அத்தியாயம் : 19
“விஷு… பேட்லி ஐ மிஸ் யூ” என்று சொல்லிக் கொண்டே நட்சத்திரா மீண்டும் விஷ்ணுவின் கன்னத்தில் முத்தம் கொடுக்க,
அவள் அடியில் கிடந்தவளுக்கு கதிகலங்கி போனது. தலையை தூக்கி எட்டி சரணை தான் பார்த்தாள்.
ஆள் அனலாக கொதித்துக் கொண்டிருப்பது அவன் முகத்திலேயே தெரிந்தது.
‘அய்யோ! சும்மாவே அந்த ஆளு கார் வச்சி ஏத்த நினைச்சான். இவ என் உயிரை எடுக்காம விட மாட்டா போலவே!’ என்று கதறிய மனதை தட்டி சமாதானம் செய்தப்படி,
“முதல்ல மேல இருந்து எந்திரி, வாட்டர் பெட்டாட்டம் சொகுசா கிடக்க, மூச்சு முட்டுது” என்று அவளை தள்ளி விட்டுக் கொண்டே விஷ்ணு எழுந்து நின்றாள்.
பார்வையெல்லாம் அல்லளுடன் சரண் மேல் தான் இருந்தது.
அந்த பயம் தான் அருகே நின்றிருந்த புள்ளப்பூச்சி மீது கோபமாக திரும்பியது,“அறிவில்ல இப்படி தான் மேல வந்து விழுவியா?” என்று நட்சத்திராவை கடிந்து கொள்ள,
அவளோ, “ஏன் திட்டுற? பார்த்து ரொம்ப நாள் ஆச்சுல அதான் ஒரு எமோஷன்ல கட்டிப்பிடிச்சுட்டேன்” என்று பாவமாக முகத்தை வைத்து சொல்லிக் கொண்டே விஷ்ணு உடையையும், குனிந்து தன் உடையையும் பார்த்தாள்.
நாய்களோடு கொஞ்சி குலாவி குளிப்பாட்டி கொண்டிருந்தவள் உடை எப்படி இருக்கும்?
“ச்சைக்… அழுக்கு பண்ணிட்ட” என்று நட்சத்திரா முகம் சுழிக்க,
“யாரு? நானு?” என்று தான் கேட்டாள் விஷ்ணு.
“ஆமா. பாரு நல்ல ட்ரஸ் நாசம் ஆகிடிச்சி” என்று புலம்பிக் கொண்டே,
“வாஷ் ரூம் எங்க இருக்கு?” என்று அவள் பார்வையை சுழல விட்டு பின்னால் நின்றிருந்த அகிலனிடம் கேட்க,
அவனும் அனிச்சையாக வீட்டை நோக்கி கையை காட்டி இருந்தான்.
“நான் போய் வாஷ் பண்ணிட்டு வரேன். எங்கேயும் ஓடிடாத உங்கிட்ட நிறைய பேசணும்” என்று சொல்லி கொண்டே வீட்டை நோக்கி சென்றவளை,
‘அப்படியே போய்டு திரும்பி வந்துடாத’ என்று தான் மனதில் திட்டிக் கொண்டாள் விஷ்ணு துர்கா.
நட்சத்திரா சென்றதும் தன்னை நோக்கி அடியெடுத்து வைத்து வரும் சரணை அல்லலுடன் பார்த்தவள்,
“அம்மா மேல சத்தியமா நானும் அவளும் வெறும் ப்ரெண்ட் மட்டும் தான் பாஸ்” என்று பகிரங்கமாக சொல்லிக் கொண்டே அப்ருவராக மாறி விட்டாள்.
