பகுதி 10
"உன் அப்பா" என்று அவள் சொன்னதும் ஜீவாவின் முகம் மாறியது..
வார்த்தைகளின் வீரியம் உணர்ந்து தான் இவள் பேசுகிறாளா என்ற எண்ணம் ஜீவாவுக்கு வந்து போனது.
"இன்னும் புரியலையா இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா?" என்று அர்த்தமாக கேட்டபடி தன் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டாள் யசோதா.
"யசோ யோசிச்சு பேசு..." சினத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.
"யோசிச்சதால தான் இப்படி பேசுறேன்" அவளது பதில்கள் ஏகத்துக்கு அவனுக்கு கோவத்தை கொடுத்தது... ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்த போராடினான்.
"லுக், என்னை நீ அவாய்ட் பண்ணுறதுக்கான உண்மையான காரணம் எனக்கு வேணும்... பொய்யான காரணம் சொல்லி, அதுவும் இப்படிப்பட்ட ஒரு காரணத்தை சொல்லி உன்னை நீயே அசிங்க படுத்திக்காத... இதை எல்லாம் கேட்டுட்டும் அமைதியா இருக்க எனக்கு பொறுமை இல்லை"
"உன்னை நான் பொறுமையா இருக்க சொல்லலையே, இங்க இருந்து போக தான் சொல்லுறேன், ஓகே நான் சொன்னது எல்லாம் பொய் தான்! அசிங்கம் தான் ஆனால் நீ இன்னும் கொஞ்சம் நேரம் இங்க இருந்தன்னுவையேன் இதை விட அசிங்கமா ஏதாவது பேசுவேன்... புரியுதா? அதனால் வந்த வழியை பார்த்து கிளம்பு" என்றவள் வாசல் நோக்கி கை காட்டினாள்.
இவள் விஷயத்தில் அவன் பொறுமைசாலி தான் இருந்தும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துவிட்டு இன்னும் எவ்வளவு நேரம் தான் இவளிடம் கெஞ்சுவது?
"கடைசியா என்ன தாண்டி சொல்ல வர? தெளிவா சொல்லு"
"நான் தெளிவா தான் பேசுறேன் உனக்கு புரியலன்னா அதுக்காக நான் ஒன்னும் பண்ண முடியாது"
"அப்போ நமக்குள்ள எல்லாம் முடிஞ்சுது அப்படி தானே?" அதீத கோவத்தில் கத்தினான், அந்த சத்தம் கேட்டு வைஷ்ணவியும், இந்திராவும் யாசோதாவின் அறைக்கு வெளியே வந்து நின்றனர்.
"ஆமா நமக்குள்ள எல்லாம் முடிஞ்சுது இனிமேல் ஒன்னுமில்ல" என்றவள் காதலிக்கும் போது அவன் கொடுத்த பொருள்களை எல்லாம் வைத்திருந்த அந்த பெட்டியை எடுத்து அவனை நோக்கி தூக்கி போட்டாள்...
சினம் கொண்டு அதனையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன்
"என்னை நீ ரொம்ப காயப்படுத்துறடி ஒருநாள் என் நிலமையில நீ இருப்ப, அப்போ உன்னை பத்தி யோசிக்க இதே நிலமையில நான் இருக்க மாட்டேன்... அப்போ உனக்கு என் வலி புரியும்" என்றவனின் கண்கள் மட்டுமல்ல மனமும் கலங்கி போனது...
மேல் நோக்கி பார்வையை செலுத்தி கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவன் "கடைசியா ஒரு வாரம் உனக்கு நான் டைம் தரேன் அதுக்குள்ள நீ என்னை தேடி வரல அப்புறம் நீ எவ்ளோ தேடினாலும் நான் உனக்கு கிடைக்க மாட்டேன்" என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவளை அழுத்தமாக பார்த்தபடி அங்கிருந்து சென்றான்.
செல்லும் அவனை எந்த வித உணர்வுமின்றி பார்த்தபடி நின்றாள் யசோதா... ஜீவா சென்ற பிறகு யசோதாவை காட்டு தனமாக திட்ட ஆரம்பித்தார் இந்திராணி...
"என்ன தான்டி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? நானும் பார்த்துட்டே இருக்கேன் உன் இஷ்டத்துக்கு எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்க? அந்த பையன் மாதிரி ஒருத்தன் உனக்கு கிடைப்பானாடி? எதுக்காக உன் வாழ்க்கையில நீயே மண்ணள்ளி போட்டுக்கிற"
"என் வாழ்க்கை தானே அது மண்ணா போனாலும் பொண்ணா போனாலும் உங்களுக்கு என்ன பிரச்சனை?"
"இப்படி எடுத்தெறிஞ்சு பேசாதடி எரிச்சலா இருக்கு"
"என்கிட்ட இப்படி பேசுனா நான் அப்படி தான் பேசுவேன்..."
"கொஞ்சமாவது ஒழுக்கமா பேசுறியாடி"
"ஆஹான் உங்க அளவுக்கு எல்லாம் எனக்கு ஒழுக்கம் இல்லை அதனால தான் என் பேச்சும் அப்படியே இருக்கு"
"தப்பு பண்ணுற யசோதா? ரொம்ப தப்பா இருக்க... உன் அப்பாவை மாதிரியே எதையும் யோசிக்காமல் நடந்துகிற... ஒருநாள் வாழ்க்கையை இழந்துட்டு நிற்க போற! அப்போ அம்மா சொன்னது சரின்னு உனக்கு புரியும்"
"என்ன சாபமா?" இளக்காரமா சிரித்தாள்.
"சாபம் இல்லடி இது என் ஆதங்கம் ஏண்டி என்னை புரிஞ்சுக்கவே மாட்டிங்குற? நான் உன் அம்மாடி என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா"
"இல்லை" என்று ஒற்றை வார்த்தையில் மேலும் அவரது மனதை உடைத்தாள்.
இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவியோ "உண்மை என்னன்னு தெரியாமல் வாயுக்கு வந்தபடி எல்லாம் பேசாதீங்க யசோதா... ஒவ்வொரு முறையும் உங்க வார்த்தையால இவங்களை நீங்க கொன்னுட்டு இருக்கீங்க, இதெல்லாம் பெரிய பாவம், இந்த பாவம் உங்களை நிம்மதியா வாழ விடாது" என்றாள் வருத்தத்துடன்..
"என்னடா இது ஆளாளுக்கு சாபம் கொடுக்குறீங்க? சாபம் கொடுக்குற அளவுக்கு நீங்க யாரும் நல்லவங்களும் இல்லை, ஐயோ அது பலிச்சிடுமோ நம்ம வாழ்க்கை பறிபோயிடுமோன்னு பயப்பட எனக்கு நல்ல வாழ்க்கையும் இல்லை... இழக்கிறது இனி என்கிட்ட என்ன இருக்கு ஒண்ணுமே இல்லை... அதுக்காக நான் வருத்தப்படபோறதும் இல்லை... ஹான் அப்புறம் வைஷ்ணவி, உன் இடம் எதுன்னு அன்னைக்கே உனக்கு புரியும் படி நான் எடுத்து சொல்லிட்டேன்... மறுபடியும் மறுபடியும் எதுக்காக என் குடும்ப விஷயத்தில் வந்து நாட்டாமை பண்ணனும்னு நினைக்கிற? ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா? இந்த வீட்டுல தான சாப்பிடுற? சாப்பாட்டுல உப்பு எல்லாம் அதிகமாவே தானே இருக்கு? அப்படி இருந்தும் உனக்கு சுரனை வரலன்னா? அதுக்கு என்ன அர்த்தம்?" கொஞ்சமும் மரியாதை இல்லாமல் பேசினாள். ஆனால் இம்முறை அதற்கெல்லாம் கவலைப்படும் மனநிலையில் வைஷ்ணவி இல்லை... 'நீ என்ன சொன்னாலும் சரி உண்மை எதுவென உனக்கு உணர்த்தாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்' என்பது போல துணிவாக நின்றாள்.
