தூரமே தூரமாய் 24
'தூரங்கள் தான் இந்த நேசத்தை இன்னும் அழகானதாகவும், ஆழமானதாகவும் மாற்றிவிடுகிறது.'
'தூரமே தூரமாய்.'
_____________________________
கண்களை மூடி தனக்குள் உழன்றபடி இருந்தான் ருத்விக்.
ருதுவிற்கு இமையாளை தன் காதலினால் அனுபவித்த வலிகள் போதும். தன் பக்கம் வைத்து உலகின் மொத்த காதலையும் அவளுக்கு வழங்கிட பேராவல் அவனுள். ஆனால் அவளாக வரவேண்டும். தன்மீதான காதலால் வரவேண்டும். உண்மையை சொல்லாது அது சாத்தியமில்லை.
'வேறெப்படி வரவழைக்க?' மனதின் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை.
'என்னை கல்யாணம் பண்ணிக்கோ கேட்கலாமா?' காலில் போட்டிருப்பதாலே அடிப்பாள். உடனடியாக மறுத்து கொட்டியது அவனது உள்ளம்.
வேண்டாமென்ற காதல் அவனுக்கு காலத்துக்கும் வேண்டுமெனத் தோன்றுகிறது. கைப்பற்றிடும் மார்க்கம் தான் அவனுக்கில்லை.
'எனக்கு நீ உனக்கு நான் என்பதல்ல காதல். நீ நீயாகா, நான் நானாக இருத்தலே ஆகப்பெரும் காதல்.' அந்த காதலை அவன் மனம் வேண்டுவதாலேயே உண்மையை சொல்லாது அவள் வேண்டுமென தவிக்கிறான்.
அந்த தவிப்பினாலே அவளை காலை மாலை சென்று பார்ப்பதை தவிர்த்தவனாக அலைப்புறுதல் கொள்கிறான்.
இமை மூடியிருந்தவனின் சிந்தையை அலைப்பேசி கலைத்திட, சரியாக அந்நேரம் வெங்கட்டும் எதையோ சொல்வதற்கு உள் நுழைந்தான்.
"என்ன வெங்கட்?"
மீண்டும் அலைப்பேசி இசைத்திட, யாரென்று பார்த்தான். வீட்டு எண்ணிலிருந்து அழைப்பு. பொதுவாக அம்பிகா அழைப்பதென்றால் அவரது தனிப்பட்ட எண்ணிலிருந்து அழைப்பார். தொலைபேசி அழைப்பு என்றதும் மகனாகத்தான் இருக்குமென மென் முறுவலோடு, வெங்கட்டிடம் கண் காட்டிவிட்டு அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
"தேஷ் குட்டிக்கு என்னவாம்? அப்பா ஞாபகம்?" அத்தனை கனிவு ருதுவின் குரலில். வெங்கட் இந்த ருதுவை ஆச்சரியமாக ஏறிட்டான்.
"தேஷ் குட்டி சேடா (sad) இருக்காங்க." குழந்தை உதட்டை சுளித்துக் கூறியது.
"அடடா... ஏன்? பாட்டி குட்டிக்கு கேண்டி தரமாட்டேன் சொன்னாங்களா?" என்று மென் குரலில் வினவிய ருது, "நான் தர சொல்றேன் ஓகேவா?" என்றான்.
"கேண்டி தேஷ்க்கு வேணாம். இனியா மாமா சாப்பிடக் கூடாது சொல்லியிருக்காங்க! நான் மாமாக்கு பிராமிஸ் பண்ணியிருக்கேன்" என்றான் தேஷ்.
"வேறென்னவாம்?"
"இன்னைக்கு நான் ஸ்கூல் போனேன்." குழந்தை முறுக்கிக் கொண்டான்.
"அச்சோ" என்று சத்தமில்லாமல் நெற்றியில் தட்டிக்கொண்ட ருது,
"சாரிடாம்மா. அப்பாக்கு வொர்க் டென்சன். மறந்துட்டேன்" என்று உடனடியாக மன்னிப்பு வேண்டி, "குட்டி ஆக்டிவிட்டிஸ்லாம் நல்லா பண்ணியிருப்பீங்களே! குட்டிக்கு அட்மிஷன் கிடைச்சிருச்சா?" எனக் கேட்டான்.
குழந்தையிடம் பதிலில்லை.
"சரி பாட்டிக்கிட்ட கொடுங்க. நான் கேட்டுக்கிறேன்" என்று ருது சொல்ல, "பாட்டிக்கு நான் ஏன் சேடா இருக்கேன் தெரியாது. இது ருதுக்கும், தேஷ்க்கு மட்டும் தான் தெரியும்" என்றான் தேஷ்.
"அப்பாக்கு என்னன்னு தெரியலையே" என்ற ருது, "நீங்களே சொல்லுங்க. அப்பா அது என்னவா இருந்தாலும் சரிபன்றேன்" என்றான்.
"நிஜமா?" தேஷ் உற்சாகமாகியிருந்தான். நொடியில்.
"ஐ ஸ்வேர் பேபி."
"உண்மையாவா?"
"அப்பா சொன்னால் செய்வேன்ல?"
"தேஷ்க்கு அம்மா வேணும்."
ருதுவின் இதயம் நின்று துடித்தது. இந்த வயதிலும் அம்மா இல்லாத வலி அவனை வதைக்கும்போது பிஞ்சுவின் மனம் எத்தனை வேதனை கொள்ளுமென அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
"தேஷ் இன்னைக்கு ஸ்கூலில் அம்மா பார்த்தேன். என்னை பார்த்து சிரிச்சாங்க. ஹேண்ட் ஷேக் செய்தாங்க. வெரி ஸ்மார்ட் சொன்னாங்கப்பா. அம்மா கூடவே இருக்கணும் தோணுதுப்பா. கூட்டிட்டு வறீங்களா?"
குழந்தையின் வார்த்தையில் ருது நொறுங்கிவிட்டான். வார்த்தையின்றி தடுமாறினான்.
"பேபி..."
"நான் யாருன்னு அம்மாகிட்ட சொல்லலப்பா. நீங்க தான் பார்த்தாலும் கூப்பிடக்கூடாது சொல்லியிருக்கீங்களே" என்ற தேஷ் விம்மலை அடக்கி பேசுவது அவனது குரலில் தெரிந்தது.
இன்று தேஷ்ஷிற்கு பள்ளியில் நேர்காணல். ருதுவிற்கு காவல்நிலையத்தில் வேலை இருந்ததால், குழந்தையுடன் வேங்கடமும், அம்பிகாவும் தான் சென்றிருந்தனர்.
முதலில் விண்ணப்பம் சரி பார்த்து, அடையாள படிவங்கள், மற்ற சான்றிதழ்கள் சரி பார்த்து இரு பிரிவையும் கடந்து மூன்றாவதாக குழந்தையின் பயிற்சி திறனை பரிசோதிக்கும் பிரிவில் இமையாள் அமர்ந்திருந்தாள்.
இரண்டு பிரிவுகளையும் கடக்கும் வரையிலும் கூட தேஷ்ஷின் பார்வை இமையாள் மீது. அவளிடம் செல்வதற்குள் தேஷ்ஷின் மனதில் அதுவரை அன்னையை பற்றி இல்லாத ஏக்கம் அதீதம் கொண்டது.
ருது அன்னையாக இமையாளின் புகைப்படத்தைதான் தேஷ்ஷிடம் காண்பித்திருக்கிறான். அவனால் பெயரளவில் கூட வேறு ஒன்றை சொல்ல விருப்பமில்லை. மகனாக மாற்றம் கொண்டுள்ள உறவிடம் தங்களது அன்னையின் பெயரையோ உருவத்தையோ காண்பித்து அவனத்து பிறப்பின் ரகசியம் பேசப்பட துளியும் எண்ணமில்லாத ருது தான் அப்பா என்றால் தன்னவளே அவனுக்கு அன்னை எனும் விதத்தில் இமையாளை அன்னையாக அடையாளப்படுத்தியிருந்தான்.
சென்னை செல்கிறோம் என்றதும், தேஷ்ஷிடம் அம்மாவை நேரில் பார்த்தாலும் காட்டிக்கொள்ளக்கூடாது என்பது ருதுவின் ஆணையாக இருந்தது. அவளுக்கென ஒரு வாழ்வு அமைந்திருப்பின் அதனை தாங்கள் கெடுத்ததுப்போல் ஆகிவிடக்கூடாது எனும் எண்ணத்தில் அவ்வாறு சொல்லியிருந்தான்.
தந்தையின் சொல்லை மீறிடாத குழந்தையாகவே தேஷ் இன்று நடந்து கொண்டிருக்கிறான்.
இமையாளிடம் சென்று அமர்ந்து தேஷ், மகனாக அன்னையிடம் பாராட்டு பெற்றிட வேண்டுமென்றே, இமையாள் கொடுத்த பயிற்சிகள் அனைத்தையும் வேகமாகவும் சிறப்பாகவும் செய்து அவளிடம் கைதட்டலையும் பெற்றான். அந்நேரம் தேஷ் கொண்ட மகிழ்வு, அவன் முகம் காட்டிய ஏக்கப் புன்னகை விவரித்திட வார்த்தைகள் இல்லை.
தேஷ் தனக்கு அட்மிஷன் கிடைத்துவிட்டது என்றதும்,
"என் கிளாஸ்க்கு நீங்க வருவீங்களா?" எனக் கேட்டிருந்தான். அந்நொடி ஒரு சேயாக அன்னையுடன் இருக்க வேண்டுமென்ற அவனின் தவிப்பு, இந்த பிஞ்சிலே அவன் அனுபவிப்பதாய்.
குழந்தை திக்கித் திணறி ருதுவிடம் அனைத்தையும் விவரித்திட, ருது வெளியிலும் உடைந்துவிட்டான். கண்கள் பனிக்க உறைந்திருந்தான்.
வெங்கட் என்னவென்று தெரியாது பதறியவனாக அருகில் வர, வேகமாக கண்களை துடைத்து, "நத்திங்" என மெல்ல உதடசைத்தான்.
"குட்டி..."
"சாரிப்பா... கஷ்டப்படுத்திட்டேனா ருதுப்பாவை!"
எப்போதும், அன்பை காட்டும் நேரங்களில் கூட கர்ஜனையாக ஒலிக்கும் தந்தையின் குரல் இன்று அடங்கி ஒலித்திட, அந்த தளிருக்கு என்ன புரிந்ததோ தந்தையை வருத்திவிட்டோமென வருத்தம் கொண்டு வினவியது.
"இல்லைடாம்மா. இல்லை பேபி" என்ற ருது, "அப்பா வீட்டுக்கு வரேன்" என்றான்.
"ருதுக்கு வொர்க் இல்லையா?"
குழந்தையின் புரிதலில் நெஞ்சம் சிதறி கலங்கினான்.
"நவ் அம் ஓகே ருது. நீங்க வொர்க் முடிச்சிட்டு வாங்க" என்று தேஷ் வைத்ததும், இருக்கையில் பின் சாய்ந்து விட்டத்தை வெறித்தான் ருது.
ருதுவின் கண்ணின் ஓரம் ஈரம். கண்ணீர் கசிந்தது. காதுமடல் சில்லிப்பை உணர்ந்ததும், நிமிர்ந்து அமர்ந்தான்.
ஷிவன்யாவுக்கு அழைத்து தேஷ் உடன் நேரத்தை செலவழிக்குமாறு சொல்லி வைத்திட்டான்.
"என்ன விடயம் வெங்கட்?" உணர்வுகளை நொடியில் அடக்கியிருந்தான்.
"சார் நீங்க... அண்ணா ஓகே தானே நீங்க?" ருதுவை இப்படி அவன் பார்த்ததே இல்லையே. தடுமாறினான்.
"ஹேய் மேன். அம் ஓகே! என்னன்னு சொல்லுங்க" என்றான் ருது.
"ஒரு கம்ப்ளைண்ட் சார்" என்று வெங்கட் சொல்லியதில், "வாட்?" என அதிர்ந்தவனாக ருது இருக்கையை விட்டு எழுந்துவிட்டான்.
"என்னாச்சு சார்? உங்களுக்கு வேண்டியவரா?"
"மே பீ" என்ற ருது, கிருஷ்ணன் மற்றும் வெங்கட்டுடன் அங்கு விரைந்தான்.
அரசு வங்கி அது. கணக்கு வைத்திருக்கும் பல பேர் அங்கு கூடியிருந்தனர்.
காவல் துறை வண்டியை கண்டதும் ருதுவை இறங்கவிடாது சூழ்ந்துவிட்டனர்.
"அரெஸ்ட் பண்ணியே ஆகணும்" என்று ஆளாளுக்கு கத்தினர்.
"அவர் எங்கேன்னு பாருங்க!" ருது சொல்லிட கிருஷ்ணன் வங்கிக்குள் சென்று பார்த்தார்.
தலையை தொங்கப்போட்டபடி சுரேந்தர் அமர்ந்திருந்தார். ஆடை கசங்கி, தலை கலைந்து. பார்த்ததும் தோற்றத்தில் தெரிந்தது, மக்கள் அவரை அடித்திருக்கின்றனர் என்று.
"உள்ள தான் இருக்கார் சார். அடிச்சிருப்பாங்க போல" என்றி வந்தார் கிருஷ்ணன்.
"மக்களோட பணத்தை கொள்ளையடித்தால், அடிக்காமல் என்ன செய்வாங்க" என்று கத்திய கூட்டத்தினர், "கைது செய்து எங்களுக்கு என்னன்னு பதில் சொல்லுங்க சார். ஆளாளுக்கு கொஞ்சமென்றாலும் மொத்தம் பல கோடி வருதே" என்றனர்.
ருதுவிற்கு இவர்களை கடந்து சுரேந்தரிடம் நடந்ததை கேட்பதே பெரிய விடயமாகத் தோன்றியது. அரசு வங்கியில் மோசடி என்பதால், ஊடங்கங்களும் நிரம்பிவிட்டன. ருதுவிற்கு தற்போது கைது செய்வதைத்தவிர தற்போது வேறு வழியில்லை.
ருதுவிற்கு நன்கு தெரியும் சுரேந்தர் ஒருபோதும் இப்படி செய்யும் ஆளில்லை. ஆனாலும் சூழல் அவருக்கு எதிராக இருக்கிறதே! நேர்மையாக நடந்துகொள்ளவே முயற்சித்தான். சுரேந்தரிடம் பேசினால் தான் தவறு எங்கென கண்டறிந்திட முடியும். சரியான குற்றவாளியை பிடித்திட முடியும்.
சில நொடிகள் சிந்தித்தவன், இனியனுக்கு அழைத்தான். அலைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வர, அவன் விமானத்தில் சென்று கொண்டிருக்க கூடுமென யூகித்தவன்,
"அவரை அழைச்சிட்டு வாங்க வெங்கட்" என்று வண்டியை விட்டு இறங்கி நின்றான்.
"அவர் மேல கை வைக்கக்கூடாது" என்று வெங்கட்டிற்கு மட்டும் கேட்கும் வகையில் கூறினான்.
எதற்கு அவருக்கு இந்த கரிசனம் என்று வெங்கட்டிற்கு புரியவில்லை. உள்ளே சென்று சுரேந்தரை அழைத்துவர, மீண்டும் மக்கள் அவரை அடிக்க பாய்ந்திட, சடுதியில் நடுவில் புகுந்து தடுத்திருந்தான் ருது.
"கைது பண்ணியாச்சுல. கலைந்து போங்க. உங்களுக்கு என்ன செட்டில்மெண்ட்டோ அதை என்னன்னு பார்த்து வங்கி நிர்வாகம் செய்யும்" என்று உறுமலாய் மொழிந்தவன், அரணாக அழைத்து வந்து வண்டியில் ஏற்றியிருந்தான்.
சுரேந்தருக்கு ருது யாரென்று தெரியவில்லை. இருக்கும் சூழலில் தன்மீது கோபத்தை காட்ட வேண்டியவன் ஏன் பாதுகாக்கிறான் என்றும் புரியவில்லை.
ருது ஊடகவியலாளர்களையும் புகைப்படம் எடுக்கவிடாது தடுத்திருந்தான்.
காவல் நிலையம் அழைத்து வந்த ருது சுரேந்தரை செல்லுக்குள் விடாது, அங்கிருந்த இருக்கையில் அமர்த்தினான்.
"மல்லிக்காக்கா தண்ணி கொடுங்க" என்றான்.
மல்லிகா நீர் கொண்டு வந்து கொடுக்க அமைதியாக வாங்கி பருகினார் சுரேந்தர்.
"நடந்தது என்னன்னு சொல்லுங்க?" எனக் கேட்டான் ருது. வெங்கட்டிற்கு பதிவு செய்யுமாறு கண்காட்டினான்.
சுரேந்தர் மீது தவறு இல்லாத நிலையில் அனைத்து ஆதாரங்களும் முக்கியமானவை. அப்போது தான் அவரை முறையாக இதிலிருந்து வெளிக்கொண்டுவர முடியும். அதற்காகவே பதிவு செய்திடக் கூறினான்.
"சாருக்கு தெரிந்தவரோ?" வெங்கட் இழுத்திட...
"இருங்க கேட்டு சொல்றேன்" என்ற கிருஷ்ணனை பார்த்து முறைத்து வைத்தான் வெங்கட்.
"முறைத்தது போதும். ரெக்கார்ட் பண்றதை செய்யுங்க" என்றார் கனகா.
"எல்லாருக்கும் வாய் கூடிப்போச்சு" என்ற வெங்கட், "அவரை முதலில் பேச சொல்லுங்க" என்றான்.
"கீப் கொய்ட்." ருது பாராது சொல்லிய குரலில் அனைவரும் கப்சிப்.
சுரேந்தர் மௌனமாக இருந்திட...
"உங்க மீது தவறு இல்லையெனும் பட்சத்தில் உண்மையை சொல்ல என்ன தயக்கம்?" எனக்கேட்டு அவரை பேச வைத்தான் ருது.
சுரேந்தர் அரசு வங்கியில் மேலாளராக பணி புரிகிறார். மிகவும் நேர்மையானவர். இன்று வரை அப்படித்தான். இப்போது நடந்திருப்பதில் அவரது நேர்மையே கேள்விக்குறியாக உள்ளது.
"லோன் வாங்குற யாரும் முறையாக தவணை செலுத்துவதில்லை சார். அதனால் வருடாந்திர கணக்குகள் சரிவர முடிக்க முடியாததால் மேலிடத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலை" என்று சுரேந்தர் நிறுத்திட...
"எந்த மாதிரி லோன்?" எனக் கேட்டான் ருது.
"கல்வி, விவசாயக் கடன் அப்பப்போ அரசாங்கமே தள்ளுபடி செய்திடும் அதில் பிரச்சினை இருக்காது. மற்ற கடன்கள் தான் பிரச்சினை. அதிலும் குறிப்பா தொழில் கடன், வீட்டு கடன். தொழில், வீடு ரெண்டுமே ரொம்ப முக்கியம்ங்கிறதால , நிறைய பேர் அதைத்தான் வாங்குவாங்க. திருப்பி செலுத்த வேண்டிய நேரம் எதாவது காரணம் சொல்லுவாங்க. ஒரு அளவுக்கு மேல் நம்மளாலும் அவங்ககிட்ட கண்டிப்பை காட்ட முடியாது. இந்த சூழலில் தான், கவர்மெண்ட் கடனை வசூலிக்க தனியார் ஏஜென்ட்க்களுடன் டை அப் வைத்தது. இது கலெக்டர் பார்வையில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கு தான் பிரச்சினை" என்றவர் மேலும் தொடர்ந்தார்.
