அத்தியாயம் 19
அன்றிரவு தானவீரன் வீடு வந்து சேரவே நள்ளிரவாகியிருந்தது.
நெருங்கி வரும் கல்யாண நாளின் பதற்றமும் தானவீரனை பற்றிய சிந்தனையுமாக உறக்கம் வராமல் பால்கனியில் நின்று கொண்டிருந்தாள் வைஷாலி.
அவனின் வண்டி வீட்டு வளாகத்தில் நுழைந்தது முதல் வண்டியை வாசலில் நிறுத்தியது வரை அவள் பார்த்துக்கொண்டுதான் இருந்தாள்.
அவன் முகத்திலும் உடலிலும் ஒரு வகை இறுக்கம் இருந்து கொண்டே இருப்பதாக தோன்றியது அவளுக்கு. இன்று நாள் முழுவதும் அவளுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவன். அதுவே மனதை நெருடியது.
அவன் வீட்டிற்குள்ளே நுழைந்து விட்டதை கவனித்தவள் வேகமாக ஓடி சென்று தனது மூடிய அறை கதவின் அருகே நின்றுகொண்டாள்.
அவன் எப்பொழுது அவளது அறையை கடந்து போனாலும் வேண்டுமென்றே அவளது அறை கதவை படபடவென்று தட்டி விட்டு செல்வான்.அவளை வெறுப்பேற்றுவதற்காக அவன் செய்யும் சேட்டைகளில் அதுவும் ஒன்று.
எப்பொழுதும் அவளை தொந்தரவு செய்வதற்காக அவன் செய்யும் அந்த வேலை அவளுக்கு எரிச்சலை கொடுப்பதாகவே இருக்கும். ஆனால், இன்று அதற்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தாள்.
மாடியேறி வரும் அவன் காலடி ஓசை கேட்க காதை மேலும் தீட்டி வைத்துக்கொண்டாள் வைஷாலி. அவன் அவளது அறையை நெருங்கி விட்டதை அறைக்கு வெளியில் கேட்கும் அவன் காலடி ஓசையை வைத்து யூகித்துக்கொண்டாள்.
அவள் அறை கதவிற்கு முன் அவனது பாதங்கள் நின்றன.
இதயம் தடதடத்துக்கொள்ள மேலும் கதவிற்கு அருகே ஒன்றி நின்று செவியை கதவோடு ஒட்டி வைத்து கேட்டாள்.
அவனது கரம் மெல்ல உயர்ந்து அவள் கதவை தட்டுவதற்காக சென்று ஒரு கணம் அப்படியே அந்தரத்தில் நின்றுவிட்டது.
மூடியிருந்த அறையை வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றான். கதவை தட்டுவதற்காக சென்ற கரத்தை மெதுவாக கதவின் மீது வைத்து சத்தமே இல்லாமல் மென்மையாக வருடிக்கொடுத்தான்.
மனதின் கொதிப்பு அடங்கவில்லை. விழிகள் மூடி நின்றான்.கால்களில் மெலிதாய் ஒரு நடுக்கம். அவன் எச்சிலை கூட்டி விழுங்கி தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயன்றதில் அவன் குரல்வளையில் நின்ற ஆதாமின் ஆப்பிள் மெல்ல ஏறி இறங்கியது.
விழிகளை திறந்து மூடியிருந்த அறையை பார்த்தவனுக்கு அவள் வாழ்க்கைக்குள் இனி அவன் செல்வதற்கான வழியும் கூட இப்படி தான் அடைப்பட்டு போனதாக தோன்றியது.
முடிவுகள் அனைத்தும் எடுக்கப் பட்டு விட்டன. அவன் நினைத்தால் இப்பொழுதும் கூட மாற்றி விடுவான். ஆனால், அவளின் மனம் என்று ஒன்று இருக்கின்றதே. அது தருணுக்கு தாரை வார்க்க பட்டுவிட்டதே. இனி அவன் என்ன செய்வது.
எடுக்கப்பட்டு விட்ட முடிவுகளை மாற்றும் நிலைகளை எல்லாம் அவன் கடந்தும் விட்டான். இனி அவன் என்ன செய்தாலும் அது அவன் உற்பட பலரின் மனதை காயப்படுத்துமே.
அப்படி ஒரு சுயநலமான முடிவை அவனால் எடுக்க முடியுமா?
அவனுக்கே தெரியவில்லை.
