அத்தியாயம் 38
துரு துருவென்று பொறுப்பில்லாமல் சுற்றி திரிந்த தானவீரனை தான் அவளுக்கு தெரியும். பல முறை பொறுப்பில்லா பிள்ளை என்று சேகர் திட்டி அவள் கேட்டும் இருக்கின்றாள். ஆனால், இன்று அவன் தான் பொறுப்பாக வீட்டு மனிதர்களை மீட்டெடுக்க தன்னால் முடிந்த எல்லாம் செய்துக்கொண்டிருக்கின்றான்.
அவன் மனதிலும் வலிகள் இருக்குமென்று அவளுக்கு தெரியும். ஆனால், அவன் எதையும் காட்டிக்கொள்ளாமல் வைஷாலியையும் குடும்பத்தினரையும் இயல்பாக்க முயன்றுகொண்டிருந்தான்.
அவள் அப்படியே நின்றிருக்க ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்ட சரோஜினி
"ஆரம்பத்திலேயே வீருக்கே வைஷாலியை பேசியிருந்திருக்கலாம்" என்று இயலாமையுடன் புலம்பிக்கொண்டார்.
அவர் புலம்புவது அறிவுமதியின் காதிலும் விழ "இனி எல்லாம் நல்லதே நடக்குமுன்னு நம்புவோம். நடந்ததையே நினைச்சு வருத்த படாமல் முதல்ல நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. இல்ல வீர் மாமாட்ட போட்டு கொடுத்துடுவேன்" என்றாள் மிரட்டல் போல.
அவளை திரும்பி பார்த்த சரோஜினிக்கு அப்பொழுதுதான் அவளை தானவீரனுக்காக பெண் கேட்க நினைத்தது நினைவில் வந்தது.
எல்லாம் அவர் நினைத்தது போல் நடந்திருந்தால் இவளும் இந்த வீட்டு மருமகளாக வந்திருக்க கூடியவள் என்ற எண்ணமும் மனதில் எழ அவள் கன்னம் வருடியவர் "உனக்கும் நல்ல வாழ்க்கை அமையட்டும்" என்று ஆசிர்வதிப்பது போல் சொன்னார்.
அவள் அவரை புருவம் சுருக்கி கேள்வியாக பார்க்க சட்டென சுதாகரித்து கொண்டவர் காய்ச்சிய பாலை கிருஷ்ணகுமாருக்காக ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு மீதம் இருந்ததை இன்னொரு டம்ளரில் ஊற்றி "உனக்கு வேணும்னா எடுத்துக்கோ. இல்லைனா ஃபிரிஜ்ஜில் வச்சிடு மதி. நான் தூங்க போறேன்" என்று சொல்லி விட்டு சென்றார்.
அவர் ஊற்றி கொடுத்த பாலை பார்த்தவளுக்கு தானவீரனின் நினைவுதான் வந்தது. இன்னும் சாப்பிடவில்லை என்றானே. சுற்றி இருப்பவர்களை பார்த்து பார்த்து கவனித்துக்கொள்கின்றான். ஆனால், தன்னை மறந்துவிடுகின்றான்.
பாலை எடுத்துக்கொண்டு தானவீரனை தேடித் சென்றாள்.
வீட்டிற்குள் தேடி பார்த்து அவன் இல்லாமல் போகவும் தோட்டத்து பக்கம் சென்றாள். மெல்லிய சாரல் மழை அப்பொழுதுதான் பெய்ய தொடங்கியிருந்தது.
அவளின் விழிகள் அவனை தேட ஊஞ்சலில் தான் அமர்ந்திருந்தான். மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு வானில் பூத்திருந்த ஓரிரண்டு நட்சத்திரங்களின் மீது பார்வையை பதித்திருந்தான்.
அவனை பார்த்துக்கொண்டே நடந்தவள் அவன் அருகே சென்று நின்றாள். தனதருகே நிழலாடுவது தெரிய திரும்பி பார்த்தான் அவன்.
