அத்தியாயம் - 40
ஆதி மற்றும் மகிழ்வதனி ஜோடி தான் முதலில் வீட்டிற்கு வந்தனர். காரிலிருந்து இறங்கிய ஆதியை பார்த்த ஸ்ருதியோ ஆசையாக அவனிடம் பேச ஓடி வந்தாள்.
ஆனால் அவனோ வேகமாக இறங்கி அடுத்த பக்கம் வந்து கார்க்கதவை யாருக்காகவோ திறந்து விடுவதை பார்த்தவள், 'இவர் யாருக்கு கதவெல்லாம் திறந்து விட்டுகிட்டு இருக்காரு..?' என்ற யோசனையுடனே எட்டிப் பார்த்தாள்.
காரின் கதவை திறந்து மகிழின் கைகளைப் பிடித்து மெதுவாக இறக்கி விட்டவனை புன் சிரிப்புடன் பார்த்தபடி இறங்கினாள் மகிழ்வதனி....
இந்த காட்சியை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதியின் உலகமே தட்டாமாலை சுற்றியது. அதுவும் மகிழின் கழுத்தில் கிடந்த புது மஞ்சள் கயிறு நடந்திருக்கும் நிகழ்வை அப்பட்டமாக எடுத்துக் கூற....இடி மின்னல் தாக்கியவளை போல் அப்படியே அசைய கூட முடியாமல் ஆடிப் போய் நின்றிருந்தாள்.
ஆதியின் கார் சத்தத்தை கேட்ட அனைவரும் வீட்டின் முன் வரவேற்பறையில் கூடிவிட, மெதுவாக மகிழ்வதனியின் கைகளை ஆதரவாக பிரித்தபடி அழைத்துக்கொண்டு வந்து வாசலில் நின்றவனை பார்த்த அனைவருக்கும் பேரதிர்ச்சி தான்...
முதலில் சுதாரித்த ஸ்ருதியின் தாய் தான், " என்ன மருமகனே பண்ணி வச்சிருக்கீங்க..? இவளால தானே நீங்க மரணத்தோட எல்லை வரைக்கும் போயிட்டு வந்தீங்க... இப்ப இந்த தரித்திரம் புடிச்சவள எதுக்காக இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க... அதுவும் எவன் கூட போயி திரிஞ்சிட்டு வந்தாளோ, வயித்துல புள்ளையோட வந்து நிக்கிறா... "என்றார் வன்மமாக மகிழ்வதனியையும் அவள் வயிற்றையும் பார்த்தபடி.
மகிழ்வதனிக்கு கண்கள் கலங்கி விட்டது அவரின் தகாத வார்த்தைகளால். இதனைப் பார்த்த ஆதியோ, ஏற்கனவே அவரின் குடும்பத்தின் மேல் பயங்கர கோபத்தில் இருந்தவன் ஆத்திரத்துடன் தனது அத்தையை நோக்கி, "மகிழ் பத்தி ஒரு வார்த்தை பேசுறதுக்கு கூட இங்க யாருக்கும் தகுதி கிடையாது. நீங்க இங்க வந்தீங்கனா உங்க அண்ணன் வீட்டில் இருந்து சாப்பிட்டீங்களா உங்க வேலைய பார்த்துகிட்டு உங்க வீட்டுக்கு கிளம்பி போய்கிட்டே இருக்கணும்... இங்கே இருந்துகிட்டு நாட்டாமை பண்ற வேலை எல்லாம் வச்சுக்க கூடாது" என்றான் கடாரான குரலில்.
"ஓ எங்க அண்ணன் வீட்டில நான் உரிமை கொண்டாட கூடாதோ...? கண்ட கண்ட நாயெல்லாம் உள்ள வரும்... ஆனா நான் வரக்கூடாது..." என்றார் அப்போதும் அடங்காத அகங்காரத்துடன்.
அவரைப் பார்த்து ஏளனமாக இதழ் வளைத்த ஆதியோ, " கண்ட கண்ட நாயா...இனி அவ சொன்னாதான் நீங்க உள்ளேயே வர முடியும்... ஏன்னா அவ என் பொண்டாட்டி இப்போ... " என்றான் அழுத்தமாக.