"அவங்க டார்கெட் இத்தனை நாட்களில் இவ்வளவு பேர் அப்படின்னு பேங்கிலிருந்து டீடெயில்ஸ் வாங்கி முதல் இரண்டு மாதங்கள் சரியாகத்தான் செய்தனர். அவர்களுக்கு சேர வேண்டிய தொகையை எடுத்துக்கொண்டு வங்கிக்கு வரவேண்டியதை சரியாக கொடுத்தனர். அடுத்து ஆறு மாதம் அவங்களிடமிருந்து எந்த வரவுமில்லை. என்னன்னு கேட்டதற்கு மொத்தமா முடித்துக் கொடுக்கிறோம் சொன்னாங்க. அப்போதும் விடாது மேலிடம் மூலமா அவர்களை தொடர்புகொள்ள, மேலிடமும் அவர்களுக்குத்தான் சப்போர்ட் செய்தது. இன்று பார்த்தால் கடன் வாங்கிய பெரும்பாலனோர் வங்கிக்கு வந்து நாங்கள் வாங்கிய கடன் தொகையெல்லாம் செலுத்தியாச்சு வங்கி கடன் கணக்கை க்ளோஸ் செய்யணும் சொல்றாங்க. ஒன்னும் புரியல. யோசித்து அனைத்தும் செக் செய்தப்போதான் தெரிந்தது, கடன் பணத்தையெல்லாம் பெற்றுக்கொண்ட அந்த நிறுவனம், அனைவரிடமும் ஒன்றுபோல் இன்றைய தேதியை சொல்லி, வங்கிக்கு வரவழைத்திருக்கின்றனர். வங்கியின் மேலாளர் எனும் முறையில் நான்தான் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகக் சொல்றாங்க" என்றார்.
ருதுவிற்கு உண்மை நிலவரம் புரிந்தது.
'இதனை வாய் வார்த்தையாக சொன்னால் யாரும் நம்பமாட்டங்க' என நினைத்த ருது,
"அந்த நிறுவனத்தின் ஆள் பிடிபட்டால் தான்... அதாவது உண்மையான குற்றவாளி யாருன்னு தெரிந்தால் தான் நீங்க வெளிவர முடியும்" என்றான்.
அது சுரேந்தருக்குமே தெரிந்திருந்தது.
"அந்த நிறுவனம் பற்றி முழு தகவல் வேணும் வெங்கட்" என்றான்.
வெங்கட் கிருஷ்ணனுடன் புறப்பட்டிருந்தான்.
ருது யோசனையாக நடந்து கொண்டிருக்க...
"சார் எப்.ஐ.ஆர் ரிப்போர்ட்" என்று பக்கம் வந்தார் மல்லிகா.
"நான் சொல்றேன் க்கா" என்ற ருது தற்போதைக்கு எழுத வேண்டாமென சைகை செய்தான்.
விடயமறிந்து இமையாளும், தீபாவும் அங்கு வந்தனர். தீபா வெளிப்படையாக கண்ணீர் விட, இமையாள் அழுகையை அடக்குவது அவளின் சிவந்த கண்களின் தடத்தில் தெரிந்தது.
"அப்பா."
"என்னங்க."
இருவரும் சுரேந்தரின் அருகில் செல்ல,
"நீங்க ஏன் இங்க வந்தீங்க?" என்று கடிந்துகொண்டார் சுரேந்தர்.
"வக்கீல் ப்பா" என்ற இமையாள், அங்கிருந்த காவலர்களை பார்க்க.
"சார் உள்ள இருக்காங்க" என்று பதில் கொடுத்தார் கனகா. ருது எந்தவொரு குற்றவாளிக்கும் கொடுத்திடாத சலுகையை சுரேந்திருக்கு காட்டிட, ருதுவுக்கு வேண்டியவரோ என இமையாளுக்கு பதில் அளித்திருந்தார்.
"நீங்க இருங்க. நான் பேசிட்டு வரேன்" என்று ருதுவின் அறைக்குள் அனுமதி பெற்று வக்கீல் செல்ல, அவரின் பின்னே ஆய்வாளர் தங்கய்யா எவ்வித அனுமதியின்றி உள்ளே நுழைந்தார்.
வக்கீலிடம் முறையான தகவல் கொடுத்த ருது FIR எழுதவில்லை என்பதை சொல்லவில்லை.
அவர் ஜாமீனில் எடுக்கிறோம் என்று சொல்லிட, முடியாதென மறுத்துவிட்டான் ருது.
ருது பேசிக்கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாது இடை புகுந்த தங்கய்யா,
"என் ஏரியா கேஸ் நீங்க எப்படி சார் கொண்டுவரலாம்?" எனக் கேட்டார். அத்தனை தெனாவட்டு அவரின் பேச்சிலும் பார்வையிலும்.
'சாதாரண இன்ஸ்பெக்டர் தானே இவர்' என வக்கீல் யோசித்து முடிக்குமுன்,
"சரியான நேரத்துக்கு நீங்க ஸ்பாட்டுக்கு போயிருந்தால் எனக்கு வேலையே இருந்திருக்காதே மிஸ்டர் தங்கய்யா" என்ற ருது, "நீங்களே என் கண்ட்ரோலில் தான் வறீங்க. நான் கொடுக்கும் வழக்கை நீங்க பார்த்தால் போதும்" என்றான் நிமிர்ந்து நின்று.
"சார் இந்த கேஸ் டீல் பண்ண சொல்லி கலெக்டர் ஆர்டர் சார்" என்றார் தங்கய்யா.
'ஆடு சிக்கிடுச்சு' என நினைத்த ருது,
"அச்சோ பயந்துட்டேன்" என்று போலி பவ்யம் காட்டி, "டூ வாட் ஐ செட்" என்றிருந்தான்.
"சார்..."
"மேலதிகாரியோட ஆர்டரை ஒபே பண்ணலன்னு உங்களுக்கு மெமோ கொடுக்கட்டுமா?" ருது அவ்வாறு கேட்டது தான் தங்கய்யா தானாக வெளியேறியிருந்தார்
"பெரிய இடமெல்லாம் மாட்டும் போலிருக்கே வக்கீல் சார். இப்போ இவர் உள்ளே இருப்பதுதான் பாதுகாப்பு" என்றான்.
"அவங்க வீட்டில்" என்று வக்கீல் இழுக்க...
"கவர்மெண்ட் சம்மந்தப்பட்ட கேஸ். நான் பெயிலபில் சொல்லுங்க சார்" என்றான் ருது.
ருது மற்ற அதிகாரிகள் போலில்லாது தன்மையாக பேசியதிலே அவன் சுரேந்தரை மீட்கவே நினைக்கிறான் என புரிந்து வெளியேறினார்.
"சார் அப்பா" என்று இமையாள் முன்வர,
"இப்போதைக்கு உங்கப்பா தான் குற்றவாளிம்மா. வெளியில் எடுத்து கஷ்டம்" என்று அங்கிருந்து சென்றிருந்தார்.
இமையாளும், தீபாவும் செல்லாது சுரேந்தரின் அருகிலே நின்றபடி அழுது கொண்டிருக்க, பார்க்க பார்க்க ருதுவுக்கு தவிப்பாக இருந்தது.
தன்னவள் அழுது பார்க்கிறான். நெஞ்சமெல்லாம் பாரம் ஏறும் உணர்வு.
"ம்ப்ச்... எதுக்கு இப்படி அழுகிறாள்" என நெற்றியை தேய்த்தவன், வேகமாக வந்து நின்று...
"இதென்ன உங்க வீடா? வெளியில் போங்க" என்று கடிந்தான்.
"க்ளியர் திஸ் நான்சென்ஸ்" என்று கனகாவிடம் கோபம் கொண்டான்.
ருதுவை கண்டதும் இமையாளின் அழுகை நின்று கோபம் முன் வந்திருந்தது.
"நைட் ஆகிருச்சு. இங்க நிற்கக்கூடாதும்மா வெளியில் போங்க" என்று கனகா சொல்ல, சுரேந்தரும் செல்லுமாறு கூறிட வேறு வழியின்றி இருவரும் வெளியேறினர்.
ருது தன்னை முறைத்தபடி வெளியேறும் தன்னவளின் கோபத்தை சளைக்காது ஏற்று நின்றான்.
Last edited: