அத்தியாயம் 9
அவனின் கார் பிரபல நகைக்கடை ஒன்றின் முன்னே நிற்க அவளை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் தருண்.
"எதுக்கு இதெல்லாம்" என்று அவள் மறுத்த போதும் அவன் விடவில்லை.
"நான் உனக்கு கொடுக்கும் முதல் பரிசு வேண்டாம்னு சொல்லாத, ப்ளீஸ்" என்றான். கண்களில் காதலுடன் கெஞ்சலும் சேர்ந்துகொள்ள மறுக்க முடியாமல் அவனுடன் கடைக்குள் நடந்தாள்.
அவளுக்காக முதல் காதல் பரிசு வாங்கி தரும் எண்ணம் அவனுக்கு.
அவளுடன் உள்ளே நுழைந்தவனை கடையின் நிர்வாகியான வாசுவே வாசல் வரை வந்து வரவேற்றிருந்தான் "வாங்க சார். நீங்க வரிங்கன்னு தெரியாதே. முதலாளி இப்போ தான் வெளியில் போனார்.வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா இருந்து உங்களை பார்த்துட்டு போயிருப்பார்" என்றான்.
வாசுவின் குரலில் மரியாதையும் நயமும் கலந்தே இருக்க தருண் அடிக்கடி வந்து போகும் அல்லது அவன் குடும்பத்திற்கு நல்ல பழக்க பட்ட கடையாக இருக்க வேண்டும் என்பதை யூகித்துக்கொண்டாள்.
"நோ ப்ரோப்லம், வாசு. நகை பார்க்க தான் வந்தோம். இவங்க என் ஃபியான்ஸே. இவங்களுக்கு தான் பார்க்கணும்" என்று நேராக வந்த காரியத்தை சொன்னான்.
"ஹாய் மேடம்" என்று அவளை பார்த்து புன்னகைத்தவன் "என்ன மாதிரி பார்க்குறீங்க சார்" என்று அவனிடமே கேட்டான்.
ஏதோ சொல்ல வந்தவன் சட்டென நிறுத்தி வைஷாலியை திரும்பி பார்த்தான். அவன் என்ன சொல்ல போகின்றான் என்று அவளின் பார்வை அவன் மீது ஒரு வகை ஆராய்ச்சியுடன் நிலைத்திருந்தது.
அவனை அளவிடுகிறாள் என்று புரிந்து கொண்டான்.
அவளும் அவளது முடிவுகளும் அவனுக்கு எந்தளவு முக்கியம் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறாள் என்பது அவள் பார்வையிலேயே தெளிவாக விளங்கியது அவனுக்கு.
இது போன்ற சின்ன சின்ன விடயங்கள் தானே பெண்களுக்கு தங்கள் துணையின் மீது நம்பிக்கையையும் அன்பையும் வலுபெறச் செய்கின்றன.
"அவங்களுக்கு எது விருப்பமோ அது போல காட்டுங்க" என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை அவளிடமே கொடுத்துவிட்டான்.
ஆராய்ச்சி பார்வை தொக்கி நின்ற அவள் விழிகளில் சின்ன சிரிப்பு. அது இதழ்களுக்கும் கடத்தப்பட்டு மென்மையாக புன்னகைத்தாள்.
'முதல் டெஸ்ட்டுல பாசாகிட்ட போல தருண்' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டான் அவன்.
"ரொம்ப கோடியா( gaudy) இல்லாமல் சிம்பிளா காட்டுங்க" என்று அவளும் தனக்கு பிடித்தமான விதத்தில் கேட்க அவர்களை அழைத்துக்கொண்டு எளிமையான அதிலும் நாவீன வடிவமைப்புகளை கொண்ட நகைகள் இருக்கும் பிரிவுக்கு சென்றான்.
இந்த காலத்து பெண்களின் ரசனைக்கு ஏற்றாற்போல் வடிவமைக்க பட்ட நகைகள் கண்ணாடி பேழைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்க அனைத்தும் கண்ணை கவரும் விதமாகவே ஜொலித்துக் கொண்டிருந்தன.
அனைத்தையும் பார்க்க வைஷாலிக்கே சற்று மலைப்பாக தான் இருந்தது. எதை பார்ப்பது எப்படி தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம். இதுவரையிலும் அவளுக்கான நகைகளை அவளின் அன்னை, அத்தை, அப்பத்தா என்று யாராவது தான் தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கின்றனர். நகை கடைக்கு அவர்களுடன் செல்வாள் தான். ஆனால், தேர்ந்தெடுப்பதில் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டாள். பெரியவர்கள் தேர்ந்தெடுத்து அவளிடம் காட்டுவதில் எது பிடித்தம்; பிடித்தமில்லை என்று மட்டும் முடுவு செய்து தனக்கு தேவையானதை வாங்கிக்கொள்வாள்.
இதுவரை கடைபிடித்து வந்த தனது பழக்கத்தை நினைத்தவளுக்கு மதுஷிகாவின் நினைவுகளும் தவறாமல் வந்து போயின.
அவள் வைஷாலி போல இல்லை. தனக்கு எது பிடித்தமோ அல்லது தேவையோ அதை அவளே தேர்ந்தெடுத்துக்கொள்வாள். அப்பத்தாவும் அத்தையும் ஏதும் சொன்னாலும் கூட தனக்கு பிடித்திருந்தால் மட்டுமே அதை வாங்கி கொள்வாள். இல்லையேல் எத்தகைய பொருளாக இருந்தாலும் வேண்டாம் என்று மறுத்துவிடுவாள்.
பெரியவர்களுக்கு அது அவளை பிடிவாதக்காரியாக காட்டினாலும் வைஷாலி மட்டும் எப்பொழுதும் அதை மதுஷிகாவின் திடமும் ஆளுமையும் நிறைந்த குணாதிசயமாக எண்ணி வியந்திருக்கிறாள்.
தங்கையின் நினைவில் தனக்குள் மூழ்கியிருந்தவளை தருணின் பேச்சு குரல் தான் கலைத்திருந்தது.
"நாங்க பார்த்துட்டு கூப்பிடுறோம் வாசு" என்று தருண் கடை நிர்வாகியிடம் சொல்லி அவனை அனுப்பி வைத்திருந்தான்.
அவன் சென்ற பின் வைஷாலியிடம் திரும்பியவன் "என்னாச்சு, வைஷு? எதுவும் பிடிக்கலையா? வேற கடை எதுவும் பார்க்கலாமா? என்று மென்மையாக அவன் கேட்க "ஐயோ இல்லை. இங்கயே நல்லா இருக்கு. ஆனால், இதுவரை அம்மா, அப்பத்தான்னு யாராவது தான் நகை எல்லாம் தேர்ந்தெடுத்து கொடுப்பாங்க. சொந்தமா எடுத்துக்கிட்டதில்லை. அதுதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு" என்றாள்.
"ஏன் உனக்கு நகை போட்டுக்க பிடிக்காதா?" என்று கேட்டான்.
"பிடிக்காதுன்னு இல்லை. அளவா போட்டுக்க பிடிக்கும். பட் இந்த தேர்ந்தெடுக்குற வேலை எல்லாம் அவங்க கிட்ட விட்டுருவேன்" என்றாள்.
"வீட்டுக்கு ரொம்ப செல்லம் போல" அவன் சொல்ல " கொஞ்சம் அப்படி தான்" என்று அவளும் புன்னகைத்தாள். அதில் சின்னதாய் ஒரு கர்வமும் கூட அவள் கண்களில் மின்னி மறைந்தது.
அவளை பார்த்து முத்து பற்கள் மிளிர சிரித்தவன் "இனி எனக்கும் செல்லம் தான்" என்றபடி கண்ணடித்தான்.
அவன் அப்படி சொல்லியதிலேயே அவள் கன்னங்கள் சூடேற அவன் கண்ணடித்ததில் இன்னமும் சொக்கி போயிருந்தாள்.
அடிக்கடி புன்னகைத்தபடி ஒற்றை கண்ணை சிமிட்டிக்கொள்கிறான்.
அப்படி செய்யும் போதெல்லாம் வசீகரமாக தெரிகிறான். 'கியூட்' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டாள் பெண்ணவள்.
இதழ் கடித்து வெட்கத்தை மறைத்துக்கொள்ள முயன்றவளாக முன்னே இருந்த நகைகளின் மீது பார்வையை செலுத்தியிருந்தாள்.
"இது நல்லா இருக்குல்ல" என்று அவள் கண்ணாடி பேழைக்குள் எதையோ சுட்டிக்காட்ட வெட்கத்தை மறைக்கிறாள் என்று புரிந்துக்கொண்டான் தருண்.
மேற்கொண்டு அவளை சீண்டி பார்க்கும் ஆர்வம் உண்டானாலும் பெண்ணவளின் தவிப்பை புரிந்து கொண்டவனாக அதற்குமேல் எதுவும் சொல்லாமல் அவளுடன் சேர்ந்து நகைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
"எது... இதுவா?" என்று அவன் கேட்க "இல்லை… இல்லை அதுக்கு பக்கத்துல இருக்குறது" என்றாள் அவள்.
"ம்ம்... நைஸ்" என்றபடி அவர்களுக்கு உதவி கொண்டிருந்த கடை ஊழியரிடம் "இதை எடுத்துக் கொடுங்க" என்றான். அந்த பெண் ஊழியரும் அவள் காட்டிய அந்த பிரேஸ்லெட்டை எடுத்து அவளிடம் நீட்ட வைஷாலியும் அதை சுற்றி சுற்றி பார்த்து கொண்டிருந்தாள்.
அதே நேரம் கடை ஊழியரும் " போட்டு பாருங்க மேடம்" என்று சொல்லியபடி அந்த பிரேஸ்லெட்டை அவள் கையில் போட உதவிக்கொண்டிருக்க அந்த நேரத்தில் தருணின் பார்வை அவனுக்கு எதிரே கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டிருந்த பிரெஸ்ட்லெட் ஒன்றின் மீது படிந்தது. அதையே பார்த்துக்கொண்டிருந்தான்.
மெல்லிய சங்கிலியோடு நடுவில் ட்ரெபல் க்ளெஃப்(treble clef) எனப்படும் மியூஸிக்கல் நோட் இருப்பது போன்று அமையப்பெற்றிருந்தது அது.
இசை சம்மந்த பட்டது எதுவாகினும் அவன் கவனத்தை ஈர்க்கவில்லை என்றால் தானே அதிசயம். அந்த வகையில் அந்த பிரெஸ்ட்லெட்டும் அவன் கவனத்தை ஈர்த்திருந்தது.
அந்த கடைக்கார பெண்ணின் உதவியுடன் கையில் பிரெஸ்லெட்டை அணிந்து கொண்ட வைஷாலி "எப்படி இருக்கு தருண்?" என்று கேட்டு கொண்டே அவன் புறம் திரும்ப அவள் கரத்தை பார்த்தவன் "ம்ம்… சூப்பரா இருக்கு. உனக்கு பிடிச்சிருக்கா?" என்று கேட்டான்.
அதை பார்க்குறேன், இதை பார்க்கிறேன் என்று அலட்டாமல் எளிமையாக ஒன்றை எடுத்து அதில் திருப்தி அடைந்துகொண்ட அவளை வியப்பாக பார்த்தாலும் ஒருவேளை தான் வாங்கி கொடுப்பதால் சங்கடப்படுகிறாளோ என்று நினைத்து மீண்டும் அவளின் திருப்தியை உறுதி செய்துக்கொள்ள கேட்டான்.
"பிடிச்சிருக்கு" என்றாள் அவள்.
"அப்போ இதையே பில் போட்டுடலாமா?" அவன் கேட்க "ஓகே " என்றாள் அவள்.
"இது போதுமா வைஷு? வேற எதுவும் பார்க்க போறியா?" என்றவனிடம் "ஐயோ, வேண்டாம் இதுவே போதும்" என்றபடி பில் போடுவதற்காக கையில் இருந்த பிரேஸ்லெட்டை அவள் கழட்ட முற்பட அவள் கரத்தை பிடித்து தடுத்தவன் "கழட்டாத கையிலேயே இருக்கட்டும்" என்றான்.
"இதுக்கு பில் போட்டுருங்க" என்று கடைக்கார பெண்மணியிடம் சொன்னவன் "அதுக்கு முதல் இதை எடுத்து காட்டுங்க" என்று அவன் பார்த்துக்கொண்டிருந்த அந்த மியூஸிக்கல் நோட் பொறிக்க பட்டிருந்த பிரேஸ்லெட்டை காட்டினான்.
அந்த பெண்ணும் அதை எடுத்து அவன் கையில் கொடுக்க அந்த ட்ரெபல் க்ளெஃப் சின்னத்தை பெருவிரலால் வருடியபடி "இது நல்லா இருக்குல்ல?" என்று வைஷாலியிடம் கேட்டான்.
"நல்லா இருக்கு...ஆனால், எனக்கு தான் செலக்ட் பண்ணிட்டோமே? இது யாருக்கு?" என்று கேள்வியாக அவனை பார்த்தாள்.
"மதுவுக்கு. இன்னிக்கு அவள் பிறந்தநாள் தானே. எனக்காக நீ அவளுக்கு கொடுத்திருக்க வேண்டிய ட்ரீட்டை எல்லாம் தியாகம் பண்ணியிருக்கா வேற. அதுக்கும் மேல உன்னோடு இந்த அழகான நேரத்தை எனக்காக அமைச்சு கொடுத்திருக்கா. அதுக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டாமா? சோ இது அவளுக்காக என்னோட கிஃப்ட்" என்றான்.
"வாவ், செம்ம சாய்ஸ். அவளுக்கும் மியூசிக்னா ரொம்ப இஷ்டம்" என்றாள் வைஷாலி இசையின் மீது தங்கைக்கு இருக்கும் அலாதி ஈடுபாட்டினை நினைவு கூர்ந்தவளாக.
அதிலும் டாம் உடைய கவர் பாடல் கேட்டு விடியும் அவள் பொழுதுகளும் அவன் குரலின் மீது அவள் கொண்டிருக்கும் அபரிமிதமான பிடித்தமும் வைஷாலியின் மனக்கண்ணில் வந்து போக மெதுவாக சிரித்தும் கொண்டாள்.
"ரியலி? எனக்கும் மியூசிக்னா ரொம்ப பிடிக்கும். அப்படினா நானும் மதுவும் சுலபமா செட் ஆகிடுவோம் போல” புன்னகை முகமாக சொன்னவனுக்கு அவளால் தான் அந்த இசையையே அவன் வெறுக்க போகின்றான் என்பது அப்பொழுது தெரிந்திருக்க நியாயமில்லை.
“அப்போ இது ஓகே தானே? இதையே பேக் பண்ண சொல்லிடலாமா?" என்று அவளிடம் மீண்டும் ஒரு வார்த்தை கேட்டுக் கொண்டான்.
"ம்ம்...ஓகே " என்று வைஷாலி சொல்ல இரண்டு பிரஸ்லெட்டிற்கும் பில் போட்ட பின்னர் பணம் கொடுத்து விட்டு அவளுடன் வந்து காரில் ஏறிக்கொண்டான் தருண்.
"இதை மதுகிட்ட கொடுத்திடுறியா?" மதுவுடைய பிரெஸ்ட்லெட் பெட்டி அடங்கிய பையை வைஷாலியிடம் நீட்டியபடி கேட்டவனிடம் "நீங்களே கொடுக்கலாமே அவள் சந்தோஷ படுவா. ஆனால், இப்போ இல்லை. கல்யாணத்துல அவளை பார்க்குற நேரம் கொடுங்க" என்றாள் அவள் .
"ம்ம்ம்… அதுவும் நல்ல யோசனைதான்" என்றபடி அந்த பையை பத்திரமாக எடுத்து வைத்துவிட்டு தங்களின் அடுத்த இலக்கை நோக்கி வண்டியை செலுத்தியிருந்தான்.
சாலையில் தளம்பல் இல்லாமல் சீராக ஓட்டி வந்தவனின் கார் ஒரு பூங்காவை வந்தடைந்திருந்தது.
அந்த மாலை நேரத்தில் அடர்ந்த மரங்களும் வாசனை மலர்களுமாக நிறைந்திருந்த அந்த பூங்காவில் சிலர் வாக்கிங் செல்வதும், பெற்றோர்கள் சிலர் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதும், அங்கங்கே காதலர்கள் கைகோர்த்து உலகம் மறந்து தங்கள் உலகத்தில் சஞ்சரித்திருப்பதுமாக இதமான சூழலே நிலவிக்கொண்டிருந்தது.
பூங்காவினுள் நுழைந்து தருணுடன் சேர்ந்து சுற்றுச்சூழலில் நிகழ்பவைகளை விழிகளால் அலசிக்கொண்டே நடந்தாலும் அவள் மனதிற்குள் சின்னதாய் ஒரு குறுகுறுப்பு.
