அத்தியாயம் - 13
அவளை உள்ளே விட்டு கதவடைத்துவிட்டு வெளியே வந்தவன் இப்போது அனைவரையும் பார்த்து கத்த தொடங்கினான்.
"இப்போ உங்க எல்லாருக்கும் சந்தோஷம் தானே...அவ வரதுக்கு முன்னாடி வரை அவளை நினைச்சு அழுது புலம்ப வேண்டியது.ஆனா வந்தவளை வான்னு கூட கூப்பிட யாருக்கும் வாய் வரலை இல்ல...
அவ பேசுனதுல ஏதாவது தப்பு இருக்கா சொல்லுங்க?... சொன்னது எல்லாமே மறுக்க முடியாத உண்மை .இங்க எல்லாரும் மதுவை எப்படி பார்க்குறீங்களோ அதே மாதிரி தானே அவளை பார்த்திருக்கணும். ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கிறது போல தானே நீங்களும் நடந்துக்குறீங்க" என ஆதங்கமாக கேட்டவன்,
"சத்தியமா அவளுக்கே தெரியாது நான் அவ கழுத்தில் தாலி கட்டுவேண்ணு, அப்பறம் எப்படி எல்லாத்துக்கும் அவள் காரணமாக முடியும்.
உங்ககிட்ட இருந்து நிச்சயமா இதை எதிர்ப்பார்க்கலை..அதுவும் நீங்க இரண்டு பேரும் கூட எதுவுமே பேசலயே" என தன் தாத்தா பாட்டி இருவர் முன்னும் நிற்க…
அவர்களும் தாங்கள் செய்த தவறை உணர்ந்து பதில் சொல்ல முடியாமல் நின்றனர்.
தங்கள் மகளின் கண்ணீர் தான் அதுக்கு காரணம் என்று தெரிந்திருந்தாலும் இத்தனை நாளும் தங்களை எண்ணியே தவித்திருந்த பேத்திக்கு நியாயம் செய்யவில்லையே என்று மனம் வருந்தினார்கள்.
ஒருவேளை அவளுக்கு சாதகமாக யாராவது பேசியிருந்தால் இன்னும் இந்த பிரச்சனை பெரிதாக வெடித்திருக்கும் என்பது திண்ணம்.
"எங்களை என்ன ராஜா பண்ண சொல்ற,அதிர்ச்சியில் என்ன பேசுறதுன்னு தெரியலையே. பேசி பிரச்சனையை பெருசாக்குறதை விட அமைதியா இருந்தாலாவது உன் அத்தையின் கோபம் கொஞ்சம் மட்டுப்படும்னு நினைச்சோம்" என வயதான காலத்திலும் மகிழ்ச்சி என்பது இல்லாமல் துயரத்துடன் சொன்னவர்கள் சோர்ந்து அமர்ந்துவிட்டனர்.
அடுத்து தன் அத்தையை பார்த்து திரும்பியவன் "அது எப்படி அத்த நீங்க தூக்கி வளர்த்த பொண்ணை பார்த்து இப்படி சொல்ல முடிஞ்சது உங்களால் . அவ சின்ன பொண்ணு இப்போதான் ஸ்கூல் முடிச்சிருக்கா,நீங்க சொன்ன வார்த்தைக்கு முழு அர்த்தம் கூட அவளுக்கு புரிஞ்சிருக்காது. அவளை போய் மயக்குறா,சரியான கைக்காரி அப்படி இப்படின்னு பேசிட்டீங்களே….அப்படியே பண்ணாலும் யாரை பண்றா?..என்னை, அவ புருஷனை தானே கைக்குள்ள போட்டுக்க பார்க்குறா அதுல என்ன தப்பிருக்கு சொல்லுங்க..
உண்மையை சொல்லனும்னா அவ அந்த வேலையை செய்யவே தேவையில்லை. எதுவும் பண்ணாமலே நான் அவகிட்ட மயங்கிதான் இருக்கேன் போதுமா…. இதை சொல்ல நான் கொஞ்சமும் வெட்கப்படலை. அவ என்னை கைகுள்ள வெச்சுக்க வேண்டிய அவசியமே இல்லை, நானே அவள் கைக்குள்ள இருக்க தான் ஆசைப்படுறேன்" என்றவன்,அடுத்து யாரின் பேச்சையும் கண்டுகொள்ளாமல் அறைக்குள் நுழைந்தான்.