அவளை நெருங்கியவனோ,
அதை விடுத்து “வேலைக்கு ஏன் வரல? சேரும் போதே நான் சொல்லாம வேலையை விட்டு நிற்க கூடாதுனு அகிரீமென்ட் போட்டு தானே சேர்த்தேன்” என்று மிரட்டலாக கேட்க,
“எல்லாம் உங்க நல்லதுக்காக தான் பாஸ். என்னால தானே நீங்க கல்யாணம் வேணாம் சொல்லியிருக்கீங்க. பாட்டி வேற ரொம்ப வருத்தபட்டாங்க. அதான் எதுக்கு வம்புனு நின்னுட்டேன். சத்தியமா எனக்கும் அந்த நட்டுவுக்கும் நடுவுல நீங்க நினைக்கிற போல எதுவும் இல்ல. நம்புங்க” என்றவளை நம்பிக்கை இல்லா பார்வை பார்த்தவன்,
“அப்போ ஏன் நான் போன் பண்ணா எடுக்கல?” என்று அடுத்த கேள்வி கேட்க,
“கடன்காரன் போன் போட்டா யாராவது எடுப்பாங்கலா?” என்று தான் திருப்பி கேட்டிருந்தாள் விஷ்ணு.
“எத! நான் உனக்கு கடன்காரனா டா?” என்று சட்டையை பிடிக்காத குறையாக சீறிக் கொண்டே அவளை நெருங்கி நின்று சரண் கேட்டிட,
“பின்ன யாராம்? அன்னைக்கு ஓட்டல்ல சாப்டதுக்கு காசு திருப்பி கேட்டா நான் எங்க போறது?” என்றவளை ஏக கடுப்பில் பார்த்தான் சரண்.
“என்னை பத்தி இப்படி தான் நினைச்சிட்டு இருக்கியா? நான் உன்னை அப்படியா பார்த்துக்கிறேன் சொல்லு?” என்று கடுப்பு பாதி காதல் மீதி கலந்த குரலில் அவன் கேட்க,
“வேற எப்படி பார்க்கிறீங்க?” என்று தான் கேட்டாள் விஷ்ணு.
அவன் எதுவும் பேசாது இரு நொடிகள் அவளை ஆழப் பார்வை பார்க்க,
அவளும் அவன் பதில் சொல்வான் என்று அவனையே குறு குறுவென பார்த்திருந்தாள்.
அவன் கண்களில் என் காதல் உனக்கு புரியவில்லையா என்ற தவிப்பு இருக்க, அவளோ இப்போ இவரு காசு கேட்டா எப்படி சமாளிக்கிறது என்று தான் எண்ணிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு அந்த கவலையை கொடுக்காது, “ஓகே லீவ் இட்” என்று சொல்லி அந்த பேச்சுக்கு அவனே முற்றுப் புள்ளி வைத்தவன்,
“சரி திரும்ப வேலைக்கு வா” என்று அழைத்தான்.
“அய்யோ வோணவே வோணாம்” என்று பதறியது பச்சக்கிளி.
“ஏன்?” என்று சரண் வார்த்தைகள் அவசரமாக தடித்து வர,
“சரிப்பட்டு வராது பாஸ்” என்றவள் கண்களில் பயத்தை பார்த்தவன்,
நான் அவளை நம்புறேனோ இல்லையோ, உன்னை முழுசா நம்புறேன் என்றான்.
“இல்ல பாஸ் நமக்குள்ள ஒத்துவராது” என்று உறுதியாக மறுத்தவளை குண்டு கட்டாக தூக்கி கொண்டு போக ஆசை தான். ஆனால் இப்போதைய சூழ்நிலைக்கு அது முடியாதே.
“நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லிட்டேன்” என்றான் அவளை தன்னோடு அழைத்து செல்ல வேண்டியே.
“மெய்யாலுமா” என்று விஷ்ணு அவனை சந்தேகமாக பார்த்து கேட்க,
“நம்பிக்கை இல்லைனா வீட்டுக்கு வந்து பாரு. எல்லா வேலையும் தடபுடலாக நடந்துட்டு இருக்கு” என்றான் சரண் கடுப்பை மறைத்த குரலில்.
“அப்போ நிஜமாவே கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?” என்று அவள் ஏக சந்தோசத்தில் கேட்க,
“நான் கல்யாணம் பண்றதுல உனக்கு என்ன அவ்வளவு சந்தோசம்?” என்று தான் கேட்டான் சரண் வேதனையான குரலில்.
“இல்லையா பின்ன, ஒரே நேரத்துல ரெண்டு பிரச்சனையை தலை முழுக போறேன்ல்ல” என்று அவள் சட்டென்று வாய் உளறிவிட,
“என்ன?” என்று தான் அதிர்ந்து கேட்டான் சரண்.
