அத்தியாயம் 27
உலகம் முழுவதையும் தனது கதிர்கரங்களை நீட்டி அணைத்துக் கொண்டான் ஆதவன். அவனது நல்லாசியில் அடுத்த நாள் காலையும் இனிமையாக புலர்ந்திருந்தது.
முன்தின களைப்பு உடலில் இன்னும் மிச்சம் இருந்தாலும் விஷேஷ வீடு என்பதால் அனைவரும் நேரத்திற்கே எழுந்து ஆளுக்கொரு வேலையாக செய்ய தொடங்கியிருந்தனர்.
இன்றும் அனைவருக்கும் காலை காபி விநியோகம் செய்யும் பணியை சரோஜினி அறிவுமதியிடம் தான் கொடுத்திருந்தார்.
அவளும் முகத்தில் புன்னகையும் நடையில் துள்ளலுமாக காபி டம்ளர்கள் நிறைந்த தட்டை எடுத்துக்கொண்டு வீட்டை ஒரு சுற்று சுற்றி வந்து அனைவருக்கும் காபி கொடுத்துக்கொண்டிருக்க வாசலில் வாடகை கார் ஒன்று வந்து நின்றது.
அறிவுமதியின் புருவங்கள் இடுங்க அந்த காரையே பார்த்துக்கொண்டு நிற்க அதிலிருந்து இறங்கியிருந்தாள் மதுஷிகா.
அவளை பார்த்ததும் "ஹய்... மது வந்தாச்சு... வைஷுக்கா மது வந்தாச்சு" என்று உரக்க சொல்ல அறைக்குள் இருந்த வைஷாலியும் வேகமாக வெளியில் வந்து மாடியிலிருந்து எட்டி பார்த்தாள்.
கீழே நின்றபடி மாடியை அண்ணார்ந்து பார்த்த அறிவுமதி "மது வந்தாச்சு க்கா" என்று மீண்டும் சொன்னாள்.
மதுஷிகா என்ற பேயரை கேட்டதும் மாடிப்படிகளில் துள்ளிக்குதித்து இறங்கி வந்தாள் வைஷாலி. அவள் கீழே வந்த நேரம் மதூஷிகாவும் உள்ளே நுழைந்திருக்க வேகமாக அவள் அருகே சென்று கட்டியணைத்திருந்தாள்.
மதுஷிகாவும் "வைஷுக்கா…" என்று அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.
"நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் தெரியுமா?" என்று வைஷாலி சொல்ல அவள் அணைப்பிலிருந்து விடுபட்டுக்கொண்டே "நானும் தான் க்கா" என்றாள் தங்கை.
"போடி... மிஸ் பண்ணுறவ நேத்தே வர வேண்டியது தானே. நீ இல்லாமலே நலுங்கு, மெஹெந்தின்னு எல்லாமே முடிஞ்சு போச்சு" என்று பொய் கோபம் கொண்டாள் மூத்தவள்.
"சாரி வைஷுக்கா...அது தான் இப்போ வந்துட்டேன்ல" என்று தமக்கையை அவள் சமாதானம் செய்ய முயன்றுகொண்டிருக்கும் போதே "வாம்மா மகாராணி, இப்போ தான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா? சொந்த அக்கா கல்யாணத்துக்கு கடைசி நேரத்துல விருந்தாளி மாதிரி வந்து சேர்ந்துட்ட போல" என்று அங்கே ஈஸ்வரியுடன் வந்து சேர்ந்திருந்த ஜெயலக்ஷ்மி ஆரம்பித்துவிட்டார்.
அவள் வந்ததும் வராததுமாக ஜெயலக்ஷ்மி தனது பல்லவியை ஆரம்பித்துவிட இதே வேறு சமயமாக இருந்திருந்தால் அடுத்த நொடியே சரியாக திருப்பி கொடுத்திருப்பாள் மதுஷிகா. ஆனால், சலசலப்புகள் எதற்கும் பதில் சொல்லும் அளவிற்கு அவளுக்கு உடலிலும் மனதிலும் தெம்பில்லாமல் இருந்தது.
அதோடு வீட்டில் உறவினர்கள் வேறு நிறைந்திருக்க இப்பொழுது ஜெயலக்ஷ்மிக்கு சரிக்கு சரி நின்று பேசுவதும் உசிதமன்று என்று தோன்ற அமைதியாகவே நின்றிருந்தாள்.