"வைஷு உனக்கு எதுக்குடா இந்த அவமானம்... இவளுக்கு வெறி பிடிச்சிடுச்சு இனி என்ன தான் சொன்னாலும் இவளுக்கு எதுவுமே புரிய போறது இல்லை"
"அடேங்கப்பா என்ன நல்லவர்கள் கூட்டணியா?" ஏகத்தாளமா பேசினாள் யசோ. அதனை கண்டு 'சீ' என்றானது இந்திராவுக்கு...
"இல்லமா நான் சொல்ல தான் போறேன்" என்ற வைஷ்ணவி, யசோதாவின் தந்தையை பற்றியும் எதற்காக இந்திரா இவளை விஸ்வநாதன் உதவியுடன் இங்கு அழைத்து வந்தார் என்பதை பற்றியும் ஒன்று விடாமல் கூறி முடித்தாள்.
"இப்போவது உண்மை என்னன்னு உங்களுக்கு புரியுதா? நீங்க நினைக்கிற மாதிரி உங்க அப்பா நல்லவர் இல்லை? இந்த உண்மை உங்களுக்கு தெரிஞ்சா நீங்க வருத்தபடுவீங்கன்னு தான் இவ்ளோ நாளும் இதை உங்களுக்கு தெரியாமல் இந்திரா அம்மா பார்த்துக்கிட்டாங்க... அவங்க உங்க மேல உயிரே வச்சு இருக்காங்க, தயவு செய்து இனிமேலும் அவங்களை காயப்படுத்தாதீங்க" என்றாள் வைஷ்ணவி. இதை அனைத்தையும் கேட்ட பிறகும் கூட யசோதாவின் முகத்தில் சிறு சலனமும் இல்லை...
"அவ்ளோ தானா எல்லாம் சொல்லி முடிஞ்சுதா?" என்றபடி அவர்களை பார்த்தாள்.
அவளது அமைதிக்கான காரணம் புரியாமல் வைஷ்ணவியும், இந்திராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்.
உண்மையில் இவளுக்கு என்ன தான் ஆனது ஒருவேளை அவளது தந்தையை பற்றிய உண்மையை அறிந்து கொண்டதும் அதிர்ச்சியாகி விட்டாளோ? என்ற யோசனையுடன் "யசோதா" என்று மென்மையாக அழைத்தார் இந்திரா...
அப்போது அவர்கள் இருவரது கரத்தையும் பிடித்து தன் அறைக்கு வெளியே கொண்டு சென்று விட்ட யசோதா 'என் அப்பா நல்ல கணவனா இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு அவர் எப்போதும் நல்ல அப்பா தான்... உனக்கு உன் புருஷன் மேல நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு என் அப்பா மேல நம்பிக்கை இருக்கு என்னைக்கும் அவர் என்னை ஏமாத்தமாட்டாரு... சத்தியமா இப்படி ஒரு தப்பை என் அப்பா எனக்கு பண்ணியிருக்க மாட்டாரு... அம்மா மேல நம்பிக்கை இல்லையான்னு கேட்டல்ல? 'இருக்கு' நீ எப்போவும் யாரையும் சரியா புரிஞ்சுகிட்டது இல்லங்குற நம்பிக்கை இருக்கு... யாரை நம்பணுமோ அவங்களை நம்பாத, யாரை நம்பக் கூடாதோ அவங்களை மட்டும் நம்பு...என் இடத்தில இருந்து யோசிக்க தெரியாத யாருக்கும் என்னை குறை சொல்ல தகுதியே இல்லை" என்றபடி கதவினை பூட்டிக்கொண்டு அந்த இடத்திலேயே அமர்ந்த யசோதவின் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வடிந்தது...
ஆம் யசோதாவுக்கு அனைத்துமே நினைவில் இருந்தது ஆரம்பத்தில் அந்த காட்சிகள் கனவு போல அவளது சிந்தையில் வந்து போனது நாளடைவில் அந்த காட்சிகள் கனவு அல்ல என்பதை உணர்ந்து கொண்டாள். அவளிடம் தவறாக நடந்து கொண்ட அந்த நபரை அவள் தெளிவாக இருக்கும் போதே அவளது தந்தையுடன் கண்டிருக்கிறாள் அல்லவா? பின்னர் எப்படி அந்த நபரின் முகம் அவளுக்கு மறக்கும்... மேலும் அவருடன் இருந்த அந்த இன்னொரு நபர் தான் யசோதாவின் இந்த மன அழுத்தத்துக்கு காரணமானவர்.
*****
அலுவலகத்தினுள் கம்பீரமாக நுழைந்தான் ஆரியன், அவனை கண்டதும் ஊழியர்கள் முகத்தில் இனம்புரியா நிம்மதி நொடியில் தோன்றி மறைந்தது... கருணாவிடம் கூட தெரிவிக்காமல் தான் இப்போது அங்கு வந்திருந்தான்.
நேராக தனது அறைக்குள் நுழைந்தான், அங்கு யாரும் இல்லை அவனது இருக்கை அவனுக்காக காத்திருந்தது... ஆனால் அவன் அந்த இருக்கையில் அமரவில்லை, தொலைபேசியை எடுத்து மேனஜருக்கு அழைத்து "கருணாவை வர சொல்லு" என்று கூறினான்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் ஆரியனது அறைக்குள் அனுமதி கேட்டு நுழைந்திருந்தான் கருணா...
"என்ன ஆச்சர்யம் திடீர்னு ஆபிஸ்க்கு வந்து இருக்க?" என்று செய்கையில் விசாரித்தான் கருணா...
"ஏன் நான் வரக்கூடாதா? இது என் ஆபிஸ் நான் இப்போ வேணாலும் வரலாம்... போகலாம்" என்றதும் கருணாவது முகம் சத்தமின்றி மாறியது.
"உண்மை தான்" என்பது போல வெளியே சிரித்த முகமாக நின்ற கருணாவை நோக்கி வந்த ஆரியன், அவனது தோளில் கரம் போட்டு "நான் இவ்ளோ நாள் ஆபிஸ் வரலன்னாலும் என் இடத்தை எவ்ளோ க்ளீனா மெயின்டன் பண்ண சொல்லி இருக்க? குட்... இந்த ரூம் இவ்ளோ க்ளீனா இருக்குறத பார்த்ததும் நான் கூட வேற யாரும் இத்தனை நாளா இதை பயன்படுத்துட்டு இருந்ததா நினைச்சேன்.." என்றவன் ஒற்றை புருவம் உயர்த்தை கருணாவை பார்க்க, அவனோ "அப்படி எல்லாம் இல்லை இது உன் இடம் உனக்கான இடம் இதை யாராலும் நிறப்பவும் முடியாது எடுத்துக்கவும் முடியாது" என்பது போல செய்கை செய்தான்.
"ம்ம்ம்... அப்படி எடுத்துக்கணும்னு நெனச்சா அது தான் அவங்களோட கடைசி ஆசையா இருக்கும்" என்று கூறி இதழ் வளைத்து சிரித்தான் ஆரியன். அதனை கண்டு
மிதமாக சிரித்த கருணா, "இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்த பிறகு வந்துருக்கலாமல்ல" என கையசைக்க...
"எவ்ளோ நாள் ரெஸ்ட் எடுக்குறது மொத்தமா இந்த ஆபிஸை இழுத்து மூடுற வரை ரெஸ்ட் எடுக்கவா?" என்று ஆரியன் கேட்டதும் சற்று அதிர்ந்து போனான் கருணா... ஆம் அலுவலகத்தில் ஏகப்பட்ட குளறுபடி... மூழ்கும் நிலையில் இருக்கிறது, என்பதை நம்பிக்கையான ஒருவர் முலம் அறிந்து கொண்டான் ஆரியன்.
