அத்தியாயம் 4
தானவீரன் அடித்த அடியில் கண்களில் பொறிகலங்கி நிலைகொள்ள இயலாமல் பொத்தென்று கீழே விழுந்திருந்தான் முத்துக்குமார்.
அவனை அடித்த வேகத்தில் தன் கையுமே வலிக்க கையை உதறிக்கொண்டே "யாரு முன்னாடி கை நீட்டி பேசுற. தொலைச்சுடுவேன்" என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி சீறிக்கொண்டு நின்றான் வீர்.
அவர்களை சுற்றி நின்று கோஷம் போட்டுக்கொண்டிருந்த அனைவரின் வாயும் அதிர்ச்சியில் ஒரு நொடி மூடிக் கொள்ள சந்தை கடை போல கூச்சலாக இருந்த அந்த இடமே சில நொடிகள் நிசப்தமாக மாறியிருந்தது.
தனது தொழிலாளியின் மீது கையை வைத்த அதிர்ச்சியில் "வீர்" என்று அவனை அதட்டிய கிருஷ்ணகுமார் அடுத்த நொடி திரும்பி நிறுவன மேலாளர் மணிவண்ணனை பார்த்து "உங்க வேலையா?" என்று முறைத்தார்.
முதலாளியின் பார்வையை கண்டுகொண்ட அந்த பின் நாற்பதுகளில் இருக்கும் மனிதர் "பிரச்சனை எதுவும் பெருசாகிடுமோன்னு தான் சார் வர சொன்னேன்" என்று தலையை தொங்கப்போட்டு கொண்டே சொல்ல
"பிரச்சனைன்னு கூப்பிடுறதுக்கு அவன் என்ன போலீஸ் ஆஹ்?" என்று மணிவண்ணனை கடிந்துகொண்டார் அவர்.
சுற்றி இருந்தவர்களோ ஸ்தம்பித்து நின்றது என்னவோ சில நொடிகள் தான்.
சட்டென்று சுதாரித்து கொண்ட கூட்டத்தில் இருந்த ஒருவன் "என்ன சார் எங்க உரிமையை கேட்டு வந்தா கை நீட்டுறீங்க. அராஜகமா இருக்கே" என்று ஆரம்பிக்க அடுத்தவர்களும் சேர்ந்து கொண்டனர்.
"எங்க யூனியன் தலைவர் சார் முத்துக்குமார். அவர் மேலையே கையை வைக்குறிங்க”என்று எகிறினான் மற்றுமொருவன்.
தனது கூரிய விழிகளினால் தீர்க்கமான பார்வையுடன் சுற்றி நின்றவர்களை ஒரு முறை பார்த்தவன் எதுவும் பேசாமல் கீழே விழுந்து கிடந்த முத்துக்குமாரின் ஷர்ட் காலரை பற்றி இழுத்து நிற்க வைத்தான்.
அவனை ஒரு முறை மேலிருந்து கீழே பார்த்த வீர் கீழே விழுந்ததினால் அவன் ஷர்ட்டில் ஒட்டியிருந்த புழுதியை தட்டி விட்டபடியே “உண்மையை நீயே சொல்லுறியா...இல்லை நான் சொல்லட்டுமா?” என்று கேட்டான்.
வீர் கோபப்படவில்லை அமைதியாக தான் கேட்டான்.
ஆனால் அவன் குரலில் தொனித்த அழுத்தமே ‘சொல்லவில்லை என்றால் உன்னை தொலைச்சுடுவேன்’ என்னும் மிரட்டல் விடுப்பதாய் இருந்தது.
இருந்தும் தான் செய்த திருட்டுத் தனத்தை மறைக்க முயன்றவனாய் “என்ன சார் உண்மை...என்ன சொல்ல சொல்லுறீங்க... எ...எனக்கு ஒ...ன்னும் புரியல சார் “ என்று திக்கி திணறி சொன்னவனுக்கு சொல்ல ஆரம்பிக்கும் போது பேச்சில் இருந்த தெளிவு சொல்லி முடிக்கும் போது இருக்கவில்லை.
வீர் பார்த்த பார்வையிலேயே அவன் குரல் கம்மி போயிற்று.
“ஓ... ஓஹோ.. உனக்கு ஒன்னும் தெரியாதுல” என்று கேட்டுக்கொண்டே முத்துக்குமாரின் தோள் மீது கையை போட்டவன் மற்ற கரம் கொண்டு அவன் தாடையை பற்றி அவன் அடி வாங்கி சிவந்திருந்த கன்னத்தை பார்த்துக்கொண்டே “ச்சே கன்னம் எப்படி சிவந்து போச்சுல்ல... அட உதடு வெடிச்சு ரத்தம் எல்லாம் வருது வேற பாரு...ச்சுச்சு “ என்று பரிதாபம் போல பேசியவனை முறைக்க முயன்ற முத்துக்குமார் “என்ன சார் மிரட்டுறீங்களா?” என்று கேட்டான்.
அவனை புருவம் உயர்த்தி பார்த்துக்கொண்டே அவன் தோள் மீதிருந்து கையை எடுத்த வீர் “அடுத்த கன்னம் இன்னும் ஃப்ரீயா தானே இருக்கு” என்று கொண்டே தனது கையை உயர்த்த அடுத்த கன்னத்தை பாதுகாக்க வேண்டி கைகளால் கன்னத்தை பொத்தியபடியே “சொல்லிடுறேன் சார் சொல்லிடுறேன்” என்று அவனிடமிருந்து பதறி விலகி நின்றிருந்தான் முத்துக்குமார்.
சற்று முன்னர் அவனிடம் அடி வாங்கிய அனுபவம் இருக்கிறதல்லவா. அதை நினைத்த போதே உதறல் எடுத்தது அவனுக்கு.
"ஆஹ்... இது நல்ல புள்ளைக்கு அழகு... எங்க நடந்தது எல்லாத்தையும் ஒன்னு விடாமல் சொல்லு பார்ப்போம்" என்று சொன்னான்.
முத்துக்குமாரும் "அது வந்து... என்னாச்சுன்னா சார்" என்று அவனிடம் நடந்த உண்மையை சொல்ல ஆரம்பிக்க அவன் தாடையை பற்றி "என்கிட்டே இல்ல... அவங்க கிட்ட" என்று அவர்கள் இருவரையும் பல குழப்பங்களுடன் கேள்வியாக பார்த்து கொண்டு நின்றிருந்த மற்ற தொழிலாளர்களை நோக்கி திருப்பி விட்டிருந்தான் வீர்.
“எல்லாரும் என்ன மன்னிச்சுடுங்க... இதை எல்லாம் நான் கிருஷ்ணகுமார் சாரோட ஃப்ரெண்ட் புருஷோத்தமன் சார் சொல்லி தான் பண்ணுனேன். உங்க எல்லாரையும் சாருக்கு எதிரா தூண்டி விட்டு கலவரம் பண்ண சொல்லி எனக்கு பணம் கொடுத்தார். அதை வாங்கிட்டு தான் மத்த கம்பெனியை விட நமக்கு சம்பளமும் சலுகையும் ரொம்ப குறைவா கொடுக்குறாங்கன்னு உங்க கிட்ட பொய் சொல்லி தூண்டி விட்டேன். உண்மையில புருஷோத்தமன் ட்ரான்ஸ்போர்ட்ஸ் அஹ் விட நமக்கு நல்ல சம்பளம் தான்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே “ஆஹ் போதும் போதும்... இதுக்கு மேல நான் சொல்லிக்குறேன்“ என்றபடி அவனை இடை நிறுத்திய தானவீரன்
“இங்க பாருங்க... புருஷோத்தமன் ட்ரான்ஸ்போர்ட் எம்.டி யாருன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்... அவரு உங்க முதலாளி கிருஷ்ணகுமார் சாரோட ஃப்ரெண்ட். முதல்ல ரெண்டு பேரும் சேர்ந்து தான் தொழில் பண்ணுனாங்க. பிறகு சில மனக்கசப்பால இப்போ தனி தனி பிசினஸ். பட் அவர் கம்பெனிய விட நம்ம கம்பெனில நல்ல பிசினெஸ் நடக்குதுன்னு பொறாமையில் அவர் பண்ணிட்டிருக்குறது தான் இந்த மாதிரியான கீழ்த்தரமான வேலைங்க எல்லாம். நாமளே அதை புரிஞ்சுக்காம அந்த வலையில போயி விழுந்தா அது கம்பெனிக்கு மட்டும் நஷ்டம் இல்லை... உங்களுக்கும் தான்.”என்று விளக்கம் கொடுத்தான்.