அவன் உள்ளே நுழைந்தவுடன் மீண்டும் அவன் சட்டையை பிடித்து "ஏண்டா இப்போ அடிச்ச" என அவன் அடித்த கன்னத்தை ஒரு கையிலும்,சட்டையை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டே கேட்க,
"அடிச்சத்தோடு விட்டுடேன்னு சந்தோஷ படு. வர ஆத்திரத்திற்கு" என பற்களை கடித்தான்.
ஆனால் வெகுநேரம் அவள்மேல் கோபத்தை பிடித்து வைக்க முடியாதவன்,அவள் முகத்தை கரங்களில் ஏந்தி "ஏண்டி அப்படி சொன்ன,உனக்காக நான் இல்லையா" என அவளையே பார்க்க...அவளும் அவனின் பார்வைக்கு சளைக்காமல் எதிர் பார்வை பார்த்தாள்.
"நீ எனக்காக இருக்கங்குற நம்பிக்கையை, நீ எனக்கு கொடுக்கலையே...அப்பறம் எப்படி உனக்காக காத்திருப்பேன் சொல்லு" என சரியாக கேட்டாள்.
பெண்ணவளின் முகம் கோபத்திலும் அழுகையிலும் சிவந்து இருக்க,உதடுகளோ உணர்ச்சியின் மிகுதியில் துடித்துக்கொண்டிருந்தது. குழல் கலைந்து அந்த நிலையிலும் பார்க்க அழகோவியம் போல் தான் அவன் கண்களுக்கு தெரிந்தாள் வர்ஷினி.
இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலக்க… அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல்,அவள் முகத்தை தன் மார்போடு அணைத்துக் கொண்டான். அவளும் அதற்கு மேல் முடியாமல் அவன் மார்பில் முகம் புதைத்து அழ தொடங்கிவிட்டாள்.
சற்றுநேரம் அவளின் மனஅழுத்தம் குறையும் வரை அழ அனுமதித்து மென்மையாக தலையையும் முதுகையும் வருடி,அவளின் கோபம் குறையும் மட்டும் இதம் தந்தவன் ,அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு "அது என்னடி வார்த்தைக்கு வார்த்தை டா போட்டு கூப்பிடுற...ஒழுங்கா அத்தான் சொல்லு" என்க,
அப்போது தான் அவன் மார்பில் சாய்ந்து இருப்பதை உணர்ந்தவள் சட்டென்று அவனில் இருந்து விலகினாள்.
"ஏய் இப்போ எதுக்கு தள்ளி போற" என அவளின் கரம்பிடிக்க அவளை நெருங்கினான் மதி.
"ச்சீ..போடா உன்னையெல்லாம் அத்தான்னு சொல்லமாட்டேன் போ" என முகம் திருப்ப…
"ஏய் என் முன்னாடி இப்படி முகத்தை திருப்புறது,உதட்டை சுழிக்கிறது இதெல்லாம் வச்சுக்கிட்டன்னு வை, அப்பறம் நான் என்னோட வேலையை காட்ட வேண்டியிருக்கும்" என கோபம் போல் சொன்னவன்,
"ஒன்னு அத்தான்னு கூப்பிடு இல்லனா சின்ன வயசில் கூப்பிடுவது போல் மதின்னு பேர் சொல்லி கூப்பிடு" கன்னம் கிள்ள,
"அதெல்லாம் முடியாது நான் வாடா போடா தான் சொல்லுவேன். எனக்கு நீ சொல்ற மாதிரி கூப்பிட பிடிக்கலை" என்றவள்….தன் கால்களை தரையில் ஊன்றி எக்கி அவன் உயரத்திற்கு வர முயன்றவளால் அவன் உயரத்தை எட்ட முடியவில்லை.
'பனமரம்…. பனமரம்..' என மனதில் நினைத்தவள் "ஓய் கொஞ்சம் கீழ குனி" என அவனை பார்த்து சொல்ல….
அவனோ "எதுக்குடி" என கிறக்கமாக குரலில் ஒருவேளை முத்தம் தான் தர போகிறாளோ என்ற ஓவர் கற்பனையில் தன்னை அவள் உயரத்திற்கு ஏற்ப குனிந்து நின்றான்.
அவனை நெருங்கியவள், மிக நெருக்கத்தில் நின்றுக்கொண்டு "கண்ணை மூடு" என்றாள்.
அவனும் 'என்ன பண்ண போறா இவ, பில்டப் எல்லாம் ஓவரா இருக்கே '...என ஒருவித எதிர்ப்பார்ப்பில் விழி மூடி நின்றான் தன்னவளின் விருப்பத்திற்கு இணங்கி.
அவளோ அவனையே குறுகுறுவென பார்த்தபடி தன் கையின் முதலில் கட்டை விரலை மடக்கி, அதன்பின் மற்ற விரலையும் மடித்துக்கொண்டு அவனை அடிக்க தயாராக, அவனோ முகத்தில் தோன்றிய புன்னகையுடன், ஒருவித மயக்க நிலையில் இருந்தான்.
"என்னையே அடிச்சிட்ட இல்ல உன்னை என்றவள்"அவன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைக்க,
அவளின் தீண்டலுக்காக காத்திருந்தவன்,அவளின் அடியில் உண்மையிலேயே வலியை உணர்ந்தான், "ஆ...அம்மா" என கதறலோடு விழியை திறக்க,அவளோ கைகளால் வாயை மூடிக்கொண்டு சிரித்துக்கொண்டு இருந்தாள்.
"ராட்சசி அடிச்சது இல்லாம சிரிக்க வேற செய்றியா" என தலையை தடவிக்கொண்டே அவளை பிடிக்க முயல...அவளோ அவன் கையில் சிக்காமல் மான் போல் துள்ளி குதித்து ஓடினாள்.
அவனும் நிறுத்தாமல் "நில்லுடி,நீ எங்க ஓடினாலும் இன்னைக்கு உன்னை விடுறதா இல்லை" என கட்டிலை சுற்றி அவளை துரத்திக்கொண்டு ஓடினான்.
வெகுநேரம் அவனிடம் சிக்காமல் ஆட்டம் காட்டியவள், மூச்சரைக்க வேகத்தை குறைக்க,அப்போது தான் அவளை பிடிக்க முடிந்தது மதியால்.
"ஒரு போலீஸ் காரனையே இவளோ நேரம் ஓடவிட்டுட்ட இல்ல, அதுக்கு தண்டனையா என அவளை நெருங்க… வர்ஷினியின் கயல்விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிய,
அவளை நெருங்கி நின்றவன்,எதுவும் செய்யாமல் "எல்லாத்துக்கும் கரெக்டா கணக்கு வச்சிருக்கேன்.எனக்கு ஒரு காலம் வராமலா போய்டும். அப்போ இருக்குடி உனக்கு" என்றவன் விலகி நிற்க அப்போது தான் அவளுக்கு மூச்சே வந்தது.
'பொறுக்கி பொறுக்கி' என வாய்க்குள் முணுமுணுக்க,
"எதுவா இருந்தாலும் சத்தமாவே சொல்லு...நீ என்ன சொன்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்க...அவளோ பிடிப்பட்ட நிலையில் அவன் முகம் பார்க்க தவிர்த்தாள்.
நாட்கள் செல்ல...அன்றைய நாளுக்கு பிறகு அனைவரும் அவள்மேல் தங்கள் பாசத்தை வெளிப்படையாக காட்ட தொடங்கியிருந்தனர். ஆனால் அவளால் தான் அவர்களுடன் இயல்பாக பேசி பழக முடியவில்லை. அவர்கள் வம்படியாக நிறுத்தி பேசினாலும் ஓரிரு வார்த்தையில் முடித்து கொள்வாள்.
முக்கியமாக சகுந்தலா அவளிடம் எந்த வம்பிற்கும் செல்வதில்லை. அன்றைய தினம் அவளின் வார்த்தை அந்தளவிற்கு இவரையும் தாக்கியிருந்தது.
வம்பு செய்வதில்லையே தவிர,பழையபடி கோபம் மட்டும் இன்னும் குறையவில்லை. அவள் வந்தாள் கண்டுகொள்ளாமல் இருப்பார்,முன்பு போல் எழுந்து செல்வதோ, திட்டுவதோ இல்லை.அவளை கடந்து செல்ல பழகி இருந்தார்.
இங்கு இப்படி இருக்க, அங்கு தர்ஷினியோ தன் அக்காவின் பிரிவில் மருகிக்கொண்டிருந்தாள்.
நடுவில் ஒருமுறை காய்ச்சல் கூட வந்துவிட்டது. ஆனால் சாந்தி தான் அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைப்பதற்குள் ஒரு வழியாகிவிட்டார்.
சண்முகசுந்தரம் இதற்கு முன்பாவது மனைவியின் கையில் சாப்பிட்டு கொண்டு இருந்தவர் இப்போது அதையும் தடுத்துவிட்டார். சாந்தியும் அவரிடம் பேச முயற்சிக்கவில்லை. அவருக்கா என்னைக்கு பேசணும்னு தோணுதோ அன்னைக்கு பேசிக்கொள்ளட்டும் என முதன்முறை தன் கோபத்தை அவரும் தெரிவித்தார்.
அப்படியே நாட்கள் செல்ல...அவர்களுக்கு திருமணம் முடிந்த பத்தாவது நாள்,வேலைக்கு சென்றவன் அதே வேகத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்தான்.
அறைக்குள் நுழைந்தவன் "ஓய் பொண்டாட்டி... ஒரு இரண்டு மூணு நாளைக்கு தேவையான ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணு வெளிய போகணும்" என மதி சொல்ல,
"அதை ஏன் என்கிட்ட சொல்ற,உனக்கு என்ன வேணுமோ அதை எடுத்துட்டு கிளம்பு" என அலட்சியமாக சொன்னவள், அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் சட்டமாக அங்குள்ள இருக்கையில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தாள் மித்ரா.
"நான் மட்டும் போக உன்னை எடுத்துவைக்க சொல்லலை,நீயும் தான் என்கூட வர" என்க.
அவளோ "நான் எதுக்கு வரணும்,அதுவும் உன்கூட...நானெல்லாம் எங்கேயும் வர மாட்டேன்" என உதட்டை சுழித்தாள்.
"உன்கிட்ட நிறைய தடவை சொல்லியிருக்கேன், என் முன்னாடி இப்படி பண்ணாதன்னு, என அவள் இதழை வலிக்கும்படி கிள்ளியவன்,சொல் பேச்சையே கேட்க கூடாதுன்னு முடிவில் இருக்கியா" என்றான் இதழை விடுவிக்காமல்…
"உன்னை வான்னு தான் சொன்னேனே தவிர, வரியா வரலாயான்னு உத்தரவு கேட்கலை.ஒழுங்கா கிளம்புற வழியை பாருடி" என்று திரும்ப..
'மூஞ்சியும் ஆளையும் பாரு, பனமரத்தில் பாதி உயரத்தில் இருந்துகிட்டு ஒரு சின்னப்பிள்ளையை எப்படியெல்லாம் மிரட்டுறான்.பொறுக்கி பொறுக்கி ' என மனதுக்குள் நினைத்தவள் வெளியே ஒன்னும் தெரியாத பிள்ளை போல் முகத்தை வைத்துக்கொண்டு "எங்க போறோம்,எதுக்கு போறோம்" என அடுக்கடுக்காய் கேள்விகளை முன்வைக்க,
'இவ கேள்விக்கு பதில் சொல்லியே என் காலம் போய்டும் போல' என நினைத்தவன், "ஏன் எங்கன்னு சொன்னாதான் வருவியா" என்க,
அவளும் "ஆமாம்" என்றபடி கையை கட்டிக்கொண்டு அவனையே அழுத்தமாக பார்த்தாள்.இல்ல இல்ல முறைத்தாள்.
மதியோ அவளின் முகத்தை வைத்தே அவள் நினைத்ததை கணித்தவன், அடக்கப்பட்ட சிரிப்புடன் "ஹனிமூனுக்கு தான்.கல்யாணம் ஆகி முழுசா பத்து நாள் கூட முடியலை,அதுக்குள்ள பொண்டாட்டியை கூட்டிட்டு ஹனிமூனுக்கு போகாமல் கோவிலுக்கா போகமுடியும்" என அவளை பார்த்து நிதானமாக சொல்ல,
அவளோ அதிர்ச்சியில் வாயடைத்து நின்றாள். "என்னது ஹனிமூனுக்கா" என அலறியவள், பயத்தில் அவனைவிட்டு இன்னும் தள்ளி சென்று சுவரில் பல்லி போல் சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டாள்.
அவளின் பயத்திலும் செயலிலும் வந்த சிரிப்பை முயன்று அடக்கியவன் "சீக்கிரம் பேக் பண்ற வழியை பாரு, நைட் கிளம்பனும்" என்றவன் அறையைவிட்டு வெளியே செல்ல...அவளோ போகும் அவனின் முதுகையே வெறித்துக் கொண்டிருந்தாள்.
அவன் மீண்டும் அறைக்குள் நுழையும் வரையிலும் கூட அந்த இடத்தை விட்டு அகலாமல் அதே அதிர்ச்சியில் இருக்க...அவளை நெருங்கியவன் "ஏய் என்னடி பகல் கனவா..? இன்னுமா பேக் பண்ணாம இருக்க" என கேட்க,
தயக்கத்துடன் "இல்ல நான் எங்கயும் வரமாட்டேன்" என முகம் பார்க்காமல் சொல்ல,
அவனும் "அப்படியா சரிவிடு நான் மட்டும் போய்கிறேன்" என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அதுவரை இருண்டு இருந்த முகம் பிரகாசமாக…
"ஹலோ மேடம் நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கலை, அதுக்குள்ள சந்தோஷம் ஆனா எப்படி' என்றவன், அப்படியெல்லாம் நான் சொல்வேன்னு வேற நினைப்பா...நீ வராலன்னா உன்னை தூக்கிட்டு போவேனே தவிர தனியால்லாம் போகவே மாட்டேன்" என்றான்.
வர்ஷினி அப்போதும் அடங்காமல் "இல்ல இல்ல நான் வரலை" என கிளிப்பிள்ளை போல் சொன்னதையே சொல்ல,
கடுப்பானவன் "இங்க பாருடி என் பொறுமையை சோதிக்காத...நீயா வந்தா கார்ல கூட்டிட்டு போவேன்,அடம்பிடிச்சா பைக் தான்.அன்னைக்கு மாதிரி அத்தானை கட்டிபிடிச்சிகிட்டு வரவேண்டியது தான். அப்பவும் அடங்கலன்னு வை, அப்படியே தூக்கிகிட்டு பாதை யாத்திரை மாதிரி நடந்தே கூட்டிட்டு போய்டுவேன்" என மிரட்டலுக்கு இறங்க அது சரியாக வேலை செய்தது.
"ஃபிப்டி கேஜி தாஜ்மஹால் அப்படின்னு உன்னை பார்த்து பாட கூட முடியாது போல, அவ்ளோ ஒல்லியா இருக்க,என்ன ஒரு நாற்பத்து ஐந்து கிலோவாவாது இருப்பியா" என்க…
அவளோ உதட்டை கடித்து "எப்படி சரியா சொல்றான் என்னோட வெயிட்டை" என எண்ணியவள் எதுவும் பேசாமல் இவன் சொன்னதை செய்யாமல் விடமாட்டான் என தன் உடமைகளை பேக் பண்ண தொடங்கினாள்.
அவள் இங்கு வந்த அடுத்த நாள் மாலையே அவளின் உடைகள் மற்றும் அனைத்து உடமைகளும் அவளின் நண்பர்கள், அதான் அந்த வாண்டு கூட்டங்களிடம் கொடுத்து அனுப்பியிருந்தார் சாந்தி.
அதிலிருந்து உடைகளை எடுத்து வைக்க நினைத்தவளுக்கு, எதை எடுத்து வைப்பது என்பதே தெரியவில்லை. அதில் அனைத்துமே புடவையாக தான் இருந்தது. கல்யாணத்திற்காக அவளுக்கு எடுத்த புடவைகள் இவை அனைத்தும்.அதில் ஓரிரண்டு சுடிதார்கள் மட்டுமே இருந்தது.
திரும்பி அவனை திருதிருவென பார்க்க,அவள் பார்வையை உணர்ந்தவன் அவனும் அவளை பார்த்து 'என்ன' என புருவங்களை உயர்த்தினான்.
"எங்க போறோம்னு சொல்லுங்களேன் பிளீஸ், என்கிட்ட வெறும் புடவை தான் இருக்கு" என்க..
"அதெல்லாம் எதுவா இருந்தாலும் பரவாயில்லை பேக் பண்ணு. ஹனிமூன்க்கு டிரஸா முக்கியம்" என அவளை பார்த்து கண்ணடித்தவன் ஹாலிற்கு சென்றான்.
அவனின் தந்தையும் சித்தப்பாவும் சோஃபாவில் அமர்ந்து தங்கள் தொழிலை பற்றி பேசிக்கொண்டிருக்க,இவனும் சென்று அமர்ந்தான்.
"என்னப்பா இன்னைக்கு டியூட்டி இல்லையா" என கேட்க,
"இல்லப்பா போய்ட்டு தான் வந்தேன். இன்னைக்கு நைட் சென்னைக்கு போகலாம்னு இருக்கேன்ப்பா.பஎன் கூட படிச்ச ஃப்ரண்டுக்கு நாளைக்கு கல்யாணம் அதான் என்றவன்,அப்படியே மித்ராவையும் கூட கூட்டிட்டு போறேன்.அவளும் இங்க வந்ததில் இருந்து
ரூம் உள்ளேயே இருக்கா...எங்கயாவது வெளிய போனா கொஞ்சமாவது தன் கூட்டைவிட்டு வெளியே வருவாள்" என்க,அவர்களுக்கும் அதுவே சரியாகப்பட்டது.
அனைத்தையும் அறையின் வாசலில் இருந்து கேட்டுக்கொண்டு நின்றிருந்த வர்ஷினிக்கு அப்போது தான் படபடக்கும் இதயம் இயல்புக்கு வந்தது.
அதற்கு மேல் எந்த கேள்வியும் கேட்காமல் வர்ஷினியும் பயணத்திற்கு தேவையான அனைத்தையும் எடுத்துவைத்தாள்,அதுவும் அவளுடையதை மட்டும்.
மதியும் தனக்கு தேவையான உடமைகளை அவனே ஒரு பையில் எடுத்துவைத்தான்.
சிறிது நேரத்தில், சாவித்திரியும் மீனாட்சியும் அறைக்குள் நுழைய,அவர்களை பார்த்து எழுந்து நின்றவள் அமைதியாக நிற்க,
'இந்தாடா இந்த புடவையும் நகையும் எடுத்துட்டு போ.கல்யாணத்துக்கு போற அன்னைக்கு இதை போட்டுக்கோ. இது நம்ம குடும்ப நகை,எந்த விசேஷத்திற்கு போனாலும் இப்படி தான் போகணும் என்றவர், இதுயெல்லாம் உனக்கு வாங்கியது தான்" என்க…
"இல்ல எனக்கு எதுவும் வேணாம்.இதை நீங்களே வச்சுக்கோங்க" என்றவள் அமைதியாக நிற்க
"ஏண்டா இன்னும் எங்க மேல உள்ள கோபம் போகலையா...மன்னிச்சிடு டா கண்ணு. நானும் தாத்தாவும் வேண்டாத நாளில்லை,கடைசி காலத்தில் நாங்க மேல போய் சேர்வதுக்கு முன்னால ஒரு தடவை உன்னை பார்த்துட மாட்டோமான்னு ஏங்கி தவிச்சுட்டு இருந்தேன். இப்போதான் மனசுக்கு திருப்தியா இருக்கு,திரும்பவும் இந்த வீட்டை வாழ வைக்கும் மகாலட்சுமி மாதிரி... என் பேத்தியே இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததில் அவ்வளவு சந்தோஷம்" என நெட்டி முறித்தார்.
அவரின் வார்த்தைகள் அவளை தாக்க, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
"அப்பத்தா இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்க,அதெல்லாம் உன் பேத்தி வாங்கிக்குவா" என சொன்னவன் திரும்பி அவளை அழுத்தமாக பார்க்க,அதில் இப்போ நீ அதை வாங்கி தான் ஆகவேண்டும் என்ற கட்டளை இருந்தது.
அவளும் வேறு வழியில்லாமல் வாங்கி கொண்டாள்.அவளுக்கும் தன் அம்மாச்சியின் அழுகை வருத்தத்தை கொடுக்க,அவன் சொல்லவில்லை என்றாலும் அதை வாங்கித்தான் இருந்திருப்பாள்.
ஆனால் அவனின் முறைப்பால் அவனை மனதுக்குள் திட்டியபடி 'இதுக்கெல்லாம் உனக்கு இருக்குடா' என்றாள் வெளியே திட்ட முடியாத ஆத்திரத்தில்.