அத்தியாயம் 14
“ப்பாஆஆஆஸ்… யோவ் சிங்கரு… மொடா குடிகாரா எழுந்திரியா” என்று வித விதமாக அவனை அழைத்து பார்த்தாள்,
உசுப்பி பார்த்தாள், ஏன் அடித்து கூட பார்த்தாள்.
ஆனால் ஆள் அசைவிலாமல் கிடக்க, இங்கே கதி கலங்கி போனாள் பெண்ணவள்.
இதற்கு நடுவே தூரத்தில் வந்து கொண்டிருந்த கொரிலா கூட்டமோ காரை நெருங்கி இருந்தது.
“என்ன டா இன்னைக்கு ஒரு பீஸ்ஸையும் காணோம். அந்த சரோசாக்கு போனை போட்டு வர சொல்லுடா” என்று ஒருவன் சொல்ல,
இன்னொருவனோ, “அஞ்சி பேர் இருக்கிறது தெரிஞ்சா வர மாட்டா” என்றான்.
“நீ மட்டும் இருக்கதா சொல்லி வர வை. அப்புறம் பாத்துக்கலாம்” என்று அவர்கள் சிறிது தொலைவில் நின்று பேசியது, இருளின் அமைதியில் விஷ்ணுவுக்கும் கேட்டிட,
ஏற்கனவே பயத்தில் அரண்டு இருந்தவளுக்கு நெஞ்சு குழியில் நீர்வற்றி போனது.
எச்சில் விழுங்கி கொண்டே, காருக்குள் பதுங்கியபடி அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“த்தோ பாருடா. ஒரு கார் நிற்குது. எவனாவது ஐட்டம் எதுனா இழுத்துனு வந்துருந்தா நாமளும் ரேட் பேசுவோம்” என்று சொல்லிக் கொண்டே காரை நோக்கி அந்த கூட்டம் வர,
அவ்வளவு தான் இதயம் தனியே கழண்டு ஓடிய உணர்வு தான் விஷ்ணுவுக்கு.
வேகமாக கார் கண்ணாடிகளை மூடிட முயன்றாள்.
கார் செயல்பாட்டில் இல்லாது கண்ணாடியை எப்படி இயக்கிட முடியும்?
ச்ச என்று அதனோடு போராடி சோர்ந்து போனவள்,
வெளியே நோட்டம் விட, அந்த கூட்டமோ காரை நெருங்கி இருந்தது.
முன்னிருக்கையில் இருந்து பின்னிருக்கைக்கு தாவி வந்தவள், சீட்டுக்கு அடியில் அந்த குறுகிய இடத்தில் உடலை குறுக்கி ஒளிந்து கொண்டாள்.
பயத்தில் உடல் முழுவதும் வியர்த்து, உடல் நடுங்க, மூச்சை உள்ளே இழுத்து பிடித்து கொண்டே, கண்களை இறுக மூடி கொண்டிருந்தாள்.
ஒருவன் காருக்குள் டார்ச் லைட் அடித்து பார்க்க,
சரண் உருவம் தாண்டி எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை. அவனும் கவுந்து கிடக்க, அவன் முகமும் தெரியவில்லை.
“எவனோ குடிகாரன் போல” என்று கூட்டத்தில் ஒருவன் சொல்ல,
“அவன் குடிகாரன், சார்வால் குலத்தை வாழ வைக்க வந்த தெய்வமோ, வாடா” என்று அவர்களுக்குள்ளே கலாய்த்து கொண்டவர்கள்,
“காருக்குள்ள எதுனா தேறுமா?” என்று காரை திறக்க முயல, கெட்டதிலும் நல்லது என்றால், சரண் சாவியை தூக்கி போடும் முன் காரை லாக் செய்தது தான். வெளியே நின்று தடவி பார்த்தவர்கள், இறுதியில் காரிலிருந்த கார் ஸ்ப்ரேயை தான் பிடுங்கி எடுத்து சென்றார்கள்.