மெதுவாக அறை கதவின் மீதிருந்த கையை எடுத்தவன் விறுவிறுவென அவன் அறையை நோக்கி நடந்தான்.
கதவை தட்டுவான் என்று எதிர்பார்த்து நின்றவளுக்கு அவள் அறையை கடந்து செல்லும் அவன் காலடி ஓசை கேட்டது. அவன் ஏன் இப்படி இருக்கின்றான் என்று அவளுக்கு புரியவேயில்லை.
அவனிடம் நேரடியாக கேட்டுவிட நினைத்தாள். மெல்ல கதவை திறந்து பார்த்தாள். தானவீரன் அவன் அறைக்குள் நுழைவது தெரிந்தது.
அவள் கதவை திறக்கும் சத்தம் கேட்டு ஒரு நொடி நின்று அவளை திரும்பி பார்த்தான். அவள் ஏதோ சொல்ல வருவது போன்று தெரிந்தது.
ஆனால், அவனுக்கு தான் எதையும் பேசவோ சொல்லவோ தோதான மனநிலையில்லையே. கண்டும் காணாதது போல் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொண்டான்.
அவனது இந்த திடீர் மாற்றம் குழப்பமாக இருந்தாலும் அவளிடம் பேச விரும்பாதவனை அவளும் என்னதான் செய்ய முடியும். கட்டாயப்படுத்திப் பேச வைக்கவா முடியும்.
தலைக்குள் குழப்பங்களும் கேள்விகளும் நிறைந்திருந்தாலும் அனைத்தையும் ஒத்தி வைத்துவிட்டு ஒரு பெருமூச்சுடனே அறைக்குள் நுழைந்து கொண்டாள் வைஷாலி.
இப்படியே இரண்டு நாட்கள் கடந்திருக்கும். வைஷாலி எழுவதற்கு முன்னே எழுந்து வெளியில் சென்று விடுவதும் திருமண வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதும் ஜிம்மிற்கு செல்வதும் இரவில் தாமதமாக வீட்டிற்கு வருவதுமாக அவளின் கண்களில் அகப்படாமல் சுற்றிக் கொண்டிருந்தான் தானவீரன்.
அவன் மனம் குழப்பம் அடைந்திருக்கும் இந்த வேளையில் அவன் வைஷாலியை பார்க்காமல் இருப்பதே அனைவருக்கும் நல்லது என்று முடிவெடுத்து இருந்தான். அதனாலேயே முடிந்த அளவிற்கு வீட்டில் இருப்பதையும் தவிர்த்து இருந்தான்.
தருணுக்கும் திருமணத்திற்கு முன் முடிக்க வேண்டிய அலுவலக வேலைகள் நிறைய இருந்ததினால் அவனும் அதில் மும்முரமாகியிருந்தான். இரவில் மட்டும் நேரம் கிடைத்தால் வைஷாலியுடன் பேசிக்கொள்ளவான்.
அப்படி இருக்க திருமணத்திற்கு இன்னும் நான்கு தினங்களே இருந்த தருணம் அது. அன்று மதியம் அலுவலகத்தில் மும்முரமாக வேலையில் இருந்த தருணை தேடி வந்திருந்தனர் அவனது நண்பர்கள். அவர்களுடன் அவனது போலீஸ் நண்பனாகிய ரவியும் கூட வந்திருந்தான்.
நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி வந்ததில் இன்பமாக அதிர்ந்தவன் அவர்களை வரவேற்று உபசரித்து அவர்களுடன் பேசிக்கொண்டிருக்க அதில் ஒருவன் "என்னடா கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணதோட நிறுத்திட்ட. பேச்சுலர் பார்ட்டி எல்லாம் இல்லையா?" என்றான்.
"அதானே, இவ்வளோ பெரிய பிஸ்னஸ்மென். ஆனால், கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பார்ட்டி கூட இல்லைனா எப்படி?" என்றான் மற்றையவன்.
"இல்லைடா கல்யாணம் கொஞ்சம் ஷார்ட் டைம்ல ஃபிக்ஸ் பண்ணுனதுனால அதுக்கெல்லாம் நேரமில்லைடா " என்று அவனது நிலையை விளக்கிய தருண் "வேணும்னா கல்யாணம் முடிய ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணிடலாம்" என்றான்.
அதை கேட்டுக் கொண்டிருந்த நண்பர் கூட்டத்தில் இருந்த குமார் என்பவன் "கல்யாணத்துக்கு முன்னாடி வச்சாத்தான் டா அது பேச்சுலர் பார்ட்டி...கல்யாணத்துக்கு அப்புறம் வச்சா அது பேமிலி டே" என்று கிண்டலடித்தான்.