"அது உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்" என்று கருணா காரணம் சொல்ல முன்வரவும் "விடு இதுல உன் தப்பு என்ன இருக்கு? அதான் நான் வந்துட்டேன்ல இனி எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்..." என்ற ஆரியன் ஒரு நிமிடம் நிறுத்தி "அப்புறம் எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சுட்டு கம்பெனியை நான் பார்த்துகிறேன், மூணு நாள் மட்டும் தான் அப்புறம் திரும்பி வந்திடுவேன், அதுக்குள்ள என்னோட இந்த டேபிள் சேர் எல்லாத்தையும் புதுசா மாத்திடு எனக்கு என்னமோ இதுல வேற யாரோ உட்கார்ந்த மாதிரி ரொம்ப அன்கம்பர்ட்டபிலா பீல் ஆகுது" என்றபடி அங்கிருந்து சென்றான் ஆரியன்.
அடுத்தநாள் மலர்கனையாளை சந்திக்க சென்றான் ஆரியன், இம்முறை அவன் செல்லும் போது கார் ஒன்று வெகு தூரம் அவனை பின்தொடர்ந்து வந்தது. அதனை ஆரியனும் கவனித்துக் கொண்டான், உடனே வண்டியை வேறு பாதையில் திருப்பியவன், பின் தொடர்ந்த அந்த கார் உண்மையில் தன்னை தான் தொடர்கிறதா என்பதை தெளிவா அறிய இடையில் ஒரு இடத்தில் வாகனத்தை வளைத்து திருப்பி பதுங்கி நின்றான்..
ஆரியன் எங்கும் காணவில்லை என்று பின் தொடர்ந்து வந்த அந்த கார் சட்டென பிரேக் போட்டு அங்கேயே நிற்கவும், ஆரியனது சந்தேகம் ஊர்ஜிதமானது...
"மிஸ் பண்ணிட்டோமோ?" என்று காரில் இருந்தவன் கண்ணாடி வழியே பின்னால் பார்க்க இருசக்கர வாகனத்தில் கரத்தை கட்டிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான் ஆரியன். அவனை அங்கு கண்டதும் உடனே சுதாரித்து கொண்ட காரில் வந்த நபர் வேகமாக காரை உயிர்ப்பித்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
அந்த காரில் நம்பர் பிளேட் எதுவும் இல்லை... அதனால் அவன் யார் என அறிய எந்த தடையமும் கிடைக்காமல் போனது.
அவர்களை பின் தொடரும் எண்ணம் ஆரியனுக்கு இல்லை... எப்படியும் ஒருநாள் சிக்குவான் அப்போதும் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாக அந்த ஒத்தயடி பாதையில் வாகனத்தை செலுத்தினான்.
வேதாசலத்தை சந்தித்த ஆரியன் "இந்திரா" என்று அவர் காதில் கூறவும், வேதாசலம் முகம் மாறியது... அவரது மனம் பதரியது, தடுமாறியது. அந்த தடுமாற்றமும், பயமும் ஆரியனுக்கு போதுமானதாக இருந்தது.
***
அடுத்த நாள் தனது டிடெக்டிவ் நண்பனுக்கு அழைப்பு விடுத்த ஆரியன் இந்திராவை கடத்தி வரும் படி கூறினான். வேதாசலம் பற்றி விசாரிக்க...
"கடத்தலா?" என்று அவன் சிறிது யோசிக்க...
"உன்னால முடியலன்னா வேற ஆள் யாரையாவது வச்சு அதை பண்ணி முடி" என்று அழைப்பை துண்டித்தான்.
இந்திராவும் கடந்த இரண்டு நாட்கள் பெரிதாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை... அப்படியே வந்தாலும் ஆட்கள் நடமாட்டம் அதிகமா இருந்தது. கடத்தல் தொழிலுக்கு புதிதாக வந்த அடியாட்கள் போல எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டு ஆட்களை கடத்த சொன்னால் நாட்களை கடத்தினர்.
ஆரியன் வேறு போன் போட்டு விவேக்கை வறுத்தெடுக்க, எவனோ எப்படியோ நாசமா போங்கடா என்று இந்திராவுக்கு பதிலாக வைஷ்ணவியையும் இலவச இணைப்பாக வைஷ்ணவி கணவன் என்று கூறப்பட்ட அந்த மதியையும் கட்டி தூக்கி வந்து ஆரியன் சொன்ன இடத்துக்கு அழைத்து வந்தனர்.