ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொஞ்சி தீர்க்கவா பெண்ணே _கதை திரி

Status
Not open for further replies.

Mythili MP

Well-known member
Wonderland writer
49


காவலர்களுடன் சேர்ந்து வேதாவும் அங்கு வந்திருந்தான். பாண்டியனின் கார் ஓட்டுநர் வேதாவின் ஆள் தான். அவன் மூலம் தகவல் அறிந்து கொண்டு வேதா அங்கு வந்திருந்தான்.


நீலகண்டனை மட்டும் பாண்டியன் கடத்தி இருந்தான் என்றால் வேதாசலம் கண்டிப்பாக அவனை காப்பாற்ற இங்கு வந்திருக்க மாட்டார். ஆனால் கயல் இந்த இடத்தில் இருக்கிறாள் என்றதும் அவனுக்கு மனம் கேட்கவில்லை. கண் முன்னே அந்த பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகப்போவதை பார்த்து சந்தோஷபடும் மனநிலையில் இப்போது அவர் இல்லை.


குணாவை சிக்க வைக்க கயலை தற்கொலை வரை அழைத்து சென்றதை நினைத்து இப்போது வரை குற்ற உணர்வில் தவித்து கொண்டிருக்கும் வேதாவுக்கு கயலை அந்த கயவர்கள் வசம் சிக்க வைக்க விருப்பமில்லை.


அவன் தந்தை செய்த தவறுக்கு பாவம் அவன் குழந்தை என்ன செய்ய முடியும்? என்ற எண்ணம் இப்போது தான் அவருக்கு வந்தது.


யசோதா விஷயத்தில் முழுமையாக குணா மற்றும் நீலகண்டனை மட்டும் குறை கூறிவிட முடியாது என்பதை அவர் என்றோ புரிந்து கொண்டார். தகப்பன் என்ற முறையில் தான் சரியாக இருந்து, மனைவியை அனுசரித்து குடும்பத்தை காத்து வழிநடத்தி இருந்தோம் என்றால் ஒருவேளை இன்று தன் மகளும் நலமுடன் வாழ்ந்து இருப்பாள் என்ற எண்ணம் இப்போதெல்லாம் அவரை தூங்கவிடாமல் செய்து கொண்டு இருந்தது. அந்த எண்ணம் ஒரு பக்கம் என்றால் தேவையில்லாமல் இவர்கள் விஷயத்தில் கயலை பலி கொடுத்து விட்டோமே என்ற எண்ணம் மறுபக்கம். என கொஞ்சம் கொஞ்சமாக வேதாவும் குற்ற உணர்வின் பிடியில் தப்பிக்க முடியாமல் தத்தளித்து கொண்டு தான் இருந்தார்.


அந்த குற்ற உணர்வை கொஞ்சமாவது போக்கி கொள்ளும் எண்ணத்தில் தான் தகவல் கிடைத்ததும் கயலை காப்பாற்ற வேண்டும் என்ற முடிவில் காவலர்களை அழைத்து கொண்டு இங்கு வந்து சேர்ந்தார்.


தன்னுடைய எதிரி, இப்போது வேறு ஒருவனுக்கும் எதிரி என்று தெரிந்த பின்பு சந்தோஷமடைந்தார் வேதாசலம்.


‘இனி இவர்களை அப்படியே விட்டுட்டு சென்று விடலாம்’ என்று கூட ஒருகணம் அவன் மனம் யோசித்தது. ஆனால் கயலை இப்படி ஒரு நிலையில் பார்த்த போது அவரது கண்களுக்கு இப்போது கயல் என்பவள் யசோதாவாக தான் தெரிந்தாள். அவரையும் அறியாமல் கண்களில் நீர் கோர்க்க ஆரம்பித்தது. முகத்தில் காயங்களுடன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த கயலை நோக்கி ஓடினார். அவளை ஆதரவாக தொட கூட அவரது கைகள் நடுங்கியது.


பெரிய போராட்டத்திற்கு மத்தியில் பாண்டியன் கைது செய்யபட்டான். அடியாட்களும் மாட்டி கொண்டனர்.


நீலகண்டன் உட்பட அவர்கள் மூவரின் கை, கட்டுகளையும் அவிழ்த்து விட்டனர் காவலர்கள்.


விரைந்து தன் மகளிடம் வந்த சாருலதா கயலை தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். அவர்களை நோக்கி நீலகண்டன் வரவும் அவரை பார்வையாளே தங்களில் இருந்து விலக்கி நிறுத்தினாள் லதா.


"கயல்"


"அவள் பேரை சொல்லாத" என்று பல்லிடுகில் வார்த்தையை கடித்து துப்பினாள் லதா..


"சாரு நான் எதுவும்" உடைந்து போய் அவரது வார்த்தைகள் வெளி வந்தது.


"நீ பண்ணியா! பண்ணலயான்னு எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். ஆனால் இனிமேல் என் பொண்ணுக்கு நீ வேண்டாம்.. எனக்கும் நீ வேண்டாம். நமக்குள்ள எல்லாம் முடிஞ்சது. நீ செத்தா கூட உன் முகத்தில முழிக்க நான் விரும்பல… ஆனால் இவனுங்க யாரையும் நான் சும்மா விட மாட்டேன்" என்ற லதா அமைதியா தன் மகளை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றாள். கயல் அவனை நிமிர்ந்து ஒரு பார்வை கூட பார்க்கவில்லை. அந்த புறக்கணிப்பு இன்னுமே அவரை அடித்து நொறுக்கியது.


பாண்டியனின் வழக்கு கோர்ட்டுக்கு வந்தது. சாருலதா தான் அந்த வழக்கை வாதாடினாள். கயலையும் முக்கிய சாட்சியாக முன் வைத்தே இந்த வழக்கை வாதாடி வெற்றி கண்டாள்.


கொலை முயற்சி, ஆள் கடத்தல். பாலியல் சீண்டல் என பல்வேறு வழக்குகளின் கீழ் பாண்டியனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. அதில் அவன் கொண்ட கோவம், தீராத பகையாக மாறியது.


கயலை இந்த வழக்கில் உட்படுத்த வேண்டாம் என்று நீலகண்டன் சொல்ல, லதா ஒப்புக்கொள்ள வில்லை... பாண்டியனுக்கு தண்டனை வாங்கி கொடுத்த கையோடு தன் மகள் கயலை அழைத்துக் கொண்டு லண்டனுக்கு சென்று விட்டாள் சாருலதா.


சரியான நேரத்தில் கயலை காப்பாற்றியதால் வேதாவின் மீது நீலகண்டனுக்கு இருந்த நெருடல் சற்று விலகி இருந்தது. குணாவை கடத்தி தனக்கு பாதுகாப்பாக தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளலாம் என்று நினைத்த வேதாவும் தற்காலிமாக அந்த முடிவை கைவிட்டு இருந்தான்.


இப்போது வேதாவை பற்றி சிந்திப்பதை காட்டிலும் தன் மகளை காயப்படுத்திய பாண்டியனை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி நீலகண்டனுக்கு மிக அதிகமாக இருந்தது. அதன் பொருட்டே அந்த ஆத்திரத்தின் மிகுதியில் பாண்டியனின் இரு மகன்களில் ஒருவனை ஆட்களை வைத்து அடித்து கொன்றவன் அதனை விபத்து போல சித்தரித்தான். பணத்தை கொண்டு போலீசை சரி கட்டினான்.


அதற்கு பிறகே நீலனுக்கு நிம்மதியாக உறக்கம் வந்தது. ஆனால் இந்த தகவல் கேள்விபட்டதிலிருந்து பாண்டியனின் தூக்கம் தொலைந்து போனது.


பாண்டியனின் மகனை கொன்றது மட்டுமல்லாமல் சிறைக்கே வந்து பாண்டியனை பார்த்தான் நீலகண்டன்.


"நான் தான் உன் மகனை கொன்னேன். இன்னொரு முறை என் குடும்பத்து மேல கை வைக்கணும்னு நீ நினைச்சா கூட உன் இன்னொரு பையனும் இருந்த இடம் தெரியாமல் போயிடுவான்" என்று மிரட்டி விட்டு வந்திருந்தான் நீலகண்டன். இதனை அறிந்து கொண்ட வேதா, நீலகண்டனிடன் சண்டையிட்டான்.


“நீ பண்ணிட்டு வந்த காரியத்தால உன் குழந்தைங்க தான் கஷ்டப்பட போகுது” என்று ஆத்திரமாக சொன்னான் வேதா.


“நான் உயிரோட இருக்கிறவரை என் குழந்தைகளுக்கு எதுவும் ஆக விடமாட்டேன்… அவன் உயிரோட இருந்தா தானே என் குழந்தைகளுக்கு நாளைக்கு பிரச்சனை வரும் ஜெயிலயே வச்சு அவனையும் கொன்னுடுறேன்”


“கொலை பண்ணுறது எல்லாம் உங்களுக்கு எவ்ளோ சாதாரணமா இருக்கு”


“அவன் உயிரோட இருக்கிறது எனக்கு பிரச்சனைங்கும்போது, அவனை கொல்லுறதுல என்ன தப்பு இருக்கு? நானும் என் குடும்பமும் நல்லா இருக்கணும் அதுக்கு யாரு செத்தாலும் எனக்கு கவலை இல்லை” என்று கண்கள் சிவக்க வெறிபிடித்து போய் நின்றான் நீலகண்டன். சந்தர்ப்பமோ சூழ்நிலையோ இவனை இவ்வாறு மாற்றவில்லை… இவனது அடிப்படை குணமே இதுதான் என்பதை இப்போதுதான் உணர்ந்து கொண்டான் வேதாசலம்.


எடுத்து சொல்லி இவர்களுக்கு புரிய வைக்க முடியாது… தவறிழைத்தவன் அதற்கான தண்டனையைப் பெற்றால் மட்டுமே திருந்துவான்.


இவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது குடும்பத்தை தேடுவதையே நிறுத்தி இருந்தார் வேதாச்சலம்… ஆனால் அதெல்லாம் தவறு என்று இப்போதுதான் உணர்ந்து கொண்டார். ஒவ்வொருவன் செய்யும் தவறுக்கும் காலமே அவனுக்கான தண்டனையை நிச்சயம் கொடுக்கும். அதை இப்போது புரிந்து கொண்டார். அதனால் அவர்களை விட்டு விலகி தன் குடும்பத்தை தேடி செல்ல நினைத்தார்.


ஆயினும் மனதில் ஒருவித தடுமாற்றம் ஒருவேளை பாண்டியனின் அடுத்த குறி ஆரியனாக இருக்குமோ என்று சந்தேகித்தார், அவனை காப்பாற்ற வேண்டும் என்றே நினைத்தார். அதனால் ஆரியனுக்கு பாதுகாப்பாக சிறையிலேயே ஒருவனை ஏற்பாடு செய்தான் வேதா.


பாண்டியனுக்கு இருந்த பழி வாங்கும் வெறி இப்போது பன்மடங்கு அதிகரித்தது. மீண்டும் தன் குடும்பத்தில் ஒரு உயிரை இழந்திருக்கிறான் அல்லவா? ஏற்கனவே நீலகண்டன் குடும்பம் இவனுக்கு செய்த பாவத்திற்கு அவர்களை ஆயிரம் துண்டுகளாக வெட்டிப் போட்டாலும் தவறாகாது. ஆனால் மேலும் மேலும் அவர்களது பாவக்கணக்கு அதிகரித்துக் கொண்டே இருந்தது.


‘எப்படி இன்று தான் அனைத்தையும் இழந்து வாடுகிறேனோ, அதேபோல அவனும் தவிக்க வேண்டும்.. துடிக்க வேண்டும். அதுவும் சாதாரண மரணத்தை அவர்களுக்கு கொடுக்கக் கூடாது… உயிர் அவர்களது உடலை விட்டுப் பிரியும் வலியை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ரணப்பட்டு அவர்கள் சாக வேண்டும். அவனது வம்சமே அழிய வேண்டும்’ என்று ஆங்காரமாக மனதில் சொல்லிக் கொண்டவனின் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தது


அதன் பிறகு சிறையில் இருந்தபடியே, ஆரியனை கொல்ல ஆட்களை ஏற்பாடு செய்து அவனிருக்கு சிறைக்கு அனுப்பி வைத்தான் பாண்டியன். அதில் ஆரியன் ஒருமுறை தப்பித்துக் கொண்டான். இரண்டாவது முறை அவனைக் கொல்ல முயற்சிக்கும்போது வேதாவின் ஆள் அவனுக்கு பக்க பலமாக இருந்து அவனைக் காத்துக் கொண்டான்.


சிறைக்குள் வைத்து தன் மகனை கொல்ல முயற்சிக்கிறான் பாண்டியன் என்பது அறிந்து கொண்ட நீலகண்டன், பாண்டியனின் இரண்டாவது மகனை தேட ஆரம்பித்தான்… அவனையும் கொன்று புதைக்கவே தேடினான். ஆனால் அவன் எங்கு இருக்கிறான் என்று எந்த தகவலும் இவனுக்கு கிடைக்கவில்லை.


தனது ஒரு மகனை இழந்த அடுத்த கனமே இன்னொரு மகனை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்திருந்தான் பாண்டியன்.


இதனை எல்லாம் அறிந்து கொண்டது வேதாவுக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது… இவர்களது பிரச்சினையே வேண்டாம் இங்கிருந்து சென்றுவிடலாம் என்று புத்தி எடுத்துக் கூறினாலும் மனம் அதனை ஏற்க மறுத்தது…


“இவர்கள் செய்த பாவத்திற்கு இவர்களது வாரிசுகள் என்ன செய்ய முடியும்? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இவர்களுக்காக அவர்கள் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்ற ஒரே கேள்வி மட்டுமே இவரது மனதில் ஓடிக்கொண்டே இருந்தது… அந்தக் கேள்வி இவரை அங்கிருந்து நகர விடாமல் செய்தது.


அதன் பிறகு கடினமாக ஒரு முடிவை எடுத்துக் கொண்டு பாண்டியனை காண சிறைக்கு சென்றார் வேதாச்சலம்.


நடந்த உண்மை அனைத்தையும் அவனிடம் எடுத்துக் கூறினார்… குணா தான் அனைத்திற்கும் ஆரம்ப புள்ளி என்று கூறினார்… தங்கள் மகளின் வாழ்க்கை அழிய அவன் தான் காரணம் என்று கூறினான். அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த பாண்டியன்…


“நீ வேணும்னா உன் பொண்ணு வாழ்க்கையை அழிச்சவனை மன்னிச்சு விடலாம்… ஆனா என்னால முடியாது… என் பொண்ணு செத்துட்டாள். பொண்ணு மட்டும் இல்ல என் மனைவி, என் மகன்னு என் குடும்பத்துல மூணு பேரை இழந்து இருக்கேன். என் வலி உனக்கு புரியாது”


“உயிருக்கு உயிர்தான் பதில்னு சொல்ற! ஆனால் அவனுடைய மகனோ, மகளோ மனைவியோ உன்னை எந்தவிதத்திலும் காயப்படுத்தலையே… அப்புறம் நீ ஏன் அவங்களை கொல்லணும்னு நினைக்கிற? நீலகண்டனையும் அவன் தம்பியையும் நீ என்ன வேணா பண்ணிக்கோ.. அவனுங்க சாக வேண்டியவனுங்க தான்… ஆனா குழந்தைகளை விட்டுடு”


“அவன் குழந்தைங்க எந்த தப்பும் பண்ணல, சரி தான் அப்படி இருக்கும் போது என் குழந்தைங்க என்ன தப்பு பண்ணுச்சு? என் பொண்டாட்டியும், பிள்ளைங்களும் வாய் பேச முடியாத அப்பாவிகள்… அவங்க என்னடா பாவம் பண்ணாங்க? அவங்க மேல காட்டப்படாத கருணையை, யார் மேலயும் காட்டுறதுக்கு நான் விரும்பல”



“அவனுங்க பண்ண அதே தப்பை நீயும் பண்ணி அவனுங்களுக்கும் உனக்கும் எந்த வித்தியாசமும் இல்லைன்னு நிரூபிச்சிடாத” என்று கூறிய வேதாவை பார்த்து இதழ் வளைத்து சிரித்தான் பாண்டியன்.


“எனக்கும் அவனுக்கும் எந்த வித வித்தியாசமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.. சரி தப்புங்கறதை தாண்டி, நீ சொல்ற விஷயத்தில் இருந்து எனக்கு ஒரு விஷயம் மட்டும் நல்லா புரியுது. இனிமேல் நான் ஜெயிலுக்குள்ள இருந்தபடியே அவனுங்களை கொல்லுறதுக்கோ இல்லை அவன் பையனை கொல்லுறதுக்கோ முயற்சி பண்ண மாட்டேன். அதனால எனக்கு என்ன நிம்மதி கிடைச்சுட போது? அவனுங்க ஒவ்வொருத்தனோட இறப்பும் என் கண்ண முன்னாடி நடக்கனும்… அதுவரை இந்த கோபத்தை எனக்குள்ளேயே வச்சு பாதுகாக்கிறேன். ஒரு நாள் நான் வெளியே வருவேன்… அன்னைக்கு அந்த குடும்பத்தையே நான் சிதைப்பேன். அதை கண்குளிர பார்த்த அப்புறம் தான் உயிர் போகும். அவனுங்க வம்சத்தை அழிக்கிறது என் குடும்பத்துக்கு நான் செலுத்துற அஞ்சலி” என்று கூறிய பாண்டியனை வெறித்துப் பார்த்தான் வேதாச்சலம்… மறு வார்த்தை பேச முடியவில்லை அவனது வலி பெரியது என்பதை இவனும் உணர்ந்து கொண்டான். இழந்தவனின் வலியை உணரக்கூடிய பக்குவத்தில் தானே இவனும் இருக்கிறான். அடுத்த வார்த்தை எதுவும் பேசாமல் மௌனமாக அவ்விடம் விட்டு வந்தான்.


***

வீட்டிற்கு வந்த வேதாசலத்திடம் பாண்டியனின் இரண்டாவது மகனின் இருப்பிடத்தை தான் கண்டு பிடித்ததாக சொன்னான் நீலகண்டன்.


“அவனையும் நான் கொல்ல போறேன்… என் கண்ணு முன்னாடியே என் பொண்ணை அவன் எவ்ளோ கஷ்டப்படுத்தினான்… போதாததுக்கு என் பையனையும் கொல்ல பார்த்து இருக்கான். இதுக்கு மேல அவனுக்குன்னு குடும்பமே இருக்க கூடாது… என்னை எதிர்த்தவன் எவனும் உயிரோட இருக்க கூடாது” என்று வெறிப்பிடித்தவன் போல நின்றான். அவனது கண்களில் அவ்வளவு ஆக்ரோஷம் வெளிப்பட்டது.

அதனை கண்டு வெறுப்பாக முகம் திரும்பிய வேதாவின் கண்களில் டேபிளின் மீதிருந்த ஒரு பார்ம் தென்பட்டது. அதனை எடுத்து பார்த்தான்.


“இது என்ன?” என்று நீலாவிடம் கேட்டான்.


“என் தம்பி குணாவை அழைச்சிட்டு வர போறேன். அதுக்கான பார்ம் தான் இது… இது கூட ஐடென்டிடிட்டி பேப்பர்ஸ் எல்லாம் சேர்த்து கொடுக்கணும் அதான் பார்மை வீட்டுக்கு எடுத்துட்டு வந்தேன்”


“குணாவை அழைச்சிட்டு வர போறியா?”


“ஆமா… கயல் விஷயத்தில வேற யாரோ தான் என் தம்பியை ட்ரேப் பண்ணி மாட்டி விட்டு இருக்காங்க… அவன் என்கூட இருக்குறது தான் இனி அவனுக்கும் பாதுகாப்பு ” என்று அவன் கூற வேதாவின் கண்கள் கோவத்தில் சிவந்தது.


“கயல் விஷயத்தை விடு ஆனால் பாண்டியன் பொண்ணோட விஷயத்தில உன் தம்பி பண்ணது தப்பு தானே?” என்று வேதா கேட்க சலிப்பாக தலையாட்டிய நீலகண்டன் “அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம்… இப்போ எனக்கு என் தம்பி என் கூட இருக்கணும் அவ்ளோதான். இனிமேல் என் வீட்டுல மூணாவது மனுஷங்களுக்கு இடமில்லை… இதுக்கு மேல உனக்கு எந்த விளக்கமும் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை… இனிமேல் நீ இங்க இருக்க வேண்டாம், நான் உன் பேர்ல எழுதி வச்ச ஷேர் எல்லாத்தையும் மறுபடியும் முறைப்படி என் பேர்ல எழுதி கொடுத்துட்டு இங்கிருந்து கிளம்பிடு… சும்மா ஒன்னும் போக வேண்டாம் நஷ்ட ஈடா எவ்வளவு பணம் வேணுமோ கேட்டு வாங்கிக்கோ” தன் குடும்பத்தை தவிர வேறு யாரும் வேண்டாம் என்ற மனநிலையில் இருந்தான்.


“நஷ்ட ஈடா எதுக்கு? என் பொண்ணு வாழ்க்கையை சீரழிச்சதுக்காடா?” என்று கேட்ட வேதா, அருகில் இருந்த நாற்காலியை எடுத்து கணநேரத்தில் நீலகண்டன் தலையில் அடித்து உடைத்தான். தலையில் ரத்தம் வடிய அரை மயக்கத்தில் வேதாவினை பார்த்தார் நீலகண்டன்.


“இதெல்லாம் எதுக்கு? அப்படியே விட்டுட்டு போயிடலாம்னு தான் நினைச்சேன் ஆனா நீங்க எல்லாம் மாற மாட்டீங்கடா? நீங்கள் இரத்தம் உறிஞ்சி சுகம் கண்ட ஆட்டைங்கள், உங்களால மாற முடியாது… நானே உங்களை மாத்திட்டுறேன்” என்ற வேதா தன்னறைக்குள் சென்று ஊசியில் ஒரு வித மருந்திணை நிரப்பிக் கொண்டு வெளியே வந்தான். அதனை நீலகண்டனுக்கும் செலுத்தினான். அவரால் அவனைத் தடுக்க முடியவில்லை… மிகவும் பலவீனமாக இருந்தார்.


“இந்த மருந்து உன் உடம்புக்குள்ள போன 10 நிமிஷத்துல அதோட வேலை ஆரம்பிச்சுடும்… உடம்பு முழுக்க மரத்துப்போயிடும்… பக்கவாதம் போல தான். ஆனால் குணப்படுத்தவே முடியாது… இப்படியே கிடந்தது கொஞ்ச கொஞ்சமா ரணபட்டு சாகு” என்றவன் அடுத்து நேராக சென்றது குணாவை பார்க்கத்தான்… ஆனால் அந்த மருத்துவமனைக்குள் இவனை அனுமதிக்கவில்லை… நீலகண்டன் தவிர அங்கு யாருக்கும் அனுமதி இல்லை. அதனை அறிந்து கொண்ட வேதா தகுந்த நேரம் பார்த்து ஆட்களை ஏற்பாடு செய்து இரவோடு இரவாக குணாவை அவ்விடத்திலிருந்து கடத்தியிருந்தான்.


இதற்கு இடையில் தான், ஆரியனின் தாத்தா இறந்தது, நீலகண்டனின் நிலை உணர்ந்து ஆரியன் சிறைக்கு செல்லும் வழியில் இருந்து தப்பித்தது. மலர்கணையாள் மற்றும் கந்தனை சந்தித்தது… கந்தனின் உதவியை ஆரியன் நாடியது, ஆரியனுக்காக வேதாச்சலத்தை பற்றிய உண்மை அறிய கந்தன் முற்பட்டது. அதன் விளைவாக கந்தன் வெளிமாநிலத்திற்கு வேதாவால் ஊர் கடத்தப்பட்டது என அணைத்து நிழந்து முடிந்து இருந்தது.


***


பாண்டியன் கைது செய்யப்பட்ட நிலையில் சங்கவியை காண மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து இருந்தான் மதிவாணன்.


அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சங்கவி அனுமதிக்கப்பட்டிருந்தாள்… “அவளுக்கு என்ன ஆச்சு?” என்று நிர்மலாவிடம் கேட்ட மதிக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.


எங்கு அவளை தான் இழந்து விடுவோமோ என்ற பயம். அவனது இதயத்தை பலவீனமாக்கியது.


“ஆசிரமத்தில பிள்ளைங்களுக்கு சமைச்சு முடிச்சு அடுப்பை அணைக்க போற நேரம், மேல் கூரை இடிஞ்சு விழுந்து இருக்கு… அதுல கவனம் இல்லாமல் தடுமாறினவள் எறிஞ்சிட்டு இருந்த அடுப்பு தணல் மேலவே விழுந்து இருக்கா… அவள் கெட்ட நேரம் முகம் முழுக்க வெந்து போயிடுச்சு… உடம்புல வேற எங்கேயும் தீ காயம் இல்லை… ஆனால் முகத்தை பார்க்க முடியல… கை, காலில் சின்ன சின்ன அடி தான். அவள் கூட இருந்த ரெண்டு பேருக்கு பெருசா எந்த காயமும் இல்லை” இதனை கேட்டவனுக்கு இதற்கு எப்படி எதிவினை புரிவது என்று தெரியவில்லை.


“அவள் உயிருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே” என்று தான் கேட்டான்.


“இல்லை” என்று நிர்மலா சொன்ன பிறகு நிம்மதி பெருமூச்சு விட்டான்.


சிகிச்சைக்கு பிறகு கண்விழித்தாள் சங்கவி… அவளை காண அறைக்குள் சென்றான் மதி… நிர்மலா அறைக்குள் செல்ல தயங்கினாள் வெளியவே நின்று கொண்டாள். இப்படியான நிலையில் சங்கவியை பார்க்க இவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அந்த இடமே அவளுக்கு அருவருக்க தக்கதாக தான் இருந்தது.


உள்ளே வந்த மதியின் முகத்தில் எந்த வித சலனமும் இல்லை ஒரு சிறு முக சுழிப்பும் இல்லை… “வலிக்குதா?” என்றபடி அவளது கரத்தை பற்றியவனின் கண்களை போலவே அவளது கண்களிலும் நீர் கோர்த்து நின்றது.
 

Mythili MP

Well-known member
Wonderland writer
50


அவளால் வாயை அசைக்க கூட முடியவில்லை முகமெல்லாம் ரணமாக வலித்தது. அவனை கண்டதும் கண்ணோரம் ஒரு துளி கண்ணீர் வழிந்தது. அந்த கண்ணீர் அவளது காயத்தில் பட்ட நொடி துடித்து போனாள். அதனை கண்டவனுக்கு எப்படி எதிர் வினை புரிவது என்றே தெரியவில்லை “ஷ் அழாத, நான் இருக்கேன்ல.. எல்லாம் சரி ஆகிடும்… எல்லாம் சரியாகிடும்” என்றவனின் கண்களும் இப்போது கண்ணீர் சிந்தியது.


தீ காயம் ஏற்பட்டவர்களின் வார்டில் தான் அவளை கொண்டு சென்று விட்டிருந்தனர். அங்கிருந்த அனைவரும் உடல் முழுக்க ஆங்காங்கே காயம் அடைந்து வலி பொறுக்க முடியாமல் கத்தினர்… அந்த சத்தத்தை கேட்க கேட்க சங்கவிக்கு மன அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்தது… ஒருவித விரக்தி உருவானது. அடுத்தடுத்து வந்த நாட்கள் நரகத்திற்கு இணையாகவே நகர்ந்தது. ஒவ்வொரு நொடியும் அவளுடன் இருந்து பார்த்துக் கொண்டான் மதி. அவளது கண்கள் சார்ந்த பகுதிகளில் மட்டும் நல்ல வேலையாக பெரிய அளவில் காயம் ஏற்படவில்ல… மத்தபடி கன்னம், மூக்கு மற்றும் உதடுகள் என அனைத்தும் காயம் பட்டு ரணமாக இருந்தது.


நான்கு நாட்கள் கடந்து இருக்கும் அதற்கு மேல் அங்கு சங்கவியால் அங்கு இருக்க முடியவில்லை… அவளது காயமே அவளுக்கு அதீத வலியை கொடுத்து கொண்டிருக்க, அடுத்தவர் காயத்தை கண் கொண்டு காண முடியாமல் தவித்தாள்.


“என்னால இங்க இருக்க முடியல” என்று தயங்கியபடியே மதியிடம் சொன்னாள். முகத்தில் மட்டும் தானே காயம் அவ்வப்போது மட்டும் மருத்துவனையில் வந்து பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, இருவரும் மருத்துவனையில் இருந்து விடைவேற்று ஆசிரமம் நோக்கி சென்றனர்.


துன்பம் ஒருவனை துரத்தி துரத்தி கொல்லும் என்பதுக்கு சான்றாக அவர்கள் ஆசிரமத்திற்கு வந்த அந்த நாளன்று பாட்டி படுக்கையிலேயே இறந்து கிடந்தார்.



எதற்காக அழுவது என்றே தெரியாத நிலை தான் சங்கவிக்கு… தன் முகத்தை பார்த்து பிறர் முகம் சுளிப்பதை இங்கு வந்த போதே உணர்ந்து கொண்டாள். அதன் பிறகு புடவை முந்தானையை எடுத்து தலை வழியே போர்த்திக் கொண்டு ஒரு மூலையில் சென்று அமர்ந்து கொண்டாள்… தன் பாட்டியின் உயிரற்ற உடலை பார்த்து கொண்டிருந்தவளிடம் வேறு எந்த எதிர்வினையும் இல்லை.


“இந்த வாழ்க்கை போதும்டா சாமி, என்னை கொன்னுடு” இப்போது கடவுள் அவள் கண்முன் வந்து நின்றால் அவள் சொல்லும் வார்த்தை இதுவாக தான் இருக்கும்.


மதி தான் சங்கவியின் பாட்டிக்கு அனைத்து சடங்கையும் செய்தான். ஆசிரமத்தின் பொறுப்பில் அவரை நல்முறையில் அடக்கம் செய்தனர்.


அனைத்தையும் முடித்து விட்டு மதி திரும்பி வந்த நேரம், சங்கவி அங்கு இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை… “எங்க போனாள் இவள்” என்றபடி ஆசிரமம் முழுக்க அவளை தேட ஆரம்பித்தான்.


ஆசிரமத்தில் ஒரு அறைக்குள்ளே கண்ணீருடன், கண்ணாடி முன்னே நின்று தன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கவி… கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள், அவளது காயத்தில் பட பட அது அவளுக்கு எரிச்சல் கொடுக்க தொடங்கியது ஆனால் அதுவெல்லாம் அவளை எந்த விதத்திலும் பாதிக்க வில்லை.


“ஏன் பாட்டி என்னை விட்டுட்டு போன? எல்லாத்தையும் தாங்கிட்டு உனக்காக தானே நான் உயிரோட இருந்தேன்… எனக்காக நீ ஏன் இல்லாமல் போயிட்ட? என் மேல உயிரே வச்சு இருக்கேன்னு சொல்லுவியே, அப்போ ஏன் பாட்டி என்னை தனியா விட்டுட்டு போன? இனி நான் என்ன பண்ணுவேன்? எனக்கு யார் இருக்கா? பயமா இருக்கு பாட்டி! எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல… நான் உன்கூடவே வந்திடுறேன், என்னையும் கூட்டிட்டு போயிடு” என்று மனதோடு மன்றாடி அழுதவள் அலங்காரத்திற்காக தொங்க விடபட்டிருந்த திரை சேலையை எடுத்து நாற்காலியின் உதவியால் ஆங்கில் கம்பிகளில் அதனை கட்டினாள். தூக்கு மாட்டிக்கொள்ள தயாராக இருந்தாள்.


அவளது நல்ல நேரம் அந்த வழியே வந்த ஒரு பெண்ணின் கண்ணில் இந்த நிகழ்வு தென்பட்டது. அது காங்கிரெட் சன்னல் தான் திறப்பு எதுவும் இல்லை… அதனால் அவளை எளிதில் இனம் காண முடிந்தது.


“வைஷ்ணவி… ஐயோ எல்லாரும் இங்க வாங்க” என்று அந்த பெண் அனைவரையும் கத்தி அழைக்க… சத்தம் கேட்டு அந்த திசை நோக்கி வந்து சேர்ந்தான் மதிவாணன்.


அவன் சங்கவியை பார்க்கவும், அவள் தூக்கு மாட்டி கொண்டு துடிக்கவும் நேரம் சரியாக இருந்தது. அதனை கண்டதும் அவனுக்கு இதயமே ஒரு கணம் நின்று விட்டது. “வைஷு” என்று கத்தினான். அவனுக்கு என்றுமே அவள் வைஷ்ணவி தான்.


உயிருக்காக துடித்து கொண்டிருந்தவளை கண்ணுக்கு எதிரே பார்த்தான். அடுத்தநொடி அறை கதவுகள் உடைக்கப்பட்டது… ஓடி சென்று அவளது கால்களை பற்றிக் கொண்டான். அங்கிருந்த ஆட்களின் உதவியுடன் சங்கவியை காப்பாற்றி கீழே இறங்கினான்.


அவளிடம் எந்த அசைவும் இல்லை.. “வைஷு.. வைஷு… என்னை பாரு… என்னை பாருமா” என்று அவளை எழுப்ப எவ்வளவோ முயற்சித்தான் மதி, ஆனால் அவளிடம் பதில் இல்லை… மயக்கம் அடைந்திருந்தாள்… உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது “பாட்டி இறந்த துக்கத்தில் தான் பெண்ணவள் இது போல நடந்து கொண்டு இருக்கிறாள், வேறு எந்த பிரச்னையும் அல்ல” என்று ஆசிரமத்தின் தலைமை பொறுப்பாளர் தலையிட்டு அந்த பிரச்சனையை சரி செய்தனர்.


அதன் பிறகு ஆசிரமத்தின் தலைமை பொறுப்பாளர்… சங்கவியை ஆசிரமத்தில் தங்க வைக்க அனுமதிக்கவில்லை… “அவள் மீண்டும் இதேபோன்ற முடிவை எடுத்தாள் என்றால் அது இங்கிருக்கும் அனைவருக்கும் பிரச்சனை” என்று மதியிடம் கூறி அவளை அழைத்து போக சொல்லி விட்டனர்.


எங்கே செல்வது? மொத்தமாக உடைந்து போனான் மதி.. இத்தனை நாட்களில் அவனிடம் இப்படி ஒரு அமைதியை சங்கவி கண்டதே இல்லை… அவனது அமைதியை கண்டு இவளுக்கு மிகவும் குற்ற உணர்வாகி போனது.


இருவரும் நடந்து வந்து பூங்காவில் உள்ள ஒரு மேசையில் அமர்ந்து இருந்தனர்.


அவள் தற்கொலைக்கு முயற்சி செய்ததை மதியால ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இப்போதும் வரை அந்த நிகழ்வு மட்டுமே அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அந்த நிகழ்வுக்கு பிறகு சங்கவியிடம் ஒருவார்த்தை கூட அவன் பேசவில்லை. அவனது அமைதி எப்போதும் அவளை மனமுடையசெய்யும்.. அவன் தன்னிடம் பேசவில்லை என்றாலே அனைத்தையும் இழந்து விட்ட உணர்வு அவளுக்கு தோன்ற ஆரம்பித்து விடும் இப்போதும் அப்படி தான், மனதில் ஒரு மெல்லிய வலி ஊடுருவி சென்றதை உணர்ந்து கொண்டு தவிப்புடன் அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். இன்னுமே அவனிடம் அமைதி தான், அதனால் மௌனம் உடைத்து அவளே பேச ஆரம்பித்தாள்.


“என்னை மன்னிச்சுடுங்க என்னால தான் உங்களுக்கு இவ்வளவு கஷ்டம்? நீங்க உங்க இடத்துக்கு போங்க, நான் எங்கயாவது போயிக்கிறேன்” என்றவளை தலையை திருப்பி பார்த்தான்.. ஒருவார்த்தை கூட அவனுக்கு பேச தோன்றவில்லை. அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். இருவரது முகமும் நேருக்கு நேராக இருந்தது… அவளது கண்கள் நீர் குளமானது. கண்ணீரை மறைக்க வழி தெரியமால் தடுமாறியவள் மேசையில் இருந்து எழுந்து திரும்பி நின்று கொண்டாள் அக்கணம் அவளது கரத்தை பற்றி இருந்தான் மதி. சட்டென மின்னல் வெட்டிய உணர்வு!! அவனை நோக்கி திரும்பினாள்.


“உன்னை அப்படியே விட்டுடுவேன்னு நினைக்கிறியா? நீ யாரு என்னன்னு தெரியாத அப்போவே உனக்காக நின்னவன் நான். ரெண்டு வருஷம் ஆச்சு, இன்னுமா என் மேல உனக்கு நம்பிக்கை வரல? எப்படியோ போ ன்னு விட்டிட்டு போயிடுவேன்னு தோணுதா உனக்கு? சாகனும்னு முடிவு பண்ணியே! ஒரு நிமிஷம் கூடவா என்னை பத்தின எண்ணம் உனக்கு வாராமல் போச்சு? நீ இல்லன்னா நான் சந்தோசமா இருப்பேன்னு நினைச்சியா? இல்லை தொல்லை விட்டுடுச்சுனு என் இடத்துக்கு திரும்பி போயிடுவேன்னு நெனச்சியா? என் வாழ்க்கையில எல்லாருக்கும் நான் வேண்டாதவன் தான்… உனக்கும் நான் அப்படி தானே?” என்று கேட்டவனின் குரல் நலிந்து வெளி வந்தது. மனம் முழுவதும் அவ்வளவு வலியை சுமந்து கொண்டு இருந்தான்.


அவனது வலி அவளுக்கு புரிந்திருக்க வேண்டும், இருந்தும் அவள் ஆறுதலுக்கெனவும் எதுவும் பேசவில்லை, திரும்ப வந்து அவன் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்.


“எங்க போலாம்” என்று அவன் முகம் பார்த்து கேட்டவளை நினைத்து சற்று ஆசுவாசம் அடைந்தான் மதி.


***


நிர்மலாவின் உதவியுடன் தனியே ஒரு வீடு எடுத்து சங்கவியை அங்கு தங்க வைத்தான் மதி.


“இது என்னோட பழைய க்லைன்ட் ஒருத்தனோட வீடு… இப்போ அவன் வெளியூர் போயி செட்டில் ஆகிட்டான். அதனால் நீங்க தாராளமா இனி இங்க தங்கிக்கலாம்” என்று நிர்மலா சொல்ல,



“வேற எதுவும் பிரச்சனை வாரதே?” என்று கேட்டான் மதி.


“எந்த பிரச்சனையும் வராது, நான் எல்லாத்தையும் அவன் கிட்ட பேசிட்டேன்… ஆனால் வைஷ்ணவி இங்க தனியா தங்க வேண்டாம்… நீ அவள் கூட இரு” என்று அவள் கூற, மதியின் பார்வை கவியின் மீது பதிந்தது.


“இல்லை அது…” என்று மீண்டும் வார்த்தையை இழுத்தான் மதி.


“உன்னோட நல்லத்துக்கு தான் சொல்லுறேன் வைஷ்ணவி… மதி உன்கூட இருக்கட்டும். இந்த இடம் மெயின் ஏரியா விட்டு தள்ளி இருக்கு… இவன் உன்கூட இருந்தா கண்டிப்பா உனக்கு உதவியாவும் பாதுகாப்பாவும் இருக்கும்” என்று அவள் சொல்ல இருவரும் பதில் சொல்லாமல் நின்றனர்.


ஒதுக்குப்புறமான வீடு… அதனால் பாதுகாப்புக்கு குறைவு என்பதனால் மதியையும் அவளுடனே தங்கி கொள்ளும் படி அறிவுறுத்தினாள் நிர்மலா. அது தான் மதிக்கும் சரியென பட்டது. ஆனால் சங்கவியின் பதிலுக்காக அமைதியாக இருந்தான்.


“அவங்க சொல்லுறதும் சரி தான் நம்ம இங்கேயே இருக்கலாம்” என்றபடி சங்கவி, மதியின் முகம் பார்க்க… மெதுவாக தலையாட்டி கொண்டான் மதி.


“வீட்டுக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கிக்கோ மதி” என்ற நிர்மலா அவன் கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்தாள். மதி அதனை வாங்க மறுத்தான்.


“இல்ல என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு நான் பார்த்துகிறேன். நீ இதுவரை எனக்கு பண்ண உதவியே போதும்”


“ரொம்ப பண்ணாதடா… உன் முதலாளி ஜெயில்ல இருக்கான். திரும்ப பழைய மாதிரி உன் கையில காசு வர நாள் ஆகும்னு எனக்கும் தெரியும்… இப்போ இதை வச்சுக்கோ.. வேணும்னா அப்புறமா திருப்பி கொடு” என்று சொன்னாள். அதன் பிறகு அவனும் அந்த பணத்தை வாங்கி வைத்து கொண்டான்.


“எனக்கு நீ நிறையாவே உதவி பண்ணி இருக்க… இதுக்கெல்லாம் நான் என்ன கைமாறு பண்ண போறேன்னே எனக்கு தெரியல”


“வேணும்னா ஒரு முறை” என்று நிர்மலா ஒரு மார்க்கமாக கேட்க, மதியின் முகம் நொடியில் மாறியது.


“பயப்படாத தப்பா எல்லாம் எதுவும் கேட்க மாட்டேன்” என்றவள் தன் கரம் கொண்டு அவனது தலையை கோதி விட்டபடி “நீ நல்லா இருக்கணும் அதை நான் பார்க்கணும்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள்.


பாண்டியன் சிறைக்கு சென்ற பிறகு அவனது இடத்தில் இருந்து தொழிலை பார்த்து கொள்வது. அவனது நம்பிக்கையான கையாள் தர்மன் தான்.


தர்மனுக்கு இணையாக மதியையும் பாண்டியனுக்கு பிடிக்கும் அதனால் ஆரம்பத்தில் இருந்தே தர்மனுக்கு மதியை கண்டால் ஆகாது.


அதனால் பாண்டியன் ஜெயிலுக்கு சென்றபிறகு தர்மனுக்கு கீழ் படிந்து எந்த வேலையிலும் மதி பெரிதாக ஈடுபடவில்லை.


ஆள் கடத்தல், கொலை, போன்ற செயல்களை அரசியல்வாதிகளுக்கும், பணம் படைத்த பெரும் முதலாளிகளுக்கும் செய்து கொடுப்பவர்கள் தான் இவர்கள்… மேலும் மூன்று சாராய ஆலைகள் பாண்டியனின் பெயரில் இருக்கிறது. அதனை இப்போது முழுவதுமாக பார்த்து கொள்வதும் தர்மன் தான்.


நீலகண்டனின் மனைவி சாருலதாவின் வாத திறமையினால் மட்டுமே பாண்டியனுக்கு தண்டனை கிடைத்தது. இல்லையென்றால் அதுவெல்லாம் அவனுக்கு ஒரு வழக்கே இல்லை என்றபடி சுலபமாக வெளிவந்து இருப்பான். அந்த அளவுக்கு அவனுக்கு ஆள் பலம் அதிகம்.


தர்மனுக்கு கீழ்படிந்து வேலை செய்ய விருப்பமில்லாமல், ‘வேறு ஏதாவது வேலை செய்யலாம்’ என்ற எண்ணத்தில் ஒர்க் ஷாப் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தான் மதி. அந்த விஷயம் கேள்வி பட்டு அவனை அழைத்து இருந்தான் தர்மன்.


“இங்க எவ்ளவோ வேலை இருக்கு அதை விட்டுட்டு தனியா போயி என்ன பண்ணிட்டு இருக்க?” என்று தர்மன் கேட்டான் அவனுக்கு விளக்கம் கொடுக்க மதிக்கு விருப்பம் இல்லை. அமைதியாக தான் இருந்தான்.


“அண்ணனை கைது பண்ண இடத்தில் அன்னைக்கு நீயும் தானே இருந்த? நீ மட்டும் எப்படி தப்பிச்ச? அப்போ போலீசுக்கு நீ தான் தகவல் கொடுத்திருக்க?” என்று வேண்டுமென்றே மதியை சீண்டும் எண்ணத்தில் அவன் சொல்ல… அவனை நிமிர்ந்து பார்த்த மதி “நான் அப்படி எதுவும் பண்ணல” நிதானமாகவும் கூர்மையாகவும் அவன் பதில் வந்தது.


“அப்போ எங்க போன?” என்று சந்தேக கண்ணோட்டத்துடனே தர்மன் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்க… வைஷ்ணவிக்கு விபத்து ஏற்பட்டதை பற்றி கூறினான் மதி. ஆனால் தர்மம் அதனை நம்பவில்லை.


“நீ சொல்லுறது உண்மைனா அந்த பொண்ணை இங்க கூப்பிட்டு வா” என்று சொன்னான் தர்மன். அதற்கு முடியாது என்று மறுத்தான் மதி. ஒருகட்டத்தில் கோவத்தில் தர்மன் கை ஓங்க, அவனது கரத்தை தடுத்து பிடித்துக் கொண்டான் மதி. இருவரது முகத்திலும் ஒரே போல கோவம் வெளிப்பட்டது.



அதன் பிறகு மதிக்கு அங்கு வெகுவாக பழக்கப்பட்ட ஒரு நபர் தான் இடையில் வந்து தர்மனிடம் மன்னிப்பு கேட்டு இவனை அமைதி படுத்தினார்.


“நாளைக்கு அந்த பொண்ணு இங்க வரணும். எனக்கு உண்மை எதுன்னு தெரிஞ்சே ஆகணும்” என்று தர்மன் சொல்ல… மதியின் பார்வை அங்கு ஓரமாக பயந்து போய் நின்று கொண்டிருந்த பாண்டியனின் கார் ஓட்டினாரின் மீது பதிந்தது.


 

Mythili MP

Well-known member
Wonderland writer
51


பாண்டியனின் கார் ஓட்டினார் பயந்து போய் நின்றார். யாரையும் எதற்காகவும் காட்டி கொடுத்து பழக்கம் இல்லாத மதி கோபத்துடன் தர்மனை முறைத்து பார்த்தபடி அங்கிருந்து சென்றான்.


***


அன்று இரவு மதியை காண அவனது வீட்டிற்கு வந்தார் ஒருவர்… அவர் தான் காலையில் நடந்த சண்டையின் போது மதிக்கு ஆதரவாக இருந்தது அவர் பெயர் கணேசன்.


அவன் சங்கவியிடம் தர்மன் கூறிய விஷயத்தை பற்றி கூறினான். மதி தடுத்தான் ஆனால் அவரோ இவனது நலனுக்காக அனைத்தையும் எடுத்து கூறியிருந்தார்.


“இப்போ நீ அங்க வரலன்னா… வேணும்னே இவன் மேல பழி போட்டு, இவனை கொல்ல கூட தயங்க மாட்டானுங்கமா… பாண்டியன் ஐயா கூட பரவாயில்லை எதையும் யோசிச்சு செய்யுவாரு ஆனால் தர்மன் அப்படி இல்லை… அதுவும் இல்லாமல் மதியை அவனுக்கு கண்டாலே ஆகாது இதை ஒரு காரணமா வச்சு இவனை ஏதாவது பண்ணனும்னு நினைப்பான்”


“அவனால் என்னை எதுவும் பண்ண முடியாது அண்ணா, நீங்க தேவையில்லாமல் பயப்படாதீங்க” என்று மதி அவருக்கு ஆறுதல் சொல்ல… அவர்கள் பேசிக்கொள்ளும் எதுவும் சங்கவிக்கு புரியவில்லை… ஆனால் “அவர்கள் மதியை கொல்லவும் தயங்க மாட்டார்கள்” என்ற அவர் சொன்ன வார்த்தை மட்டும் கவியின் மனதில் பயத்தை விதைத்தது.


இரவு நேரம் நான்கு ஐந்து பேர் வந்து மதியை வெட்டி கொல்லுவதை போல கனவு கண்டவள் அடித்து பிடித்து எழுந்து கொண்டாள். நேராக தன் அறை கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் அங்கு ஹாலில் அமைதியாக உறங்கி கொண்டு இருந்தான் மதி. அதனை கண்டு நிம்மதி பெரு மூச்சு விட்டாள் சங்கவி. அதன் பிறகு அவளுக்கு உறங்கம் வரவில்லை வேறு நேரம் அவனது முகத்தை பார்த்தபடி அப்படியே அமர்ந்து இருந்தாள்.


நிறைய யோசித்தாள் வெகு நேர யோசனைக்கு பிறகு மதியின் அலைபேசியில் இருந்து இன்று மாலை அவர்கள் வீட்டிற்கு வந்த அந்த நபரின் அலைபேசி எண்ணை எடுத்து கொண்டாள். வந்த நபர் பெயர் சொல்லி அவரை அறிமுகப்படுத்தி கொண்டதனால் எளிதாக எண்ணை கண்டு பிடித்து எடுத்து வைத்து கொண்டாள்.


இருப்பினும் அடுத்தநாள் அந்த எண்ணை ஒரு வித சந்தேகத்துடனே டயல் செய்து அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்று அவர் பேசிய உடனே அடையாளம் கொண்டு கொண்டாள்.


அதன் பிறகு மதி வெளியே சென்ற நேரம் பார்த்து அந்த நபரின் உதவியுடன் தர்மனை பார்க்க வந்திருந்தாள் சங்கவி. முகத்தை புடவை முந்தானையால் மூடி இருந்தாள்.


“இப்படி முகத்தை மூடிட்டு வந்து நின்னா நான் நம்பனுமா?” என்று ஏளனமாக பேசினான் தர்மன்.


அதனால் கண்களை மூடி திருந்து தன் முகத்தை காட்டினாள் சங்கவி. அதனை கண்டதும் “சீ” என்று முகம் சுளித்த தர்மன் “நீ முகத்தை மூடியே வச்சிக்கோ… காலையிலே இந்த கருமத்தை பார்த்துட்டு! இன்னிக்கு நாள் விளங்கின மாதிரி தான். தினமும் இந்த மூஞ்சியை பார்த்துட்டு அந்த மதி பையன் எப்படி தான் சோறு திங்கிறானோ? பாவம்டா அவன்” என்று கூறி அவன் சிரிக்க, அவனை தொடர்ந்து அங்கிருந்த சிலரும் சிரிக்க ஆரம்பித்தனர்.


“ஏய்… உன் அசிங்க பிடிச்சு முகத்தை காட்டினது போதும். நான் நம்பிட்டேன் நீ கிளம்பு…” என்று கேலி பேசி கவியை கேவலமாக அங்கிருந்து விரட்டினான் தர்மன்.


அங்கிருந்து ஆரம்பித்த அழுகை வீட்டிற்கு வந்தும் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாள் சங்கவி. கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள் அவளே அவளை வெறுக்க ஆரம்பித்தாள். கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்தாள்.


தன் முகத்தை பிடித்துக்கொண்டு கதறி அழுதவள் ஒரு ஓரத்தில் ஓய்ந்து அமர, அப்போது சிதறி கிடந்த பொருட்களின் மத்தியில் ஆசிரமத்தில் அவள் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இருந்தது. அதில் அவள் முகம் எந்த வித களங்கமும் இல்லாமல் இருந்தது. அதனை பார்த்தவளின் மனவலியை வார்த்தையால் விளக்க முடியாது. உடைந்து போனாள்.


மதியுடன் இருந்தவரை அவளது முகத்தை பற்றிய களக்கம் அவளுக்கு தோன்றவே இல்லை காரணம் அந்த அளவுக்கு மதி அவளிடம் இயல்பாக இருந்தான். பிறரால் தன் குறைகளை உணர்ந்தாளே தவிர அவனால் ஒரு நொடி கூட அவள் கலங்கவில்லை… தன் முகத்தின் களங்கத்தை பற்றி அவள் சிந்திக்கவும் இல்லை அவன் அவளை சிந்திக்க விட்டதும் இல்லை. ஆனால் இன்று அனைத்தும் உடைந்து விட்ட உணர்வு ‘ஏன் அங்கு சென்றோம்?’ என்ற எண்ணம் தான் அவளது மனதில் நிலைத்து நின்றது. அவன் பார்வையிலே இருந்து இருந்தால் தனக்கு இப்போது இந்த நிலை வந்து இருக்காது என்று எண்ணி கரைந்து கொண்டு இருந்தாள்.


அந்நேரம் வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் மதி. பொருட்கள் உடைந்து சிதறி கிடந்ததை கேள்வியாக பார்த்தபடியே அறைக்குள் நுழைந்தான்.


தலைவிரி கோலமாக தரையில் அமர்ந்திருந்தவளை கண்டவன் பதறி போனான் “என்ன ஆச்சு வைஷு?” என்று கேட்டபடி அவள் அருகில் வந்து அமர்ந்தான்.


தன் அருகில் அமர்ந்திருந்தவனின் அருகாமையை உணர்ந்து கண்களை உயர்த்தி அவனை பார்த்தாள்.


அவளது கண்கள் சிவந்து இருந்தது “அழுதியா? எதுக்காக? ஏன்மா என்ன ஆச்சு?” என்றவன் பதட்டத்துடன் அவளை ஆராய்ந்து பார்க்க… அவனது முகத்தையே பார்த்து கொண்டு இருந்தவள். “பார்க்க நான் எப்படி இருக்கேன்?” என்று அவனிடம் கேட்டாள். அவளது கேள்வி அவனுக்கு விளங்கவில்லை.


“புரியல? எப்படி இருக்கன்னா? எந்த. விதத்தில அப்படி கேட்குற?”


“பார்க்க நான் அசிங்கமா தானே இருக்கேன்?” என்று கேவி அழுதபடியே அவன் முகம் பார்த்தாள் சங்கவி.


“யார் சொன்னா? அப்படி எல்லாம் ஒன்னுமில்லையே? உனக்கு என்னடி நீ எப்போவும் போல அழகா தான் இருக்க?” என்றவன் அவளது கண்களை துடைத்து விட்டான். அப்போது அவனது கரங்களை பிடித்து கொண்ட சங்கவி “நீ மட்டும் ஏன் இப்படி இருக்க? ஏன் உன்னை மாதிரி இங்க யாருமே இல்லை?” என்றபடி தன்னை மீறி கதறி அழுத்தவள் அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். முதல் முறையாக மனம் விட்டு உடைந்து அழுதாள்.


‘என்ன நடந்தது? எப்படி இவளை தேற்றுவது என்று எதுவுமே மதிக்கு புரியவில்லை’


“எனக்கு ஏன் இப்படி ஆகணும்? ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடி என் வாழ்க்கை அவ்ளோ அமைதியா இருந்தது… அந்த மாதிரி அமைதியான வாழ்க்கை எனக்கு திரும்பவும் கிடைக்காதானு ஏக்கமா இருக்குது!” என்று சொல்லி கரைந்தவளின் தலையை அமைதியாக வருடி கொடுத்தான்.


“என்ன நடந்தது?” என்று அவன் பொறுமையாக கேட்க… அப்போதும் அவள் உண்மையை சொல்லவில்லை.. ஒருவேளை நடந்ததை தெரிந்து கொண்டு அங்கு சென்று மீண்டும் சண்டையாகி விடுமோ என்று பயந்தாள். எந்த சூழ்நிலையிலும் மதி, துன்பப்படுவதை அவள் விரும்பவில்லை.


“ஒன்னும் இல்லை… ஆசிரமத்தில் எடுத்த போட்டோவை பார்த்தேன்… இப்போ இருக்குற முகத்தை நினைச்சு கவலையாகிடுச்சு”


“எனக்கு உன் வலி புரியுது, ஆனால் வேற எந்த பிரச்சனையும் இல்லல்ல?”


“இல்லை.. உண்மையை தான் சொல்லுறேன். வேற எந்த பிரச்சனையும் இல்லை” என்றவள் அவனை விட்டு பிரிந்து அமர்ந்து கொண்டாள்.


“சரி நீ எதையும் யோசிக்காத, எல்லாம் சரியாகிடும்” என்றவனை மௌனமாக பார்த்தவள்,


“ஏன் மதி உனக்கு என் முகத்தை பார்த்தா பயமா இல்லையா?” என்று கேட்டாள். அவள் முகத்தில் அப்படி ஒரு தவிப்பு.


“என்னமா கேள்வி இது?”


“பதில் சொல்லு மதி… ஏன்னா என்னாலயே என் முகத்தை பார்க்க முடியல” என்று அழுதபடியே தலை குனிந்தவளை தன்னோடு சேர்ந்து அணைத்துக் கொண்டான். உரிமையாக முதல் முறை அவளை அணைத்து இருந்தான்.


“ஏன் இப்படி எல்லாம் பேசுற? முகத்தில என்ன இருக்கு? இது எல்லாம் ஒன்னும் இல்லை… நான் இருக்கேன் உனக்கு எப்போவும் நான் இருப்பேன்”


“அப்போ நான் எப்படி இருந்தாலும் கடைசிவரை நீ என் கூடவே இருப்பியா? மதி”


“இன்னுமே என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?”


தனது குறைகளை பொருட்படுத்தாமல் தன் மீது உண்மையான அன்பை வைத்திருக்கும் இணையுடனான ஒரு வாழ்க்கை தான் பெண்ணின் அதீத ஆசையே… சங்கவிக்கு அது கிடைத்துவிட்ட உணர்வு.


நம்பிக்கை இல்லையா? என்று அவன் கேட்கிறான்.. அவன் மீது அவள் கொண்டிருக்கும் அளப்பரிய நம்பிக்கையை அவள் உள்ளம் மட்டுமே அறியும்.


அந்நொடி அவளே விரும்பி அவன் கரத்தை பற்றினாள். மனம் முழுக்க வீசிக்கொண்டிருந்த பய புயல் சற்று ஓய்ந்து போன உணர்வு.


அவன் அணைப்பில் இருந்தபடியே அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவனது முகத்தில் சிறு கலக்கமும் இல்லை.


“எனக்காக நீ ஏன் மதி இவ்ளோ விஷயம் பண்ணுற? பதில் சொல்லு மதி”


“ஏன்னா எனக்குன்னு யாரும் இல்லை உன்னை தவிர… நீயாவது பதினேழு வயசுல கஷ்டத்தை பார்த்தா நான் என்னோட நாலு வயசுல இருந்து கஷ்டத்தை மட்டும் தான் பார்த்துட்டு இருந்தேன்… உன்கூட இருக்கும் போது மட்டும் தான் நான் நிம்மதியா இருக்கேன்”


சின்ன வயசுல ஒரு குடும்பத்தோட இருந்தேன். அப்புறம் அவங்க வேற ஒரு குடும்பத்தை கை காட்டிட்டு போயிட்டாங்க, அதுக்கு அப்புறம் அவங்களை அம்மா, அப்பான்னு சொல்லிட்டு அவங்க கூட இருந்தேன். அவங்களும் என்னை நல்லா தான் பார்த்துகிட்டாங்க, அப்படியே ஒரு ரெண்டு வருசம் போயிருக்கும் அப்புறம் என்னோட கெட்ட நேரமோ என்னமோ குழந்தைகளை கடத்தி விக்கிற ஒரு கும்பல் கிட்ட மாட்டிக்கிட்டேன். அவங்க என்னை ஏதோ ஒரு இடத்துக்கு கூப்பிட்டு போனாங்க, அப்புறம் அவங்க அசந்த நேரம் அவங்ககிட்ட இருந்து தப்பிச்சு ஓட ஆரம்பிச்சேன். எங்க போறது என்னனு எதுவும் தெரியல! வீடு எதுவும் ஞாபகத்துக்கு வரல… பயத்தில அப்படியே அந்த ஊரை சுத்தி வந்தேன்… தூக்கம், பசி என்ன பண்ணுறது தெரியல ஒரு கட்டத்தில மயக்கம் போட்டு ரோட்டுல விழுந்துட்டேன். அந்த ரோட்டோரம் இருந்த ஒரு தாத்தா தான் என்னை காப்பாத்தினாரு… கண்ணு முழிச்சு எழுந்து பார்த்தேன். எனக்கு என் வீடு அந்த குடும்பம் எதுவுமே சரிவர ஞாபகத்துக்கு வரல… ஏனோ அந்த நேரம் எனக்கு வீட்டுக்கு திரும்பி போகணும்னு தோணலை, அப்புறம் அந்த தாத்தா கூடவே இருக்க ஆரம்பிச்சேன். அவருக்கு பதில் பலூன் விற்க ஆரம்பிச்சேன்… ரோட்டுல படுத்துட்டு இருக்கிறதை சாப்பிட்டுட்டு அப்படியே ஒரு மூணு வருஷம் போயிருக்கும்… அப்புறம் தாத்தா இறந்துட்டாரு… திரும்பவும் எங்க போறதுன்னு தெரியாத ஒரு தனிமை… அந்த தனிமையை விரட்டவே தப்புன்னு தெரிஞ்சும் நான் இந்த பாண்டியன் கேங் கூட வந்து சேர்ந்தேன்.


அதுக்கு அப்புறம் வந்த நாட்களை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்ந்துட்டு இருந்தேன். இலக்கே இல்லாமல் போயிட்டு இருந்தது என் வாழ்க்கை. உன்னை பார்த்த பிறகு, உன்னை காப்பாத்தனுங்குற எண்ணத்தை மட்டுமே மனசுல வச்சிட்டு வாழ ஆரம்பிச்சேன். அர்த்தமே இல்லாத என் வாழ்க்கைக்கு இப்போ முழு அர்த்தமா இருக்கிறது நீ தான். உன்னை விட்டு எங்க போறது? நீ இல்லாமல் இனி வாழ்க்கையில எதுவுமில்லை”


இருவருமே அவர்களது மன எண்ணத்தை வெளிப்படுத்திக் கொண்ட தருணம் ஆனால் தெளிவாக எதையும் உரைக்கவில்லை.


வார்த்தையால் விளக்கி கூறுவது மட்டுமே அன்பென்றாகிவிடாது அல்லவா? சில நேரம் அன்பின் வெளிப்பாடுகள் பல விதங்களில் உணர கூடியதாக மட்டுமே இருக்கும்.


****

சங்கவி அவள் முகத்தை நினைத்து வருத்தம் கொள்கிறாள் என்பதை உணர்ந்து கொண்ட பின் அவளது முகத்தை எப்படி சரி செய்வது என்று அறிந்து கொள்ள ஆரம்பித்தான் மதி.


நிர்மலாவின் உதவியுடன் அவர்களுக்கு தெரிந்த டாக்டரிடம் இதனை பற்றி விசாரித்தனர். அவரோ கோவையில் இருக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி கிளினிக்கிற்கு சென்று விசாரிக்கும் படி கூறி அனுப்பினார்.


சங்கவியிடம் விஷயத்தை கூறினான்.. அவளுக்கு சந்தோசம் தான். முகமே மலர்ந்து விட்டது.


அதன் பிறகு சங்கவியின் பிளாஸ்டிக் சார்ஜரிக்காக விசாரிக்க வேண்டி கோயம்புத்தூர் வந்து சேர்ந்தான் மதிவாணன். ஒரு அளவுக்கு மருத்துவரிடம் பேசி பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி தெரிந்து கொண்டான். பண விஷயம் எல்லாம் பாதிக்கப்பட்டவரின் காயத்தை பொறுத்து தான் கூற முடியும் என்று கூறினார் மருத்துவர்.


அதன் பிறகு மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது விஸ்வநாதனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.


விஸ்வநாதன் மற்றும் அவரது மகள் என இருவரும் காரில் வந்து கொண்டு இருந்தனர்…


“அப்பா எவ்ளோ நாளா உங்க கிட்ட கேட்டுட்டு இருக்கேன்… இன்னிக்காவது என்னை கார் ஓட்ட விடலாம் இல்லை” என்று சிணுங்கினாள் ஜீவாவின் தங்கை.


“இல்லடா வேண்டாம்… இன்னும் ஒரு ரெண்டு வருஷம் போகட்டும்”


“எனக்கு தான் ட்ரைவ் பண்ண தெரியுமே பின்ன ஏன் எப்போ பாரு இப்படியே சொல்லிட்டு இருக்கீங்க?”


“உன் கையில கார் கொடுக்க கூடாதுன்னு என் பொண்டாட்டி ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்காள்… என்னால என் மனைவி பேச்சை மீற முடியாதுடா… அதனால் தான் உன்னை பிக் அப் அண்ட் டிராப் பண்ண நானே வந்துட்டு இருக்கேன்” என்று அவர் சிரித்தபடி சொல்ல, அவளின் முகம் வாடியது.


“ஏண்டா டல்லா இருக்க?”


“ஒன்னுமில்ல” என்று சொல்லி மீண்டும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள். அவள் வெகு நேரம் அப்படியே இருக்க, விஷ்வாவுக்கு மனம் கேட்கவில்லை உடனே வண்டியை நிறுத்தினார்…


“சரி வா, ஆனால் பைவ் மினிட்ஸ் தான்” என்று அவர் சொல்ல, பிரகாசமான சிரிப்பு மகளிடத்தில்… “டென் மினிட்ஸ்!” என்று கொஞ்சி கொண்டே அவனை பார்க்க… “நோ வே, ஒன்லி பைவ் மினிட்ஸ்” என்றான்.


“இருந்தாலும் ரொம்பதான்ப்பா பண்ணுறீங்க?” என்று இதழை சுழித்துக் கொண்டவள் இறங்கி கொண்டாள்… பின்னர் அவள் வாகனத்தை இயக்க, இருவரும் சென்றனர்… இப்போது அவர்கள் செல்லும் வழி பாதுகாப்பானது அதனால் தான் அவரும் சரி என்று கூறினார்…


அதன் பிறகு எதிர் திசையில் வண்டி வர ஆரம்பித்து விடவும், இனி வண்டியை நான் ஓட்டுகிறேன் என்று அவர் எவ்வளவு கேட்டும் அவள் தர மறுத்தாள்.


“நான் பார்த்துக்கிறேன் அப்பா…” என்றவள் ஆக்சிலேட்டரை அழுத்தினாள்… அந்நேரம் விஷ்வாவுக்கு முக்கியமான அழைப்பு வர, அலைபேசியை எடுத்து பேச ஆரம்பித்தார். அந்நேரத்தில் வளைவு ஒன்றில் அவள் வாகனத்தை திருப்பினாள்… ஹாரன் அடிக்க மறந்து போனாள், அன்னோடி எதிரில் வந்த டெம்போ ஒன்று வேகமாக இவர்கள் காரில் மோதியது. சறுக்கி கொண்டு இரு வண்டிகளும் ஒருபக்கமாக சென்றது. உள்ளே இருந்த இருவருக்கும் சரியான அடி… மோதிய வேகத்தில் டெம்போ டிரைவரும் மயக்கமடைந்து விட்டார்.


சிறிது நேரத்தில் நிதானமடைந்து கண் விழித்தார் விஸ்வநாதன். பரிதவிப்புடன் அருகில் இருந்த தன் மகளை பார்த்தார். அவளது தலை முழுக்க ரத்தம்… சீட் பெல்ட் அணியாமல் இருந்து இருக்கிறாள் என்பதை அவர் இப்போது தான் கவனித்து இருக்கிறார். தனது அலட்சியத்தை எண்ணி தலையில் அடித்துக் கொண்டவர்… தன் மகளை எழுப்ப முற்பட்டார்… ஆனால் அவள் எழுந்து கொள்ளவில்லை… காரின் கதவு வேறு திறக்க முடியாமல் போனது. போன் எங்கே என்று தெரியவில்லை… அந்நிலையை உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார்.


“ஹெல்ப்…ஹெல்ப் யாராவது வாங்க” என்று கத்தினார்… அவர்களை கடந்து சென்ற ஒரு வாகனம் கூட நிற்கவில்லை… அவருக்குமே அடிபட்டு இருந்தது ஒரு கட்டத்தில் உதவி கேட்டு கத்த திராணி இல்லாமல் அவரும் மயங்கிபோக, அந்த நேரம் யாரோ ஒருவர் டேக்சியில் இருந்து இறங்கி தங்கள் அருகில் வருவது போன்று விஸ்வநாதன் கண்களுக்கு தெரிந்தது… அப்படியே மயங்கி சரிந்தார்… அடுத்து அவர் கண்விழித்து பார்க்கையில் மருத்துவமனையில் இருந்தார்.


கண்விழித்ததும் அவரது பெண்ணை தான் தேடினார். அப்போது அவர் அருகில் நின்று கொண்டு இருந்தான் மதிவாணன்.


“என் பொண்ணு என் பொண்ணு” என்று அவர் பரிதவித்துக் கொண்டு அங்கேயும் இங்கியேயும் கண்களை அலையவிடவும்… “இப்போ தான் ப்ளட் கொடுத்துட்டு வந்தேன் அவங்களுக்கு ஒன்னும் ஆகாது, ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு” என்று சொன்னான் மதி. டெம்போ ட்ரைவர் மற்றும் இவர்கள் என அனைவரையும் இவன் தான் மருத்துவமனைக்கு அழைத்து வந்தான்.


“நீங்க?”


“நான் தான் ஆம்புலன்சுக்கு போன் பண்ணி உங்களை ஹாஸ்ப்பிட்டலுக்கு கூட்டிட்டி வந்தேன்” என்று அவன் சொன்னதும் அவனது கரத்தை பிடித்துக் கொண்டவர் ரொம்ப நன்றிப்பா” என்று கண்ணீர் மல்க நன்றி கூறினார்.


ட்ரீட்மெண்ட் முடித்து ஜீவாவின் தங்கை கண் விழித்தாள். டெம்போ டிரைவரும் பெரிய காயங்கள் எதுவும் இல்லாமல் பிழைத்துக் கொண்டார். அதன் பிறகு அங்கிருந்து செல்ல நினைத்தான் மதி…


“நான் கிளம்புறேன்…” என்ற மதியை தடுத்து நிறுத்தினார் விஸ்வநாதன்.


தனது விசிடிக் கார்டை தேடி எடுத்து அவனிடம் கொடுத்து “உனக்கு எப்போ என்ன பிரச்சனைனாலும் சரி… எந்தவித தயங்கும் இல்லாமல் எனக்கு நீ போன் பண்ணலாம்… என் பொண்ணோட உயிரை காப்பாத்தி இருக்க எந்த வித உதவியா இருந்தாலும் அதை செய்ய நான் தாயாரா இருப்பேன்” என்று சொன்னார்.


“திருப்ப இந்த ஊர் பக்கம் வருவேனானு தெரியல… இருந்தாலும் தேவை இருந்தா கண்டிப்பா பார்க்கலாம்” என்று சொல்லியபடி விஷ்வாவின் விசிட்டிங் கார்டை வாங்கி தனது பர்சில் வைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

திரும்பி தன் வீட்டுக்கு வந்தவன் சங்கவியை அழைத்து கொண்டு மீண்டும் கோவைக்கு சென்றான். பிளாஸ்டிக் சர்ஜனிடன் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை குறித்து கேட்டு அறிந்து கொண்டனர். மொத்தமாக பத்து முதல் 12 லட்சம் வரை பணம் தேவைப்படும் என்று அவர் கூற இருவருக்கும் தூக்கிவாரி போட்டது.


பணத்தை பற்றி கேட்டதும் சங்கவி இந்த சிகிச்சை வேண்டாம் என்று கூறினாள். ஆனால் மதிக்கு தான் மனம் கேட்கவில்லை. அவளை பழையபடி சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தான். அவளுக்கென மீண்டும் தர்மனிடம் சென்று நின்றான்.


 
Last edited:

Mythili MP

Well-known member
Wonderland writer
52


தர்மனின் முன்னே கைகட்டி நிற்கும் நிலமையில் இருந்தான் மதி.


தனக்கு முன்னே உதவி கேட்டு நின்றவனை கேலியாக ஏற இறங்க ஒரு பார்வை பார்த்த தர்மன் “நீ கேட்ட பணத்தை நான் கொடுக்குறேன்… ஆனால் அதுக்காக நான் எப்போ என்ன வேலை சொன்னாலும் நீ செய்யணும்” என்றவனை நிமிர்ந்து பார்த்தான் மதி.


“இப்போ எதுவும் செய்ய வேண்டாம். ஆனால் தேவைப்படும் போது கண்டிப்பா செய்ய சொல்லுவேன். அப்போ நீ செய்யணும்… லட்ச கணக்கான பணத்தை சும்மா தூக்கி கொடுக்க முடியாதுல” என்றவன் மதிக்கு முன்னால் இருந்த டேபிளில் அவன் கேட்ட பணத்தை எடுத்து வைத்தான்.


தனது நேரத்தை நினைத்து நொந்து கொண்ட மதி வேறு வழியில்லாமல் “சரி” என்று கூறி அந்த பணத்தை எடுத்து கொண்டான்.


அன்று அவன் சொன்ன அந்த “சரி” என்ற வார்த்தை தான்… ஆர்யன், சங்கவி மற்றும் மதி என அனைவரது வாழ்க்கையும் புரட்டி போட்டது.


பல சிக்கலான சூழ்நிலைக்கு பிறகே சங்கவிக்கு சர்ஜரி செய்து முடிக்கப்பட்டது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிறகு அதிகமாகவே தன் முகத்தில் அசௌகரியத்தை உணர்ந்தாள் சங்கவி… பழையபடி அவளது முக அசைவுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு கிட்ட தட்ட ஆறு மாதங்கள் தேவைப்பட்டது.


ஒவ்வொரு முறை தன் உருவத்தை கண்ணாடியில் பார்க்கும் பொழுதெல்லாம் வேறு யாரோ ஒருவரின் உடலுக்குள் தான் இருப்பது போல ஒரு எண்ணம் அவளுக்கு தோன்றியது. அதனால் மனதளவிலும் பாதிக்கப்பட்டாள். தீக்காயம் பட்ட முகத்தை பார்ப்பதை காட்டிலும் இந்த அழகான முகம் ஏனோ அவளுக்கு மன உளைச்சலை தான் கொடுத்தது.


மதியை பொறுத்தவரை அக தோற்றம் ஒரு பொருட்டே இல்லை. சங்கவியை ஆரம்ப காலத்தில் எப்படி பார்த்தானோ அதே பார்வை தான் இப்போதும் அவனிடத்தில் இருந்தது. அவளது உருவத்தை அவனது மனம் வேறு வகையில் வைத்திருக்கிறதோ என்னவோ அவளது வெளி தோற்றம் எதை கண்டும் அவன் முகம் சுழிக்கவோ ஆச்சரியப்படவோ இல்லை.


ஆனால் சங்கவியால் அப்படி இருக்க முடியவில்லை… தனக்கு காயம் பட்டு முகம் சிதைந்தை கூட ஏற்று கொள்ள முடிந்தவளால் தன் முகத்தின் தற்போதைய தோற்றத்தை ஜீரணிக்க முடியவில்லை… அவளது மன தடுமாற்றத்தை புரிந்து கொண்டவன் அவளை மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்றான். அங்கு கொடுக்க பட்ட கவுன்சலிங் மற்றும் மதியின் அரவணைப்பும் சங்கவியை அந்த உருவத்தை ஏற்று கொள்ள வைத்தது.


அந்த உருவத்தை பழகி கொண்டவள் இதுவும் நல்லதுக்காக என்று கடந்து செல்ல ஆரம்பித்தாள்.


“இனிமேல் அந்த முதலாளியோட கொலைக்காக நான் பயந்து பயந்து இருக்க வேண்டியது இல்லை. இப்போ தான் என்னையே எனக்கு அடையாளம் தெரியலையே” என்று கூறி சிரித்தவளின் முகத்தில் கொஞ்சம் நிம்மதி, கொஞ்சம் கவலை, கொஞ்சம் விரக்தி, சிறிய சந்தோசம் என அனைத்தும் வெளிப்பட்டது. அதனை புரிந்து கொண்ட மதி அமைதியாக அவள் தலையை கோதி விட்டு “அதை பத்தி நீ யோசிக்க கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல… அது எல்லாம் முடிஞ்சு போன விஷயம், அப்படி ஒரு விஷயம் உன் வாழ்க்கையில் நடந்ததையே மறந்திடு.. இப்போ நீ வைஷ்ணவி. இனிமேல் வைஷ்ணவி மட்டும் தான். சங்கவி இல்லை” என்றவனின் தோள் மீது அமைதியாக சாய்த்து கொண்டாள் சங்கவி.


***


அப்படியே வருடங்கள் ஓடியது… இதோ ஆரியன் சிறையில் இருந்து விடுதலை அடையும் நாளும் வந்தது.


அவன் விடுதலை அடையும் நாளை குறித்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வேதா அவனை வீட்டிற்கு அழைத்து வர எண்ணி சிறைசாலை நோக்கி புறப்பட்டு இருந்தார்.


அவர் அங்கு செல்வதற்கு முன்பாக ஆரியன் தன் இல்லம் நோக்கி வந்திருந்தான்.


எத்தனை வருடம் கழித்து இங்கு வந்து இருக்கிறான். ஆனால் வீட்டில் எந்த வித மாற்றமும் இல்லை அப்படியே இருந்தது. அவர்களின் குடும்ப புகைப்படம் முதற்கொண்டு அப்படியே தான் இருந்தது.


வீட்டின் வேலையாட்கள் எல்லாரும் அவனை ஒரு மார்க்கமாக பார்த்தபடி தங்களுக்குள்ளே எதையோ பேசிக்கொண்டு இருந்தனர்.


முகம் முழுவதும் தாடியுடன் அடர்ந்த சிகையுடன் வீட்டிற்குள் நுழைந்தவனை கண்டு ஒரு கணம் மாணிக்கமே தடுமாறி போனார்.


“ஆரி தம்பி” என்றபடி அவனை நோக்கி வந்தார் மாணிக்கம். அவரை நிதானமாக ஒரு பார்வை பார்த்தவன் கேட்ட முதல் கேள்வி “அப்பா எங்க?” என்றது தான். நீலகண்டனின் அறையை நோக்கி மாணிக்கத்தின் கரம் மேலெழுந்தது.


அவர் காட்டிய அறையை நோக்கி சென்ற ஆரியனின் கால்கள் ஓய்ந்து போயிருந்தது மனம் எல்லாம் மரத்து போயிருந்தது.


தன் தந்தையின் அறைக்குள் சென்றான். ஆக்சிஜன் மாஸ்க் எல்லாம் மாட்டப்பட்ட நிலையில் உயிர் மட்டும் தான் அவரிடம் இருந்தது. அவர் அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்தவன் நீலகண்டனின் கரத்தை பற்றினான். நீலகண்டன் கண்விழித்தார். மகனை கண்டதும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது ஆனால் உடலில் எந்த அசைவும் இல்லை. பேச முயற்சி செய்து அவர் அடையும் துன்பத்தை பார்க்க மனம் பொறுக்காமல் ஒரு கட்டத்தில் வெளியே வந்தான் ஆரியன்.


மூச்சடைத்தது… தன் தந்தையை இப்படி ஒரு நிலையில் கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது. மனம் எல்லாம் வலித்தது. இதற்கெல்லாம் காரணமானவனை அழித்து புதைக்க வேண்டும் என்ற ஆத்திரம் மட்டுமே இப்போது அவன் மனதில் நிலைத்து இருந்தது.


விறுவிறுவென வெளியே வந்தவன், “அந்த ஆளு எங்க?” என்று மாணிக்கத்திடம் கேட்க… அவரை சுற்றி நிற்கும் வேலையாட்களை ஒரு பார்வை பார்த்தபடி “யாரை கேட்குறீங்க தம்பி?” என்று கேட்டார்.


“அந்த வேதா! அவன் எங்க?”


“ஐயா இப்போ தான் வெளியே கிளம்பி போனாரு” என்று வேறு ஒரு வேளையாள் சொல்ல… “ஐயாவா!” என்று முணுமுணுத்தபடி அருகில் இருந்த டீப்பாயை உதைத்து தள்ளியவன் அந்த நபரை தீ பார்வை பார்த்தான்.


அவர்களுக்கு மத்தியில் மாணிக்கத்தாலும் எதுவும் பேச முடியவில்லை.


கொலைக்கு அஞ்சாதவன் வேதா, என்று எப்போது அறிந்து கொண்டாரோ அன்றிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் ஊமையாக தான் இருந்தார் மாணிக்கம்.


மாணிக்கத்தின் அமைதியையும் தயக்கத்தையும் அமைதியாக இரு நொடி பார்த்த ஆரியன் இதழ் வளைத்து சிரித்தபடி வெளியே வந்தான்.


ஆரியனின் நல்ல நேரமோ கெட்ட நேரமோ சரியாக அந்நேரம் கந்தனை பற்றி விசாரிக்க எண்ணி மலர் அங்கு வந்திருந்தாள்.


அவளை அங்கு பார்த்ததும் வேகவேகமாக வெளியே வந்த மாணிக்கம் ஆர்யனை தாண்டி சென்று “உன்னை இங்க வர கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல வெளியே போ” என்று கடுமையாக பேசியவர் ஆர்யனிடம் கண்களால் பேசினார்.


“இல்ல கந்தன் மாமா” என்று அவள் எதுவோ சொல்ல வர…


“பார்த்தீங்களா தம்பி நான் சொன்னா இந்த பொண்ணு கேட்குறதே இல்லை நீங்களே பேசி இந்த பொண்ணை வெளியே அனுப்புங்க என்றபடி மலர்க்கனையாளை நுழைவாயில் வரை இழுத்து சென்று விட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்தார் மாணிக்கம்.


கந்தனை தேடி இந்த பெண் வருவது தெரிந்து நாளை வேதவால் இவளுக்கும் ஏதாவது பிரச்சனையாகிவிடுமோ என்ற பயத்தில் தான் இவ்வாறு நடந்து கொண்டிருந்தார் மாணிக்கம். அந்த வீட்டில் வேலை செய்யும் அனைவரும் வேதாவின் விசுவாசி அதனால் தான் இந்த அளவுக்கு கடுமையாக நடந்து கொள்ள வேண்டிய நிலை இவருக்கு உருவானது.


ஆரியனை கடந்து செல்லும் போது “தம்பி அந்த பொண்ணுகிட்ட போயி பேசுங்க” என்று மெதுவாக கூறிவிட்டு வீட்டிற்குள் நுழைந்து கொண்டார்.


நுழைவாயிலில் நின்று கண்ணீர் வடித்து கொண்டிருந்த மலரை, ஆரியனுக்கு உண்மையில் அடையாளம் தெரியவில்லை. “அந்த கந்தன்” என்ற பெயரில் தான் அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் ஆரியனுக்கு வந்தது.


அவளிடம் சென்று பேச ஆரம்பித்தான்.மலருக்கு சட்டென அவனை அடையாளம் தெரியவில்லை… அவனுக்குமே அப்படி தான் பெயர் சொல்லி பேச ஆரம்பித்த பிறகு தான் நினைவு வந்தது.


கந்தனை பற்றி கேட்டான். “ஒரு நாள் புத்தகம் மாதிரி எதையோ ஒன்னை கொண்டு வந்து கொடுத்தாரு அப்புறம் என்ன ஏதுன்னு எதுவும் தெரியல… அப்போ அப்போ இங்க வந்து அவரை பத்தி கேட்பேன். ஆனால் இன்னிக்கு மாதிரியே அந்த பெரியவர் என்னை துரத்தி விட்டுடுவார். இங்க இருக்க எல்லாருகிட்டயும் எனக்கு பைத்தியம்னு சொல்லி வச்சு இருக்காரு அதனால் யாருமே எனக்கு சரியா பதில் சொல்ல மாட்டிங்குறாங்க… என் மாமா என்ன ஆனாருன்னே தெரியல, யாரு கிட்ட அவரை பத்தி கேட்கிறது? என்ன பண்ணுறதுனு ஒன்னுமே புரியல” என்று சொன்ன மலரின் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்தது.


“நீங்களாவது சொல்லுங்களேன் என் மாமா அப்போ இங்க இல்லையா” என்று மலர் கேட்க… ‘இல்லை’ என்று தலையாட்டினான் ஆரியன்.


“அவருக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது” என்று நினைக்க மட்டுமே மலரால் முடிந்தது வேறு என்ன செய்ய முடியும் என்று அவளுக்கும் தெரியவில்லை. கந்தனுக்கு ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது என்பதை ஆரியனால் புரிந்து கொள்ள முடிந்தது ஆனால் அதனை பற்றி இந்த பெண்ணிடம் கூறி அவளை துன்பப்படுத்த அவன் விரும்பவில்லை.


“அவருக்கு எதுவும் ஆகியிருக்காது நீ பயப்படாத… ஆமா கந்தன் ஏதோ ஒரு புக் கொடுத்தாருன்னு சொன்னியே அது இப்போ எங்க இருக்கு” என்று கேட்டான் ஆரியன்.


“அது எங்க ஊருல இருக்கு”


“சரி வா அங்க போகலாம்… எனக்கு அதை எடுத்து கொடு” என்ற ஆரியன் மலர்கனையாலின் இடத்தை நோக்கி பயணமானான்.


அவர்கள் அங்கிருந்து சென்ற அரை மணி நேரத்திற்கு பிறகு நீலகண்டனின் இல்லத்திற்கு வந்தான் வேதா.


அங்கிருந்த தனது ஆட்கள் மூலம் ஆரியன் இங்கு வந்து சென்றதை பற்றி அறிந்து கொண்ட வேதா எந்த வித அலட்டலும் இல்லாமல் தன் அன்றாட வேலைகளை செய்ய ஆரம்பித்தான்.


காடு மலைகளை எல்லாம் தாண்டி ஒரு வழியாக ஓய்ந்து போய் மலரின் இடத்துக்கு வந்து சேர்ந்தான் ஆரியன்.


அவன் கையில் குணாவின் டைரியை கொண்டு வந்து கொடுத்தால் மலர்… தன்னை நல்லவன் போல சித்தரித்து அந்த அநியாயவாதி குணா அந்த டைரியின் பக்கங்களை நிரப்பி இருந்தான்.


கயல் விஷயத்தில் வேண்டுமென பொய்யான பழி சொல்லி வேதா திட்டமிட்டு தன்னை வீட்டை விட்டு அனுப்பியதை மட்டும் குணா அதில் எழுதி இருந்தான். மேலும் ஒருநாள் குணாவை சந்திக்க வந்த வேதா… கோவத்தில் “உன் அண்ணன் குடும்பத்தில ஒருத்தனையும் உயிரோட விட மாட்டேன்” என்று சொல்லி சென்றதையும் வாக்குமூலம் போல எழுதி இருந்தான். “தங்கள் குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு என்ன நடந்தாலும் அதற்கு வேதா தன் காரணம் என்று அதில் எழுதி வைத்திருந்தான் குணா.


முழுக்க முழுக்க குணாவின் டைரியில் நிரம்பி இருந்த எழுத்துகள் “வேதா தான் குற்றவாளி” என்பது தான். அதனை படிக்க படிக்க ஆரியனுக்கு இன்னுமே கோவம் வந்தது. எதையும் நிதானமாக யோசிக்கும் இடத்தில் அவன் இல்லாமல் இருந்தான்.


நேராக மலரிடமிருந்து விடைபெற்று வேதாவை காண தன் வீடு நோக்கி பயணமானன் ஆரியன்.


***

தொழில் நிமித்தமாக வெளியே வந்த வேதா, ஹோட்டல் ஒன்றில் வைத்து தற்செயலாக தன் மகன் நிதிஷை தத்து கொடுத்த அந்த குடும்பத்தை கண்டார். அந்த குடும்பத்தை கண்டதும் அவர் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது. கண்கள் எல்லாம் கலங்கியபடி அவர்களிடத்தில் தன் மகனை பற்றி நலம் விசாரித்தார். அந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் பதட்டத்துடன் பார்த்து கொண்டு இருந்தனர்.


“உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். என்னை நியாபகம் இல்லையா? நான் வேதா, என் பையனை உங்களுக்கு

தத்து கொடுத்தேனே? அவன் இப்போ எப்படி.இருக்கான். அவன் நல்லா இருந்தா எனக்கு அதுவே போதும் அவன் நல்லா இருக்கான்ல?” என்று கேட்டவரின் கண்களில் சட்டென ஒரு துளி கண்ணீர் வழிந்தது.


அப்போது “டேட் கிளம்பலாமா?” என்றபடி பில்லை கட்டி விட்டு திரும்பி வந்தான் அந்த தம்பதிகளின் மகன்.


அவனை கண்டதும் அவன் தான் தன் மகன் என்று நினைத்து கொண்டு பூரித்து போன வேதா “தம்பி” என்றபடி அவனிடம் எதையோ பேச முன்னேறவும்… “நீயும் அம்மாவும் காரில வையிட் பண்ணிட்டு இருங்கப்பா இவர் அப்பாவோட பிரெண்டு நாங்க முக்கியமான ஒரு விஷயத்தை பத்தி கொஞ்சம் தனியா பேசணும் பேசிட்டு வறோம்” என்று தன் மகன் மற்றும் மனைவியிடம் சொன்ன வேதாவின் நண்பர், வேதாவை தனியே அழைத்து வந்தார்.


“இவன் உன் பையன் இல்லை… உன் பையன் எங்க கிட்ட வந்த ரெண்டு வருஷத்திலயே தொலைஞ்சு போயிட்டான். அவனை கண்டு பிடிக்க எவ்ளவோ முயற்சி பண்ணோம் ஆனாலும் கண்டு பிடிக்க முடியல… அதுக்கு அப்புறம் வேற ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பிச்சோம் அவன் தான் இப்போ போனானே என் பையன் ராகேஷ்” என்று அவர் சொன்னதும் உடைந்து போன வேதா “ஏய்… சும்மா பொய் தானே சொல்லுற? திரும்ப வந்து நான் அவனை சொந்தம் கொண்டாடுவன்னு நினைச்சு நீ என்கிட்ட பொய் சொல்ல வேண்டாம். கண்டிப்பா அவன் கிட்ட நான் வர மாட்டேன். எங்க இருந்தாலும் சரி எனக்கு அவன் நல்லா இருந்தாலே போதும்” என்றவரின் வலியை இவராலும் புரிந்து கொள்ள முடிந்தது இருந்தும் பொய்யான ஒரு நம்பிக்கையை வேதாவுக்கு கொடுக்க இவர் விரும்பவில்லை.


“உண்மையிலே உன் மகன் தொலைஞ்சு போயிட்டான் வேதா. அது எனக்கும் வருத்தம் தான்” என்றவரின் சட்டையை கொத்தாக பிடித்து இழுத்தான் வேதா.


“உன்னை நம்பி தானேடா என் பிள்ளையை கொடுத்தேன். அவனை தொலைச்சிட்டு எப்படிடா உங்களால நிம்மதியா நடமாட முடியுது? அவனை தேடாமல் இன்னொரு பிள்ளையை தத்தெடுத்து வளர்க்க உங்களுக்கு எல்லாம் எப்படிடா மனசு வந்தது”


“காசுக்காக பிள்ளையை வித்த உன்னை விட நூறு மடங்கு அதிகமாவே அவனை நான் தேடி பார்த்துட்டேன்” என்று அவர் சொன்ன ஒரு வார்த்தையிலே வேதா உடைந்து போனார். அவன் சட்டையில் இருந்து கையை எடுத்து கொண்டார்.


தனது உடைமையை தான் தானே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பணத்திற்காக அதனை விற்ற பிறகு, விலை பேசி அதனை வாங்கியவன் உடைத்து விட்டாலோ தொலைத்து விட்டலோ உரிமை கோர நாம் யார்?


பொருளையே திரும்ப பெற முடியாத நிலையில் தொலைந்தது உயிர் அல்லவா எப்படி மீட்டெடுக்க முடியும்? அந்த நிதர்சனம் புரிந்து நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினார் வேதா. அங்கிருந்தவர்கள் எல்லாரும் அவர்களை ஒரு மாதிரி பார்க்க… வேதாவின் நண்பர் அந்த இடத்தை விட்டு வெளியே சென்றார்.


கேவலம் பணத்திற்காக பெத்த மகனை பொருளென கருதி வித்து விட்ட தன் தவறை உணர்ந்து மனதளவில் நொடிக்கு நொடி மரணிக்க தொடங்கினார் வேதா...


தனது குடும்பத்தின் இந்த நிலைக்கு தான் ஒருவன் மட்டுமே காரணம் என்ற எண்ணம் வேதாவை கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல ஆரம்பித்தது. மனதனின் மிக பெரிய எதிரி அவனுக்குள் இருக்கும் குற்ற உணர்வு தான். கண்ணுக்கு எதிரே இருக்கும் ஆயிரம் எதிரிகளை கூட சமாளித்து விடலாம் ஆனால் தனக்குள் வாழும் குற்ற உணர்வை சமாளிப்பது முடியாத காரியம்.


அந்த குற்ற உணர்வை சமாளிக்க முடியாமல் தான் தடுமாறி போனார் வேதா. ஒருகட்டத்தில் தனக்கான முடிவையும் தானே ஏற்படுத்திக் கொள்ள தயாரானார்.


தனது மனைவியை போலவே தன் மகளும் தன்னை தவறாக நினைத்திருப்பாளோ என்ற பயம் தான் இன்று வரை இந்திராவை தேடி வேதா செல்லாமல் இருக்க காரணம்.


தான் ஒரு நல்ல தந்தை அல்ல, நல்ல கணவன் அல்ல என்று அவர் மனம் உணர தொடங்கிய நேரம் தன் உயிரை மாய்த்து கொள்ள தயாரானார்.


எந்த மருந்தை கொடுத்து நீலகண்டனை படுத்தப்படுக்கை ஆக்கினாரோ அதே மருந்தை தானும் செலுத்திக் கொண்டார்.


தனது உயிர் உடனே பிரியக்கூடாது செய்த தவறை எண்ணி தான் கொஞ்சம் கொஞ்சமாக சாக வேண்டும் என்று அவருக்கு அவரே இப்படி ஒரு கொடூர தண்டனையை கொடுக்க முடிவு செய்து கொண்டார். அந்த மருந்து அவர் உடலில் வேலை செய்ய சில பல நிமிடங்கள் ஆகும்.


இறுதியாக நீலகண்டனை பார்க்க எண்ணி அவரின் அறைக்கு சென்றார்.


உயிர் மட்டுமே நீலகண்டனின் உடலில் இருந்தது.


“எப்படி இருக்க நீலா?... என்னடா இப்படி ஒரு கேள்வியை கேட்குறானேனு நினைக்காத… நாளைக்கு என் நிலைமையும் உன்னை போலவே தான் ஆக போகுது. அப்போ என்னை பார்த்து இந்த கேள்வியை கேட்க கூட யாரும் இருக்க மாட்டாங்க… நீங்க எல்லாம் தப்பு பண்ணீங்க உங்களுக்கு எல்லாம் தண்டனை கொடுக்கணும் நினைச்சேன் கொடுத்துட்டேன்… ஆனால் உனக்கு ஒரு உண்மை தெரியுமா? நானே பெரிய குற்றவாளி… அப்போ எனக்கும் தண்டனை கிடைக்கணும் இல்லையா அதான் நானே எனக்கு தண்டனை கொடுத்துகிட்டேன். நம்மளை மாதிரி ஆளுங்க எல்லாம் இந்த குடும்ப வாழ்க்கைக்கு தகுதியே இல்லாதவங்க… பாவம் நமக்கு எல்லாம் பிள்ளைகளா பிறந்துட்டு அதுங்க தான் துன்பப்படுதுங்க… நான் உன் பையனையும், மகளையும் எதுவும் பண்ணல நீலா… இனி பண்ணவும் மாட்டேன். ஆனால் நீங்க பண்ண பாவம் அவங்களை கண்டிப்பா நிம்மதியா வாழ விடுங்குற நம்பிக்கை எனக்கில்ல… என்னால முடிந்தவரை உன் பையனுக்கு எல்லா விதத்திலும் உதவி பண்ணி வச்சு இருக்கேன். ஆனால் அதையும் தாண்டி ஏதாவது நடக்கணும்னா நடந்து தான் ஆகும். நம்ம கையில ஒண்ணுமே இல்லை நீலா” என்றவரின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக மரத்து போக ஆரம்பித்தது.


“இன்னும் கொஞ்ச நேரத்தில் என் நிலைமையும் உன்னை மாதிரியே ஆக போகுது… அதற்கு முன்னாடி உனக்கு முக்தி கொடுத்துடலாம்னு நினைக்கிறேன்… ரொம்ப கஷ்டபட்டுட்ட போல, இனி உனக்கு இந்த கஷ்டம் வேண்டாம்” என்றபடி நீலாவின் ஆக்சிஜன் சிலிண்டரை ஆப் செய்தார்… இவர் கண் முன்னாடியே நீலா துடித்து துடித்து தன் இறுதி சுவாசத்தை எடுக்கவும்… ஆரியன் “அப்பா” என்று கதறிக் கொண்டு அந்த அறைக்குள் வரவும் நேரம் சரியாக இருந்தது.


 

Mythili MP

Well-known member
Wonderland writer
53


இரண்டு நாட்களுக்கு பிறகு தன் வீட்டிற்கு வந்த ஆரியனின் கண்களில் இந்த நிகழ்வு பட்டது. தன் தந்தையின் இறுதி சுவாசத்தையும், துடிப்பையும் கண் கூடாக பார்த்தவன் கொத்தாக வேதாவின் சட்டையை பிடித்திருந்தான்.


“என் அப்பாவை என்னடா பண்ண?” என்றவன் அவரது கழுத்தை நெரித்து பிடித்தான். வேதாவின் முகத்தில் கோபமோ? வருத்தமோ! இல்லை புன்னகை மட்டுமே இருந்தது.


அதனை பார்க்க பார்க்க ஆரியன் மேலும் உணர்ச்சி வசப்பட்டான். கோவம் அதிகமானது. அந்நேரம் சத்தம் கேட்டு வேதாவின் ஆட்கள் அங்கு வந்து ஆரியனை பிடித்து கொண்டனர்.


விடுபட முயற்சித்தான் ஆனால் அவர்களிடம் இருந்து விடுபட முடியவில்லை… ஏற்கனவே மிகவும் பலவீனமாக இருந்தவன் எதிர்வினை புரிய முடியாமல் அவர்கள் கட்டுப்பாட்டில் திமிறினான்.


“ உன் அப்பன் செத்துட்டான் அவனை நான் கொன்னுட்டேன்” என்று வேதா சொன்னதும் ஆர்யாவின் கண்கள் இரத்தமான சிவந்து போனது… கண்களில் நிரம்பிய கண்ணீருடன் இறந்து கிடந்த தன் தந்தையின் முகத்தை வலியுடன் திரும்பி பார்த்தான்.



“உன் அப்பனோட இந்த நிலமைக்கு நான் தான் காரணம்… போதுமா? ஆமாம் நான் கெட்டவன் தான் உன் குடும்பத்தை அழிக்க தான் இங்கே வந்தேன். என்ன நடந்ததுன்னு எடுத்து சொல்ல எனக்கு நேரமும் இல்லை… அது கேட்டு புரிஞ்சிக்க உனக்கு பொறுமையும் இல்லை. ஆனால் ஒன்னு மட்டும் சொல்லணும் உன் அப்பன் சாக வேண்டியவன் தான். என் தரப்பை நியாயப்படுத்தி யாருகிட்டயும் விளக்கம் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை… நானும் நெறைய தப்பு பண்ணி இருக்கேன். நானுமே சாக வேண்டியவன் தான்… என்னை கொல்லுற அளவுக்கு உனக்குள்ள கோவம் இருக்குன்னு எனக்கு நல்லா தெரியும். கவலைபடாத என்னை கொன்ன பாவ கரையை உன் கையில நான் சேர விட மாட்டேன். எனக்கான முடிவை நானே எழுதிட்டேன். உன்கிட்ட ஒண்ணே ஒண்னு தான் சொல்லணும். உன் அப்பனும் சித்தப்பனும் பண்ண பாவம் இன்னுமே உன்னை தொடர்ந்து கிட்டு இருக்கு… என்னடா நம்ம அப்பாவையும் சித்தப்பாவையும் தப்பா சொல்றான்னு நினைக்காதே! இங்க பாரு ஆரியா? யாரையும் நம்பாத, இங்க யாரும் நல்லவன் இல்லை நானும் நல்லவன் இல்லை… உன் அப்பனுங்க எனக்கும் மேல கேடு கெட்டவனுங்க… உன்னை மட்டும் காப்பாத்திக்கோ உனக்காக மட்டும் வாழு… மனசு சொல்லுறதை கேட்காத மூளை சொல்லுறதை மட்டும் கேளு… அப்புறம் உன் அம்மாவும், தங்கச்சியும் எங்க இருக்காங்கனு எனக்கு தெரியும்! ஆனால் நான் சொல்ல மாட்டேன். அவங்களுக்கு இந்த மண்ணு பாதுகாப்பானதா இருக்காது. நீ கோவகாரன் கோவத்தில் என்ன வேணாலும் பண்ணலாம்னு உனக்கு தோணலாம் அந்த ஒருவிஷயத்துகாக தான் சில விஷயத்தை உன்கிட்ட சொல்லாமல் இருக்கேன்… உன் அப்பனோட பாவம் உன் தங்கச்சியை தொடர கூடாதுனு நீ நெனச்சா அவளை நீ தேடாத… அப்புறம் நீயும் இங்க இருக்க வேண்டாம்… எங்கயாவது வெளிநாடு பக்கம் போயிடு அது தான் உனக்கு நல்லது” என்ற வேதா சொல்ல இன்னுமே ஆரியனின் கோவம் அதிகமாக தான் செய்தது.


“ எனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு சொல்றதுக்கு நீ யாருடா? நீ என்னைக்கு இந்த வீட்டுக்குள்ள வந்தியோ அன்னைக்கே என் குடும்பம் சின்னாபின்னமாக சிதறி போச்சு இப்படி எல்லாம் பேசி நீ பண்ண தப்பை மறைக்கலான்னு பார்க்குறியா?” என்று ஆரியன் கோபமாக சொல்ல வேதாவிடம் ஒரு பெருமூச்சு மட்டுமே வெளிவந்தது.


தான் கூறும் எதையும் ஆரியன் புரிந்து கொள்ள மாட்டான் என்பதை வேதா நன்கு அறிவான்… பாண்டியனிடமிருந்து ஆரியனை காப்பாற்றும் சூழ்நிலையும்… கால அவகாசமும் இப்போது வேதாவிடம் இல்லை. அதற்காக அவனை அப்படியே விட்டு விட்டு செல்லவும் இவருக்கு மனம் இல்லை… அதனால்தான் தன்னால் முடிந்த வரை எடுத்து சொல்ல வேண்டும் என்று நினைத்தான். இருப்பினும் ஆரியன் அதை புரிந்து கொள்ளவில்லை.


பாண்டியனை பற்றி புரிந்து கொள்ளும் பக்குவத்தில் ஆரியன் இல்லை என்பதை வேதா நன்கு அறிந்திருந்தான். கோவத்தில் இவன் எதாவது செய்ய, அவன் திரும்ப ஏதாவது செய்ய என்று நிம்மதியே இல்லாமல் போய்விடும்… பாண்டியன் ஆசைப்பட்ட போல வம்சமே இல்லாமல் போய் விடும்.


அந்த ஒரு விஷயத்துக்கு பயந்தே மேற்கொண்டு பாண்டியனை பற்றி கூறாமல் இருந்தான். எப்படியும் வேதா இதனை கூறினாலும் ஆரியன் இப்போது இருக்கும் மனநிலையில் இவரை நம்பப் போவதில்லை. அதனால் அனைத்தையும் விதியின் கையில் ஒப்படைத்து விட்டு கண்களை மூடி ஒரு பெருமூச்சு எடுத்த வேதாவின் கை கால்கள் அசைவின்றி அப்படியே நின்றது.


நடக்கும் எதுவும் ஆரியனுக்கு புரியவில்லை. அசைவற்று கீழே கிடந்த வேதாவை அவனது ஆட்கள் எழுப்ப முயல… ஆரியனும் அங்கு இறந்து கிடந்த தன் தந்தையின் அருகில் வந்து கண்ணீருடன் அமர்ந்தான்.


தன்னைச் சுற்றி என்னதான் நடக்கிறது என்பது இப்போதும் ஆரியனுக்கு விளங்கவில்லை.


நீலகண்டனுக்கு இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்த ஆரியன், வேதாவை மருத்துவமனையில் சேர்த்திருந்தான்.


தனது தங்கையையும், தாயையும் பற்றி அறிந்து கொள்வதற்காகவாவது வேதா இப்போது ஆரியனுக்கு தேவைப்பட்டான்.


நாட்கள் கடந்தது… தங்களது அலுவலகத்திற்கு சென்று பணியை ஏற்று கொண்டான் ஆரியன். அங்கு நடக்கும் அனைத்து பணிகளையும் இவனுக்கு எடுத்து சொல்லிக் கொடுக்கவே ஒரு ஆளை நியமித்து வைத்திருந்தார் வேதா. அவர் மூலமாகவே அந்த கம்பெனி பொறுப்புகளை எடுத்துக் கொண்டான் ஆரியன்.


அங்கு பணி புரியும் அனைவரும் ஆரியனுக்கான மதிப்பை கொடுத்தனர். அவரவர்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். நஷ்டத்திலேயே இயங்கிக் கொண்டிருந்த கம்பெனியை மீண்டும் லாபத்தில் கொண்டு வந்தது வேதா தான் என்பதையும் அங்கிருந்த சில நாட்களில் புரிந்து கொண்டான்.


வேதாவின் ஷேர் முதற்கொண்டு அனைத்துமே ஆரியனின் பேரில் தான் இப்போது மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. தனக்கென்று சம்பளமாக கூட ஒரு தொகையை எடுத்துக் கொள்ளாமல் தான் இதுவரை அங்கு வாழ்ந்து கொண்டிருந்தார் வேதா என்பதையும் அறிந்து கொண்டான் ஆரியன்.


ஆரியனின் பார்வையில் வேதா ஒரு புரியாத புதிராகவே இருந்தார். தங்களை அழிப்பது தான் அவனது லட்சியம் என்றால் அவன் அனைத்தையுமே அழித்திருக்க வேண்டுமே? ஏன் அவன் அவ்வாறு செய்யவில்லை என்ற கேள்வியை இப்போது ஆரியனின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.


விடை தெரியாத பல கேள்விகள் ஆரியனின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கெல்லாம் ஒரே விடை வேதா மீண்டும் பழையபடி நலம் பெற வேண்டும் என்று நினைத்தான்.


ஆனால் வேதாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டுதான் இருந்தது… தன் தங்கையையும் தாயையும் தேட ஆரியன் முயற்சித்தான் ஆனால் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.


பெங்களூரில் உள்ள அவனது பாட்டி இறந்திருக்க, அங்கிருந்து கிளம்பிய அவனது தங்கையும், தாயும் எங்கு சென்றார்கள் என்பதை பற்றி இப்போது வரை எந்த தகவலும் இல்லை.


இப்படியே மாதங்கள் கடந்தது… பாண்டியன் சிறையில் இருந்து வெளியே வந்தான். நீலகண்டன் இறந்தது முதல் வேதா உடல் நலம் முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வரை அனைத்தையும் அறிந்து கொண்டான் பாண்டியன்.


“என்னுடைய இந்த நிலைமைக்கு காரணமா இருக்குறவனோட குடும்பத்துல ஒருத்தனும் உயிரோட இருக்கக் கூடாது… அவனை பாதுகாக்கணும்னு நினைக்கிற அந்த வேதாவும் உயிரோட இருக்க கூடாது.” என்று முடிவு செய்த பாண்டியன் வேதாவை கொல்வதற்காக முயற்சி செய்தான்.


மருத்துவமனையில் உள்ள செவிலியர் ஒருவர் பாண்டியனின் அடியாட்கள் வேதாவை கொல்ல முயற்சி செய்வதை பார்த்து அலறவும் அன்று வேதா காப்பாற்றப்பட்டார்.


இந்த விஷயம் ஆரியனின் காதுக்கு சென்றது.


“இவனை யார் கொலை செய்ய முயற்சி செய்தது? ஒருவேளை இது அவனது கூட்டாளியாக இருக்குமா? அல்லது இவனது எதிரியாக இருக்குமா?” வெவ்வேறு பக்கமாக ஆரியின் மூளை சிந்திக்க ஆரம்பித்தது.


தலையில் சுமந்து கொண்டிருக்கும் ஆயிரம் கேள்விகளில் இதுவும் ஒரு கேள்வியாகிப்போனது.


மருத்துவர்கள் வேதாவை எப்படியும் குணப்படுத்த முடியாது என்று கூறி இருக்க… மலர் கணையாளின் உதவியுடன் வேதாவை அவர்களது குடிலுக்கு இடம் மாற்றி இருந்தான்.


அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது.


ஒன்று வேதா அங்கு பாதுகாப்பாக இருப்பான். மற்றொன்று வேதாவை எப்படியும் காப்பாற்றி விடலாம் என்று மலர்கனையாள் இவனுக்கு நம்பிக்கை கொடுத்திருந்தாள்.


இந்த இடைப்பட்ட நாளில் ஆரியனை கொள்ளவும் பாண்டியன் முயற்சி செய்தான் ஆனால் அதுவும் தடைப்பட்டு போனது.


தனது எதிரி யார் என்று தெரிந்தால் தானே அவனிடம் இருந்து தன்னால் பாதுகாப்பாக இருக்க முடியும்… தனது எதிரியை இவன் அடையாளம் காண வேதா அவனுக்கு இப்போது தேவை. உண்மையில் தன் வாழ்க்கையில் என்னதான் நடந்தது என்னதான் நடந்து கொண்டிருக்கிறது முழுவதுமாக தெரிந்த ஒருவன் இப்போது ஆரியனுக்கு தேவை. அந்த ஒருவனாக வேதா இருந்தான். அந்த ஒரே காரணத்திற்காக மட்டுமே வேதாவை காப்பாற்ற நினைத்தான்.



தன் கண்முன்னே தனது தந்தையை அவன் கொன்று இருக்கிறான்… அந்தக் கோபம் இப்போதும் ஆரியனுக்கு உள்ளது. இருப்பினும் தனது தங்கை மற்றும் தாயை பற்றி அறிந்து கொள்ளவும்… தனது சித்தப்பா என்ன ஆனார் என்பதை தெரிந்து கொள்ளவும் ஆரியனுக்கு இருக்கக்கூடிய ஒரே வழியாகவே வேதா தான் தெரிந்தான். அதனால் வேறு வழியின்றி தன் கோபத்தை சற்று புறம் தள்ளி வைத்தான்.


தன் மீதும் கொலை தாக்குதல் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொண்ட ஆரியன் அதன் பிறகு கயலை தேடுவதை நிறுத்தி இருந்தான். ஒருவேளை உண்மையில் வேதா சொன்னது போல இந்த இடம் அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்காதோ என்று சற்று தடுமாறினான்.


***


வேதாவும், குணாவும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் ஆரியனை கொல்வது வீண் என்பதை புரிந்து கொண்டான் பாண்டியன்.


முதலில் குணாவை கொல்ல வேண்டும்! அதற்கு அவனது இருப்பிடம் தெரிந்த ஒரே ஆள் வேதா மட்டுமே… அதற்கு வேதா நமக்கு வேண்டும். வேதா எங்கு இருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எனில் அதற்கு ஆரியன் வாயை திறக்க வேண்டும். என்று ஏகப்பட்ட சிலந்தி வலை பின்னல்களுக்கு நடுவே மாற்றிக் கொண்டது போல விழி பிதுங்கி நின்றான் பாண்டியன்.


என்ன செய்வது அவர்களை எப்படி நெருங்குவது என்று தெரியாத நிலை… தனக்கு நடந்த கொலை முயற்சிக்குப் பிறகு ஆரியன் யாரையுமே தன் பக்கத்தில் நெருங்க விடுவதில்லை… அவனுக்கு பாதுகாப்பாக எப்போது ஆட்கள் இருந்தனர். அதனால் பாண்டியனால் எதுவும் செய்ய முடியவில்லை.


இதனை நினைத்து நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை இழக்க ஆரம்பித்தார் பாண்டியன். தன் குடும்பத்தை தடம் தெரியாமல் ஆக்கியவர்களில் ஒருவரை கூட தன்னால் பழி வாங்க முடியவில்லை என்ற ஆதங்கம் அது. என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.


அப்படியான ஒரு நாளில் தர்மனும் பாண்டியனும் பேசிக் கொண்டிருந்தனர்.


“அடியாட்களால் அவனை நெருங்க முடியலனா என்ன? எப்பேர்ப்பட்டவனா இருந்தாலும் அவனை அழிக்கிறதுக்கு அவன் வாழ்க்கையில் ஒரு பொண்ணு இருந்தா போதாதா?” என்று கேட்டான் தர்மன்.


“என்ன சொல்ல வர?”


“இங்க பாருங்க அண்ணா, அவன் இப்ப ரொம்ப உஷார் ஆயிட்டான்… அடியாட்களை அனுப்பி அவனை கடத்திட்டு வந்தோ இல்ல அவனை கொன்னோ நமக்கு எந்த உண்மையையும் தெரியப்போவதில்லை அப்படிங்கும்போது… இதை வேற மாதிரி தான் கையாளனும்”


“புரியல”


“அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை ஒரு குடும்பம்னு ஆகும்போது… அவங்க கிட்ட இருந்து அவனால எதையும் மறைக்க முடியாது… அவனும் அந்த இடத்தில பலவீனமாவான். அவன் வாழ்க்கைக்குள்ள வரப்போற பொண்ணு… நம்ம முடிவு செய்ற பொண்ணா இருந்தா… இதெல்லாம் ரொம்ப சுலபமாக முடிஞ்சிடும்… மரணத்தை விட கொடுமையான ஒரு தண்டனையை அவனுக்கு கொடுத்த மாதிரியும் இருக்கும்” என்று தர்மன் கூற, பாண்டியனின் இதழ்கள் வன்மமாக புன்னகைத்துக் கொண்டது.


“உண்மைதான் தர்மா சாவை விட கொடுமையான தண்டனையா இது இருக்கும்… கடைசியில் அவனே அவனை அழிச்சுக்கிற நிலைமையில் அவனை நான் கொண்டு வந்து நிறுத்துவேன்… அந்த நீலகண்டனோடு குடும்பத்துல ஒரு உயிர் கூட தப்பிக்க கூடாது. இதுதான் நான் என் குடும்பத்துக்கு செலுத்துகிற நியாயமான அஞ்சலியா இருக்கும்”


“ஆனா நம்ம அனுப்ப போற பொண்ணு எந்த சூழ்நிலையிலும் மனசு வராதவளா இருக்கணும்… கடைசி வரைக்கும் நம்ம பக்கம் நிக்கிறவளா இருக்கணும்”


“ஆனா அப்படி ஒரு பொண்ணு தேடுறது ரொம்ப கஷ்டமாச்சே தர்மா”


“நீங்க சரின்னு சொல்லுங்க… அப்படி ஒரு பொண்ண உங்க கண்ணு முன்னாடி நான் கொண்டு வந்து நிறுத்துறேன்”


“அப்படி உனக்கு யாரை தெரியும்”


“அதான்” என்றபடி சற்று தயங்கிய தர்மன் “ அதான் நம்ம மதியோட வீட்டுல ஒருத்தி இருக்காளே” என்று சொன்னபடி பாண்டியனின் முகத்தில் தோன்றும் மாற்றத்தை கவனித்தான்.


“நிறுத்து தர்மா என்ன பேச்சு பேசுற? இல்ல வேண்டாம் இது சரிவராது”


“ஏன் சரி வராது? அவன் உங்களுக்காக என்ன வேணாலும் பண்ணுவான். உங்க குடும்ப விஷயத்தை எடுத்து சொன்னா உங்களுக்காக அவன் இதை பண்ண மாட்டானா என்ன?”


“எனக்காக அவன் இதை பண்ணுவான் ஆனால் வேண்டாம்… அவன் நல்லபடியா வாழட்டும்”


“நம்ம என்ன அவன் வாழ்க்கையை கெடுக்கவா போறோம்… இதை ஒரு உதவியா தானே கேக்குறோம்… அந்த பொண்ண தவிர வேறு ஒரு நம்பிக்கையான ஆளு நம்மளால கண்டு பிடிக்க முடியாது. கடைசி வரைக்கும் நமக்கு உண்மையாக இருக்கணும் அப்படின்னா அது அந்த பொண்ண தவிர வேற யாராலும் இருக்க முடியாது… நல்லா யோசிங்க.. அந்த பொண்ணுக்கு எதுவும் ஆகாமல் நம்ம பார்த்துக்கலாம்… நீங்க சரின்னு மட்டும் சொல்லுங்க நானே இதை பத்தி மதி கிட்ட பேசுறேன்” இன்று தர்மன் சொன்னதும் வெகு நேரமாக யோசித்த பாண்டியன்… இறுதியாக “சரி என்ன பண்ணணுமோ அதை பண்ணு” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.


இந்த பதிலுக்காக காத்திருந்த தர்மன் இதழ் வளைத்து வன்மமாக சிரித்தபடி சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை அசைபோட்டு பார்த்தான்.


மரணத்தை விட கொடுமையான தண்டனையை ஆரியனுக்கு கொடுக்க வேண்டும் என்று தர்மன் இதை சொல்லவில்லை… அப்படியான ஒரு தண்டனையை சங்கவிக்கு கொடுக்க வேண்டும் என்றே யோசித்து இருந்தான்.


 
Status
Not open for further replies.
Top