அத்தியாயம் 34
குடும்பத்துடன் விடுதிக்கும் வந்து சேர்ந்த தருண் தனக்கான அறைக்குள் நுழைந்துகொண்டான். அவனுக்கு தயாராகும் மனநிலையும் இருக்கவில்லை. அங்கிருந்த சோபாவில் சாய்ந்து இருந்தவன் கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி இரு விரல்களால் நெற்றியை நீவிக்கொண்டே விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தான்.
எதிலும் தெளிவாக இருப்பவன் தான் அவன். ஆனால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவனே தடுமாறி நின்ற தருணம் தான் அது. ரவி சொன்னது போல இதை ஒரு விபத்தாக எண்ணி அவனால் சாதாரணமாக கடந்து போகவும் முடியவில்லை.
அவன் அப்படியே அமர்ந்திருக்க அவன் அறை கதவு தட்டப்பட்டது. சலிப்பாக எழுந்து சென்று கதவை திறக்க அங்கே நின்றிருந்தார் ஆர்த்தி. "என்னப்பா இன்னும் ரெடி ஆகாமல் இருக்க" என்று கேட்க அப்பொழுதுதான் நேரத்தை பார்த்தான். அது மாலை மணி ஆறரையை நெருங்கியிருந்தது. ஏழரை மணிக்கு விருந்துபசரிப்பு தொடங்குவதாக ஏற்பாடு.
"வரேன் மா நீங்க போங்க" என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
ரிசெப்ஷனும் ஆரம்பமாகியிருக்க வைஷாலியும் முழு அலங்காரத்துடன் தேவைதையாக அவன் முன்னே வந்து நின்றிருந்தாள். இதுவே வேறு சமயமாக இருந்திருந்தால் அழகு பதுமையென அவன் முன்னே நின்றிருந்த பெண்ணவளின் அழகில் தெரிந்தே தொலைந்திருப்பான் தருண்.
கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவளை கண்களில் நிறைத்துக்கொள்பவனாயிற்றே அவன்.
ஆனால், இப்பொழுது அவள் முகத்தை ஏறிட்டு பார்க்கவும் அவனால் முடியவில்லை. அவனை பார்த்து வசீகரமாக புன்னகைத்தவளுக்கு ஒரு வெற்று புன்னகையை மட்டுமே பதிலாக வழங்க முடிந்தது. அவள் விழிகளை முற்றிலுமாக தவிர்த்தான். அவளை நெருங்கி நிற்கும் உரிமை இருந்தும் விலகியே நின்றுகொண்டான்.
அவர்களின் இந்த முக்கிய தினத்தை ஒளிப்பதிவு செய்ய வந்த ஒளிப்பதிவாளர் தான் "கூச்சப்படாமல் அவங்க பக்கத்துல நில்லுங்க சார். அப்படியே மேடம் கையை பிடிச்சிட்டு படியில் இறங்கி வாங்க. அப்போ தான் வீடியோவில் நல்லா இருக்கும்" என்று சொல்ல அவனை கடுப்பாக பார்த்த தருண் வைஷாலியை பக்கவாட்டாக ஒருமுறை திரும்பி பார்த்து விட்டு "இல்ல பரவால்ல இப்படியே எடுங்க" என்று மறுக்க "இட்ஸ் ஓகே தருண் பிடிச்சிக்கோங்க" என்று தானாக அவளின் கரத்தை அவன் முன்னே நீட்டியிருந்தாள் வைஷாலி.
அவனால் மறுத்தும் பேச முடியவில்லை. அதே நேரம் அங்கே இருந்த புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் முன்னிலையில் காட்சி பொருளாகவும் அவனுக்கு விருப்பமில்லை. நீட்டிய வைஷாலியின் கரத்தை மென்மையாக பற்றியவன் அவளை அழைத்துக் கொண்டு விருந்தினர்கள் முன்னே வந்துவிட்டான்.
ஏகப்பட்ட குழப்பங்கள் மூளைக்குள் குடைந்துகொண்டிருக்க அவன் முகத்தில் போலியான சின்ன சிரிப்பு. ஒன்றும் அறியாமல் அவன் அருகே கல்யாண கனவுகளுடன் நின்றிருந்த வைஷாலிக்கு அவனால் கொடுக்க முடிந்த குறைந்த பட்ச ஆறுதல் அந்த புன்னகை மட்டும் தான் அல்லவா.
