மான்விழி - 09
சித்தார்த்தின் அறையில் இருந்து வெளியே வந்த நேத்ரா நேராக ஜமுனா இருந்த இடத்திற்கு சென்றாள். அவள் ஒரு நோயாளியிடம் சாப்பிட வேண்டிய மருந்துகளை காண்பித்து சாப்பிட வேண்டிய கால நேரத்தை பற்றி விளக்கி கொண்டிருந்தாள்.
நேத்ரா அதை கவனமாக பார்த்தபடி நின்றிருந்தாள். நோயாளியிடம் பேசி விட்டு திரும்பிய ஜமுனா, “ஏய் இங்கே நின்னு என்ன செய்யறே? அந்த பெட்டியில் மருந்து எல்லாம் காலி ஆயிடுச்சு பாரு. ஸ்டோர்ல போய் வாங்கிட்டு வா” என்றாள் ஜமுனா.
நேத்ரா உடனே திரும்பி செல்லாமல் அவள் சொன்ன வேலையை ஒரு சின்ன நோட்டு புத்தகத்தில் குறித்துக் கொண்டு மீண்டும் அங்கேயே நின்றாள்.
ஜமுனாவிற்கு கோபம் வந்துவிட்டது, “நீ என்ன சொல்றது நான் என்ன கேட்கிறதுனு எகத்தாளமா நிக்கறீயா? சீனியர் சொல்ற வேலையை உன்னால செய்ய முடியாதா? இந்த மருத்துமனையில் பத்து வருஷமா வேலை செய்யற வசந்தியே நான் ஒரு வேலை சொன்னால் மறுக்காமல் உடனே செய்து முடிப்பா, வந்து ஒரு மாசம் ஆகல, என்ன திமிர்? தகுந்த படிப்பும் அனுபவமும் இல்லாத உனக்கெல்லாம் நான் சொன்னால் மட்டும் எங்கே புரிய போகுது? இப்போ நான் சொல்ற வேலையை செய்ய முடியுமா? இல்லை டாக்டர் சித்தார்த்திடம் போய் இந்த பெண்ணுக்கு என்னால வேலை சொல்லித்தர முடியாதுனு சொல்லிடட்டுமா?” என்று மிரட்டினாள்.
நேத்ரா அமைதியாகவே நின்றிருந்தாள்.
“ஓ அவ்வளவு நெஞ்சழுத்தமா உனக்கு? நான் அவங்க அப்பா காலத்துல இருந்து வேலை செய்யறேன். அவரே என்னை எதிர்த்து பேச மாட்டாரு. இ்ப்போ அவர் மகன் மட்டும் என்னை என்ன சொல்லிட போறாருனு நானும் பார்க்கிறேன்” என்று கிளம்பினாள்.
“நில்லுங்க சிஸ்டர்” என்றாள் நேத்ரா.
ஜமுனா முறைத்துக் கொண்டே “என்ன?” என்று கேட்க,
“அதிகப்பட்சம் என்னை அட்மின் பிளாக்கிற்கும். மருந்துகள் இருக்கிற ஸ்டோருக்கும், கேண்டீனுக்கும் தான் அனுப்பறீங்க. உங்களுக்கு ஒரு நாளைக்கு என்னென்ன தேவை இருக்குனு நான் குறிப்பெடுத்துக்கிறேன். அதை வாங்குவதற்காக அடிக்கடி நான் அங்கே போய் கேட்கிறதுக்கு பதிலாக, ஒரு நாளைக்கு தேவையானதை ஒரே முறையாக போய் வாங்கிட்டு வந்திடுறேன்.
நான் இதுவரைக்கும் உங்களுக்கு செய்த எந்த வேலையும் தவறாமல் செய்வேன். சரியான நேரத்துக்கு உங்களுக்கு தேவையானது அனைத்தும் கிடைக்கும், பஜ்ஜி, டீ உட்பட. ஆனால் அதற்காக ஒரு நேரத்தை ஒதுக்கி மற்ற நேரத்தில் நான் இங்கே தான் இருப்பேன். உங்களுக்கு வேண்டியது ஸ்டாக் இல்லாமல் போனால் நீங்க போய் தாராளமாய் டாக்டர் சித்தார்த்திடம் கம்ளெய்ன்ட் பண்ணுங்க” என்றாள் தீர்க்கமான குரலில்.
