஏற்றுக் கொள்வது என்று நினைக்கிறாளோ? அல்லது முதலில் தாலிக் கட்ட இருந்தவனின் மேல் காதலாக இருக்குமோ? என்று அவனும் குழம்பினான். அவன் பேச்சை அவள் முழுமையாக உள்வாங்கி இருக்கவில்லை என்பதை அவன் எப்படி அறிவான்?
அவளை அழுத்தமாக பார்த்தபடி “அப்போ, விவாகரத்து தான் உன் முடிவா?” என்றான்.
அவள் ஆமாம் என்பது போல தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள். ஒரு பெருமூச்சுடன், “ஓகே உன் விருப்பம்” என்று விட்டு படுக்கையில் சென்று படுத்துக் கொண்டான் சித்தார்த் அபிமன்யூ.
நேத்ரா கையிலிருந்த தலையணையை எடுத்துக் கொண்டு அங்கிருந்த நீள் இருக்கையில் கால்களை குறுக்கி படுத்துக் கொண்டாள். தனக்கு எதிரே இருந்த கட்டிலில் உறங்கி கொண்டிருக்கும் கணவனை பார்த்தாள்.
அவன் அவளுக்கு முதுகு காட்டி படுத்திருந்தான். அந்த பெரிய கட்டிலின் நீளம் அவனுக்கு சரியாக இருந்தது. மிகவும் உயரமாக இருப்பான் போலும். முகத்தை தான் சரியாக பார்க்கவில்லை என்று நினைத்தபடி எட்டி பார்த்தாள். அவன் அசையாமல் படுத்திருந்ததால் ஒன்றுமே தெரியவில்லை. ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவனோடு வாழ்க்கையே இல்லை என்று ஆன பின்பு முகத்தை பார்த்து மட்டும் என்னவாக போகிறது? எதற்கு வீணாக ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியவளாக கண்களை மூடிக் கொண்டாள்.
வெகுநேரமாக தூக்கம் வராமல், அந்த சோபாவில் புரண்டு படுக்கவும் முடியாமல், விழித்தபடி தன் வாழ்க்கை இனி எப்படி இருக்க போகிறதோ என்ற யோசனையுடன் நடுநிசி தாண்டியும் தூங்காமல் விழித்திருந்தாள்.
பிறகு எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. தூக்க கலக்கத்தில் புரண்டவள் சோபாவில் இருந்து தொப்பென கீழே விழுந்தாள். எங்கேயோ விழுந்து விட்டோம் என்று பதறி கொண்டு எழுந்தவள் மீண்டும் புடவையில் கால் தடுக்கி சோபாவில் விழுந்தாள். எதிர்பாராமல் வேகமாக விழுந்ததில் அந்த சோபாவின் மரக்கட்டை அவள் கன்னத்தில் பட்டு வலித்தது.
சமாளித்து எழுந்து நின்றவள், சுற்றும் முற்றும் பார்த்தாள். நல்ல வேளை அங்கே சித்தார்த் அபிமன்யு இல்லை. எப்போது எழுந்து சென்றான் என்றே அவளுக்கு தெரியவில்லை. மணியை பார்த்தாள், அது எட்டு மணியை தாண்டி இருந்தது.
“நேத்ரா” வெளியே அவளின் அத்தம்மா அழைக்கும் குரல் கேட்டது. “இதோ வர்றேன் அத்தை” என்று குரல் கொடுத்தபடி அவசரமாக வெளியே போனவளை, அங்கிருந்த பெரியவர்கள் அனைவரும் ஆராய்ச்சியாக பார்த்தனர்.
கன்னத்தை தேய்த்துக் கொண்டே என்ன என்பது போல பார்த்தாள் நேத்ரா. அவர்களின் பார்வை அவளின் கலைந்திருந்த புடவையின் மேல் படியவும், கன்னத்தை தேய்ப்பதை விட்டு அவசரமாக புடவையை சரி செய்தாள். அவளின் கன்னம் கன்றி சிவந்து இருந்ததை பார்த்த பெரியவர்கள் தங்களுக்குள் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
முந்தைய நாள் இரவு, அவளை அதட்டி முதலிரவு அறைக்குள் அனுப்பி வைத்த அப்பத்தா மட்டும், “ராத்திரி என்னவோ உள்ளேயே போக மாட்டேன்னு சொன்னே? இப்போ என்னடான்னா உன் புருஷன் வந்து அரை மணி நேரம் ஆகியும் வெளிவராம இருக்க? நான் சொல்லலை? முதலிரவு அறைக்குள்ளே போக தயங்கறவ சீக்கிரமா வெளியே வந்தததா சரித்திரமே இல்லை” என்று அந்தம்மா கிண்டலாக பேசி சிரிக்க, அப்போது தான் நேத்ராவுக்கு அவர்கள் பேச்சின் அர்த்தம் புரிந்தது. அங்கே நிற்க முடியாமல் அவசரமாக குளியலறைக்கு செல்பவளை மகேந்திரனும் சிவக்குமாரும் கவனித்தும் கவனிக்காதது போல தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
“சிவா, என் மகன் கண்டிப்பா சொல்லிட்டான், இன்னைக்கே நான் கனடா போயே ஆகணுமாம், அவன் பொண்டாட்டியை அவனுக்கு பார்த்துக்க தெரியுமாம். அவன் சொன்னப்போ எனக்கு புரியலை. இப்போ தான் புரியுது. நான் அவங்களுக்கு இடைஞ்சலா இருக்க கூடாதுனு தான் என்னை என் பொண்ணு வீட்டுக்கு போக சொல்றான் போல இருக்கு” என்றார் மகேந்திரன் சிரித்துக் கொண்டே. மருமகளின் கன்ன சிவப்பையும் வெட்கத்துடன் அவள் ஓடிய ஓட்டத்தையும் பார்த்தவரின் மனம் பூரித்து போய் விட்டது.
