அத்தியாயம் 13
குளித்துவிட்டு அரைக்கால் ட்ரவுசருடன் அவனை விட ஒரு மடங்கு பெரியதாக இருக்கும் சிங்லெட் ஒன்றும் போட்டுகொண்டு வெகு இயல்பாய் மாடிப்படியில் இறங்கி வந்துக்கொண்டிருந்த தானவீரனுக்கு வெறிச்சோடி கிடந்த முன்னறை தான் கண்ணில் பட்டது.
அவன் சாவகாசமாக குளித்து முடித்து வருவதற்குள் தருண் கிளம்பியிருக்க கிருஷ்ணகுமாரும் சேகரும் கூட இரவு உணவை முடித்துக்கொண்டு ஏதோ அலுவலக விடயங்களை கலந்துரையாட வீட்டின் கீழ் தளத்திலேயே அமைக்கப்பட்டிருந்த அலுவலக அறைக்குள் நுழைந்துகொண்டனர்.
ஜெயலக்ஷ்மியும் கூட ராமாயணம் அல்லது ஸ்ரீமத் பாகவதம் என்று ஏதோ ஒரு பக்தி காவியத்தை கையில் எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்துவிட்டிருக்க முன்னறை காலியாக இருந்தது.
ஜெயலக்ஷ்மி படிப்பதெல்லாம் பக்தியும் அதை சார்ந்த விடயங்களாயினும் அது பேச்சிலும் செயலிலும் பிரதிபலிக்காமல் போவது தான் ஆச்சரியம்.
தானவீரன் அதை மேற்கோள் காட்டி அடிக்கடி அவரை கிண்டல் செய்வதும் அந்த வீட்டில் வழக்கமான ஒன்று தான். ஆனால், அவன் அந்த வீட்டின் செல்லக் கண்ணன் என்பதால் யாரும் அதை பெரியதாக எடுத்துக்கொள்வதுமில்லை.
விசிலடித்துக்கொண்டே மாடியிலிருந்து இறங்கி வந்தவன் நேரே சமையல்கட்டிற்குள் நுழைந்திருந்தான்.
அங்கே சரோஜினி வழக்கம் போல வேலை பார்த்துக்கொண்டிருக்க "என்ன அத்தை நீங்க மட்டும் சமையல் கட்டை விட்டு வெளியவே வரமாட்டிங்களா?" என்று பின்னிருந்து அவரின் தோள்களை பற்றி மெலிதாக அழுத்தம் கொடுத்து அவரின் தலையில் மென்மையாக முட்டியவன் பின் அவருக்கு அருகேயே சமையல்கட்டின் மீது ஏறி அமர்ந்துகொண்டான்.
தனக்கு பிறந்தது இரண்டும் பெண் பிள்ளைகளாதலால் அவன் மீது சரோஜினிக்கு அலாதி பிரியம். பெற்ற மகனாகவே அவன் மீது அவர் பாசத்தை பொழிவார் என்றால் அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அவனும் அவரிடம் அன்பு காட்டுவான். சொல்லப் போனால் அவனை ஈன்ற தாய் ஈஸ்வரியை விட அவனுக்கு சரோஜினியிடம் தான் ஒட்டுதல் அதிகம்.
"எங்க எல்லாரும்? வீடே அமைதியா இருக்கே?" என்றான்.
"வழக்கம் போல தான். டின்னர் சாப்பிட்டதும் எல்லாரும் அவங்கவங்க வேலையை பார்க்க அறைக்குள்ள நுழைஞ்சிட்டாங்க" என்றார் சரோஜினி
"அது சரி...கோழி எல்லாம் ரூமுக்குள்ள அடைஞ்சாச்சா. இனி விடிஞ்சு சேவல் கூவின பின்னாடி தான் வெளியில் வரும்" என்று சொல்லிக்கொண்டே கையை நீட்டி சரோஜினியை தாண்டி சற்று தள்ளி வைக்கப்பட்டிருந்த எவர் சில்வர் டப்பா ஒன்றை எட்டி எடுக்க அவன் முயற்சி செய்ய அவன் சொல்லியதை கேட்டு வாய்விட்டு சிரித்த சரோஜினியே அவனின் தேவை உணர்ந்து அந்த டப்பாவை எடுத்து அவன் கையில் திணித்தார்.