அவர்கள் சென்ற பிறகும் மூச்சை பிடித்து கொண்டு கிடந்தவள் சில நிமிடங்கள் கழித்தே இயல்புக்கு திரும்பினாள்.
மறைந்து இருந்த இடத்தில் இருந்து மெதுவாக வெளியே வர,
பட படவென அடித்து கொண்ட இதய துடிப்பு அவள் பயத்தை பறைசாற்றியது.
கண்களை இறுக மூடிக் கொண்டு எச்சில் விழுங்கி கொண்டவள், தொண்டை குழி ஏறி, இறங்க, கண்களில் இருந்து அவளை அறியாமலே கண்ணீர் வழிந்தது.
இதற்கு முன்பு அவள் எப்போது அழுதாள்? என்று நினைவிலேயே இல்லை.
தைரியமான பெண் தான். என்ன இருந்தாலும் அவளும் பெண் தானே. இக்கட்டான சூழ்நிலையில் அந்த தைரியம் உடன் வரவில்லை போலும். பயம் தான் ஆழியென சூழ்ந்து கொண்டது.
கண்ணீர் கடலில் மூழ்கி கிடந்தவள் மேல், சட்டென்று விழுந்த கரத்தில் பதறி அலறியே விட்டாள்.
அதிர்ந்து கண்களை திறந்து பார்க்க,
சீட்டில் கிடந்தவன் கை தான் அது. இயலாமையுடனான கோபத்தில் ஆதங்கமாக அவன் கையை தூக்கி போட்டிட, மீண்டும் அவள் கழுத்தில் தான் வந்து விழுந்தது.
வாய் விட்டே அழுதவள் இப்போதைய கோபமெல்லாம் சரண் மீது தான்.
அவன் மட்டும் சாவியை தூக்கி போடாமல் இருந்திருந்தால் எப்போதோ இங்கிருந்து சென்றிருப்பாலே.
அவனும் இப்படியெல்லாம் ஆகும் என்று நினைத்திருக்க மாட்டேனே. பெண் என்று அவளை நினைத்திருந்தால் இந்த நேரம் உடன் வைத்திருக்க மாட்டானே. யாரை குற்றம் சொல்ல? (எழுத்தர தான் வேற யார?)
நாள் முழுவதும் சிட்டாக பறந்து வேலை பார்ப்பவள், முதல் முறை சோர்ந்து போனாள்.
கண்ணீர் மட்டுமே அந்த இரவுக்கு அவளின் துணையாக மாறிட, எப்போது தூங்கினால் என்று அவளுக்கே தெரியாது.
காலையில் சூரியன் தன் பணிக்கு வந்துவிட்டதை உணர்த்திய நேரம், முகத்தில் பட்ட சுள்ளென்ற சூட்டில் தான் கண்களை திறந்தான் சரண்.
அவன் சீட்டுக்கு அடியில் விஷ்ணு கிடக்க,
பாதி மங்கிய விழி திரையில் அவள் உருவம் தான் முதலில் பதிந்தது.
விழிகளை முழுதாக திறந்து பார்த்தான். விழித்திரையை நிறைத்திருந்த முகம் இதய அறையையும் முழுதாக அடைத்து கொண்டதோ,
மெல்லிய புன்னகை சரண் இதழ்களில் தவழ,
மாயவள் மதிமுகத்தை தான் பார்த்து கொண்டிருந்தான்.
கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு பதுங்கி கிடந்தாள்.
விரல் நீட்டி, அவள் நெற்றியில் உறவாடிய கற்றை முடிகளை நுனி விரல் கொண்டு விலக்கி விட்டவன், விரலோ மெய் தீண்டாது அவள் மேனியில் ஊர்வலம் வர அவா கொண்டது.
அடர்ந்த புருவங்களை உரசி சென்ற நுனி விரலோ, நூலளவு இடைவெளியில் நாசி வழி ஊர்வலம் நடத்தி, சிவந்த அதரங்களை வருட வரம் கேட்டிட, எண்ண அலைகளோ, நேற்று இரவு இதழ் குவித்து ஊதிய காட்சியை நினைவில் கொண்டு, இரு விரலில் கீழ் அதரங்களை நோகாமல் நசுக்கி பிடித்து தன் அதரங்களுக்கு இணையாக்கிடும் கற்பனை விரிய,
தன் எண்ணம் போன திசையை கண்டு அதிர்ந்தவன், காருக்குள் இருக்கும் எண்ணம் இல்லாது, சட்டென்று எழ முயல,
காரின் மேற்பரப்பில் தலையை இடித்து கொண்டு மீண்டும் இருக்கையில் அமார்ந்தவன், காலுக்கு அடியில் கிடந்தவளையும் மிதித்து இருந்தான்.
அவன் கால் பட்டவுடன் ‘“அம்மா” என்று அலறிக் கொண்டே கண்களை விழித்தவள்,
நெளிந்து எழுந்து அமர,
“இங்க ஏன் தூங்கிட்டு இருக்க? சீட்லையே படுத்து இருக்கலாமே” என்று கேட்டதும் தான் தாமதம்,
இரவு முழுவதும் நெஞ்சை அழுத்திய பயத்தில் இப்போதும் அவள் விழிகள் நீரை சுரக்க ஆரம்பித்து விட்டது.
இரவு அவன் தூக்கி எறிந்த சாவியும் அவள் கால் ஓரத்தில் கிடக்க,
அவன் காலை தள்ளி விட்டு
அதை எடுத்து காரை ஆன் செய்தவள்,
இறங்கி வெளியே ஓடியே வந்து விட்டாள்.
அவள் செயல்களை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த சரண், அவள் வெளரிய முகம் கண்டு ஏதோ சரியில்லை என்பதை மட்டும் புரிந்து கொண்டவன்,
“என்னாச்சி” என்று கேட்டுக் கொண்டே அவனும் காரிலிருந்து இறங்கி அவள் அருகே வந்தான்.
எவ்வளவு தடுத்தும் கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.
இருகைகளால் முகத்தை மூடிக் சிறு பிள்ளை போல் அழும் அவன் சில்வண்டின் அழுகை அவன் இதயத்தையும் அசைத்தது.
“ஏய்… என்னாச்சி? ஏன் அழுவுற?’” என்று சரண் பதறி கேட்க,
விஷ்ணுவிடம் பதில் இல்லை.
மேலும் மேலும் அழுகை தான் கூடியது.
“டேய் சின்ன குழந்தை மாதிரி அழாதடா. என்னாச்சி சொல்லு?” என்று முகத்தை மூடியிருந்த கைகளை அவன் விலக்கி கேட்க,
“இனிமேல் இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் தனியா கூட்டிட்டு வராதீங்க. நேத்து ரொம்ப பயந்துட்டேன்” என்றவள் அழுகையை அவனால் உதாசீனப்படுத்த முடியவில்லை.
“என்னாச்சி?” பொறுமையான குரலில், பெருவிரல் கொண்டு கண்ணீரை துடைத்து விட்டடு, அவள் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி மீண்டும் கேட்டான்.
நேத்து நாலைஞ்சு பேர் வந்தாங்க, என்றதும்,
தீவிரமான முகத்துடன் உன்னை ஏதாவது அடிச்சாங்களா? என்று கேட்டவன் அவள் உடலை ஆராய,
இல்லை என்று தலையாட்டியவள்,
“நான் உங்களை எழுப்பி பாத்தேன். நீங்க எந்திக்கவே இல்லை. கார்ல இருந்த திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு போய்ட்டாங்க” என்று மட்டும் அழுது கொண்டே சொல்ல,
திங்ஸ் போனா போகுது உனக்கு எதுவும் ஆகலல. உன்னை அடிச்சான்களா என்று மீண்டும் இரு கைகளால் கன்னங்களை ஏந்தி அவள் சிவந்த விழிகளை பார்த்து கேட்டான்.
இல்லை என்று தலையாட்டியவள் நேற்றைய இரவின் தாக்கத்தில் மீண்டும் பெருங்குரல் எடுத்து அழ,
“சாரி டா” என்று சொல்லி கொண்டே, ஆறுதலாக அவளை அணைத்து இருந்தது சரண் கரங்கள் இரண்டும்.
இரவின் நினைவில் உடல் நடுங்கி நின்றிருந்தவளும், ரொம்ப பயந்துட்டேன் என்று அழுகையூடே சொல்லிக் கொண்டு அவன் முதுகில் விரல் பதித்து இருந்தாள்.
அவள் உடல் நடுக்கமும், இதயத்தின் அதிவேக துடிப்பும் அவன் தேகம் உணர,
சாரி டா இனிமேல் இப்படி நடக்காது என்று சொல்லிக் கொண்டே நெற்றியில் முத்தமிட்டவன் மீண்டும் அணைத்து கொள்ள,
அவள் இருந்த நிலையில் எதையும் உணரவில்லை.
ஆறுதலான இந்த அணைப்பு அவளுக்கும் தேவை படவே, கரங்களை நெருக்கி, அவன் மார்பில் முகம் புதைத்துக் இன்னமும் நெருங்கி கொண்டாள்.
இருவரும் அணைத்தபடி மெளனமாக சில நிமிடங்கள் கழிய,
விஷ்ணுவும் உடல் நடுக்கம் குறைந்து இயல்புக்கு திரும்பியவளுக்கு அப்போது தான் சரணை அணைத்து கொண்டு நிற்பது புரிய,
சட்டென்று அவனை தள்ளி விட்டு விலகி நின்றவள் விழிகளிலோ குற்றவுணர்வு தான்.
நான் எப்படி அவரை கட்டிப்பிடிக்கலாம் என்று தன்னை தானே திட்டிக் கொண்டவள் வேகமாக வந்து காரில் ஏறிட,
தலையை கோதி, ஆழ்ந்த மூச்சு ஒன்றை விட்டுக் கொண்டே சரணும் அவள் அருகே ஏறிக் கொள்ள,
இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
எப்போதும் வாய் ஓயாது பேசிக் கொண்டே வருபவள், இப்போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அமைதியாக காரை மட்டும் ஓட்டி வர, அவள் அமைதியும், மெளனமும் இவன் மனதை தான் பதை பதைக்க வைத்தது.
அதான் சாரி சொன்னேன்ல, ஏதாவது பேசுடா என்று வழி நெடுக சரண் மட்டுமே பேசிக் கொண்டிருக்க,
பசை வைத்து ஒட்டுயது போல் வாயை திறக்கவே இல்லை அவள்.
அவனை வீட்டில் விட்டு, இறங்கி நடந்து சென்றவள் கையில் கார் சாவியை தினித்தவன், "கார் எடுத்துட்டு போய்ட்டு கொண்டு வா" என்று சொல்ல,
அவன் மீதே சாவியை தூக்கி போட்டு சென்றவள் கோபத்தை உணர முடிந்த அவனால், அதை சமாளிக்கும் வழியை தான் அறிய முடியாமல் போனது.
ஒரு சின்ன விஷயத்துக்கு இவ்வளவு ரியாக்ட் பண்ற, அதான் சாரி கேட்டேன் ல என்று கேட்டவன்,
இப்போ மட்டும் நீ வந்து சாவியை எடுத்துட்டு போகல, திரும்பி வரவே கூடாது என்று கோபத்தில் கத்தியவ்ன் குரல் காதில் விழுந்தாலும், அவனும் வேண்டாம் அவன் வேலையும் வேண்டாம் என்று நிற்காமல் சென்று விட்டாள்.
அவள் உருவம் மறையும் வரை செல்லும் அவள் முதுகை வெறித்து பார்த்த சரணோ,
திமிர் பிடிச்சவன் என்று திட்டிக் கொண்டே, கீழே விழுந்து கிடந்த சாவியை எடுத்து கொண்டு உள்ளே செல்ல,
அங்கே அவன் குடும்பம் மொத்தமும் அவனுக்காக தான் காத்திருந்தது