ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சென்னை செந்தமிழே - கதை திரி

Status
Not open for further replies.

swwee

Active member
Wonderland writer
சென்னை செந்தமிழே -preview

வட்ட வடிவான மேஜையில் உட்கார்ந்து கொண்டு வினிதா பேசபேச சுந்தரிக்கு ஆச்சரியம், அதிசயம், ஆற்றாமை கூடவே அசிங்கம்.

எவ்வளவு பெரிய விசயத்தை கொஞ்சமும் அலட்டாமல் பேசுகிறாள் இவள்! இவளும் பெண் தானே! முரளி மாமா பத்திரமாக நாடு திரும்ப வேண்டுமே. இந்திய வெளியுறவு துரை மூலம் பேசினாலும் அது கிணற்றில் போட்ட கல் போலத்தான் இருக்கிறது.

வினிதா கெஞ்சினாள். “பிளீஸ் பிளீஸ் சுந்தரி. இது ஒன்னு தான் இப்போ நமக்கு வழி. புரிஞ்சிக்க. யோசிக்காத”

அவள் எண்ணம் புரிந்தது. முரளி மீது அத்தனை காதலாம் அவளுக்கு. இழப்பு அவளுக்கு அல்லவே. சுந்தரிக்கு மட்டும் தானே. முரளி மாமா நாடு திரும்ப சுந்தரி கொடுக்கும் விலை என்ன! யாருக்கு முரளி மீது காதல் அதிகம்?

நல்ல மனிதன் தான், உலகளவில் அவருக்கு செல்வாக்கு அதிகம், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தால் போதும், ஒரே இரவு தான் சுந்தரி. வினிதா பேசிக்கொண்டே போனாள். சுந்தரிக்குள் பிரவாகம் உண்டானது. ஒரு ராத்திரிக்கு கூப்பிடறானா ஒரு ராத்திரிக்கு..! வைக்கிறேன் பெரிய ஆப்பு வைக்கிறேன்.

1313.jpg

“இப்படிதான் இது போகனுமா?”

“ம் ஆமாம்”

“என்ன மாதிரியான விளையாட்டு இது?”

“இது விளையாட்டெல்லாம் இல்லை”

“சுந்தரி பாவம்”

“நானும் பாவம் தான்”

“சுந்தரி நல்ல பெண்”

“நானும் தான் நல்ல பையன்”

“எந்த நல்ல பையன் ஒரு பெண்ணை இக்கட்டில் வைத்து, மிரட்டி இப்படி ஒரு ராத்திரிக்கு அழைப்பான்..!” ஆச்சரியமாகக் கேட்டான் அவன்

இந்த நல்ல பையன் அழைப்பான் என்றவன் காரை திருப்பினான்.
 

swwee

Active member
Wonderland writer
1.யார் அது

ஓ..வென இரைச்சல்,வண்ணம் நிறைந்த விளக்குகள் அது இரவா,பகலா தெரியாத அளவுக்கு வெளிச்சமும் குளுமையும். அந்த மால்'லை சுற்றி பார்த்துக்கொண்டு சும்மா நடந்தாலே பாதி நாள் தேவைப்படும். ஆசையை தூண்டும் கடைகள் எவ்வளவு சம்பாதித்தாலும் விழுங்கிக் கொள்ளும். வித விதமான மக்கள், அவர்கள் கையில் கைப்பேசி அதை மேலே உயர்த்தி போட்டோ எடுத்துக்கொண்டே நடப்பவர்கள் ஏராளம்.
குழந்தைகள் ஓடியாட இடம் கிடைக்க ஓட்டமெடுத்து சுற்ற, இளம் வயதினர் தங்கள் காதல், நட்பு, உலக அறிவை வளர்க்க கூடிப் பேசி சிரிக்க, அப்பாக்கள் அம்மாக்களை “அம்மா தாயே..! போதும் ஷாப்பிங்” என்று ஓடியாடும் குழந்தையை கவனித்துக்கொண்டு அதே சமயம் மனைவியின் ஷாப்பிங் குதுகலத்தை கட்டுப்படுத்தி கொண்டும் அவரவர் நேரத்தை செலவழித்துக்கொண்டிருந்தனர்.

வெட்ட வெளியில் அழகாய் மேஜைகள் அமைத்து காபி கடை என்று பெயர் வைத்திருந்த கடையில் நிறைய கூட்டம். அத்தனை பெரிய மாலில் சுற்றி கால் ஓய்ந்தவர்கள் நிறையப் பேர் அங்கே அமர்ந்திருந்தனர்.வட்ட வடிவான மேஜையில் உட்கார்ந்து கொண்டு வினிதா பேசபேச சுந்தரிக்கு ஆச்சரியம், அதிசயம், ஆற்றாமை கூடவே அசிங்கம்.

எவ்வளவு பெரிய விசயத்தை கொஞ்சமும் அலட்டாமல் பேசுகிறாள் இவள்! இவளும் பெண் தானே! முரளி மாமா பத்திரமாக நாடு திரும்ப வேண்டுமே. இந்திய வெளியுறவு துரை மூலம் பேசினாலும் அது கிணற்றில் போட்ட கல் போலத்தான் இருக்கிறது.

வினிதா கெஞ்சினாள். "ப்ளீஸ் சுந்தரி. இது ஒன்னுதான் இப்போ நமக்கு வழி. புரிஞ்சிக்க. யோசிக்காத”

அவள் எண்ணம் புரிந்தது. முரளி மீது அத்தனை காதலாம் அவளுக்கு. இழப்பு அவளுக்கு அல்லவே. சுந்தரிக்கு மட்டும் தானே. முரளி மாமா நாடு திரும்ப சுந்தரி கொடுக்கும் விலை என்ன! யாருக்கு முரளி மீது காதல் அதிகம்?

நல்ல மனிதன் தான், உலகளவில் அவருக்கு செல்வாக்கு அதிகம், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தால் போதும், ஒரே இரவு தான் சுந்தரி. வினிதா பேசிக்கொண்டே போனாள். சுந்தரிக்குள் பிரவாகம் உண்டானது. ஒரு ராத்திரிக்கு கூப்பிடறானா ஒரு ராத்திரிக்கு..! வைக்கிறேன் பெரிய ஆப்பு வைக்கிறேன். எந்த கிழட்டு நாய் என்று போய் பார்த்து பாடம் சொல்லி தருகிறேன். உள்ளுக்குள் சூளுரைத்துக்கொண்டாள்.

ஏனோ ஏமாற்று காலமாகவே போகிறது சுந்தரிக்கு. ஏமாற்றம் கொடுக்கும் கோபம் இம்முறை வெடிக்க தயராக இருக்க அவளுக்கென்றே கிடைத்திருக்கிறான் ஒருவன். அது என்னவோ பெண்கள் என்றால் இவர்களுக்குப் பாலின இச்சை மட்டும் தான் நினைவுக்கு வரும் போல. நிலவுக்குப் பிரயாணப்பட்டும், உலகத்தின் இருண்ட ரகசியங்களைக் கண்டுபிடித்தும் மனிதக்குலம் உயர்வடைந்தாலும் பெண் ஆசை தீரவில்லை இவர்களுக்கு. ஒரு பெண்ணை தன் காலடியில் நசுக்குவதில் என்ன இன்பமோ இவர்களுக்கெல்லாம், சீ..! என்ன இனமோ..!

வினிதா அழுகையுடன் பேசி முடிக்க.சுந்தரி தான் அமர்ந்திருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்த முடிவுடன் அட்ரஸ் குடுங்க வினிதா, நான் அங்க போய் அவரை பார்க்கிறேன் என்றாள்.

அந்த நல்ல மனிதன் முகவரி வாங்கிகொண்டாள்.

வினிதா அழுவதில், அவள் புலம்புவதை கேட்பதில் சுந்தரிக்கு இஷ்டமில்லை. ஒரு பிரச்சனையை ஐயோ நடந்துவிட்டதே என்று அதை நினைத்து புலம்புவதை விட்டு அடுத்து என்ன என்று யோசித்து செயல்படுவது தானே பிரச்சனையை தீர்க்கும்.

சுந்தரியால் சும்மா உட்கார முடியாது. எந்த பிரச்சினைக்கும் அப்படி சோகமாக உட்கார அவள் மூளை விடாது. பிறரின் செயல், பேச்சு போக்கு வைத்தே அவர்கள் உள்மனது எண்ணம் வரை அவளால் அறிய முடியும். அது என்ன வரமோ அவளுக்கு. அதனாலே நிறைய முறை நிறைய சிக்கலிருந்து தப்பித்து இருக்கிறாள்.

வினிதாவிற்கு இன்னமும் ஒரு அழுத்தமான உறுதி தேவைப்பட்டது போல “முரளி அங்கே ஜெயிலில் நிறைய கஷ்டப்படுவாரோன்னு நினைக்க நினைக்கப் பயமா இருக்கே சுந்தரி” என்று அழுதாள்.

கோபம் கொந்தளிக்க “முரளி எனக்கு மாமா. எனக்கும் சொந்தம். என்னால முடிந்தத செய்றேன்” என்றவள் எழுந்து நடக்க தொடங்கினாள்.

எரிச்சலானது வினிதாவிற்கும், அதை காட்டி கெடுத்துக்கொள்ள அவள் தயாரில்லை. என்னமோ வினிதா மீது காதல் என்றாலும் முரளிக்கு சுந்தரி என்றால் ஒரு தனிப் பெருமை, மரியாதை. சுந்தரி சிரித்தால், சுந்தரி அழுதால்,சுந்தரி வருத்தப்பட்டால் எல்லாவற்றிற்கும் முரளியின் எதிர்வினையும் அதிகமாக இருக்கும்.

‘எனக்கும் சொந்தம்’ வேண்டுமென்றே அழுத்தம் கொடுத்து பேசியது உள்ளுக்குள் கொஞ்சம் வலித்தாலும் நீ சுயநலவாதியாக நடந்து கொண்டால் நானும் நடப்பேன் என்று காட்ட மட்டுமே சுந்தரி அப்படி சொன்னது. அவள் சுயநல புத்தியை அவளுக்கு எடுத்துக்காட்ட வேண்டாமா? கொஞ்சம் யோசித்தால் புரியும். யோசிப்பாளோ..!

மால் விட்டு வெளியே வந்தாள் சுந்தரி. ஓடிப் போய் அறைக்குள் நுழைந்து அழுது தீர்க்க மனம் ஏங்கியது. அழுத்தம் தாளமுடியவில்லை. மூச்சு முட்டுவது போல இருக்க ஆட்டோ அழைத்தாள்.

பின்னால் திரும்பி பார்க்க வினிதா நேராக பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அவள் பார்வை பதிந்த இடத்தை பார்க்க அங்கே ஒரு உயர்வகை கார் ஒன்று தெரிந்தது. காரை முறைத்து பார்த்துவிட்டு ஆட்டோவில் ஏறினாள்.

“இப்படிதான் இது போகனுமா?”

“ம் ஆமாம்”

“என்ன மாதிரியான விளையாட்டு இது?”

“இது விளையாட்டெல்லாம் இல்லை”

“சுந்தரி பாவம்”

“நானும் பாவம்தான்”

சுந்தரி நல்ல பெண்

“நானும் தான் நல்ல பையன்”

“எந்த நல்ல பையன் ஒரு பெண்ணை இக்கட்டில் வைத்து, மிரட்டி இப்படி ஒரு ராத்திரிக்கு அழைப்பான்..!” ஆச்சரியமாக கேட்டான் அவன்

இந்த நல்ல பையன் அழைப்பான் என்றவன் காரை திருப்பினான்.

அவனுக்கு அவன் செய்வது தவறு என்கிற எண்ணம் சிறிதும் இல்லை. அவனுக்கு அவனே நன்மை செய்துகொள்வது போலத்தான் தோன்றியது அவனுக்கு.

தேடலின் ஏக்கம் அறிந்தவன் அல்லவா அவன்..!

அவள் மீது காதலா? இச்சையா?ஆர்வமா? என்னவென்று சொல்லுவான்..? அவளுடன் பேசவேண்டும், பழகவேண்டும் என்ற உந்துதல் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் கூக்குரல் இடுவது அவனுக்கு மட்டுமே தெரிந்தது.

ராயல் லீ மெரிடியன் ஐந்து நட்சத்திர விடுதியில் பாரில் அமர்ந்தான். விஸ்கி சூடாக தொண்டைக்குள் இறங்கியது. அவள் அவன் இருக்கும் பக்கம் பார்த்து முறைத்தது நினைவில் வந்து நின்றது. உள்ளுக்குள் ஒரு குதுகளம் புத்துணர்வு கொடுத்தது.

அவன் கவனித்த வரையில் இன்றுதான் அவள் அவன் புறம் திரும்பிப் பார்க்கிறாள்.

அவன் நினைவுக்கு வந்த நின்றது அந்த நாள்.அது இளமை துடிப்பில் படிப்பை முடித்து அவன் தொழில் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருந்த காலம். அவன் ஒவ்வொரு அடி வெற்றியும் அவன் மகுடத்தை உருவாக்கிகொண்டிருந்த காலம். தனி அடையாளம் என்ற தேடலில் இருந்த காலம்.

கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. சென்னை விமான நிலையம் வந்து இறங்கியவன் கண்ணில் விழுந்தாள் அந்த பெண். ரொம்பவும் ஒல்லியாக, குழந்தை முகம். கண்கள் சிவந்து, உதடு துடிக்க அழுது கொண்டிருந்தாள். அந்த அழுகை அவனை ஏதோ செய்ய,அவள் பக்கம் சென்று அமர்ந்தான். ஆறுதல் சொல்ல மனம் தயாரானது. அவன் பக்கம் வந்து அமர்ந்திருக்கும் உணர்வு கூட இல்லாமல் அந்த பெண் அவ்வளவு நேரம் அழுதவள் கண்கள் துடைத்துக்கொண்டு, அழுகையை அடக்கி இருக்கையை விட்டு எழுந்து சென்று பக்கம் இருந்த கடையில் தண்ணீர் வாங்கி குடித்து நெஞ்சைத் தடவி தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாள். ஆச்சரியமாக அவளையே கவனித்தான். அவளுக்குள் அவளே பேசிக்கொண்டாள். ஆழமாக மூச்சு இழுத்து விட்டு, தளர்ந்து வெளியே நடந்து சென்று சாலை கடந்து லோக்கல் ரயில் நிலயத்தில் மறைந்தாள்.

பள்ளி படிப்பு முடித்திருக்கலாம், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கலாம். தனக்கு தானே ஆறுதல் சொல்லிக்கொண்ட அவள் திடம், ஊர் போற்றும் அழகன் அவன்,அவனை கண்டுகொள்ளாமல் போன அவளின் என்னவென்று பெயர் வைக்க முடியாத போக்கு அவனுக்கு அவளை நினைவில் தங்க வைத்தது.

அதன்பின் அவன் எண்ணம், செயல், வேகம், விவேகம், ஆசை, நட்பு, பகை என்று நிறைய மாற்றங்கள் அவன் வாழ்வில். அத்தனையும் கண்ட பின்னும் அந்த சிவந்த அழுகையை அடக்கக் கடித்து வீங்கிய கீழ் உதடும், நடுக்கமான கைகளும் அந்த முகமும் அவன் மனதிலிருந்து மறையவில்லை..

அடுத்து அமைச்சர் ஒருவரை பார்க்கச் சென்னை வந்தவன், திரும்பவும் அந்த பெண்ணை பார்த்தான். ஓர் சிக்னலில் அழகாய் பாவாடை தாவணி அணிந்துகொண்டு ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு அவன் கார் பக்கமே வந்து நின்றாள். அத்தனை இயல்பான சின்ன சிரிப்பு, கண்கள் வெயிலுக்குச் சுருக்கி இருந்தும் அத்தனை அழகான முகம். சென்னை வந்தாலே இந்த பெண்ணை பார்க்கிறோமே என்ற எண்ணம் தோன்றியது. சென்னை மாநகரம் என்றாலே இந்த பெண் தான் நினைவுக்கு வரத் தொடங்கினாள்.

அதன்பின் அவள் நினைவுகள் மட்டுமே மனதில். அது ஆழ்மனதில் வேரூன்றி கடிகாரத்துடன் போட்டிப் போட்டு சுழன்று சுழன்று வேலைகள் செய்து மும்மரமாக இருந்த போதும் சில சமயம் கொஞ்சம் இலகுவான நேரம் கிடைத்தாலும் அவன் தனிமையில் அவன் சுயத்தை அவன் ஆராயும் நேரம் கூடவந்து அமர்ந்துகொண்டு அவன் ஆர்வத்தை தூண்டியது.

 

swwee

Active member
Wonderland writer
2.நீயா..!

அவன் தொழில் பயணம் நிறைய விரிந்தாலும், அனுபவங்கள் கூடினாலும் சென்னை பயணத்தில் பார்க்கும் முகத்திலெல்லாம் அவளை தேடினான். எங்கேனும் தெரிவாளோ என்பது போல பொது இடங்களில் எப்போதும் ஒரு தேடல் இருக்கும். பார்த்துவிட மாட்டோமா என்கிற ஏக்கம் அவனுக்குள் ஊறி இருப்பதை அவனும் உணரவில்லை.

அவன் கேட்காமலே வியாபார சலுகைகளுக்கு அந்தந்த நாட்டு , ஊர் வகை மது உணவு மற்றும் பெண்களும் அவனை தேடி வரும். அதிலெல்லாம் சலிப்புதான் கிடைத்தது அவனுக்கு. அந்த சென்னை தமிழ் பெண் போல இருப்பவள் அகப்பட்டால், கூட வைத்துக்கொள்வான். நிறைய சலுகைகள் தருவான், பணம் அவள் கைகளில் கொடுப்பான். பொதுவாக எஸ்கார்ட் பெண்கள் கைகளில் பணம் கொடுக்கமாட்டார்கள். அதற்கென்றே இருக்கும் ஆட்களிடம் ஏற்பாடு செய்யும் நிர்வாகம் கொடுக்கும். அது அந்த பெண்களுக்கு போய்ச் சேருமா என்று தெரியாது. சில இடங்களில் எஸ்கார்ட் பெண்கள் வார சம்பளம் என்று அங்கேயே இருப்பார்கள். அவர்கள் எப்படி இருந்தாலும், ஷியாமிற்கு சேவகம் செய்தால் கைகளுக்கு பணம் கிடைக்கும் அவர்களுக்கு.

விசித்திரமான ஆசைகளை எல்லாம் சோதனை செய்பவன் அல்ல அவன். நிறையவும் குடித்தான்,ஸ்ட்ரெஸ் அதிகம் என்றால் மட்டும் அறைக்கு அழைத்து போக சொல்லி கைகால்கள் பிடித்து விட, மசாஜ் செய்ய சொல்வான். அவனை தொந்தரவு செய்யாத, அதிகம் பேசாத கருவிழி, ஒல்லி தேகம், தமிழ் பெண் தோற்றம் இருக்கும் பெண்களை அவனுக்கு பிடிக்கும் என்று அந்த உலகில் பரவி இருந்தது,மறுக்கவில்லை அவன். அவனிடம் குறை இருக்கலாம் என்று கூட வதந்தி கண்டுகொள்ளவில்லை அவன். கௌரவத்திற்க்காக, தான் வித்தியசமாக தெரியவேண்டுமென இப்படியெல்லாம் இருக்கிறான் என்று கூட பலர் கிண்டலாக அவன் முகத்திற்கு நேராக சொல்லி பார்த்தனர். எளிமையாக சிரித்த முகமாக கடந்தான்.

நான்கு வருடத்தில் அவன் நிறுவனம் உயர்ந்தது. கடன் கொடுக்கும், முதலீடு உதவி செய்யும், கன்சல்டன்சி அவன் நிறுவனம். சின்ன வயதிருந்தே கூடவே இருக்கும் ராகுலுடன் சேர்ந்து ஒரு ஐ.டி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள்.

பிறவி பணக்காரன் அவன். அவன் அப்பா அவர்கள் ஸ்டீல் உற்பத்தி நிறுவனத்துடன் சேர்ந்து அவர் காலத்தில் வங்கி ஒன்றை தொடங்கினர். அவன் அதனுடன் சேர்ந்து இப்படியான முதலீடு கன்சல்டன்சி தொடங்கியிருக்கிறான்.

ராகுல்"பய்யா...சென்னையில் ஒரு நிறுவனம்!! செக்யூரிட்டி சாப்ட்வேர் தான் அவர்கள் சிறப்பு. இன்வெஸ்டர் கிடைக்காமல் சறுக்கி கொண்டிருக்கிறது. முதலீடு பிடித்துகொடுத்து பதிலுக்கு நமக்கு நான்கு பிராடக்ட் செய்து கொடுக்க டீல் பேசிவா...." என்று அவனை அனுப்பினான்.

சென்னை பிரயாணம். உள்ளுக்குள் தேடல் தொடங்கிவிட்டது. பார்க்கும் இளம் பெண்ணெல்லாம் அவளை போலவே தெரிந்தார்கள்.

மனோகர், காயா செக்யூரிட்டி சாப்ட்வேர் டெவலப்மெண்ட்ஸ் நடத்துபவன் என்று அவனிடம் அறிமுகம் செய்துகொண்டவன் நிறைய பேசினான். அவன் நிறுவனம் எப்படி வளர்ந்தது என்று, இன்னமும் முதலீடு கிடைத்தால் என்னவெல்லாம் அவனால் தயாரிக்க முடியும் என்று பேசினான்.

பணம்,எத்தனை பெரிய ஆயுதம் தெரியுமா..! பதிமூன்று வருடமாக இந்த துறையில் நிற்க மட்டுமே மனோகர் முயற்சி செய்து போராடிக்கொண்டிருக்க, அவர்கள் நிறுவனம் காயாவை விட அதிகம் லாபம் பார்க்கிறது.

மனோகரின் அனுபவம் மட்டுமே அவர் சொத்து. அவர் பேசுவதை கேட்டு அவரை மதிப்பிட்டுக்கொண்டே இருந்தான்.

விதவிதமான மனிதர்களை சந்திப்பவன் அல்லவா,கொஞ்சமும் முகத்தில் உணர்வுகளை கட்டாமல் அவன் இருக்க,சார் எங்கள் டிவலப்மென்ட் டீம் தான் சார் எங்கள் பலம். நீங்க எங்கள் நிறுவனத்துக்கு ஒரு விசிட் கொடுங்க, என்று மனோகர் அழைத்தார்.

ராகுல் கொடுத்த தகவலும் நல்ல தயாரிப்புகள் கொடுக்கும் கம்பனி என்பது தானே!அவர்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு சென்றான். முன்னேற்றம், முன்னேற துடிக்கும் பண்பு அங்கே தெரிந்தது. டீல் பேசி முடித்தான்.

டீல் பேசி முடித்ததன் விளைவாக காயாவின் டிவலப்மென்ட் டீம்மை அழைத்து அறிமுகம் செய்தார் மனோகர்.

வட்ட மேஜையில் வந்து அமர்ந்த கும்பலை பார்த்தவன் கண்கள் பளிச்சிட்டது.

சாந்தமான முகமாக கடமையாக வந்து அமர்ந்தாள் அந்த ஏர்போர்ட் பெண். இத்தனை நாள் அவன் நினைவில் தங்கி இம்சை செய்த அபூர்வமான பெண். எத்தனை தூரம் சென்றாலும் சென்னை இழுத்து வந்து உட்கார வைக்கும் பெண்.

பளீச் முகம், அந்த பளீச்சை குறைக்கும் கண்ணாடி. ஒடிந்து விழும் அளவுக்கு உடம்பு. பிளைன் டி- ஷர்ட் ஒரு ஜீன் பேண்ட். கழுத்தில் காயாவின் அடையாள அட்டை. அந்த அறை அவனக்கு பிரகாசமாக தெரிந்தது அவள் ஒருத்தியின் இருப்பில் மட்டுமே.

இத்தனை நாள் அவன் சந்தித்த பெண்கள் எல்லாம் மாயை இவளே பிரதானம் என்று வெறும் இருப்பில் தெளிவுபடுத்தினால் பெண் தேவதை அவள்.

மனோகர் பேசபேச எல்லோரும் முகத்தில் மகிழ்ச்சி பாவங்கள் காட்ட அந்த பெண்ணோ இவர்களை கண்டுகொள்ளாமல் தலைகுனிந்து கொண்டு அடையாள அட்டை மாட்டியிருக்கும் ஹோல்டருடன் விளையாடி கொண்டிருந்தாள். பத்தே நிமிடம் கூட்டம் முடிந்தது. எல்லோரும் களைந்தார்கள். அவனுக்கு அவளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

"மனோகர்,அந்த கண்ணாடி போட்ட பெண் யார்?" ஆர்வத்தை மறைக்காமல் கேட்டான்.

அவன் அப்படி கேட்பான் என்ற முன்னமே முடிவு செய்தவன் போல எது ஐந்தாவது சேரில் பிளைன் ப்ளூ டீஷர்ட் தானே..! அவள் சுந்தரி சார்,மீட்டிங் வந்தால் எப்பவும் தலை குனிந்து உட்கார்ந்து கேட்டு எழுந்து போவாள் சார், தப்பா நினைக்காதீங்க, அவள் சுபாவம் அப்படி, அதிகம் பேசமாட்டாள், அந்த பெண் வீட்டில் பிரச்சனை சார், அதான் அப்படி சோகமாக இருக்கிறாள். ஆனால் வேலையில் ஷார்ப் சார். பயங்கர அறிவு என்று பாராட்டு பத்திரம் வாசித்தான்.

அவன் ஆர்வம் கூடியது. அதை மறைக்க பெரும் பாடுபட்டு பேசினான்.

“எனக்கு அந்த பெண்... வித்தியாசமாக தெரி…”என்று வார்த்தைக்கு வார்த்தை நிறுத்தி நிதானமாக அவன் சொல்லவும் மனோகர் சடார் என்று திரும்பி “இல்லை சார், சுந்தரி அந்த மாதிரி பெண் இல்ல, எனக்கு அப்படி வருகிற காசும் வேண்டாம்”

மனோகர் மனநிலை புரிந்தவன் போல குட்,வெல்...இனி உங்கள் பக்க வேலைகளை தொடங்குங்கள். நீங்க கோட் செய்த பணம் மூன்று பகுதிகளாக கிடைக்கும் பேசியவன் அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறினான்.

மனோகர் பயந்து போனான், புதிய ப்ராஜெக்ட்டிக்கு பணம் கிடைக்காமல் போகுமோ..! நல்லவேளை அவர் சோதித்து பார்த்திருக்கிறார். சுந்தரி என்பதால் அவன் அப்படிப் பேசினான். வேறு யாராவது இருந்திருந்தால் கேட்டு சொல்கிறேன் என்று சொல்லி கெடுத்துக்கொண்டிருப்பான். பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டு ஆசுவாசபட்டுக்கொண்டு அடுத்த வேலையை தொடங்கினான்.

தனது அசிஸ்ட்டண்டை அழைத்து அவனுக்குத் தெரிந்த விஷயங்களை சொல்லி அந்த பெண்ணை பற்றி மொத்த தகவலும் வேண்டும் என்றான் நம்ம ஹீரோ. தமிழ்நாட்டில் சிறந்த துப்பறியும் நிறுவனத்தை உடனே அவனை சந்திக்க ஏற்பாடு செய்யச் சொன்னான்.

அடுத்த நாள் காலை அவனுக்கு அவளை பற்றிய அடிப்படை விவரம் கிடைத்தது. சுந்தரி, இருபத்தைந்து வயது, பெற்றோர் இல்லை, ஐ.க்யு அதிகமுள்ள பெண் - அதாவது அறிவாளி,கம்ப்யூட்டர் என்ஜினீயர், படித்தது பிலானியில், அத்தை மாமா வளர்த்தார்கள். அவர்களுக்கு ஒரு மகன். அந்த மகன் தோஹாவில் யாரோ செய்த தவறுக்கு சிறையில் இருக்கிறான். தகவல் தெரிந்த நிமிடத்திலிருந்து அவர்கள் வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் பிரச்சினைகள்.

சிரித்துக்கொண்டான்.அவளை கண்டுகொள்ள அவன் தென்னகம் வர, இத்தனை காலம் அவன் பக்கமே வடக்கில் இருந்திருக்கிறாள். திசைகளும் அறியாது தானே தேடல்கள்..!

சுந்தரி இந்திய தூதரகத்தில் பேசினால், ஒரே ஒருமுறை முரளியிடம் அவன் குடும்பத்தை பேச வைத்தார்கள். அவர்களால் முடிந்தது அது என்பது போல அதன்பின் ஒரு முன்னேற்றம் இல்லை. யாரிடம் உதவி கேட்டும் இந்த கேஸ் கொஞ்சம் க்ரிட்டிக்கல் என்றார்கள். கோடி கணக்கில் செலவாகும் என்றார்கள்.

சுந்தரி வலுவிழந்து போனாள்.

முரளி அத்தான் தோஹா போக ஆன செலவே இப்போது தான் அடைத்து முடித்தாள் அவள். அவள் மாமாவுக்கு உடல் உபாதைகள் அதன் மருத்துவச் செலவுகளும் சேர அவள் சம்பாதனை போதவில்லை. அத்தையை எதிலுமே சேர்க்க முடியாது. அவள் எண்ணம் என்ன என்றே கண்டு பிடிக்க முடியாது. சில நேரம் நல்லவள் பல நேரம் சுயநலம் மிகுந்தவள்.

அறையில் விளக்கை கூட போடத் தோன்றாமல் படுத்து உருண்டு யோசித்துப் பார்த்தாள் சுந்தரி. சுந்தரியே சொல்லி பார்த்துவிட்டாள் மாமாவிடம் அவள் அப்பா அம்மா அவளுக்கென்று விட்டு சென்ற அந்த மதுரை வீட்டை விற்று அந்த பணம் எடுத்து போய் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யலாம் என்று. மாமா முடியாது, வேண்டாம் என்று அடியோடு அந்த விஷயத்தை முடித்துவிட்டார்.

முரளியை வெளியே கொண்டுவருவது கஷ்டம் என்று தெரிந்தவர்கள் அறிவுரை சொல்ல, அவளால் எது செய்யவும் முடியவில்லை. உள்நாட்டு வக்கிலை போய் கேட்டால் முடியாது என்கிறார். இவர்களில் யாராவது தோஹா சென்று அங்கே வக்கில் பிடித்து தங்கி மேற்கொண்டு கேஸ் போட்டு நடத்தி வெளியே கூட்டி வர வேண்டும். அது இல்லையென்றால் இங்கிருந்து யாரையாவது அனுப்பி அவர்கள் பொறுப்பாக வேலையை செய்ய வேண்டும். இதில் முரளி நிஜமாகவே தப்பு செய்தானா? இல்லை அவன் சோடிக்கப்பட்டானா என்பதும் தெரியவில்லை.குழப்பம் மட்டுமே மிச்சம்.

சுந்தரி அறிந்த சாந்தமான முரளி நாடு நாடாக சுற்றி திரிந்திருந்த தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று காட்டும் ஆளாக மாறியிருந்தான். சவூதியில் வேலை என்று அவன் கிளம்பும் போது அப்பாவிடமோ, அம்மாவிடமோ தெளிந்த விவரம் எதுவும் கொடுக்கவில்லை. முதன் முதலில் அவன் வேலைக்கு அந்தமான் கிளம்பும் போது பயம் இருந்தது. அதன் பின் நிறைய நாடு போய் சுற்றி வேலை பார்க்கிறான் என்று அவன் அம்மாவுக்குப் பெருமை அதிகம் ஆனது. அவனும் இந்த நாடு, இந்த ஊரில், இந்த நிறுவனத்தில் இது தான் வேலை என்றெல்லாம் சொல்லமாட்டான்.

சுந்தரிக்கு முரளி மீது பாசம் அதிகம். பாசத்தை மீறி ஒரு அன்பும் இருந்தது. அவன் பக்கம் மட்டுமே பாதுகாப்பாக உணர்வாள். அவன் முதல் முறை வெளிநாடு சென்ற போது அழுது தீர்த்தாள். தனிமை கொடுமையாக இருந்தது. அடுத்து கொஞ்ச நாட்களில் அவளுக்கும் பெரிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்க அங்கே போய்ச் சேர்ந்து கொண்டாள்.

கல்லூரி லீவில் வீட்டுக்கு வந்தபோது அத்தை முரளிக்கு பெண் பார்த்து நிச்சயித்துவிட்டார்கள். சுந்தரி இதயம் நொறுங்கி போனது. தமிழ்நாட்டுப் பக்கமே வராமல் பிலானியில் விடுதியிலேயே இருந்துக்கொண்டாள். வருட கணக்கில் பார்க்காமல் பார்த்த முரளி மாமாவிடம் நிறைய மாற்றம். தான் பல நாடுகள் சுற்றியவன், தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற ஆணவம். பெண் என்றால் வினிதா மட்டுமே என்கிற எண்ணம்.

ஒரு நாள் யாரும் வீட்டில் இல்லாத போது பூனை போல அவள் பக்கம் வந்து நின்று பேசினான். அவன் பேசிய விதத்தில் புரிந்தது அத்தைக்கும் வினிதாவிற்கும் முரளி அவளிடம் பேசுவது இஷ்டமில்லை. அவளே ஒதுங்கிக்கொண்டாள். முக்கிய காரணம் இரண்டு இருந்தது. ஒன்று முரளி அவளுக்கானவன் இல்லை;இன்னொன்று அத்தை, வினிதாவின் செயல்களில் நிறையக் காயங்கள் அனுபவித்து கொண்டிருக்கிறாள். இதில் முரளியின் ஆதரவு அவளுக்கு இன்னமும் இருக்கிறது என்றால் அவள் கதை முடிந்து போகும்.

அப்படியெல்லாம் அவள் யோசித்து செய்தும், இவர்கள் வட்டமிட்டு கோழி குஞ்சு தூக்கி செல்லும் கழுகு போல பணத்திற்காக அவளை விற்கவும் துணிந்து விட்டார்கள்.

இது என்ன..!இவ்வளவு நாள் வளர்த்த அத்தையைத் தப்பாக நினைக்கிறோமோ என்று அவள் எண்ண, கைப்பேசி அழைப்பு வந்தது.

"சுந்தரி... சுந்தரிம்மா... என் பணமெல்லாம் போச்சேடா கண்ணா , இருக்கிற கஷ்டத்தில் இது வேற நடந்து போச்சே" அழுது தீர்த்தாள்.

"என்ன அத்தை, என்ன ஆச்சு சொல்லிட்டு அழுங்க அத்தை"

"அம்மா, பணம் போச்சேம்மா பணம் போச்சே. கடன்காரன் அந்த பரதேசி நான் குருவி போல சேர்த்து வைத்த பணம் போச்சே. சீட்டு போட்டவன் ஒடிட்டான் சுந்தரி.ஐயோ " என்று திரும்பவும் கதறி அழுதாள் அத்தை.

“என்னாலான உதவி செய்ய நினைச்சேனே. முடியாம போச்சே. எம்புள்ள, என்குலவிளக்கு திரும்பி வரணுமே.எப்படி வருவானோ தெரியலையே" புலம்பி அழுதாள்.

"அழாதீங்க அத்தை. விசாரிக்கலாம். "

ஆமாம்மா விசாரிக்கணும், அதுக்கு போலீசுக்குப் பணம் கொடுக்கணுமாம் என்று அழுதாள்.

"என் புள்ள திரும்பி வருவான் தானே சுந்தரி,எனக்கு உயிரை கொடுத்தாலாவது என் பிள்ளையை இங்க கூட்டி வரணும்போல இருக்கு சுந்தரி”

சுந்தரி மனதில் பாரம் கூடியது. அத்தை அழுது புலம்பி தீர்த்து அழைப்பை துண்டித்துக்கொண்டாள். சுந்தரி மனம் வெகுவாக பாதித்தது.

இவர்கள் என்னவாக வேண்டுமானாலும் திட்டம் போடட்டும், நடிக்கட்டும்.முரளி மாமா திரும்ப வரணும். வந்து, அவன் வாழ்க்கையை அவன் வாழ வேண்டும். அப்போது தான் அவளுக்கு நிம்மதி இருக்கும்.

முரளிக்கு ஏதேனும் ஆனால் அவள் உள்ளமே அவளை நன்றியில்லாதவள் என்று அவளை வதைத்து விடும்.

PS: ரெண்டு எபி அப்டேட் ஆகியிருக்கு அன்பர்களே. எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நான் ஃபேஸ்புக்ல இல்ல. சோ எங்கேயும் இந்த கதை லிங்க் கூட ஷேர் பண்ணலை. எபி கீழ வர லைக்ஸ் வச்சு தான் ஓகே நம்ம கதையை படிக்கறாங்கங்கிற ஐடியாக்கே வர முடிஞ்சது. உங்க கருத்து மேல மேல எழுத உதவியா இருக்கும்.
 
Last edited:

swwee

Active member
Wonderland writer
3. ராட்சசன்

சீட்டு பணம் பத்திரமாக இருக்க, அத்தை வினிதாவின் உந்துதலில் சுந்தரியிடம் பொய் சொன்னவர், துயரத்தை நினைத்து அழுத கண்களை முந்தானையால் துடைத்துக்கொண்டு “வந்து சேருவான் தானே என் மகன் ? ஒண்ணா அவ வீட்டை வித்து காசு கொடுக்கணும், இல்ல நீ ஏற்பாடு செய்த உதவிக்கு ஒத்துழைக்கணும். இத்தன நாள் என் சாப்பாட்ட தின்னு வளர்ந்தவ, கொஞ்சமாச்சும் அந்த நன்றி இருக்கும் நினைக்கறேன் பாக்கலாம் ” கறார் குரலில் பேசினார். கூடவே ஆர்வத்தை மறைக்காமல் வினிதாவை பார்த்து அப்படி என்ன உதவி வினி, சுந்தரி தான் செய்ய முடிகிற காரியம் என்று ஆச்சரியம் மறைக்காமல் கேட்டார்.

வினிதா சங்கடத்தை விழுங்கி கொண்டு உண்மை அடிநாக்கில் கசக்க “ஒன்னுமில்ல அத்த. சாதாரண விசயம்தான்” என்றாள்

“அப்போ நான் செய்றேன். எதுக்கு அந்த கூறுகெட்ட பொண்ணல்லாம் நம்பிக்கிட்டு..!”

அவர் பேசியதை கேட்டவள் விக்கித்து நின்று சுதாரித்து “அத்தை காலைலேயே கிளம்பி வந்துட்டேன்.இன்னமும் வீட்டுக்கு போகல, அம்மா தேடுவாங்க நான் வரேன்” உடனே அவள் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்.

எப்படி மண்டையை உலுக்கி சுந்தரி யோசித்தாலும் வீட்டை விற்கவேண்டும், இல்லை பணக்கார கிழவன் உதவி வேண்டும். மாமா வீட்டை விற்க தயாரில்லை, அவர் தான் அந்த சொத்தை பாதுக்காக்கும் அங்கீகாரம் பெற்ற நபர். அவருக்கு தெரியாமல் அவள் ஒன்றும் செய்ய முடியாது.

உதவி என்றால் அந்த உதவிக்கு அவள் செய்யவேண்டிய பணி நினைத்தால் வாந்தி வந்தது.

ஆசைக்கு ஏது வெட்கம்??? கிழட்டு நரிக்கு நாட்டாமை வேண்டுமாம்,அதற்க்கு இவளா சிக்கினாள்..!

நிறைய யோசித்தாள், முடிவு செய்துகொண்டாள். திட்டம் உருவானது. வினிதா கொடுத்த எண்ணுக்கு அவள் யார் என்பதும்,அவரை அவர் வீட்டில் சந்திப்பதாகவும். குறுஞ்செய்தி அனுப்பினாள். பதில் வந்தது "வரலாம்" என்று. கண நிமிடம் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு தயார் ஆனாள்.

செஸ் ஃபோர்டு எடுத்துக்கொண்டாள், பையில் கத்தி ஒன்றை எடுத்து போட்டுக்கொண்டாள். தொலைபேசி மணி அடித்தது, சிறிது நேரம் முன் வரலாம் என்று பதில் அனுப்பிய எண். அந்த எண்ணை டெவில் என்ற பெயரில் பதிவு செய்துக்கொண்டாள்.

ஒரு வகையில் அவன் ராட்சசன் அல்ல ஏஞ்சல் என்றும் சொல்லலாம். வினிதா போல முகமூடி அணியவில்லை. நேராக அவன் கெட்ட நோக்கத்தை முன் வைத்தான். அந்த வகையில் ஐயோ பாவம் சிறகொடிந்து நரகத்தில் விழுந்த லூசிபர் என்றும் சொல்லலாம்.

அவள் எண்ண போக்கை நினைத்து சிரிப்பு வந்தது. யாருக்கு யார் வக்காலத்து. அவளை, அவள் மனத்திடத்தை அழிக்க நினைக்கும் அவனுக்கு அவள் மனமே ஆதரவாக நினைக்கிறது.

அவனுக்கு பரபரப்பு நெஞ்சில் குடிகொண்டது. என்ன சாப்பிடுவாள் இந்த பெண், என்ன செய்யலாம் அவளை ஈர்க்க. எண்ணம் ஓடியது.

துப்பறியும் நிறுவனத்தின் மூலமாக அவனுக்கு நண்பனான பிரபு சொல்லிய விஷயங்களை யோசித்தான்.

அந்த பெண்ணுக்கும் காட்டுக்குள்ள சுற்றுகிற மானுக்கும் வித்தியாசம் இல்லை. அவ்வளவு வேகமாக அவள் மூளை வேலை பார்க்கும். சுற்றி இருக்கும் ஆட்களின் எண்ணத்தை சட்டென்று அறிந்து அதற்கு ஏற்றார் போல நடந்துகொள்ளும் திறமை அதிகம். ஆங்கிலத்தில் survival instinct என்று சொல்லுவார்கள்.பார்க்க பாவமாக தெரிந்தாலும், அப்பாவியாக தெரிந்தாலும் சுந்தரி அப்பாவி கிடையாது. அது அவளது முகமூடி.

அவன் பிரபுவை பெரிதாக எடுத்து கொள்ளாமல் கையில் இருக்கும் விஸ்கியை சுழற்றிக்கொண்டிருந்தான்.

பிரபு “இந்த ஃபீல்ட்ல இருக்கிறதால சொல்றேன் சார் . ஒரு கொலைகாரன், திருடன் கூட திட்டம் போட்டு செய்தாலும் எங்கேனும் சின்ன துப்பு விடுவான். இந்த பொண்ண பத்தி என்ன விசாரிச்சும், எங்க நோண்டி பார்த்தும் என்னால கண்டுபிடிக்க முடியல. சோசியல் மீடியா ட்ரேஸ் கண்டுபுடிக்க முடியலன்ன கூட ஒரு அர்த்தம் இருக்கு. கம்ப்யூட்டர் என்ஜினீயர், சாஃப்ட்வேர் டெவலப்பர் அவளோட டேட்டா பாதுகாக்க அவளுக்கு தெரிஞ்சிருக்கும். அதெப்படி ஸ்கூல், காலேஜ்ல தெருல கூட அவளை பற்றி யாருக்கும் தெரியல?”

இப்போது அவன் ஆர்வம் கூடயது.

பிரபு அவனுக்கு தெரிந்த தகவல்களை சொல்ல தொடங்கினான். ஏழு வயதில் திருக்குறள் மனப்பாடமாக சொல்லி சாதனை படைத்த இந்த பெண், ஐந்து வயதில் மருத்துவ புத்தகங்களை மனபடமாக சொல்லவும் செய்திருக்கிறாள். அதை விடுங்க, வரிசையாக பத்து பெண்களை இடித்துக்கொண்டு வந்த பையன் இவள் பக்கத்தில் வந்ததும் எக்ஸ்களேட்டரிலிருந்து கீழே விழுந்து மண்டை ஒடிந்து பத்து நாள் ஹாஸ்பிடலில் கிடந்தான். அவள் அறிவுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும், ஆனால் அவள் ஏன் இந்த நிறுவனத்தில் இருக்கிறாள்? அவளுக்கென்று எதோ காரணம் வைத்துக்கொண்டிருக்கிறாள். அந்த நிறுவனமும் இயங்குவதற்கு ஒரே பெரிய பிராஜெக்ட் மட்டுமே காரணம். அந்த பிராஜெக்ட் செய்ததும் இந்த பெண் தான். ஆக இந்த பெண்ணுக்கு சுற்றி நடப்பதை தன் இஷ்டம் போல மாற்றி அமைக்கும் அறிவு இருக்கிறது.சைக்கோவா என்று கேட்டால் கிடையவே கிடையாது. கண் தெரியாதது போல நடிக்கும் பையன் கையில் நூறு ரூபாய் பணம் கொடுக்கும் அளவுக்கு கருணை நிறைந்தவள்.

“போதும் போதும் ,விட்டா பராசக்தி, மாயசக்தி என்று பூஜை செய்வீங்க போல” அவன் கிண்டலுக்கு சிரித்தவன் பிரபு, எங்கேயோ ஒரு நிமிஷம் பார்த்த பெண்ணை தேடி இவ்வளவு செலவு செய்றீங்க..! நான் ஒரு மாத காலமாக அந்த பெண்ணையே தான் பார்க்கிறேன், கவனிக்கிறேன், அவளை பற்றிதான் பேசுகிறேன். நுணுக்கமாக பார்ப்பது என் வேலை. அதில் இந்த பெண் புதிராகவே தெரிய, எனக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது என்று ஒப்புக்கொண்டார்.

மேலும் இந்த பெண் பிறந்து பதிமூன்று வயது வரை மதுரையில் வளர்ந்திருக்கிறாள், அப்பா அம்மா கார் விபத்தில் இவளை காப்பாற்றி விட்டு இறந்து போக, இவள் மாமா இவளை சென்னை கூட்டி வந்து வளர்க்கிறார். எல்லோருக்கும் இருப்பது போல இவளுக்கு வீக் பாய்ண்ட் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் என்பது என் கண்டு பிடிப்பு. ஏன்னா முரளி காணாமல் போன விசயம் தெரிந்தும் அவனை திருமணம் செய்துகொள்ளும் பெண் கூட சாதாரணமாகத்தான் இருக்கிறாள் ஆனால் இவள் தினமும் அழுது அழுது அவனை காப்பற்ற துடிக்கிறாள் என்று அவருக்கு தெரிந்த தகவல் எல்லாம் சொல்லி தீர்த்தார் பிரபு.

அவனும் தான் மூன்று மாதமாக அவளை கவனித்தான். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெம்ஸ் மிட்டாய் வர்ணங்களில் அவள் டீ- ஷர்ட்கள் இருக்கும். கருப்பு, நீளம் வண்ணத்தில் ஜீன்ஸ் அணிந்திருப்பாள். கணினி முன் சுழலும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு கையில் கேரட், வெள்ளரி இல்லை ஏதேனும் ஒரு பழம் சாப்பிட்டு கொண்டு வேலை பார்ப்பாள். அவளை சுற்றி அத்தனை பரபரப்பு இருந்தாலும் அமைதியாக இருப்பாள்.

சிலசமயங்களில் சகலமும் அறிந்த ஞானி போல ஒரு பேரமைதி அவள் முகத்தில் தெரியும். சிலசமயம் கண்கள், மூக்கு எல்லாம் பிங்க் நிறத்தில் தெரியும். அழுதிருக்கிறாள் இந்த பெண் என்று நினைத்துக்கொள்வான்.

அவனுக்கு புரிந்தது, அறிவாளி இந்த பெண் என்பது. அப்படியே நிறைய சாக்லேட்டூம், பூக்களும் கொடுத்து அன்பே ஆருயிரே கண்ணே மணியே என்று அவளை கொஞ்சி,அவளுக்கு பிடித்தது எல்லாம் வாங்கி கொடுத்து கவர அவனால் முடியும். அப்படி அவன் செய்தாலும் அவளிடம் எதிர்வினை இருக்காது. அப்படியெல்லாம் செய்யவும் முதலில் அவள் கவனம் அவன் மீது திரும்ப வேண்டுமே..!

காதல் என்ன சாக்லேட், பூ, பீச் சினிமா தியேட்டர் என்றுதான் தொடங்கவேண்டுமென நிபந்தனை இருக்கிறதா என்ன?

அந்த பெரிய வெள்ளை நிற வீட்டின் முன் வந்து நின்றாள் சுந்தரி. அவள் பெயரை சொன்னதும் காவலாளி கதவைத் திறக்க, உள்ளே சென்றாள். வீட்டின் வெளிப்புற அழகை மறைத்த மரங்கள். வெளியே இருந்து கூர்ந்து கவனித்தால் மட்டுமே அங்கே ஒரு பெரிய வீடு இருப்பதை சொல்ல முடியும். உள்ளே செல்ல செல்ல வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றது போல வசதிகள் நிறைந்திருந்தது. பார்த்து சொக்கி போகாமல் இருக்க முடியவில்லை. . பணத்தை இரைத்திருக்கும் விதம் அவளுக்கு ஆச்சரியம் கொடுத்தது.

வெறுமையாக இருக்கும் இடத்தை அழகுபடுத்த ஒரு புத்தர் வாங்கி அதை மேஜை மீது வைத்து, பின்புறத்தில் செயற்கை தண்ணீர் ஊற்று கட்டி, அங்கே தினமும் காய்ந்த விழும் சருகுகளை சுத்தப்படுத்த ஆள் போட்டு என்று அழகை அழகாக வைக்க எத்தனை செலவு..!

இப்படி பணத்தில் புரளுபவருக்கு பொழுதுபோக்கு மட்டும் சாதாரணமாகவா இருக்கும்?

போயும் போயும் இந்த ஆளை பார்க்க செல்லுமுன் புத்தரையா பார்க்கவேண்டும்!

தேவைக்கு மீறி சம்பாதிக்கும் ஆளுக்கு , எதையும் வியாபாரமாக மாற்றும் பண்பு இயல்பு தானே.நொந்து கொள்ளும் விதமாக இந்த இயல்பான வியாபாரகாரன் வியாபாரத்தில் இவளை சேர்த்துவிட்டதே விதி.

அவளால் அந்த மனிதனை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது. தன் திட்டத்தை மனதில் யோசித்தாள். கொஞ்சமேனும் மனிதநேயம் இருக்கும் மனிதனாக இருக்கவேண்டுமே என்றெண்ணி கொண்டாள். அப்படி இரக்கமற்றவனாக இருந்தாலும் ஓகே. கையில் கத்தி இருக்கிறது. குடிகாரனாக இருந்தால் இரண்டு டோஸ் மெத்தடோன் மாத்திரை இருக்கிறது.ஒன்று கொடுத்தாலே ஆள் காலி.

அவள் எதிர்பார்த்தது போலவே தொண்டை வலி, தலை வலி ஆரம்பித்திருந்தது. லேசாக குளுரவும் தொடங்கி இருந்தது .

வீட்டின் கூடத்தில் நின்றவளை பணி பெண் “உட்காருங்க மேடம். சார் இப்போ வந்திருவார்” சொல்லிவிட்டு அவள் வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.

அமைதியாக நடந்து வந்து கூடத்தில் அமர்ந்திருக்கும் அவளை கவனித்தான்.

படியிறங்கி சோபா பக்கம் சென்று அவள் முன் நின்று கை நீட்டி “ஹை, ஷ்யாம் ஹியர்” என்றான்.அவன் முகம் பார்த்தவளுக்கு அதிர்ச்சி.

அவள் கண்களில் ஆச்சரியம். தன்னிச்சையாக கைகளை நீட்டி சுந்தரி என்றாள். பதிலுக்கு அவன் அழகான பெயர் என்றான்.

அவன் அழுத்தமான, மெதுவான குரல் கேட்டு உள்ளுக்குள் படபடப்பு. இன்னமும் கண்கள் விரிந்தது.

“என்ன ஆச்சரியம் சுந்தரி?”

மனதை மறையாமல் பேசினாள்,நான் யாரேனும் வயது முதிர்ந்த கிழமாக இருக்கும் என்று நினைத்தேன் என்றாள்.

அவன் ஆச்சரியமாகப் பார்க்க ‘உங்களுக்கு ஏதாச்சும் கோளாறா’ கேள்வியும் கேட்டாள்

அவனுக்குச் சிரிப்பு வந்தது. “ஏன் அப்படி கேட்கிறே?”

'பின்ன, இளமையா இருக்கீங்க. கல்யாண ஆகாத ஆள் போலத்தான் தெரியறீங்க..! எந்த சந்தோஷத்தையும் கல்யாணம் செய்து பொண்டாட்டி கூட அனுபவிக்கலாமே ஏன் இப்படி’ கொஞ்சமும் வார்த்தைகளில் ஃபில்டர் போடாமல் பேசினாள்.

வெளிப்படையான அவள் பேச்சுக்கு அவனால் பதில் பேச முடியவில்லை. அவளுடனான பேச்சில் சுவாரசியம் கூடியது. மேற்கொண்டு அவளை பேச வைக்கவே அவனுக்கு ஆவல் கூடியது.

அவள் கையில் இருக்கும் செஸ் போர்ட் பார்த்தவன். “இது என்ன செஸ் போர்டு” கேட்டான்

“ஒரு ராத்திரிக்கு கூப்பிட்ட தாத்தா கூட செஸ் விளையாடலாம்ன்னு எடுத்து வந்தேன்... பச்” சலித்தப்படி சொன்னாள்

சட்டென்று அவன் “ஏன் தாத்தா கூட மட்டும் தான் செஸ் விளையாடுவீங்களா?” அவள் கண்களை பார்த்து சிரித்துக் கொண்டே கேட்க.

அவன் பதில் பேச்சில் ஒளிந்து இருக்கும் அர்த்தம் புரிந்தது.

கிழவனாக இருந்தால் என்ன? குமரனாக இருந்தால் என்ன? வாங்க செஸ் விளையாடலாம், செஸ் விளையாட தெரியும் தானே நக்கலாக கேட்டாள்

‘செஸ் மட்டுமா தான் விளையாட போறோமா ?’ பதிலுக்கு அவனும் கேட்டான்

“எனக்கு அது மட்டும்தான் விளையாட வரும்” பல்லை கடித்துக்கொண்டு பதில் சொன்னாள்.

பொறுமை அவளை விட்டுகொஞ்சம் கொஞ்சமாக பறந்து போய்க்கொண்டிருந்தது.

“நான் சொல்லிக்கொடுக்கிறேன் மத்த விளையாட்ட” அவன் சாதாரணமாக சொல்ல

பதில் பேச முடியாமல் அவள் காது முகம் சிவந்து அவனை பார்க்க, “இந்த ரம்மி, பிரிட்ஜ், போக்கர் எல்லாம் விளையாடி போர் அடிச்சு போச்சு. வா! செஸ் விளையாடுவோம்” பேசியவன் இயல்பாக அவள் கையில் இருக்கும் அந்த மரத்தால் ஆன செஸ் போர்டை வாங்கிக்கொண்டு சாப்பாடு மேஜை மீது போய் அமர்ந்து கொண்டான்.

அவன் பின்னாடியே சென்று, அவனுக்கு எதிர்புறம் அவள் அமர்ந்து கொள்ள. அவன் அண்ணா என்று குரல் கொடுக்க,வந்த ஆளிடம் “ரெகுலர் ஒன்னு ” என்று சொல்லிவிட்டு அவளை பார்த்து “என்ன சாப்பிடுற சுந்தரி” கேட்டான்.

அவள் முழிக்க அவனே “ஒரு கிரீன் டி” என்றான்.

நாற்பதுகளில், ஐம்பதுகளில் இருக்கும் மனிதனாக இருப்பான்,முரளி மாமாவை வெளியே கொண்டு வர என்ன ஏற்பாடு செய்ய போகிறார் என்று கேட்டு அவர் பேசி முடிக்க ஒரு மணிநேரம் இரண்டு மணி நேரம் ஆகும். அதன்பின் அவள் அழுது புரண்டு "ஐயோ எனக்கு ஜுரம், " என்று சென்டிமென்ட் கதை பேசி தப்பிக்கலாம். அப்படி தண்ணி வண்டியாக இருந்தால் பாட்டில் எடுத்து ஒரே போடு, அப்படியும் கொடுமைக்கார மனிதனாக இருந்தால் வர்ம இடங்களில் ஒரே குத்து திரும்பி சாதாரணமாக நடக்கவே முடியாதபடி என்று அவள் நிறைய யோசித்து இருந்தாலும் ஒரு இடத்திலும் அவளை விட ஐந்தே வயது பெரியவனாக இருக்கக் கூடியவன் என்று அவள் யோசிக்காமல் போனாளே.

அப்படியும் ஒன்னும் பிரச்சனை இல்லை கத்தி, குத்து, மாத்திரை, செண்டிமெண்ட் ஒர்க் ஆகவில்லை என்றாலும் இவன் வீக்னஸ் ஏதேனும் தெரிந்தால் கூட போதும். ஏதேனும் செய்யலாம். அவளை அவளே தேற்றிக்கொண்டே செஸ் காய்களை அடுக்கினாள்.

அதென்ன சுந்தரி பேக் இப்படி கட்டி புடிச்சிட்டு உட்கார்ந்திருக்க ரிலாக்ஸ்ஸாக உட்கார் என்று அவள் பையை வாங்கி பணியாளிடம் கொடுத்து ஹாலில் வைக்க சொன்னான்.

ஐயோ பேக் போச்சே!

தொண்டை வலி அதிகமானது. குளிர் தொடங்கியது. அவள் பக்கம் இப்போது இருக்கும் பலவீனம் எல்லாம் யோசிக்க மனக்கண்ணில் நிலைமை இன்னமும் பூதாகரமானது.

பேசி பார்ப்போம்…
 
Last edited:
Status
Not open for further replies.
Top