அதே சமயம் அவர்கள் அருகே வந்து நின்ற சரோஜினி "வந்த பொண்ணை வாசலிலேயே நிக்க வச்சு பேசிட்டிருக்கியே வைஷு. முதல்ல அவளை உள்ளே விடு" என்று வைஷாலியிடம் ஆரம்பித்து "நீ உள்ள போய் ஃப்ரெஷாகிட்டு வா டா. அம்மா காபி போட்டு வைக்குறேன்" என்று மதுஷிகாவிடம் முடித்து பாட்டிக்கும் பேத்திக்கும் மூண்டுவிட காத்திருந்த வாய் தர்க்கத்திற்கு வழியில்லாமல் செய்திருந்தார்.
தாயிடம் "ம்ம்ம்" என்று மட்டும் பதிலிறுத்த மதுஷிகா மாடியேற அப்பொழுதுதான் நடப்பவை அனைத்தையும் பார்த்துக்கொண்டே மாடிப்படி இறங்கி வந்துகொண்டிருந்தான் தானவீரன்.
அவன் வருவதை கூட கவனியாமல் குனிந்தபடியே மாடிப்படியேறி வந்தவள் தன்னை நெருங்கி விட்டதும் சோர்வாக தெரிந்த அவள் முகத்தை புருவங்கள் சுளித்து பார்த்தவன் "ஹாய் வாலு" என்று எப்பொழுதும் போல அவள் தலையை கலைத்துவிட்டு வரவேற்றான் அவன்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் "ஹாய் மாமா, நீ தானா. நான் யாரோன்னு நினைச்சேன்" என்று புன்னகைத்தபடி சொன்னாலும் அவளது கண்கள் உயிர்ப்பில்லாமல் இருப்பது போல் தான் தோன்றியது அவனுக்கு.
சட்டென "என்னாச்சு உனக்கு?" என்று அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தவன் "உடம்பு எதுவும் சரியில்லையா?" என்று அக்கறையாக கேட்டான்.
"நல்லா தான் மாமா இருக்கேன்” பதில் சொன்னாள் அவள்.
"அப்புறம் எதுக்கு முகம் இப்படி பியூஸ் போன பல்பு மாதிரி இருக்கு... எக்ஸாம் எதுவும் ஊத்திகிச்சா?" என்று நமட்டு சிரிப்பு சிரித்தபடி கேட்க
“என்னை என்ன உன்னை மாதிரி நினைச்சியா?ராத்திரியெல்லாம் தூக்கமில்லாமல் படிச்சது. அதுதான் கொஞ்சம் களைப்பா இருக்கு" என்றாள்.
"ஆமால்ல, நீதான் படிப்பாளியாச்சே மறந்தே போயிட்டேன் பாரு" என்று தானவீரன் அவளை கிண்டல் செய்ய தொடங்கிவிட அவன் கையில் கிள்ளியவள் "உன்னை அப்புறம் கவனிச்சிக்குறேன். இப்போ ரொம்ப டயர்டா இருக்கு ஃப்ரெஷாகிட்டு வரேன், தள்ளு" என்று வழியை மறைத்துக் கொண்டிருந்தவனின் தோளில் கை வைத்து தள்ளியவள் தனது அறையை நோக்கி சென்றுவிட்டாள்.
உள்ளே நுழைந்தவள் கையில் வைத்திருந்த பையை தூக்கி அறைக்குள்ளிருந்த சோபாவில் போட்டுவிட்டு கண்ணாடி முன்னே நின்று தன்னையே பார்த்தாள்.
வெறுப்பாக இருந்தது.
முத்தமிடுவதும், கட்டியணைப்பதும், சிகையில் கரம் கோர்த்து நெறிப்பதும், ஆடை கலைவதும்,மஞ்சத்தின் மேல் சரிவதுமாக அவள் நினைவில் அரைகுறையாக பதிந்த விடயங்கள் கண்முன்னே நிழலாடின.
முகத்தை இருகைகளாலும் அழுந்த தேய்த்துக்கொண்டாள்.
அதே கரங்கள் சிறு நடுக்கத்துடன் மெல்ல கீழிறங்கி அவள் அணிந்திருந்த ஷர்ட்டில் முதல் இரண்டு பட்டன்களை திறந்து விட்டன.
கைகளில் நடுக்கம் சற்றே அதிகரிக்க மெல்ல இடப்பக்க மார்பை மூடியிருந்த ஷர்ட்டை மெல்ல விளக்கி பார்த்தாள். அவள் இருதயம் தடத்தடுத்துக் கொண்டிருந்த இடத்தில் பற்தடங்கள் பதிந்து அந்த இடமே சிவந்திருந்தன.
கைகளால் அதை வருடி பார்த்தவளுக்கு கண்களில் நீர் தானாக கொட்டியது. அவள் செய்து விட்டு வந்திருந்த காரியத்தை நினைத்து அருவருப்பாக இருந்தது. கத்தி அழவேண்டும் போல இருந்தது. ஆனால், வீடே சொந்த பந்தங்களால் நிறைந்திருக்க அதை கூட அவளால் செய்ய முடியவில்லை.
நேரே குளியலறைக்குள் நுழைந்து ஆடைகள் எதையுமே கலையாமல் துாவாலைக்குழாயை திறந்து விட்டு கொட்டும் நீருக்கடியில் நின்றுவிட்டாள். நிகழ்ந்ததை நினைக்க நினைக்க நிற்பதற்கு கூட காலில் வாழுவில்லை அவளுக்கு. தனது உடலே கால்களுக்கு பாரமாக கனக்க அப்படியே தொய்ந்து குளியலறை தரையிலேயே அமர்ந்துவிட்டாள் மதுஷிகா.
அடுத்து என்ன செய்வது, யாரிடம் சொல்வது என்று அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. கொட்டும் நீருக்கடியில் அமர்ந்திருந்தவள் தலையில் அடித்துக்கொண்டே அழுதாள். அவளின் விசும்பல் ஒலி லேசாக வெளியில் வந்துவிட சட்டென்று இருக்கரங்களையும் எடுத்து வாயை பொத்திக்கொண்டே அழுதாள்.
அவள் செய்துவிட்டு வந்த காரியத்தை வீட்டில் யாரிடமும் சொல்லும் சூழ்நிலையும் இப்போது அங்கு இல்லை என்பதை அவள் நன்கறிவாள். அவளின் வைஷு அக்காவின் திருமண வைபவம் இது. அதில் தன்னால் எந்த குளறுபடியும் நேர்ந்துவிட கூடாது என்று உறுதியாக இருந்தாள்.
குடும்பத்தாரின் மகிழ்ச்சியில் தனது முட்டாள் தனத்தால் நிகழ்ந்த சம்பவத்தை சொல்லி மண்ணள்ளி போடவும் அவள் தயாராக இல்லை. அவர்கள் முழுமையாக அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்றே நினைத்தாள்.
எவ்வளவு நேரம் அப்படியே அழுதுகொண்டிருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. நெஞ்சில் ஏறியிருந்த பாரத்தை தனியாளாக தாங்கி கொள்ள அவளால் முடியவில்லை. சாய்ந்துகொள்ள அக்காவின் தோள் தேடியது பேதை மனது.
ஆனால், அவளின் சோகத்தை தீர்த்துக்கொள்ளும் நேரமல்ல இது தமக்கையின் மகிழ்ச்சியை கொண்டாடும் நேரம் என்பது அவளின் புத்திக்கு உரைக்க இப்போதைக்கு தனது விடயத்தை ஓதுக்கி வைத்துவிட்டு அக்காவின் திருமணத்தை கவனிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.
திருமண வைபவம் அனைத்தும் முடிய சம்பந்தப்பட்டவனிடமே பேசி மேற்கொண்டு செய்ய வேண்டியதை பார்த்துக்கொள்ளலாம் என்றும் நினைத்தாள்.
ஒருபாடு அழுது தீர்த்தது என்னவோ மனதை கொஞ்சமே கொஞ்சம் ஆற்றுப்படுத்தியிருக்க தனது பிரச்சனைகளை எல்லாம் தூவாலைகுழாயில் கொட்டிய தண்ணீரோடு கண்ணீராக கரைத்து விட்டு வெளியில் வந்திருந்தாள் மதுஷிகா.
***
அன்று மாலை பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரிசப்ஷன் மற்றும் மறுநாள் காலை முகூர்த்தத்தில் அதே ஹோட்டலில் கல்யாணம் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்க பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் என்று அனைவரும் விருந்துபசரிப்பு முடிய அதே ஹோட்டலிலேயே தங்கிக்கொள்வது போன்று ஏற்பாடு செய்திருந்தான் தருண்.
அதற்கேட்ப பெண் வீட்டார் அனைவரும் நேரத்திற்கே கிளம்பி ஹோட்டலுக்கு சென்றிருந்தனர்.