அவர்கள் பேச்சில் இதழ் பிரித்து சிரித்த தருண் "நீயாவது சொல்லேன் டா" என்று ரவியிடம் கேட்டு பார்த்தான்.
"நீ என்ன சொன்னாலும் இவனுங்க கேட்க மாட்டானுங்கடா. உன் கிட்ட ஒரு பேச்சுலர் பார்ட்டியை வாங்காமல் விடுறதில்லைனு கங்கணம் கட்டிட்டு வந்திருக்கானுங்க" என்று சொல்லி சிரித்தான்.
"இப்போ போய் எப்படி டா. கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாள் தான் இருக்கு. நாளை மறுநாள் ஈவினிங் ரிசெப்ஷன். அதற்கு மறுநாள் காலையில் கல்யாணம். நடுவுல இன்னும் ஒரு நாள் தானே டா இருக்கு..."என்று அவன் இழுக்க " அதுதான் ஒரு நாள் இருக்கே அப்புறம் என்னடா" என்றான் குமார்.
ரவியும் நண்பர்களின் அளப்பறையில் இதழ்களுக்குள் சிரித்துக்கொள்ள 'விடமாட்டானுங்க போல' என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்ட தருணும் "சரி டா நாளைக்கு நைட் அரேஞ் பண்ணிடலாம்" என்றபடி இன்டெர்க்கோமின் வழியே அவனது காரியதரிசி சோனாவை அழைத்தான்.
சோனாவும் அவனது அறைக்குள் வந்திருக்க "சோன்ஸ், நாளைக்கு பேச்சுலர் பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணிடு" என்று பார்ட்டி ஏற்பாடு செய்யவேண்டிய ஐந்து நட்சித்திர ஹோட்டலின் பெயரையும் சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.
"இப்போ சந்தோஷமா டா. நாளைக்கு பார்ப்போம். இப்போ இடத்தை காலி பண்ணுங்க டா வேலை இருக்கு" என்று தருண் சிரித்துக்கொண்டே சொல்ல அவர்களும் அவனிடம் விடைபெற்று சென்றிருந்தனர்.
***
திருமண வீடு என்பதால் சில உறவினர்கள் வர போக இருக்க கூடும். அவர்களை உபசரிப்பதற்காக சில பொருட்கள் வாங்க வேண்டியிருக்க அதற்கான பட்டியலை அன்று காலையிலேயே தானவீரனிடம் கொடுத்து தேவையானதை வாங்கி வர சொல்லியிருந்தார் சரோஜினி.
தானவீரனும் வெளி வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு சரோஜினி கொடுத்த பட்டியலில் உள்ள பொருட்களையும் வாங்கி கொண்டு மதிய வேளையில் தான் வீடு வந்து சேர்ந்திருந்தான். அவன் உள்ளே நுழையும் போதே முன்னறையில் தான் அமர்ந்திருந்தாள் வைஷாலி.
அவளின் பார்வை தன்னிச்சையாக தானவீரனில் படிய அவன் கண்டுகொள்ளாமல் நேரே சரோஜினியை தேடிக்கொண்டு சமயலறைக்குள் நுழைந்திருந்தான்.
வாங்கிய பொருட்களை எல்லாம் அங்கே இருந்த மேசையின் மீது வைத்து விட்டு "அத்தை எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க. அப்புறம் இது இல்லை அது இல்லைன்னு சொல்ல படாது. கல்யாண மாப்பிள்ளையா கூட இருந்திடலாம். ஆனால், கல்யாண வீட்டில் வெட்டியா மட்டும் இருந்திடவே கூடாது. எவ்வளோ வேலை வாங்குறாங்க " என்று சலித்துக்கொண்டபடி சமையல் கட்டின் மீது ஏறி அமர்ந்துக்கொண்டான்.
சரோஜினியும் அவனது கிண்டல் புரிந்து சிரித்துக்கொண்டே "வைஷாலி கல்யாணத்துக்கு மட்டுமில்ல மதுவுக்கு கல்யாணம் நடக்கும் போதும் உனக்கு இதே தான்" என்றார் காய்கறிகளை நறுக்கி கொண்டே.
"ஏதே...உங்க வீட்டு ராட்சசிகளுக்கு சேகவம் செய்யத்தான் நான் இருக்கேனா?" என்று தானவீரன் கேட்க "இல்லையா பின்ன" என்றார் சரோஜினி "வர வர உங்களுக்கும் நக்கல் கூடி போச்சு அத்தை" என்று அவரை ஒரு மார்க்கமாக பார்த்துக்கொண்டே அவர் நறுக்கிக் கொண்டிருந்த கேரட்டில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு கொண்டான்.
"வேண்டாமுன்னா மது கல்யாணத்துக்கு முதல் நீ ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோ. வர போற பொண்ணோட சேர்ந்து வேலை பார்க்கலாம்ல" என்றார் அவர்.
"ஓ என்னோட சேர்த்து என் பொண்டாட்டியையும் வேலை வாங்குற எண்ணமிருக்கா உங்களுக்கு. சோ சாரி அத்தை அப்படி ஒரு ஆசை இருந்தா அதை இப்போவே மறந்துடுங்க சொல்லிட்டேன்" என்றான்.
"ஏன் டா உன் பொண்டாட்டியை ஒரு வேலையும் செய்ய விடாமல் தங்க தட்டில் வச்சு தாங்க போறியா?" என்று சரோஜினியும் விடாமல் அவனை கிண்டல் செய்ய
"சேச்சே அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை... ஏன்னா நான் சந்நியாசம் போக போறேன்" என்றான் அடுத்த துண்டு கேரட்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே.
"என்ன பேச்சு பேசுறான் பாரு" என்று சொல்லிக்கொண்டே சரோஜினி அவன் தொடையில் ஒரு அடி போட "ஆஹ் வலிக்குது அத்தை... இப்போ தெரியுது நீங்க பெத்த வானரங்கள் ஏன் இப்படி இருக்குதுங்கன்னு" என்று வலித்த இடத்தை தேய்த்துக்கொண்டே அவன் நிமிர்ந்து பார்க்க அங்கே சமையலறை கதவில் சாய்ந்து நின்றபடி அவனையே அழுத்தமாக பார்த்துக்கொண்டிருந்தாள் வைஷாலி.
அவளுக்கு ஃபேசியல் செய்து கொள்வதற்காக அழகு நிலையத்திற்கு செல்ல வேண்டியதிருக்க சரோஜினியிடம் சொல்லிக்கொண்டு புறப்படுவதற்காக சமயலறைக்கு வந்திருந்தாள்.
அச்சமயம் தானவீரன் எப்பொழுதும் போல சரோஜினியிடம் இயல்பாக பேசுவதை கண்டதும் அவன் தன்னிடம் மட்டும் தான் அந்த ஒதுக்கத்தை காட்டுவதாக புரிந்துகொண்டாள் அவள். காரணமே இல்லாமல் அவன் அவளை ஒதுக்குவதில் கடுப்பானவள் அவனை முறைத்தபடி சமையலறையின் கதவில் சாய்ந்து நின்றிருந்தாள்.
"வெளியில் அலைஞ்சிட்டு வந்திருக்க மோர் குடிக்குறியா?" என்று சரோஜினி காய்கறிகளை நறுக்குவதில் கவனத்தை பதித்துக்கொண்டே அவனிடம் கேட்க அவனிடம் அசைவுமில்லை பதிலுமில்லை.
ஒரு நொடி கூட சும்மா இல்லாமல் வளவளத்துக்கொண்டே இருக்கும் தானவீரன் அமைதியாகி விட்டதை உணர்ந்தவர் "என்ன டா சத்தத்தையே காணோம்" என்றபடி அவனை நிமிர்ந்து பார்த்தார்.
அவன் சமையலறையின் வாசலை பார்த்துக்கொண்டே அமர்ந்திருக்க "என்னடா பேயை பார்த்த போல உட்கார்ந்திருக்க?" என்று கேட்டபடி அவரும் திரும்பி பார்த்தார்.
அங்கே வைஷாலி நின்று கொண்டிருந்தாள்.
இதே வேறு சமயமாக இருந்திருந்தால் 'மாதிரி இல்லை அத்தை, பேயை தான் பார்த்திட்டிருக்கேன்' என்று நிச்சயம் அவளை வம்புக்கிழுத்திருப்பான். ஆனால், இன்று அதுபோல் அவன் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தான்.
அதிலேயே அவன் அவளை மட்டும் தான் ஒதுக்குகின்றான் என்பது அப்பட்டமாக ஊர்ஜிதமாகிவிட அவளுக்கு இன்னமும் கோபம் எகிறியது.
அவளது பார்வையில் அழுத்தம் கூடிற்று.
"ஆஹ் வைஷாலி அங்க பாரு மோர் கலந்து வச்சிருக்கேன். அதை கிளாசில் ஊத்தி வீருக்கு கொடு..,பாவம் வெயிலில் அலைஞ்சிட்டு வந்திருக்கான்" என்றார் சரோஜினி.
தாயின் கட்டளை காதில் விழ அவனை பார்த்துக்கொண்டே சமைலறைக்குள் நுழைந்தாள் வைஷாலி.
"இல்லை அத்தை எனக்கு வேண்டாம்" என்றபடி அவன் சமையல் கட்டிலிருந்து கீழே இறங்கியபடி அங்கிருந்து வெளியேற இரு அடிகள் தான் எடுத்து வைத்திருப்பான். அதற்குள் ஒரு கிளாசில் மோரை ஊற்றி அவன் முன்னால் நீட்டியிருந்தாள் வைஷாலி.
அவன் "வேணாம்னு தானே சொன்னேன்" என்று சொல்ல அவள் பதில் ஏதும் பேசாமல் நீட்டிய கரத்தை நீட்டியபடியே வைத்துக்கொண்டு அவனை முறைத்து பார்த்தாள்.
அவள் பார்வை அவனை என்னவோ செய்ய 'கொஞ்சம் ஓவரா தான் போறோமோ' என்று மனதில் நினைத்துக்கொண்டான். மேலும் சரோஜினியும் அங்கே தான் நின்றிருக்க அவர் முன் எந்த நாடகமும் அரங்கேறுவதை அவன் விரும்பவுமில்லை. பேசாமல் அவள் நீட்டிய மோரை வாங்கி கொண்டான்.
அவ்வளவுதான் அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேசாமல் சரோஜினியை பார்த்தவள் "அம்மா, நான் பார்லர் போய்ட்டு வரேன்" என்றபடி சமயலறையில் இருந்து அவள் வெளியேற போக "தனியாவா போற?" என்று கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தார் ஜெயலக்ஷ்மி.
"ஆமா அப்பத்தா" என்றாள் வைஷு.
"கல்யாணமாக போற பொண்ணு இந்த நேரத்துல தனியா வெளிய போகலாமா? ஏன் சரோ இதை எல்லாம் நீ சொல்லமாட்டியா?" என்று கேட்டார்.
சரோஜினியை திட்டுவதற்கு தான் ஒரு காரணமாவதை விரும்பாத வைஷாலி "எப்பவும் போற இடம் தானே " என்றாள்.
"அதெல்லாம் முடியாது. யாரையாவது துணைக்கு அழைச்சிட்டு போ. இல்லை போகாத. நாங்க எல்லாம் என்ன அந்த காலத்துல பார்லருக்கு போய்தான் அழகா இருந்தோமா?" என்றார் கறாராக.
"இப்போ என்ன யாரையாவது துணைக்கு அழைச்சிட்டு போகணும் அதானே. அப்போ நீங்களே வாங்க அப்பத்தா" என்றாள் வைஷாலி.
"அடி போடி. எனக்கே மூட்டு வலி நோகுது.தைலம் தேய்ச்சு விட தான் உங்காம்மாவை தேடி வந்தேன்" என்றவரின் விழிகள் அங்கு நின்று தனக்கும் அங்கே நடப்பதற்கும் சம்மந்தமே இல்லை என்று மோர் குடித்துக்கொண்டிருந்த தானவீரனில் படிய "இதோ இருக்கானே என் பேரன் ஆம்பிள சிங்கம் போல. அவனை கூட்டி போ. பத்திரமா பார்த்துப்பான்" என்றார்.
அவர் சொல்லியதில் தானவீரனுக்கே புரையேறி விட வாய்க்குள் சென்ற மோர் மீண்டும் தரையில் சிந்தியிருந்தது. கண்களில் நீர் வர அவன் இருமிக்கொண்டிருக்க அருகே இருந்த சரோஜினி தான் "பார்த்து குடிப்பா" என்று அவன் தலையில் தட்டினார்.
சரோஜினி தலையில் தட்டிக்கொடுக்க இருமிக்கொண்டே நிமிர்ந்து ஜெயலக்ஷ்மியை பார்த்தவனின் மனமோ "குண்டு பயபுள்ளை எப்புடி கோர்த்துவிடுது பாரு' என்று தான் புலம்பிக்கொண்டது.
Last edited: