பகுதி 5
வைஷ்ணவி அப்படி கேட்டதும் அனைத்தையும் கூறிவிட வேண்டும் என்று யசோதாவின் வாய் வரை வார்த்தை வந்து விட்டது, இருந்தும் வெளியாள் (வைஷ்ணவி) முன்னிலையில் தன் தாயை தரம் குறைத்து பேச அவளுக்கு மனம் இடம் கொடுக்க வில்லை... அதனால் சொல்ல வந்த வார்த்தைகளை அப்படியே முழுங்கிக் கொண்டாள்.
"உள்ள போங்க யசோதா... இப்போ தான் உங்க அம்மா ஹாஸ்பிட்டலில் இருந்து வராங்க... அவங்க இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்க நலம் விசாரிகாட்டியும் பரவாயில்லை ஆனால் இப்படி அவங்களை அலட்சிய படுத்தாதீங்க..."
யசோதாவும் இன்று வரை மருத்துவமனையில் தான் இருந்தாள் என்கிற உண்மை வைஷ்ணவிக்கோ, இந்திராவுக்கோ தெரியாது... உண்மை தெரிந்த ஒருவர் ஜீவாவின் தந்தை, ஆனால் அவரும் அதனை பற்றி அங்கு யாரிடமும் கூறிக்கொள்ளவில்லை...
"யசோ அம்மாவுக்கு ஒன்னுமில்லடா... நீ உள்ள வா நம்ம பேசிக்கலாம்," என்ற இந்திராவை பார்த்து விரக்தியாக சிரித்தவள் அங்கிருந்து செல்வதில் தான் குறியாக இருந்தாள்.
"உன்கிட்ட தான்டா கேட்குறேன் என்ன ஆச்சு உனக்கு? எதுக்கு இவ்ளோ கோவம்?" என்று கேட்டவர் நிற்க முடியாமல் தடுமாறவும், ஜீவாவின் தந்தை அவரை நன்றாக பிடித்துக் கொண்டார். அவரது செயல் மீண்டும் யசோவின் கோவத்தை அதிகப்படுத்தியது.
உடனே பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியே போனவளின் கரத்தை தடுத்து பிடித்திருந்தார் இந்திரா "ஏன்டா இப்படி பண்ணுற? அம்மாவுக்கு உன்னை விட்டா யாருடா இருக்கா?" என்று கூறி கண்ணீர் வடித்த இந்திராவின் முகத்தை யசோவால் காண முடியவில்லை... அவளுமே கலங்கி தான் நின்றாள்.
யசோதாவுக்கு அவளது தாய் என்றால் அத்தனை பிரியம். தாயை பிடிக்காத பிள்ளை இருக்குமா? இவர்கள் வாழ்க்கையில் எல்லாம் நன்றாக தான் இருந்தது... ஆனால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் யசோவை சுற்றி நடந்த சில சம்பவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்திராவிடம் இருந்து யசோதாவை பிரித்தது... அவரை வெறுக்க செய்தது, இருந்தும் ஏதோ ஒரு மூலையில் அந்த எல்லையில்லா அன்பு இன்னும் ஒட்டிக் கொண்டு தான் இருக்கிறது... அந்த அன்பு தான் இன்றுவரை அவளை விலக விடாமல் இவரிடம் பிடித்து வைத்திருக்கிறது.
"யசோ"
"போதும் இப்போ உங்களுக்கு என்ன? நான் எங்கேயும் போக கூடாது அவ்ளோ தானே... நான் எங்கேயும் போகலை, நீங்க எல்லாம் சந்தோஷமா இருங்க, நான் இப்படியே பைத்தியம் பிடிச்சு கொஞ்சம் கொஞ்சமா சாகுறேன்" என்று சத்தமாக சொல்லிவிட்டு தன் உடமைகளை தூக்கி வீசியவள் தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.
தனது மகளின் செயல் கண்டு மேலும் வேதனை அடைந்தார் இந்திரா "நீ எதுவும் கவலைபடாத நான் அவள் கிட்ட என்ன பிரச்சனைன்னு கேட்கிறேன்" என்று அவருக்கு ஆறுதல் கூறி அழைத்து சென்றார் ஜீவாவின் தந்தை.
என்ன நடக்கிறது இங்கு ? யாருக்கு என்ன பிரச்சனை? என்று தலையும் புரியாமல் காலும் புரியாமல் இடையில் தவித்து நின்றாள் வைஷ்ணவி.
'இங்கிருந்து எங்காவது சென்று விட வேண்டும்' என்ற எண்ணம் யசோதாவின் மனதை அழுத்தினாலும் செல்லும் வலிமையை இழந்திருந்தாள் யசோதா.
என்ன தான் கோவம் இருந்தாலும் தன்னை பெற்றவளாக போய் விட்டாரே என்ன செய்வது? என்று தனது வாழ்கையையும், சந்தோஷத்தையுமே இழக்க துணிந்து விட்டாள்.
"அவர் தவறு செய்திருக்கட்டும், தவறானவராகவே இருக்கட்டும் இருந்தாலும் என்னால் அவரை உதறி தள்ள முடியவில்லை, காரணம் அவர் என் தாய்... இன்று அவர் மாறி இருந்தாலும் என்றோ ஒரு நாள் என்னை மார்பில் தாங்கி இருந்தவரை என்னால் தள்ளி விட்டு விலக முடியவில்லை என்னுடைய வலியையும், துக்கத்தையும் இன்னொரு பெண்ணிற்கு கொடுத்து விடாதே இறைவா, எல்லாரும் என்னை போல மனதோடு போராடிக்கொண்டு ஆயிரம் காரணம் சொல்லி தன்னை தானே ஏமாற்றிக் கொள்ளும் யசோதாவாக இருக்க மாட்டார்கள்" என்று தனது மனவலியை கண்ணீருடன் காகிதத்தில் நிறப்பியவள் அப்படியே கண் அயர்ந்தாள்.
சிறிது நேரத்தில் யசோதாவிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்துடன் அவளது அறைக்கதவை தட்டினார் ஜீவாவின் தந்தை. ஆரம்பத்தில் அவள் திறக்கவில்லை... உடனே 'வேண்டாம் சென்று விடலாம்' என்று அவர் நினைக்கும் போது அவளது அறைக்கதவு திறக்கப்பட்டது.
*****
ஆரியன் எழுந்த தகவல் கேள்விபட்டு மருத்துவரை அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான் கருணாகரண்.
வந்தவன் மிகுந்த சந்தோசத்துடன் ஆரியனை அணைத்துக் கொள்ளவும், சிறு புன்னகையுடன் அவனது முதுகில் தட்டிக் கொடுத்தான் ஆரியன்.
"எப்படி இருக்க? இப்போ உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே... வலி எதுவும் இருக்கா?" என்று சைகையில் கருணா கேட்கவும் , அதனை புரிந்து கொண்ட ஆரியன் "நல்லா இருக்கேன்" என்று சிறு தலையசைப்புடன் சொன்னான்.
"ஹாய் சார் ஐயம் டாக்டர் அவினாஷ்... நான் தான் உங்களை இவ்ளோ நாளா ட்ரீட் பண்ணிட்டு இருந்தேன்"
"ஓ அதனால தான் நான் நாலு வருஷமா எழுந்துக்கவே இல்லையா?" என்று கேட்டபடியே நாற்காலியில் சாய்ந்தமர்ந்தான் ஆரியன். மருத்துவரோ அவனை ஒரு மாதிரி பார்க்க... "இப்போ எதுக்கு வந்தீங்க மறுபடியும் என்னை ஆழ்ந்த தூக்கத்துக்கு அழைச்சிட்டு போக போறீங்களா? அதுக்கு எதுவும் மருந்து கொண்டு வந்து இருக்கீங்களா என்ன?" என்று நக்கல் பேசியவனை அமைதியாக இருக்கும்படி கட்டளையிடும் சக்தி அங்கு ஒருவருக்கும் இல்லை.
"லுக், எனக்கு இனி எந்த டாக்டரும் தேவை இல்லை... நீங்க கிளம்பலாம்"
கருணா எவ்வளவோ புரியவைக்க முயற்சி செய்தும் "எனக்கு டாக்டர் வேண்டாம்... நான் பார்த்துகிறேன்... அவருக்கு பணத்தை செட்டில் பண்ணிடு... இரண்டு நாளுக்கு அப்புறம் நான் ஆபிஸ் வரேன்... மத்தது எல்லாம் அங்க வச்சு பேசிக்கலாம்" என்று கட்டளையிட்டபடி அங்கிருந்து சென்ற ஆரியனை கண்ணெடுக்காமல் பார்த்தான் கருணா... அவனது பிடிவாதத்தை பற்றி நன்கு அறிந்த இவனும் மருத்துவரை அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டு, தங்களது அலுவலகம் நோக்கி சென்றான்.
இரண்டு நாட்கள் அப்படியே கழிந்தது ஆரியனின் உடலும் நன்றாகவே தேரியிருந்தது... அவனது செயலுக்கு அவனது தேகம் ஒத்துழைத்தது... தன்னுடைய உடல் நிலையை பற்றி தன்னை தவிர வேறு யாருக்கு நன்கு தெரிந்து விட போகிறது என்ற எண்ணம் அவனுக்கு எப்போதும் உண்டு... தனது வலியின் அளவை அடுத்தவனால எப்படி உணர்ந்து கொள்ள முடியும் என்று நினைப்பான்.
அவனை பொறுத்தவரை அவனது உடல் நலமடைந்து விட்டது...
அடுத்தநாள் எழுந்ததும் முதல் வேலையாக ஒருவரது எண்ணிற்கு அழைத்து பேசினான்... அந்த அழைப்பின் விளைவாக மீண்டும் இரண்டு நாட்கள் பலத்த யோசனையுடன் இருந்த ஆரியன் தன் அறையை விட்டு வெளியேவே வரவில்லை... நேரத்துக்கு நேரம் அவனுக்கு பிடித்த உணவுகள் மட்டும் அவனது அறையை தேடி வந்து பரிமாறப்படும்... மாணிக்கத்துக்கு மட்டுமே அவனது அறைக்குள் அனுமதி வழங்கப்பட்டது.
இரண்டு நாட்களுக்கு பிறகு பழைய தோரனையுடன் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த ஆரியனை கண்டு வேலையாட்கள் அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது...
"தம்பி சாப்பிடலையா?" என்று மாணிக்கவேல் வந்து கேட்க...
"அதுக்கு தான் வெளியே போறேன்" சட்டையை முழங்கை வரை மடக்கி விட்டுக் கொண்டே பதில் கூறினான்.
"ஹோட்டல் சாப்பாடு உங்களுக்கு ஒத்துகாதே தம்பி" அவர் தயங்க,
"அதை பத்தி உங்களுக்கு என்ன கவலை?"
"நான் கவலை பட கூடாதா தம்பி?"
"ம்ம்ம், தாராளமா? அப்புறம் உங்க பையன் எப்படி இருக்கான்?" என்று அவன், கேட்டதும் மாணிக்கவேலின் முகமே மாறி விட்டது.
"ஓ உங்களுக்கு பையன் இல்லல்ல ஒரே ஒரு பொண்ணு தானே, அதுவும் அவள் என் பொண்டாட்டி வேற! எப்படி மறந்தேன் இதை எல்லாம்... வர வர ரொம்ப ஞாபக மறதியா இருக்கு மாணிக்கம், நாளைக்கு வல்லாரை கீரை சூப் வச்சு கொடுங்க... அப்போவாது எல்லாம் மறக்காமல் இருக்குமான்னு பார்க்குறேன்..." என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறியிருந்தான். அவன் என்ன அர்த்தத்தில் இப்படி எல்லாம் கேட்டான் என்பதை மாணிக்கவேலால் புரிந்து கொள்ளவே முடியவில்லை, அவரது முகம் எல்லாம் வியர்த்து வடிந்தது.
****
ஆரியனின் இருசக்கர வாகனம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டு பகுதியில் பயணமானது, சுமார் இருபது கிலோ மீட்டர் தாண்டி மீண்டும் ஒரு குறுகலான காட்டு பகுதியில் வண்டியை திருப்பியவன், கச்சிதமாக வளைவுகளை எதிர்கொண்டு நிதானமாக ஓட்டி சென்றான்.
பாதி தூரத்தில் சிக்னல் தடைபட்டது... மீண்டும் அதே பாதையில் வண்டியை செலுத்தினான்... இடையில் ஆறு ஒன்று குறுக்கே பாய்ந்தது, வண்டியை நிறுத்தினான் அதற்கு மேல் அவ்வழியில் வாகனத்தில் பயணம் செய்ய முடியாது என்பதை நன்கு அறிந்தவன் உடனே இறங்கிக் கொண்டான்... நான்கு வருடத்துக்கு முன்பு இங்கு வந்தது அதன் பிறகு இப்போது தான் இங்கு வருகிறான். இந்த இடத்திலிருந்து இருசக்கர வாகனத்தின் உதவி இல்லாமல் தான் செல்ல வேண்டும்.
பசுமையான காட்டு பகுது, அவன் கால் வைத்த இடத்தில் தொட்டால் சுருங்கி செடிகள்! நுனி விரல் தீண்டியே மயக்கியது.
அருகில் இருந்த ஒரு மர கிளையின் குச்சியை உடைத்துக் கொண்டவன், அதன் உதவியுடன் அந்த ஆற்றை கடந்தான். சரியான பயிற்சி இல்லாமல் அந்த ஆற்றை கடக்க இயலாது... அவனுக்கு பயிற்சி இருந்தது, இருந்தும் சில தடுமாற்றத்துடனும் காயத்துடனும் தான் அக்கரையை வந்தடைந்தான்.
அதன் பிறகு ஒரு சிறு மலையை தாண்ட வேண்டும், குச்சியின் உதவியுடன் அதனையும் கடந்தான். அதன் உச்சியில் நின்றவாறு அவன் எட்டி பார்க்க... அடிவாரத்தில் அழகான ஒரு இல்லம்... அதனை கண்டதும் அவனது முகம் மலர்ந்தது. நூறு அடிக்கு ஒரு வீடு என இன்னும் சில வீடுகள் அங்கு இருந்தன... மலை கிராமம்.
எட்டு வைத்து அந்த வீட்டை அடைந்தவன், கதவினை தட்டவும் அருவாளுடன் ஒரு காரிகை அவனை வரவேற்றாள்...
அவள் மலர்கனையாள் கருமை நிற தேவதை... வீர மங்கை...
அருவாளுடன் அவளை கண்டதும், ஆரியன் சிரித்து விட்டான்... நான்கு வருடத்திற்கு பிறகு அவனை இங்கு காண்கிறாள், அதே புன்னகை அவளால் நம்ப முடியவில்லை! கண்கள் இரண்டும் கலங்கி விட்டது?
"நீங்களா?"
"நானே தான் என்னை கொல்ல போறியா?" என்று அரிவாளை குறிப்பிட்டு அவன் கேட்டதும், சிரித்துக் கொண்டே அதனை கிழே போட்டாள்.
"உங்களை ரொம்ப தேடினேன், ஆனால் நீங்க தான் எந்த சூழ்நிலையிலும் உங்களை தேடி வர கூடாதுன்னு சொல்லி இருக்கீங்கல்ல அதான் நான் அந்த ஊருக்குள்ள வரவே இல்லை..." என்று வருத்தத்துடன் சொன்ன மலர்கனையாளின் கன்னத்தை தட்டி விட்டவன், அங்கிருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
"அந்த ஆளு இருக்கானா?"
"அவனை பார்க்க தான் வந்தீங்களா?" பெண்ணவளுக்கு முகம் சுருங்கி விட்டது.
"அதுக்காக மட்டும் இல்லை, ஆனால் அதுவும் ஒரு காரணம்" என்று கூறி சிரித்தவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"பார்த்தது போதும், பசிக்குது சாப்பிட ஏதாவது இருக்கா?"
"இருக்கே கிழங்கு, சோறு எல்லாம் இருக்கு" என்றவள் அப்போது தான் அவனது கை, கால்களில் உள்ள காயத்தை கவனித்தாள்.
"என்ன ஆச்சு எப்படி இவ்ளோ காயம் பட்டுச்சு?" என்று கேட்டவள் உடனே உள்ளே சென்று மஞ்சளை அரைத்துக் கொண்டு வந்து அவனுக்கு பூசி விட்டாள்.
பதட்டத்தோடு தன் காயத்துக்கு மருந்திட்டு கொண்டிருக்கும் பேதை பெண்ணின் தலையை மெதுவாக வருடி கொடுத்தான். அவன் மீது உண்மையான அன்பு வைத்திருக்கும் ஒரு சிலரில் இவளும் ஒருவள்.
சாப்பிட்டு முடித்தவன், அந்த வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்றான்... அங்கு நாற்காலியில் கை, கால் முடமாகிய ஒருவர் வாயெல்லாம் எச்சில் வடித்துக் கொண்டு, உடலில் சிறு அசைவும் இல்லாமல் இருந்தார். ஆனால் முகத்தில் அசைவு இருந்தது! ஆரியனை கண்டதும் அவரது முகம் அதிர்ச்சியை வெளிப்படுத்தியது அதனை கண்டு இதழ் வளைத்து சிரித்தான், "நான் இல்லாத இந்த நாலு வருஷத்தில நீ செத்து போயிருப்பியோன்னு பயந்துட்டே வந்தேன்... ஆனால் இப்போ தான் எனக்கு சந்தோஷமா இருக்கு, நீ உயிரோட இருக்க இது போதும் எனக்கு..." என்றவனை கண்டு மிரண்டு முழித்தார்.
"ஏன் பயப்படுறீங்க அங்கிள் எவ்ளோ நாளுக்கு அப்புறம் என்னை பார்க்குறீங்க? இது உங்களுக்கு சந்தோஷமா இல்லையா? என்ன அங்கிள் நீங்க போங்க அங்கிள்" என்று பொய்யான வருத்தத்துடன் சொன்னவன் அவரது காதருகே குனிந்து "நான் என்ன பண்ணாலும் அது உங்க நல்லதுக்காகவா தான் அங்கிள் இருக்கும். அதனால் அமைதியா இருக்கணும், எங்க ஆஆ சொல்லுங்க.. தூங்குங்க,தூங்குங்க எப்படி?" என்றவன் அந்த நபரின் தாடையை வலிக்க பற்றி "இப்படி" என்று கூறி ஒரு மருந்தினை அவரது வாயில் ஊற்றினான்.