அதை திறந்து அதில் போட்டு வைக்கப்பட்டிருந்த வறுத்த நிலக்கடலையை ஒவ்வொன்றாக எடுத்து மேலே போட்டு வாயில் பிடித்தபடி அவன் அதை ரசித்து உண்டுகொண்டிருக்க சரியாக அந்நேரம் பார்த்து சமையல் கட்டிற்குள் நுழைந்தார் ஈஸ்வரி.
தானவீரனும் சரோஜினியும் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை ஒரு வித வன்மத்துடன் பார்த்துக்கொண்டே நீரை ஒரு டம்ளரில் ஊற்றி பருகிக்கொண்டிருந்தார்.
"டேய், இதையே சாப்பிட்டு வயிற்றை நிறைக்கலாம்னு இருக்கியா. நீ இன்னும் சாப்பிடல தானே? இன்னிக்கு சப்பாத்தி தான் பண்ணேன். உனக்கு தான் பிடிக்காதே. தோசை வேணும்னா ஊத்தி கொடுக்கட்டுமா?" என்று அவனது விருப்பம் அறிந்து கேட்டார் சரோஜினி.
"ம்கூம்...இப்போ தான் நான் சாப்பிடலைன்னு நினைவு வருதா உங்களுக்கு. அதானே புது மருமகனை பார்த்ததும் என்னை மறந்தாச்சு" என்று புருவங்களை வேக வேகமாக ஏற்றி இறக்கி இதழ்களுக்கு மறைத்த புன்னகையுடன் அவன் சரோஜினியை வம்புக்கிழுத்தான்.
எல்லோரையும் வம்பு பண்ணி கலகலக்கும் அவனது இயல்பு தெரிந்தவராகையால் அவனது கேலியை புரிந்துக்கொண்ட அவரும் "டேய்..." என்று அவனை மிரட்டுவது போல் செய்கை செய்ய அவனும் கலகலவென சிரித்தான்.
அதை பார்க்கப் பார்க்க ஈஸ்வரிக்கு பற்றிக்கொண்டுதான் வந்தது. அவருக்கு தருண் மற்றும் வைஷாலியின் திருமணத்தில் கொஞ்சமும் விருப்பமில்லை.
தானவீரனுக்கு வைஷாலிதான் மனைவி என்று மிக உறுதியாக அவர் மனக்கோட்டை கட்டிவைத்திருந்தார்.
தனக்கென்று வேலை வெட்டி என்று எதுவும் ஏற்பாடு செய்துக்கொள்ளாமல் பொறுப்பின்றி சுற்றும் தன் மகனுக்கு அண்ணனிடம் சென்று பெண் கேட்கும் அளவிற்கு தைரியமும் இல்லாமல் இருக்க அவன் ஒரு வேலையில் அமரும் வரைக்கும் கொஞ்சம் பொறுத்திருக்கவே நினைத்திருந்தார்.
வீட்டிற்குள்ளேயே முறை பையன் என்று அவன் இருக்க, அதுவும் அவன் என்றால் குடும்பத்தில் அனைவருக்கும் கொள்ளை விருப்பம் என்பதும் சேர்ந்துக்கொள்ள அவனை விடுத்து வெளியில் மாப்பிள்ளை தேடமாட்டார்கள் என்றும் நம்பிக்கொண்டிருந்தார்.
வைஷாலிக்கு கல்யாணம் என்ற பேச்சு வந்தால் மாப்பிள்ளை வரிசையில் முதல் தேர்வாக தானவீரன் தான் இருப்பான், அதை வைத்து வீட்டோடு மாப்பிள்ளை என்று இருக்கும் அவரின் கணவரின் அந்தஸ்து அந்த வீட்டு சம்மந்தியாக உயர்ந்துவிடும் என்று அவர் மனப்பால் குடித்துக்கொண்டிருக்க திடிரென்று வைஷாலியின் வாழ்வில் தருணின் பிரசன்னம் ஈஸ்வரியை பொறுத்தவரையில் பேரிடியாக தான் அமைந்தது.
குடும்பத் தொழிலில் கொடிக்கட்டி பறக்கும் இளம் தொழிலதிபர் என்னும் அந்தஸ்துடையவன் கைநிறைய சம்பாத்தியதோடு வந்து நிற்க அவனை மறுத்து சுய சம்பாத்தியம் இல்லாத தன் பிள்ளைக்கு அவரும் என்னவென்று சொல்லி பெண் கேட்க முடியும்.
இருந்தும் சேகரிடம் இதை பற்றி பேசியும் பார்த்தார்.
"தருண் பொறுப்பான பையன். பிசினெஸ் எல்லாம் அத்துப்படி. திறமையானவன். அவன் வந்து நம்ம பொண்ணை கட்டிக்குறேன்னு கேட்கும் போது பொறுப்பே இல்லாமல் சுத்துற என் புள்ளைக்கு பொண்ணை கொடுங்கன்னு வெறும் உறவு முறையை மட்டும் வச்சிட்டு என்னால பேச முடியாது. நீயும் தேவை இல்லாமல் ஏதும் பேசி குழப்பம் பண்ணாமல் இரு. அதுதான் நமக்கு மரியாதை" என்று ஈஸ்வரியின் மனதில் ஓடிக்கொண்டிருந்ததை தான் சேகரும் வாய் வார்த்தையாக சொல்லி அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
கணவரின் பேச்சின்படி இப்போதுவரை அமைதிக்காத்து வந்தாலும் தருண் மற்றும் வைஷாலியின் திருமண நாள் நெருங்க நெருங்க அவரால் அந்த விடயத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. அதிலும் இன்று தானவீரனுடன் கிளம்பி சென்ற வைஷாலி தருணுடன் வீட்டிற்கு வந்ததை பார்க்கையில் அவருக்கு இன்னுமே ஆத்திரம் பெருகியது.
அப்படியென்ன அந்த தருணை விட தன் மகன் தாழ்ந்து போய்விட்டான் என்ற எண்ணம் வேறு அவர் மனதில் நஞ்சாய் பரவத்தொடங்கியிருக்க அந்த கடுப்பில் "ஆமாமா, புதுசு வந்தா பழசை மறக்கத்தானே வேணும்" என்றார் குத்தலாக.
"அம்மா, நானும் அத்தையும் தானே பேசிட்டிருக்கோம். இப்போ எதுக்கு தேவையில்லாமல் நீங்க நடுவுல வரீங்க?” என்று கேட்டான்.
"நான் ஒன்னும் தப்பா சொல்லலையே. உண்மைய தானேடா சொல்லுறேன். அவங்க பொண்ணுங்களுக்கு ட்ரைவர் வேலை பார்க்கறதுக்கு நீ வேணும். அவளுங்க ஷாப்பிங் போக பாடிகார்ட்டா (bodyguard) நீ வேணும். ஆனால், கல்யாணம்னு வந்தா மட்டும் நீ அவங்களுக்கு தேவைப்பட மாட்ட. நல்ல பணக்காரனா எவனாவது வந்துட்டான்னா ஒரு பேச்சுக்கு கூட முறை பையன்னு நீ ஒருத்தன் இருக்கியேன்னு அவங்க நினைவுல கூட இருக்காது. வேலை வெட்டி இல்லாதவன்னு ஒதுக்கி வச்சுடுவாங்க" என்று மனதில் இதுநாள் வரை சேர்த்து வைத்த சினத்தை எல்லாம் குரலில் காட்டி சொன்னார் ஈஸ்வரி.
அவரின் பேச்சில் ஒரு நொடி திகைத்துப்போனார் சரோஜினி.
"அப்படியெல்லாம் அவனை ஒதுக்கி வைக்கல ஈஸ்வரி. ஏன் இப்படி எல்லாம் பேசுற?" குரல் தழுதழுக்க சொன்னார் அவர்.
ஈஸ்வரியின் குற்றச்சாட்டில் சரோஜினியின் விழிகள் கலங்கியே விட்டன. ஏனென்றால், நிஜமாகவே அவர்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் இதுவரை உதித்ததே கிடையாதே.
குழந்தையிலிருந்தே வைஷாலி மற்றும் மதுவுடன் சேர்ந்து தானவீரனும் ஒன்றாக வளர்ந்ததால் அவர்கள் மூவரையும் தனது குழந்தைகளாகவே பார்த்துவிட்டதாலோ என்னவோ கிருஷ்ணகுமாருக்கும் சரி சரோஜினிக்கும் சரி அப்படி ஒரு எண்ணம் வந்ததேயில்லை. அந்த கோணத்தில் அவர்களை பார்த்ததுமில்லை.
இப்பொழுது ஈஸ்வரி வாயை திறந்த பின்னாடியே சரோஜினிக்கும் அது உறுத்தியது. ஈஸ்வரியின் ஆசையை விட தானவீரனுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருந்திருக்குமோ என்று யோசிக்கும் போது தான் அவருக்கு உள்ளம் பதறியது.
அப்படி மட்டும் இருந்திருந்தால் இந்த திருமண ஏற்பாடுகள் எல்லாம் அவனுக்கு எத்தனை வேதனைகளை கொடுக்கக் கூடும். அதிலும் கிருஷ்ணகுமாரும் சேகரும் தொழிலில் பரபரப்பாக இருந்துக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் பெரும்பாலான கல்யாண வேலைகளை எல்லாம் அவன் தானே பார்த்துக்கொண்டிருக்கிறான்.
மனதில் அத்தனை ரணங்களையும் மறைத்துக்கொண்டு செய்கிறானோ என்று யோசித்தவரின் பார்வை இப்பொழுது தானவீரனில் ஆராய்ச்சியாக படிந்தது.
அவரின் பார்வையும் கலங்கிய அவரது விழிகளும் அவனது மனதையும் கலங்கடிக்க "அம்மா..." என்று பற்களை கடித்தபடி தான் அமர்ந்திருந்த சமையல் கட்டிலிருந்து கீழே இறங்கி நின்ற தானவீரனின் உடல் மொழியே அவன் சினத்தை பறைசாற்றியது.
ஆனால், ஈஸ்வரி அந்த விடயத்தை விடுவதாக இல்லை. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சரோஜினியை வறுத்தெடுக்க தொடங்கியிருந்தார்.
"அப்போ இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் அண்ணி? உங்க கண் முன்ன வளர்ந்த என் பிள்ளையை விட எவனோ ஒரு பணக்காரன் தானே உங்க பொண்ணுக்கு பொருத்தமுன்னு தேர்ந்தெடுத்திருக்கிங்க?" என்று அவர் மீண்டும் சரோஜினியை குற்றவுணர்வுக்குள் தள்ளிவிட எத்தனித்தார்.
"என்ன ஈஸ்வரி உன் பிள்ளை என் பிள்ளைன்னு பிரிச்சு பேசுற. என்னிக்காவது இந்த வீட்டுல அந்த மாதிரி பிரிவினையோட நம்ம பிள்ளைங்கள நடத்திருக்கோமா?" என்று சரோஜினி ஈஸ்வரிக்கு புரியவைக்க முயன்றார்.
தனது தாய் தேவையே இல்லாமல் ஆரம்பித்த அந்த நாடகத்தை அதற்குமேலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை தானவீரனால்.
"கொஞ்சம் நிப்பாட்டுரிங்களா. இப்போ எதுக்கு தேவையில்லாமல் பேசிட்டிருக்கிங்க… நான் இப்போ கல்யாணம் வேணும்னு உங்க கிட்ட கேட்டேன்னா? அப்படியே கல்யாணம் பண்ணிக்கனும்னாலும் ஊருல பொண்ணுங்களா இல்லை? என்னமோ வைஷாலி ஒருத்திதான் இருக்குற போல எதுக்கு இப்படி பஞ்சாயத்தை கூட்டுறீங்க?" அதட்டலாக வந்தது அவனது வார்த்தைகள்.
"ஆஹ்... நான் உனக்காக தானே டா பேசிட்டிருக்கேன். அதக்கூட புரிஞ்சிக்காமல் நீ என்னையே அதட்டுறியா? அவங்க பார்க்க வளர்ந்த புள்ளை நீ…அவங்களே உனக்கு பொண்ணு கொடுக்க யோசிக்கும் போது வெளில யாருக்கிட்ட போய் உனக்கு பொண்ணு கேட்பேன் நான்?" என்ற ஈஸ்வரியின் குரலும் அழுகையில் தழுதழுத்தது. அவரின் ஆசை நிராசையாய் போனதில் பெரும் வருத்தம் அவருக்கு.
ஈஸ்வரியின் வாதத்திற்கு பதில் சொல்ல முடியாமல் சரோஜினி தடுமாறி நிற்க அவரது நிலையை பார்த்த தானவீரனுக்கு பொறுமை போய்விட்டது "அம்மா தண்ணி குடிக்க தானே வந்திங்க...குடிச்சிட்டீங்கல்ல... டிவியில் உங்க ஃபேவரட் சீரியல் வர டைம் ஆயிடுச்சு போங்க" என்றான்.
"டேய் நான் உனக்காக தான் பேசிட்டிருக்கேன்..." என்று அவர் மீண்டும் ஆரம்பிக்க "நான் கேட்காததை எதுக்கு எனக்காகன்னு சொல்லி நீங்க கேட்குறீங்க. எனக்கு ஏதும் தேவைன்னா அதை எனக்கே கேட்டுக்க தெரியும். எனக்காக யாரும் வந்து கேட்டு வாங்கி தரணும்னு அவசியமில்லை. அதோட முக்கியமான இன்னொரு விஷயம், உங்களுக்கு அப்படியே எதுவும் நியாயம் கேட்கணும்னா அதை அன்னிக்கு தருண் வைஷாலியை கல்யாணம் பண்ணிக்க கேட்குறாருனு மாமா வந்து சொன்னாரே அப்போவே எல்லார் முன்னாடியும் கேட்டிருக்கணும். அப்போ எல்லாம் விட்டுட்டு இப்போ அத்தை கிட்ட எதுக்கு வந்து குதிக்குறிங்க. உங்களுக்கு சமமா அவங்க மல்லுக்கு நிக்க மாட்டாங்கன்னு தைரியத்துல தானே. அவளோ தைரியம் இருந்தா மாமா கிட்ட போய் நியாயம் கேட்க வேண்டியது தானே" என்று சீறினான்.
அவன் கேட்ட கேள்விக்கு ஈஸ்வரியிடமும் பதிலில்லை. அவன் சொல்வதும் சரி தானே. அவரும் அவர் மனதில் தேக்கி வைத்திருந்த வன்மத்தை எல்லாம் கொட்டுவதற்கு இடமில்லாமல் தானே இப்பொழுது சரோஜினியிடம் பொங்கிக்கொண்டிருக்கிறார்.
அவர் அமைதியாகவே நின்றிருக்க "இதோ பாருங்க...ஆல்ரெடி கல்யாண ஏற்பாடு எல்லாம் பண்ணியாச்சு. அதை விட முக்கியமா தருணுக்கும் வைஷாலிக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு. இப்போ போய் எதுவும் பேசி குட்டைய குழப்பாதீங்க. பிறகு நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என்றான்.
அவனுக்காக என்று பேச வந்தவரை சரோஜினிக்காக பார்த்துக்கொண்டு அவன் அவரிடமே கோபப்பட அதை ஈஸ்வரியால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை .
"நல்லா சிரிச்சு சிரிச்சு பேசியே எல்லாரையும் கைக்குள்ள போட்டு வச்சிருக்கீங்க அண்ணி. உங்களை ஒரு வார்த்தை சொன்னாலே எல்லாரும் வரிஞ்சு கட்டிட்டு வராங்க. பாசம் காட்டுறேன்னு சொல்லி சொல்லியே ஏமாத்திட்டிருக்கிங்க" என்று அவருக்கு பரிந்து பேசிய தானவீரனின் மீது எழுந்த சினத்தையும் சரோஜினியின் மீதே கொட்டிவிட்டு விறுவிறுவென சமையல் கட்டிலிருந்து வெளியேறியிருந்தார் ஈஸ்வரி.
"இவங்களுக்கு வேற வேலையே இல்லை " வாய்க்குள் முணுமுணுத்தபடி செல்லும் ஈஸ்வரின் முதுகை பார்த்து தலையை இடவலமாக சலிப்பாக ஆட்டிகொண்டவன் சரோஜினியின் புறம் திரும்பினான்.
சமையல் கட்டின் மேடையை அழுந்த பற்றியபடி விழிகள் தானவீரனில் நிலைத்திருக்க அப்படியே சமைந்து நின்றிருந்தார் சரோஜினி.
"ம்பச்...அம்மா ஏதோ அவங்க மனசுல இருக்கறதை சொல்லிட்டு போறாங்க. அதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க த்த(அத்தை)" சரோஜினியை சமாதானப்படுத்த முயன்றான்.
அப்பொழுதும் சரோஜினியின் பார்வை மாறாமல் அப்படியே இருக்க "என்ன அத்தை...ஏன் அப்படி பார்க்குறீங்க... அவங்க சொன்னதை எல்லாம் பெருசா எடுத்துட்டு..."என்று அவன் மேலும் சமாதான முயற்சியை தொடர "நீ சொல்லு..." என்று அவன் பேச்சை தடை செய்திருந்தார் சரோஜினி.
"என்ன அத்தை?" என்று அவன் கேள்வியாக பார்க்க "உன் அம்மாவை விடு. நீ சொல்லு வீர்... உன் மனசுல என்ன இருக்கு?" என்று கேட்டார்.
அவன் புருவங்கள் இடுங்க அவரை புரியாமல் பார்த்தான். அவன் பார்வையில் அழுத்தம் கூடிற்று
"வீர் உன் அம்மா பேசுற வரைக்கும் அந்த கோணத்துல நான் யோசிக்கவேயில்லை. ஆனால், இப்போ ஒருவேளை உன் மனசுல வைஷாலி இருந்திருந்தா அதை தெரிஞ்சுக்காமல் உன்னை கஷ்ட படுத்திட்டோமோன்னு மனசு பதறுதுடா. சொல்லு உனக்கு வைஷாலியை பிடிச்சிருக்கா?" என்று கேட்டார்.
"அத்தை..." என்று அந்த 'அத்தையில்' சற்றே அதிகப்படி அழுத்தம் கொடுத்து அழைத்தான்.
அந்த அழுத்தத்திலேயே தனது கேள்வி அவனுக்கு அதிருப்தியளிக்கின்றது என்று புரிந்தாலும் அவன் வாய்மொழியாக பதில் தெரிந்தாக வேண்டும் என்று நினைத்தார் சரோஜினி.
"இதோ பார் வீர்...அத்தை மேல நிஜமான அன்பு இருந்தா மறைக்காமல் சொல்லுப்பா? நீ வைஷாலியை விரும்புறியா? அவளை கல்யாணம் பண்ணிக்க நினைக்குறியா?" என்று வார்த்தைகளை மாற்றி போட்டாலும் அதே கேள்வியைத்தான் மீண்டும் கேட்டார்.
உருகியதே என் உயிரே-கருத்து திரி
உங்கள் அன்பான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சகோஸ் :love::love::love:
aadvikapommunovels.com
Last edited: