ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் கொண்டேனடி கண்ணம்மா - கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
காதல் கொண்டேனடி கண்ணம்மா - கதை திரி
 
Last edited by a moderator:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
காதல் கொண்டேனடி கண்ணம்மா!
eimm97n58742-jpg.1936

அத்தியாயம் 1

“காதலடி நீ எனக்கு
காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு
விந்தையடி நான் உனக்கு
போதமுற்ற போதினிலே
பொங்கிவரும் தீஞ்சுவையே

நாதவடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா!”


அந்த திடல் முழுவதும் மக்கள் தலைகள் பெருகி வழிய ஆரவாரமும், கரகோசங்களும் விண்ணை பிளந்து கொண்டிருந்தது அவன் குரல் கேட்டிட.

சரண் தேவ்… இளம் பாடகன். தன் மாயகுரலால் பல இதயங்களை கவர்ந்த கள்வன்.

தன் ஆசைகளுக்கு தீனி போட்டு, அதையே தீவிரமாக்கி இசை துறையில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்துக் கொண்டான்.

வாய்ப்பு தேடி யார் காலிலும் விழவில்லை. என் கனவு, என் லட்சியம், என் முயற்சி என்று இன்டிபெண்டன்ஸ் மியூசிக்கில் அடியெடுத்து வைத்தவனை இசை உலகம் சிவப்பு கம்பளம் விரித்தே வரவேற்றது.

இரவோடு இரவாக ஒரே ஆல்பம் மூலம் உலக அளவில் பிரபலம் ஆகி விட்டான்.

சினிமாவிலும் பாடும் வாய்ப்புகள் அவனை தேடி வந்தது. சரியான தேர்வு அவன் வெற்றி பாதைக்கு வழி வகுத்தது.

பத்து வருட இசை வாழ்க்கையில் பல படிகள் முன்னேறி உயர்ந்து நிற்பவன், காதல் வாழக்கையில் தவழும் குழந்தையாக தான் திணறி கொண்டிருக்கிறான்.

“நட்சு வந்துட்டாளா?”

அங்கே அத்தனை கூட்டம் அவனுக்காக காத்திருக்க,

ஒப்பனைகள் முடித்துக் கொண்டு அவன் காத்திருந்தது என்னவோ அவளுக்காக தான்.

நட்சத்திரா… பெயருகேற்றது போல் ஒளிரும் மங்கை அவள்.

சரணின் மாமன் மகள். சிறு வயது முதலே அவள் மேல் ஒரு பிடித்தம்.

காதல் என்று உருவெடுத்து உள்ளுக்குள் பதுக்கி கொண்டான்.

“இல்ல சார். ரெண்டு முறை கார் அனுப்பிட்டேன். அவங்க…” என்று சரணின் காரியத்தரசி வேலவன் இழுக்க,

கை நரம்புகள் புடைத்து கண்கள் சிவந்தது சரண் தேவ்வுக்கு.

“சார் உங்க குரலுக்காக தான் அங்க அத்தனை பேர் காத்து இருக்காங்க” என்று வேலவன் தயங்கியபடி அவனை பாட அழைத்திட,

கண்களை மூடி ஆழ்ந்த மூச்சு ஒன்றை எடுத்துக் கொண்ட சரணும்,

“ஹ்ம்ம் போகலாம்” என்று சொல்லிக் கொண்டே மேடை ஏறியவன்,

தன் லட்சிய காதலி மயக்கத்தில், நட்சத்திராவை மறந்து தான் போனான்.

“கண்ணம்மாஆஆஆ என் காதலி…

கண்ணம்மாஆஆஆ என் காதலிஈஈஈ…

பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்

தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா…”

பாரதியார் வரிகள் ஹிப்பாப் ஸ்டைலில் அவன் மெஸ்மரிச குரலில் பாடிட,

அவனுக்காக ஆர்ப்பரித்த கூட்டம் மொத்தமும் அமைதியாகியது அவன் குரல் கேட்டிட மட்டுமே.

சரண் குரலை தொடர்ந்து பின்னணி பாடகிகளின் குரலில் சில வரிகள்,

“தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்

தீராத விளையாட்டுப் பிள்ளை…
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை…”

கொட்டும் பனி இரவில், சூரியனே ஓய்வெடுத்திட, நட்ட நடு வீதியில் இருசக்கர இரும்பு குதிரைகள் அணிவகுத்து நின்றிருக்க,

“விஷ்ணு… விஷ்ணு… விஷ்ணு…”

என்று செர்ரி பழ இதழ்களில் மேலும் நிற கூட்டிய சிவப்பு சாயம் பூசிய இதழ்கள் அந்த பெயரை கூச்சலிட்டுக் கொண்டிருந்தது.

சரணின் இதயத்தில் வசிக்கும் மாடி வீட்டு மாடப்புறாவோ, நடு வீதியில் நின்று கூச்சலிட்டு கொண்டிருந்தாள்.

நல்ல சிவந்த நிறம். மெலிதான உடல்வாகு. உடலை ஒட்டி பிடித்திருந்த ஜீன் நாகரீக வளர்ச்சி, ஆடை சுதந்திரத்தில் அங்கங்கே கிழிந்து அவள் அங்கம் காட்டியது.

சொற்பமாக தெரியும் சிற்றிடையோ கைகளை தூக்கினாள் வஞ்சமின்றி அவள் அழகை படம் காட்டும் அளவுக்கு குட்டி டி-ஷர்ட், அதன் மேலே லெதர் ஜாக்கெட் அவள் உடலை குளிரில் இருந்து காத்துக் கொண்டிருந்தது.

“நட்சு உனக்கு எதுக்கு டி இந்த மானகெட்ட பொழப்பு? அழகா சரண் சார் கான்செப்ட்க்கு போய் இருக்கலாம். ராஜ மரியாதை கிடைச்சிருக்கும். அதை விட்டு ஏன் டி இந்த விஷ்ணு பின்னாடி சுத்துற?” என்று அவள் தோழி அவளை கடிந்து கொள்ள,

அதெல்லாம் அவள் காதில் விழுந்தால் தானே.

டுர் டூர்ர்ர்ர் என்று ஹான்பரில் அழுத்தம் கொடுத்து கொண்டிருந்த அந்த முரட்டு கரங்கள் மீது தான் ரசனையாக படிந்திருந்தது.

“ஏய் உன்கிட்ட தான்டி பேசிட்டு இருக்கேன். கொஞ்சமாவது காதுல வாங்குறாளா பாரு?” என்று ஷீலா ஒருபுறம் நின்று கத்திக் கொண்டிருக்க,

“நட்சு நீ விஷ்ணு மேல வச்சிருக்கிற லவ் கொஞ்சம் கூட சரி இல்லை. பெட்டர் சாய்ஸ் சரண் சார் தான். அவரை விட்டு ஏன்டி உன் டேஸ்ட் இவ்வளவு மட்டமா இருக்கு” என்று மறுபுறம் இன்னொரு தோழி பொரிந்து கொண்டிருந்தாள்.

அவர்கள் வசவுகளை எல்லாம் காதலின் தீபமாக ஏற்று மேலும் மேலும் காதல் நெருப்பை அவள் வளர்த்துக் கொண்டது என்னவோ விஷ்ணு மீது தான்.

“சரண் மாமா பெஸ்ட் சாய்ஸ் தான், இல்லனு சொல்லல. ஆன எனக்கு செலிப்ரட்டி சாய்ஸ் விட மொனோபொலிடி ட்ருத் தான் வேணும். சரண் மாமாவ லவ் பண்ணா என் லைஃப் நார்மலா தான் போகும். எனக்கு அட்வெண்ட்சரஸ் வேணும். பாருடி விஷ்ணுவ, அந்த கண்ணை பாரு, ஜூபிட்டர்ல வருசகணக்கா மையம் கொண்டிருக்கிற புயல் போல, அப்படியே என்னை இழுக்குது.”

ஹெல்மெட் போட்டு மறைத்திருந்த முகத்தில், கண்ணாடி திரை உள்ளே இலக்கை நோக்கி சீற காத்திருந்த இருவிழிகளை மையலுடன் பார்த்துக் கொண்டே அவள் சொல்ல,

“ஆரம்பிச்சிட்டா” என்று தலையில் அடித்துக் கொண்டனர் அவள் தோழிகள் இருவரும்.

ஃப்பூஊஊஊ என்ற விசில் சத்தத்தில், புழுதியை கிளப்பி விட்டு தார் சாலையில் நவீன இரும்பு குதிரைகள் சீறி பாய்ந்திட,

மீண்டும் தித்திக்கும் இதழ்கள் இரண்டும் “விஷ்ணுஊஊஊ” என்று கூவிட ஆரம்பித்து விட்டது.

“எலி தான் காயுது. எலி புழுக்க எதுக்கு டி காயனும்?”

முறைகேடாக நடக்கும் மோட்டார் பைக் ரேஸ் வீதியில் நின்றிருந்த அவள் தோழிகள் இருவரும் அங்களத்தபடியே, சரண் அவளுக்காக அனுப்பிவிட்டிருந்த நவீனரக நான்கு சக்கரத்தை ஏக்கமாக பார்த்து கொண்டார்கள்.

‘ப்ரேக் தி ரூல்ஸ்’ என்று சாலை விதிகளை மீறி, பொது மக்களை சில நிமிடங்கள் மரணத்தின் வாசல் வரை கொண்டு சென்று, திக் திக் அனுபவத்தோடு அந்த ஏரியாவை ஒருமுறை சுற்றி நான்கு பைக்குகள் சீறிக் கொண்டு முன்னேறி வர,

மீண்டும் ஆரவாரம் அங்கே கூடியிருந்த இளைஞர்கள் மத்தியில்.

கைவிரல் நகங்களை பல்லிடுக்கில் பழி கொடுத்து நின்றிருந்த மங்கையின் எதிர்பார்ப்பை பொய்க்காது விஷ்ணு பைக்கே முதலில் கிரீச் என்ற சத்தத்துடன் வந்து நின்றது.

ஹூரே என்று துள்ளி குதித்து நட்சத்திர விஷ்ணு அருகே ஓடிட,

அதற்கு முன் சில ஆண் நண்பர்கள் விஷ்ணுவை சூழ்ந்து கொண்டு வெற்றி களிப்பை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

தலையில் கவிழ்த்திருந்த தலைகவசத்திற்கு முரட்டு கைகள் விடுதலை கொடுத்திட, முழுதாக நட்சுவின் விஷ்ணு தரிசனம் கிடைத்தது.

மண்டையை சுற்றி ஒட்ட வெட்டிய சிகையோ, உச்சியில் நாலு இஞ்சுக்கு உயர்ந்து நின்றது.

மைதா மாவை குழைத்து அப்பியது போன்ற தேகம். ஒல்லியான உடல்வாகு. மொழு மொழுவென வழித்தது போல முகம், அதில் சிவந்த அதரங்கள் என ஹிந்தி பிராண்ட் ஹீரோ தான் நட்சுவின் விஷ்ணு.

கையில் அணிந்திருந்த கருப்பு நிற கையுறையை பற்களால் கடித்து இழுத்து கழட்டி கொண்டிருந்த விஷ்ணுவிடம்,

“மச்சீ அடி பொழி போ. போன தடவையை விட நாலு நிமிஷம் முன்னாடியே இந்த முறை வந்துட்ட” என்று ஒருவன் புகழ்ந்திட,

“மச்சி டிரீட்டு” என்று ஓசி குடி ஓணான் அருகே நின்று காதுக்குள் கத்திய சமயம், நட்சத்திராவும்

“விஷ்ணு” என்று ஓடி வந்து பைக் முன்னால் விழுந்தாள்.

அவளை பார்த்ததும் வெற்றி களிப்பு கூட புற முதுகு காட்டி ஓடியது போல் ஒரு சலிப்பு விஷ்ணு முகத்தில்.

‘இந்த நட்டு தொல்லை தாங்கலப்பா’ என்று உள்ளுக்குள் கடுத்து கொண்டாலும்,

“இன்னா நட்டே இந்நேரத்தில இங்க சுத்தினு இருக்க. உன் ஊட்ல எல்லாம் உன்ன தேட மாட்டாங்களா?”

பார்க்க தான் ஆள் ராயல் ரிச், வாயை திறந்தால் கூவம் பிரிட்ச்.

“உனக்காக தான் வந்தேன்” என்று அவள் பல்லிளிக்க, ‘அய்யே’ என்று எரிச்சலாக தான் இருந்தது விஷ்ணுவுக்கு.

ஃப்பூபூ என்று மீண்டும் விசில் சத்தம் கேட்க,

“ரேஸ் முடிஞ்சப்புறமும் எவன் டா அது விசில் ஊதுறது?” என்று விஷ்ணு மட்டுமல்ல மொத்த கூட்டமும் திரும்பி பார்த்த அடுத்த நொடியே,

“அய்யய்யோ போலீஸ்” என்று மூன்று நான்கு நபர்களாக பைக்கில் ஏறி சிட்டாக பறந்து இருந்தார்கள்.

“மச்சான் சீக்கிரம் வண்டிய எடு. இல்லை ஜெயில்ல தான் டிரீட் வைக்கணும்” என்று விஷ்ணு பின்னால் இருவர் ஏறி கொள்ள,

விஷ்ணுவும் பைக்கை திருக்கிக் கொண்டு தெறித்து ஓட முனைய,

“விஷு… நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லவே இல்லையே” என்று நிலுவையில் இருக்கும் அவர்களின் நீண்ட நாள் பஞ்சாயத்துக்கு இப்போதே பதில் கேட்டாள் நட்சத்திரா.

“இன்னா சொல்லணும். மொதல்ல வண்டில இருந்து கையை எடு. பதில் சொல்ல சொல்லி பர்மனெண்ட மாமியார் ஊட்டுக்கு அனுப்பிடுவ போல, தள்ளுமா தாயே” என்று அவளை சுத்திக் கொண்டு பைக் பறந்து விட்டது.

ரேஸ் நடத்திய கூட்டமோ கைத்தட்டல் கேட்ட புறா கூட்டம் போல் நொடியில் ஆளுக்கொரு திசைக்கு பறந்து விட,

பார்வையாளராக வந்தவள் இப்போது காவல் நிலையத்தில் விசாரணை கைதியாக அமர்ந்திருந்தாள் தன் சகாக்களோடு.

“வீட்ல பாக்கியலெட்சுமி சீரியல் பார்த்துட்டு சிவனேனு இருந்தவளை இப்படி பக்க கிரிமினல் ரேஞ்ச்ல கொண்டு வந்து உட்கார வச்சிருக்கியே! விளங்குவிய நீ?” என்று ஷீலா புலம்ப,

“ப்ரெண்ட்னு நம்பி உன்கூட வந்ததுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட” என்று அவள் மற்றொரு தோழி பிரீத்தி திட்டிக் கொண்டிருந்தாள்.

ஆனால் அவளோ இப்போது இருக்கும் இடத்தை கூட சிறந்த அனுபவமாக எண்ணி தான் அந்த இடத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏய் ஜெயில்ல இருக்கோம் டி உனக்கு கொஞ்சம் கூட அது பத்தி கவலை இல்லையா?” என்று ஷீலா கேட்க,

“எதுக்கு கவலை படனும்? எப்படியும் இன்னும் அரை மணி நேரத்துல மாமா வந்து கூட்டிட்டு போக போறாங்க. அதுக்கு பிறகு நான் ஏன் கவலை படனும்” என்று சொல்லி வாய் மூடும் முன்னமே வக்கீலுடன் அங்கே வந்து சேர்ந்தான் சரண் தேவ்.

சில நேர உரையாடலில் பல ஆயிரங்களை அன்பளிப்பாக கொடுத்தே அங்கிருந்து நட்சத்திராவை மீட்டு வந்தான் சரண் தேவ்.

வெளியே வந்ததும் “வேலு இந்த ரெண்டு பொண்ணுங்களையும் அவங்க வீட்ல விட்டிரு” என்று சொல்லி கொண்டே நட்சத்திராவை மட்டும் தன் காரில் அழைத்துக் கொண்டு சென்றிருந்தான்.

முன்னிருக்கையில் டிரைவர் அருகே அமர்ந்திருந்த சரண், முன் கண்ணாடி வழியே பின்னிருக்கையில் அமர்ந்து சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நட்சத்திராவை பார்த்த படி வந்தவனுக்கு இன்று அவள் செயல்கள் அதிக கோபத்தை தான் ஏற்படுத்தியது.

சரண் அவளை வர சொல்லியும் அவன் கான்செட்டுக்கு வரவில்லை. மாறாக இங்கே போலீஸ் ஸ்டேஷனில் வந்து அமர்ந்து மானத்தை வாங்குகிறாள்.

காதல் இருக்கிறது தான். அதற்காக சுய ஒழுக்கம் கண்ணுக்கு தெரியாது போகாதே.

மூன்றாம் நபர்கள் முன் அவளிடம் கேள்வி கேட்க விரும்பாதவன், வீட்டு வாசலில் கார் வந்து நின்றதும் இறங்கி ஓட இருந்தவளை பிடித்துக் கொண்டான்.

“நில்லு நட்சு நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவன் வெளியே தோட்டத்தில் போட பட்டிருந்த கல் பெஞ்சில் அவளை அமர சொல்ல,

அவளும் சமத்து பிள்ளையாக ஆசான் அறிவுரை கேட்கும் மாணவியாக அமர்ந்திருந்தாள்.

“ஏன் கான்செட்க்கு வரல?”

“எனக்கு இந்த பாட்டு கச்சேரிலாம் பிடிக்கலை மாமா” என்று அவன் ஆசை காதலியை ஒரே வார்த்தையில் தூக்கி போட்டாள் ஒருதலை காதலி.

“ரொம்ப நேரம் ஒரே இடத்தில உட்கார்ந்து இருக்கணும். எனக்கு மியூசிக் மேல கொஞ்சம் கூட இன்டர்ஸ்ட் இல்ல” என்றவளை,

புருவம் சுருக்கி அழுத்தமாக அவன் பார்த்துக் கொண்டிருக்க,

அவளோ அவன் தொழிலையையே அலட்சியமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

இரு நிமிட அமைதி.

“கேள்வி முடிஞ்சதா மாமா? நான் கிளம்பவா? நாளைக்கு காலேஜ் போகணும். ஃபைனல் எக்ஸாம் இருக்கு” என்று சொல்லி துள்ளி குதித்து சென்றவளை பாரமான மனதுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சரண்.

அவனே உறவுகார பெண் உரிமை கொடுக்காது உதறி தள்ளும் கடுப்பில் மனம் நொந்து அந்த பனிக்காற்றில் நின்றிருக்க,

இருவரும் தனியே தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருந்ததை முதல் மாடி பால்கனியில் மறைந்து நின்று ஒரு கூட்டமே பார்த்துக் கொண்டிருந்தது.

“பார்த்தீங்களா அண்ணி, இவ்வளவு நேரம் அவன் கூட தானே கான்செட்ல இருந்திருப்பா, கார்ல கூட ஒண்ணா தானே வந்திருப்பாங்க, அப்படியும் பேசி தீரல ரெண்டு பேருக்கும்” என்று சிரித்து கொண்டே நட்சத்திராவின் அன்னை மேகலா சொல்ல,

“அதானே, வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்து பேசாம, வெளிய பனில பிள்ளையை நிற்க வச்சி பேசிட்டு இருக்கான். இப்படியே போனா சரி பட்டு வராது”

என்று சரண் அன்னை இசைமலர் நாத்தனாருக்கு ஒத்து ஊத,

அவர்களுக்கு பின்னால் நின்றிருந்த அவர்கள் கணவர்மார்களோ,

“என்ன தண்டனை கொடுக்கலாம்?” என்று தீவிர பாவனையில் கேட்க,

“ஆயுள் தண்டனை தான். நட்சுக்கு படிப்பு முடிய போகுதே, சீக்கிரமே நல்ல நாள் பார்த்து கல்யாணம் பண்ணிடலாம். அப்புறம் வாழ்க்கை முழுதும் ரெண்டு பேரும் பேசிட்டே இருக்கட்டும்” என்று இறுதி தீர்ப்பை அளித்தார் சரணின் தந்தை சௌந்தர்.

பார்க்கும் காட்சிகள் ஆயிரம் ஆசைகளுக்கு வித்திடலாம், நிதர்சனம் யாரும் எதிர் பார்க்காத ஒன்றாக அல்லவா இருக்கும்.

தங்கள் பிள்ளைகளை மட்டும் நெஞ்சில் நிறுத்தி கணக்கு போட்ட பெரியவர்கள், விஷ்ணு என்ற பூகம்பம் இடையில் இருப்பதை அறியாமல் போனது தான் விதியின் சதியோ.

அன்றைய இரவு சரணின் தவிப்பான மனநிலையில் விடிந்திருக்க,

மறுநாள் காலையில் அவன் கார் வந்து நின்றது என்னவோ விஷ்ணு ஏரியாவில் தான்.

சில நாட்களாக நட்சத்திராவின் நடவடிக்கையில் மாற்றம் இருக்க,

அவளுக்கு தெரியாது வேவுப் பார்க்க அவன் போட்ட ஆள் கொண்டு வந்த செய்தியில் ஆட்டம் கண்டது பாடகன் காதல்.

“மேடம் அவங்க கூட படிக்கிற ஒரு பையனை லவ் பண்றாங்க” என்று ஒற்றன் தகவல் சொல்லி செல்ல,

இங்கே ஒருதலை காதலன் உள்ளுக்குள் மறித்து போனான்.

“யார் அவன்?”

அதற்கு விடையாக சில அடி தூரத்தில் தன் சாகாக்களோடு டீக்கடையில் நின்றிருந்த விஷ்ணுவை பொசுக்கிடும் விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சரண்.

“இந்த பையனையா லவ் பண்றா?”

கொஞ்சம் கூட சீரணித்துக் கொள்ள முடியவில்லை அவனால் .

“என்கிட்ட இல்லாதது இந்த நோஞ்சான் பயகிட்ட என்ன இருக்கு? என் கால் தூசிக்கு ஈடாவானா இவன்? அஞ்சி இல்ல அஞ்சே முக்கால் அடி இருப்பானா? ஆளும் மண்டையும்? ஊதினா பறந்துடுவான் போல, இவனை எப்படி நட்சு லவ் பண்றா?” என்று கடுப்பில் வேலுவிடம் சரண் பொரிந்து கொண்டிருக்க,

“ஒருவேளை காதலுக்கு கண்ணு இல்லை போல சார்” என்று ஒத்து ஊதினான் வேலவன்.


“மொத்தமா ஆளையே தூக்கிட்டா அந்த காதலே இருக்காதுல” என்ற சரண் எக்கு குரலில் வேலுவே எச்சில் விழுங்கி அவனை திரும்பிப் பார்த்தான்.
 

Attachments

  • eiMM97N58742.jpg
    eiMM97N58742.jpg
    775.5 KB · Views: 210
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 2

ei58WAN97326.jpg

சாத்திரம் பேசு கிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!

சாத்திர முண்டோ டீ!”


“மொத்தமா ஆளையே தூக்கிட்டா அந்த காதலே இருக்காதுல” என்ற சரண் எக்கு குரலில் வேலுவே எச்சில் விழுங்கி அவனை திரும்பிப் பார்த்தான்.

அவன் சொல்வது பொய்யில்லை, அதை செய்திடும் தீர்க்கமும், கோபமும் சரண் விழிகளில் அப்பட்டமாக தெரிந்தது.

“சார்” என்று தழுத்தழுத்த குரலில் வேலு அழைத்திட,

“அவ்வளவு கோபம் வருது வேலு. இந்த நட்சுவுக்கு கொஞ்சம் கூட மூளையே இல்லையா? இந்த மாதிரி ட்ரெயினேஜ்ல (சாக்கடையில்) இருக்கிற பையனை லவ் பண்றா? அவ எனக்கு கிடைக்கலைங்கிறத விட இப்படி அவ வாழ்க்கையை கெடுத்துகிறாளேனு தான் எனக்கு கோபம் வருது” என்று சரண் இயலாமையுடன் கூடிய கோபத்தில் சிடு சிடுத்து கொண்டிருந்தான்.

அந்த சமயம், ஆஜானுபாகுவான ஆறாடி அமீபா போல் வந்த ஒருவன் “எவன் டா அது? தெருவை அடைச்சு காரை நிறுத்தி வச்சிருக்கது? மனுஷங்க தரையில நடக்கதா? இல்ல உன் தலையில நடக்கதா?”என்று கத்திக் கொண்டே,

டொக் டொக் என்று கார் கண்ணாடியை தட்டிட,

ஏற்கனவே எரிச்சலில் எரிந்து கொண்டிருந்த சரண் தேவ், எரிமலை பிழம்பு போல் சிவந்த விழிகளுடன் காரை விட்டு கோபமாக இறங்கி, சண்டைக்கு வாயெடுக்க,

“சார் நீங்களா?” என்று வாயெல்லாம் பல்லாக ஏத்தி கட்டியிருந்த லுங்கியை இறக்கி விட்டபடி பவ்வியமாக கேட்டான் ஆறடி ஆண்டனா.

“நீ எப்படி இங்க?” என்று சரண் புருவம் சுருக்கி கேட்க,

“இது நம்ம ஏரியா சார். என் வீடு இங்க தான் இருக்கு. வாங்க சார்” என்று அழைத்தான் சரணின் பவுண்ட்ஸர்களில் ஒருவனான முத்துமாரி.

சரண் காரை விட்டு வெளியே இறங்கியதும், அவனை ஆராய்ந்த சில விழிகள்,

“இது அவன் தான? இந்த டிவி பொட்டியில பாடுவானே” என்று ஜாக்கெட் போடாத கிழவிகள் இருவர் தங்களுக்குள் பேசிக் கொண்டே அவனை நோக்கி அடியெடுத்து வைக்க,

அதற்குள் ஒரு கூட்டமே அவனை சூழ்ந்து கொண்டது.

“சார் ஒரு செல்ஃபி” என்று எரிமலை லாவா போல் சூடாக இருந்தவன் முன் லெனோவா போனை ஆட்டி ஒருவன் ஃபோட்டோ எடுக்கிறேன் என்ற பெயரில் ஒட்டி உரச,

ஏதோ அசிங்கம் மேலே பட்டது போல முகத்தை சுழித்து கொண்டே நுனி விரலால் அவனை தள்ளி விலக்கி விட்ட சரணோ, “வேலு” என்று குரல் கொடுத்தான்.

“இங்க தான் சார் இருக்கேன்” என்று பின்னால் இருந்து ஓடி வந்த வேலு, பவுன்சர் முத்துமாரிக்கு கண்ணை காட்டிட,

அதை புரிந்து கொண்டவனும், “மச்சான் நகரு, டேய் தம்பி ஓரமா போ” என்று சரணை சூழ்ந்து நின்ற கூட்டத்தை விலக்கி விட்டு,

“நீங்க வாங்க சார்” என்று அன்பாக அவன் வீட்டுக்கு அழைக்க,

தன்னிடம் வேலை பார்க்கும் வேலையாட்களின் ஆசைகளுக்கு மதிப்பு கொடுக்கும் அவனால் மறுக்க முடியாது முத்துமாரியின் வீட்டுக்கு சென்றான்.

“சங்கரண்ணே அங்க என்ன ஒரே கூட்டமா இருக்கு? ஃப்ரீயா வேட்டி சேலை கொடுக்குறாங்களா?” என டீ கடையில் நின்றிருந்த விஷ்ணு கேட்க,

“ஏதோ பெரிய பாடகரு வந்துருக்காராம். அவர் கூட போட்டோ புடிக்க தான் இந்த கூட்டம்” என்று சொன்னவரும்,

சொக்காயில் இருந்த போனை சட்டையில் தேய்த்து கொண்டே முத்துமாரி வீட்டை நோக்கி தான் படையெடுத்தார்.

“மாரி ண்ணே எனக்கு ஒரே ஒரு போட்டோ எடுத்து குடுண்ணே. ஸ்கூல்ல பசங்ககிட்ட காட்டி கெத்து காட்டுவன்ல” என்று சிறுவன் துவக்கம் சிங்காரி வரை அனைவரும் அவன் வீட்டை மொய்த்து விட்டார்கள்.

சொந்த பந்தமாகி போனார்கள், இல்லையேல் அவன் வேலைக்கு தூக்கி விளாசி விட்டு தான் பேசவே செய்வான்.

“கொஞ்சம் கம்முனு இருங்க. நம்ம சார் தான். நான் சொன்னா கேட்பார்”. என்று கெத்து காட்டிய மாரி,

பவ்யமாக வந்து நின்று “சார்ர்ர்ர்ர் ஒரு உதவி. எல்லாம் நம்ம பசங்க தான். உங்க பாட்டுனா உயிரு. ஒரே ஒரு போட்டோ எடுத்துக்க கேட்கிறாங்க. வர சொல்லவா?” என்று தலையை சொரிந்து கொண்டே அனுமதி கேட்டான்.

அவன் அன்னை, “இந்தாங்க காப்பி தண்ணி குடிங்க” என்று வாயெல்லாம் புன்னகையுடன் சில்வர் கப்பில் காபி கொடுக்க,

அதை வாங்கவே அருவறுத்தான் சரண்.

“எத காப்பி தண்ணியா?” என்று கேட்ட வேலு, அவர் கொடுத்த காபியை வாங்கி பார்த்து விட்டு, “கப்பி தண்ணியே தான் சார்” என்று மெதுவாக சரண் காதில் முணு முணுத்து கொண்டான்.

பைவ் ஸ்டார் ஹோட்டலில் பில்டர் காபி குடிக்கும் ஹைஜீனிக் ஹை கிளாஸ் சரணுக்கு இந்த காப்பி தண்ணியின் நிறமே குமட்டிக் கொண்டு வந்தது.

அந்த காபியிலிருந்து தப்பிக்கவே போட்டோவுக்கு போஸ் கொடுக்க தயாரானான்.

அவன் சரி என்றதும் ஒவ்வொருவராக லைனில் வந்து நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.

சரணுக்கோ ‘ஏன் டா இங்க வந்தோம்?’ என்ற சலிப்பு இருந்தாலும், கேமரா முன் நடித்து பழகியவன் ஆகிற்றே, விருப்பமின்மையை சிறிதும் முகத்தில் காட்டாது புன்னகைத்து கொண்டே புகைப்படம் எடுக்க நின்றிருந்தான்.

விட்டால் இரவு வரை அவனை இங்கேயே நிறுத்தி போட்டோ எடுப்பார்கள் போல, மெரினா பீச் நீளத்திற்கு லைன் பார்ம் ஆகிட,

தலையை எட்டி வாசலில் நின்றிருந்த கூட்டத்தை பார்த்த சரணோ,

“ரெக்கார்டிங்க்கு டைம் ஆகிடுச்சு, இன்னொரு நாள் வர்றேன்” என்று மாரியிடம் சொல்லி விட்டு தப்ப முயன்றவனை சுற்றி அந்த கூட்டம் மொய்த்துக் கொண்டே வர, மாரி தான் தன் துதிக்கை போன்ற திடமான கையினால் எல்லாரையும் அப்புறப்படுத்தி கார் அருகே அழைத்து வந்தான்.

விட்டால் போதும் ரேஞ்சில் சரண் காருக்குள் ஏறி அமர்ந்துக் கொள்ள, டிரைவர் காரை ஸ்டார்ட் செய்ய, அவன் நேரம் அவன் விலையுயர்ந்த கார் இந்த இடத்தை விட்டு நான் நகர்வேனா? என்பது போல் மக்கர் பண்ணியது.

அங்கிருந்து போனால் தேவலாம் என்ற நிலையில் இருந்த சரணுக்கு இது எரிச்சலை கொடுக்க,

“என்ன மேன் பிரச்சனை?” என்று சற்று கடுப்பாகவே கேட்டான்.

“தெரியல சார். கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது” என்று டிரைவர் சொன்னது, வெளியே நின்றிருந்த மாரிக்கும் கேட்டது.

வெளியே இறங்கி டிரைவர் பெணெண்ட்டை உயர்த்தி எதோ குடைந்து கொண்டு இருந்தானே தவிர எதுவும் சரியான வழியை காணோம்.

“இன்னும் என்ன டா கொடைஞ்சிட்டு இருக்கான்? போய் பாரு” என்று சரண் வேலுவையும் துரத்தி விட,

“இதோ பார்க்கிறேன் சார்” என்று அவனும் இறங்கி ஓடி வந்தான்.

“யோவ் சரியாச்சா இல்லையா?” என்று வேலு டிரைவர் மீது எரிந்து விழ,

டிரைவர், “மெக்கானிக் வந்து தான் சார் பார்க்கணும்” என்று கையை விரித்து விட்டான்.

இதை அப்படியே போய் காருக்குள் இருக்கும் எரிமலையிடம் சொன்னால், இப்போதே வெடித்து சிதறி விடுமே என்று வேலு முழித்து கொண்டு நிற்க,

கடவுள் போல் காப்பாற்றினான் மாரி.

“எங்க ஏரியால அருமையான மெக்கானிக் ஒருத்தன் இருக்கான். அவனை இழுத்தாரட்டுமா சார்” என்று மாரி கேட்க,

“யப்பா சாமி உனக்கு புண்ணியமா போகும். சீக்கிரம் போய் கூட்டிட்டு வா” என்று பெரிய கும்பிடு ஒன்றை போட்டான் வேலு.

அந்த இடத்தை அலசிய மாரி கண்ணில் விஷ்ணு பட “ஏய் விஷ்ணு” என்று கத்தி அழைத்தான் மாரி.

‘இவன் என்ன வில்லங்கத்தை கூவி கூப்பிடுறான்?’ என்று மனதில் புலம்பிக் கொண்டே காருக்குள் அமர்ந்திருந்த சரணை ஓரக் கண்ணால் வேலு பார்க்க,

அவனை தான் சுட்டெரிக்கும் சூரியன் போல் முறைத்து கொண்டிருந்தான் சரண்.

‘இது தேவையா உனக்கு? நீ வெறுக்கிறவன்கிட்டயே உதவி கேட்கிற நிலையில கொண்டு வந்து விட்டாங்களே!’ என்று ஏக கடுப்பில் உள்ளுக்குள் கொதித்து கொண்டிருந்தான் சரண்.

விஷ்ணுவும் “என்ன ண்ணோ?” என்று கேட்டுக் கொண்டே அவ்விடம் வந்து நிற்க,

அவன் முகத்தை பார்க்க பார்க்க சரணுக்கு பத்திக் கொண்டு வந்தது.

‘கொஞ்ச நேரம் கூட என்னால இவன் இருக்கிற இடத்தில இருக்க முடியல, நட்சு எப்படி காலம் பூர இந்த இடத்தில இருப்பா?’ என்று அப்போதும் அவன் கவலை கோபம் எல்லாம் நட்சத்திரா பற்றியதாக தான் இருந்தது.

“கார் ஸ்டார்ட் ஆகல விஷ்ணு. கொஞ்சம் பாரேன்” என்று மாரி சொல்ல,

விஷ்ணுவும் சில நொடிகள் காரை அலசி, ஆராய்ந்து சரி செய்தான்.

“அண்ணோ இப்ப ஸ்டார்ட் பண்ணு” என்று டிரைவரிடம் சொல்ல,

டிரைவரும் காரை ஸ்டார்ட் செய்ய, காரும் ஸ்டார்ட் ஆனது.

உடனே "தேங்க்ஸ் ப்பா" என்று சொல்லிக் கொண்டு டிரைவர் காரை கிளப்பிட,

கையில் ஒட்டியிருந்த கரியை சட்டையில் துடைத்து கொண்டே வழி விட்டு நின்ற விஷ்ணுவை தான் சரண் விழிகள் தீர்க்கமாக பார்த்த படி கடந்து சென்றது.

“நீ காலேஜ் போகல?” என்று மாரி விஷ்ணுவிடம் கேட்க,

“தோ… சட்டையை மாத்திட்டு போக வேண்டியது தான்” என்று சொல்லிக் கொண்டே தன் வீட்டிற்கு சென்று கிளம்பி வந்த விஷ்ணு அடுத்து நின்றது என்னவோ ஜெராக்ஸ் கடை வாசலில் தான்.

“எக்கோ… சீக்கிரம் மினி ஜெராக்ஸ் போட்டு குடு” என்று பெரிய புத்தகத்தை தூக்கி விஷ்ணு மேஜையில் வைக்க,

“கரண்ட் இல்ல விஷ்ணு” என்று அந்த அக்கா விஷ்ணு தலையில் பெரிய பாறாங்கல்லை தூக்கி போட்டது.

“இன்னா க்காவ் சொல்ற? என் வாழ்க்கையே உன் கையில தான் இருக்கு. கரண்ட் இல்லனு சொல்ற” என்று விஷ்ணு ஏகத்துக்கும் பதற,

“இல்லைனா இல்லனு தானே சொல்ல முடியும்.” என்றாள் அந்த அக்கா.

“இந்நேரத்துல தானா இந்த கருமம் புடிச்ச கரண்ட் போகணும்? நான் படிச்சி கலெக்டர் ஆவுறது அந்த கரண்டுக்கே புடிக்கல போல, இத நம்பி நான் பிட்டு வேற எழுதலையே” என்று புலம்பிக் கொண்டே நின்றிருந்த விஷ்ணு,

“ஒரு ஜெனரேட்டர் கூட இல்லாம இன்னாத்துக்கு நீ எல்லாம் கடை நடத்துற?” என்று கடைக்கார அக்காவை திட்டிக் கொண்டே தேர்வு அறையிலும் வந்து அமர்ந்தாச்சி.

விஷ்ணுவே, மெசினை நம்பி மேன் பவரை பயன் படுத்தாது வெறும் கையோடு பரிச்சையில் வந்து அமர்ந்திருக்க,

இன்னும் கடுப்பாக்கினாள் நட்சத்திரா.

பிட்டு இல்ல, முன்னாடி இருக்கவன் கருணை காட்டினா தான் பாஸாக முடியும் என்ற நிலையில் ஆசிரியர் அறியாமல், எட்டி எட்டி பார்த்து எழுதி கொண்டிருந்த சமயம்,

தலை மேல் வந்து விழுந்த பேப்பர் பாலில் ஆள் அரண்டு போச்சு.

‘அய்யோ அம்மா நான் இல்ல’ என்று பதறி போய் தலையை குனிந்து கொண்டே எழுதுவது போல் பாவளா செய்ய,

மீண்டும் ஒரு பேப்பர் பால் பறந்து வந்து எழுதி கொண்டிருந்த பேப்பரில் மேல் விழ,

விழிகளை சுருக்கி அதை பார்த்துக் கொண்டே எடுத்து பிரிக்க,

“டீல் ஆர் நோ டீல்” என்று தான் எழுதி இருந்தது அதில்.

சந்தேகமே இன்றி குபு குபுவென வயிரெறிய விஷ்ணு திரும்பிப் பார்த்தது என்னவோ நட்சத்திராவை தான்.

மலர்ந்த முகத்துடன் விஷ்ணுவையே பார்த்துக் கொண்டு இருந்தவள்,

புருவம் தூக்கி பதில் கேட்க,

வெளிப்படையாகவே அவளை முறைத்து கொண்டிருந்த விஷ்ணு சட்டையை கொத்தாக பிடித்து தூக்கி வெளியே கிடாசி இருந்தார் ஹால் சூப்பர்வைசர்.

“நான் ஒன்னும் பண்ணல சார்” என்று விஷ்ணு வெளியே நின்று கத்தி கொண்டிருக்க,

“அவுட்” என்றவர் நான் ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் ரேஞ்சில் கத்தி வெளியே அனுப்பியிருந்தார்.

உள்ள இருந்தா மட்டும் என்ன கிழிக்க போறோம். அடுத்த எக்ஸாம்ல பார்த்துக்கலாம். ஆப்போவாது கரண்ட் இருக்கணும் என்று எண்ணிக் கொண்டே தன்னை மாட்டி விட்ட நட்சத்திராவை முறைத்தபடி விஷ்ணு வெளியேறிட,

'நீ இல்லா இடம் எனக்கு காற்றில்லா வெற்றிடம் தான்’ என்று நட்சத்திராவும் எதுவும் எழுதாமலே பேப்பரை கொடுத்து விட்டு விஷ்ணு பின்னால் ஓடி வந்தாள்.

விஷு… என்று கத்திக் கொண்டே பின்னால் ஓடி வந்தவளை விஷ்ணு கொஞ்சம் கூட மதிக்காது நடந்திட,

மூச்சிரைக்க ஓடி வந்து விஷ்ணு கையை பிடித்து கொண்ட நட்சத்திரா,

“எவ்வளவு நாள் தான் நானும் உன் பின்னாடி அலையுறது? என்னை பார்த்தா பாவமா இல்லையா? ஓகே சொல்லேன்” என கெஞ்சினாள்.

“அம்மா தாயே உன் ஆசைக்கு நான் பலியாக முடியாது ஆள விடு” என்று சொல்லிக் கொண்டே ஓடி வந்து தன் பைக்கை எடுத்து கொண்டு கிளம்பிய விஷ்ணுவை கல்லூரி வாசலில் இருந்து பின் தொடர்ந்தது சரணின் கார்.

“பாவம் சின்ன பையனா இருக்கான். ஒருமுறை பேசி பார்ப்போமா?” சரணின் ஒரு மனம் கருணை காட்ட,

அதையும் குறுக்க விழுந்து கெடுத்தால் நட்டு கழந்த நட்சு,

பைக்கில் முன்னே சென்று கொண்டிருந்த விஷ்ணுவை நட்சு ஸ்கூட்டியில் பின்னால் துரத்த,

அது போதுமே சரணின் மனதுக்குள் சாத்தான் புக,

தனியாக காரை ஓட்டி வந்த சரண், நட்சத்திரா செயலில் பித்து பிடித்து, வேகமாக விஷ்ணுவை நோக்கி இடிக்க வந்தவன், நொடி பொழுதில் மனது மாறி பைக்கை உரசி செல்ல,

அந்த உரசலில் தடுமாறி கீழே விழுந்த விஷ்ணுவை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தது என்னவோ நட்சத்திரா தான்.

வெட்டி விட நினைத்த காதல் வேர் விட்டு வளர இந்த விபத்து முக்கிய காரணமாக அமைந்து போனது.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
eiQO1YB23695.jpg



சேவகரால் பட்ட சிரம மிக உண்டு கண்டீர்;

சேவகரில்லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.

இங்கிதனால் நானும் இடர்மிகுந்து வாடுகையில்;

எங்கிருந்தோ வந்தான், ‘இடைச்சாதி நான்’ என்றான்
;



அத்தியாயம் 3


சரண் கார் உரசி சென்றதில் நிலை தடுமாறி நடு ரோட்டில் விழுந்து கிடந்த விஷ்ணுவை, ஐயோ என்று பதறி, ஓடி வந்து தூக்கினாள் நட்சத்திரா.


கை முட்டியில் சட்டை கிழிந்து, தோள் பிய்ந்து ரத்தம் வந்து கொண்டிருக்க, “ஐயோ ரத்தம்” என்று மேலும் பதறியவள், “வா ஹாஸ்பிடல் போகலாம்” என்று அழைத்தாள்.


விஷ்ணுவோ, “அட ச்சீ கையை விடு. இதெல்லாம் ஒரு காயமா? ஆஸ்பிடல்லாம் ஒன்னும் தேவல, அமர்தாஞ்சன் போட்டா சரியாகிடும்” என்று சொல்லிக் கொண்டே கீழே விழுந்து கிடந்த பைக்கை தூக்க முயல,


“அமர்தாஞ்சன் போடுவியா? ஏதாவது சேப்டிக் ஆகி கையை எடுக்கிற நிலை வந்தா? எனக்கு தான் கஷ்டம். நீ முதல்ல ஹாஸ்பிடல் வா” என்று சொல்லி, அங்கே நின்றிருந்த ஆட்டோவில் விஷ்ணுவை உள்ளே தள்ளி அவளும் ஏறி கொண்டாள்.


“ஏய் அதெல்லாம் தேவல. ஆள விடுமா தாயே” என்று இறங்கி ஓட இருந்த விஷ்ணுவை அமுக்கி பிடித்து மருத்துவமனைக்கும் வந்து சேர்ந்தாச்சி.


திடகாத்திரமாக ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்து வந்த விஷ்ணுவை, ரிசப்ஷன் அருகே அவசரத்திற்கு வைத்திருந்த ஸ்ட்ரசரில் தள்ளி, காலை தூக்கி மேலே போட்டு படுக்க வைக்க,


விட்டா ஓவரா படம் ஓட்டுவா என்று அவளை மனதில் திட்டிக் கொண்டே, அவள் படுக்க வைத்த வேகத்தில் ஸ்டரசெரில் இருந்து விஷ்ணு குதித்து கீழே இறங்க,


“இப்போ ஏன் ஸ்ட்ரைன் பண்ணுற? பேசாம படு” என்று நட்சத்திர விஷ்ணு தோளை தொட போக,


“நட்டு கலண்ட மாதிரி எதவாது பண்ணிட்டு இருந்த அடிச்சு பல்லை பேத்துருவேன்” என்று கையை ஓங்கவும் தான் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பினாள்.


“சரி விடு” என்று மிரண்டவள், ஸ்ட்ரச்சரை விடுத்து,


“டாக்டர் எமெர்ஜென்சி” என்று விஷ்ணு கையை பிடித்து இழுத்துக் கொண்டே கத்திய படி ஓடி வந்தவள், மருத்துவர் அறையில் இருந்த நோயாளி ஒருவரை பிடித்து வெளியே தள்ளி விஷ்ணுவை அவர் முன் அமரவும் வைத்தாள்.


“ரொம்ப எமெர்ஜென்சி டாக்டர். முதல்ல எங்களை பாருங்க” என்று அவள் கொடுத்த பில்டப்பில் டாக்டரே, ‘ஏதோ பெரிய கேஸ் போல’ என்று பதறி எழுந்து,


“எங்க மா பேசண்ட்” என்று நோயாளியை தேட,


“இதோ” என்று அவள் விஷ்ணுவை கை காட்டியதும் காற்று இறங்கிய பலூன் போல புஸ்ஸென்று ஆனது டாக்டருக்கு.


அவள் அலம்பலில் சலிப்பாக தலையில் கை வைத்து அமர்ந்திருந்த விஷ்ணுவை பார்த்தபடியே அவரும், மெதுவாக இருக்கையில் அமர்ந்தார்.


நட்சத்திராவோ, “பெரிய ஆக்சிடென்ட் டாக்டர், இடிச்சிட்டு கார்காரன் நிக்காம போய்ட்டான். நிறைய ரத்தம் போயிடிச்சு. கை வேற வீங்கிடிச்சி. எலும்பு ஏதும் உடைஞ்சி இருக்குமா டாக்டர்? எதுக்கும் ஒரு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பார்த்துடுவோமா?” என்று சிறு காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு பதறி கொண்டிருந்தாள்.


மருத்துவரோ, விஷ்ணுவின் காயத்தை பார்த்து கொண்டே எக்ஸ்பிரசனோடு விபத்தை விளக்கிக் கொண்டிருந்த நட்சத்திராவை ‘லூசா இவ?’ என்பது போல் பார்த்து வைத்தவர்,


“பெரிய காயம்லா இல்லை மா, தையல் போடுற அளவுக்கு கூட இல்லை. க்ளீன் பண்ணி ரெண்டு நாள் மருந்து வச்சாலே போதும்” என்றார்.


“எதுக்கும் ஒரு ஸ்கேன்…” என்று ஆரம்பித்த நட்சத்திரா விஷ்ணு முறைப்பபில் வாயை மூடிக் கொண்டு சற்று அமைதியானாள்.


விஷ்ணுவோ, ‘ஓவர் பேரஃபாமென்ஸ் பண்ணி, பெரிய செலவு இழுத்து விட்டுருவ போலவே’ என்று பதறி கொண்டே,


“எனக்கு ஒன்னும் இல்ல டாக்டர். இது தான் அம்மன் சல்லிக்கு பிரயோஜனம் இல்லாத ஆக்சிடென்ட்க்கு அண்ணா சமாதி வரைக்கும் ரீல் ஓட்டுது” என்று சிடு சிடுத்த படியே, மருந்து வைத்து கட்டு போட்டவுடன் இடத்தை காலி பண்ண,


“விஷு… நில்லு நானும் வர்றேன்” என்று பின்னால் ஓடி வந்தாள் நட்சத்திரா.


“நீ இன்னாத்துக்கு கூட கூட வந்துட்டு இருக்க. இங்க பாரு உன் நல்லதுக்கு தான் சொல்றேன். உன் மனசுல இருக்கிற எண்ணத்தை எல்லாம் மூட்டை கட்டி தூக்கி கிடாசிட்டு, வீட்ல பார்க்கிற பையனா பார்த்து கல்யாணம் கட்டிக்க, இதுக்கு மேல என் வாழ்க்கையில நான் உன்னை பார்க்கவே கூடாது. இப்படியே ஓடி போய்ரு. இல்லனு வை, நேர உன் வீட்டுக்கு வந்து உன் அப்பா அம்மாகிட்ட இந்த மாதிரி நீ என் பின்னாடி சுத்திட்டு இருக்கத வத்தி வச்சிடுவேன். அப்புறம் அவங்களே உன்னை எவனுக்காது கட்டி வச்சி பார்சல் பண்ணி அனுப்பிடுவாங்க” என்று காரசாரமாக பொரிந்த விஷ்ணு அங்கிருந்து நடையை கட்ட,


திட்டு வாங்குவது நட்சுவுக்கு ஒன்றும் புதிது இல்லையே. ஆனால் பொது இடத்தில் வைத்து திட்டவும் அவளுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது. கலங்கிய விழிகளுடன் அவள் அப்படியே நின்றிருக்க, பாதி தூரம் சென்றிருந்த விஷ்ணுவோ,


“நட்டே இங்க வா” என்று அவளை திரும்பி அழைத்திட, திட்டு வாங்கியதை கூட கன பொழுதில் மறந்து முகம் மலர தன்னை நோக்கி ஓடி வந்த பெண்ணிடம்,


“ஒழுங்கா ஆஸ்பிடல் பில் கட்டிட்டு போய்டு” என்று கறாராக சொல்லி செல்ல, அவளுக்கோ விஷ்ணுவின் உதாசீனம் மனதை தைத்தாலும்,


தலையை ஆட்டி, மருத்துவ செலவுக்கு பணத்தை கட்டி விட்டே வீடு திரும்பினாள்.


சிறு காயம் என்றாலும் நட்சுவை போல பதறிய இன்னொரு உள்ளம் விஷ்ணுவின் தாய் தான்.


நேசம் கொண்ட பெண்ணின் பதட்டம் கனிவான அக்கறையாக வெளிப்பட,


பாசம் வைத்த அன்னையின் அக்கறையை கோபமாக தான் இங்கே வெளிக் காட்டி கொண்டிருந்தார்.


“எத்தனை வாட்டி சொல்லறது? அந்த உதாரிப் பயலுகளோட சேர்ந்து ரேசுக்கு போகாதனு. கையை கால உடைச்சிட்டு வந்தா யாரு பாக்கது? என்கிட்ட எல்லாம் வாய்கரி இல்ல” என்று கையில் கட்டுடன் சுண்டல் பார்சல் போட்டுக் கொண்டிருந்த தான் பெத்த கறிவேப்பிலை கொத்தை திட்டிக் கொண்டிருந்தார் விஷ்ணுவின் அன்னை அன்னம்மா.


இளம் வயதில் கணவரை இழந்த அவருக்கு வாழ ஒரே ஒரு பிடித்தம் இருக்கிறது என்றால் அது விஷ்ணு மட்டும் தான்.


தானும் இன்றி தன் பிள்ளை ஆதரவற்று நின்று விட கூடாது என்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


அம்பானி வீட்டு மகளும் இல்லை, மருமகளும் இல்லையே தங்கத்திலும், வைரத்திலும் ஜொலிக்க, சாதாரண அடிமட்ட தினகூலி தொழிலாளி தான் அவர்.


அன்றாடம் அவர் குடும்ப வாழ்வாதாரம் கழிவதே இந்த சுண்டல் கடையால் தான்.


பீச்சில் குவியும் லட்ச கணக்கான மக்கள் தயவில் இதுநாள் வரை குடும்ப செலவையும் பார்த்து, வாயை கட்டி, வயித்த கட்டி விஷ்ணுவையும் டிகிரி வரை படிக்க வைத்து விட்டார்.


அன்னை திட்டுவது எல்லாம் விஷ்ணுவுக்கு உரைத்தால் தானே.


“அம்மோய்… எவனோ கண்ணு அவிஞ்சவன் தள்ளி விட்டானு சொல்லிட்டு இருக்கேன். திரும்ப திரும்ப திட்டிட்டு இருக்க. ரேஸ் போய் கையே உடைஞ்சிருந்தா கூட அதையெல்லாம் வீர காயமா கெத்தா காட்டியிருக்கலாம். இப்படி ஓரமா போனவ மேல வந்து விளங்காம போன எவனோ இடிச்சிட்டானு நானே காண்டுல இருக்கேன். நீ வேற ஏன் மா இன்னும் கடுப்பெத்துற?” என்று பதிலிக்கு எகிரிய விஷ்ணுவிடம்,


“வளர்ந்துட்டல்ல இனி இந்த அம்மா பேச்சு உனக்கு கடுப்பா தான் இருக்கும்” என்று அவர் அடுத்த கட்ட வசவு பூஜைக்கு தயாராக,


அந்த சமயம் அந்த வழியே கடந்து சென்ற சில இளம் பெண்கள் விஷ்ணுவை காணாத அதிசயம் போல் பார்த்துக் கொண்டே கடந்து செல்ல,


தலையை கோதிக் கொண்டே அவர்களை பார்த்து சிரித்த விஷ்ணுவின் தலைமுடியை கொத்தாக பிடித்து மண்டையை ஒரு ஆட்டு ஆட்டிய அன்னம்மாவோ,


“முதல்ல இந்த முடியை ஒழுங்கா வெட்டு. வர்றவ போறவ எல்லாம் மார்க்கமா பார்த்துட்டு போறா” என்று திட்டிட,


“அழகா இருந்தா நாலு பேர் பாக்க தான் மா செய்வாங்க” என்ற விஷ்ணுவை முறைத்தவர்,


“அடி செருப்பால. இந்த எண்ணம் வேற இருக்கோ” என்று வழமை போல் திட்ட துவங்கி விட்டார்.


அன்னையின் வசாவுகளை எல்லாம் வாழ்த்து மடல்கள் போல புன்னகையுடன் வாங்கி கொண்டிருந்த விஷ்ணு வாடிக்கையாளர்களுக்கு சுண்டல் போட்டு கொடுப்பதில் சிரத்தையாக இருக்க,


இங்கே ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் அமர்ந்திருந்த சரண் சிந்தை எல்லாம் விஷ்ணுவை பற்றி தான்.


‘அந்த பையனுக்கு ஏதாவது ஆகி இருக்குமா? ச்சே நான் அப்படி பண்ணி இருக்க கூடாது. நான் ஏன் இவ்வளவு மோசமா நடந்துக்கிட்டேன்?’


என்று வேலையில் கவனம் செலுத்த முடியாது, ஏதோ ஒரு ஆதங்கத்தில் செய்த செயலை எண்ணி பரிதவித்து கொண்டிருந்தான்.


பிரபல நடிகர் ஒருவரின் படத்திற்காக மெல்லிசை பாடல் ஒன்றை பாடி கொடுக்கவே இன்று ஸ்டுடியோ வந்திருந்தான்.


சிந்தை முழுவதும் விஷ்ணுவே ஆக்கிரமித்திருக்க, செய்த செயலை எண்ணி கலங்கி கொண்டிருந்தவனால் எப்போதும் போல் குரலில் உயிர்ப்பு தன்மையை கொண்டு வர முடியவில்லை.


மியூசிக் டைரக்டர் வேறு நேரத்தை பார்த்த படியே அவனை பார்க்க, சரணுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.


பத்து வருட இசை வாழ்க்கையில் ஒரு நாள் கூட இத்தனை நேரம் அவன் எடுத்துக் கொண்டதே இல்லை.


“என்னாச்சு சரண்? வழக்கமா நீங்க மெலடி பாடினா அப்படியே கண்ணை மூடி மெய் மறந்து திரும்ப திரும்ப கேட்க தோணும். ஆனா இன்னைக்கு உங்க குரல்ல ஏதோ மிஸ் ஆகுதே. ஆர் யூ ஓகே” என்று டைரக்டர் கேட்க,


“நத்திங்” என்று சொல்லி கொண்டே ஹெட்செட்டை கழட்டி மைக்கில் தொங்க விட்டவன், “சாரி… நாளைக்கு ரெக்கார்டிங் வச்சிக்கலாமா?” என்று தான் கேட்டான்.


அவன் இயல்பாக இல்லை என்பதை புரிந்து கொண்ட மியூசிக் டைரக்டரும் “ஓகே டேக் கேர்” என்று சொன்னதும்,


உடனே சரணும் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.


ஏதோ சிந்தனையில் காருக்குள் அமைதியாக அமர்ந்திருந்த சரணை யோசனையாக பார்த்தபடி அமர்ந்திருந்த வேலவன்,


“என்னாச்சு சார்? எந்த ரெக்கார்டிங்கையும் நீங்க ஸ்கிப் பண்ணது இல்லையே! இன்னைக்கு என்னாச்சு?” என்று கேட்க,


சரணுக்கும் தன் மன அழுத்தத்தை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் தேவலாம் போல இருக்க,


காலையில் நடந்த விபத்தை பற்றி கூறி,


“நான் ரொம்ப மோசமா நடந்துகிட்டேன்ல” என்று அபிப்பிராயம் கேட்டான்.


‘எனக்கு தெரியாம மனுஷன் என்னென்னமோ வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டாரே’ என்று எண்ணிக் கொண்டே வேலவனும்,


“கொஞ்சம் அப்படி தான் போல சார்” என்றான் நேர்மையாக.


தவறே செய்தாலும், யாராவது அதுக்கு ஒத்து ஊதி தன் தவறுக்கு நியாயம் சொல்ல மாட்டார்களா? என்று மனித மனம் எதிர்பார்ப்பதை போல தான், சரணும் வேலவனிடம் விசயத்தை சொன்னது.


ஆனால் அவன் பார்வை சரணுக்கு குற்றவுணர்வை மேலும் தூண்டி விட,


“சின்ன பையன். நான் அப்படி பண்ணி இருக்க கூடாதுல, அவன்கிட்ட பேசி நட்சுவ விட்டு விலகி போக சொல்லி இருக்கணும். இன்ஃபாக்ட் நாட்சு தான் அந்த பையன் பின்னாடி சுத்துறா, அவனுக்கு அவ மேல விருப்பம் இல்லாத போல தான் இருக்கு. மே பீ பேசி இருந்தா அவனே அவ வாழ்க்கையை விட்டு போய் இருப்பான்னு இப்போ தோணுது” என்று மெய்யாக வருந்தி சொன்ன தன் முதலாளியை,


அய்யோ பாவம் ரேஞ்சில் பார்த்து வைத்தான் வேலவன்.


“சார் உங்களுக்கு இந்த வில்லத்தனம் எல்லாம் செட் ஆகாது. நீங்க அப்படிப்பட்ட ஆளும் கிடையாதுனு உங்க கூட பழகுற எங்களுக்கு தெரியும். ஆனா ஏன் அந்த பையன் மேல இவ்வளவு கோபம் வருது உங்களுக்கு? அங்க இடிச்சி தள்ளிட்டு இங்க வந்து புலம்பிட்டு இருக்கீங்க”


“ஆமா டா, இது என் கேரக்டர் இல்லனு எனக்கும் தெரியுது. ஆனா ஏன்னே தெரியல அவனை பார்த்தா அப்படி ஒரு கோபம் வருது. மறுபடியும் அவன் கண் முன்னாடி வராம இருக்கிறது தான் அவனுக்கு நல்லது” என்ற சரணை பார்த்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை வேலவனுக்கு.


“வர கூடாதுனு வேண்டிக்கிறேன் சார். அவன் நல்லதுக்காக இல்லை. நீங்க இப்படி மனசு நொந்து போய்ட கூடாதுங்கிறதுக்காக” என்ற வேலவனை பார்த்து சரண் இதழ்கள் வலி நிறைந்த புன்னகை ஒன்றை சிந்திட,


“நீங்க ரொம்ப நல்லவர் சார். யாருக்கும் கெடுதல் நினைக்க தெரியாது உங்களுக்கு. நல்லவனாவே இருந்திடுங்க” என்றான் வேலவன், தன் முதலாளி மீது மெய்யான அக்கறை கொண்டு.


ஆழ்ந்த பெரு மூச்சு ஒன்றை விட்டுக் கொண்ட சரண்,


“ஆன இந்த காதல் பொல்லாதது போல டா. நிமிஷத்துல மூளைக்குள்ள சாத்தானை புகுத்திடுச்சி” என்றவனும் ‘என்னால அந்த பையனுக்கு எதுவும் ஆகிட கூடாது’ என்று வேண்டிக் கொண்டான்.


நாம் விலகி சென்றாலும், விதி வில்லங்கம் பண்ணுவது வழக்கமாக நடப்பது தானே.


அந்த ஆக்சிடென்டிற்கு பிறகு ஒரு மாதம் நன்றாக தான் போய் கொண்டிருந்தது.


கல்லூரி படிப்பு முடிந்ததால் நட்சத்திராவுக்கும் விஷ்ணுவை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காமல் போக, அது சரணுக்கு நல்லதாகவே அமைந்தது.


எந்த மன உளைச்சலும் இன்றி எப்போதும் போல் வேலையில் கவனமாக இருந்தான்.


இந்த நிலையில் தான் சரண் வீட்டில் அவன் திருமணம் பற்றிய பேச்சு வார்த்தை ஆரம்பமானது.


“முன்னாடியே முடிவு பண்ணது தானே. நட்சு படிப்பு முடியட்டும்னு வெயிட் பண்ணோம். இனியும் ஏன் நாள் கடத்தனும்? நல்ல நாள் பார்த்து ரெண்டு பேருக்கும் கல்யாண பண்ற ஏற்பட்டை ஆரம்பிச்சுடுவோம்” என்று பெரியவர்கள் முடிவு செய்து சரணிடம் விருப்பம் கேட்க,


“எனக்கு ஓகே தான். எதுக்கும் நட்சுகிட்ட ஒரு வார்த்தை கேளுங்க” என்றவன் மனமோ ‘அவகிட்ட கேட்க கூடாது. இந்த கல்யாணம் நடக்கணும்’ என்று தான் சுயநலமாக எண்ணிக் கொண்டது.


நேர்மறை எண்ணங்களை விட, எதிர்மறை எண்ணங்களுக்கு சக்தி அதிகம் தான் போலும்.


அவன் எண்ணம் போல், பெண்ணின் விருப்பம் என்பது அந்த வீட்டிலும் நிராகரிக்கப்பட்ட ஒன்றாக மாறி போனது.


“அவ சின்ன பொண்ணு மருமகனே. அவகிட்ட என்னத்த கேட்டுகிட்டு” என்று நட்சத்திரா தந்தை சந்திரன் சொல்லிட,


பாரிய நிம்மதி சரணுக்கு. ஆனால் நட்சு ஏதாவது செய்து திருமணத்தை நிறுத்தி விடுவாளோ? என்ற பயமும் ஒரு ஓரத்தில் இருக்க தான் செய்தது.


அவனுக்கு யாரையும் கட்டாயப்படுத்த தெரியாது. அடிமையாக்கி ஆளும் அன்பும் பிடிக்காது.


திருமணம் நடந்தால் நலம். இல்லையேல் அவள் விருப்பம், அவள் வாழ்க்கை நன்றாக அமைந்தால் போதும் என்று எண்ணும் காதலன் தான் அவன்.


தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் களிப்பு துளியும் அவன் முகத்தில் இல்லை.


எனக்கென்று இறைவன் எழுதி இருந்தால், திருமணத்திற்கு பிறகு கொண்டாடி கொள்கிறேன் என்றவன் பெருந்தன்மையான மனதை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது விஷ்ணுவின் மறுவரவு.


‘வீதியில் போகும் பேயே!

வீட்டுக்குள்ள கொஞ்சம் வாயேன்’னு அவனே அவன் வாழ்வை சூனியமாக்கி கொண்ட தருணம் அது.


சரணின் கார் டிரைவருக்கு உடல்நிலை குறைபாடு என்று மருத்துவமனையில் சேர்த்திருக்க, சரணும் சென்று பார்த்து விட்டு, மருத்துவமனை செலவுடன், ஒரு மாதம் அவரை வீட்டிலேயே ஓய்வெடுத்து விட்டு உடல் நிலை முழுதும் தேறிய பிறகு வேலைக்கு வந்தால் போதும் என்று சொல்லி அதற்கும் பணம் கொடுத்து விட்டே வெளியே வந்தான்.


“ஒரு மாசம் டெம்ரரி டிரைவர் அரெஞ் பண்ணு” என்று வேலவனிடம் சொன்னது அருகே காவலுக்கு நின்றிருந்த முத்துமாரி காதிலும் விழுந்திருக்க,


“சார் ஒரு உதவி” என்று அடுத்த நாள் காலையில் சரண் முன் வந்து நின்றான் முத்துமாரி.


சரண் எப்போதும் போல் தன் ஸ்டுடியோவில் புதிய ஆல்பம் ஒன்றிற்கான கம்போஸிங் முடித்து விட்டு ஓய்வாக இருக்கையில் சரிந்த நேரம் தான் கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தான் முத்துமாரி.


சரண் விழிகள் உள்ளே வந்தவன் மீது கேள்வியாக பதிய,


அவனும் தான் வந்த நோக்கத்தை சொன்னான்.


“சார் நேத்து டிரைவருக்கு ஆள் வேணும்னு சொல்லிட்டு இருந்தீங்களே!” என்று அவன் ஆரம்பிக்க,


“நான் உங்கிட்ட சொல்லலையே” என்றான் சரண் ஆராய்ச்சியாக அவனை பார்த்துக் கொண்டே.


“என்கிட்ட இல்ல, வேலு சாராண்ட தான் சொல்லிட்டு இருந்தீங்க, நம்ம ஏரியாவுலையும் ஒரு ஆள் இருக்கு. இழுத்தாரட்டுமா சார். நீங்க பாருங்க புடிச்சா வேலைக்கு சேர்த்துக்கங்க, இல்லைனா வோணாம்” என்று கோரிக்கை வைத்தான்.


சில நிமிடங்கள் மாரியை ஆராய்ந்த சரண் விழிகள்,


“சரி ஈவ்னிங் வந்து பார்க்க சொல்லு” என்றதும்,


“ரொம்ப தாங்க்ஸ் சார்” என்று வாயெல்லாம் புன்னகையுடன் வெளியேறிய மாரி அன்று மாலை கூட்டி வந்த ஆளை பார்த்ததும் பிபி ஏறியது சரணுக்கு.


வேறு யார்? சாட்சாத் நட்சுவின் விஷ்ணுவே தான் சரண் தேவ்வின் சாரதியாக அவன் நிம்மதியை கெடுக்க உள்ளே நுழைந்தது.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்

ஆகுமொர் தெய்வமுண்டோ?


அத்தியாயம் 4



ஐந்தரை அடி உயரத்தில், அதே ஒல்லியான உடல்வாகு, அதே கோதுமை நிறம். ஒரு மாதம் முன்பு பார்த்ததை விட மாற்றம் என்றால் அந்த கரையான் கரம்பிய மண்டையாக தான் இருக்கும்.

மண்டையை சுற்றி ஒட்ட வெட்டியிருந்த முடியோ, முன்னுச்சி முடிகளை வாரி இழுத்து குட்டி கொண்டை போடும் அளவிற்கு இப்போது தாராளமாக வளர்ந்திருந்தது.

தன் அறையில் அமர்ந்திருந்து, சிசிடிவியை ஆராய்ந்து கொண்டிருந்த சரண் விழிகளில் மாரியுடன் பைக்கில் இருந்து இறங்கிய விஷ்ணு பதிய,

ஏன்? எதற்கு? என்று சிந்திக்க கூட அனுமதிக்காத மூளை கோபத்தை தான் முதலில் கொட்டியது.

அதன் பிறகே ‘இவன் எதுக்கு இங்க வந்தான்? இவனை தான் என் கண்ணுலயே படக்கூடாதுனு சொல்லி இருக்கேன்ல, எதுக்கு திரும்ப திரும்ப வந்து நிற்கிறான்?’'

ஏதோ விஷ்ணுவை நேரில் பார்த்து எச்சரித்த பிறகும், அடமாக விஷ்ணு வந்து அவன் எதிரே நிற்பது போல் பிதற்றிக் கொண்டிருந்தான்.

வெளியே விஷ்ணுவை பார்த்த வேலவன் எண்ணமும் இதுவாகவே இருக்க,

அவனுக்கும் கொஞ்சம் அல்லல் தான். ‘இவனை பார்த்தா சார் கோபப்படுவாரே” என்று அரண்டு தான் சரண் அறையை நோக்கி ஓடி வந்தான்.

“சார்…” என்று தயக்கமாக சரணை அழைத்தபடி உள்ளே நுழைந்த சமயம், சரண் விழிகளோ அழுத்தமாக மானிடரில் விஷ்ணு பிம்பத்தில் தான் பதிந்து இருந்தது.

எஜமானுக்கு ஏற்ற சேவகனாக, “நானே ஏதாவது காரணம் சொல்லி அனுப்பி வச்சிடுறேன் சார். நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்று அவனே முடிவெடுத்து வெளியேற முனைய,

“அவனை உள்ள வர சொல்லு” என்றான் சரண் அழுத்தமான குரலில்.

“சார்…” என்று வேலு அதிர்ந்து திரும்பி பார்க்க,

ஆழ்ந்த மூச்சு ஒன்றை எடுத்து கொண்டே விழிகளை வேலவன் பக்கம் திருப்பிய சரண்,

“ஐ ஃபேஸ் டூ மை ஃபியர்” என்றான் அழுத்தமாக.

“இன்னும் ஒரு மாசத்துல எனக்கும், நட்சுவுக்கும் கல்யாணம் முடிவு பண்ணி இருக்காங்க. இந்த நிமிஷம் வரை நட்சு எந்த மறுப்பும் சொல்லல. இப்போ இவன் எங்கிட்டயே வேலை கேட்டு வந்திருக்கான். என்னை முட்டாள்னு நினைச்சாங்களா ரெண்டு பேரும்?” என்றவன் குரலில் அத்தனை கோபம் இழையோடியது.

தான் ஏமாற்றபடுவதாக எண்ணியவன் கோபம் பெருக்கெடுத்தது என்னவோ விஷ்ணு மீது தான்.

“இந்த மனசு இருக்கே அது குரங்கு மாதிரி. ஒரு இடத்தில நிலையா நிற்காது, தாவிகிட்டே தான் இருக்கும்.

அவனை விட நான் எல்லா வகையிலும் பெஸ்ட்னு நட்சுக்கு புரிய வைக்க போறேன். அதுக்கு அவன் என் பக்கத்துல இருக்கணும். அவ முழு சம்மதத்தோட எங்க கல்யாணம் நடக்கணும். இல்லை எனக்கும் ஒரு கில்டி ஃபீல் இருக்கும்” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் கணினி திரையில் விழிகளை பதிய விட்டவன்,

“அவனை உள்ள வர சொல்லு. என்ன பண்ணி நட்சுவ மயக்குனானு நானும் தெரிஞ்சுகிறேன்” என்றான் அதே அழுத்தமான பார்வையில்.

தன் தலைவனே சொன்ன பிறகு மறுபேச்சின்றி வேலவனும் வெளியே சென்று விஷ்ணுவை அழைத்து வர,

பளிச்சென்ற புன்னகையுடன் உள்ளே நுழைந்த விஷ்ணுவை பார்த்து கடமைக்கு கூட விரியவில்லை சரணின் இதழ்கள்.

“வணக்கம் சார்” நெற்றியில் ஒரு கையை வைத்து ஸ்கூல் பிள்ளை போல் சலியுட் அடித்து கொண்டே சொல்ல,

தூரத்தில் பார்த்தாலே தொற்றி கொள்ளும் கோபம், ஏனோ இந்த செய்கையில் சற்று தணிந்து தான் போனது.

‘உட்காரு’ என்று தனக்கு முன்னால் கிடந்த இருக்கையை விழிகளால் சுட்டிக் காட்டி அமர சொன்னான்.

விஷ்ணுவும் வந்து அமர,

“ரெசுயூம்” என்று சரண் கையை நீட்டிட,

வெறுங்கையை வீசிக் கொண்டு வந்த வேலையாலோ பேந்த பேந்த விழித்தது.

“சாரி சார் வர்ற அவசரத்துல எடுத்துட்டு வரல” என்று சொல்லவும்,

‘ஏன் டா ஒரு வேலைக்கு இன்டர்வியூ வந்தா ஒரு ரெசியும் கூட எடுத்துட்டு வர மாட்டியா? அது கூட இல்லாம என்ன டேஷ்க்கு வேலை கேட்டு வர்ற?’ என்று சரண் மனமோ விஷ்ணுவை திட்டிக் கொண்டிருக்க,

விஷ்ணுவுக்கு அதெல்லாம் ஒரு விசயமாகவே தெரியவில்லை.

முன்ன பின்ன ஏதாவது வேலைக்கு போய் இருந்தா தெரிஞ்சி இருக்கும். பைக் ரேஸ், மெக்கானிக் செட் என்று சுத்தி திரிந்ததால் வேறு பழக்க வழக்கம் தெரியாமல் தான் போனதோ என்னவோ..

“என்ன படிச்சு இருக்க?”

“மெக்கானிக்கல் இன்ஜினியரிங். இன்னும் எட்டு அரியர் தான் இருக்கு, அடுத்த செமஸ்டர்ல கிளியர் பண்ணிருவேன்” ஏதோ அவார்டுகளை வாங்கி அடுக்கி வைத்திருப்பது போல் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு விஷ்ணு சொல்ல,

‘மக்கு பிளாஸ்டர்’ என்று உள்ளுக்குள் திட்டி கொண்ட சரண்,

“பேங்க் பேலன்ஸ் எவ்வளவு வச்சிருக்க?” என்று தான் அடுத்த கேள்வி கேட்டான்.

“அய்யோ பாஸ் இனி தான் அக்கவுண்டே ஓபன் பண்ணனும்.” என்மீது குற்றவியல் வழக்கு எதுவும் இல்லை ரேஞ்சில் சொல்ல,

ஏளனமாக இதழ்களை வளைத்துக் கொண்ட சரண், ‘நாலு பேங்க்ல நாற்பது கோடிக்கும் மேல வச்சிருக்கேன் டா’ என்றவன் மனமோ தன்னை உயர்த்தி விஷ்ணுவை மட்டம் தட்டி கொண்டது.

“சொந்த ஊர்?” என்று அடுத்த கேள்வி வர,

“அய்யோ சொந்தமா ஊர் வாங்குற அளவுக்கு அம்மாம் பெரிய ஆள் இல்லை பாஸ்” என்று சட்டென அவனையே கலாய்த்த முட்டைகோஸ் மண்டையை பார்த்து சரண் முறைக்க,

ஆள் கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டது.

“இந்த நக்கல் நையாண்டி எல்லாம் என்கிட்ட வச்சிக்காத, நான் ரொம்ப ஸ்ட்ரிட்” என்றவனை பார்த்து வேலவனுக்கே சிரிப்பு வந்து விட்டது.

‘டிரைவர் வேலைக்கு ஆள் எடுக்கிறாரா? கல்யாணம் பண்ண கேட்கிறாரா?’ என்ற சந்தேகத்தில் வாயை மூடி சிரித்துக் கொண்டிருந்தான்.

“சொந்த வீடாவது இருக்கா?” என்று சரண் அல்பமாக பார்த்துக் கொண்டே கேட்க,

“சொந்த வீடு மாதிரி…” என்றவனை புரியாமல் பார்த்து வைத்தான் சரண்.

“பொறம்போக்கு இடம் பாஸ். காலத்துக்கும் இருந்துக்கலாம். அனுபவிச்சிக்கலாம், ஆன உரிமை கொண்டாட முடியாது” என்று உள்ளதை சொன்ன நல்லுள்ளத்தையும்,

காதல் கொண்ட மனது ‘இந்த லட்சணத்தில உனக்கு லவ்வு கேட்குது’ என்று தான் திட்டியது.

“சரி, வீட்ல யாரெல்லாம் இருக்கீங்க?”

“நானும் அம்மாவும் மட்டும் தான். ஏன் பாஸ் ரேசன் கார்டு ஏதும் வாங்கி தர போறீங்களா?” என்று மீண்டும் கலாய்த்த விஷ்ணுவை சரண் விழிகளை சுருக்கி முறைக்க,

“சாரி பாஸ். நீங்க என் இஸ்டிடி கேட்டுட்டு இருந்தீங்களா, அதான் ஒரு சந்தேகத்தில கேட்டுட்டேன்” என்று விளக்கம் வேறு கொடுக்க,

“சும்மா உன்ன வேலைக்கு எடுப்பாங்களா? என் உயிரையே உன்னை நம்பி தான் ஒப்படைக்க போறேன். நீ எப்படினு நான் தெரிஞ்சிக்க வேணாம்” என்றான் சரண் சிடுசிடு குரலில்.

“வேலை தருவீங்கன்னா என்ன வேணா கேளுங்க பாஸ். உங்களுக்கு உரிமை இருக்கு” என்று கையை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த விஷ்ணுவிடம் அதற்கு பிறகு என்ன கேட்க என்ற மனநிலையில்,

“நாளைக்கு காலையில வந்து ஜாயின் பண்ணிக்க” என்று முடித்து விட்டான்.

வேலை கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் முகம் கொள்ளா புன்னகையுடன் விஷ்ணு சரணை ஏறிட்டு பார்க்க,

இப்போதும் அவன் முகத்தில் புன்னகை கிலோ என்ன விலை? என்ற பாவம் தான்.

உம்மென்று இருந்தவன்,

“உன்னை டெம்ரவரியா தான் வேலைக்கு எடுக்கிறேன். எனக்கு எப்போ பிடிக்கலைனாலும், ஏன்? எதுக்குனு கேட்காம இடத்தை காலி பண்ணனும்” என்று கட்டளையிட்டே வேலைக்கு எடுத்தான்.

வேலை கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் விஷ்ணுவும், அவன் சொன்னதற்கெல்லம் மண்டையை ஆட்டி வைக்க,

சரணோ, ‘நட்சுவே ச்சீனு சொல்லி உன்னை விரட்டுற அளவுக்கு பண்றேன் பாருடா’ என்று வீண் சபதம் வேறு எடுத்துக் கொண்டான்.

விலை கொடுத்து எலியை வாங்கி வீட்டுக்குள் விட்டு விட்டு, எலி பிடிக்க பிளான் பண்ணினானாம் ஒரு புத்திசாலி, அந்த கணக்கில் ஏதேதோ செய்து கொண்டிருந்தான் சரண்.

‘எது எப்படியோ எனக்கு வேலை கிடைச்சிடுச்சி’ என்ற கொண்டாட்டத்தில் இருந்த விஷ்ணுவுக்கும் தான் வேலை செய்ய போகும் ஆள் பற்றி தெரியாமல் போனது தான் விதியின் திருவிளையாடல்.
 
Status
Not open for further replies.
Top