பக்கத்தில் வந்துக்கொண்டிருந்தவனை திரும்பி பார்த்தாள்.
அவன் விழிகள் இரண்டும் ‘சுற்றியிருக்கும் அழகெல்லாம் எனக்கு ஒன்றுமே கிடையாது. அதை விட என் கண்களுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது உன் மதிமுகம் மட்டும் தான்’ என்னும் தோரணையில் அவள் முகத்திலேயே நிலைத்திருந்தன.
"என்ன பார்க்குறீங்க?" என்று அவள் கேட்க "தெரியல, என்னவோ இந்த நாளோட உலகமே முடிஞ்சு போயிடும் போல உன்னை விட்டு கண்ணை விலக்கவே முடிய மாட்டெங்குது. உன்னை மறுபடி உன் வீட்டுக்கு கூட்டி போகவே மனசில்லை"என்றான்.
என்னவோ 'அவளை விட்டு விலகாதே' என்று ஏதோ ஒன்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேயிருப்பது போன்று ஒரு உணர்வு. என்ன என்றும் அவனால் யூகிக்க முடியவில்லை.
ஒருவேளை அவள் மீது இருக்கும் அதீத ஈர்ப்பின் காரணமாகக் கூட இருக்கலாம் என்று நினைத்து தன்னை நிலைக்கொள்ள செய்திருந்தான் தருண்.
ஆனால், இன்று அவளை வீட்டில் விட்ட பின் பிரிய போகிறவன் மீண்டும் அவளை நெருங்க முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுவிடுவான் என்று அவனுக்கு சொன்னால் அவன் நிலை தான் என்னவாகுமோ?
"அப்படியெல்லாம் ஈஸியா என்னை கடத்திக்கொண்டு போக முடியாது. எங்க வீட்டு ஆளுங்க தேடி பிடிச்சு என்னை கூட்டி போய்டுவாங்க" அவள் கிண்டலாக தான் சொன்னாள்.
ஆனால், அவன் முகம் சட்டென்று கறுத்துவிட்டது.
அதை கவனித்தவள் "தருண், கோவிச்சுக்கிட்டீங்களா? சாரி…நான் விளையாட்டுக்கு தான்..." என்று அவள் பதற தொடங்க இதழ்களை மடித்து வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு மறுபுறம் அவன் திரும்பிக்கொள்ள அவன் அவளை சீண்டுகிறான் என்று புரிந்து போயிற்று அவளுக்கு.
"ம்பச்...மறுபடி மறுபடி என்னை சீண்டி பார்க்குறீங்க" என்றபடி அவன் கையில் ஒரு அடி போட்டாள் வைஷாலி.
அடக்கிய சிரிப்பு வெளியில் சிந்திவிட அவள் அடித்த இடத்தை தேய்த்து விட்டுக்கொண்டே சத்தமாக சிரித்துவிட்டான் தருண்.
வைஷாலி அவனை முறைக்க முயன்ற நேரம் " என் முகம் கொஞ்சம் சுருங்கினாலே இப்படி பதறுறியே? அதை பார்க்க ஒரு மாதிரி நல்லா இருக்கு. என்னை உனக்கு அவ்வளோ பிடிச்சிருக்கா என்ன?" சிரிப்பினூடே கலந்து வந்தது அவனது வார்த்தைகள்.
பதில் சொல்லவில்லை அவள். தலையை குனிந்து வெட்க சிரிப்பை இதழ் கடித்து அடக்கிய படியே நடந்தாள். அவளோடு செலவிட்ட இந்த சில மணி நேரங்களிலேயே அவளை எத்தனை முறை வெட்க பட வைத்தானோ தெரியவில்லை.
ஒவ்வொரு முறையும் அவள் இதழ் கடித்து புன்னகையை அடக்கி சமாளித்துக்கொள்வதை பார்க்க அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது.
தலையை குனிந்து நடந்தவளின் முகத்தை தானும் சற்றே குனிந்து எட்டி பார்த்தான்.
மீண்டும் சீண்டுகிறான் என்பது புரிய "ப்ளீஸ்… ஏதும் பேசாமல் வாங்க" என்று எச்சரித்து விட்டு நடந்தாள் அவள்.