“ஹி… ஹி… நீங்களும், நட்சுவும் நிறைய பிள்ளை பெத்து சந்தோசமா இருக்கணும்னு சொன்னேன் பாஸ்” என்று சமாளித்தாள்.
‘அதுக்கு தான் இனி வாய்ப்பே இல்லைனு ஆகிப்போச்சே’ என்று மெதுவாக அவன் புலம்பியது அவளுக்கு கேட்கவே இல்லை.
அதை விடுத்து, “சரி இப்போவாது வேலைக்கு வருவ தானே” என்று சரண் கேட்க,
“ஹாங்… ஹாங்… சோரா கல்யாண வேலை கூட செய்திடலாம் பாஸ்” என்று துள்ளலாக சொல்லிக் கொண்டே காரை நோக்கி நடந்தவளை பார்த்து சரணுக்கு இதயமே வலித்தது.
அவனே நொந்து நூடுல்ஸ் ஆகி, உருகி, மருகி அவளை தேடி ஓடி வந்து நின்றால், ‘நீ கல்யாணம் பண்ணி ஒளிஞ்சா நிம்மதி’ என்ற ரேஞ்சில் பேசிக் கொண்டிருப்பவளை பார்த்து பார்த்து நெஞ்சு வெதும்பியது.
“ஏய் நில்லு” என்று அவள் கையை பிடித்து தடுத்தவன், “தலையெல்லாம் ஈரமா இருக்கு பாரு, இப்படியே வா வர போற? கொஞ்சம் கூட உன்னை கவனிக்கிறதே இல்ல நீ” என்று சொல்லிக் கொண்டே,
அங்கே அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த அகிலன் கையில் இருந்து டவலை உருவி எடுத்தவன், “தேங்க்ஸ் ப்ரோ” என்று சொல்லிக் கொண்டே விஷ்ணுவின் தலையை துவட்டி விட ஆரம்பித்திருந்தான்.
அவன் செயல் அவளுக்குமே சங்கோஜமாக இருக்க,
“நானே துடைச்சிக்கிறேன் பாஸ்” என்று அவனிடம் இருந்து நழுவியபடி அவள் சொல்ல,
“பேசாம நில்லு” என்று அவளை பிடித்து நேராக நிறுத்தியவன், அவள் விழிகளை பார்த்துக் கொண்டே தலையை துவட்ட,
‘என்னாச்சி இந்த மனுஷனுக்கு? பேய் ஏதும் புடிச்சிடுச்சா? ஐயோ பயமா இருக்கே’ என்று அவன் அக்கறையில் அடிவயிற்றில் பிரளயமே வெடித்தது விஷ்ணுவுக்கு.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அகிலனுக்கும் சரணின் இந்த அக்கறையான கவனிப்பும், சற்று முன் விஷ்ணு அவனை பற்றி சொன்னதும் முன்னுக்கு பின் முரணாக தான் இருந்தது.
‘ஏதோ தப்பா இருக்கே!’ என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே,
“விஷுஷுஊஊஊ… என்னை காப்பாத்து” என்ற நட்சத்திராவின் அலறல் குரலில் மூவரும் அவ்விடம் விரைந்தார்கள்.
நான்கைந்து நாய்கள் ஒரு மரத்தை சுற்றி நின்று குரைத்து கொண்டிருக்க, நட்சத்திராவோ பயந்து போய் மரத்தின் மேல் கிளையில் நடுங்கிய படி கிளையை கட்டிப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவள் அமர்ந்திருந்த தொனியை பார்த்து சத்தமாக சிரித்த விஷ்ணுவோ, “நட்டே அங்க இன்னா பண்ற? கீழ வா” என்று அழைக்க,
“முதல்ல இதுங்களை துரத்தி விடு” என்றாள் அவள்.
அவள் நிலை கண்டு பரிதாபம் கொண்ட அகிலனும் அங்கிருந்த நாய்களை துரத்தி விட்டு, “இப்போ கீழ வாங்க” என்று அழைத்தான்.
பயத்தில் ஒரு வேகத்தில் மரத்தின் மீது ஏறி விட்டாள். இப்போது அதன் உயரம் கண்டு அரண்ட மனமோ கீழே இறங்க முரண்டு பிடித்தது.
“இல்ல எனக்கு பயமா இருக்கு” என்று சொல்லிக் கொண்டே இன்னும் இறுக்கமாக அந்த கிளையை கட்டிக் கொண்டிருந்தவளை பார்த்து வெடித்து சிரித்த விஷ்ணுவோ,
“அதுக்குனு அங்கேயே இருக்க போறியா? என் கையை பிடிச்சிட்டு கீழ இறங்கி வா” என்று அவளை நோக்கி கையை நீட்டியவள் கையை வேகமாக மடக்கி விட்டபடி இருவருக்கும் நடுவே வந்து நின்றான் சரண்.
விஷ்ணு மீது நம்பிக்கை இருக்கிறது என்று சொன்ன நம்பிக்கை நம்பியோ, அவளை யாரும் தீண்டுவதை கூட பார்க்க முடியாது குறுக்கே வந்து விழுந்து தடுத்தான்.
“நட்சு… என் கையை பிடிச்சிட்டு மெதுவா இறங்கி வா” என்று அவன் கை கொடுக்க,
“ம்ஹிம் எனக்கு பயமா இருக்கு மாமா” என்று அவள் உதட்டை பிதுக்கி அழுவதற்கே தயாராகி விட்டாள்.
அவள் மேல் ஈர்ப்பு இல்லை, காதல் இல்லை தான். ஆனால் அளவுகடந்த பாசம் இருக்கிறதே. அவள் முகம் சுணங்கினாள் கூட இவன் இதயம் வலிக்குமே.
“ஒன்னுமில்ல டா, பயப்படாத இட்ஸ் ஈஸி, முதல்ல அந்த கிளையில இருந்து எழுந்து கீழ இருக்கிற கிளைல கால வை, அப்புறம் என் கையை பிடிச்சுக்கோ, நான் உன்னை கீழ விழாம பிடிச்சிப்பேன். என்னை நம்பு” என்று அவன் சிறு பிள்ளைக்கு சொல்வது போல் சொல்ல,
அவன் மீது நம்பிக்கை இருக்கிறது தான். ஆனால் சிலநேரங்களில் மனிதனின் பயம் நம்பிக்கையை புறம் தள்ளி விடுகிறதே.
“இல்ல…” என்று அழவே ஆரம்பித்து விட்டாள்.
“ஏய் நட்டே இன்னாத்துக்கு சின்ன புள்ளையாட்டம் ஒப்பாரி வச்சினு இருக்க, நீயா தான மேல ஏறின கீழ இறங்க தெரியாத உனக்கு?” என்று விஷ்ணு அவளை கடிந்து கொள்ள,
“அவங்களே பயந்து போய் இருக்காங்க நீ வேற ஏன் திட்டுற?” என்று நட்சத்திரவுக்காக வக்காலத்து வாங்கியது என்னவோ அகிலன் தான்.
“இருங்க நான் ஏணி எடுத்துட்டு வரேன்” என்றவன் ஏணி எடுத்து வந்து மரத்தில் சாய்த்து நிறுத்தி, “இப்போ வாங்க” என்று அழைக்க,
அதற்கும் உடன்பட்டாளில்லை அவள்.
“இல்லை. ஏணியோட சரிஞ்சி கீழ விழுந்துடுவேன்” என்று அவள் அழ,
“இருங்க நான் மேல வரேன்” என்று சொல்லிக் கொண்டே ஏணியில் ஏற இருந்த அகிலன் நெஞ்சில் கையை வைத்து தடுத்த சரணோ,
“நானே போய் கூட்டிட்டு வரேன்” என்று சொல்லி அவனே மேலே ஏறி நட்சத்திரா இடையை பற்றி தூக்கி கொண்டே கீழே இறங்கினான்.
சரணுக்கு அவள் வேண்டாம் தான். அதற்காக எவனிடமோ அவளை விட்டு விட்டு கை கட்டி வேடிக்கை பார்க்க அவன் மனம் அனுமதிக்காதே.
சரண், நட்சத்திராவை கல்யாணம் செய்து கொண்டாலும், இல்லை என்றாலும் அவர்கள் உறவு எப்போதும் மாறா ஒன்றே. அவள் மீது அவன் காட்டும் அன்பும், அக்கறையும் எப்போதும் மாறாது. எப்போதும் அவள் அவன் பொறுப்பானவள் தான்.
அகிலன் கூட சரண் அவனை தள்ளி நிறுத்தியதை எண்ணி அலட்டி கொள்ளவில்லை. மனிதாபிமானத்துடன் உதவ முயன்றான். அவன் உதவி அவ்விடம் தேவையில்லை என்றதும் மரியாதையாக ஒதுங்கி கொண்டான்.
நட்சத்திராவோடு கீழே இறங்கிய சரண், “ஆர் யூ ஓகே” என்று கேட்க,
அவள் இருந்த பயத்தில் அவனுக்கு பதில் கூட சொல்லாது, தாயிடம் ஆறுதல் தேடும் சேயாக அவனை அணைத்து கொள்ள, அந்த நிமிடம் அவனுக்கு அந்த அணைப்பு தவறாக தோன்றவில்லை. சரண் கரங்களும் மேலெழும்பி, “ஒண்ணுமில்ல டா. நீ நல்ல இருக்க” என்று சொல்லி ஆதுரமாக அவள் தலையை வருடி தான் விட்டது.
அவர்கள் இருவரையும் மனநிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவோ,
“கப்புள்ஸ் நடுவில நாம எதுக்கு நந்தி மாதிரி நின்னுட்டு, நீ வா டாக்டரே நாம போவோம்” என்று செல்ல முயன்றவள் கையை பற்றி கொண்ட சரணோ,
“அப்படியெல்லாம் எதுவும் இல்ல” என்று அவளை முறைத்து கொண்டே சொன்னவன், ஒரு கையில் நட்சத்திராவையும், மறுகையில் விஷ்ணுவையும் பிடித்து கொண்டே அங்கிருந்து சென்றான்.
மூவரையும் கவனித்துக் கொண்டிருந்த அகிலனோ, சரணின் செயல்களை யோசனையாக பார்த்தபடியே அவர்கள் பின்னால் வந்தான்.
சிறிது நேரத்தில் இயல்புக்கு திரும்பி இருந்த நட்சத்திரா, “விஷு இந்த இடம் சூப்பரா இருக்கு. நாம ரீல்ஸ் ஷூட் பண்ண நிறைய இடம் கூட பார்த்து வச்சிருக்கேன். இன்னைக்கு ஒரு நாலைஞ்சி வீடியோ ஷூட் பண்றோம்” என்று சொல்லிக் கொண்டே வந்தவளை சலிப்பாக பார்த்தவள்,
“ஏற்கனவே எடுத்த வீடியோக்கே நீ காசு தரல” என்று அவள் நினைவு படுத்த,
“அதுக்கு தான் வியூஸ்சே போகலையே அப்புறம் எங்க இருந்து காசு வரும்?”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ கேட்டபடி செஞ்சி கொடுத்தேன். அத்தோட என் வேலை முடிஞ்சி போச்சி. பேசின படி காசு கொடு” என்று விஷ்ணு கறாராக கேட்க,
இருவருக்கும் நடுவே நடந்து வந்த சரணுக்கு இருவரின் பேச்சும் சலிப்பாக தான் இருந்தது.
“இது நியாயமே இல்ல. இன்னும் ஒரு நாலு வீடியோ பண்ணி கொடு இந்த முறை ஏமாத்தாம காசு கொடுக்கிறேன்” என்றவள் சரணை ஓரம் தள்ளி, நடுவே நுழைந்து விஷ்ணு கையை பிடிக்க போக,
ஆள் கவனமாக அலேக்காக அவளை தூக்கி தனக்கு மறுபுறம் விட்டிருந்தான்.
“டிஸ்டர்ப் பண்ணாத கொஞ்சம் நகரு மாமா” என்று சொல்லி கொண்டே அவள் மீண்டும் விஷ்ணு அருகே வர முயல,
“எதுவா இருந்தாலும் இந்த பக்கமே நின்னு பேசு” என்றவன் கறார் பேச்சில் ஆள் பொஸசிவ்னஸில் புகைவது தெரிந்த விஷ்ணுவுக்கு அந்த பொஸசிவ் நட்சத்திரா மீது இல்லை அவள் மீது தான் என்பது புரியாமல் போனது.
சரணின் தவிப்பை கண்டு பீறிட்டு வந்த சிரிப்பை அடக்க முயன்றபடி வந்துக் கொண்டிருந்தாள் விஷ்ணு.
பேசிக் கொண்டே வந்த நட்சத்திராவும் அப்போது தான் யோசனை வந்தவளாக,
“விஷு… உனக்காக ஒன்னு வாங்கிட்டு வந்தேன்” என்று சொல்லிக் கொண்டே காரை நோக்கி ஓடிட,
அவளை புருவம் சுருக்கி பார்த்த சரணும், அவள் நோக்கம் புரிந்து கொண்டு, “நானும் இப்போ வந்துடுறேன்” என்று சொல்லிக் கொண்டே அவளுக்கு முன்னாள் வேகமாக காரை நோக்கி சென்றிருந்தான்.
இருவரையும் வித்தியாசமாக பார்த்துக் கொண்டே நின்றிருந்த விஷ்ணு அருகே வந்து நின்ற அகிலன்,
“ரெண்டு பேரும் உன்மேல ரொம்ப பாசமா இருக்காங்க போல?” என்று கேட்டான்.
அவன் பக்கம் விழியை கூட திருப்பாது, சரணையும், நட்சத்திராவையுமே பார்த்துக் கொண்டிருந்தவள்,
“அது தான் எனக்கு பீதியாவுது டாக்டரே. இந்த நட்டு எப்பவும் இப்படி தான் நட்டு கழண்ட போல சுத்தும். ஆனா இந்த பாஸ் ஏன் இன்னைக்கு இப்படி நடந்துக்கிறார்னு புரியமாட்டேங்குதே” என்று அவள் யோசனையாக சொல்லிக் கொண்டே திரும்பி அகிலனை பார்க்க,
அவனோ கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே தான் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீ இன்னாத்துக்கு இப்போ சிரிக்கிற” என்று விஷ்ணு சீற,
“ஒருவேளை உன்னை லவ் பண்றாரோ என்னவோ?” என்றவன் வார்த்தையில் விழி பிதுங்கி வெடுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“வாய கழுவு டாக்டரே, உன்ன எவ்வளவு நல்லவன்னு ஊருக்குள்ள சொல்லி வச்சிருக்கேன். நீயே இப்படி புரளிய கெளப்பி விடுற? சந்தேகமா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாம். அதுங்க ரெண்டையும் பாரு, ஜோடினா அப்படி இருக்கணும். நட்டு கொஞ்சம் லூசா இருந்தாலும், ரொம்ப நல்ல பொண்ணு டாக்டரே. எவனாவது கிளியாட்டம் பொண்ணு பக்கத்துல இருக்கும் போது, கீரிப்பிள்ளையாட்டம் யாரையாவது பார்ப்பானா சொல்லு?” என்று தான் கேட்டாள்.
“உன்னை நீயே குறைச்சு மதிப்பிடுற. நீ பொண்ணுங்கிறதையே சில நேரம் மறந்துடுற, எனக்கு என்னமோ உன் பாஸ்க்கு கிளியை விட கீரிப்பிள்ளைய தான் பிடிச்சு இருக்குனு தோணுது” என்று சொல்ல,
“சைக்கிள் கேப்ல நீயே என்னை கீரிப்பிள்ள சொல்ற பார்த்தியா?” என்று அவள் அவனை குறை சொல்ல,
அவள் குற்றச்சாட்டு பார்வையில் அட்டகாசமாக சிரித்துக் கொண்டவன்,
“எனக்கும் இந்த கீரிப்பிள்ளைய பிடிக்குமே” என்று சொல்லி கொண்டே அவள் கன்னத்தை பிடித்து கிள்ள,
“ஹே என்ன பண்றீங்க?” மூக்கு வியர்த்து ஓடி வந்தான் சரண்.