ஜமுனா திகைத்துப் போய் பார்த்தாள். இவள் என்ன பார்க்க அம்மாஞ்சி மாதிரி இருக்கானு பார்த்தால் இவ்வளவு புத்திசாலித்தனமா பேசுறா. இங்கேயே இருந்துட்டா மட்டும் சொல்லி கொடுத்திடுவேனா? எப்படி பத்து நாள்ல வேலை கத்துக்கிறேனு நானும் பார்க்கிறேன்” என்று மனதிற்குள் கறுவிக் கொண்டு தன் வேலையை பார்க்க சென்றாள் ஜமுனா.
ஜமுனா, வசந்தி மற்றும் சில டாப் நர்ஸ்கள் கேட்கும் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டு, அங்கிருந்து நகராமல் அவர்கள் எப்படி நோயாளிகளை கவனிக்கிறார்கள், ஊசி செலுத்துவது, டிரிப்ஸ் ஏத்துவது என அனைத்தையும் கவனமாக உற்று நோக்கினாள். அவர்கள் செலுத்தும் மருந்து ஏன்? எதற்கு? அதன் அளவு பற்றி எந்த புரிதலும் அவளுக்கு இல்லை, அவளாக சந்தேகம் கேட்டாலும் ஜமுனாவும் வசந்தியும் எந்த பதிலும் சொல்லாமல் தங்கள் வேலையை கவனித்தார்கள்.
ஏன் எதற்கு என்று தெரியா விட்டாலும் அனைத்தையும் குறிப்பெடுக்க தொடங்கினாள். அன்று மாலை டியூட்டி முடித்த பின் விடுதிக்கு செல்லாமல் ஜமுனா கட்டளையிட்ட அனைத்து வேலைகளையும் செய்து முடித்தபின்பு தான் கிளம்பினாள்.
அன்றிரவு உணவு உண்டபின், தான் வைத்திருந்த குறிப்பை காட்டி தன் சந்தேகத்தை எல்லாம் சுதாவிடம் கேட்டாள். சுதாவும் வேறு மருத்துவமனையில் இப்போது பணிபுரிவதால், அவள் அந்த மருந்தின் உபயோகங்களை பற்றி விவரித்தாள். அவற்றை எல்லாம் கவனமாக தன் மனதில் பதித்துக் கொண்டு, நோட்டு புத்தகத்தில் குறித்தும் கொண்டாள்.
மறுநாள் காலையும் தன் வேலை நேரத்திற்கு முன்னாடியே சென்றாள், ஜமுனா சொன்னவற்றையெல்லாம் வாங்கி அவள் வருவதற்குள் அனைத்தையும் அதற்குரிய இடத்தில் வைத்திருந்தாள். காலையில் எப்படியும் நேத்ராவை எதாவது சொல்லி திட்டலாம் என்று வந்த ஜமுனாவிற்கு ஏமாற்றமே கிடைத்தது.
நேத்ரா எதற்காவும் அந்த இடத்தை விட்டு நகராமல் அனைத்து நர்ஸ்களையும் கவனித்த வண்ணம் இருந்தாள். வேலையை கற்றுக் கொள்ள அவர்களை அவள் கவனித்தாலும் அதில் யார் சேவை மனதுடன் நன்றாக பணிபுரிகிறார்கள், யாரெல்லாம் நோயாளியிடம் கோபத்தோடு நடந்துக் கொள்கிறார்கள் என அனைத்தையும் கவனித்தாள்.
அன்று பதினொரு மணிக்குமேல் நேத்ரா கேண்டீனுக்குள் செல்வதை தற்செயலாக பார்த்த சித்தார்த்க்கு கோபமாக வந்தது. நர்ஸ் வேலை செய்ய போறேன்னு அவள் தான் சொன்னாள், நானா செய்ய சொன்னேன்? அப்படி வேலை செய்ய வந்தவள் அதை ஒழுங்காக செய்யாமல், அவன் எவ்வளவு திட்டியும், இப்போது கேண்டினுக்கு செல்கிறாளே என்று கோபத்தோடு அவளை திட்டுவதற்காக அவனும் கேண்டினுக்கு சென்றான்.
ஆனால் நேத்ரா ப்ளாஸ்க் நிறைய தேநீர் வாங்குவதையும், விதவிதமான திண்பண்டங்களை அதிகமாக வாங்குவதையும் பார்த்து புருவம் சுருக்கினான்.
இவள் இருக்கிற சைஸ்க்கும் சாப்பிடற சாப்பாட்டுக்கும் சம்மந்தமே இல்லை போல இருக்கே! இது எல்லாமே அவளே சாப்பிட போறாளா? என்று யோசனையுடன் பார்த்த சித்தார்த், அவள் அவன் இருக்கும் திசையை நோக்கி வரவும் அவசரமாக வேறு பக்கம் திரும்பி போன் பேசுவது போல நின்றுக் கொண்டான்.
அவன் அங்கே இருப்பது தெரியாமல் நேத்ரா எப்பவும் போல் அவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டு பொதுபிரிவிற்கு சென்றாள். அவளறியாமல் அவளை பின் தொடர்ந்தான். நேத்ரா கேண்டீன் ஊழியர் போல அங்கிருந்த அனைவருக்கும் தேநீர் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
சித்தார்த் அபிமன்யூவிற்கு கோபத்தால் நரம்புகள் புடைத்துக்கொண்டு உடல் முறுக்கேறியது. கழுத்தை தடவியபடி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு தன் அறைக்கு சென்று விட்டான்.
அன்று மாலையும் வேலை முடிந்த பின்பும் மருத்துவமனையிலேயே நேத்ரா இருப்பதை பார்த்து, தன் சிசிடிவி கேமராவின் பதிவுகளின் மூலம் அவளை கவனிக்க தொடங்கினான் அவள் கணவன்.
நேத்ரா மருத்துகளுக்கான ஸ்டோரில் அன்றைய மருந்துகளின் பயன்பாட்டிற்கான குறிப்புகளை கொடுத்து விட்டு, மறுநாள் தேவைக்கான அனைத்து மருந்துகளையும் அட்டை பெட்டியில் வைத்து தூக்க முடியாமல் தூக்கி கொண்டு சென்றாள். இறுகிய முகத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
இரவு எட்டு மணிக்கு மேல் அனைத்து வேலைகளையும் முடித்து அவள் உடை மாற்றும் அறைக்கு சென்றாள். சித்தார்த்தும் தன் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு, தன் அறையை பூட்டிக் கொண்டு, அவள் இருந்த அறைப்பக்கம் சென்றான்
அவன் வருவதற்குள் அவள் சென்று விட்டிருந்தாள். தோள்களை குலுக்கியபடி வெளியே சென்றவன் தன் காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனையின் கேட்டருகே சென்ற போது எளிதான காட்டன் புடவையில் நேத்ரா வாயிலை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாள்.
ஒல்லியான உருவத்தில் இருந்தவள், அந்த புடவையை மிக நேர்த்தியாக கட்டியிருந்ததில் அவளின் பின் பக்க வளைவு நெளிவுகளும், கொடியிடையும் அழகாக தெரிந்தது. நீண்ட கூந்தலை அழகாக பின்னியிருந்தாள், அது அவளின் இடையை தாண்டி அவள் நடைக்கேற்ப நடனமாடிக் கொண்டிருந்தது. தன்னையும் அறியாமல் முன்னால் சென்று கொண்டிருந்த பெண்ணை கவனித்தான். அவன் கார் முன்னோக்கி செல்ல முடியாமல் அவள் பாதையை மறைத்தவாறு சென்று கொண்டிருந்தாள். யாரது என்று எண்ணியபடி காரின் ஹாரனை வேகமாக அழுத்தினான்.
அதில் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள் நேத்ரா. அப்போது தான் அங்கே சென்று கொண்டிருந்தது தன் மனைவி தான் என்றே அவனுக்கு தெளிவாக புரிந்தது. கையில் ஹேண்ட்பேக்குடன் அதிர்ச்சி விலகாமல் அப்படியே நின்றிருந்தவளை ஆழ்ந்து பார்த்தான். அவனின் காரின் ஒளிவிளக்கு தந்த வெளிச்சத்தில் பளிச்சென்று அவள் முகம் தெரிந்தது. எந்த ஒப்பனையும் இல்லாமல் தமிழ் பெண்ணுக்கான அழகுடன் நிர்மலமான முகத்துடன் இருந்தவளை பார்க்கும் போது ஏனோ, “ஒளியிலே தெரிவது தேவதையோ” என்ற வரிகள் தான் அவன் நினைவில் வந்தது.
பார்க்க டீச்சர் மாதிரி இருக்கா, ஆனா செய்யறது நர்ஸ் வேலை என்று மனதிற்குள் செல்லமாக திட்டிக் கொண்டான்.
எந்தபக்கமும் செல்லாமல், அவனை பார்த்து பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தவளை பார்த்து காரில் ஏறுமாறு சைகை செய்தான்.
திகைப்புடன் அவனை பார்த்து விழித்தவள், அவசரமாக சுற்றும்முற்றும் இருக்கும் செக்யூரிட்டிகளை பார்த்து விட்டு, மறுப்பாய் தலையசைத்து விட்டு அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக விலகி நடந்தாள்.
சித்தார்த் அபிமன்யுவிற்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை எனலாம். முகமும் கண்களும் கோபத்தால் சிவந்து போனது. தன் கையால் ஓங்கி ஸ்டிரியங்கில் குத்தினான். என்னதான் நினைச்சுட்டு இருக்கா இவ? நான் என்ன ரோட் சைட் ரோமியோவா? இவளை பார்த்து நான் கூப்பிட்டதும் என்னவோ அதிர்ச்சியா சுற்றும் முற்றும் பார்த்துட்டு பயந்து போற மாதிரி போறா? இப்போ செக்யூரிட்டி அவனைப்பற்றி என்ன நினைப்பான்?
அவர்களை திரும்பி பார்க்காமல் மறுத்திருந்தால் கூட பரவாயில்லை. ஏதோ அவர்கள் இருக்கிறார்கள் என்பதால் பயந்து போவது போல செல்கிறாளே? வழக்கமாக செக்யூரிட்டி வைக்கும் வணக்கத்திற்கு பதிலாக தலையசைப்புடன் சின்னதாக ஒரு புன்முறுவலுடன் மெயின் கேட்டை கடப்பவன் இப்போது கோபத்தோடு காரை திருப்பி வழக்கத்திற்கு மாறாக அதிவேகமாக சென்றான்.
அங்கே நின்றிருந்த செக்யூரிட்டிகள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர். ஏனென்றால் ஆம்புலன்ஸ் தவிர மற்ற வண்டிகள் அனைத்தும் வேகம் 20ஐ தாண்டக் கூடாது என்பது அவன் விதித்திருந்த கட்டளை. இன்று அவனே அதை மீறிச் செல்லவும் அங்கிருந்தவர்கள், “டாக்டரு இன்னைக்கு ரொம்ப கோபமாக இருக்கிறார் போல” என்று பேசிக் கொண்டார்கள்.
அன்று இரவு வீட்டிற்கு சென்றதும், முதல் முறையாக நேத்ராவின் எண்ணிற்கு அழைத்தான். அவள் எடுத்து “ஹலோ” என்றது தான் தாமதம், சரமாரியாக திட்ட தொடங்கிவிட்டான்.
“உனக்கென்ன மனசுல பெரிய ரதினு நினைப்பா? இல்லை உன்னை நான் எங்காவது கடத்திட்டு போயிடுவேனு நினைச்சியா? ஏதோ நடந்து போறியே, லேட்டாயிடுச்சே, பஸ் ஸ்டாப்பில் டிராப் பண்ணிட்டு போகலாம்னு நினைச்சா, ஓவரா பண்றே? அங்கே இருக்கிறவன் எல்லாம் என்னை பத்தி என்ன நினைப்பான்? நான் உன்னை கரெக்ட் பண்ண முயற்சி பண்றதாகவும், நீ என்னை அவாய்ட் பண்றதாகவும் தானே நினைப்பான்?” என்று கோபத்தோடு கர்ஜித்தான்.