அத்தியாயம் 16
யார் எங்கு தேங்கி நின்றாலும் எதை பற்றியும் கவலைக்கொள்ளாமல் முன்னோக்கி நகர்வது தானே காலத்தின் கடமை. சந்திரன் மறைந்து சூரியன் உதித்திருக்க அவர்களுக்காக புலர்ந்திருந்தது புத்தம் புதிய காலை பொழுது.
இரவெல்லாம் கண் விழித்து படித்ததில் சற்றே அசந்து உறங்கிக்கொண்டிருந்தாள் மதுஷிகா.
அலைபேசியில் குறுஞ்செய்தி வந்து விழுந்தது. மெத்தை மீது வைத்துக்கொண்டு படுத்திருந்த அலைபேசி அதிர்ந்ததில் கொஞ்சமாக அசைந்தாளே தவிர விழிப்பு தட்டவில்லை. மாறாக அருகே இருந்த தலையணையை மேலும் இறுக அணைத்தபடி விலகி செல்ல துடித்த நித்ரா தேவியை இழுத்து பிடித்தாள்.
ஒரு ஐந்து நிமிடங்களே கடந்திருக்கும் மீண்டும் அலைபேசி அதிர்ந்தது. இம்முறை குறுஞ்செய்தி அல்ல. அழைப்பு வந்திருப்பதாய் அழைப்பு மணியுடன் கூடி அதிர்ந்த அலைபேசி அவளது உறக்கத்தை கொஞ்சமாக கலைத்துவிட்டிருந்தது.
கண்களை மூடியபடியே கையால் துழாவி அலைபேசியை ஏற்று காதில் வைத்தாள்.
"குட் மோர்னிங் மது" என்று வைஷாலியின் குரல் காதில் விழுந்ததும் "மோர்னிங் க்கா" சோம்பி வந்த அவள் குரலிலேயே இன்னும் உறங்கி கொண்டிருக்கிறாள் என்று தெரிந்துகொண்டாள் வைஷாலி.
"அடிப்பாவி இன்னும் தூங்குறியா? பரீட்சைக்கு நேரமாகலையா?அப்போவே நினைச்சேன் மெசேஜ் போட்டும் பதில் வரலையேன்னு.அதுதான் எதுக்கும் கால் பண்ணி பார்த்தேன்" என்று வைஷாலி சொல்ல பட்டென கண்களை திறந்தவள் நேரத்தை பார்க்க பரீட்சை தொடங்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் தான் இருந்தன
"பாவி அக்கா....கொஞ்சம் சீக்கிரம் கால் பண்ணியிருக்க கூடாதா..." என்று அரக்க பறக்க சொல்லிக்கொண்டே வைஷாலியின் பதிலுக்கு கூட காத்திராமல் அலைபேசியை அணைத்தவள் நாற்காலியின் மீது காயப் போட்டு வைத்திருந்த துவாலையை எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி ஓடியிருந்தாள்.
ஹாஸ்டல் குளியலறை என்பதால் அங்கே ஏற்கனவே சில மாணவிகள் தங்களது முறைக்காக காத்திருக்க "போச்சு போச்சு...இப்படியாடி தூங்கி தொலைப்ப. இவளுங்களையெல்லாம் உள்ள விட்டா ஒருத்தி ஒரு மணி நேரத்துக்கு குளிப்பாளுகளே. ம்ஹும்...இது சரி படாது மது...பாவம் புண்ணியம் பார்க்காமல் உள்ளே நுழைஞ்சிடு" என்று தனக்கு தானே பேசிகொண்டவள் அப்பொழுதுதான் அங்கே ஒரு குளியலறையின் கதவு உள்ளிருந்து திறக்க படுவதை கவனித்தாள்.
அந்த கதவு திறந்த அடுத்த நொடியே அடுத்த பெண்களும் நீ நான் என்று போட்டி போட்டுக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்திருக்க இடுப்பில் கையை குற்றி நின்றபடி சலிப்பாக ஒரு பெருமூச்சை இழுத்து விட்டாள் மது.
'பேசாமல்... உடுப்பை மட்டும் மாத்திட்டு கிளம்பிடுவோமா?' என்று அவள் யோசிக்கும் போதே அவள் மூளைக்குள் உதித்த யோசனையில் கண்கள் பளபளத்தன.
பளபளத்த கண்கள் இரண்டையும் அடுத்த கணமே சுருக்கி முகத்தை வில்லத்தனமாக வைத்துக்கொண்டவள் 'மது ஸ்டார்ட்...ஆக்ஷ்ன்' என்று மனதிற்குள் நினைத்தபடி "ஐயோ...அம்மா... பாம்பு பாம்பு...ஓடுங்க பாம்பு... " என்று சத்தம்போட்டு கத்தினாள்
பாம்பென்றால் படையே அஞ்சுமாம் இதில் இவர்கள் மட்டும் எம்மாத்திரம் அங்கு நின்றிருந்த மாணவியர் கூட்டமும் "ஐயோ...எங்க ...எங்க பாம்பு..." என்று கேட்டபடி கால்களை மாற்றி மாற்றி மேலே தூக்க முயன்றுகொண்டே ஆளுக்கு ஒரு மூலையாக தெறித்து ஓட குளியலறையில் இருந்த பெண்கள் கூட சிலர் துவாலையை சுற்றிக்கொண்டு வெளியில் ஓடிவந்திருந்தனர்.
அவர்கள் அங்கே அல்லோல கல்லோல பட்டுக்கொண்டிருக்க அதற்கு காரணமானவளோ சட்டென அவளுக்கு மிக அருகில் இருந்த குளியலறை ஒன்றுக்குள் புகுந்துவிட்டிருந்தாள்.
அதன் பிறகே அவள் சொன்ன பொய்யை சுதாரித்துக்கொண்ட மாணவிகள் கடுப்பில் "ஏய்... மது..பொய்க்காரி…வாடி வெளில" என்று அவள் இருந்த குளியலறையின் கதைவை உடைக்காத குறையாக தட்டிக்கொண்டிருக்க அதை எல்லாம் காதிலேயே நுழைத்துக் கொள்ளாமல் தன் காரியத்தில் கவனமாகியிருந்தாள் பெண்ணவள்.
குளிப்பதற்கு எல்லாம் அவளுக்கு இப்பொழுது நேரமிருக்கவில்லை. வேகவேகமாக காலை கடன்களை முடித்துக்கொண்டு பல் துலக்கி, முகம் கழுவி, உடை மாற்றி தயாராகினாள்.
வெளியில் வருவதற்கு முன் மெல்ல கதவை திறந்து அவள் மேல் கொலை வெறியில் இருந்த மாணவிகளை எட்டி பார்த்தாள். அவர்களுக்கும் நேரமாகிக்கொண்டிருக்க இவளிடம் சண்டைபோடுவதற்கும் அவகாசமில்லாமல் கிடைத்த குளியலைகளுக்குள் புகுந்துக்கொண்டிருந்தனர்.
"அப்பாடா தப்பிச்சோம்...இவளுங்க பார்குறதுக்குள்ள எஸ்கேப் ஆகிடனும்... இல்லன்னா குனிய வச்சு கும்மிடுவாளுங்க" என்றபடி மெல்ல வெளியில் வந்தவள் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக அறைக்கு ஓடியிருந்தாள்.
தலை முடியை மட்டும் சரி செய்துகொண்டு புத்தக பையை எடுத்துக்கொண்டவள் பரீட்சை மண்டபத்தை நோக்கி ஓட்டமெடுத்திருந்தாள்.
***
இங்கே மதுவுடன் பேசிவிட்டு தாமதமாக எழுந்துவிட்ட காரணத்தினால் அரக்க பறக்க எழுந்து அவசரமாக தனது அழைப்பையும் துண்டித்துவிட்டு ஓடிய தங்கையை நினைத்து நகைத்தப்படி தலையை இருபுறமும் ஆட்டிக்கொண்டே அலைபேசியை மேசையின் மீது வைத்தாள் வைஷாலி.
அப்பாவும் மாமாவும் நேரத்திற்கே அலுவலகத்திற்கு கிளம்பியிருக்க பாட்டியும் அத்தையும் கூட காலை உணவை முடித்துக்கொண்டு தத்தமது வேலையை பார்க்க கிளம்பி விட்டிருந்தனர்.
சரோஜினி வழக்கம் போல சமயலறைக்குள் நுழைந்துவிட வைஷாலி மட்டுமே அங்கே சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்தாள்.
இன்று அவள் வழக்கத்துக்கு மாறாக சற்று தாமதமாக எழுந்துக்கொண்டதன் காரணமாக தனியாக பசியாற வேண்டியதாக போயிற்று.
காலை உணவை முடித்துக்கொண்டு சரோஜினியின் கைப்பக்குவத்தில் அவளுக்கு பிடித்தது போல சுடச் சுட ஆவி பறக்க நறுமணம் கமழ்ந்த காபியை ருசித்து பருகிக்கொண்டிருந்தாள் அவள்.
திருமணத்திற்கு இன்னும் சில தினங்களே மீதமிருக்க அவளை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று தந்தை உத்தரவிட்டு சென்றிருந்ததால் அவளுக்கு இன்று பெரியதாக செய்வதற்கும் ஒன்றுமிருக்கவில்லை.
நிம்மதியாக காப்பியை ரசித்து குடிக்க கூடிய சூழல் அமைந்திருக்கையில் அதை விடுவாளா என்ன?
கையில் ஒரு புதினமும் இருக்க கண்கள் அதிலும் இதழ்கள் காபி கப்பிலுமாக இருக்க ஒரு மிடறு காபியை உறிஞ்சு, இமைகளை மூடி, அதன் சுவையை ரசித்து தொண்டைக்குழிக்குள் இறக்கிய பின் கண்களை திறந்து நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் மாடிப் படியிலிருந்து இறங்கி வந்த தானவீரன் விழுந்தான்.
இருவரின் விழிகளும் ஒரு நிமிடம் சந்தித்துக்கொண்டன. வைஷாலி மெதுவாக சிரிக்க அவன் இதழ்கள் பதிலுக்கு கொஞ்சமே கொஞ்சம் வளைந்து கடமைக்கென புன்னகைத்தன.
நேற்றைய நிகழ்வு வைஷாலியை பொருத்தவரை அவர்களுக்கு இடையில் நடக்கும் வழக்கமான சீண்டலாகவே இருக்க தானவீரனுக்கு அது அப்படி இருக்கவில்லை போலும்.
அதிலும் இதுநாள் வரை அவளை உரிமையாக சீண்டி விளையாடிவனை 'உன் எல்லையில் நின்றுகொள்' என்று சேகர் கூறியது நெஞ்சில் குத்தியது. ஈஸ்வரி வேறு அவர்களின் திருமணத்தை பற்றிய பேச்சை எடுத்ததும் சங்கடமாக இருக்க மேற்கொண்டு எதையும் குழப்பி விடாமல் கவனமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தான்.
அதற்கு ஏற்றாற்போல் அவளிடமிருந்து விலகி இருக்க யோசித்துவிட்டான் அவன்.
நேரே வாசலை நோக்கி நடந்தவனை "வீர்' என்று அழைத்த சரோஜினியின் குரல் நிறுத்தியிருந்தது.
"சொல்லுங்க அத்தை" என்று அவன் திரும்பி பார்க்க "என்னப்பா எதுவும் சாப்பிடாமல் போற?" என்று கேட்டார்.
"கொஞ்சம் வேலை இருக்கு அத்தை. நான் வெளியில் சாப்பிட்டுக்குறேன்" என்று மேலும் ஒரு அடி எடுத்து வைக்க "வீர், காப்பியாவது குடிச்சிட்டு போ. இங்க வந்து உட்கரு காபி எடுத்துட்டு வரேன்" என்று சாப்பாடு மேசையின் இருக்கையை காட்டிவிட்டு அவர் அவனின் பதிலுக்கு கூட காத்திராமல் மீண்டும் சமயலறைக்குள் நுழைந்துவிட்டார்.
அவனுக்கும் நல்ல பசி தான். ஆனால், வைஷாலி அங்கே அமர்ந்திருப்பதை பார்த்தவனுக்கு நேற்று தான் அவளிடம் நடந்து கொண்ட விதமும் அவளது கலங்கிய விழிகளும் கண்முன்னே வந்து போக அவளுடன் சேர்த்து காலை உணவையும் தவிர்த்து வெளியே செல்ல எத்தனித்தவனை தடுத்து நிறுத்தியிருந்தார் சரோஜினி.
அவன் ஒரு நொடி தயங்கி பின் சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்ததை வைஷாலியும் கவனித்திருந்தாள். ஆனால், எதுவும் பேசவில்லை.
அவளின் விழிகள் கையில் இருந்த புத்தகத்தில் நிலைத்திருக்க அவள் எதிரில் அமர்ந்திருந்த வீர் அலைபேசியை பார்த்துக்கொண்டிருந்தானே தவிர மறந்தும் அவள் புறம் திரும்பவில்லை.
கையில் காபியுடன் வந்த சரோஜினி அதை அவன் முன்னே நீட்ட அவனும் அமைதியாகவே வாங்கிக்கொண்டான்.
அவன் முன்னே இருந்த தட்டை திருப்பி வைத்து அதில் இரண்டு தோசைகளை எடுத்து வைத்தவர் கொஞ்சம் சட்னியும் வைத்து "அப்படியே ஒரு வாய் சாப்பிட்டு போடா. ரெண்டு தோசை சாப்பிட எவ்வளவு நேரம் ஆகப் போகுது. நைட்டும் ஒன்னும் சாப்பிடல" என்றார்.
"இல்ல அத்தை நேரமாகுது நான் கிளம்பனும்" என்று அவன் மறுக்க "சொல்லுறேன்ல" என்று சின்ன அதட்டலுடன் தோசையை பிட்டு அவன் வாய்க்குள் திணித்திருந்தார்.
அவர் ஊட்டிவிட ஒரு நான்கு வாய் உண்டிருப்பான் புத்தகத்தில் படிந்திருந்த வைஷாலியின் விழிகள் மெல்ல மேலெழுந்து அவன் முகத்தை பார்த்தன.
அவள் முகத்தை அவன் பார்க்கவில்லை என்றாலும் அவளின் பார்வை அவன் மீது படிந்திருப்பதை அவனால் நன்கு உணர முடிந்தது. கண்டுகொள்ளவில்லை அவன். இன்னும் இரண்டு வாய் தோசை வாங்கி கொண்டவன் "போதும் அத்தை. டைம் ஆகிடுச்சு" என்றான்.
நாற்காலியில் இருந்து எழுந்தபடியே பாதி காபியை மட்டுமே அவசரமாக குடித்தவன் மீதியை அப்படியே வைத்துவிட்டு "வரேன் அத்தை" என்று விடைபெற்று கிளம்பியிருந்தான்.
அவசரமாக செல்பவனையே பார்த்துக்கொண்டிருந்த சரோஜினி "என்னாச்சு இவனுக்கு? நீங்க ரெண்டு பேரும் ஒரே இடத்துல இருந்தா ஒரு நிமிஷம் கூட சண்டை போடாமல் இருக்க மாட்டீங்களே. இன்னிக்கு என்ன இவ்வளோ அமைதியா போறான்?" வைஷாலியிடம் கேட்டார் சரோஜினி.
வைஷாலி பதில் எதுவும் பேசாமல் இதழ்களை பிதுக்கி தோள்களை உலுக்கிக்கொள்ள அவளையும் ஒரு மார்கமாக பார்த்தவர் "நீ எதுவும் சொன்னியா அவனை?" என்றார்.
வைஷாலியின் பார்வை அவர் மீது அழுத்தமாக படிய "இல்லைன்னா இல்லன்னு சொல்லேண்டி. எதுக்கு முறைக்குற?" என்றபடி அவரும் தட்டில் தோசையை போட்டுகொண்டு அவள் அருகே அமர்ந்துவிட வைஷாலியின் பார்வை இப்பொழுது வாசலில் காலனி அணிந்துகொண்டிருந்த தானவீரனில் படிந்தது.
"ஒருவேளை நேத்து ஈஸ்வரி பேசினதை நினைச்சு மனசை போட்டு குழப்பிட்டிருக்கனோ?" என்று சரோஜினி தனக்கு தானே புலம்புவதாக எண்ணிக்கொண்டு சத்தமாகவே சொல்லியிருக்க
"என்ன பேசினாங்க?" என்று கேட்டாள் வைஷாலி.
"அது... ஒண்ணுமில்லை டா...இப்போ எதுக்கு அது எல்லாம்" என்று சரோஜினி இழுத்தார்.
அதே நேரம் தானவீரன் புறப்பட்டுவிட்டதை அவன் வண்டி சத்தமும் உறுதி செய்ய மீண்டும் ஒருமுறை வாசலை திரும்பி பார்த்து விட்டு தாயிடம் திரும்பியவள் " பரவால்ல சொல்லுங்கம்மா" என்று அவரை ஊக்கினாள்.
"அது ஈஸ்வரி அத்தைக்கு உனக்கும் வீருக்கும் கல்யாணம் செய்து வைக்கணும்னு எண்ணம் இருந்திருக்கும் போல. நேத்து என் கிட்ட அதை பத்தி சொன்னாங்க" என்று மெதுவாக ஆரம்பித்தார்.
"ஓஹ்..." என்று சொன்ன வைஷாலியின் எண்ணங்களில் தானவீரனின் விசித்திர நடவடிக்கைக்கும் இதுக்கும் தொடர்பிருக்குமோ என்ற யோசனை.
"அதுக்கு நீங்க என்ன சொன்னிங்க?" என்று அவள் நிதானமாகவே கேட்க "நான் சொல்ல என்ன இருக்கு... அத்தை சொல்லும் போது வீரும் அங்க தான் இருந்தான். அப்படியெல்லாம் எந்த எண்ணமும் இல்லைனு அவனே சொல்லிட்டான். அதுனால பிரச்சனை அதோட முடிஞ்சிருச்சு" என்று பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்திருந்தவர் தட்டை எடுத்துக்கொண்டு எழுந்துக்கொள்ள வைஷாலியின் முகம் யோசனையில் சுருங்கியிருந்தது.
"நான் ஒருத்தி கல்யாணம் ஆகப்போற பொண்ணுகிட்ட என்ன பேசுறதுன்னு தெரியாமல் உளறிட்டிருக்கேன். நீ ஒன்னும் போட்டு குழப்பிக்காதம்மா' என்று அவள் தலையை வருடி சொன்னவர் "சாயங்காலம் தருண் வீட்டிலிருந்து வரேன்னு சொல்லியிருக்காங்க. கல்யாண ஜவுளி எடுக்க போகணுமாம். ரெடியா இரும்மா போயிட்டு வந்திடுவோம்" என்றுவிட்டு மகளின் முகம் பார்த்தார்.
அவள் மென்மையாக சிரித்துக்கொண்டே "சரிம்மா... எல்லாரும் வரங்களா?" என்று ஆர்வமாக கேட்க மகளை தேவையில்லாததை எல்லாம் பேசி குழப்பிவிட்டோமோ என்ற எண்ணத்திலிருந்து மீண்டிருந்தார் அந்த தாய்.
"உன் மாமியாரும், நாத்தனாரும் கட்டாயம் வராங்கலாம். வீட்டு ஆண்கள் வரமுடியுமான்னு தெரியலன்னு சொன்னாங்க. ஆனால், மாப்பிள்ளை வருவாருன்னு சொன்னாங்க" என்றுவிட்டு சென்றிருந்தார் சரோஜினி.
வீட்டிலிருந்து புறப்பட்டிருந்த தானவீரனின் வண்டி ஒரு நகை கடையின் முன்னால் தான் வந்து நின்றது.
கடையினுள் நுழைந்தவனை வரவேற்ற பெண்ணிடம் "இதை சரி செய்யணும்" என்றபடி நேற்று அவனால் அறுந்து போன வைஷாலியின் பிரஸ்லெட்டை எடுத்து காட்டினான்.
அந்த பெண்ணும் அவனை பழுதடைந்த நகைகளை திருத்தும் பகுதிக்கு அழைத்துச்சென்றார்.
அங்கே அவன் நீட்டிய நகையை வாங்கி ஆராய்ந்து பார்த்த ஆசாரி "சரி பண்ணலாம் தம்பி. ஆனால், வெறுமனே சரி செய்யுறது கொஞ்சம் கஷ்டம். எக்குத்தப்பா அறுந்து போச்சுது. வேறு ஏதும் டிசைன் போல வச்சு இந்த அறுந்த தடம் தெரியமல் புதுசு போல ரெடி பண்ணிடலாம்" என்றார்.
"வேற டிசைனா...என்ன மாதிரி?" என்று வீர் கேட்க "ஏதும் பூ வடிவம், ஹார்ட் வடிவம் இல்லைனா இனிஷியல் மாதிரி எழுத்து கூட வச்சு பண்ணலாம்" என்றார்.
"ஓஹ்" என்றபடி சற்று யோசித்தவன் "சரி இனிஷியல் வச்சிடுங்க" என்றான்.
"என்ன எழுத்து தம்பி?" என்று அவர் கேட்டார்.
அவன் தேவையான எழுத்தை சொல்லிக்கொண்டிருக்கும் போதே நண்பன் ஒருவன் அழைத்து அவனது கடையில் ஏதோ தகராறு என்று சொல்லி அவசரம் என்றிருக்க "சரி...வரேன் டா வை" என்று அழைப்பை துண்டித்தவன் "எப்போ ரெடியாகும்" என்று ஆசாரியிடம் கேட்டான்.
"நாளைக்கு சாயங்காலம் வந்து எடுத்துக்கோங்க தம்பி" என்றிருக்க அவனும் ரசீதை வாங்கிக்கொண்டு புறப்பட்டிருந்தான்.
உருகியதே என் உயிரே-கருத்து திரி
உங்கள் அன்பான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சகோஸ் :love::love::love:
aadvikapommunovels.com
Last edited: