அத்தியாயம் 11
அவள் அதிர்ந்து நிற்க "வைஷு, நான் தருண்…தருண் தோமஸ். தோமஸ் குரூப்ஸ் கேள்விப்பட்டிருக்கியா? அது எங்களோடது தான். சிகெரெட், பொண்ணுங்கன்னு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. இது போல பார்ட்டிஸ்ல மட்டும் கொஞ்சமா ட்ரிங்க் பண்ணுவேன் அவ்ளோதான். உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்கலாமா?" நேரடியாக அவன் மனதில் நினைத்ததை அப்படியே சொல்லியிருந்தான்.
அவளுக்கு தான் இதற்குமுன் பார்த்திராத புதியவன் ஒருவன் திடீரென்று முகத்திற்கு நேரே வந்து கல்யாணத்திற்கு கேட்டதில் எப்படி எதிர்வினையாற்றுவது என்றும் தெரியவில்லை.
ஒருவாறு தன்னை சமாளித்துக்கொண்டு "நீங்க இதுக்கு முன்ன என்னை பார்த்திருக்கீங்களா?" என்று கேட்டாள்.
"இல்லை" ஒற்றை சொல் பதில் தான் அவனிடம்.
"ஓ… பார்த்ததும் காதலா…சினிமால வர மாதிரி? நிறைய படம் பார்ப்பீங்களா?" பார்வையால் அவனை அளவிட்டபடி நிதானமாக கேட்டாள்.
அவளின் நக்கல் படிந்த அந்தக் குரலுடன் இதழோரம் சின்னதாய் முறுவல் ஒன்று எட்டிப்பார்க்க காத்திருப்பது போன்று தெரிந்தது அவனுக்கு. அதைக் கண்டுகொண்டவன் அவள் விழிகளில் எதையோ தேடினான். அவள் உதட்டில் மறைக்க முயன்ற முறுவல் அவள் விழிகளில் மின்னியது.
அதில் அவன் காதலை மறுத்துவிடுவாளோ என்று இதுவரை இருந்த பதட்டம் மறைந்து நம்பிக்கை துளிர்விட்டிருக்க அது தந்த தைரியத்தில்,
"ஏன் இருக்க கூடாதா?" கேள்விக்கு பதிலை கேள்வியாகவே தந்தான் அவன்.
"என்ன தெரியும் என்னை பத்தி, கண்டதும் காதல்னு சொல்லுறீங்க?" அவள் கேட்க "இதுவரை ஒன்னும் தெரியாது… ஆனால், இப்போ உனக்கும் என்னை கொஞ்சம் பிடிச்சிருக்குன்னு தெரியும். பிடிக்காமல் என் கிட்ட நீ இவளோ பேசணும்னு அவசாயமில்லைன்னும் தெரியும். அதோட ரொம்ப முக்கியமா, உதட்டோரம் அந்தச் சின்ன சிரிப்பை மறைக்க முயற்சி பண்ணுறன்னும் தெரியும். மறைக்க வேணாமே...சிரிச்சா நானும் பார்த்து ரசிச்சுப்பேன்ல " என்று சொன்னான் அவன்.
அவன் பதிலில் சட்டென வாயடைத்துப் போய்விட்டாள் அவள். அவளை அவன் அணுகிய விதம் சரியா தவறா என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால், அது அவன் மீது அவளுக்கு ஒரு வித ஆர்வத்தை கொடுத்தது என்னவோ உண்மைதான்.
அவள் முகத்தை வைத்தே அகத்தை கண்டுக்கொண்டான் என்றதில் அவளுக்கு முகம் சிவந்தே போயிற்று. அவன் தன் மனதை படித்த வரை போதும் என்று எண்ணிய பெண்ணவள் அவனை முறைத்துப்பார்த்தாள்.
அவள் மனநிலையை அவன் சரியாக சொன்னதும் சட்டென மாறிய அவள் முகபாவத்தை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அதிலும் அவளை சரியாக கணித்துவிட்டான் என்பதில் பெருமை வேறு அவனுக்கு. தலையை சற்றே குனிந்து விரலால் மேலுதட்டை வருடியபடி மூண்டு வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு நிமிர்ந்து அவளை பார்த்தான்.
அவன் இதழோரம் சிரிப்பில் துடிப்பது அவளுக்கு தெரியாமலில்லை. லேசாக எரிச்சல் எட்டி பார்க்க ஆரம்பித்திருக்க அவனை முறைக்க முயன்றவள் பார்வையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கூட்டி அவனை பார்த்தாள்.
“பேசினா பிடிச்சிருக்குனு அர்த்தமா?” அவள் அவனை பார்த்தபடி கேட்க “பிடிக்காம இருந்தா நான் கேட்டதுக்கு ‘நாட் இன்டெரெஸ்ட்டேட்ன்னு’ சொல்லிட்டு போயிருப்ப. இல்ல குறைஞ்ச பட்சம் திட்டவாவது செஞ்சிருப்ப. நீ இன்னும் என் கூட நின்னு பேச்சை வளர்த்துட்டு இருக்கியே. அதோட சேர்த்து அந்த ரெண்டு முட்டை கண்ணுலையும் கோபமே தெரியலையே… சின்னதா ஒரு ஆர்வம் இருக்கிற மாதிரி தான் தெரியுது”என்றான்.
அவளிடம் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் நெஞ்சில் இருந்த பதற்றம், தடுமாற்றம், பயமெல்லாம் அவள் ஆற்றிய எதிர்வினையில் மொத்தமாக காணாமல் போயிருக்க இப்பொழுது மீன் போன்று வடிவம் கொண்டு அகண்டு விரிந்திருக்கும் அவளின் அழகிய நயனங்களை 'முட்டை கண்கள்' என்று அவளிடமே தைரியமாக கிண்டல் செய்யும் அளவிற்கு முன்னேறியிருந்தான்.
அவளையும் அவள் உணர்வுகளையும் வெகு எளிதாக கண்டுபிடித்து விடுகின்றான். இதற்குமேல் இவனிடம் மழுப்புவதும் உசிதமல்ல என்று நினைத்துக்கொண்டாள்.
அவன் பேசும் தோரணையும் அவன் உடல் மொழியுமே அவன் விளையாட்டிற்காக பேசவில்லை என்று அடித்துக்கூற அவன் விழிகளை ஆழ்ந்து பார்த்தாள். அதில் தெரிந்த நேர்மை அவனுடைய காதல் சிறுபிள்ளை விளையாட்டல்ல என்பதை அவளுக்கு உணர்த்தியிருக்குமோ என்னவோ.
அதையும் விட அவனை நேரில் பார்த்ததில்லையே தவிர தோமஸ் குரூப்ஸ் பற்றியும் அதை செவ்வனே நிர்வகித்து வரும் இளம் தொழிலதிபன் தருண் தோமஸை பற்றியும் அவள் நிறையவே கேள்வி பட்டிருக்கிறாள். சொல்லப்போனால் அவளது தந்தை கிருஷ்ணகுமாரும் கூட ஒருமுறை அவனை பற்றி புகழ்ந்து பேசியதாக நியாபகம்.
அவளின் வீட்டிலும் மெதுவாக அவளது திருமண பேச்சுகள் ஆரம்பமாக தொடங்கியிருப்பதையும் அறிந்தே இருந்தாள் வைஷாலி. எல்லாவற்றையும் மனதிற்குள் சீர்தூக்கி பார்த்தாள். எப்படியும் விரைவில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கத்தான் போகிறார்கள். அப்படி இருக்க இவனுக்கு ஏன் அந்த வாய்ப்பை கொடுக்க கூடாது என்றும் தோன்றியது.
அவளிடம் சிறு மௌனம். ஆழ்ந்த மூச்சொன்றும் எடுத்துக்கொண்டாள்.
"அப்பா கிட்ட பேசுங்க. அவர் சம்மதிச்சா எனக்கும் சம்மதம்" என்று சொன்னாள்.
அவள் அப்படி சொல்லியதும் இன்பக்கமாக அதிர்ந்து "ஹேய், நிஜமா தான் சொல்லுறியா" குரலில் துள்ளலுடன் கேட்டான்.
ஒற்றைக்கையால் தலையை கோதியபடி நின்ற இடத்திலேயே ஒரு சுற்று வட்டமடித்து மீண்டும் அவள் முகம் பார்த்தவன் இதழ்களில் புன்னகையுடன் " வைஷு, நிஜம் தானா? உனக்கு சம்மதமா?" என்று கேட்டான்.
அவன் குரலில் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு தழுதழுப்பு. மட்டற்ற மகிழ்ச்சியின் வெளிப்பாடு அவனது குரலில் தெரிந்தது. இதழ் பிரித்து முத்துப்பற்கள் தெரிய சிரித்துக்கொண்டே நின்றான்.
பெரியதாய் எதையோ சாதித்துவிட்டவன் போல் உணர்கிறான் என்பதை அவன் நடவடிக்கைகளை பார்த்திருந்த அவளால் நிச்சயமாக புரிந்துக்கொள்ள முடிந்தது.
தனது சம்மதம் அவனை இந்தளவில் மகிழ்விக்கும் என்று அவள் நினைக்கவேயில்லை. ஏதோ பார்த்ததும் அவளை பிடித்து போய் வந்து கேட்கின்றான் என்று தான் நினைத்தாள். அவன் அவளை சந்தித்து கிட்ட தட்ட சுமார் ஒரு மணி நேரம் இருக்கலாம். அந்த ஒரு மணி நேரத்திற்குள் ஒருவரை எந்தளவுக்கு காதலித்து விட முடியும்?
சாதாரணமாக எதிர் பாலினத்தின் மீது தோன்றும் ஈர்ப்பாக இருக்கலாம். அதற்கு கொஞ்சம் முக்கியதத்துவம் கொடுத்து அந்த ஈர்ப்பை காதலாக மொழிபெயர்த்து கல்யாண பந்தத்திற்கு வித்திடுகிறான் என்று தான் நினைத்திருந்தாள் வைஷாலி.
மொத்தமாக அவனது ஆசையை அப்படியே ஒதுக்கிவிட்டு போகமுடியாத அளவிற்கு அவன் மேல் அவளே எதிர்பாராமல் ஒரு ஆர்வமும் ஏற்பட்டுவிட அப்பாவிடம் பேசி பார்க்கும் படி சொல்லிவிட்டாள்.
ஆனால், இவனானால் அவள் சம்மதமே ஏதோ புதையல் கிடைத்துவிட்டது போன்று உணர்பவனாக அவளின் முன்னால் நின்றிருப்பதை பார்க்க அவளுக்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது.
தன்னால் ஒருவரை இந்தளவு ஈர்க்க முடியுமா என்று சிறு வியப்பும் கூட சேர்ந்துக்கொண்டது.
"வைஷு, என்னாச்சு... சொல்லு நிஜமா சம்மதமா?" மனதில் சுற்றி வந்த எண்ணங்களில் மூழ்கியிருந்தவள் அவன் கேட்ட கேள்விக்கு தான் இன்னும் பதில் சொல்லவில்லை என்பது அவன் அதே கேள்வியை மீண்டும் கேட்ட பிறகே உரைத்தது.
"ம்ம்ம்... ஆனால், இப்பவும் சொல்லுறேன். அப்பா கிட்ட பேசுங்க, அவர் சம்மதம் சொன்னா மட்டும் தான் இது நடக்கும்" நிதானக்குரலில் சொன்னவள் “நான் கிளம்புறேன்...டைம் ஆகுது” என்றபடி திரும்பி நடந்தாள்.
இரு கைகளையும் இடுப்பில் ஊன்றியபடி செல்லும் அவள் முதுகையே சிரிப்புடன் பார்த்து இருந்தவன் என்ன நினைத்தானோ “ஹேய், வைஷு” என்று மீண்டும் அழைத்தான்.
அவள் நடந்து கொண்டே தலையை மட்டும் திருப்பி அவனைப் பார்க்க “தேங்க்ஸ்…சம்மதிச்சத்திற்கு தேங்க்ஸ்” அவனை விட்டு சற்று தூரம் சென்று கொண்டிருந்தவளுக்கு கேட்க வேண்டும் என்று உரக்கச் சொன்னான்.
“இன்னும் முழுசா சம்மதிக்கல… அப்பா சம்மதம் சொன்னா மட்டும் தான். அது நினைவிருக்கட்டும்” கால்கள் நடையை நிறுத்தவில்லை என்றாலும் அவனுக்கு பதில் சொல்லிவிட்டே சென்றாள்.
சத்தமாக சிரித்தபடி “அது போதுமே” என்று அவன் சொல்லியது காதில் விழ அவனுக்கு முதுகு காட்டி நடந்தவளின் இதழ்களிலும் புன்னகை விரிந்திருந்தது.
கேட்டதும் சம்மதம் கிடைக்கும் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் அப்பாவுக்கு சம்மதம் என்றால் தான் தனக்கும் சம்மதம் என்று மறைமுகமாக காதல் செய்வது எல்லாம் முடியாது, கல்யாணம் வேண்டுமானால் செய்துகொள்கிறேன் அதுவும் வீட்டினரின் சம்மதத்துடன் என்று சொல்லிவிட்டு போகும் அவள் சாதூரியத்தை மனதோடு மெச்சிக்கொண்டு அப்பொழுதே கிரிஷ்ணகுமாரை தேடி மீண்டும் ஹோட்டலுக்குள் சென்றிருந்தான்.
நேராக அவர் முன்னே சென்று நின்றவன் தனது விருப்பத்தை அவருக்கு தெரியப்படுத்தியிருக்க அதை எதிர்பார்த்திராதவர் முதலில் அதிர்ந்தாலும் புகழ்பெற்ற தோமஸ் குரூப்ஸின் வாரிசான தருண் தோமஸே அவரின் பெண்ணை கேட்பதில் அவருக்கு உள்ளூர பெருமையாகவும் இருந்தது. இருந்தாலும் வீட்டில் கலந்து பேசி சொல்வதாகவே அவனுக்கு பதிலளித்திருந்தார்.
அடுத்த நாள் கிருஷ்ணகுமாருக்கு அவனே அழைப்பெடுத்திருந்தான். அவரது முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து அவன் கேட்ட விதம் அவன் அவரின் மகளை திருமணம் செய்து கொள்வதில் காட்டும் ஆர்வத்தையும் முக்கியத்துவத்தையும் அவருக்கு தெளிவாக உணர்த்தி இருந்தது.
ஆகவே வீட்டிற்கு முறைப்படி பெண் கேட்டு வரும்படி அவனிடம் சொல்லி விட்டு வைத்தார்.
அதன் பிறகு தாமதிப்பானா என்ன? அவனது காதல் தேவதையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் தன்னுடனேயே கூட்டி சென்று விட வேண்டும் என்று அனைத்து வேலைகளையும் துரித கதியில் நடத்தியிருந்தான் தருண்.
இதோ இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்ற நிலையில் இப்பொழுது தங்கள் வருங்கால துணையுடன் பூங்காவில் அமர்ந்து பழைய நினைவுகளை மீட்டிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்.
எங்கிருந்தோ பந்து ஒன்று வந்து அவள் மடி மீது விழ நினைவுலகம் கலைந்து நிஜ உலகத்திற்கு வந்திருந்தனர் தருணும் வைஷாலியும்.
அவள் மடி மீது கிடந்த பந்தைப் பார்த்து விட்டு பந்து வந்த திசையை நிமிர்ந்து பார்க்க சுமார் மூன்று வயதிருக்கும் போல, குழந்தை ஒன்று தத்தி தத்தி அவளை நோக்கி ஓடிவந்துக் கொண்டிருந்தது.
அவள் அருகே வந்த குழந்தையை பார்த்து வைஷாலி மென்மையாக சிரிக்க "ஆண்டி, பால் (ball) கொது(டு)ங்க" என்றான் அவனது மழலை மொழியில்.
வைஷாலியும் அந்த பந்தை எடுத்து அந்த குட்டி கண்ணனிடம் நீட்ட சட்டென்று அதை பறித்து தன்னிடம் வைத்துக்கொண்டான் தருண்.
விழிகள் சுருக்கி அந்த குழந்தையை பார்த்தவன் "ஆண்டி மேல பந்தை போட்டிங்க தானே. அவங்களுக்கு வலிக்கும்ல. சோ, பந்தை தர மாட்டேன்" என்றான் முயன்று கடினமாக்கி கொண்ட முக பாவனையுடன்.
குழந்தையோ அவனது மிரட்டலில் சற்றே அஞ்சி இதோ அழப்போகிறேன் என்று தனது இதழ்களை பிதுக்கி கொண்டு நிற்க அந்த அழகை காணவே கண்கள் போதவில்லை வைஷாலிக்கு.
"ஐயோ, எவளோ கியூட்டா பண்ணுறான் பாருங்க" என்று குழந்தையின் கன்னம் கிள்ளி கொஞ்சினாள்.
அவன் மிரட்டிக்கொண்டிருந்த நேரம் அவள் குழந்தையை கொஞ்சியிருக்க அந்த குறும்பு கண்ணனோ அவளோடு மேலும் ஒட்டி நின்றுக்கொண்டு "ஆண்டி...பால்" என்று இதழ்களை இன்னும் அதிகமா பிதுக்கி காட்டினான். அதில் மொத்தமாக உருகியே விட்டாள் வைஷாலி.
"ச்சே பாவம்...கொடுத்துடுங்களேன் தருண்" என்று அவளும் முகத்தை குழந்தையை போல் வைத்துக்கொண்டு அவனிடம் கெஞ்சலாக கேட்க தனக்கு முன்னால் இருந்த இருவரின் அழகிலும் சொக்கி தான் போனான் தருண்.
"பந்து வேணுமா?" என்று குழந்தையிடம் கேட்க அவனது தலையோ மேலும் கீழுமாக வேகமாக ஆடியது."ஆனால், நீங்க பண்ண வேலைக்கு பனிஷ்மென்ட் கொடுக்கணும்ல?" என்று தருண் கேட்க குழந்தையின் முகம் மீண்டும் சுருங்கி போயிற்று.
அதை ரசித்த தருண் "உங்க பெயரென்ன?" என்று கேட்டான் குழந்தையோ அவனுக்கு பதில் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டே நிற்க அவனை பார்த்து மென்மையாக சிரித்த தருண் "சரி பெயர் சொல்ல வேணாம். பட், அங்கிளுக்கு ஒரு கிஸ் கொடுத்துட்டு பந்தை வாங்கிப்பிங்களாம்" என்று அவன் சொல்ல குழந்தையோ வைஷாலியின் முகத்தை பார்த்தது.
தாய் அருகே இல்லாத சமயத்தில் அவளிடம் அடைக்கலம் நாடியதோ என்னவோ. அதை புரிந்துகொண்டவளாக குழந்தையை அணைத்து அவன் கன்னத்தில் முத்தம் வைத்தவள் தருணிடம் போக சொல்லி கண்களால் சைகை செய்ய குழந்தையும் மெல்ல தயங்கி தயங்கி அவனிடம் சென்றது.
அவன் முத்தம் வைக்க ஏதுவாக தருணும் உடலை வளைத்து சற்றே குனிந்து அவன் கன்னத்தை காட்ட பட்டும் படாமலும் அவனின் பட்டு இதழ்களால் தருணுக்கு முத்தமிட்டவன் தருண் எதிர்பார்க்காத நேரத்தில் அவன் கையில் இருந்த பந்தை பிடிங்கி கொண்டு குடு குடுவென ஓடியிருந்தான்.
அவனின் சேட்டையை பார்த்து வாய்விட்டே சிரித்திருந்தனர் இருவரும். மனம் நிறைந்த மகிழ்ச்சியான தருணம் அது.
அந்த நேரத்திற்கெல்லாம் குழந்தையின் அன்னையும் அவனை தேடி வந்திருக்க அவனும் நேராக அவன் அன்னையிடம் ஓடிவிட்டான்.
இவர்கள் அவனின் தாயை பார்த்து சினேகமாக புன்னகைக்க அந்த பெண்ணும் சிறு தலையசைப்புடன் புன்னகைத்து விட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார்.
"குழந்தை ஸ்வீட்டா இருக்கான்ல" என்று வைஷாலி சொல்ல "எஸ்...ஸ்மார்ட்டாவும் இருக்கான்" என்று சொன்னான் தருண்.
அதன் பிறகு என்ன பேசுவதென்று தெரியாமல் இருவருக்குள்ளும் சிறு அமைதி நிலவியது.
அதை கலைக்கும் விதமாக ஒலித்தது தருணின் குரல்.
"வைஷு" என்று அவள் பெயரை அழைத்தவாறு அவள் மடியில் கிடந்த கரத்தை எடுத்து தனது கரத்திற்குள் பொத்தி வைத்துக்கொண்டான்.
ஏதோ முக்கியமான விஷயம் சொல்ல நினைக்கின்றான் என்று வைஷாலிக்கு அவனது பாவங்களே புரிய வைக்க அவள் எதுவும் பேசாமல் அவன் சொல்வதை கேட்க தயார் என்னும் தோரணையில் அவன் முகம் பார்த்து அவன் பேசுவதற்காக காத்திருந்தாள்.
"வைஷு, இன்னிக்கு நான் உன்னை பார்க்க வந்தது கல்யாணத்துக்கு முன்னாடி உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணுறதுக்காக மட்டுமில்லை. உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்" என்று அவள் முகம் பார்த்தான்.
அவள் இடைபுகாமல் அவனே தொடர்ந்து பேசுவதற்காக காத்திருந்தாள்.
"உனக்கு ஒ.சி.டினா(OCD) என்னனு தெரியுமா? அதை பத்தி ஏதும் ஐடியா இருக்கா?" என்று கேட்டான்.
"ம்ம் ஆப்செசிவ் கம்பல்ஸிவ் டிசார்டர் தானே…கேள்வி பட்டிருக்கேன். அதில் பாதிக்க பட்டவங்க ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்வாங்க. ரொம்ப ஆர்கனைஸ்ட்டா(organised) இருப்பாங்க...அதிகமா சுத்தம் பார்ப்பாங்க. இது போல கொஞ்சம் தெரியும். ஏன் கேட்குறீங்க?" என்று கேட்டாள்.
"எனக்கு அந்த பிரச்சனை இருக்கு வைஷு" என்றான்.
அவன் குரல் நிதானமாக இருந்தாலும் அவள் அதை எப்படி எடுத்துக்கொள்வாளோ என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடிக்கொண்டுதான் இருந்தது.