“மாப்பிள்ளை சொல்ற மாதிரி கேளு மகி. உடம்பை பார்த்துக்கோ. எனக்கும் இங்கே வயலில் அறுவடை வேலையிருக்கு, சின்னஞ்சிறுசுங்க, கொஞ்ச நாளைக்கு தனியா இருக்கட்டும். நான் அறுவடை முடிஞ்சதும் சென்னைக்கு போய் அவங்களை பார்த்துட்டு வர்றேன்” என்றார் சிவக்குமார்.
அதன்பிறகு நேத்ரா குளித்து முடித்து தயாராகி வரும் போது, சித்தார்த் தன் தந்தையிடமும் மாமனாரிடமும் பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“மருமகளே, ஏன் அங்கேயே நிக்கிற? வந்து உன் புருஷன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடு வா” என்று அழைத்தார் மகேந்திரன்.
சித்தார்த் திரும்பவும் இல்லை, அவளை அழைத்து தன் அருகில் அமரச் சொல்லவும் இல்லை. குனிந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தயங்கியபடி அவன் அருகில் சென்று அவள் அமர்ந்த அடுத்த நொடி, அவன் எழுந்து விட்டிருந்தான். உண்மையில் அவனுக்கு நிறைய போன் கால்கள் வந்த வண்ணம் இருந்தது. அதனால் அவசரமாக சாப்பிட்டு எழுந்துக் கொண்டான்.
ஆனால் நேத்ராவுக்கு தான் என்னவோ போலாகி விட்டது. அவன் அருகில் அமர்ந்து உண்ணக் கூட அவளுக்கு தகுதியில்லை என்று நினைக்கிறானோ? என்று கலங்கினாள். சிவக்குமாரின் முன்னால் எதையும் காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகமாகவே சாப்பிட்டாள்.
மகளின் கன்னத்தில் இருந்த சிவப்பை பார்த்த சிவக்குமார் மகளை கனிவாக பார்த்தபடி, “மாப்பிள்ளை இன்னைக்கே சென்னைக்கு கிளம்பணும், மருத்துவமனையில் நிறைய நோயாளிங்க அவருக்காக காத்திட்டு இருக்காங்கனு சொல்றாருடா. மகியை பிளைட் ஏத்தி விட்டுட்டு அப்படியே சென்னையில் இருக்கிற வீட்டுக்கு உன்னை அழைச்சிட்டு போறதா சொல்றாரு.
வயலில் அறுவடை இருக்கிறதால என்னால வர முடியாது. அதுவும் அத்தை, அப்பத்தா எல்லாம் தான் வயல்ல வேலை பார்க்கணும். நீ மாப்பிள்ளையோட தனியா இருந்துக்குவ தானே? உனக்கொண்ணும் பயமில்லையே?” என்றார் சிவக்குமார் மகளின் தலையை வாஞ்சையுடன் தடவியபடி
“அதெல்லாம் ஒன்னும் இல்லைப்பா, நான் இருந்துப்பேன், நீங்க அறுவடையை பாருங்க” என்றாள் நேத்ரா.
சிவக்குமார், மகளும் மருமகனும் தனிமையில் பேசி பழகட்டும், பிறகு போய் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவராக தாய் வீட்டு சீர் சாமான்களை எல்லாம் இங்கேயே கொண்டு வந்து இறக்கி வைத்திருந்தார்.
மறுப்பாய் ஏதோ சொல்ல போன சித்தார்த்தை கண்களால் அடக்கினார் மகேந்திரன். “நீ சீர் சாமான் எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டா, நம்ம பொண்ணுக்கு நம்மால எதையும் செய்யமுடியலைனு வருத்தப்படுவான். அவன் செய்யறதை செய்யட்டும். நீ எதுவும் தலையிடாதே” என்று சொல்லிவிட்டார்.
அதற்கு பிறகு மகேந்திரன் நேத்ராவிடம், “மாற்றி உடுத்திக் கொள்ள தேவையான ஆடைகளை மட்டும் எடுத்து பேக் செஞ்சுக்கோ நேத்ரா. மற்றவற்றை இந்த வீட்டிலேயே வைத்து விடு, தேவைப்பட்டால் பிறகு எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறவும் அவளும் தன் உடைமைகள் இருக்கும் பெட்டியை எடுத்துக் கொண்டு முன்னறைக்கு வந்தாள்.
தந்தை சிவக்குமாரிடமும், உற்றார் உறவினர்களிடமும் கண்ணீருடன் விடைப் பெற்றுக் கொண்டு அவள் வெளியே வரும்போது சித்தார்த் அபிமன்யு காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தான். மகேந்திரன் முன்பக்க கதவை மருமகளுக்காக திறந்து விட்டார்.
சாப்பிடும்போது நேத்ரா அவன் அருகில் அமர்ந்ததும், அவன் சட்டென்று எழுந்து போனதும் நினைவில் வர, “இல்லை மாமா, நீங்க உட்காருங்க. நான் பின்னாடி உட்கார்ந்திட்டு வர்றேன்” என்றாள்.
சித்தார்த்தின் முகம் இறுகியது. “ஓ மகாராணி என் பக்கத்துல கூட உட்கார மாட்டாங்களோ?” என்று கோபத்தால் முகம் சிவந்தான். ஆனால் எதற்கு கோபப் படுகிறோம் என்று தான் அவனுக்கே தெரியவில்லை.
epi-5 continuation