மாலை ரிசெப்ஷனுக்கு நேரம் நெருங்கி கொண்டிருக்க வைஷாலிக்கு ஒப்பனை செய்ய தொடங்கியிருந்தனர் மணப்பெண்ணிற்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒப்பனை கலைஞர்கள்.
மதுஷிகாவும் அக்காவின் அறையிலேயே அவளுடனேயே தங்கியிருக்க அவளும் ஒரு புறம் தன்னை ஆயுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் இருந்த மனநிலைக்கு இது போன்ற அலங்காரங்கள் எல்லாம் செய்துகொள்ளவே விருப்பமில்லாமல் இருந்தாலும் தமக்கையின் மகிழ்வில் எந்த குறையும் வந்துவிட கூடாது என்பதோடு தனது மாற்றத்தை யாரும் கண்டுகொண்டுவிட கூடாது என்பதிலும் கவனமாக இருந்தவள் முடிந்தவரை தன்னை மிக அழகாகவே தயார் செய்துகொண்டாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் அவர்களின் அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்க மதுஷிகா தான் அறைக்கதவை திறந்தாள். அறைக்குள் நுழைந்த சரோஜினி தங்கச்சிலைகளென ஆயுத்தமாகியிருந்த தனது இரு மகள்களையும் பார்த்து உள்ள பூரிப்புடன் லேசாக கண்கள் கலங்கி தான் போனார்.
ஒரு தாயின் பூரிப்பு அது.
"என் கண்ணே பட்டுடும் போல " என்று சொல்லிக்கொண்டே கண்ணில் தீட்டியிருந்த அஞ்சனத்தை தொட்டு இரு மகள்களுக்கும் திருஷ்டி பொட்டு வைத்து விட்டார்.
பெரும்பாலும் வைஷாலி மற்றும் மதுஷிகா இருவரும் இது போன்று விசேஷ நாட்களில் இப்படி முழு அலங்காரங்களுடன் தயாராகும் நேரங்களில் எல்லாம் அவர்களின் தாய் இப்படி நெகிழ்ந்து நிற்பது வழக்கமாக இருந்தாலும் இன்று ஏனோ மதுஷிகாவின் கண்கள் மளுக்கென்று குளம் கட்டின.
உயிராய் உறைந்த உறவுகளை ஏமாற்றிவிட்ட குற்றவுணர்வு ஒன்று பாறாங்கல்லாய் நெஞ்சை அழுத்தியது. சட்டென தாவி தாயை கட்டிக்கொண்டாள்.
"என்னம்மா?" என்று அவள் தலையை வருடியபடி சரோஜினி கேட்க அப்பொழுதுதான் ஒப்பனை முடிந்திருக்க வேகமாக தங்கையின் அருகே வந்த வைஷாலியும் "ஹேய் என்னாச்சு?" என்று மதுஷிகாவின் தோளை ஆறுதலாக தடவி கொடுத்தாள்.
தான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டதை உணர்ந்துகொண்ட மதுஷிகா விழியோரம் கசிந்த நீரை துடைத்து விட்டபடியே தாயின் அணைப்பிலிருந்து விடுபட்டுக்கொண்டவள் "ஒண்ணுமில்ல. அக்கா கல்யாணமாகி நம்மை விட்டு போய்டுவால்ல. அதை நினைச்சா ஒரு மாதிரி கஷ்டமா இருக்கும்மா" என்று சொல்லி சமாளித்தாள்.
"அட மண்டு, இதுக்கு தான் அழறியா? அக்கா என்ன அமெரிக்காவுக்கா போக போறா. இங்க பக்கத்துல தானே இருக்க போறா. தோணுற போதெல்லாம் போய் பார்த்துட்டா போச்சு" என்று தனக்கும் அதே கவலை இருந்தாலும் இளைய மகளை ஆறுதல் படுத்த அதனை காட்டிக்கொள்ளாமல் பேசினார் சரோஜினி.
இதற்கிடையில் அவர்களை தேடிவந்திருந்தாள் அறிவுமதி.
அவர்கள் அறைக்கதவு திறந்திருக்கவும் நேரே உள்ளே நுழைந்தவள் "சின்னம்மா, உங்களை பொண்ணை அழைச்சு வர சொல்லி அனுப்பினா இங்க என்ன பண்ணுறீங்க? அங்க சித்தப்பா உங்களை தேடிட்டிருக்காரு. மாப்பிள்ளை என்ட்ரி கொடுக்க ரெடியாம். பொண்ணுக்கு தான் வெயிட்டிங்" என்று படபடத்தாள்.
"அட வந்த வேலையை மறந்துட்டு என்ன என்னவோ பேசிட்டிருக்கேன் பாரு. நீங்க ரெண்டு பேரும் ரெடி தானே வாங்க போகலாம்" என்று அழைத்தார் சரோஜினி.
"நீங்க அக்காவை அழைச்சிட்டு போங்கம்மா. நான் இப்போ வரேன்" என்றாள் மதுஷிகா.
"சரிம்மா, சீக்கிரம் வந்திடு" என்று சொல்லிவிட்டு வைஷாலி மற்றும் அறிவுமதி இருவரையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
அவர்களை அனுப்பிவிட்டு கண்ணாடி முன்னே நின்ற மதுஷிகா "சும்மா இப்படி உடைஞ்சு போய் அழாத மது. பி ஸ்ட்ரோங்" என்று சொல்லிக்கொண்டே கண்களில் கசிந்த நீரால் கரைந்திருந்த மையை சரி செய்துகொண்டவள் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டே அறையிலிருந்து வெளியேறி ரிசப்ஷன் நடக்கவிருக்கும் மண்டபத்தை நோக்கி நடந்தாள்.
அதே சமயம் கண்ணாடி முன்னே நின்று மதுஷிகா சொல்லிய அதே வார்த்தைகளை மீண்டும் மீண்டும் தனக்கு தானே சொல்லிக்கொண்டிருந்தான் தானவீரன்.
இதோடு எத்தனையாவது முறை சொல்லிவிட்டான் என்றும் தெரியவில்லை. தருணுடன் வைஷாலியை சேர்த்து வைத்து பார்க்க வேண்டும் என்கின்ற எண்ணமே அவன் மனதை ஈட்டியால் குத்தி கிழித்துக்கொண்டிருக்க அந்த காட்சியை கண்களால் பார்க்க மனதளவில் தன்னை தயாராக்கிக்கொண்டிருந்தான் அவன்.
இறுதியாக ஒருமுறை மீண்டும் "பி ஸ்ட்ரோங் வீரா" என்று சொல்லிக்கொண்டவன் கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்தான்.
நேரமாகிவிட்டதை உணர்ந்தவன் போட்டிருந்த கருநீல நிற ஷர்ட்டின் கையை முட்டி வரை மடித்துவிட்டபடி தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டான். விழிகளை மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டே அறையிலிருந்து வெளியேறி அவனும் ரிசெப்ஷன் மண்டபத்தை நோக்கி தான் நடந்தான்.
மின்தூக்கியில் நுழையப்போகும் அதே சமயம் மதுஷிகாவும் மின்தூக்கியில் நுழைந்திருக்க இருவரும் ஒன்றாகவே ரிசெப்ஷன் மண்டபத்திற்குள் நுழைந்திருந்தனர்.
அவர்கள் மண்டபத்திற்குள் நுழைவதற்கும் மண்டபத்திற்குள் இது போன்ற நிகழ்வுகளுக்காகவென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த பால்கனி போன்ற அமைப்புடன் ஒட்டி அமையப்பெற்ற சுருள் படியிலிருந்து கல்யாண மாப்பிள்ளை மற்றும் பெண்ணும் கிராண்ட் என்ட்ரி கொடுப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது.
தருண் கருப்பு நிற கோர்ட் சூட்டில் கம்பிரமாக நடந்து வர அவனுக்கு பொருத்தமாக அடர் சிகப்பு நிற லெஹெங்கா அணிந்து அதற்கு தோதாக குண்டன் வகை ஆபரணங்கள் பூட்டி அம்சமாக நடந்து வந்தாள் வைஷாலி.
பின்னணியில் ஒலித்துக்கொண்டிருந்த பாடலின் துணையுடன் இருவரும் கரம் கோர்த்து அந்த சுருள் படியில் ஒவ்வொரு படியாக இறங்கி வர மணமக்களின் ஜோடி பொருத்தத்தை பார்க்க வந்திருந்த சொந்தங்களுக்கு இரு விழிகள் போதவில்லை.
அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நேரம் தருண் மற்றும் வைஷாலியை ஜோடியாக பார்த்ததும் மனம் கலங்கினாலும் வலியை பொறுத்துக்கொண்டு புன்னகைத்தது தானவீரன் என்றால் அக்காவின் கரம் கோர்த்து வந்தவனை பார்த்து அதிர்ந்து நின்றது என்னவோ மதுஷிகா தான்.
Last edited: