ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கனவிலே மிதக்கும் விழிகள் - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
என்கிட்ட ஒருவார்த்தை….ஒரே ஒரு வார்த்தை முன்கூட்டியே சொல்லியிருந்தா கூட, கண்டிப்பா நான் நிச்சியத்தை நடக்க விட்டுருக்கவே மாட்டேன்.எனக்கு மது மேல எந்த விதமான காதலும் வரலை.

எனக்கு மீரா எப்படியோ அதே மாதிரி தான் மதுவும்.ஒருவேளை வர்ஷினி இதே வீட்டில் இருந்திருந்தா கூட எனக்கு அதே ஃபீலிங் தான் இருந்திருக்கும்.

அவளை விட்டு தள்ளி இருந்ததுனால தான் என்னவோ ஒவ்வொரு நிமிஷமும் அவளையே நினைக்க ஆரம்பிச்சிட்டேன்.

"கண்டிப்பா இப்போ அவளுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணாமல் இருந்திருந்தாலும் அவளை தவிர யாரையும் கல்யாணம் நான் பண்ணியிருக்க மாட்டேன்" என்றான் உறுதியான குரலில்.

அவன் சொன்ன விஷயம் அனைவருக்கும் புதிது. அதுவும் மித்ராவுக்கு சொல்லவே வேண்டாம், அவனை தான் அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் தந்தை 'நிச்சயம் முடிந்து விட்டது' என சொன்னதில் அதிர்ந்தவள், அவனின் பதிலில் அமைதியடைந்தாள்.

"அப்போ மதுக்கு உன்னோட பதில் என்ன மதி" என அவன் அத்தை கேட்க…

அவகிட்ட நான் பேசிக்கிறேன் அத்த...நீங்க எல்லாரும் சொன்னதுனால தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருந்திருப்பா.கண்டிப்பா அவளுக்கும் என் மேல எந்த அபிப்பிராயமும் இருக்காது" என்றான்.

"ஆஹா! நல்லா சமாளிக்கிற மதி...ஊரை கூட்டி நிச்சயம் பண்ணியாச்சு,பத்தாததுக்கு தினமும் வண்டில காலேஜுக்கு அழைச்சிட்டு போறேன்னு கூட்டிட்டு போய்ட்டு வந்தாச்சு. மொத்த ஊரும் நீங்க ரெண்டு பேரும் தான் கடிக்க போறீங்கன்னு பேசிட்டு இருந்தது.

இவளோ நடந்ததுக்கு அப்பறம் இனிமே யாரு என் பொண்ணை கட்டிப்பா….சொல்லு டா" என அவன் சட்டையை பிடிக்க…

அவனோ பொறுமையாக "என்ன அத்த பேசுறீங்க, நான் எப்படி மீராவை அழைச்சிட்டு போய்ட்டு வந்தேனோ அப்படிதான் மதுவையும்" என சொல்ல…

"போதும் நிறுத்துடா... திரும்ப திரும்ப அதையே சொல்லாத மீராவும் மதுவும் ஒன்னு இல்ல அதை முதலில் புரிஞ்சிக்கோ. அவ உன் தங்கச்சி, ஆனா மது உனக்கு அத்தை பொண்ணு. நீ வேணா தங்கை மாதிரி நினைத்து இருக்கலாம் ஆனா பாக்குற எல்லாரும் அப்படியே தான் நினைப்பாங்களா?...எப்படியோ உங்களோட சுயநலத்துக்காக என் பொண்ணு வாழ்க்கை போய்டுச்சு" என அழுதுக்கொண்டே இருந்தவர்…

கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் மித்ராவின் புறம் திரும்பி…"போனவ அப்படியே போயிருக்க வேண்டியது தானே, எதுக்கு திரும்பவும் வந்து இப்படி எல்லாருடைய சந்தோஷத்தையும் கெடுக்குற.உன்னால தான் என் பொண்ணு வாழ்க்கையே போச்சு" என அவளை வார்த்தையால் கொன்றவர்,மேலும் வார்த்தைகளை விடும்முன்,

"அத்த என்ன பேசுறீங்க?.." என அதுவரை அமைதியாக இருந்தவன், தன்னவளை ஒரு வார்த்தை சொன்னவுடன் கோபத்தில் குரலை உயர்த்த…

"அப்படிதாண்டா பேசுவேன். கல்யாணமாகி ஒரு மணி நேரம் கூட முடியல, அதுக்குள்ள பொண்டாட்டிய சொன்னா கோபம் வருதோ. நான் ஒன்னும் இல்லாததை பேசலயே...அவ தானே எல்லாத்துக்கும் காரணம் என்றவர்,பாக்குறேன் அவ எப்படி இந்த வீட்டில் வாழறான்னு" என சொல்லிவிட்டு அவளை பார்க்க கூட பிடிக்காமல் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

அனைவருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை...திரும்பி "அம்மாடி உங்க பெரியம்மா பேசினதை எல்லாம் மனசில் வச்சுக்காத டா...ஏதோ கோபத்தில் பேசிட்டா" என அவளின் பாட்டி சமாதான படுத்த முயல,

தன் பெரிய அன்னையின் வார்த்தையில் அதிர்ந்து போனவள்,அதில் இருந்து மீளாமல் அப்படியே உறைந்து இருக்க…

அவளின் நிலை உணர்ந்து மதி தான் "மித்துமா... வா ரூம்க்கு போகலாம்" என அழைக்க,சுயநினைவே இல்லாத பொம்மை போல் அவனின் இழுப்பிற்கு சென்றாள்.

அவள் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் இருக்க...மதி உண்மையிலேயே பயந்து போய்விட்டான்.அவனுக்கு தெரியும் அத்தையின் வார்த்தை அவளை எந்தளவு பாதித்திருக்கும் என்று.ஒருவேளை அவள் அழுதிருந்தாள் கூட இப்படி பயந்திருக்க மாட்டான்.அவளின் அமைதி தான் அவனுள் பூகம்பத்தை ஏற்படுத்தியது.

அவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று புரியாமல் இருக்க...அவளோ அமைதியாக சென்று அங்குள்ள மெத்தையில் படுத்து கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 12

வீட்டில் உள்ள அனைவருமே சோகத்தில் இருக்க...யாரை எப்படி பேசி புரிய வைப்பது என புரியாமல் விழி பிதுங்கி நின்றிருந்தான் மதி.

நேரம் கடக்க,மதிய உணவு கூட யாருக்கும் இறங்கவில்லை.மாலை மது வரும் நேரம், சரியாக உள்ளே தனது அறையில் இருந்து வெளியே வந்தார் அவளின் தாய் சகுந்தலா.

எப்போதும் போல் மதி அழைத்து வர செல்ல,அவனை தடுத்து "டேய் ரகு நீ போய் உன் தங்கச்சியை கூட்டிட்டு வா…. இனிமே யாரும் என் பொண்ணு விஷயத்தில் தலையிட வேண்டாம்" என்றவர் தன் மகனை அனுப்பி வைத்தார்.

இன்று தான் அவளுக்கு கடைசி தேர்வு.அதனை முடித்துவிட்டு சந்தோஷமாக வெளியே வர அங்கே அவளுக்காக காத்திருந்தான் அவளின் அண்ணன் ரகு.

"என்ன நீ வந்திருக்க,எப்பவும் அத்தான் தானே வருவாங்க என கேட்டவள்,பின்னர் யாரு வந்தால் என்ன?...
நம்மை அழைச்சிட்டு போக ஒரு ஆள் வந்தால் சரி என நினைத்துக்கொண்டு
எப்போதும் போல் வளவள என பேசிக்கொண்டே வர,எதிரில் கடந்து செல்லும் அனைவரும் அவளையே உற்று பார்ப்பது போல் தோன்றியது.எப்போதும் அதுபோல் அவள் உணர்ந்தது இல்லை.

ஆனால் இன்று தன்னை பார்க்கும் அனைவர் பார்வையிலும் ஏதோ இரக்கம்,அய்யோ பாவம் என்பது போல் பாவனைகள் இருந்தது. எப்போதும் ஏதாவது பேசிக்கொண்டே வரும் தன் அண்ணன் கூட இன்று அமைதியாக வரவும் 'என்னாச்சு எல்லாருக்கும்' என நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தாள்.

குழப்பத்துடன் வீட்டுக்குள் நுழைய...வீடே அப்படி ஒரு அமைதியில் இருந்து,வீட்டு உறுப்பினர்கள் அனைவர் ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து இருக்க,

ஏதோ பிரச்சனை என உணர்ந்தவளுக்கு அப்போது தான் நியாபகம் வந்தது... 'ஓ இன்னைக்கு மித்ராவுக்கு கல்யாணம் இல்ல, அதான் எல்லாரும் இப்படி இருக்காங்க போல' என எண்ணியவளாக தன் கல்லூரி பையை வைத்துவிட்டு முகம் கழுவி வந்தவள் வரவேற்பறையில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.

"என்ன தாத்தா ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க?.. என கேட்க,அனைவரும் என்ன பதில் சொல்வது என தெரியாமல் அமைதியாகவே இருந்தனர்.

"எல்லாரும் எப்படி சொல்லுவாங்க?...சொல்றதுக்கு தான் எதுவும் இல்லையே.போனது என் பொண்ணோட வாழ்க்கை தானே, அவங்களுக்கு என்ன கவலை " என்ற அன்னையின் வார்த்தையில் புரியாமல் முழிக்க…

அவளின் குழப்பத்திற்கு யாரும் பதில் சொல்லும் முன் அவளுக்கே புரிந்துவிட்டது மதியின் அறையில் இருந்து வெளியே வந்த மித்ராவை பார்த்து.

காலையில் படுத்தவள் வெகுநேரம் தன் அழுகையில் கரைந்து தன்னையும் அறியாமல் உறங்கியிருந்தாள். மதியும் அவளை எழுப்ப முயலவில்லை.அவள் அழுகையை மறந்து தூங்கினால் போதும் என்று விட்டுவிட்டான்.

இப்போது தான் தூக்கம் களைந்தவள், வெளியே கேட்ட பெரிய அன்னையின் குரலை வைத்து மது வந்ததை அறிந்து வெளியே வந்தாள்.

கழுத்தில் புத்தம் புதிய மஞ்சள் தாலி,நெற்றி வகிட்டில் குங்குமம் பத்தாதத்துக்கு மதியின் படுக்கையறையில் இருந்து வெளியே வருவதை பார்த்த பின்பும் என்ன நடந்தது என்பதை அறியாத அளவுக்கு அவள் ஒன்றும் முட்டாள் இல்லையே.

அதிர்ச்சியில் இருக்கையில் இருந்து எழுந்தவள் அழுத்தமாக மதியை பார்க்க…

அவனோ "மது சாரி...எனக்கு உன் நிலைமை புரியுது.உன்கிட்ட பல தடவை சொல்ல வந்தேன், ஆனா நீ தான் நான் ஏதோ விளையாட்டுக்கு சொல்றேன்னு சொல்லி என் பேச்சை காதுலயே வாங்கலை" என்க…

"என்ன அத்தான் சொன்னீங்க?..இப்போ இந்த கல்யாணம் தேவையா.படிப்பு முடிந்து இரண்டு வருஷம் ஆனதுக்கு அப்பறம் வச்சுக்கலாம்ன்னு வீட்டுல சொல்லுன்னு தானே சொன்னீங்க"என கண்களில் கண்ணீர் வழிய அவனிடம் கேள்வி கேட்க

"மது நான் அப்படி சொன்னதே கல்யாணத்தை தள்ளி வெச்சா, அதுக்குள்ள எல்லார்கிட்டயும் சொல்லி புரியவைக்க"...என சொல்லும் போதே கை நீட்டி தடுத்தவள்,

"எதுக்கு அத்தான் சுத்தி வளைக்கணும்... ஒரே வார்த்தையில் உன்னை எனக்கு பிடிக்கலை,இந்த கல்யாணத்தில் எனக்கு இஷ்டம் இல்லைன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் போதுமே, நானே எல்லா ஏற்பாட்டையும் நிறுத்தியிருப்பேனே"…என ஆதங்கமாக கேட்க,

அவனிடம் பதில் தான் இல்லை...அவளிடம் நேரடியாக உன்னை பிடிக்கலைன்னு எப்படி சொல்வது என தயங்கியே முதலில் பெரியவர்களிடம் பேசலாம் என்று இருந்தான். ஆனால் யாரும் அவனின் வார்த்தையை கேட்பதாக இல்லை.அதனால் தான் அவளிடம் கல்யாணத்தை தள்ளி வைக்க கேட்டான் ஆனால் கடைசியில் எல்லாம் அவனுக்கே பாதகமாக மாறிவிட்டது.

அதுவரை அமைதியாக நின்று கொண்டிருந்த மித்ரவர்ஷினி... "அக்கா அது… என ஏதோ சொல்ல வந்தவளை தடுத்து, யாரும் எந்த விளக்கமும் சொல்ல தேவையில்லை" என முகத்தில் அடித்தது போல் சொன்னவள் தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அழுகை என்றால் அப்படி ஒரு அழுகை மதுவிடம் இருந்து.யாரின் சமாதானமும் காதில் வாங்காமல் அழுகையில் கரைந்தாள்.

ஒரு சராசரி பெண்ணாக கல்யாண கனவுகள் அவளுக்கும் இருக்கும் அல்லவா...இப்படி ஒரே நாளில் அனைத்து இல்லை என்று ஆன பின்னர், அதனை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

அன்று முழுவதும் அதே நிலைமை தான் மொத்த குடும்பத்திற்கும்.

இங்கு மண்டபத்தை விட்டு சண்முகசுந்தரம் மட்டும் தனியாக சென்றிருக்க...சாந்தியும் தர்ஷினியும் பயத்தோடே வீட்டினுள் நுழைந்தனர்.

வாசல் படியில் காலை வைக்க…"இன்னொரு அடி எடுத்து வச்சீங்க, அப்பறம் இரண்டு பேர் உடம்பிலும் உயிர் இருக்காது சொல்லிட்டேன்".

"எவ்வளவு திமிர் இருந்தா...எனக்கு தெரியாம உன் அண்ணன் பையனை வரவச்சு, உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெச்சதும் இல்லாம அத்தனை பேர் முன்னாடி என் மானத்தை வாங்கியிருப்ப" என தன் ஆத்திரம் மொத்தத்தையும் கூட்டி பளார் என்று அறைய,அப்படியே தரையில் சரிந்தார் சாந்தி.

கன்னம் இரண்டும் நெருப்பாய் கொதிக்க,அவரை ஏறிட்டு பார்க்க…"முதல்ல இந்த இடத்தைவிட்டு போடி...உனக்கு கட்டுன புருஷனை விட பொறந்தவீட்டு சொந்தம் தானே முக்கியம். அங்கேயே போய்டுங்க...இனி ஒருதரம் என் கண்ணு முன்னாடி நிக்காதே" என்றவர் வாசல் கதவை பட்டென்று சாத்தினார்.

இருவரும் மூடிய கதவையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.மாலை கடந்தும் கதவு திறப்பதாக இல்லை.

"அம்மா கால் வலிக்குது,அப்பறம் பசிக்குது" என்ற மகளை, தரையில் அமர்ந்து அவளையும் அமர்த்திக் கொண்டார்.

"கொஞ்சநேரம் பொருடா,வீட்டுக்குள்ள போனவுடன் அம்மா சாப்பிட தாரேன்" என்றவர் கதவை திறக்கும் நேரத்திற்காக காத்திருந்தார்.

இரவு எட்டு மணி போல் கதவு திறக்க...உள்ளே இருந்து வந்த சண்முகசுந்தரம் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது காரை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டார்.

அதன் பின்னர் மகளை அழைத்து கொண்டு உள்ளே செல்ல "அம்மா, அப்பா திரும்பவும் அடிப்பாங்களே...நம்மளை உள்ள வரவே சொல்லலையே" என கேட்க,

"அதெல்லாம் இனிமேல் எதுவும் சொல்லமாட்டார்' என சொல்லிவிட்டு சமையலை தொடங்கினார்.

வீட்டில் எவ்ளோ பெரிய பிரச்சனை நடந்தாலும் பெண்களுக்கு மட்டும் சமையலறை வேலைக்கு விடுமுறை என்பது கிடைப்பதில்லையே.

காலையில் இருந்து நடந்த சம்பவங்கள் மனதையும் உடலையும் சோர்வடைய செய்திருக்க,இருந்தும் தன் கடமையை செவ்வனே செய்து கொண்டிருந்தார் சாந்தி.

மதியின் வீட்டில் அனைவரையும் இரவு உணவிற்கு அழைக்க…அனைவரும் சொல்லி வைத்தது போல் வேண்டாம் என்ற ஒரே வார்த்தையையே சொன்னனர்.

சிறிதுநேரம் பொறுத்து பார்த்த, அந்த வீட்டின் இன்றைய தலைமுறையின் மூத்த மருமகளான அனு அனைவரையும் பிடிவாதமாக இழுத்து வந்தாள் டைனிங் டேபிளுக்கு.

"இப்படி எல்லாரும் சாப்பிடாம இருந்தா மட்டும் எல்லா பிரச்சனையும் சரி ஆகிடுமா மாமா...வந்து சாப்டுட்டு அடுத்து என்னன்னு பார்க்கலாம்" என பிடிவாதமாக அனைவரையும் சாப்பிட வைத்தார்.

மதுவை கூட அவளின் தாய் வற்புறுத்தி உண்ண வைத்திருக்க,ஆனால் இங்கு மித்ராவை சாப்பிட அழைக்க வந்த மதியை தலையால் தண்ணி குடிக்க வைத்தாள் அவனின் மனைவி.

"ஏய்! எவ்ளோ நேரமா கூப்பிடுறேன்,வந்து சாப்பிடுடி காலையில் இருந்து சாப்பிடாம இருந்தால் உடம்பு என்ன ஆகும்…நீ ஹாலுக்கு கூட வர வேண்டாம் இதோ நானே உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன். எழுந்து சாப்பிடுமா" என பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டு சொல்ல…

"இன்னைக்கு இங்க கொண்டு வந்துட்டீங்க, தினமும் இப்படியே பண்ணுவீங்களா?...அப்போ நான் இந்த ரூமுக்குள்ளயே அடிமை மாதிரி இருக்கணுமா" என கேட்க…

"இருக்கிற டென்ஷனில் நீ வர படுத்தாதடி...பிளீஸ் மித்துமா,கொஞ்சமா சாப்பிடு.மத்ததை அப்பறம் பேசிக்கலாம்" என்றான்.

அவளோ அவரசமாக எழுந்தவள் "இன்னொரு வாட்டி என்னை ' மித்து மித்துமா' இப்படி சொல்லி கூப்பிட்டீங்க அப்பறம் நடக்கிறதே வேற" என கத்த,

"ஏண்டி உனக்கு அந்த பெயரை வைத்ததே நான் தான்.என்கிட்டேயே கூப்பிடாதன்னு சொல்லுவியா. அப்படி தாண்டி கூப்பிடுவேன் உன்னால் முடிந்ததை பார்த்துக்கோ" என்றவன் அவனும் சாப்பிடாமல் தட்டை வைத்துவிட்டு படுக்க வர,

"இப்போ எங்க படுக்க போறீங்க" என கேட்டாள்.

"இது என்னடி கேள்வி கட்டில்ல தான்" என்றான் அவனும் கடுப்பாக.

"அதெல்லாம் முடியாது,ஒழுங்கா போய் கீழே படுங்க...உங்க கூட ஒன்னா ஒரே கட்டிலில் என்னால படுக்க முடியாது" என்றாள்.

"ஏய் என்ன பத்தி என்னடி நினைச்ச,ஒரே கட்டிலில் படுத்தா உன்மேல அப்படியே பாஞ்சிடுவேன்னு நினைக்கிறியா...உன் விருப்பம் இல்லாம என் விரல் நுனி கூட உன்மேல படாது.அதையும் மீறி என்மேல உனக்கு நம்பிக்கை இல்லைன்னா சொல்லு நான் கீழயே படுத்துக்கிறேன்" என்க..

அவளோ கொஞ்சமும் யோசிக்காமல் "இல்லை...உங்க மேல எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை என்றவள்,உங்களால முடியாதுனா சொல்லுங்க, நானே கீழ படுத்துகிறேன்" என்றால் உறுதியான குரலில்.

அவளின் வார்த்தை அவனுக்கு மிகுந்த வலியை கொடுக்க,அவளை பார்த்து விரக்தியாக சிரித்தவன்,

"ஓ…பரவாயில்லை என்மேல உனக்கு ரொம்ப நல்ல அபிப்பிராயம் தான்" என சொன்னவன் ஒரு பெட்ஷீட்டை எடுத்து தரையில் விரித்து அதில் படுத்துக் கொண்டான்.

"முதல் நாளே என்னை வச்சு செய்றா..இன்னும் என்னவெல்லாம் செய்ய போறாளோ, கடவுளே என்னை காப்பாத்து" என்றவன் தூங்க முயன்றான். ஆனால் தூக்கம் தான் வரவில்லை.அவன் மட்டுமல்ல அனைவருக்கும் அதே கதிதான்.அதிகாலையில் தன்னை மீறி உறக்கத்திற்கு சென்றான்.

மறுநாள் காலையில் தடதடவென கதவை தட்டும் சத்தத்தில் கண் விழித்த வர்ஷினி.எழுந்து அமர,கீழே படுத்திருந்த மதியோ நல்ல உறக்கத்தில் இருந்தான்.

"யாரது இப்படி விடாமல் கதவை தட்டுவது" என புலம்பியபடி கதவை திறக்க...அங்கே யாரும் இல்லை. கடுப்புடன் திரும்ப முயல, அப்போது தான் அங்கு இடுப்பில் கைவைத்து கொண்டு இவளையே முறைத்துக் கொண்டு நின்றிருந்த தியாவை பார்த்தாள்.

அவள் மனோகர் அனுவின் மகள் என்பது மட்டுமே அவளுக்கு தெரியும்.மற்றபடி யாரிடமும் பேசியது இல்லை என்பதால் அவளின் பெயர் கூட தெரியவில்லை வர்ஷினிக்கு.

முழங்காலில் அமர்ந்தவாறு "ஹாய் குட்டி உங்க பேர் என்ன?.." என சின்னவளை பார்த்து கேட்க...அவளோ முகத்தை திருப்பிக்கொண்டு,இவளின் கையை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

அங்கே அவளின் செல்ல தந்தை தரையில் படுத்து இருக்க,மீண்டும் திரும்பி வர்ஷினியை முறைத்தவள் எப்போதும் போல் அவன் மேல் ஏறி படுத்திருந்தாள்.

"அப்பா... அப்பா ஏந்திரு" என்க…

" வந்துட்டியா செல்லக்குட்டி" என்றவன் மகளை விழாமல் பிடித்துக்கொண்டு கண் மூடி கிடந்தான்.

"அப்பா இவங்கள வெளிய போ சொல்லு. எனக்கு பிதிக்கவே இல்ல" என சொல்ல….யாரை சொல்கிறாள் என மெல்ல கண்களை திறந்து பார்க்க,அங்கே இவர்களையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் வர்ஷினி.

உடனேயே பதட்டமானவன் "ஏய் செல்லம்... அப்படியெல்லாம் சொல்ல கூடாது.அவங்க தான் உங்க சித்தி" என்க,

"இவங்க ஒன்னும் எனக்கு சித்தி இல்ல,மது தான் சித்தி என்றவள் மித்ராவின் புறம் திரும்பி "நீ போ... உன்னால தானே எங்க மது சித்தி அழுதுச்சு. போ நீ வேணா போ" என்றாள் அழும் குரலில்.

இப்போது அழும் மகளை பார்ப்பதா,இல்லை அழ தயாராக இருக்கும் மனைவியை பார்ப்பதா என்றே அவனுக்கு தெரியவில்லை.

"செல்லக்குட்டி .. யாரு உன்கிட்ட இப்படி தப்பு தப்பா சொன்னது. இவங்களும் உனக்கு சித்தி தான்" என பொறுமையாக எடுத்து சொல்ல,

"ம்ஹும்...இல்ல ...இல்ல என வேகமாக தலையாட்டி மறுத்தவள்,எனக்கு பிடிக்கல ….நீயும் அவங்க கூட பேசாத" என கட்டளையிட,

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த வர்ஷினி,அவனை நோக்கி அழுத்தமான ஒரு பார்வையை செலுத்திவிட்டு மீண்டும் சென்று படுத்துக்கொண்டாள்.

அவனுக்கு இப்போதே மண்டை காய்ந்து, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை இதே நிலைமைதான் தனக்கு என எண்ணியவன், சூழ்நிலையை சரி செய்யும் பொருட்டு மகளை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே சென்றுவிட்டான்.

இன்று அனைவருக்கும் விடுமுறை நாள். பள்ளி கல்லூரி என எதுவும் இல்லாததால் அனைவருமே வீட்டில் தான் இருந்தனர்.

நேரம் கடக்க ...நேற்றில் இருந்து அதே பட்டு புடவையில் தான் இருந்தாள் வர்ஷினி.இப்போது குளித்துவிட்டு மாற்றிக்கொள்ள கூட உடை இல்லாததால் என்ன செய்வது என புரியாமல் யோசித்தவளுக்கு அவனிடம் கேட்கவும் மனம் வரவில்லை.

அப்படியே அமர்ந்திருந்தவள் முன் ஒரு கவரை நீட்டினான் மதி.அவளோ அதை வாங்காமல் முகம் திருப்ப…

"என்ன இப்படியே இருக்க போறதா ஐடியாவா.முதல்ல குளிச்சிட்டு வந்து இந்த டிரெஸ்ஸை போட்டுக்கோ.வீணா பிடிவாதம் பிடிக்காத" என்றவன் சென்றுவிட,

வெகுநேரம் அப்படியே இருந்தவள்,பின்னர் வேறு வழியில்லாமல் குளிக்க சென்றாள். அவள் மீண்டும் வெளிய வந்த போது அறையினுள் மதி இருந்தான்.

"வா சாப்பிட போகலாம்" என கூப்பிட…அவளோ "எனக்கு வேண்டாம்" என்றாள்.

"போதும்டி உன் உண்ணாவிரதம் நேத்து ஃபுல்லா பட்னி, இன்னைக்கும் அதையே பண்ணாத…. ஒழுங்கா சாப்பிட வா. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க" என்று பிடிவாதமாக அழைத்து சென்றான்

கிட்டத்தட்ட வீட்டின் பெரியவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்திருக்க... அப்போதுதான் மதுவை சகுந்தலா சாப்பிட கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து மித்ராவை அழைத்து வந்த மதி, இவர்களுக்கு எதிரில் உள்ள இருக்கையில் அமர வைத்தான்.

மித்ரா அமர்ந்த அடுத்த நொடி "நிம்மதியா சாப்பிட கூட முடியல இந்த வீட்டில்" என எழுந்து செல்ல முயன்ற சகுந்தலாவை பார்த்து

"நீங்க போக வேண்டாம் பெரியம்மா, சாப்பிடுங்க,நானே போறேன்" என சாப்பாட்டில் வைத்த கையை எடுத்துவிட்டு எழுந்து கொண்டாள் வர்ஷினி.

"ஏய் சாப்பிட்டு போடா...இல்லனா வா உள்ள போய் சாப்பிடலாம்" என ஒரு கையில் தட்டையும் மறுகரத்தில் அவளின் கரத்தை இறுக்கமாக பிடித்திருந்தான் மதி

"அப்பப்பா…. நானும் பார்த்ததும் தான் பார்த்தேன் இப்படி ஒரு நடிப்பை பார்க்கலைடி யம்மா.ஒரே நாளில் அவனை மயக்கி பின்னால சுத்த வச்சிட்டியே சரியான கைகாரி தான்" என தரம் தாழ்ந்த வார்த்தைகளை கோபத்தில் வெளியே விட…

அதுவரை அனைத்தையும் பொறுத்து கொண்டு இருந்தவளால் அவளின் நடத்தையை பற்றி பேசிய பின்னும் அந்த அமைதியையை கைப்பிடிக்க முடியவில்லை.

அவளுக்கு கோபம் மொத்தமும் மதியின் மேல் தான் திரும்பியது.அனைத்திற்கும் காரணம்,அவன் தன்னை மணந்து தானே.
நானா அவனை என்னை 'கல்யாணம் பண்ணிக்கோ ….கல்யாணம் பண்ணிக்கோன்னு' கெஞ்சினேன்.பொறுக்கி நான் பாட்டுக்கு இருந்தேன் தாலி கட்டி இப்படி எல்லாரும் பேசும்படி செய்துவிட்டான் என்ற ஆதங்கத்தில்,

"கையை விடு முதல்ல,எல்லாமே உன்னால தான்.என்னோட இந்த நிலைமைக்கு மொத்த காரணமும் நீ தான்" என அழுதவள்,

"எதுக்காக என்னை கல்யாணம் பண்ண….சொல்லுடா சொல்லு. என் கல்யாணத்தை நிறுத்துன்னு உன்கிட்ட வந்து கேட்டனா, இத்தனை வருஷமா இருக்கேனா செத்தனான்னு கூட பார்க்கலை தானே... அப்படியே இருந்திருக்க வேண்டியது தான.இப்போ மட்டும் எங்கிருந்து வந்தது அக்கறை" என அவன் சட்டை பிடித்து உலுக்க,

அதற்குள் அனைவரும் இருவரையும் சூழ்ந்து கொண்டனர்.

"சொல்லுடா எதுக்கு இப்படி மரம் மாதிரி நிற்கிற" என விழிகளில் இருந்து நிற்காமல் தாரை தாரையாக கண்ணீர் கொட்ட…

அவனோ அவள் பேசுவதை பற்றி பெரிது படுத்தாமல் அவளை சமாதான படுத்த முயன்றவனாக "அழாதடா...எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.கொஞ்சம் பொறுமையா இரு" என்றான்.

"பொறுமையா இருக்கணுமா...பார்த்த தானே எப்படி பேசுறாங்கன்னு. நான் அவங்களை மட்டும் சொல்லல,இங்கவுள்ள எல்லாரையும் தான் சொல்றேன்.

இத்தனை வருஷம் கழிச்சு இந்த வீட்டுக்கு வந்திருக்கேன், ஆனா யாரு முகத்திலும் நான் வந்திருக்கேன் என்கிற சந்தோஷம் இருக்கா பாரு, இல்ல….எல்லாருமே மது அக்காவை பத்தி மட்டும் தான் நினைச்சாங்களே தவிர என்னை பத்தி யாருமே நினைக்கலையே.

அவங்களை பத்தி நினைச்சத்தை தப்புன்னு சொல்ல வரல,ஆனா யாருக்கும் என்னோட நிலைமை புரியவே இல்லை தானே.

இப்போ வரைக்கும் ஒவ்வொரு நாளும் நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறது ஒன்னே ஒன்னு தான்,திரும்பவும் எல்லாரும் ஒரே வீட்டுல பழையபடி சந்தோஷமா இருக்கணும். அது மட்டும் தான் என்னோட ஆசையா இருந்தது.

நேத்து உன்கூட வரும் போது கூட...என்னை பார்த்த பிறகு எல்லாரும் எவ்ளோ சந்தோஷ பட போறாங்கன்னு கனவு கண்டுட்டே வந்தேன். ஆனா ஒருத்தர் முகத்தில் கூட நான் வந்ததில் சந்தோஷம் இல்லை.

"அவ்வளவு ஏன் இந்த குழந்தைக்கு கூட என்னை பிடிக்கலையே,அந்த சின்ன குழந்தை மனசுல கூட நான் கெட்டவளா தானே இருக்கேன்" என தேம்ப…
 

Anjali

Well-known member
Wonderland writer
அவள் அழுகையை அவனால் சகித்து கொள்ளவே முடியவில்லை."பிளீஸ்மா அழாத ….அவ சின்ன குழந்தைடா அவளுக்கு என்ன தெரியும்,அதையெல்லாம் நினைச்சு ஏண்டி உன்னையே வருத்திக்கிற" என அவளின் கரத்தை பிடிக்க முயல…

அவனை தள்ளிவிட்டு "நேத்து எல்லாரும் வந்ததில் இருந்து மாத்தி மாத்தி 'ஏண்டா இப்படி பண்ண...ஏண்டா இப்படி பண்ணன்னு' கேட்டாங்களே, அதுக்கு என்ன அர்த்தம்.நான் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை அவங்களுக்கு மது அக்கா கல்யாணம் நின்னது மட்டும் தான் கவலை.

அப்போ நான் யாரு இவங்களுக்கு...நானும் இந்த வீட்டு பொண்ணு தானே,அது ஏன் யாருக்கும் தோணலை.ஒருவேளை நான் மட்டும் தான் அப்படி நினைக்கிறேன் போல,உங்க எல்லாரையும் பொறுத்தவரை நான் யாரோ தான் இல்லையா" என நிறுத்தாமல் மனதில் இருந்த மொத்தத்தையும் கொட்டியவள்,மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நின்றாள்.

எல்லாருக்கும் என்னை பிடிக்கும் என்ற நினைப்பிலாவது சந்தோஷமா இருந்திருப்பேன். உன்னால தான் இப்படி எதுக்குடா எனக்கு தாலி கட்டுன" என திரும்ப திரும்ப அதையே கேட்க…

"ஏண்டி உனக்கென்ன பைத்தியமா..திரும்ப திரும்ப கேட்டதையே கேட்டுட்டு இருக்க...இப்போ என்ன உனக்கு நான் எதுக்கு உன்னை கட்டிகிட்டன்னு தெரியணும் அது தானே"...

"ஏன்னா நான் உன்னை காதலிக்கிறேன் போதுமா….என்னமோ நான் செய்ய கூடாத தப்பு பண்ண மாதிரி பேசிட்டு இருக்க,ஒருவேளை நான் மட்டும் கல்யாணத்தை நிறுத்தலைன்னா என்னடி பண்ணியிருப்ப" என கோபத்தில் இவனும் கத்தினான்.

அமைதியாக இருந்தாள் தானே மீண்டும் பேசுவாள் என்று எண்ணியே இவனும் பதிலுக்கு கோபத்தை காட்ட...அவன் கேட்ட கேள்விக்கு அவள் சொன்ன பதிலை கேட்டு ஒரு நொடி அதிர்ந்து போனான்.அவன் மட்டும் அல்ல மொத்த குடும்பமும் தான்.

ஒருவேளை நீ கல்யாணத்தை நிறுத்தலைன்னா...செத்து போயிருப்பேன் போதுமா. உண்மையை சொல்லனும்னா கடைசி நிமிஷம் வரைக்கும் நீ வந்து கல்யாணத்தை நிறுத்துவன்னு நினைச்சேன் தான். ஆனா இப்படி தாலி கட்டுவேன்னு நினைக்கலை.

நீ வரலைன்னா கண்டிப்பா இந்நேரம் அது நடந்திருக்கும். ஆனா இப்போ நடக்கிற எல்லாத்தையும் பார்க்கும் போது நீ வராமலேயே போய்யிருக்காலாம்னு தோணுது.

அப்படி மட்டும் நீ வராமல் இருந்திருந்தால்...இப்போ இப்படி பேசுற எல்லாரும் எனக்காக அழுதாவது இருப்பாங்க என்றவள்,திரும்பி

"ஏன் பெரியம்மா ஒருவேளை நான் செத்துருந்தா எனக்காக அழுதுருப்பீங்க தானே" என கண்ணீரோடு கேட்க…

அவளின் அந்த கேள்வியில் அவருக்குமே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவர் ஒன்றும் அவளுக்கு எதிரி இல்லையே...தன் மகளின் திருமணம் நின்ற அதிர்வில் அவளின் மேல் கோபம் இருந்தாலும் அதற்கு முன்பு வரை அவரும் அவளின் வரவை எதிர்ப்பார்த்து காத்திருந்தவர் ஆயிற்றே.

தன் தங்கை மகள் என்ற பாசம் அதிகமாகமே இருந்தது. ஒரு காலத்தில் அம்மா அம்மா என தன் காலையே சுற்றி வந்த வர்ஷினியின் நினைவில் கண்களை மூடிக்கொண்டு நின்றார். ஆனால் உடனடியாக கோபம் மறந்து பேசிடவும் முடியவில்லை அவரால்.

அதுவரை அவளின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவன்,அவளின் செத்துருப்பேன் என்ற வார்த்தையில் கோபம்அதிகரிக்க 'எவ்ளோ திமிர் இருந்தா நான் இருக்கும் போதே செத்து போயிருப்பேன் என சொல்லுவாள்' என்ற ஆத்திரத்தில் பளார் என்று அறைந்திருந்தான்.

அவனுக்கும் வேறு வழி தெரியவில்லை,அவளின் உலறல்களை நிறுத்துவதற்கு.

அதுவரை மனதில் உள்ள அனைத்தையும் பேசிக்கொண்டிருந்தவள் அவனின் அடியில் அதிர்ந்து அப்படியே உறைந்து நின்றாள்.

அதற்கு மேலும் பொறுமையை கடைபிடிக்க முடியாதவன் அவளின் கரம் பிடித்து தரதரவென்று தங்கள் அறைக்குள் இழுத்து சென்றான்.

அவளின் "விடுடா விடு" என்ற வார்த்தைக்கு கொஞ்சமும் இறங்காமல் அறைக்குள் சென்று அவளை தள்ளியவன் கதவடைத்தான்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 13

அவளை உள்ளே விட்டு கதவடைத்துவிட்டு வெளியே வந்தவன் இப்போது அனைவரையும் பார்த்து கத்த தொடங்கினான்.

"இப்போ உங்க எல்லாருக்கும் சந்தோஷம் தானே...அவ வரதுக்கு முன்னாடி வரை அவளை நினைச்சு அழுது புலம்ப வேண்டியது.ஆனா வந்தவளை வான்னு கூட கூப்பிட யாருக்கும் வாய் வரலை இல்ல...

அவ பேசுனதுல ஏதாவது தப்பு இருக்கா சொல்லுங்க?... சொன்னது எல்லாமே மறுக்க முடியாத உண்மை .இங்க எல்லாரும் மதுவை எப்படி பார்க்குறீங்களோ அதே மாதிரி தானே அவளை பார்த்திருக்கணும். ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கிறது போல தானே நீங்களும் நடந்துக்குறீங்க" என ஆதங்கமாக கேட்டவன்,

"சத்தியமா அவளுக்கே தெரியாது நான் அவ கழுத்தில் தாலி கட்டுவேண்ணு, அப்பறம் எப்படி எல்லாத்துக்கும் அவள் காரணமாக முடியும்.

உங்ககிட்ட இருந்து நிச்சயமா இதை எதிர்ப்பார்க்கலை..அதுவும் நீங்க இரண்டு பேரும் கூட எதுவுமே பேசலயே" என தன் தாத்தா பாட்டி இருவர் முன்னும் நிற்க…

அவர்களும் தாங்கள் செய்த தவறை உணர்ந்து பதில் சொல்ல முடியாமல் நின்றனர்.
தங்கள் மகளின் கண்ணீர் தான் அதுக்கு காரணம் என்று தெரிந்திருந்தாலும் இத்தனை நாளும் தங்களை எண்ணியே தவித்திருந்த பேத்திக்கு நியாயம் செய்யவில்லையே என்று மனம் வருந்தினார்கள்.

ஒருவேளை அவளுக்கு சாதகமாக யாராவது பேசியிருந்தால் இன்னும் இந்த பிரச்சனை பெரிதாக வெடித்திருக்கும் என்பது திண்ணம்.

"எங்களை என்ன ராஜா பண்ண சொல்ற,அதிர்ச்சியில் என்ன பேசுறதுன்னு தெரியலையே. பேசி பிரச்சனையை பெருசாக்குறதை விட அமைதியா இருந்தாலாவது உன் அத்தையின் கோபம் கொஞ்சம் மட்டுப்படும்னு நினைச்சோம்" என வயதான காலத்திலும் மகிழ்ச்சி என்பது இல்லாமல் துயரத்துடன் சொன்னவர்கள் சோர்ந்து அமர்ந்துவிட்டனர்.

அடுத்து தன் அத்தையை பார்த்து திரும்பியவன் "அது எப்படி அத்த நீங்க தூக்கி வளர்த்த பொண்ணை பார்த்து இப்படி சொல்ல முடிஞ்சது உங்களால் . அவ சின்ன பொண்ணு இப்போதான் ஸ்கூல் முடிச்சிருக்கா,நீங்க சொன்ன வார்த்தைக்கு முழு அர்த்தம் கூட அவளுக்கு புரிஞ்சிருக்காது. அவளை போய் மயக்குறா,சரியான கைக்காரி அப்படி இப்படின்னு பேசிட்டீங்களே….அப்படியே பண்ணாலும் யாரை பண்றா?..என்னை, அவ புருஷனை தானே கைக்குள்ள போட்டுக்க பார்க்குறா அதுல என்ன தப்பிருக்கு சொல்லுங்க..

உண்மையை சொல்லனும்னா அவ அந்த வேலையை செய்யவே தேவையில்லை. எதுவும் பண்ணாமலே நான் அவகிட்ட மயங்கிதான் இருக்கேன் போதுமா…. இதை சொல்ல நான் கொஞ்சமும் வெட்கப்படலை. அவ என்னை கைகுள்ள வெச்சுக்க வேண்டிய அவசியமே இல்லை, நானே அவள் கைக்குள்ள இருக்க தான் ஆசைப்படுறேன்" என்றவன்,அடுத்து யாரின் பேச்சையும் கண்டுகொள்ளாமல் அறைக்குள் நுழைந்தான்.

அவன் உள்ளே நுழைந்தவுடன் மீண்டும் அவன் சட்டையை பிடித்து "ஏண்டா இப்போ அடிச்ச" என அவன் அடித்த கன்னத்தை ஒரு கையிலும்,சட்டையை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டே கேட்க,

"அடிச்சத்தோடு விட்டுடேன்னு சந்தோஷ படு. வர ஆத்திரத்திற்கு" என பற்களை கடித்தான்.

ஆனால் வெகுநேரம் அவள்மேல் கோபத்தை பிடித்து வைக்க முடியாதவன்,அவள் முகத்தை கரங்களில் ஏந்தி "ஏண்டி அப்படி சொன்ன,உனக்காக நான் இல்லையா" என அவளையே பார்க்க...அவளும் அவனின் பார்வைக்கு சளைக்காமல் எதிர் பார்வை பார்த்தாள்.

"நீ எனக்காக இருக்கங்குற நம்பிக்கையை, நீ எனக்கு கொடுக்கலையே...அப்பறம் எப்படி உனக்காக காத்திருப்பேன் சொல்லு" என சரியாக கேட்டாள்.

பெண்ணவளின் முகம் கோபத்திலும் அழுகையிலும் சிவந்து இருக்க,உதடுகளோ உணர்ச்சியின் மிகுதியில் துடித்துக்கொண்டிருந்தது. குழல் கலைந்து அந்த நிலையிலும் பார்க்க அழகோவியம் போல் தான் அவன் கண்களுக்கு தெரிந்தாள் வர்ஷினி.

இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலக்க… அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல்,அவள் முகத்தை தன் மார்போடு அணைத்துக் கொண்டான். அவளும் அதற்கு மேல் முடியாமல் அவன் மார்பில் முகம் புதைத்து அழ தொடங்கிவிட்டாள்.

சற்றுநேரம் அவளின் மனஅழுத்தம் குறையும் வரை அழ அனுமதித்து மென்மையாக தலையையும் முதுகையும் வருடி,அவளின் கோபம் குறையும் மட்டும் இதம் தந்தவன் ,அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு "அது என்னடி வார்த்தைக்கு வார்த்தை டா போட்டு கூப்பிடுற...ஒழுங்கா அத்தான் சொல்லு" என்க,

அப்போது தான் அவன் மார்பில் சாய்ந்து இருப்பதை உணர்ந்தவள் சட்டென்று அவனில் இருந்து விலகினாள்.

"ஏய் இப்போ எதுக்கு தள்ளி போற" என அவளின் கரம்பிடிக்க அவளை நெருங்கினான் மதி.

"ச்சீ..போடா உன்னையெல்லாம் அத்தான்னு சொல்லமாட்டேன் போ" என முகம் திருப்ப…

"ஏய் என் முன்னாடி இப்படி முகத்தை திருப்புறது,உதட்டை சுழிக்கிறது இதெல்லாம் வச்சுக்கிட்டன்னு வை, அப்பறம் நான் என்னோட வேலையை காட்ட வேண்டியிருக்கும்" என கோபம் போல் சொன்னவன்,

"ஒன்னு அத்தான்னு கூப்பிடு இல்லனா சின்ன வயசில் கூப்பிடுவது போல் மதின்னு பேர் சொல்லி கூப்பிடு" கன்னம் கிள்ள,

"அதெல்லாம் முடியாது நான் வாடா போடா தான் சொல்லுவேன். எனக்கு நீ சொல்ற மாதிரி கூப்பிட பிடிக்கலை" என்றவள்….தன் கால்களை தரையில் ஊன்றி எக்கி அவன் உயரத்திற்கு வர முயன்றவளால் அவன் உயரத்தை எட்ட முடியவில்லை.

'பனமரம்…. பனமரம்..' என மனதில் நினைத்தவள் "ஓய் கொஞ்சம் கீழ குனி" என அவனை பார்த்து சொல்ல….

அவனோ "எதுக்குடி" என கிறக்கமாக குரலில் ஒருவேளை முத்தம் தான் தர போகிறாளோ என்ற ஓவர் கற்பனையில் தன்னை அவள் உயரத்திற்கு ஏற்ப குனிந்து நின்றான்.

அவனை நெருங்கியவள், மிக நெருக்கத்தில் நின்றுக்கொண்டு "கண்ணை மூடு" என்றாள்.

அவனும் 'என்ன பண்ண போறா இவ, பில்டப் எல்லாம் ஓவரா இருக்கே '...என ஒருவித எதிர்ப்பார்ப்பில் விழி மூடி நின்றான் தன்னவளின் விருப்பத்திற்கு இணங்கி.

அவளோ அவனையே குறுகுறுவென பார்த்தபடி தன் கையின் முதலில் கட்டை விரலை மடக்கி, அதன்பின் மற்ற விரலையும் மடித்துக்கொண்டு அவனை அடிக்க தயாராக, அவனோ முகத்தில் தோன்றிய புன்னகையுடன், ஒருவித மயக்க நிலையில் இருந்தான்.

"என்னையே அடிச்சிட்ட இல்ல உன்னை என்றவள்"அவன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைக்க,

அவளின் தீண்டலுக்காக காத்திருந்தவன்,அவளின் அடியில் உண்மையிலேயே வலியை உணர்ந்தான், "ஆ...அம்மா" என கதறலோடு விழியை திறக்க,அவளோ கைகளால் வாயை மூடிக்கொண்டு சிரித்துக்கொண்டு இருந்தாள்.

"ராட்சசி அடிச்சது இல்லாம சிரிக்க வேற செய்றியா" என தலையை தடவிக்கொண்டே அவளை பிடிக்க முயல...அவளோ அவன் கையில் சிக்காமல் மான் போல் துள்ளி குதித்து ஓடினாள்.

அவனும் நிறுத்தாமல் "நில்லுடி,நீ எங்க ஓடினாலும் இன்னைக்கு உன்னை விடுறதா இல்லை" என கட்டிலை சுற்றி அவளை துரத்திக்கொண்டு ஓடினான்.

வெகுநேரம் அவனிடம் சிக்காமல் ஆட்டம் காட்டியவள், மூச்சரைக்க வேகத்தை குறைக்க,அப்போது தான் அவளை பிடிக்க முடிந்தது மதியால்.

"ஒரு போலீஸ் காரனையே இவளோ நேரம் ஓடவிட்டுட்ட இல்ல, அதுக்கு தண்டனையா என அவளை நெருங்க… வர்ஷினியின் கயல்விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிய,

அவளை நெருங்கி நின்றவன்,எதுவும் செய்யாமல் "எல்லாத்துக்கும் கரெக்டா கணக்கு வச்சிருக்கேன்.எனக்கு ஒரு காலம் வராமலா போய்டும். அப்போ இருக்குடி உனக்கு" என்றவன் விலகி நிற்க அப்போது தான் அவளுக்கு மூச்சே வந்தது.

'பொறுக்கி பொறுக்கி' என வாய்க்குள் முணுமுணுக்க,
"எதுவா இருந்தாலும் சத்தமாவே சொல்லு...நீ என்ன சொன்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்க...அவளோ பிடிப்பட்ட நிலையில் அவன் முகம் பார்க்க தவிர்த்தாள்.

நாட்கள் செல்ல...அன்றைய நாளுக்கு பிறகு அனைவரும் அவள்மேல் தங்கள் பாசத்தை வெளிப்படையாக காட்ட தொடங்கியிருந்தனர். ஆனால் அவளால் தான் அவர்களுடன் இயல்பாக பேசி பழக முடியவில்லை. அவர்கள் வம்படியாக நிறுத்தி பேசினாலும் ஓரிரு வார்த்தையில் முடித்து கொள்வாள்.

முக்கியமாக சகுந்தலா அவளிடம் எந்த வம்பிற்கும் செல்வதில்லை. அன்றைய தினம் அவளின் வார்த்தை அந்தளவிற்கு இவரையும் தாக்கியிருந்தது.

வம்பு செய்வதில்லையே தவிர,பழையபடி கோபம் மட்டும் இன்னும் குறையவில்லை. அவள் வந்தாள் கண்டுகொள்ளாமல் இருப்பார்,முன்பு போல் எழுந்து செல்வதோ, திட்டுவதோ இல்லை.அவளை கடந்து செல்ல பழகி இருந்தார்.

இங்கு இப்படி இருக்க, அங்கு தர்ஷினியோ தன் அக்காவின் பிரிவில் மருகிக்கொண்டிருந்தாள்.
நடுவில் ஒருமுறை காய்ச்சல் கூட வந்துவிட்டது. ஆனால் சாந்தி தான் அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைப்பதற்குள் ஒரு வழியாகிவிட்டார்.

சண்முகசுந்தரம் இதற்கு முன்பாவது மனைவியின் கையில் சாப்பிட்டு கொண்டு இருந்தவர் இப்போது அதையும் தடுத்துவிட்டார். சாந்தியும் அவரிடம் பேச முயற்சிக்கவில்லை. அவருக்கா என்னைக்கு பேசணும்னு தோணுதோ அன்னைக்கு பேசிக்கொள்ளட்டும் என முதன்முறை தன் கோபத்தை அவரும் தெரிவித்தார்.

அப்படியே நாட்கள் செல்ல...அவர்களுக்கு திருமணம் முடிந்த பத்தாவது நாள்,வேலைக்கு சென்றவன் அதே வேகத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்தான்.

அறைக்குள் நுழைந்தவன் "ஓய் பொண்டாட்டி... ஒரு இரண்டு மூணு நாளைக்கு தேவையான ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணு வெளிய போகணும்" என மதி சொல்ல,

"அதை ஏன் என்கிட்ட சொல்ற,உனக்கு என்ன வேணுமோ அதை எடுத்துட்டு கிளம்பு" என அலட்சியமாக சொன்னவள், அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் சட்டமாக அங்குள்ள இருக்கையில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தாள் மித்ரா.

"நான் மட்டும் போக உன்னை எடுத்துவைக்க சொல்லலை,நீயும் தான் என்கூட வர" என்க.

அவளோ "நான் எதுக்கு வரணும்,அதுவும் உன்கூட...நானெல்லாம் எங்கேயும் வர மாட்டேன்" என உதட்டை சுழித்தாள்.

"உன்கிட்ட நிறைய தடவை சொல்லியிருக்கேன், என் முன்னாடி இப்படி பண்ணாதன்னு, என அவள் இதழை வலிக்கும்படி கிள்ளியவன்,சொல் பேச்சையே கேட்க கூடாதுன்னு முடிவில் இருக்கியா" என்றான் இதழை விடுவிக்காமல்…

"உன்னை வான்னு தான் சொன்னேனே தவிர, வரியா வரலாயான்னு உத்தரவு கேட்கலை.ஒழுங்கா கிளம்புற வழியை பாருடி" என்று திரும்ப..

'மூஞ்சியும் ஆளையும் பாரு, பனமரத்தில் பாதி உயரத்தில் இருந்துகிட்டு ஒரு சின்னப்பிள்ளையை எப்படியெல்லாம் மிரட்டுறான்.பொறுக்கி பொறுக்கி ' என மனதுக்குள் நினைத்தவள் வெளியே ஒன்னும் தெரியாத பிள்ளை போல் முகத்தை வைத்துக்கொண்டு "எங்க போறோம்,எதுக்கு போறோம்" என அடுக்கடுக்காய் கேள்விகளை முன்வைக்க,

'இவ கேள்விக்கு பதில் சொல்லியே என் காலம் போய்டும் போல' என நினைத்தவன், "ஏன் எங்கன்னு சொன்னாதான் வருவியா" என்க,

அவளும் "ஆமாம்" என்றபடி கையை கட்டிக்கொண்டு அவனையே அழுத்தமாக பார்த்தாள்.இல்ல இல்ல முறைத்தாள்.

மதியோ அவளின் முகத்தை வைத்தே அவள் நினைத்ததை கணித்தவன், அடக்கப்பட்ட சிரிப்புடன் "ஹனிமூனுக்கு தான்.கல்யாணம் ஆகி முழுசா பத்து நாள் கூட முடியலை,அதுக்குள்ள பொண்டாட்டியை கூட்டிட்டு ஹனிமூனுக்கு போகாமல் கோவிலுக்கா போகமுடியும்" என அவளை பார்த்து நிதானமாக சொல்ல,

அவளோ அதிர்ச்சியில் வாயடைத்து நின்றாள். "என்னது ஹனிமூனுக்கா" என அலறியவள், பயத்தில் அவனைவிட்டு இன்னும் தள்ளி சென்று சுவரில் பல்லி போல் சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டாள்.

அவளின் பயத்திலும் செயலிலும் வந்த சிரிப்பை முயன்று அடக்கியவன் "சீக்கிரம் பேக் பண்ற வழியை பாரு, நைட் கிளம்பனும்" என்றவன் அறையைவிட்டு வெளியே செல்ல...அவளோ போகும் அவனின் முதுகையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

அவன் மீண்டும் அறைக்குள் நுழையும் வரையிலும் கூட அந்த இடத்தை விட்டு அகலாமல் அதே அதிர்ச்சியில் இருக்க...அவளை நெருங்கியவன் "ஏய் என்னடி பகல் கனவா..? இன்னுமா பேக் பண்ணாம இருக்க" என கேட்க,

தயக்கத்துடன் "இல்ல நான் எங்கயும் வரமாட்டேன்" என முகம் பார்க்காமல் சொல்ல,

அவனும் "அப்படியா சரிவிடு நான் மட்டும் போய்கிறேன்" என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அதுவரை இருண்டு இருந்த முகம் பிரகாசமாக…

"ஹலோ மேடம் நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கலை, அதுக்குள்ள சந்தோஷம் ஆனா எப்படி' என்றவன், அப்படியெல்லாம் நான் சொல்வேன்னு வேற நினைப்பா...நீ வராலன்னா உன்னை தூக்கிட்டு போவேனே தவிர தனியால்லாம் போகவே மாட்டேன்" என்றான்.

வர்ஷினி அப்போதும் அடங்காமல் "இல்ல இல்ல நான் வரலை" என கிளிப்பிள்ளை போல் சொன்னதையே சொல்ல,

கடுப்பானவன் "இங்க பாருடி என் பொறுமையை சோதிக்காத...நீயா வந்தா கார்ல கூட்டிட்டு போவேன்,அடம்பிடிச்சா பைக் தான்.அன்னைக்கு மாதிரி அத்தானை கட்டிபிடிச்சிகிட்டு வரவேண்டியது தான். அப்பவும் அடங்கலன்னு வை, அப்படியே தூக்கிகிட்டு பாதை யாத்திரை மாதிரி நடந்தே கூட்டிட்டு போய்டுவேன்" என மிரட்டலுக்கு இறங்க அது சரியாக வேலை செய்தது.

"ஃபிப்டி கேஜி தாஜ்மஹால் அப்படின்னு உன்னை பார்த்து பாட கூட முடியாது போல, அவ்ளோ ஒல்லியா இருக்க,என்ன ஒரு நாற்பத்து ஐந்து கிலோவாவாது இருப்பியா" என்க…

அவளோ உதட்டை கடித்து "எப்படி சரியா சொல்றான் என்னோட வெயிட்டை" என எண்ணியவள் எதுவும் பேசாமல் இவன் சொன்னதை செய்யாமல் விடமாட்டான் என தன் உடமைகளை பேக் பண்ண தொடங்கினாள்.

அவள் இங்கு வந்த அடுத்த நாள் மாலையே அவளின் உடைகள் மற்றும் அனைத்து உடமைகளும் அவளின் நண்பர்கள், அதான் அந்த வாண்டு கூட்டங்களிடம் கொடுத்து அனுப்பியிருந்தார் சாந்தி.

அதிலிருந்து உடைகளை எடுத்து வைக்க நினைத்தவளுக்கு, எதை எடுத்து வைப்பது என்பதே தெரியவில்லை. அதில் அனைத்துமே புடவையாக தான் இருந்தது. கல்யாணத்திற்காக அவளுக்கு எடுத்த புடவைகள் இவை அனைத்தும்.அதில் ஓரிரண்டு சுடிதார்கள் மட்டுமே இருந்தது.

திரும்பி அவனை திருதிருவென பார்க்க,அவள் பார்வையை உணர்ந்தவன் அவனும் அவளை பார்த்து 'என்ன' என புருவங்களை உயர்த்தினான்.

"எங்க போறோம்னு சொல்லுங்களேன் பிளீஸ், என்கிட்ட வெறும் புடவை தான் இருக்கு" என்க..

"அதெல்லாம் எதுவா இருந்தாலும் பரவாயில்லை பேக் பண்ணு. ஹனிமூன்க்கு டிரஸா முக்கியம்" என அவளை பார்த்து கண்ணடித்தவன் ஹாலிற்கு சென்றான்.

அவனின் தந்தையும் சித்தப்பாவும் சோஃபாவில் அமர்ந்து தங்கள் தொழிலை பற்றி பேசிக்கொண்டிருக்க,இவனும் சென்று அமர்ந்தான்.

"என்னப்பா இன்னைக்கு டியூட்டி இல்லையா" என கேட்க,

"இல்லப்பா போய்ட்டு தான் வந்தேன். இன்னைக்கு நைட் சென்னைக்கு போகலாம்னு இருக்கேன்ப்பா.பஎன் கூட படிச்ச ஃப்ரண்டுக்கு நாளைக்கு கல்யாணம் அதான் என்றவன்,அப்படியே மித்ராவையும் கூட கூட்டிட்டு போறேன்.அவளும் இங்க வந்ததில் இருந்து
ரூம் உள்ளேயே இருக்கா...எங்கயாவது வெளிய போனா கொஞ்சமாவது தன் கூட்டைவிட்டு வெளியே வருவாள்" என்க,அவர்களுக்கும் அதுவே சரியாகப்பட்டது.

அனைத்தையும் அறையின் வாசலில் இருந்து கேட்டுக்கொண்டு நின்றிருந்த வர்ஷினிக்கு அப்போது தான் படபடக்கும் இதயம் இயல்புக்கு வந்தது.

அதற்கு மேல் எந்த கேள்வியும் கேட்காமல் வர்ஷினியும் பயணத்திற்கு தேவையான அனைத்தையும் எடுத்துவைத்தாள்,அதுவும் அவளுடையதை மட்டும்.

மதியும் தனக்கு தேவையான உடமைகளை அவனே ஒரு பையில் எடுத்துவைத்தான்.

சிறிது நேரத்தில், சாவித்திரியும் மீனாட்சியும் அறைக்குள் நுழைய,அவர்களை பார்த்து எழுந்து நின்றவள் அமைதியாக நிற்க,

'இந்தாடா இந்த புடவையும் நகையும் எடுத்துட்டு போ.கல்யாணத்துக்கு போற அன்னைக்கு இதை போட்டுக்கோ. இது நம்ம குடும்ப நகை,எந்த விசேஷத்திற்கு போனாலும் இப்படி தான் போகணும் என்றவர், இதுயெல்லாம் உனக்கு வாங்கியது தான்" என்க…

"இல்ல எனக்கு எதுவும் வேணாம்.இதை நீங்களே வச்சுக்கோங்க" என்றவள் அமைதியாக நிற்க

"ஏண்டா இன்னும் எங்க மேல உள்ள கோபம் போகலையா...மன்னிச்சிடு டா கண்ணு. நானும் தாத்தாவும் வேண்டாத நாளில்லை,கடைசி காலத்தில் நாங்க மேல போய் சேர்வதுக்கு முன்னால ஒரு தடவை உன்னை பார்த்துட மாட்டோமான்னு ஏங்கி தவிச்சுட்டு இருந்தேன். இப்போதான் மனசுக்கு திருப்தியா இருக்கு,திரும்பவும் இந்த வீட்டை வாழ வைக்கும் மகாலட்சுமி மாதிரி... என் பேத்தியே இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததில் அவ்வளவு சந்தோஷம்" என நெட்டி முறித்தார்.

அவரின் வார்த்தைகள் அவளை தாக்க, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

"அப்பத்தா இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்க,அதெல்லாம் உன் பேத்தி வாங்கிக்குவா" என சொன்னவன் திரும்பி அவளை அழுத்தமாக பார்க்க,அதில் இப்போ நீ அதை வாங்கி தான் ஆகவேண்டும் என்ற கட்டளை இருந்தது.

அவளும் வேறு வழியில்லாமல் வாங்கி கொண்டாள்.அவளுக்கும் தன் அம்மாச்சியின் அழுகை வருத்தத்தை கொடுக்க,அவன் சொல்லவில்லை என்றாலும் அதை வாங்கித்தான் இருந்திருப்பாள்.

ஆனால் அவனின் முறைப்பால் அவனை மனதுக்குள் திட்டியபடி 'இதுக்கெல்லாம் உனக்கு இருக்குடா' என்றாள் வெளியே திட்ட முடியாத ஆத்திரத்தில்.
 

Anjali

Well-known member
Wonderland writer
இரவு கிளம்பும் நேரமும் நெருங்க,
"ஏம்ப்பா மதி எதுல போறீங்க" என அவனின் தாத்தா கேட்க,

"நம்ம கார்ல தான் தாத்தா.பஸ் டிரெயின் எல்லாம் செட் ஆகாது. அதான் நம்ம கார்லயே போகலாம்னு நினைக்கிறேன்" என்றான்.

"அதுசரிப்பா நைட் ஃபுல்லா வண்டி ஓட்டனுமே,உன்னால கண்முழிச்சி இருக்க முடியுமா...கஷ்டமா இருக்கும், வேணும்னா நம்ம ஊருக்கார பயலுவோ யாரையாவது கூட்டிட்டு போயேன்" என்க..

'இவரு என்ன, நம்ம கஷ்டபட்டு போட்ட பிளானை எல்லாம் வீணாக்கிடுவார் போலவே' என எண்ணியவன் அவசரமாக தலையாட்டி மறுத்தான். "அதெல்லாம் ஒன்னும் வேணாம் தாத்தா, எனக்கு எந்த கஷ்டமும் இல்லை.நானே பார்த்துக்கிறேன்" என்றான்.

அவனின் அவசரமான பதிலில் அனைவருமே சிரித்துவிட்டனர். அவனோ ஒரு அசட்டு சிரிப்பை உதிக்க,அவளுக்கோ எதுக்கு இப்போ குடும்பமே இப்படி சிரிக்குது என தனக்கு ஒன்றும் புரியவில்லையே என்ற கடுப்பில் இருந்தாள்.

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாய், சகுந்தலா அனைவரின் சிரிப்பையும் கண்டு ஆத்திரத்தில் பல்லை கடித்தார். இது அனைத்தும் தன் மகளுக்கு நிகழ வேண்டியது என்ற கோபத்தில்.

அவருக்கு இன்னும் புரியவில்லை ஒருவேளை மதுவை அவன் மணம் முடித்திருந்தால் கூட கண்டிப்பாக இதெல்லாம் நடந்திருக்காது என்று.

மனதுக்கு பிடித்த,காதாலியுடனான தனிமை என்பது வரம் அதுவும் அதே காதலி மனைவியாக வந்த பின்னர் கிடைக்கும் தனிமை ஒவ்வொரு ஆண்மகனுக்கும் பேரானந்தம் அல்லவா...அந்த நிலையில் தான் இருந்தான் மதி.

நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பது இருக்கு.நல்லவர் என்று எண்ணி பார்த்தால் எதிரில் கொலைகாரன் நின்றாலும் அவன் உத்தமனாக தான் தெரிவான். அதுவே மனதில் வன்மத்துடன் பார்த்தால் பச்ச குழந்தை கூட தப்பாக தான் தெரியும்.

சகுந்தலாவின் பார்வையும் அப்படிப்பட்டது தான். தன் மகள் இருக்கவேண்டிய இடம் அது என்று எண்ணி எண்ணியே அவர் தூக்கி வளர்த்த மகள் மீதே தீராத கோபத்தையும் வன்மத்தையும் வளர்த்துக்கொண்டார்.

அவரின் கோபம் பிற்காலத்தில் எத்தகைய விபரீதத்தை தர போகிறது என்பதை அவரும் அறியாமல் தான் போனார்.
 
Status
Not open for further replies.
Top