அவருக்கு மயக்கமே வராத குறை தான்... குரலே வெளியே வரவில்லை, ' என்னது பொண்டாட்டியா.???!' என்று வாயை திறந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரை ஒரு ஓரமாக தள்ளி விட்டபடி உள்ளே எட்டி தனது தாயைப் பார்த்தவன், "அம்மா ஆரத்தி தட்டு எடுத்துட்டு வரீங்களா..? உங்க மருமக மொத மொதன்னு வீட்டுக்குள்ள வரும்போது ஆரத்தி எடுத்து கூட்டிட்டு போகணும்ல" என்றான்.
அவனது குரலில் தான் அனைவருக்கும் உணர்வே வந்தது. அவன் தாயோ சுந்தரலிங்கேஸ்வரரை நிமிர்ந்து பார்க்க, அவர் 'சரி' என்னும் விதமாய் கண்களை மூடித்திறந்தார்.
அன்று அவனை கோமாவில் பார்த்த பிறகு இப்படி அவனை குடும்பமாக பார்ப்பதற்கு அங்கிருந்த அனைவருக்கும் நிம்மதியாகத்தான் இருந்தது. அவனது வாழ்க்கை அவன் விருப்பப்படியே அமையட்டும் என தாய் தந்த இருவரும் ஒத்த மனதுடன் நினைத்தனர்.
சுந்தரலிங்கேஸ்வரர் கண்ணசைத்தவுடன் வேகமாக உள்ளே சென்ற ஆதியின் தாயோ ஆரத்தி கரைத்து எடுத்துக்கொண்டு வந்து, உடன் அர்ஜுன் தாய் சகுந்தலாவையும் சேர்த்துக் கொண்டு இருவரும் ஆரத்தி சுற்றி, "உள்ளே வா மா.... வலது கால எடுத்து வச்சு வா.." என்றபடி மகிழன் கைகளை பிடித்து அழைத்துச் சென்றனர்.
அவர்களின் செயலில் ஆதியின் இதழ்களில் ஒரு திருப்தியான புன்னகை உதித்தது.
அங்கே நின்று கொண்டிருந்த ஸ்ருதியின் குடும்பத்தை யாரும் ஒரு பொருட்டாக கூட நினைக்கவில்லை.
உள்ளே வந்து அனைவரும் மகிழ்வதனியை விளக்கேற்ற வைத்து அங்கே அமர சொல்லி பேசிக் கொண்டிருந்த வேளையில் வெளியே அர்ஜுனின் கார் சத்தம் கேட்டது.
அவர்களுடன் பெரிதாக ஒட்டாமல் அமர்ந்திருந்த பூர்ணிமாவோ... "அர்ஜுன் அண்ணா வந்துட்டாரு" என்ற படி எழுந்து வெளியே சென்றாள்.
அங்கே அவள் கண்ட காட்சியில் அப்படியே உறைந்து நின்று விட்டாள். ஸ்ருதியோ மயக்க நிலைக்கே சென்றுவிட்டாள். 'இதற்கு மேல் இந்த பாடி தாங்காதடா..' என்னும் நிலை தான் ஸ்ருதியின் குடும்பத்தாருக்கு.
அங்கே மாலையும் கழுத்துமாக யாழினியும் அர்ஜுனும் வந்து கொண்டிருந்தனர்
பூர்ணிமா நின்ற தோற்றத்திலேயே ஏதோ தவறாக பட அனைவரும் எழுந்து வெளியே வந்து பார்த்த பொழுது, பயத்தில் வெடவெடவென நடுங்கிய யாழினியின் கைகளை இறுக்கமாக பிடித்தபடி குடும்பத்தாரை எதிர்கொண்டான் அர்ஜுன். யாழினியோ குனிந்த தலை நிமிரவேயில்லை... யாரையும் நிமிர்ந்து பார்க்கவே இல்லை.
அவர்களைப் பார்த்த மகிழ்வதனியோ வேகமாக யாழினியை நெருங்கியவள், "என்னடி பண்ணி வச்சிருக்க...? இன்னும் உன் படிப்பு கூட முடியலையே...? என்றாள் ஆதங்கமாக.
தனது அக்காவின் குரலை கேட்ட உடனே விலக்கென்று நிமிர்ந்து பார்த்த யாழினியோ, கண்களில் கண்ணீருடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்த அக்காவின் வதனத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அவள் ஏதாவது யாழினியை திட்டி விடுவாளோ என்ற பதட்டத்தில் அர்ஜுனோ மகிழ்வதனியிடம், "அண்ணி ப்ளீஸ் அவளை எதுவும் சொல்லாதீங்க... நான் தான்.." என்றான் அவசரமாக.
