மான்விழி - 14
சித்தார்த் நேத்ராவை பார்த்து முறைத்தான். “உன் பிரச்சனையை தான் என்கிட்ட சொல்ல மாட்டே. குறைந்த பட்சம் இந்த ஆஸ்பிட்டல்ல என்ன நடக்குதுனு மட்டுமாவது பாத்து சொல்லு. வேறே எந்த பெண்களும் என்னோட நிர்வாகத்தில் இந்த மாதிரி எந்த பிரச்சனையிலும் மாட்டக்கூடாது. அவங்க சொல்றதுக்கு தயங்கலாம், தினமும் மருத்துவமனை முழுவதும் ஒரு விசிட் போய்ட்டு வா. உன் கண்ணில் எதாவது பட்டால் எனக்கு சொல்லு. அதாவது முடியுமா?” என்று கேட்டான் அழுத்தமான குரலில்
சம்மதமாக தலையை மட்டும் ஆட்டினாள் நேத்ரா.
“இனி ஒரே இடத்தில் இல்லாமல் வாரம் ஒரு முறை உனக்கு டியூட்டி மாத்தி விட சொல்றேன்” என்று சொல்லி விட்டு அங்கே காத்திருந்த நோயாளிகளை உள்ளே அனுப்பும்படி கூறினான்.
அதன்பிறகு நேரம் போவதே தெரியாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் நேத்ரா. ஜமுனா ஒரு குரூரத்துடன் அமர்ந்து நேத்ராவை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னாச்சுக்கா, ஏன் ஒரு மாதிரி இருக்கே?” என்று கேட்ட வசந்தியிடம் தான் அவமானப்பட்டதை சொல்ல விரும்பாமல் “அதெல்லாம் ஒன்னுமில்லை வசந்தி” என்று மழுப்பிவிட்டாள் ஜமுனா.
பாண்டி டாக்சியில் அமர்ந்தபடி நகத்தை கடித்துக் கொண்டிருந்தான். காலையில் அவன் பஸ் நிறுத்தத்தில் நேத்ராவிற்காக வெகுநேரம் காத்திருந்தான். ஆனால் அவள் வரவில்லை. ஒரு வேளை விடுமுறை எடுத்துக் கொண்டாளோ என்று வார்டனிடம் விசாரித்தான். அவரோ ஏற்கனவே அவள் வேலைக்கு சென்று விட்டதாக கூறினார்.
காலையில் ஒரு செக்யூரிட்டியிடம் விசாரித்ததற்கு நேத்ரா இன்று வேலைக்கு வந்திருப்பதாக உறுதி செய்தார். எனவே தன் அன்றாட வேலையை முடித்துக் கொண்டு மாலை அவள் எப்போதும் வரும் நேரத்திற்கு முன் வந்து காத்திருந்தான்.
ஆனால் நேரம் கடந்ததே தவிர அவள் வெளியே வருவதாக தெரியவில்லை. பொறுமையிழந்த பாண்டி செக்யூரிட்டியிடம், “சார் இன்னும் நர்ஸ் டே ஷிப்ட் டியூட்டி முடியலையா? இல்ல ஏதாவது ஓவர் டைம் வேலை இருக்கா?” என்றான்.
“அதை நீ ஏன் கேட்கிறே?” என்றார் செக்யூரிட்டி அவனை சந்தேகமாக பார்த்து, காலையிலும் அவன் வந்து விசாரித்து சென்றது நினைவு வந்தது அவருக்கு.
“இல்ல சார், டாக்சி புக் பண்ணியிருந்தாங்க, அதான் கேட்டேன்” என்றான் சமாளிப்பாக.
“அப்போ, அவங்களுக்கே போன் செய்து கேட்க வேண்டியது தானே?” என்றார் செக்யூரிட்டி
“அது… அவங்க போன் செய்தால் எடுக்கலை சார்” என்று தலையை சொரிந்தான்.
“சரி அவங்க பேர் என்ன?” என்று கேட்ட செக்யூரிட்டியிடம், “நேத்ரா” என்றான்
“கொஞ்சம் இரு, போன் செய்து பார்க்கிறேன்” என்று சொல்லி அட்மினில் இருக்கும் ஜனனியிடம் பேசிவிட்டு, “அவங்க டாக்சி புக் செய்திருக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா அவங்க மருத்துவமனை விடுதியில் தான் தங்க போறாங்கனு அட்மின்ல சொல்றாங்களே?” என்ற செக்யூரிட்டி அவனை மேலும் சந்தேகமாக பார்த்தார்.
“என்ன? இனிமே இங்கேயே தங்க போறாளமா?” என்றான் பாண்டி அதிர்ச்சியில் வாயை பிளந்து.
“ஏய், உன்னை பார்த்தா ஆளும் முழியும் சரியில்லையே? யார் நீ? எதுக்கு எங்க ஸ்டாஃப் பத்தி விசாரிச்சுட்டு இருக்கே” என்று செக்யூரிட்டி பாண்டியை பார்த்து அதட்டவும், அங்கிருந்த மற்ற செக்யூரிட்டிகளும் அவனருகே வந்து விசாரிக்க வந்து விட்டனர்.
“நான் இப்போ என்ன தப்பா கேட்டுட்டேன்னு எல்லாரும் இப்படி வரிஞ்சி கட்டிட்டு வர்றீங்க” என்று பாண்டியும் கத்திப் பேச அந்த இடத்தில் லேசாக சலசலப்பு எற்பட்டது.
ஜமுனா எப்போதும் போல தன் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்துக் கொண்டிருந்தாள். குடும்பம் குழந்தைகள் என்று இருப்பதால் மருத்துவமனை விடுதி எல்லாம் சரி வராது என்று வெளியில் தான் தங்கியிருக்கிறாள். தனக்கு இன்று நடந்த அவமானத்தை நினைத்து மனதிற்குள் புலம்பியபடி வந்தவள் கேட்டருகே ஏதோ பிரச்சனை போலிருக்கிறதே என்று வேகமாக அவர்களை நோக்கி சென்றாள்.
ஒரு செக்யூரிட்டி பாண்டியின் சர்ட் காலரை பிடித்திருக்க, அவரும் அவன் சட்டையை பிடித்திருந்தார். மற்றவர்கள் இருவரையும் விலக்கிக் கொண்டிருந்தனர்.
“என்ன பிரச்சனை இங்கே? இது என்ன மீன் மார்க்கெட்டா இல்லை ஆஸ்பிட்டலா? முதல்ல இரண்டு பேரும் அடிச்சுக்காமல் விலகுங்க. டாக்டர் சித்தார்த் சார் வெளியே போகும் நேரம் இது” என்று கத்தினாள் ஜமுனா.
சித்தார்த்தின் பேரை கேட்டதால் மற்ற செக்யூரிட்டிகள் அமைதியாக பின் வாங்க, பாண்டி மட்டும் கத்திக் கொண்டிருந்தான். “நான் என்ன கேட்டேன் இப்போ? எனக்கு வேண்டியவங்க இங்கே வேலை செய்யறாங்க, அவங்களை காரில் பிக்கப் பண்ண வந்தேன். அவங்க இன்னும் வெளியே வரலியேனு கேட்டேன். இது ஒரு தப்பா? கேட்டதுக்கு பதில் சொல்லாமல் என்னையே அடிக்க வர்றாங்க சிஸ்டர்” என்று ஜமுனாவிடம் முறையிட்டான் பாண்டி.
“உனக்கு வேண்டியவங்களா? யாரது?” என்றாள் ஜமுனா அவனை பார்த்து.
பாண்டியை பார்க்க கரடுமுரடான அடியாள் போல இருந்தான். இப்படிப்பட்டவனுக்கு போய் இங்கே யார் வேண்டியவர்கள் இருக்க போகிறார்கள் என்று சந்தேகத்துடன் அவன் பதிலுக்காக அவனையே கூர்ந்து பார்த்தாள் ஜமுனா.
“இங்கே நர்ஸ் வேலை பாக்குதே நேத்ரா, அந்த புள்ள தான்” என்றான் பாண்டி.
“நேத்ராவா? நேத்ராவை உனக்கு தெரியுமா?” என்றாள் ஜமுனா ஆர்வமாக.
“தெரியுமாவா? மேடம் ஊருல அவ பின்னாடியே அலைஞ்சு திரிஞ்சு என் காதலை சொல்லி கல்யாணம் வரைக்கும் போனவன் நான். என்கிட்ட போய் அவளை தெரியுமானு கேக்கறீங்க?” என்றான் பாண்டி.
என்ன கல்யாணம் வரைக்கும் போனானா? என்று வாயை பிளந்தாள் ஜமுனா. பின்பு செக்யூரிட்டிகளிடம் திரும்பி, “நீங்க உங்க வேலையை பாருங்க. நான் என்ன விஷயம்னு விசாரிக்கிறேன்” என்றாள்.
அதற்குள் மற்ற மருத்துவர்களின் கார்கள், ஊழியர்களின் இருசக்கரவாகனங்கள் என்று வரிசைக்கட்டி வெளியே செல்ல காத்துக் கொண்டு நின்றிருக்கவும், செக்யூரிட்டிகள் அதை கவனிக்க அவசரமாக அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.
அவர்கள் சென்றதும் பாண்டியிடம் திரும்பி, “எதுக்கு வீணா செக்யூரிட்டிங்க கிட்ட சண்டை போடறே? முன்ன பின்ன தெரியாத ஒருத்தன் வந்து இங்கே வேலை செய்யும் பெண்ணை பற்றி விசாரித்தால் அவங்க சந்தேகப்பட மாட்டாங்களா? அவங்க வேலையை அவங்க சரியா தானே செய்யறாங்க?” என்று கேட்டாள் ஜமுனா.
“என்னா சிஸ்டர் நீங்களும் அவங்களை மாதிரியே பேசறீங்க. நான் என்ன முன்ன பின்ன தெரியாத ஆளா? நேத்ராவை கேட்காம இவங்களா ஒரு முடிவெடுத்துட்டா எப்படி?” என்றான் பாண்டி ஆதங்கத்துடன்
“ஒரு கல்யாணம் ஆகாத பெண்ணை பற்றி யாரோ ஒருத்தன் வந்து விசாரிச்சா செக்யூரிட்டி எப்படி விவரம் சொல்லுவாங்க நீயே சொல்லு? கல்யாணம் ஆகியிருந்தால் அவ புருஷன் வந்து விசாரிக்கலாம். கல்யாணம் ஆகலைனா அவளோட அப்பாவோ அண்ணனோ வந்து விசாரிக்கலாம். இப்போ நீ யாரு சொல்லு? உன்னை பார்த்தால் நேத்ராவோட அப்பா மாதிரி தெரியல? அவளுக்கு கல்யாணம் ஆகாததால புருஷனா இருக்கவும் வாய்ப்பில்ல. ஒரு வேளை நீ அவளோட அண்ணனா?” என்றாள் ஜமுனா நக்கலாக.
“அய்யோ சிஸ்டர் வாயை கழுவுங்க முதல்ல. பொண்டாட்டியை போயி யாராவது அண்ணன்னு சொல்வாங்களா?” என்றான் பாண்டி முகத்தை சுழித்து. பின்பு நினைவு வந்தவனாக, “இப்போ என்ன சொன்னீங்க? நேத்ரா கல்யாணம் ஆகாத பொண்ணா? அவ இன்னும் கல்யாணம் ஆகலைனா சொல்லி வச்சிருக்கா?” என்றான் இப்போது கண்கள் மின்ன
“ஆமா, கல்யாணம் ஆகாதவள்னு சொல்லி தான் வேலைக்கே சேர்ந்தாள். நீ ஏதோ கல்யாணம் வரைக்கும் போனதாக சொன்னியே? ஏன் கல்யாணம் நடக்கலயா?” என்றாள் ஜமுனா அவன் முகத்தை ஆராய்ச்சியாக பார்த்து.
பாண்டியின் மூளை இப்போது குரூரமாக யோசித்தது. “என்ன? கல்யாணம் ஆகலைனு சொல்லியிருக்காளா? அப்போ அந்த டாக்டர் இவளை கழட்டி விட்டுட்டான்னு தானே அர்த்தம். இத முதல்லயே என்கிட்ட சொல்லியிருந்தால் நானே அவளுக்கு மறுபடியும் வாழ்க்கை கொடுத்திருப்பேனே?
இப்போ மட்டும் என்ன கெட்டு போச்சு? நேத்ராவை மணமேடை வரைக்கும் கூட்டிட்டு போனவன் நான்தானே? இடையில் யாரோ ஒரு மூணாவது மனுஷன் வந்து ஒரு கயிற்றை கட்டிட்டால் அவன் என் நேத்ராவுக்கு புருஷன் ஆயிடுவானா? அவன் தான் அவளை வேண்டாம்னு தள்ளி வச்சிருக்கானே? யாருமில்லாத நிலத்தில் நான் உடனடியா பட்டா போடலைனா, வேற யாராவது பட்டா போடவும் வாய்ப்பிருக்கு. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கிட்டு அவளை என் மனைவினு சொல்லி அழைச்சிட்டு போயிட்டா என்ன?” என்று பலமாக யோசித்தான் பாண்டி.
“என்னப்பா பலமா யோசிக்கிறே? அப்போ நீ சொன்னது பொய் தானே? இந்த மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்போம்? யாராவது தனியா போற பொண்ணுங்களை ஃபாலே பண்ணி வரவேண்டியது. அப்புறம் அவகிட்ட பேசறதுக்காக, எனக்கு அந்த பெண்ணை தெரியும், நான் அவளுக்கு உறவு அப்படி, இப்படினு சொல்லி இங்கே வந்து தொந்தரவு செய்ய வேண்டியது” என்றாள் ஜமுனா பொய் கோபத்துடன்.
“அய்யோ இல்லை சிஸ்டர் நேத்ரா என்னோட மனைவி தான். குடும்பத்தில் ஒரு சின்ன பிரச்சனை” என்றான் பாண்டி அவசரமாக.
“கொஞ்சம் முன்னாடி தான் கல்யாணம் வரைக்கும் போனேன்னு சொன்னே, இப்போ நேத்ரா உன் மனைவினு சொல்றே. எதுவும் சரியா படலையே?” என்றாள் ஜமுனா பாண்டியை ஏற இறங்க பார்த்து.
“நீங்க நம்பலையா? இருங்க இப்பவே நிருபிக்கிறேன்” என்று தன் பாக்கெட்டில் இருந்த கைப்பேசியை எடுத்து, “இதோ எங்க கல்யாணத்தப்போ எடுத்த போட்டோ என் மொபைல்ல இருக்கு. நீங்களே பாருங்க” என்று திருமண வரவேற்பில் எடுத்த போட்டோக்களை எல்லாம் காண்பித்தான்.
அதிர்ச்சியில் கண்கள் விரிய பார்த்த ஜமுனா, ஆர்வம் தாங்காமல் அவன் கையிலிருந்த மொபைலை அவசரமாக பிடுங்கி, அவளே அதில் இருந்த அனைத்து போட்டோக்களையும் நகர்த்தி பார்த்தாள். சந்தேகமே இல்லை பாண்டியின் அருகில் நின்றிருப்பது நேத்ராவே தான். வரவேற்பு முடிந்து காலையில் நடந்த முகூர்த்தத்திற்கான போட்டோக்களை தேடினாள். ஒன்றும் கிடைக்காமல் போகவே பாண்டியை பார்த்து, “தாலி கட்டின போட்டோ ஒன்னையும் காணோமே” என்றாள்.
“அது வந்து, அது இன்னும் போட்டோகிராபர் எனக்கு அனுப்பலை சிஸ்டர்” என்று சமாளிக்க பார்த்தான் பாண்டி.
ஜமுனாவுக்கு நன்றாகவே புரிந்தது, இரவு திருமண வரவேற்பு வரை நன்றாக நடந்த இவர்களின் கல்யாண ஏற்பாடு ஏதோ காரணத்தால் நின்று போயிருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் தான் மணமேடை வரை சென்றதாக உளறிட்டான். இப்போது சமாளிக்க பார்க்கிறான்” என்று யோசனையாக பார்த்தாள் ஜமுனா.
“சிஸ்டர் என்ன அப்படி பார்க்கறீங்க? என்னை நம்புங்க. நீங்க தான் எனக்கு உதவி செய்யணும் சிஸ். ப்ளீஸ்” என்று ஜமுனாவின் கைகளை பிடித்து கெஞ்ச தொடங்கினான் பாண்டி
“என்ன தான் நீ சொன்னாலும் என்னால நம்ப முடியலை. உண்மையை சொல்லு, அவ கழுத்தில நீ தாலி கட்டினியா இல்லையா?” என்றாள் ஜமுனா.
திருதிருவென விழித்தான் பாண்டி. “சிஸ்டர், நேத்ராவை முறையா கல்யாணம் பேசி பத்திரிக்கை அடிச்சு, அதை ஊர் முழுக்க கொடுத்து எல்லா ஏற்பாடுகளையும் நான் தான் செஞ்சேன். இந்த போட்டோவ பாருங்க, இது நான் தான் உங்களுக்கு தெரியலையா?” என்றான் தடுமாறிய குரலில்
“அது எல்லாம் நீயா இருக்கலாம், ஆனால் நீ தாலி கட்டினியா? அது தான் என் கேள்வி, பதில் சொல்லு” என்றாள் ஜமுனா அழுத்தமான குரலில்