“யாரும் எதுவும் வந்து உங்க கிட்ட சொன்னா முதல்ல அதுல இருக்குற உண்மை என்னனு நாலு பேரு கிட்ட விசாரிச்சு தெரிஞ்சுக்கோங்க. இதோ இவன் போல தலைவன்னு சொல்லிக்கிட்டு திரியுறவனுங்க எதையாவது சொல்லுறாங்கன்னு அதை அப்படியே கண்ணை மூடிக்கிட்டு நம்பிடுறது தானா?” என்று தனது கணீர் குரலில் கேட்டான்.
அவனது பேச்சில் எந்த விசாரனையும் இன்றி முத்துக்குமாரின் பேச்சை கேட்டு தாங்கள் செய்த தவறை உணர்ந்து கொண்ட மற்ற தொழிலாளிகள் தலை கவிழ்ந்து நிற்க அதிலிருந்த ஒருவன் “மன்னிச்சிடுங்க சார். எதையுமே விசாரிக்காமல் தலைவன்னு இவன் மேல இருக்குற நம்பிக்கையில இப்படி நடந்து கிட்டோம்” என்று அனைவரின் சார்பாக மன்னிப்பு வேண்டினான்.
அங்கே நெடு நாட்கள் வேலை செய்யும் மற்றும் ஒரு சாரதி கணேசன் “ ஆனாலும் நிஜமாவே எங்களுக்கு சம்பளம் போதாலங்க தம்பி. ஏறிட்டு போற விலைவாசியில இப்போ இருக்குற சம்பளத்தை வச்சு குடும்பத்தை ஓட்டுறது ரொம்பவே கஷ்டமா இருக்கு. அதுதான் இவன் மத்த கம்பெனிகாரங்க நம்மளை விட அதிகமா சம்பளம் கொடுக்குறாங்கன்னு சொன்னதும் எதையும் விசாரிக்காமல் இப்படி பண்ணிட்டோம்” என்று தங்கள் பிரச்சனையை எடுத்து சொன்னார்.
ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டே “ உங்க பிரச்சனை புரியுது. இப்போவே நம்ம கம்பெனியில் அடுத்த கம்பெனிய விட அதிக சம்பளம் தான் கொடுக்குறோம். அதுக்கும் மேல மெடிக்கல் பெனிபிட்ஸ், இன்சூரன்ஸ், அப்புறம் எதுவும் ஃபங்ஷன் போகணும்னா உங்க பர்சனல் அண்ட் பேமிலி யூஸுக்கு பாதி வாடகைக்கு கம்பெனி கார்னு சலுகைகளும் கொடுத்திருக்கோம். அப்படியிருந்தும் உங்களுக்கு இப்போ கிடைக்குற சம்பளம் போதலன்னு சொல்லுறீங்க. ஆனால், அதை சரி பண்ணுறதுக்கு எடுத்ததும் இது போல போராட்டத்துல இறங்குறது சரி இல்லை. உங்க பிரச்சனைய நாங்களும் அசால்ட் ஆஹ் எடுத்துக்க மாட்டோம். பேசி ஒரு நல்ல முடிவை எடுக்கலாம்” என்று தங்கள் பிரச்சனைகளை சொல்லி ஆதங்கப் பட்டுக்கொண்டிருந்த தொழிலாளிகளுக்கு சமாதானம் சொன்னவனின் பார்வை ஒரு கணம் கிருஷ்ணகுமாரில் படிந்து மீண்டது.
பிரச்சனையை சாமர்த்தியமாக கையாண்ட தானவீரனை மனதுக்குள் மெச்சிக்கொண்டவர் அவனுக்கு ஆமோதிப்பாக தலையாட்டியபடி “ கணேசன், நீங்களும் உங்களுக்கு நம்பிக்கையான இன்னும் ரெண்டு பேரையும் ஆபீஸ்க்கு கூட்டிட்டு வாங்க. பேசிக்கலாம்... மத்தவங்க எல்லாம் இப்போ போயி வேலைய பாருங்க... “ என்று சொன்னார்.
“சரிங்க சார்” என்று கணேசனும் சொல்லி இருக்க மற்றவர்களும் கலைந்து சென்றார்கள்.
“சார் இவனை என்ன பண்ணுறது...” முத்துக்குமாரை காட்டி மணிவண்ணன் கேட்க
“தேவையில்லாமல் கலவரத்தை தூண்டி விடுறான்னு கம்பளைண்ட் கொடுத்து போலீஸ்ல ஒப்படைச்சிடுங்க” என்று சொல்லி விட்டு அலுவலகத்துக்குள் நுழைய சென்றார்.
உள்ளே செல்ல போனவர் பாதியில் நின்று வீரை திரும்பி பார்க்க
அந்த சந்தர்ப்பத்தில் அவனும் “எப்புடி... சித்தப்பு” என்று ஷர்ட் காலரை தூக்கிவிட்டு கொண்டே மணிவண்ணனிடம் பெருமையாக கேட்டு கொண்டிருந்தான்.
மணிவண்ணன் அவர்களின் தூரத்து உறவில் அவனுக்கு சித்தப்பா முறை வேண்டும்.
கிருஷ்ணகுமார் தனியாக தொழில் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்து அவருக்கு துணையாக இருந்து வருகிறார். மிகவும் நம்பிக்கையான ஆள் என்பதால் நிறுவன மேலாளர் பதவியும் வழங்கியிருந்தார் கிருஷ்ணகுமார்.
“கலக்கிட்டீங்க தம்பி” என்று அவரும் அவனுக்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்க இருபக்கமும் சலிப்பாக தலையாட்டிய கிருஷ்ணகுமார் மீண்டும் அவர்களை நோக்கி நடந்து வந்தார்.
அதை கவனித்தவன் “ ஐயோ மாமா... “ என்று பதறியபடி “அப்புறம்... சித்தப்பு இன்னிக்கு மழை வரும் போல இருக்குல்ல” என்று வானத்தில் பார்வையை சுழல விட்டபடி பேச்சை மாற்ற “ மழையா... அப்படி ஒன்னும் தெரியலையே” என்று அவன் திடிரென்று பேச்சை மாற்றிய காரணம் புரியாமல் அவரும் வானத்தை அன்னார்ந்து பார்க்க அவரை முறைத்தவன் “சித்தப்பு... மழை வரும்... வரும்ம்ம்ம்... “ என்று அழுத்தி சொல்லியபடி கிருஷ்ணகுமாரை நோக்கி கண்களால் ஜாடை காட்டினான்.
அதற்குள் அவர்கள் அருகே வந்து நின்ற கிருஷ்ணகுமார் “மணி...எல்லாம் உங்க வேலை தானே... அவன் தான் எதோ சின்ன பையன் இப்படி அடிதடின்னு திரியுறான். இதுல நீங்களும் வேற அவனுக்கு சப்போர்ட். இனி எதுவும் பிரச்சனைன்னா போலீசுக்கு கூப்பிட்டு பழகுங்க...” என்று கண்டிப்பாக சொன்னார்.
மணி திட்டு வாங்குவதை பார்த்தவனுக்கு அடுத்த திட்டு அவனுக்கு தான் விழும் என்று தெரிந்திருக்க
“அப்போ நான் கிளம்புறேன்” என்று பெரியவர்கள் இருவருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு விசிலடித்த படியே திரும்பி நடந்தான் வீர்.
“வீர், அது தான் ஆபீஸ் வரை வந்துட்டியே. உள்ள வந்து கொஞ்சம் வேலையும் பார்க்கலாம்ல” கிருஷ்ணகுமார் கேட்க
“அய்யய்ய... அந்த ஆபீஸ் வேலை எல்லாம் நமக்கு செட் ஆகாது. ஆளை விடுங்க” என்றவன் விட்டால் போதும் என்று வண்டியை கிளப்பிகொண்டு சீட்டாய் பறந்துவிட்டான்.
அவனை பார்த்துக்கொண்டே “இவனுக்கு எப்போ தான் பொறுப்பு வர போகுதோ” என்று மணிவண்ணனிடம் சலித்துக்கொண்ட கிருஷ்ணகுமார் “எங்க போயிட போறான்... வீட்டுல போயி கவனிச்சுக்குறேன்” என்று சொன்னவர் தனக்காக காத்திருந்த தொழிலாளிகள் பிரச்சனையை சமாளிக்க அலுவலகத்தினுள் நுழைந்துக்கொண்டார்.
தானவீரன் அந்த வீட்டின் ஒரே ஆண் வாரிசு என்பதால் அவன் மீது குடும்பத்தில் அனைவருக்கும் அப்படியொரு பாசம். வீட்டின் செல்ல பிள்ளை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மத்தியில் செல்ல கண்ணனாக இருப்பவனுக்கு குறும்பும் சேட்டையும் அதிகம்.
அங்கே அவனை கண்டிக்க கூடிய இரண்டே பேர் அவன் அப்பாவும் மாமாவும் தான்.
அதிலும் அவன் திட்டு வாங்கும் போதெல்லாம் வீட்டு பெண்கள் அவன் உதவிக்கு வந்து விடுவார்கள்.
அதனாலோ என்னவோ அவன் எதற்குமே கவலை படாமல் பாடி திரியும் சுதந்திர பறவையாக சுற்றிக்கொண்டிருந்தான்.
விளையாட்டுத் தனமாக இருந்தாலும் திறமையானவன்.படிப்பை முடித்துவிட்டு வேலை வெட்டிக்கு செல்லாமல் எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் வெறுமனே திரிந்து கொண்டிருக்கிறான்.
சேகரும் கிருஷ்ணகுமாரும் அவனை அதற்காக திட்டும் போதெல்லாம் “ இப்போ அவசரமா அவன் வேலைக்கு போயி என்ன பண்ண போறான்? கொஞ்ச நாள் ஜாலியா இருந்துட்டு போகட்டுமே... எப்படியும் உங்க பிசினெஸ் எல்லாம் அவன் தானே பார்த்துக்கணும்” என்று செல்ல பேரனின் வாக்களத்திற்கு வந்துவிடுவார் ஜெயலக்ஷ்மி.
வீருக்கு அந்த டிரான்ஸ்போர்ட் தொழிலில் எல்லாம் பெரியதாக ஈடுபாடு இல்லையென்றாலும் அப்போதைக்கு அப்பத்தாவின் பேச்சுக்கு ஆமாம் சாமி போட்டு விட்டு திட்டிலிருந்து தப்பி விடுவான்.
சேகரும் கிருஷ்ணகுமாரும் கூட அவன் சம்பாதித்துத்தான் குடும்பம் நடக்க வேண்டும் என்ற சூழ்நிலை இல்லாததாலும் குறிக்கோளின்றி சுற்றுவதை தவிர அவனிடம் குறை என்று சொல்லி விட வேறு எந்த காரணமும் இல்லாமல் இருந்ததாலும் ஜெயலக்ஷ்மி சொல்லியது போல அவனை விட்டு பிடிக்கவே நினைத்திருந்தார்கள்.
திறமையானவன், அன்பானவன், எந்த தப்பு தாண்டாவிற்கும் போகமாட்டான்.
ஆனால், அவனிடம் இருக்கும் ஒரே பிரச்சனை முன் கோபமும் சட்டென்று கை நீட்டி விடும் பழக்கமும் தான்.
பல முறை கண்டித்தும் பார்த்தாயிற்று அவன் அதை மாற்றி கொள்வதில்லை என்ற முடிவில் இருக்கின்றான்.
கேட்டால் “ரௌத்திரம் பழகு என்று பாரதியாரே சொல்லியிருக்கார்” என்று ஒரே வரியில் அனைவரின் வாயையும் அடைத்து விடுவான்.
அன்று அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு சீக்கிரமே வந்து விட்டிருந்தார் கிருஷ்ணகுமார்.
காலையிலிருந்து தொழிலாளர்கள் பிரச்சனையில் ஆரம்பித்து அடுத்த வேலைகளும் வரிசை கட்டி நிற்க மூச்சு கூட விட நேரமின்றி ஓடியவருக்கு ஓய்வு வேண்டுமென்று தோன்ற சீக்கிரமே வீட்டிற்கு வந்து விட்டார்.
அவர் வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் சேகரும் வந்து விட இருவருக்கும் காபி போட்டுக்கொண்டு வந்து கொடுத்தார் சரோஜினி.
காபியை எடுத்து பருகிய கிருஷ்ணகுமார் “ வீர் எங்க? “ என்று தான் பேச்சை ஆரம்பித்தார்.
“காலையில் வெளியில் போனவன் இன்னும் வீட்டுக்கு வரலங்க “ என்று கணவனுக்கு பதில் சொன்னார் சரோஜினி.
அதே நேரத்திற்கு அங்கே ஈஸ்வரியுடன் வந்து சேர்ந்த ஜெயலக்ஷ்மி “ புருஷன் வந்ததும் வராததுமா... வீரை பத்தி வத்தி வச்சாச்சு போல” என்று கேட்டு கொண்டே சோபாவில் அமர்ந்துகொண்டார்.
“அம்மா, அவளை எதுக்கு திட்டுறீங்க. உங்க பேரன் பண்ணுறதெல்லாம் அவள் சொல்லி தான் எனக்கு தெரியனுமா? இன்னிக்கு கூட கம்பெனியில என்னாச்சு தெரியுமா...” என்று ஆரம்பித்தவர் காலையில் வீர் செய்த சாகசங்களை எல்லாம் சொல்ல தொடங்கியிருந்தார்.
அவர் சொல்லி முடிக்கவும் வீர் வீட்டிற்குள் நுழையவும் நேரம் சரியாக இருந்தது.
வண்டி சாவியை மேலே தூக்கி போட்டு பிடித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தவன் ஹாலில் மொத்த குடும்பமும் கூடியிருப்பதை பார்த்து விட்டு “ஆத்தி, ஒன்னு கூடிட்டாங்களே... டேய் வீரா அப்படியே எஸ்கேப் ஆகிடு. இல்லை மாமாவும் அப்பாவும் இன்னிக்கு உன்னை வச்சு செஞ்சிடுவாங்க...அபவுட் டர்ன் (about-turn)“ என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டே வந்த வழிய திரும்பி நடந்தவனை “வீர்” என்று அழைத்திருந்தார் சேகர்.
தந்தையின் குரல் காதில் கேட்டதும் ஒரு நொடி விழிகளை அழுந்த மூடி திறந்தவன் ‘மாட்டிகிட்டியே வீரா’ என்று காலை வெறும் தரையில் உதைத்தபடி திரும்பி தந்தையை பார்த்து “சொல்லுங்கப்பா” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான்.
உருகியதே என் உயிரே-கருத்து திரி
உங்கள் அன்பான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சகோஸ் :love::love::love:
pommutamilnovels.com