இவர்களின் விஷயம் ஓரளவிற்கு ஆதிக்கு ஏற்கனவே தெரியும் என்றாலும் இப்படி அவசரப்பட்டு இருக்க வேண்டாமே எனும் எண்ணம் தான் அவனுக்கு.
மற்றபடி யாழினியை அவன் திருமணம் செய்து கொண்டது சந்தோஷம்தான்.
எனவே அங்கிருக்கும் சங்கடமான சூழ்நிலையை மாற்றும் பொருட்டு, "சரி விடுங்க நடந்தது நடந்துருச்சு இனி எதையும் மாற்ற முடியாது" என்றபடி தனது தந்தையையும் சித்தப்பாவையும் திரும்பி பார்த்தான்.
அர்ஜுனின் தந்தைக்கோ இதில் பெரிதாக உடன்பாடு இல்லை. இருந்தாலும் ஆதியை மீறி அவரால் எதுவும் பேச முடியவில்லை. தனது ஆதங்கத்தை தனக்குள்ளே மறைத்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தார்.
அப்புறம் என்ன எல்லாம் ஓரளவிற்கு சுபமாக முடிய மீண்டும் ஆரத்தி கரைத்து எடுத்து வரப்பட்டு அர்ஜுனும் யாழினியும் உள்ளே அழைத்து செல்லப்பட்டனர்.
அன்றிலிருந்து இரு தினங்கள் கழித்து விக்கியுடன் போனில் பேசி அனைத்தையும் கூறி அவனிடம் மன்னிப்பும் கேட்டிருந்தாள் மகிழ்வதனி.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட விக்கியோ வேறு எதுவும் பேசாமல் ஒரு நாள் ஆதியின் அலுவலகத்திற்கு சென்றிருந்தான்.
தனது அறைக்குள் நுழைந்த விக்கியை எதிர்கொள்ள தயக்கம் ஆதிக்கு.. "சொல்லுங்க.. என்கிட்டே என்ன பேசனும்".. தன்மையாய் பேச்சை ஆரம்பித்தான்..
"நான் மகிழோட வெல்விஷர் மட்டும் தான்..." என்று விக்கி பேச ஆரம்பித்ததுமே ஆதி அவன் கரத்தை பிடித்துக் கொண்டான்..
"இதை நீங்க சொல்லவே வேண்டாம்.. நான் உங்களை சந்தேகப்படவே இல்லை.. தயவுசெஞ்சு மனசில எதையும் போட்டு குழப்பிக்காதிங்க..ப்ளீஸ் "எனவும் வேகமாக மறுப்பாக தலையசைத்தான் விக்கி..
"இல்ல..ஆதி.. நான் பேசவேண்டிய முக்கியமான விஷயம் இதுதான்.. ரொம்ப நாளா இந்த விஷயத்தை உங்ககிட்டே பேசி புரியவைக்க என் மனசு அரிச்சிக்கிட்டே இருந்தது.. ஆனா இப்போதான் அதுக்கான சந்தர்ப்பம் கிடைச்சது".. என விரக்தியாக புன்னகைத்தான்..
சொல்லுங்க விக்கி கேட்கிறேன்.. என்றான் மென்மையாக.. அவன் பேசப்போவது என்னவென்று ஆதிக்கும் தெரியுமே.... மனது வலித்தது தான்.... இருந்தாலும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தான்.
ஏனென்றால்...பிரதிபலன் எதிர்பாராமல் அவன் மகிழுக்கு செய்த உதவிக்கு எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் கடமைப்பட்டிருக்கிறான் அல்லவா....!
"உங்களுக்கு சந்தேகம் இன்னிக்கு வரல.. என்னிக்காவது ஒரு நாள் உங்க மனசுல அந்த சந்தேகம் வந்து மகியை வார்த்தையால வதைச்சிராதீங்க.... அவ ஏற்கனவே நொந்து போயி இப்பதான் ஏதோ ஓரளவுக்கு நிம்மதியா இருக்கா " எனக் கூறவும் செருப்பால் அடித்தது போல் இருந்தது ஆதிக்கு.
ஆதியின் முகத்தையே கூர்மையாக பார்த்தபடி" மகிழின் வயிற்றில் வளர்வது உங்கள் குழந்தை தான்" என்றான்.
"தெரியும்" என்றான் இறுக்கமான குரலில் ஆதி... முகம் மிகவும் இறுகிவிட்டது விக்கியின் பேச்சினால்.
"ம்.. இருந்தாலும் ஆதாரப்பூர்வமா ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து வைச்சிக்கங்க.. எல்லா விஷயங்களுக்கும் ஆதாரம் தேடற உங்களுக்கு அந்த ஆதாரம் எப்பவேணா பயன்படலாம்.. ஏன்னா உங்களுக்கு சந்தேகம் எப்போ வரும்னு சொல்ல முடியாதே" எனக் கூறவும் நெருப்பில் இட்ட புழுவாய் துடித்துப் போனான் ஆதி.
"விக்கி பிளீஸ் வார்த்தையால என்னை கொல்லாதீங்க.. நான் ஒன்னும் அவ்ளோ கேவலமானவன் இல்லை... நான் மகிழ ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன்.. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால சில விஷயங்கள் நடந்துருச்சு... அதுல என்னோட தப்பு அதிகம் தான்... நான் ஒத்துக்குறேன்... என்னோட தப்ப திருத்திக்க.... எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க ப்ளீஸ் "bஅவன் குரல் உடைந்தது வேதனையில்.. தன்னை இத்தனை தரம்தாழ்த்தி பேசியது உச்சக்கட்ட அவமானத்தை கொடுத்தது.
"இல்லை ஆதி.. உங்களை காயப்படுத்தவோ குத்திக் காட்டவோ நான் இதை சொல்லல.. ஆனா இனிவரும் நாட்கள்ல மகி வாழ்க்கையில சந்தோஷம் மட்டுமே நிலைச்சிருக்கனும்.. ஆதி.. மகிழ் ரொம்ப பாவம்.. ஒரு பொண்ணு வாழ்க்கையில அனுபவிக்க கூடாத கஷ்டத்தையெல்லாம் அவ அனுபவிச்சிட்டா.. உலகத்திலேயே கொடுமையான விஷயம் என்ன தெரியுமா.. ஒழுக்கமான பொண்ணுக்கு கிடைக்கிற தப்பான பெயர்.. உலகமே அவதூறா பேசினாலும் அவ தாங்கிக்குவா.. ஆனா ஆறுதலா இருக்கவேண்டிய நீங்க கூட அவளை கைவிட்டா அவ என்னதான் பண்ணுவா சொல்லுங்க".. எனவும் ஆதி "விக்கி பிளீஸ் இப்போ எதுக்கு அதெல்லாம்" என அப்பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தவன்... பொதுவாக சில விஷயங்களை பேசிவிட்டு அவனை அனுப்பி வைத்தான்.
நாட்கள் அதன் பாட்டுக்கு செல்ல மகிழ்வதனியை ஆதியின் தாய் மற்றும் சித்தி நன்றாக பார்த்துக் கொண்டதால் ஆதி மீண்டும் அலுவலகத்திற்கு எப்போதும் போல் சென்று வர ஆரம்பித்து விட்டான்...
இப்போதெல்லாம் ஆதியின் முகமே வேறு.. அவன் கோபம் எங்கோ காணாமல் போய்விட்டது.. கனிவு மட்டும் அவன் முகத்தில்.. அதுவும் மகிழ்வதனியிடம் ஓவர் குழைவு தான்....
யாழினி கூட அவ்வப்போது மகிழ்வதனியை கிண்டல் செய்து கொண்டிருப்பாள்.
யாழினிக்கு இரட்டை மகிழ்ச்சி...! தனது அக்காவுடனும் இருக்க முடியும், அதே நேரத்தில் தனது கல்லூரி படிப்பை தொடர்ந்து படிக்கவும் முடியும் என ஓவர் குதூகலத்தில் சுற்றி திரிந்தாள்... வழக்கம்போல் அவளது படிப்பு முடிவதற்காக வாழ்க்கையை தொடங்காமல் அர்ஜுன் காத்திருக்கிறான்....
மகிழ் அதிகமாக ஆதியிடம் பேசமாட்டாள்.. தேவைக்கேற்ப மட்டுமே உரையாடுவாள்.. அவளது மனநிலையை உணர்ந்த ஆதியும் அதற்கேற்றார் போல் அவளிடம் அதிகமாக எதிர்பார்க்க மாட்டான்.
அதே நேரத்தில் சில நாட்கள் மகிழ் சரியாக தூங்காமல் இருப்பதை கவனித்தவன், அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கான சில வேலைகளை செய்து முடித்தவன்.. அந்த வார இறுதி ஞாயிற்றுக்கிழமை அவளுடன் தனியாக பேசுவதற்காக அவர்களின் கடற்கரை பங்களாவிற்கு அழைத்து வந்திருந்தான்.
ஈரக்காற்று அவளின் கூந்தலை தொட்டு விளையாட... அதனை ஓரமாக ஒதுக்கி விட்டபடி அவன் அவள் முகத்தைப் பார்த்து பேச ஆரம்பித்தான்.
"மகிழ் நா உன்னக் கேட்காமல் சில முடிவு எடுத்திருக்கேன். அதெல்லாம் உனக்கு ஓகே வா...?" என்று கூறியபடி பேச்சை ஆரம்பித்தான்.
அவளோ 'என்ன...?' என்பது போல் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"உங்க அண்ணனுக்கும் அம்மாவுக்கும் அமெரிக்காவுல ட்ரீட்மென்ட் பண்றதுக்கான எல்லாம் ஏற்பாடும் பண்ணி இருக்கேன்... நெக்ஸ்ட் வீக் அவங்கள அங்க அனுப்புறோம். அங்க என்னோட பிரண்ட் இருக்கான். அவனோட பேமிலியும் அங்க தான் இருக்காங்க... அவங்கக்கிட்ட பேசிட்டேன் ஹாஸ்பிடல்லையே எல்லா பெசிளிட்டியும் பண்ணி கொடுத்துடுவாங்க.. வேற எதுவும் தேவைன்னா என்னோட பிரண்டு பாத்துக்குவான்."
"உனக்கும் டெலிவரி ஆகி ஓரளவுக்கு சரியானதுக்கப்புறம், நாம போயி அங்க கொஞ்சம் நாள் ஸ்டே பண்ணி அவங்கள நாம பாத்துக்கலாம்.. மேபி அதுக்குள்ளயே அவங்க ரெண்டு பேருக்கும் கியூர் ஆகுறதுக்கு கூட சான்ஸ் இருக்கு" என்றான்.
அவன் பேச பேச மகிழின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிய ஆரம்பித்தது. தன் மனதில் இருக்கும் பெரும் பாரத்தை துடைத்து விட்டான்... அதுவும் தான் கூறாமலே...! என எண்ணியபடி அவனை நெருங்கி அமர்ந்து லேசாக அனைத்து கொண்டாள்.
அவனும் அவளை நன்றாக இழுத்து இறுகணைத்து தனது மடியில் அமர வைத்தபடி, "நீ எதுவும் வாயைத் திறந்து சொல்லலைனாலும் உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியும்டி... இனிமே நான் உனக்கு ஒரு நல்ல ஹஸ்பண்டா இருப்பேன்."
"அதே நேரத்துல உன்னைய போர்ஸ் பண்ணவும் மாட்டேன்.. உனக்கு எப்ப என் மேல முழுசா நம்பிக்கை வருதோ அப்போ நீ என்கிட்ட நெருக்கமா நடந்துக்கிட்டா போதும்... அது வரைக்கும் நீ நிம்மதியா இருந்தாலே எனக்கு சந்தோஷம் தான்..." என்றவனை கண்ணீரோடு இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு இருந்தாள்.
பிறை நிலவாய் தொடங்கி...
வளர்பிறை நிலவாய் காதல் வளர்த்து...
முழு நிலவாய் மோச்சம் அடைந்திருந்தது மகிழின் மேல் ஆதி கொண்டிருந்த காதல்....
நீ இல்லாமல் நான் இல்லை என்ற நிலை வந்து விட்ட பிறகு இனி பிரிவுகளுக்கு இடமில்லை....
தவறுகள் நிற்கப் போவதில்லை.. இருப்பினும் அளவுகடந்த காதலால் மட்டுமே பிழையின்றி ஒருவரை ஒருவர் நேசிக்க முடியும்...!
உனக்கு நான்...எனக்கு நீ..என இருவரும் காலங்களை தாண்டி பிழையின்றி நேசித்து வாழ வாழ்த்தி விடை பெறுவோம்....
சுபம்...
கருத்துத்திரி
41. பிழையின்றி நேசிக்கவா- விமர்சன திரி
41. பிழையின்றி நேசிக்கவா- விமர்சன திரி
aadvikapommunovels.com
Last edited: