அத்தியாயம் 26
அவனுக்கு கேட்ட குரலில் சட்டென்று விழிகளை திறந்தவன் முன்னே பச்சை வண்ண பாவாடை ரவிக்கைக்கு ஆரஞ்சு நிற தாவணி அணிந்து அம்சமாய் நின்றிருந்தாள் அறிவுமதி. அவள் பக்கத்தில் அவன் மருதாணி வைத்துவிட்ட வாண்டும் வாயெல்லாம் புன்னகையாக நின்றுகொண்டிருந்தாள்.
'இம்சை' என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி அவளை பார்த்தவன் "என்ன டி" என்று கேட்க "இந்த வீட்டுல அநியாயம் நடக்குது" என்றாள் அவள்.
அவளை புரியாமல் பார்த்தவன் "என்ன உளறுற?" என்று கேட்டான்.
இவளுக்கு மருதாணி வச்சு விட்டிங்களாமே?" என்று கேட்டாள் அவள். "ஆமா, அதுக்கென்ன இப்போ?" என்று அவன் கேட்க "இவளுக்கு மட்டும் வச்சு விட்டா அப்போ எங்களுக்கெல்லாம் யாரு வச்சு விடுறது?" என்றாள் அவள்.
"அவள் சின்ன பொண்ணு வச்சு விட்டேன். உனக்கெல்லாம் வச்சு விட முடியாது போடி" என்றான்.
அவனை முறைத்து பார்த்தவள் "இப்போ வச்சு விட முடியுமா முடியாதா?" என்று கேட்டாள்.
"முடியாது முடியாது" என்று அவன் சொல்ல 'ஓஹோ, இப்போ எப்படி உன்னை வழிக்கு கொண்டுவரேன்னு பாரு' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டவள் திடீரென்று "ஐயோ என்ன மாமா இது. என் கிட்ட இப்படி எல்லாம் சொல்லுறீங்க. இதெல்லாம் தப்பு..." என்றாள் அதிர்ச்சி கலந்த குரலில்.
அவளை புருவம் சுருக்கி பார்த்தவன் "நான் என்ன சொன்னேன்?" என்று கேட்டான் சற்று பதட்டமாக.
"அதான் இப்போ சொன்னிங்களே..." என்று அவள் மீண்டும் சொல்ல
"நான் என்னடி சொன்னேன்?" என்று அவன் ஊஞ்சலில் இருந்து எழுந்தபடி கேட்க "ஐ லவ் யூ சொன்னிங்களே மாமா" என்றாள் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு.
"ஹேய் நான் எப்போ அப்படி சொன்னேன்" என்று அவன் கேட்க "இப்போ தானே சொன்னிங்க... ஹேய் உனக்கும் கேட்டுச்சுல" என்று அந்த சிறுமியிடம் கேட்டபடி அவள் கையில் சாக்லெட்டை திணித்திருக்க அந்த குட்டி பெண்ணும் சாக்லேட் கிடைத்த சந்தோஷத்தில் "ஆமா கேட்டுச்சு கேட்டுச்சு..." என்று சொல்லியபடி சாக்லெட்டை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.
"அடப்பாவி உனக்கு மருதாணி வச்சு விட்டது ஒரு குத்தமா...குழந்தை உருவில் ஒரு குட்டி சாத்தன்" என்று அவன் சத்தமாகவே புலம்பிக்கொள்ள வாய்விட்டு சிரித்த அறிவுமதி "இப்போ எனக்கு மட்டும் நீங்க மருதாணி வச்சு விடல. என்னை தனியா கூட்டி வந்து ஐ லவ் யூ சொன்னிங்கன்னு உள்ள போயி எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன் பார்த்துக்கோங்க. சாட்சி கூட இருக்கு" என்றாள்.
"ஏன்டி… இல்லை ஏங்குறேன்" என்று அவளை இயலாமையுடன் பார்க்க அவளோ அந்த ஊஞ்சலில் சாவகாசமாக அமர்ந்தாள் .
அவன் முன்னே இருகைகளையும் நீட்டி ஒரு கரத்தின் உள்ளங்கையை காட்டியபடி மறுக்கரத்தில் வைத்திருந்த மெஹெந்தி கோனை அவனிடம் நீட்டினாள்.
அவளை முறைத்து பார்த்துக்கொண்டே மெஹந்தி கோனை கையில் வாங்கியபடி அவனும் ஊஞ்சலில் அமர்ந்த நேரம் "எங்களுக்கும் போட்டுவிடுங்க" என்று மேலும் சில இளைஞிகள் கோரஸாக சொல்லியபடி அவன் முன்னே கரத்தை நீட்டிக்கொண்டு நின்றனர்.
அவர்கள் அனைவரையும் நிமிர்ந்து பார்த்தவன் "போங்கடி போண்டா கோழிகளா" என்று சொல்லிக்கொண்டே வேகமாக ஊஞ்சலில் இருந்து எழுந்து ஆளை விட்டால் போதுமென்று வீட்டிற்குள் நுழைய போக "ஹேய் வீரா, இன்னிக்கு என் கையில மருதாணி போடாமல் உன்னை விட மாட்டேன்" என்று சொல்லிக்கொண்டே அவன் பின்னாடியே அறிவுமதி செல்ல அவளுடன் சேர்ந்து மற்ற பெண்களும் அவனை துரத்திக்கொண்டே சென்றனர்.
"விடமாட்டாளுங்க போலயே" என்று வேக நடையுடன் வீட்டிற்குள் நுழைந்தவன் பின்னால் பார்த்துக்கொண்டே நடக்க நேராக வைஷாலி அமர்ந்திருந்த நாற்காலியின் மீது மோதிவிட்டான்.
அவனை நிமிர்ந்து பார்த்த வைஷாலியோ அவன் முகத்தில் தெரிந்த களேபரத்தை பார்த்து "என்னாச்சு மாமா?" என்று கேட்டாள்.
சட்டென்று மண்டியிட்டு அவள் உயரத்துக்கு அமர்ந்துகொண்டவன் "என்னை காப்பாத்துடி" என்றான் தனக்கு பின்னால் திரும்பி பார்த்துக்கொண்டே.
அவன் பார்வை சென்ற திசையில் வைஷாலியும் அவனை தாண்டி எட்டி பார்க்க அங்கே அறிவுமதி தான் இளைஞிகள் கூட்டத்திற்கு தலைமை தாங்கியபடி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
"ப்ளீஸ், ப்ளீஸ்...எதாவது பண்ணுடி. டார்ச்சர் பண்ணுறா" என்றான்.
அவனை பார்க்க வைஷாலிக்கு சிரிப்பாக இருந்தது. ஜெயலக்ஷ்மி அடிக்கடி அவனை வீட்டின் செல்ல கண்ணன் என்று சொல்வது அவள் நினைவுக்கு வந்து போனது. அவன் நிஜமாகவே கோபியர் கொஞ்சும் ரமணன் தான் போலும். பெண்களை சுலபமாக கவர்ந்துவிடுகின்றான் அல்லவா.
அவனை பார்த்து அவள் இதழ்களுக்குள் சிரித்துக்கொள்ள "என் செல்லம்ல...பழிவாங்கிடாதடி ப்ளீஸ் காப்பாத்து" என்றான்.
எப்பொழுதும் அவளிடம் கெத்து காட்டுபவன் இப்பொழுது அவளிடம் கெஞ்சுகின்றான். அவளுக்கும் அது சுவாரசியத்தை கூட்ட "சரி… ஆனால், நான் சொல்லுறதை செய்யணும்" என்றாள்.
"நீயுமா... சரி சொல்லு செய்யுறேன். அந்த பிசாசுகிட்டேருந்து என்னை காப்பாத்து போதும்" என்றான்.
"அக்கா" என்று அந்த மெஹெந்தி கலைஞரை அழைத்தவள் அவர் கையில் வைத்திருந்த மெஹெந்தி கோனை கேட்டாள்.
அவரும் அதை அவளிடம் கொடுத்திருக்க அதை தானவீரனிடம் கொடுத்து "போட்டு விடுங்க" என்றாள்.
"உனக்கா? அதுதான் போட்டாச்சே" என்று மருதாணி டிசைன்களால் நிறைந்திருந்த அவள் கரங்களை பார்த்தபடி அவன் கேட்க "கையில் இல்லை... " என்று சொல்லியபடி ஒற்றை காலை எடுத்து அவன் முன்னே இருந்த தலையணை மீது வைத்தாள்.
அவள் கண்களால் அவள் தாமரை பாதத்தை சுட்டி காட்ட "காலுக்கா?" என்றான்.
அவளோ "என் காலுக்கா.. இல்லை அவள் கையிக்கா. சாய்ஸ் இஸ் யோர்ஸ்" என்று சொல்லி அவள் கண்களை சிமிட்ட அந்த நேரத்திற்கெல்லாம் "மாமா" என்று சொல்லிக்கொண்டே அவன் அருகே வந்து நின்றுவிட்டாள் அறிவுமதி.
ஒருமுறை கண்களை மூடித்திறந்தவன் "எனக்கு வேற வேலை இருக்கு போடி" என்று அறிவுமதியிடம் சொல்லிவிட்டு சட்டென்று கீழே அமர்ந்துவிட்டான்.
ஒற்றை கரத்தை நீட்டியபடி அவன் வைஷாலியை நிமிர்த்து பார்க்க அது வைஷாலிக்கே அதிர்ச்சி தான். அவள் விளையாட்டுக்காக தான் சொன்னாள். அவன் மறுத்துவிடுவான் என்கின்ற எண்ணத்தில் அவனை சீண்டி பார்க்க நினைத்தாள். ஆனால், அவன் நிஜமாக செய்வான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.
அறிவுமதியுடன் ஏனைய பெண்களும் அங்கேயே நின்றிருக்க அவளுக்கு மறுக்கவும் முடியாமல் போக அவள் செந்தாமரை பாதத்தை எடுத்து அவன் நீட்டியிருந்த உள்ளங்கையில் வைத்தாள்.
அவள் மெல்லிய பாதத்தின் ஸ்பரிசம் அவனது உள்ளங்கையை தீண்டியதும் ஓருவகை சிலிர்ப்பு அவனுக்குள். தேவையற்ற உணர்வுகளை தடுக்க நினைக்கின்றான் முடியவில்லை. கண்களை அழுந்த மூடி திறந்தான்.
அவள் காலில் அவன் மெஹெந்தி கோனால் வரைய தொடங்கிவிட "வைஷுக்கா, இது அநியாயம். மாமா உங்களுக்கு வரைஞ்சு விட்டா பிறகு எங்களுக்கெல்லாம் யாரு போட்டு விடுவாங்களாம்" என்று அறிவுமதி சிணுங்க அவளை மென்புன்னகையுடன் பார்த்த வைஷாலி "அக்கா, நீங்க அவங்களுக்கெல்லாம் மருதாணி போட்டு விட்டுடுங்க" என்று அந்த மெஹெந்தி கலைஞரிடம் சொன்னாள.
அவர் வேலையை தானவீரன் எடுத்துக்கொண்ட பட்சத்தில் அவரும் மறுப்பேதும் சொல்லாமல் ஏனைய பெண்களுக்கு மருதாணி போட தொடங்கி விட்டார்.
வைஷாலி மணபெண்ணிற்கென்று பிரத்தியேகமாக அலங்கரிக்க பட்டிருந்த நாற்காலியில் மெழுகு பொம்மையென அமர்ந்திருக்க அவளுக்கு வலது பக்க தரையில் அமர்ந்து தானவீரன் அவள் பாதங்களுக்கு மருதாணியிட்டுக்கொண்டிருக்க மற்ற பெண்களும் அவர்களை சுற்றி அமைந்துக்கொள்ள அந்த மெஹெந்தி கலைஞரோ மற்ற பெண்களுக்கு மருதாணியிட்டுக்கொண்டிருந்தார்.
அங்கே அவர்களின் பேச்சும் சிரிப்பும் வேறு சேர்ந்துக்கொள்ள அந்த காட்சியே பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது. அதை தவறவிடாமல் புகைப்பட கலைஞர்களும் தங்களின் புகைப்பட கருவியில் பதிவு செய்துகொண்டனர்.
தானவீரன் மும்முரமாக அவள் காலுக்கு மருதாணி போட்டுக்கொண்டிருக்க நாற்காலியில் அமர்ந்தபடியே அவன் காதோரமாக குனிந்த வைஷாலி "மாமா, நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். நீங்க போய் இத்தனை பேருக்கு முன்னாடி என் காலை பிடிச்சு மருதாணி போடுறது ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு. போதும் விடுங்க" என்றாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தவன் "உன் காலை பிடிச்சு மருதாணி போடுறதுல நான் ஒன்னும் குறைஞ்சிட மாட்டேன்" என்றான் ஒரு மென்னகையுடன்.
அவனை வியப்பாக பார்த்தவள் "உங்க ஈகோ என்னத்துக்காகும்?" என்று கேட்டாள்.
"உன்கிட்ட எனக்கு என்னடி ஈகோ" என்றான்.
"உண்மையிலேயே உங்களுக்கு என்னவோ ஆச்சு மாமா" என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவளின் அலைபேசி அலறியது. அவளுக்கு அருகே இருந்த அலைபேசியை திரும்பி பார்த்தாள் வைஷாலி.
அதில் தருணின் பெயர்தான் மிளிர்ந்தது. தானவீரனின் கண்களும் அந்த அலைபேசியில் ஒரு நொடி நிலைத்து பின் அவள் விழிகளை அடைந்திருக்க தனது மருதாணியிட்ட கரங்கள் இரண்டையும் தூக்கி காட்டியவள் "ப்ளீஸ்..."என்று விழிகளை சுருக்கி உதட்டை சுளித்து கெஞ்சலாய் கேட்க அவளை ஆழ்ந்து பார்த்தவனின் மனம் 'கொல்லாதடி' என்று அடித்துக்கொண்டாலும் அவளின் குறிப்புணர்ந்து அவளின் அலைபேசியை எடுத்தவன் அழைப்பை ஏற்று அதை வைஷாலியின் காதுக்கு கொடுத்தான்.
"ஹாய் வைஷு" என்றான் தருண்.
"ஹலோ" என்று அவள் சொல்ல "அங்க என்ன நிலவரம்?" என்று கேட்டான்.
"மெஹெந்தி போட்டுட்டிருக்கேன்" என்று அவள் சொல்ல "போட்டு முடிஞ்சதும் ஃபோட்டோ எடுத்து அனுப்பு. எனக்கு பார்க்கணும்" என்றான்.
"இம்ம்... "என்று அவள் மெதுவாக பதில் சொல்ல அவள் அலைபேசியில் பேசுவதை கவனித்த அறிவுமதி அருகே இருந்த தனது தங்கை இளமதியிடம் "இளா பார்த்தியாடி, வைஷுக்கா மாமாகிட்ட தான் பேசுறாங்களாட்டம் இருக்கு" என்று ஆரம்பித்தாள்.
"உனக்கு எப்படி தெரியும்?" என்று இளமதி அப்பாவியாய் கேட்க "இது என்ன பெரிய ராணுவ ரகசியமா? வைஷுக்கா கன்னத்தை பாரு கையில் இருக்குற மருதாணியை தோற்கடிச்சிடும் போல" என்று கிண்டல் செய்ய சுற்றி இருந்த பெண்களும் சேர்ந்துக்கொண்டு ஆளுக்கொன்றாக சொல்லி அவளை இன்னும் இன்னும் கேலி செய்ய அது அலைபேசியினூடு தருணின் காதலிலும் விழுந்தது.
அவன் அவர்களின் கிண்டல் பேச்சை கேட்டு வாய் விட்டே சிரித்து விட "நீங்களுமா?" என்று செல்ல கோபம் கொண்டவள் "அப்போ நான் வைக்கட்டுமா" என்று கேட்டாள்.
"ரொம்ப கிண்டல் பண்ணுறாங்களா?" என்று அவன் கேட்க "ம்ம்ம்" என்றாள் அவள்.
அவனும் மென்மையாக சிரித்துக்கொள்ள பேச்சை மற்றும் விதமாக "உங்க பேச்சுலர் பார்ட்டி என்னாச்சு?" என்று கேட்டாள்.
"இம்ம்… அங்க தான் இருக்கேன். இப்போ தான் ஆரம்பிச்சிருக்கானுங்க. எத்தனை மணிக்கு முடியுமோ தெரியல" என்று சலித்துக்கொண்டான் தருண்.
"எதுக்கு சலிச்சுக்கிறிங்க...ஜஸ்ட் என்ஜாய் யுவர் டே" என்றாள்.
"சரி" என்றவன் சிறிது நேரம் அவளுடன் பேசி விட்டு அழைப்பை துண்டித்திருக்க அவள் காதிலிருந்து அலைபேசியை எடுத்த தானவீரனோ "கொடுத்து வச்ச மகராசன். பேச்சுலர் பார்ட்டிக்கெல்லாம் பெர்மிஷன் கிடைக்குதே" என்று சொல்லிக்கொண்டே மீண்டும் மருதாணியிடும் வேலையை தொடங்கி விட "அதுக்கு தான் என்னை கட்டிக்கோங்கன்னு சொன்னேன். பேச்சுலர் பார்ட்டிக்கு பெர்மிஷன் என்ன, கம்பனியே கொடுக்கிறேன்" என்று அவன் காதை கடித்தாள் அறிவுமதி.
"இவ ஒருத்தி..இம்சை" என்று தானவீரன் சத்தமாகவே திட்டிவிட அங்கிருந்த மற்ற பெண்களும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதையெல்லாம் அருகே இருந்த சோபாவில் அமர்ந்திருந்தபடி பார்த்துக்கொண்டிருந்த சரோஜினியின் மனதில் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டிருக்க அவருக்கு அருகே அமர்ந்திருந்த கிருஷ்ணகுமாரை திரும்பி பார்த்தார்.
மனைவியின் பார்வையிலேயே குறிப்புணர்ந்து கொண்டவர் "என்னமோ சொல்ல நினைக்குற போல... சொல்லும்மா" என்றார்.
வழக்கம் போல தன்னை தானாக புரிந்துகொள்ளும் கணவனின் அன்பை கண்டு வியப்புடன் ஒரு மென்புன்னகை சிந்திய சரோஜினி "நம்ம அறிவுமதி நல்லா துருதுருன்னு இருக்கால்ல" என்று கேட்டார்.
கிருஷ்ணகுமார் "ம்ம்ம்" என்று மட்டும் சொல்லியபடி மனைவி மேலே பேசுவதற்காக காத்திருக்க "நானும் வந்ததுல இருந்து பார்க்குறேன் துருதுருன்னு எதையாவது பண்ணிட்டே இருக்கா. அவ இருக்குற இடமே கலகலன்னு இருக்கு. நம்ம மது போலவே ரொம்பச் சுட்டி. ஆனால், பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்துக்குறா. பார்க்கவும் அழகா இருக்கா. அவளை நம்ம வீருக்கு பார்க்கலாமா? முறை தானே" என்றார்.
கிருஷ்ணகுமாருக்கும் "இம்ம், நல்லா யோசனை தான். வைஷு கல்யாணம் முடியட்டும். பிறகு சேகரிட்ட இதை பத்தி பேசி பார்ப்போம்" என்றார்.
கணவரின் பேச்சுக்கு ஆமோதிப்பாக தலையாட்டிக்கொண்ட சரோஜினி, வைஷாலியின் திருமணம் முடிய சேகர் மற்றும் ஈஸ்வரியிடம் இதை பற்றி பேசிப்பார்க்க வேண்டுமென்று மனதில் குறித்துவைத்துக்கொண்டார்.
சரோஜினிக்கு ஈஸ்வரி பேசியத்திலிருந்தே குற்றவுணர்வு ஒன்று நெஞ்சை அரித்துக்கொண்டிருக்க தானவீரனுக்கு ஏற்ற பெண்ணாக ஒருத்தியை விரைவில் பார்த்து கட்டிவைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்.
இதற்கிடையில் வைஷாலியின் காலில் மருதாணியை போட்டு முடித்த தானவீரன் "எப்படி இருக்கு?" என்று கேட்டு கொண்டே அவளை நிமிர்ந்து பார்த்தான்.
அமர்ந்திருந்த நிலையிலேயே சற்று எட்டி தனது கால்களை பார்த்த வைஷாலி "சூப்பரா இருக்கு மாமா, தேங்க்ஸ்" என்றபடி புன்னகைத்தாள்.
அவள் புன்னகையையே அவன் இமைக்காமல் பார்த்திருக்க அதை கண்டுகொண்டவள் "என்ன மாமா?" என்று கேட்டாள்.
"சந்தோஷமா இருக்கியா வைஷு?" என்று தான் கேட்டான்.
அவனை விசித்திரமாக பார்த்தவள் "என்னாச்சு மாமா? ஏன் இப்படி எல்லாம் கேட்குறீங்க?" என்று அவள் பதில் கேள்வி கேட்க "சும்மா கேட்கணும்னு தோணுச்சு...சொல்லேன்..." என்றான்.
"ம்ம்ம் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என்றாள் அவள். அவளின் சந்தோசம் தருண் தான் என்று தெளிவாக புரிந்துகொண்டான். அவளின் பிரிவு அவனை பாதித்தது போல அவன் அவளை பாதிக்கவில்லை என்று உணர்ந்த நொடி அவன் விழிகள் மெல்ல கலங்க சட்டென்று புன்னகையால் அதை மறைத்தவன் "எப்பவும் இதே போல சந்தோஷமா இருக்கனும்" என்றான்.
ஒரு நொடி இருவரின் விழிகளும் ஒன்றாக கலந்திருக்க இருவரினிடையே சிறு மௌனம் ஒன்று நிலவியது. சரியாக அந்நேரம் வைஷாலியின் அலைபேசி அலற இப்பொழுதும் தானவீரன் தான் அழைப்பை ஏற்றான்.
"சொல்லு மது..." என்று அவன் ஆரம்பிக்க
"மாமா, அக்கா எங்க? நீ ஏன் போன் எடுக்குற" என்று கேட்டாள்.
“அவள் கையெல்லாம் மருதாணி வச்சிட்டு உட்கார்ந்திருக்கா... இரு ஸ்பீக்கர்ல போடுறேன் என்றபடி அவன் ஸ்பீக்கரை ஆன் செய்து வைஷாலியிடம் நீட்ட "ஹாய் கல்யாண பொண்ணு" என்றாள் மது.
"போடி, என்கிட்ட பேசாத. எக்ஸாம் தான் காலையிலேயே முடிஞ்சிருச்சு தானே. கிளம்பி வரத்துக்கு என்ன?" என்று வைஷாலி கோபித்துக்கொண்டாள்.