அறிவுமதியை பார்த்ததும் "என்ன மதி, தூங்கலையா?" என்று அவன் புருவம் உயர்த்த "நானும் உட்கார்ந்துக்கலாமா?" என்று அவன் அமர்ந்திருந்த ஊஞ்சலை காட்டினாள் அவள் .
அவளை கேள்வியாக பார்த்தாலும் அவளுக்கு இடம் விட்டு நகர்ந்து அமர அவளும் அவன் அருகே அமர்ந்து கொண்டாள்.
கையில் இருந்த டம்ளரை அவனிடம் நீட்டினாள். அதை பார்த்துவிட்டு அவளை பார்க்க "பால். நீங்களும் காலையில் இருந்து ஒண்ணுமே சாப்பிடலையே" என்றாள்.
ஒரு பெருமூச்சுடன் அவளை பார்த்தவன் "நீ இதை எல்லாம் செய்யணும்னு இல்லை மதி" என்றான்.
மெதுவாக சிரித்தவள் "தெரியும் மாமா. நான் எந்த எண்ணத்தையும் மனசுல வச்சிட்டு இதை செய்யல. வெறும் அக்கறை மட்டும் தான். அது இருக்கலாம் தானே?" என்றாள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவன் அவள் கையில் இருந்து டம்ளரை வாங்கிக்கொண்டான். அதில் ஓரிரு மிடறு பருகிக்கொண்டே பார்வையை மீண்டும் வானுக்கு திருப்பியிருக்க "நான் ஒன்னு கேட்கட்டுமா மாமா?" என்றாள் அவளும் அந்த வானத்தை பார்த்தபடி.
அவன் பாலை கொஞ்சம் கொஞ்சமாக அருந்திக்கொண்டே "ம்ம்ம்" என்றான்.
"நீங்க வைஷு அக்காவை கல்யாணத்துக்கு முன்னாடியிருந்தே லவ் பண்ணுறீங்க தானே" என்று நேரடியாக விஷயத்தை உடைத்தே கேட்டுவிட்டாள்.
சட்டெனெ புரையேறிவிட்டது அவனுக்கு. இருமிக்கொண்டே அவளை அதிர்ந்து பார்த்தான்.
"பார்த்து குடிங்க மாமா" என்று அவன் தலையில் தட்டியவள் அவனது இருமல் ஓரளவுக்கு மட்டு பட்டதும் "நீங்க லவ் பண்ணுறது எனக்கு தெரியும் மாமா" என்றாள்.
"...." அவனிடம் மௌனம்.
அவளே தொடர்ந்தாள்.
"உங்க கண்ணுல நான் அதை பார்த்தேன். மத்தவங்க கவனிச்சாங்களான்னு தெரியல. ஆனால், உங்களையே சைட் அடிச்சிட்டிருந்ததால என்னவோ என் கண்ணனுக்கு அது தெரிஞ்சுது. ரெண்டு நாள்ல கல்யாணத்தை வச்சிட்டு உங்க கிட்ட அதை பத்தி கேட்டு இல்லாத ஒன்னை நானே கிளப்பி விட்டுட கூடாதேன்னு தான் அப்போ எதுவும் கேட்கல" என்றாள்.
"இன்னிக்கு நீங்க மண்டபத்தில் செஞ்ச காரியத்தை வச்சுத்தான் எனக்கே உறுதியாச்சு. உங்க செயல் ஒவ்வொன்னுலையும் வைஷு அக்கா மேல பரிதாபமோ, அக்கறையோ, கடமையோ இல்லை. காதல் தான் இருந்துச்சு. ஒரு பொண்ணா அதை என்னால உணர முடிஞ்சுது. வைஷுக்கா ரொம்ப லக்கி மாமா. சீக்கிரம் அவளும் உங்களை புரிஞ்சுப்பா" என்றபடி எழுந்துகொண்டாள்.
அவனின் காதலின் ஆழம் அவனுக்குள்ளேயே புதையுண்டு போய்விடுமோ என்று அவன் மனம் கலங்கியிருக்க அதை இவள் புரிந்துக்கொண்டிருக்கின்றாள் என்பதில் அவன் நெகிழ்ந்து தான் போனான்.
மெல்ல அவளை பார்த்து புன்னகைத்தபடி அவனும் எழுந்துகொள்ள "நாளைக்கு காலையில் ஊருக்கு கிளம்புறோம் மாமா. அதை சொல்லிட்டு போக தான் வந்தேன்" என்றவள் சற்று நிறுத்தி "இப்படி நான் சொல்ல கூடாதுதான். ஆனால், சொல்லாமல் இருக்க முடியல. உங்களை இப்போதான் இன்னும் அதிகமா பிடிச்சிருக்கு" என்றாள்.
"அவசரப்பட்டு எதுவும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்” அவன் புருவங்கள் இடுங்க கனிந்திருந்த அவனது பார்வை மாற்றமடைவதை கவனித்தவள் அவன் வாயை திறக்கும் முன்னரே அவன் எதுவும் பேசிவிடாமல் அவசரமாக அவனை தடுத்திருந்தாள்.
“மண்டபத்தில் நடந்ததை வச்சு எனக்கு இன்னும் சான்ஸ் இருக்குனு நினைச்சு நான் இதை சொல்லல. தப்பான எண்ணமும் இல்லை. இந்த பிடித்தத்தை காதலுன்னு தான் சொல்லணும்னு இல்லை. மரியாதைன்னும் சொல்லலாம்" என்று சொல்லியடிப்படி அவன் கையில் இருந்த டம்ளரை வாங்கிகொண்டவள் அங்கிருந்து திரும்பி நடக்க "மதி" என்று அழைத்தான் தானவீரன்.
நடையை நிறுத்தி அவனை திரும்பி பார்த்தவளிடம் "உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவனும் லக்கி தான்" என்றான்.
"அது என்னவோ உண்மை தான். ஆனால், உங்களுக்கு கொடுத்து வைக்கலையே மாமா " என்று சிரித்தவள் அவனை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டியிருக்க "இவளை..." என்றபடி கீழே குனிந்து சின்னதாய் ஒரு கல்லை எடுத்திருந்தான் தானவீரன்.
அதை கவனித்தவள் "ஆத்தி, பேச்சு பேச்சாத்தான் இருக்கனும் மாமோய். தேவையில்லாமல் பூமியெல்லாம் கிளறப்படாது" என்று நடிகர் வடிவேலின் பாணியில் சொல்லியவள் கலகலவென்று சிரித்துக்கொண்டே ஓடிவிட்டாள்.
உதட்டில் அரும்பிய சின்ன சிரிப்புடன் "லூசு" என்றபடி கையில் இருந்த கல்லை கீழே போட்டுவிட்டு கைகளை தட்டிவிட்டுக்கொண்டே நிமிர்ந்தவனின் விழிகள் தன்னிச்சையாக வைஷாலியின் அறையை நோக்கின.
அவள் அங்கே பால்கனியில் தான் நின்றுகொண்டிருந்தாள். சொல்ல போனால் அறிவுமதி வந்ததிலிருந்தே அவள் அங்கே தான் நின்றிருந்தாள். அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது அவளுக்கு கேட்கவில்லை என்றாலும் அவர்களுக்குள் ஒரு அன்யோன்யம் இருப்பதாக உணர்ந்தாள்.
தானவீரனும் அறிவுமதியும் ஒருவரை ஒருவர் வாரிவிட்டுக்கொள்வதும் உரிமையுடன் கிண்டல் செய்து விளையாடுவதும் அவளுக்கும் தெரியும் அல்லவா. அதிலும் அறிவுமதியின் விழிகள் அவன் மீது ஆசையாய் படிவதை அவள் பலமுறை கவனித்திருக்கின்றாள்.
ஒருவேளை அவர்களுக்குள் காதல் அரும்பியிருக்குமோ? இன்று தன்னால் அவர்கள் இருவரும் சேர முடியாத சூழ்நிலையாகிவிட்டதோ என்கின்ற எண்ணம் உள்ளுக்குள் உண்டாவதை தவிர்க்க முடியவில்லை அவளால். குற்றவுணர்வாக இருந்தது.
அதை நினைத்து அவள் மருகிக்கொண்டிருந்த வேளையில் தான் தானவீரன் நிமிர்ந்து அவளை பார்த்தான். இருவரின் விழிகளும் ஒரு நொடி சந்தித்துக்கொண்டன.
அவனையே ஒருநொடி ஆழ்ந்து பாத்தவள் மெதுவாக அறைக்குள் நுழைந்துக்கொண்டாள்.
வாடிய அவள் முகத்தை பார்த்தவனுக்கு அவளை தனது கைகளுக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. அவள் உச்சந்தலையில் முத்தம் பதித்து தன் மார்பின் மீது போட்டுக்கொண்டு தாயென தாங்கிக்கொள்ள வேண்டும் என்று மனம் துடித்தது. அவள் இதழ்களில் இதழ் பதித்து அவனின்றி வேறு நினைவுகள் தீண்டாமல் செய்ய வேண்டும் போல் மனம் உந்தியது.
ஆனால், அதை எல்லாம் செய்யும் அளவிற்கு அவனுக்கு உரிமையும் இல்லை உறவும் இல்லையே.
தலையை இரு கைகளாலும் கோதி விட்டுக்கொண்டே இமைகள் மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவன் மீண்டும் அந்த ஊஞ்சலிலேயே அமர்ந்துவிட்டான்.
விழியுயர்த்தி அந்த வானில் வீற்றிருந்த நிலவை பார்த்தவனின் நினைவுகள் காலையில் மண்டபத்தில் நிகழ்ந்தவற்றை மீட்டின.
மனதிற்கு பிடித்த பெண் தான் என்றாலும் குடும்பத்தினரின் கட்டாயத்தின் பெயரிலேயே மணவறையில் அமர்ந்திருந்தவனுக்கு தான் செய்வது சரியா தவறா என்ற எண்ணமே மனம் முழுக்க வியாபித்திருந்தது.
அதற்கிடையில் மந்திர உச்சாடனங்களின் நடுவே ஐயரும் அவன் கைகளில் தாலியை எடுத்துக்கொடுத்திருக்க அதை வைஷாலியின் கழுத்தில் சூட்ட சென்ற நொடி அவள் ஒற்றை விழியில் இருந்து உருண்டு விழுந்த கண்ணீர் துளி அவனை கொன்றே விட்டிருந்தது.
அவள் உயிரை கொன்று, உரிமைக்கொண்டு, உறவில் கலந்து பின் உள்ளம் சேர்வதா அவனது காதல். நிச்சயமாக இல்லை. அவளின் கண்ணீர் துளியில் தொடங்குவது இல்லை அவனின் அன்பு.
அவளை காதலிக்கின்றான். இனியும் காதலிப்பான். எப்பொழுதும் காதலித்துக்கொண்டே தான் இருப்பான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கு பதிலாக அவளின் காதல் கிடைக்கவில்லை என்றாலும் கூட அவன் தாங்கி கொள்வான்.
ஆனால், தலையெழுத்தே என்று அவள் அவனுடன் வாழும் அந்த வாழ்க்கை அவனுக்கு வேண்டாம். கணவனாகிவிட்டான் இனி அவனுக்கு தான் கொடுத்தாக வேண்டும் என்று வேறு வழியே இல்லாமல் கொடுக்கப்படும் காதலும் சர்வ நிச்சயமாக அவனுக்கு வேண்டாம். அனைத்தையும் விட அவளை வேதனை படுத்தி அவள் கண்ணீரில் அவன் காதலை கரை சேர்க்கவும் வேண்டாம் என்று தோன்றிட கையில் இருந்த தாலியை அப்படியே அவனுக்கு முன்னால் இருந்த தட்டில் போட்டு விட்டு கழுத்தில் இருந்த மாலையையும் கழட்டி விட்டு எழுந்து நின்றான் தானவீரன்.
வைஷாலியும் அவனை அதிர்ந்து பார்த்தபடி மணவறையிலிருந்து எழுந்து நின்றாள்.
சுற்றியிருந்த குடும்பத்தார் அனைவருக்கும் அதிர்ச்சி. வந்திருந்தோரிடம் மீண்டும் சலசலப்பு.
"வீர்" என்று சேகர் அதட்டியிருக்க அவரை ஒரு கணம் பார்த்துவிட்டு கிருஷ்ணகுமாரை பார்த்தவன் "மன்னிச்சிடுங்க மாமா. இந்த கல்யாணம் இப்படி நடக்க வேண்டாம்" என்றான்.
அதில் "என்னாச்சு வீர்" என்று கலங்கி நின்றார் அந்த மகளை பெற்ற தகப்பன்.
"வீர் நீயும் இப்படி பண்ணுனா எப்படிப்பா? வைஷாலியை பார் அவள் எப்படி அழுதுட்டு இருக்கான்னு" என்று அவனது கையை பற்றிய சரோஜினியின் கரத்தை ஆறுதலாக அழுந்த பற்றி விடுவித்தவன் "அவள் அழுகுறதை பார்க்க முடியாமல் தான் அத்தை சொல்லுறேன். அவளுக்கு ஏற்கனவே நடந்த அதிர்ச்சி போதாதுன்னு அதில் இருந்து அவள் மீண்டு வரதுக்கு கூட நேரம் கொடுக்காமல் இப்படி அவசர கல்யாணம் பண்ணி தான் ஆகணுமா?" என்று கேட்டான்.
அவன் கேள்வியில் மொத்த குடும்பமும் வாயடைத்து தான் போனார்கள்.
ஆனால், அவனின் அந்த பேச்சில் நெகிழ்ந்து போனது என்னவோ வைஷாலி தான். அவளின் உணர்வுகளை பெற்ற தாய் தந்தை என்று யாருமே புரிந்துக்கொள்ளாமல் நடந்துக்கொள்கையில் அவன் மட்டுமே அவள் வேதனைகளை புரிந்துக் கொண்டிருக்கின்றானே.
சட்டென்று அவன் கரத்தை பற்றிப்பிடித்தவள் "தேங்க்ஸ் மாமா" என்றபடி அவன் தோளில் முகம் புதைத்துக்கொண்டாள். அவளின் கண்ணீர் அவன் ஷர்ட்டை தாண்டி அவன் மேனியை சுட்டது.
அவள் பற்றிய கரத்தில் மெல்ல அழுத்தம் கொடுத்து உனக்கு நான் இருக்கிறேன் என்று அந்த கணம் அவளுக்கு புரிய வைத்தவன் மீண்டும் கிருஷ்ணகுமாரை பார்த்து "இப்போ புரியுதா மாமா. இந்த கல்யாணத்தை தடுக்கவும் முடியாமல் ஏத்துக்கவும் முடியாமல் கொஞ்ச நேரம் தான்னாலும் நெருப்புல நிக்குறதுபோல் துடிச்சிருக்கா. இப்போ இந்தக் கல்யாணம் நடந்தா என்னை தள்ளி வைக்கவும் முடியாமல் ஏத்துக்கவும் முடியாமல் வாழ்க்கை முழுக்க இதே நிலை தான் அவளுக்கு. அந்த வேதனையை அவளுக்கு என்னால தரவே முடியாது?" என்றான்.
"அப்போ… அப்போ என் மகளோட வாழ்க்கை..." என்று கதறிய சரோஜினி "ஏன்டா ஆளாளுக்கு அவள் வாழ்க்கையோட விளையாடுறிங்க" என்று அவன் ஷர்ட்டை பிடித்து உலுக்கினார்.
அவர் அந்த கேள்வியை அவனிடம் கேட்பது கொஞ்சமும் நியாயமே இல்லை என்று அவருக்கே தெரியும். ஆனாலும், கலங்கி நிற்கும் மகளின் வாழ்வை சீராக்கும் முனைப்பில், அது தந்த ஆத்திரத்தை எல்லாம் தானவீரனிடம் கொட்டியிருந்தார் சரோஜினி.
அவரை நிதானமாக பார்த்தவன் "வைஷாலி தான் என் மனைவி. அதுல எந்த மாற்றமும் இல்லை. இது நான் உங்களுக்கு கொடுக்குற வாக்கு" என்றான்.
தானவீரன் அப்படி சொல்லியதும் விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் வைஷாலி. அவன் கரத்தை பற்றியிருந்தவளின் பிடி மெல்ல தளர தொடங்கியது. அவனை விட்டு நகர முயன்றாள்.
அதை உணர்ந்துக்கொண்டவன் அவளின் கரம் அவன் கரத்திலிருந்து மொத்தமாக பிரியும் முன்னரே அதில் அழுத்தம் கொடுத்து இறுக்கி பிடித்துக்கொண்டான்.
அவன் விழிகள் இன்னமும் சரோஜினியிடம் தான் இருந்தன.
"ஆனால், இந்த கல்யாணம் இப்படி நடக்க வேண்டாம். அவள் உணர்வுகளை கொன்னுட்டு அதில் என்னால உறவை வளர்க்க முடியாது அத்தை. எல்லாரும் என்னை புரிஞ்சிப்பீங்கன்னு நம்புறேன்” என்றவனின் பார்வை சரோஜினி, கிருஷ்ணகுமார், சேகர், ஈஸ்வரி, ஜெயலட்சுமி என்று சுற்றி இருப்பவர்களை தொட்டு மீள வைஷாலியை அழைத்துக்கொண்டே மண்டபத்தில் இருந்து வெளியேறியிருந்தான்.
கிருஷ்ணகுமாருக்கும் சேகருக்கு அவர்கள் எடுத்த முடிவிற்கு அவன் இனங்காமல் போனது வருத்தத்தை கொடுத்தாலும் அவன் பேச்சில் இருந்த நியாயம் விளங்க அமைதியாகிவிட்டிருந்தனர்.
சரோஜினியும் கூட சற்று முன்னர் தான் அவர் பக்க பிழை உணர்ந்து அவனிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார்
இதில் தானாக கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டானே என்ற கடுப்பில் அவனை முறைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருப்பது ஈஸ்வரி தான்.
இத்தனைக்கும் மத்தியில் தான் எடுத்த முடிவு சரியா தவறா என்று குழம்பி தவித்தவனுக்கு வீட்டில் மற்றவர்களிடம் ஒதுக்கம் காட்டும் வைஷாலி அவனை மட்டும் ஒதுக்காமல் இருப்பதே அவனின் அந்த முடிவு சரி தான் என்ற பெரும் நிம்மதியை கொடுத்திருந்தது.
அனைத்தையும் யோசித்து முடித்தவனுக்கு இனிதான் தன் காதலை அவளுக்கு விளங்க வைத்து அவள் காதலை வென்றெடுக்க வேண்டிய பெரும் வேலை இருப்பதாக தோன்றியது.
ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டே நிதானமாக விழிகளை மூடி திறந்தவன் "நீ எனக்கானவள் வைஷு. இனி உன்னை யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்" என்று தீர்க்கமாக சொல்லிக்கொண்டான்.