அதே சமயம் ஒருவாறு எல்லாவற்றையும் சமாளித்தாகிவிட்டது, இனி அக்காவின் திருமணம் முடிய அடுத்த பிரச்சனையை பார்த்துக்கொள்ளலாம் என்று கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியுடன் மண்டபத்திற்குள் நுழைந்த மதுஷிகா அங்கே மாப்பிள்ளையாக தருணை சத்தியமாக எதிர் பார்க்கவேயில்லை.
நேற்றிலிருந்து அதிவேகத்தில் சுழன்று, நின்று, மீண்டும் சற்றே சீராக சுழல தொடங்கியிருந்த அவளின் உலகம் இப்பொழுது மீண்டும் தலைகீழாக சுழல்வது போல் உணர்ந்தாள்.
அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஆனால், சொந்தங்கள் நிறைந்திருக்கும் மண்டபத்திற்குள் நின்று அழக்கூட முடியாத இக்கட்டான சூழ்நிலை அவளுக்கு.
இயன்றவரை தன்னை கட்டுப்படுத்திக்கொண்டாள். கண்களை மூடித்திறந்து தன்னை சமன் செய்துக்கொண்டாள். தருணின் பார்வையில் படாமல் முடிந்தவரை தன்னை மறைத்துக்கொண்டாள்.
தவிர்க்க முடியாத தருணங்களில் கூட அவனின் பார்வை தன் மீது படாதவாறு ஒதுங்கி நின்றுகொண்டாள்.மணமக்களை நெருங்குவதை வேண்டுமென்றே தவிர்த்திருந்தாள்.
எத்தனையோ முறை வைஷாலி தருணை அவளுக்கு அறிமுக படுத்தி வைப்பதற்காக தேடிய நேரமெல்லாம் தமக்கையின் கண்களில் படாமல் தப்பித்துக்கொண்டே இருந்தாள்.
வழக்கமாக இது போன்ற குடும்ப நிகழ்வுகளில் எல்லாம் வைஷாலி மற்றும் தானவீரனுடன் தான் சுற்றுவாள். ஆனால், இப்பொழுது அவளின் தமக்கை மேடையில் நிற்க அவளால் தானவீரனுடனும் இருக்க முடியவில்லை.
அவள் இருக்கும் மனநிலையில் அவனுடன் சென்றால் நிச்சயமாக அவளது மாற்றத்தை கண்டுபிடித்து விடுவான். அதற்காகவே அவனையும் தவிர்திருந்தாள் பெண்ணவள்.
இது எதுவும் மதுஷிகாவிற்கு சாதாரண காரியமாக இருக்கவில்லை. முயன்று கஷ்டப்பட்டு தனது உணர்வுகள் அனைத்தையும் கட்டுக்குள் வைத்துக்கொண்டு தான் நடமாடிக்கொண்டிருந்தாள். அதுவே அவளுக்கு இரத்த அழுத்தத்தை ஏகத்துக்கும் எகிற வைத்துக்கொண்டிருந்தது.
எப்படி தவிர்த்தாலும் சில நேரங்களில் தருணின் பார்வை அவள் மீது படிந்ததுதான். ஆனால், அவன் முகத்தில் வித்தியாசமாக எந்த உணர்வுகளையும் அவளால் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. வெகு இயல்பாக தான் இருந்தான் அவன். ஒருவேளை அவனுக்கு முன் தினம் நிகழ்ந்தது எதுவும் நினைவில் இல்லையோ என்றும் கூட யோசித்தாள்.
குழப்பத்தில் சுற்றிக்கொண்டிருந்தவள் அவனுக்கு உண்மையில் எதுவும் நினைவில்லாமல் இருந்தால் கூட நன்றாக இருக்கும் என்று அசட்டு தனமாகவும் யோசித்துக்கொண்டாள்.
அவளும் கூட எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் சாமார்த்தியமாக மறைத்துக்கொண்டாள்.
ஆனால், அதி முக்கியமாக யாரிடம் மறைக்க நினைக்கின்றாளோ அவன் அனைத்தும் அறிந்துதான் அங்கே மேடையில் வைஷாலியின் அருகே கம்பீரமாக நின்றுக்கொண்டிருக்கின்றான் என்பது அவளுக்கு அப்போது தெரியாமல் போனது தான் பரிதாபம்.
ரிசெப்ஷனுக்கு தயாராவதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே நின்றிருந்தவனுக்கு அழைத்திருந்தான் ரவி.
முன் தின இரவு நிகழ்ந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் விசாரித்து சொன்னவன் அவன் மது கோப்பையில் போதை மருந்தை கலந்தது ஸ்ரீகாந்த் என்ற தகவலுடன் அவனுக்கு உடந்தையாக இருந்த அசோக் மற்றும் அந்த விடுதி பணியாள் என்று அனைவரின் விவரங்களையும் ஒன்று விடாமல் சொல்லியிருந்தான்.
அனைத்தையும் கேட்ட தருண் "அந்த பொண்ணு…" என்று ஆரம்பிக்க ரவியிடம் சிறு மௌனம்.
சிசிடிவி கேமரா ஒளிப்பதிவுகளின் மூலம் மதுஷிகாவை அடையாளம் கண்டு அவளின் தவகவல்களையும் திரட்டி எடுத்திருந்தான். அவளை பற்றி அறிந்துக்கொண்டவை அவனுக்கே அதிர்ச்சியான தகவலாக இருக்க அதை தருணுக்கு எப்படி சொல்வது என்றும் அவனுக்கு தெரியவில்லை.
அவன் திருமணம் செய்துகொள்ள போகும் வைஷாலியின் தங்கைதான் அந்த பெண் என்ற உண்மையை தருணிடம் சொல்லவே தயக்கமாக இருந்தது அவனுக்கு
ரவியின் அமைதி அவன் இதயத்துடிப்பை இன்னமும் அதிகரிக்க பொறுமை இழந்த தருண் "சொல்லுடா" என்றான் அழுத்தமாக.
ஒரு ஆழ்ந்த மூச்சினை எடுத்துக்கொண்ட ரவி "அறைக்கு போகுற நடைபாதையில் எடுத்த சிசிடிவி ஃபூட்டேஜ் இருக்கு. உனக்கு அனுப்பி வைக்குறேன் பாரு" என்று சொல்லிவிட்டு வைத்திருந்தான்.
ரவி அனுப்பி வைத்த காணொளியில் மதுஷிகாவின் முகத்தை பார்த்ததும் ஒரு நொடி அதிர்ந்தாலும் இதை அவன் எதிர்பார்த்தே தான் இருந்தான்.
பாரில் இருந்து அறைக்கு செல்லும் வரை எத்தனையோ பெண்களை அவன் கடந்து சென்ற போதிலும் கட்டுப்பாட்டை இழக்காமல் இருந்தவன் அந்த ஒரு பெண்ணிடம் மட்டும் எப்படி தடுமாறி போனான் என்று அவனுக்குள் யோசனை ஓடிக்கொண்டே தான் இருந்தது.
அவளின் முகம் அவனுக்கு தெளிவாக நினைவில்லை என்றாலும் வைஷாலி பயன்படுத்தும் அதே வாசனை திரவியத்தின் நறுமணத்துடன் கிட்ட தட்ட அவளை போன்ற முக அமைப்புடன் அந்த பெண்ணும் இருந்ததாக தான் அவனுக்கு அரைகுறையாக ஞாபகம் இருந்தது.
வேறு யாரோ ஒரு பெண் போதையின் காரணமாக அவனுக்கு வைஷாலியாக தெரிந்திருப்பாளோ என்று எப்படி எப்படியோ யோசித்துப்பார்த்தவனுக்கு அன்று வைஷாலியின் வீட்டில் மதுஷிகாவின் புகைப்படத்தை பார்த்த நினைவு வந்து போக ஒருவேளை அது அவளாக இருக்கக்கூடுமோ என்றும் யூகித்திருந்தான். இப்பொழுது இந்த காணொளியும் அதை உறுதிப்படுத்தியிருக்க அவன் மனதால் மொத்தமாக மரித்தே போய்விட்டான்.
தான் காதலித்து ஆசை ஆசையாக மணமுடிக்க காத்திருக்கும் பெண்ணின் தங்கையுடன் அவன் அத்துமீறி நடந்திருக்கின்றானே. நினைக்கவே உடலெல்லாம் சகதியை பூசிக்கொண்டது போன்ற உணர்வு அவனுக்கு. அருவருத்து போய்விட்டான்.
அந்த நொடியே அடுத்து அவன் செய்ய வேண்டியவைகளை முடிவு செய்துவிட்டுத்தான் மண்டபத்திற்குள்ளேயே நுழைந்திருந்தான் தருண்.
மேடையில் நின்றிருந்த தருண் இயந்திரகதியில் அவனுக்கு சொல்லப்படும் அனைத்து செயல்களையும் செய்து கொண்டிருந்தாலும் அவனது பார்வை அவ்வப்போது மதுஷிகாவை தொட்டு மீண்டது. அவளை காணும் நேரம் எல்லாம் கோபத்தில் அவன் கழுத்து நரம்புகள் புடைத்துக் கிளம்புவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.
அதே சமயம் இத்தனைக்கும் காரணமாக இருந்துவிட்டு இப்பொழுதும் எதுவுமே தெரியாததுபோல் முகத்தை வைத்துக்கொண்டு மண்டபத்தை சுற்றி வலம் வந்துகொண்டிருந்த அவளின் அழுத்தத்தின் மீது அவனுக்கு கொலைவெறியே உண்டாகிற்று.
ஆனால், எதையும் அவனால் காட்டிக்கொள்ள முடியவில்லை. அவன் மனதிற்குள் போட்டு வைத்திருந்த கணக்கின் படி அனைத்தும் நடக்க வேண்டும் என்றால் அவன் தற்சமயத்திற்கு அமைதி காத்தாக வேண்டும்.
மனதளவில் இறுகி போய்விட்டவனுக்கு முகத்தில் உணர்ச்சிகளை துடைத்தெறிவதும் பெரிய காரியமாக இருக்கவில்லை. போலி சிரிப்பையே முகமூடியாக அணிந்துகொண்டவன். வெகு இயல்பாக வைஷாலியின் அருகே நின்றுகொண்டான்.
அன்று தருண் என்ற வேடனின் பார்வை குறிவைத்தது அவனை விட்டு ஓடி ஒளிய துடித்த மதுஷிகா என்னும் பெண்மானை தான்.
பஃபே முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசரிப்பும் தொடங்கியிருக்க எந்த பிரச்சனையும் இல்லாமல் பாதி கிணற்றை தாண்டி விட்ட நிம்மதியில் மதுஷிகாவும் சாப்பிட சென்று விட்டாள்.
தனக்கு வேண்டிய உணவை தட்டில் வைத்துக்கொண்டிருந்த சமயம்
"ஹாய் மது" என்று ஒரு குரல் அவளுக்கு பின்னால் இருந்து கேட்டது.
விழிகள் அகல விரிய கையில் ஏந்தியிருந்த சாப்பாட்டு தட்டுடன் திரும்பி பார்த்தாள் மதுஷிகா.
அவளுக்கு முன்னே ஆறடி உயரத்தில் தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றிருந்தான் தருண். தனது இரு கரங்களையும் பாண்ட் பாக்கெட்டில் விட்டபடி மந்தகாச புன்னகை ஒன்றை சிந்தினான்.
அவனைப் பார்த்ததும் அவளுக்கு உலகமே ஒரு நொடி சுழல்வதை நிறுத்திவிட்டதை போன்று இருந்தது. அதிர்ச்சியில் அவனையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்ததில் அவனுக்கு அருகில் நின்றிருந்த வைஷாலி கூட அவள் கண்களில் புலப்படவில்லை.
அதிர்ச்சியில் சிலையென சமைந்து நின்றவளை பார்த்தவன் "ம்...கூம்" என்று குரலை செரும அந்த சத்தத்திலேயே நிஜ உலகை அடைந்திருந்தாள் மதுஷிகா. தருணில் இருந்து தனது பார்வையை விலக்கி கொண்டாள்.
"நான் சொன்னேன் தானே உங்களை பார்த்ததுமே ஷாக்காக போறான்னு. இப்போ பாருங்க அப்படியே ஃபிரீஸ் ஆகி நிக்குறா" என்று வைஷாலி சொல்ல அப்பொழுதுதான் அவள் அங்கே நிற்பதையே கவனித்தாள் அவள்.
வைஷாலியை பார்த்ததும் ஒரு மென்முறுவல் பூத்து அந்த சிரிப்பின் பின்னே தனது பதட்டத்தை மறைத்துக்கொள்ள முயன்றாள்.
ஆனால், தருணிடம் அது போன்ற பதட்டம் எதுவுமே இல்லை. வெகு இயல்பாக நின்றிருந்தான்.
"என்னாச்சு மது? நெர்வஸ் ஆஹ் இருக்குற மாதிரி தெரியுதே. ஆர் யூ ஓகே?" என்று கேட்டான். அவன் விழிகள் அவள் விழிகளை நேரே பார்த்திருந்தன.
அவளுக்கு தான் அவனை எதிர்கொள்ள முடியவில்லை.
அவனை மட்டுமல்ல அவன் அருகே நின்ற வைஷாலியையும் தான்.
இப்பொழுதே அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போல் இருந்தது. ஆனால். அது சாத்தியமல்லவே. எப்படி செல்வாள். அப்படி சென்றால் அவளின் அந்த செயலுக்கு வைஷாலியிடம் விளக்கம் கொடுக்க வேண்டி வருமே. என்னவென்று சொல்லுவாள்.
நிலைகொள்ள இயலாமல் வலுவிழக்க தொடங்கியிருந்த கால்களை கஷ்டப்பட்டு சமாளித்துக்கொண்டு நின்றிருந்தாள்.
"ஆஹ்... அது...அது ஓண்ணுமில்லை. உங்களை இங்க எதிர்பார்க்கவே இல்லை" என்று சொன்னாள். உதடுகளில் விழிகளை எட்டாத புன்னகை ஒன்று ஒட்டியிருந்தது.
"ஓஹோ...உனக்கு என்னை ரொம்ப பிடிக்குமாமே. நிஜமாவா?" என்று கேட்டான்.
அந்த கேள்வியில் அவனை விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் மதுஷிகா. இப்பொழுதும் அவன் சாதாரணமாக தான் இருந்தான்.
அவளுக்கே குழப்பமாக இருந்தது. அவனுக்கு நிஜமாகவே அவளை நினைவில்லையோ என்கின்ற சந்தேகம் மீண்டும் அவள் மனதில் எழாமல் இல்லை.
ஆனால், அதை அவனிடம் கேட்கவும் முடியாது. எதையாவது கேட்டு அவனுக்கு நினைவில்லாத விடயத்தை அவளாக நினைவு படுத்திவிடவும் அவள் விரும்பவில்லை.
தானும் எதையும் காட்டிக்கொள்ளாமல் சகஜமாக இருப்பதே உசிதம் என்று தோன்ற அவனுடன் இயல்பாக உரையாட முயன்றாள்.
"ம்பச்...மது உன்கிட்ட தான் கேட்குறாரு. இன்னும் நீ அதிர்ச்சியில் இருந்து வெளிவரவேயில்லையா ?" என்று வைஷாலி அவள் தோளை பற்றி உலுக்கவும் தான் தனக்குள் ஓடிய சிந்தனையில் மூழ்கியிருந்தவள் தெளிந்திருந்தாள்.
"என்ன....என்ன கேட்டிங்க" என்று மீண்டும் கேட்டாள்.
"என்னை உனக்கு ரொம்ப பிடிக்குமுன்னு வைஷு சொன்னா. உண்மையான்னு கேட்டேன்?" என்றான்.
"இம்ம்ம்...உங்க பாட்டு பிடிக்கும்" என்றாள்.
"நைஸ்" என்றவன் மென்மையாக சிரித்துக்கொள்ள அவன் விழிகள் அவளையே அழுத்தமாக பார்த்தன. அவன் விழிகளை இப்பொழுது கூர்ந்து கவனித்தவளுக்கு அவன் குரலிலும் முகத்திலும் இல்லாத வன்மம் ஒன்று அவன் விழிகளில் தெரிவது போன்று இருந்தது.
இதயம் வேகமாக படபடத்துக்கொண்டது. அதே சமயம் வைஷாலியிடம் வந்த ஆர்த்தி "வைஷு, என் கூட வாம்மா உனக்கு என் கிளோஸ் ஃபிரெண்டை இன்ட்ரோ கொடுக்குறேன்" என்று சொல்லியபடி அவளை அழைக்க "நீங்க பேசிட்டிருங்க....வந்திடுறேன்" என்று தருணை மதுவிடம் விட்டுவிட்டு ஆர்த்தியுடன் சென்றுவிட்டாள் வைஷாலி.
வைஷாலி அங்கே நிற்கும் வரையிலுமாவது உடம்பில் இருந்த வலு அவன் முன்னே தனியே நிற்கும் போது மொத்தமாக வடிந்துவிட்டதை போல் உணர்ந்தாள் மதுஷிகா.
செல்லும் வைஷாலியின் முதுகையே தருண் பார்த்திருக்க "வாழ்த்துக்கள் மாமா" என்று விட்டு அவன் அவளிடம் திரும்பும் முன்னவே விறுவிறுவென அங்கிருந்து அகல எண்ணி ஒரு எட்டு தான் எடுத்து வைத்திருப்பாள் "கல்யாணத்தை நிறுத்திடு மது" என்ற அவனின் குரலில் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.
அப்படியே அதிர்ந்து நின்றவள் மெல்ல திரும்பி அவன் முகத்தை பார்த்தாள். சற்று முன் இருந்த புன்னகை மொத்தமும் முழுதாக துடைக்கப்பட்டிருந்தது. விழிகளிலும் முகத்திலும் வன்மம் மட்டுமே நிறைந்திருந்தது.
"என்ன?" என்று மீண்டும் தெளிவுபடுத்திக்கொள்வதற்காக அவள் கேட்க "கல்யாணத்தை நீயே நிறுத்திடு" என்று அழுத்தமாக சொன்னான்.