ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மான்விழியில் வீழ்ந்தேனடி!-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழியில் வீழ்ந்தேனடி!

மான்விழி - 01

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்​

வாய்நாடி வாய்ப்பச் செயல்”​

என்ற திருவள்ளுவரின் வரிகள் அந்த பிரமாண்டமான வளாகத்தில் ஆங்காங்கே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்தது.​

சென்னையில் இருந்த அந்த மிகப் பெரிய பிரபலமான “நலமுடன்” மருத்துவமனை அன்று மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. காரணம் சித்தார்த் அபிமன்யு. புதிய முதலாளியின் வரவாலும், தொடர் கட்டளைகளாலாலும் மருத்துவர்கள், செவிலியர்கள் முதல் கடைநிலை ஊழியர் வரை பரப்பரப்புடன் இயங்கி கொண்டிருந்தார்கள்.​

அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் அதன் உரிமையாளருமான டாக்டர் மகேந்திரனின் தவப்புதல்வன் தான் சித்தார்த் அபிமன்யூ. அன்று தான் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் வெளிநாட்டிலிருந்து வந்து தன் தலைமை பொறுப்பை ஏற்றிருந்தான். திருமணமாகி கனடாவில் செட்டிலாகி விட்ட தன்னுடைய தமக்கை பவிஷ்காவுடன் தங்கி மருத்துவத்தில் முதுகலை முடித்து அங்கேயே மருத்துவராகி தன் மாமா செல்வாவின் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தவனை கட்டாயப்படுத்தி வரவழைத்திருந்தார் மகேந்திரன்.​

சமீபமாக அவர்கள் மருத்துவமனை மிகவும் பிரபலமாகி விட, அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வர ஆரம்பித்து விட்டனர். எனவே மருத்துவமனையை விரிவாக்கவும் நிர்வகிக்கவும் தன்னால் மட்டும் முடியாது என்பதால் தன் ஒரே மகனான சித்தார்த் அபிமன்யூவை தனக்கு உடல் நலமில்லை என்று காரணம் சொல்லி வரவழைத்தோடு, மருத்துவமனையின் மொத்த பொறுப்பையும் அவன் தலையில் கட்டிவிட்டார்.​

அவனுக்கு என்னவோ அக்காவுடன் கனடாவில் செட்டிலாகி விட தான் ஆசை. அதற்கு காரணம் தமக்கையின் மேல் கொண்ட பாசம் எல்லாம் இல்லை. எலிசாவின் மீது கொண்ட தீரா காதல் தான் காரணம். அவன் படித்த யுனிவர்சிட்டியில் அவனுக்கு ஜூனியராக வந்து சேர்ந்தவளின் அழகையும் வாளிப்பான இளமையையும் கண்டு மையல் உற்றாலும் அவள் மீதான ஈர்ப்பை கடந்து விடத் தான் எண்ணினான். ஆனால் எலிசாவும் சித்தார்த் அபிமன்யூவின் ஆளுமையான தோற்றத்திலும் வசிகரமான பார்வையிலும் கவரப்பட்டிருந்தாள்.​

அவளாகவே அவனிடம் வந்த பேசி நட்பை வளர்த்துக் கொண்டாள். நட்பு நாளடைவில் காதலாகி இருவரும் கனடாவில் சுற்றாத இடமில்லை. சித்தார்த் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டதற்கு சில வருடங்கள் லிவ் இங்கில் இருந்து பழகி பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டாள் எலிசா. எப்படியோ அவள் சொன்ன கால நேரமும் முடிந்து விட, அவளும் திருமணத்திற்கு ஒத்து கொண்டாள். அவள் சொன்ன ஒரே கண்டிஷன், அவனும் கனடாவில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்பது தான்.​

எலிசாவின் கண்டிஷனில் அதிர்ந்தாலும், அவனுக்குமே வெளிநாட்டு வாழ்க்கை முறை பிடித்து தான் போயிருந்தது. கூடவே பவிஷ்காவும் இங்கேயே இருப்பதால் அவனும் கனடாவில் செட்டிலாகி விட்டால் என்ன? என்றே தோன்றியது. அவன் தந்தை மகேந்திரனுடன் போனில் பேசும் போது தான் வெளிநாட்டிலேயே செட்டிலாக விரும்புவதாக கூறவும் அங்கே பலத்த மெளனம் நிலவியது. அடுத்த மாதமே தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவனை அவசரமாக வரவழைத்தவர், மருத்துவமனையின் மொத்த பொறுப்பையும் அவன் பெயருக்கு மாற்றியிருந்தார்.​

“அப்பா, என்ன இது? என்னால எல்லாம் இங்கேயே தங்கி இந்த பொறுப்பை எல்லாம் பார்த்துக்க முடியாது” என்று எகிறினான் மகன்.​

“சரிப்பா, ஓரே ஒரு முறை நம்ம மருத்துவமனைக்கு சென்று சுத்தி பார்த்திட்டு வந்து என் கிட்ட உன் முடிவை சொல்லு” என்று கூறிவிட்டு தன் வேலையை பார்க்க தொடங்கி விட்டார் மகேந்திரன்.​

மருத்துவமனையை சுற்றி பார்த்தால் மட்டும் என் முடிவு மாறிடுமா என்ன? என்று எள்ளலாக நினைத்துக் கொண்டு நலமுடன் மருத்துவமனைக்கு சென்று ஒவ்வொரு இடமாக நோட்டமிட்டான்.​

அந்த மருத்துவமனையில் அளவுக்கு அதிகமான கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தை சமாளிக்க முடியாமல் தாதியர்களும் செவிலியர்களும் தடுமாறிக் கொண்டிருந்தனர். அவசர சிகிச்சைக்கு போதிய மருத்துவர்கள் இல்லை. அவசர சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளியின் உறவினரை அழைத்தான்.​

“இங்கே தான் கூட்டமா இருக்கே, வேறே மருத்துவமனைக்கு போகலாம் இல்ல? ஏன் இவ்வளவு நேரம் காத்துட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.​

“சார் எங்களை போன்ற நடுத்தர மக்களுக்கு இந்த மருத்துவமனையை விட்டால் வேறே கதி இல்ல சார். ஏன்னா இங்கே தான் பீஸூம் கம்மி, சீக்கிரம் குணமாயிடும். அப்படியே பணம் கட்ட முடியலைனாலும் ஆஸ்பத்திரி முதலாளிகிட்ட வேண்டி கேட்டுகிட்டா அவரே இலவசமாக மருத்துவம் பார்க்க சொல்லிடுவாரு” என்றார் அந்த நபர்.​

யோசனையுடன் மருத்துவமனையை கண்காணித்தபடி வலம் வந்தான். நூற்றுக்கணக்கான செவிலியர்கள் மற்றும் பல்வேறு இடைநிலை கடைநிலை ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். தந்தைக்கு பிறகு அவர் இல்லாமல் இந்த மருத்துவமனையை மூடினால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடும்.​

மேலும் மருத்துவமனையில் பல்வேறு நவீன மாற்றங்களை செய்தால் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்று யோசித்தபடி தந்தையின் சேர்மன் அறைக்குள் நுழைந்து ஒரு ஊழியரை அழைத்து அவனையும் அறியாமல் அனைவருக்கும் கட்டளைகள் பிறப்பிக்க ஆரம்பித்தான்.​

அதன்படி ஒட்டு மொத்த மருத்துவமனை ஊழியர்களும் அங்கே கூடியிருக்க, அனைவருக்கும் புது புது ஆணைகளை பிறப்பித்தான். ஷிப்ட் முறையை அறிமுகம் செய்து மேலும் பல செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் தேவையிருப்பதால் தெரிந்தவர்களை பரிந்துரைக்குமாறு சொல்லி, அவன் பார்த்து கவனித்த சிலரின் தவறுகளையும் சுட்டிக் காட்டினான்.​

ஆளுமையும் அதிகாரமுமான அவன் பேச்சில் மொத்த ஊழியர்களும் ஸ்தம்பித்து போய் புது முதலாளி ஆணையிட்ட வேலையை ஒரு வித பரபரப்புடன் செய்து கொண்டிருந்தனர். அன்று இரவு பத்து மணிக்கு மேலாகியும் அவன் மருத்துவமனையிலேயே இருக்கவும் மகேந்திரன் அவனுக்கு அழைத்தார்.​

“என்ன சித்து? மருத்துவமனையை சுத்தி பார்த்திட்டு வந்து உன்னோட பதிலை சொல்றதா சொல்லிட்டு போனே? இன்னும் வீட்டுக்கு வரல? போனும் இல்ல, எங்கே இருக்கே?” என்றார் மகேந்திரன் ஒன்றுமே தெரியாதது போல​

“அப்பா, உங்களுக்கு நான் எங்கே இருக்கேன்னு தெரியாது இல்ல? இதை என்னை நம்ப சொல்றீங்களா? நீங்க எவ்வளவு பெரிய ராஜதந்திரினு எனக்கு தெரியும்” என்றான் சித்தார்த் அபிமன்யூ அழுத்தமான குரலில்.​

மகனின் பேச்சில் புன்முறுவல் பூத்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “என்ன சித்து சொல்றே? எனக்கு புரியலை?” என்றார் மகேந்திரன்.​

“எங்கே அடிச்சா உங்க மகன் விழுவான்னு தெரிஞ்சு தானே என்னை இங்கே அனுப்பி வச்சீங்க. நான் உங்க மேல வச்ச பாசத்தை பயன்படுத்தி இந்தியா வர வச்சிட்டீங்க. மருத்துவமனையை காட்டி என்னை எமோஷனலாக்கி உங்க வலையில் சிக்க வச்சிட்டீங்க. வாட் எவர் யு வாண்ட், யு டன் ஆல்ரெடி (whatever you want, you done already)” என்றான் அழுத்தமான குரலில்.​

“யு மீன், நீ ஆஸ்பிட்டல் நிர்வாகத்தை பார்த்துக்க போறீயா?” என்றார் மகேந்திரன் ஆவலுடன்.​

“எஸ், பட் ஐ ஹேட் யு டாடி (yes, but I hate you daddy)” என்று போனை வைத்து விட்டான் சித்தார்த் அபிமன்யு.​

தந்தையை வெறுப்பதாக பேச்சுக்கு சொன்னாலும் தந்தையின் மேல் அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தான் சித்தார்த் அபிமன்யூ. அவன் அன்னை இறந்த பிறகு மருத்துவமனையையும் பார்த்துக் கொண்டு தன் மகளையும் மகனையும் தனி மனிதனாக வளர்த்து ஆளாக்கியவர் மகேந்திரன். கருணை உள்ளத்தோடு அவர் செய்யும் உதவிகளை நேரில் பார்த்து வளர்ந்தவன், இப்போது தந்தை உருவாக்கி வைத்திருந்த மருத்துவ சாம்ராஜ்யத்தை சட்டென உதறிவிட முடியாது அல்லவா? எனவே தான் அவர் தந்திரம் புரிந்தாலும் அவர் ஆசையை நிறைவேற்ற முடிவு எடுத்து விட்டான் தனயன்.​

அதன் பிறகு மருத்துவமனை மொத்தமும் சித்தார்த் அபிமன்யூவின் கட்டுபாட்டில் வந்தது. புதிய செவிலியர்களை வேலைக்கு எடுத்துக் கொண்டு, மேல்நாட்டு பாணியில் அவர்களுக்கு பயிற்சியும் வழங்கி திறம்பட நிர்வாகம் செய்ய தொடங்கிவிட்டான்.​

மகன் பொறுப்பேற்றுக் கொண்டதால் சற்றே ஓய்வெடுத்துக் கொண்டார் மகேந்திரன். அவன் வீட்டுக்கு வந்த போது, “சித்து, நான் நம்ம சொந்த ஊரான தருமபுரிக்கு போய்ட்டு வரட்டுமா? ரொம்ப நாளாச்சு பழைய உறவுகளையும் நண்பர்களையும் பார்த்து” என்றார் ஆசையாக.​

அவரை ஒரு முறை பார்த்து விட்டு, “சரி போயிட்டு வாங்க” என்று சொல்லி கிளம்பி சென்று விட்டான் சித்தார்த்.​

சித்தார்த் கிளம்பி சென்று கிட்ட தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாகி போனதால் எலிசா தொடர்ந்து அவனுக்கு போன் செய்து கொண்டிருந்தாள். ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்து வந்தவன் போனை எடுத்து பார்த்தான். எலிசாவிடம் இருந்து பதினைந்துக்கும் மேல் தவறவிட்ட அழைப்புகள்.​

அவசரமாக எலிசாவிற்கு போன் செய்தான். “என்ன சித்து, இந்தியா போனதிலிருந்து ஒரு போன் கூட இல்ல? மறந்துட்டியா?” என்று கொஞ்சும் ஆங்கிலத்தில் கேட்டாள் எலிசா.​

“நோ வே, நான் எப்படி உன்னை மறக்க முடியும் ஹனி? வந்த இடத்தில் அப்பா என்னை சிக்கலில் மாட்டி விட்டுட்டார்” என்று நடந்தது அனைத்தையும் கூறினான் சித்தார்த் அபிமன்யூ.​

“அப்போ நீ எனக்கு பிராமிஸ் பண்ண மாதிரி கல்யாணம் செய்து கனடாவில் செட்டில் ஆக போவதில்லையா?” என்று அழ தொடங்கினாள் எலிசா.​

“ஹே, பேபி. ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் மீ… இந்த ஹாஸ்பிட்டல் அப்பாவோட 25 வருட உழைப்பு , எத்தனை பேர் வேலை செய்யறாங்க தெரியுமா?” என்று மருத்துவமனையின் மொத்த விவரங்களையும் அடுக்கி கொண்டே சென்றான்.​

“ஹோ, அத்தனை பெரிசா உங்க ஆஸ்பிட்டல்? சூப்பர் சித்து. அப்போ கல்யாணம் பண்ணி என்னையும் அங்கே கூட்டிட்டு போயிடு. இரண்டு பேரும் சேர்ந்து பார்த்துக்கலாம்” என்றாள் எலிசா உற்சாகமாக.​

“நிஜமாவா சொல்றே ஹனி? உன்னை எப்படி கன்வின்ஸ் பண்றதுனு தெரியாமல் முழிச்சிட்டு இருந்தேன். இப்போ பார்த்து அப்பா ஊருக்கு போயிருக்காரு. அவர் வந்ததும் நம்ம விஷயம் சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யறேன். லவ் யூ ஹனி, ஐ மிஸ் யூ” என்றான்.​

அந்த முனையில் அவள் தன் முத்தங்களை வாரி வழங்கி கொண்டு, “லவ் யூ டூ சித்து, உன்னோட போனுக்காக காத்திட்டு இருக்கேன்” என்று சொல்லி போனை வைத்தாள் எலிசா.​

தன்னுடைய பெரிய பிரச்சனை தானாகவே சரியானதில் பெருமூச்செறிந்தபடி வாகாக தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான் சித்தார்த் அபிமன்யூ. விசிலடித்தபடி, எலிசாவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.​

அந்த நேரம் அவன் தந்தை மகேந்திரனிடமிருந்து போன் வந்தது. “சொல்லுங்க அப்பா, நானே உங்களுக்கு போன் செய்யலாமா? வேண்டாமானு யோசிச்சிட்டு இருந்தேன்” என்றான் உற்சாகமாக.​

“என்ன சித்து, ரொம்ப சந்தோஷமா இருக்கே போலிருக்கு. என்ன விஷயம் சொல்லு” என்றார் மகேந்திரனும் மகனின் உற்சாகத்தில் கலந்து கொள்ளும் ஆவலில்.​

“நான் அதை நேரில் சொல்றேன்பா, நீங்க எதுக்கு போன் செய்தீங்க? அதை முதலில் சொல்லுங்க” என்றான் சித்தார்த்.​

“அதுவந்துப்பா என்னோட பால்ய நண்பன் சிவக்குமாரோட பொண்ணு நேத்ராவுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்திருக்காங்க. இருந்து கல்யாணத்தை பார்த்துட்டு தான் போகணும்னு சொல்லிட்டான்” என்றார்​

“அதுக்கென்ன, தாராளமா இருந்து பார்த்திட்டு வாங்க” என்றான் சித்தார்த்.​

“கல்யாண பொண்ணுக்கு எதாவது பரிசு கொடுக்கலாம்னு பார்த்தேன், ஆனா சிவா பரிசு எல்லாம் வேண்டாம் அதுக்கு பதிலா என் பொண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்தா போதும்னு சொல்றான். மாப்பிள்ளை சென்னையில தான் டாக்சி ஓட்டிட்டு இருக்காராம். பொண்ணுக்கும் சென்னையில வேலை வாங்கி கொடுத்திட்ட செளகரியமா இருக்கும்னு சொல்றான்” என்றார் மகேந்திரன்.​

“சரி தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வேலை வாங்கி கொடுங்க” என்றான் சித்தார்த் விட்டேற்றியாக.​

“அதில்ல சித்து, அந்த பொண்ணு டிப்ளமா நர்சிங் தான் படிச்சிருக்கா, அதான் நம்ம மருத்துவமனையில் வேலைக்கு சேர்த்துக்கலாம்னு…” என்று சொல்லி முடிப்பதற்குள் இடையிட்டான் சித்தார்த் அபிமன்யூ.​

“அப்பா நம்ம மருத்துமனையில் எல்லாரும் பிஎஸ்சி படிச்ச நர்ஸ் தான் இருக்கணும்னு ஆல்ரெடி ஸ்டிரிட்டா சொல்லிட்டேன். இன்டர்வியூ இல்லாமல் சிபாரிசில் எல்லாம் வேலை தர முடியாது. வேணும்னா அந்த பொண்ணை முறையா வந்து இன்டர்வியூ அட்டென்ட் பண்ண சொல்லுங்க, கொஞ்சமாவது ஒத்து வருவாளானு பார்த்திட்டு என் முடிவை சொல்றேன்” என்றான் சித்தார்த் அபிமன்யூ.​

மகன் இந்த பதிலைதான் கூறுவான் என்று முன்பே தெரிந்ததால், சிவக்குமார் தனக்கு எத்தனை முக்கியமான நண்பன் என்று விவரித்து கொண்டே சென்றார் மகேந்திரன்.​

“போதும் போதும் உங்க புராணம். இப்போ என்ன அந்த சிவக்குமார் தான் நீங்க மருத்துவம் படிக்க பணஉதவி செஞ்சார், அதுவும் அவங்க வீட்டை அடமானம் வைத்து, அதனால நீங்க அவருக்கு கடமை பட்டிருக்கீங்க, அதானே? அதைத்தான் சின்ன வயசில இருந்து காது செவிடாகும் வரைக்கும் சொல்லி இருக்கீங்களே. மறுபடியும் சொல்ல தேவை இல்லை” என்று சிடுசிடுத்தான்.​

மறுமுனையில் தந்தையிடம் மெளனமே பதிலாக இருக்கவும், தலையை உதறிக் கொண்டு, “ஓகே ஓகே, இப்போ என்ன? அந்த பெண்ணுக்கு நம்ம மருத்துவமனையில் நர்சிங் போஸ்ட் கன்பார்ம் பண்ண சொல்லிடறேன், போதுமா?” என்றான் அலுத்துக் கொண்டு.​

“போதாது” என்றார் மகேந்திரன் இப்போது வாயை திறந்து.​

“போதாதா? வேறென்ன செய்யணும்?” என்றான் பற்களை கடித்துக் கொண்டு​

“அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை எடுத்துக்கிட்டு நீயும் தருமபுரிக்கு வா. கல்யாணத்துல சிவா கேட்ட மாதிரி வேலைக்கான ஆர்டரை அவன் பொண்ணுகிட்ட கொடுத்தா சந்தோஷப்படுவான்” என்றார் மகேந்திரன்.​

“வாட்?” என்று இருக்கையில் இருந்து எழுந்தே விட்டான் சித்தார்த் அபிமன்யூ.​

“நான் ஒரு வெளிநாட்டில் எம்டி படித்த டாக்டர், அது மட்டுமில்லாமல் தற்போது நலமுடன் மருத்துவமனையின் சேர்மன். ஒரு சாதாரண டிப்ளமா நர்சிங் படித்த பெண்ணை என் மருத்துவமனையில் வேலையில் சேர்த்துக் கொள்ள கூட யோசிக்கிறவன், நான் அவளுக்கான அப்பாயின்மென்ட் ஆர்டரை எடுத்துக் கொண்டு… நானே நேரில் வரணுமா? முடியாது. வேணும்னா மின்னஞ்சல் அனுப்புறேன், அதை பிரிண்ட் எடுத்து உங்க நண்பர் கிட்ட கொடுங்க” என்றான் ஆத்திரமாக.​

“இது நல்லா இருக்காது. அது மட்டுமில்லாமல் சிவா உன்னை பார்க்கணும்னு சொன்னான். கண்டிப்பாக நீதான் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை எடுத்திட்டு வரணும்” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.​

சற்று முன்பு இருந்த மகிழ்ச்சி எல்லாம் காணாமல் போயிருந்தது. அந்த முகம் தெரியாத டிப்ளமா நர்சிங் படித்த பெண்ணின் மேல் ஆத்திரமாக வந்தது சித்தார்த் அபிமன்யுவுக்கு.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 2
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 02

சித்தார்த் அபிமன்யூ அட்மினில் பணிபுரியும் ஐனனியிடம் போன் செய்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை தயார் செய்ய சொன்னான்.​

“டாக்டர், அவங்க பேரு?” என்றாள் ஜனனி.​

“அதை கூட நானே சொல்லணுமா? டாக்டர் மகேந்திரன் கிட்ட மத்த டிடெய்ல்ஸ் கேட்டுகோங்க” என்று அவளிடம் காய்ந்தான் சித்தார்த்.​

“பேரு கேட்டது ஒரு குத்தமா?” என்று மனதிற்குள் புலம்பியபடி “ஓகே சார்” என்று போனை வைத்தவள், மகேந்திரனுக்கு போன் செய்து மற்ற விவரங்களை கேட்டு, ஆர்டரை பிரிண்ட் செய்து உறையிலிட்டு, சித்தார்த்திடம் கொண்டு போய் நீட்டினாள்.​

அதை கையால் கூட வாங்காமல் அங்கே வை என்று கண்களால் ஜனனிக்கு கட்டளை இட்டவன் ஜனனி வைத்துவிட்டு போன உறையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் போன் ஒலிக்கவும், அதை ஆன் செய்து காதில் வைத்தான்.​

“சொல்லு பவி” என்றான்​

“என்ன சித்து போனதிலிருந்து ஒரு போன் கூட பண்ணல? அப்பா எப்படி இருக்காரு?” என்றாள் பவிஷ்கா, சித்தார்த்தின் தமக்கை.​

“அவருக்கென்ன? என்கிட்ட பொய் சொல்லி வரவழைச்சிட்டு ஜாலியா சொந்த ஊரை சுத்தி பார்க்க போயிருக்காரு” என்றான் சித்தார்த் கடுப்புடன்.​

“டேய் அப்பாக்கு முன்ன மாதிரி ஹெல்த் சரியில்லடா, அவர் சரியா தன்னை கவனிச்சுக்காம இருந்து உடம்பை கெடுத்துக்கிட்டார்னு தோணுது, நாம அவரை தனியா விட்டு இருக்க கூடாது சித்து” என்றாள் பவிஷ்கா வருத்தமாக.​

“ஏய் என்ன பவி சொல்றே?” என்றான் சித்தார்த் அதிர்ச்சியாக.​

“அவர் உடம்பு சரியில்லைனு உன்கிட்ட சும்மா எல்லாம் சொல்லலை டா. அவருக்கு அட்டாக் வந்திருக்கு, அதை நம்ம கிட்ட மறைச்சிட்டாரு. குணமான பின்னாடி தான் உன்னை வரசொல்லி இருக்காரு. நம்ம ஆஸ்பிட்டல் இருக்கிற என்னோட பிரெண்ட் ஜோதி தான் சொன்னாள். நமக்கு எதுவும் தகவல் சொல்ல வேணாம்னு அவகிட்ட சொல்லி இருக்காரு. நேத்து தான் நானே அவளுக்கு சும்மா போன் செஞ்சு பேசவும் உளறிட்டா. மறுபடியும் அப்பாவுக்கு அட்டாக் வராமல் பார்த்துக்கணும் சித்து” என்றாள் பவிஷ்கா கவலையான குரலில்.​

சித்தார்த்தின் முகத்தில் கவலை படிந்தது “அதனால் தான் இத்தனை வருஷமா எனக்கு ஓய்வு வேணும்னு கேட்காதவர், நான் வந்ததும் ஓய்வெடுக்கிறேன்னு வீட்டிலேயே தங்கிட்டாரா? இப்போ திடீர்னு சொந்த ஊருக்கு போறேன்னு கிளம்பிட்டாரு” என்றான் சித்தார்த் யோசனையாக.​

“சித்து, நீ மருத்துவமனை நிர்வாகத்தை பார்த்துக்கிட்டு அப்பாவை பார்த்துக்கிறது கஷ்டம். என்னால இந்தியா வரமுடியாது, பேசாமல் அப்பாவை இங்கே அனுப்பி வை, நான் கிட்ட இருந்து பார்த்துக்கிறேன்” என்றாள் பவிஷ்கா.​

“அதுவும் சரிதான், நீ டிக்கெட் விசாவுக்கு ஏற்பாடு செய்து எனக்கு மெயில் பண்ணு, என்னை அப்பா அந்த ஊருக்கு வரச்சொல்லி இருக்காரு. அங்கே போயிட்டு, அப்படியே அவரை விமானநிலைத்திற்கு கூட்டிட்டு போயி கனடாவுக்கு பிளைட் ஏத்தி விடறேன்” என்றான் சித்தார்த் அபிமன்யூ.​

பவிஷ்காவும் சரி என்று போனை வைத்துவிட, சித்தார்த் அபிமன்யூவிற்கு அப்போதே தந்தையை பார்க்க வேண்டும் போல தோன்றியது, தந்தைக்காகவாவது தருமபுரி போயே ஆக வேண்டும் என்பது கட்டாயம் ஆனது. ஜனனி வைத்துவிட்டு சென்ற அந்த அப்பாயின்ட்மென்ட் லெட்டரை எடுத்து தன் பேகில் வைத்துக் கொண்டு கிளம்ப தயாரானான்.​

காரில் தனியாக டிரைவ் செய்து கொண்டு மழையில்லாமல் பொட்டல் காடாக இருந்த நிலங்களை பார்வையிட்டபடி தன் தந்தையின் சொந்த ஊருக்கு சென்றான். அங்கே அவன் சிறு வயதில் சென்றதால் அவர்களின் பரம்பரை வீடு கூட எங்கே என்று அவனுக்கு தெரியவில்லை. தன் தந்தைக்கு போன் செய்து லோகேஷனை ஷேர் செய்ய சொல்லி எப்படியோ வீட்டை வந்து சேர்ந்து விட்டான்.​

ஆனால் மகேந்திரன் வீட்டில் இல்லை. சித்தார்த்தின் போன் ஒலித்தது, எடுத்து காதில் வைத்தவன், “அப்பா எங்கே இருக்கீங்க? நான் வரேன்னு சொல்லியும் வெளியே கிளம்பிட்டிங்களா?” என்றான் சித்தார்த்.​

“சித்து நான் மண்டபத்திலே சிவாக்கு உதவியா இருக்கேன்டா. அவன் மனைவியும் வேற சமீபத்தில் தவறிட்டாங்களாம். தனியா கஷ்ட படறான். நான் இரவு ரிஷப்சன் முடித்ததும் வந்திடறேன். உனக்கு சாப்பாடு கொடுத்து அனுப்புறேன் நீ சாப்பிட்டு ஓய்வெடு. காலையில் ஆறு ஏழரைக்கு முகூர்த்தம். நாம ஐந்து மணிக்கே போகணும்” என்றார் பரப்பரப்பான குரலில்.​

“உங்களுக்கே உடம்பு சரியில்லை, ஏன் இந்த மாதிரி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று மகன் திட்ட தொடங்கவும் அவனுக்கு ஏதோ விஷயம் தெரிந்து விட்டது என்று போனை வைத்து விட்டார் மகேந்திரன்.​

முகம் காணாத அந்த பெண்ணின் மேல் அவனுக்கு கோபமாக இருந்தது. “இவ பெரிய இவ, இவ கல்யாணத்துக்கு எங்கப்பா வந்து வேலை செய்யணுமா?” என்று வீட்டில் யாருமில்லாததால் வெளிப்படையாகவே ஏக வசனத்தில் அவளை திட்டிக் கொண்டிருந்தான் சித்தார்த்.​

அதன் பிறகு சிறிது நேரம் அந்த வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தில் சற்று நேரம் நடைபயின்று விட்டு, இரவு உணவை முடித்துக் கொண்டு படுத்து விட்டான். மகேந்திரன் எப்போது வந்தார்? எப்போது உறங்கினார் என்றெல்லாம் அவனுக்கு தெரியாது, அதிகாலையில் அவனை எழுப்பி கொண்டிருந்தார்.​

தன்னை மறந்து உறங்கியவனுக்கு சற்று நேரம் எதுவுமே புரியவில்லை, பிறகு மெல்ல எழுந்து வேண்டா வெறுப்பாக திருமணத்திற்கு செல்ல தயாரானான். பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஒரு நடுத்தரமான கல்யாண மண்டபத்தின் அருகே காரை நிறுத்த சொன்னார் மகேந்திரன்.​

இங்கே எல்லாம் நான் வரத்தானே வேணுமா? என்ற கேள்வியுடன் தந்தையை முறைத்தவாறு காரில் இருந்து இறங்கினான் சித்தார்த் அபிமன்யூ. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவனை உள்ளே கூட அழைத்து செல்லாமல் அவசரமாக அவர் மட்டும் முன்னால் நடந்தார். அதற்குள் தந்தையின் நண்பர் சிவக்குமார் இவனை கண்டதும் ஓட்டமும் நடையுமாக வந்தார்.​

அவன் கைகளை பிடித்துக்கொண்டு, “அபிமன்யூ எப்படிப்பா இருக்கே? சின்ன வயசில பார்த்தது? எவ்வளவு உயரமா வளர்ந்துட்டே?” என்றார் ஆசையாக அவன் தோள்களை தடவியவாறு​

“அபிமன்யூ” என்ற அழைப்பில் சித்தார்த்தின் முகம் சற்றே கனிந்தது. அவன் அன்னை மட்டும் பிரத்யேகமாக அவனை அப்படித்தான் அழைப்பார். மற்றவர்கள் எல்லாம் சித்து, சித்தார்த் தான்.​

“நல்லா இருக்கேன் அங்கிள், நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்டான்.​

“அங்கிள் எல்லாம் வேண்டாம்பா, என்னவோ போல இருக்கு. மாமானு கூப்பிடு” என்றார் சிவக்குமார்.​

சிரித்துக் கொண்டே, “சரி மாமா” என்றான் சித்தார்த் அபிமன்யூ​

அதன்பிறகு உள்ளே அழைத்துச் சென்று இருவரையும் முன் இருக்கைகளில் அமரச் செய்தார். மகேந்திரன் நண்பனோடு செல்ல எத்தனிக்கவும், “மகி, எல்லா வேலையும் ஆச்சு. மாப்பிள்ளை மட்டும் இன்னும் அவர் அறையில் தூங்கிட்டு இருக்காரு. அவரை எழுப்பி ரெடியாக வச்சிட்டா போதும். மத்த ஏற்பாடு எல்லாம் தயாரா இருக்கு. நீ அபி கூடவே இரு. அவனுக்கு இங்கே யாரையும் பெரிசா தெரியாது இல்ல? நான் பார்த்துக்கிறேன்” என்று நண்பனை அமரச் செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் சிவக்குமார்.​

தந்தையை பார்த்து நன்றாக முறைத்தான் சித்தார்த் அபிமன்யூ. அவன் முறைப்பிற்கான காரணம் புரியாமல் “என்னாச்சு சித்து?” என்று கேட்டார் மகேந்திரன்.​

“உங்க நண்பர் என்ன சொல்லிட்டு போனார் பார்த்தீங்களா? கல்யாண மாப்பிள்ளையே இன்னும் தூங்கி எழலையாம், அவர் எழுந்து குளித்து தயாராகி மேடைக்கு வரணும். ஆனா அதுக்குள்ள என்னை எழுப்பி இந்த நடுராத்திரில கூட்டிட்டு வந்திருக்கீங்க” என்று அடிக்குரலில் சீறினான்.​

“சரி சரி அரை மணி நேரத்தில் மாப்பிள்ளை தயாராகி வந்திடுவார், நீ டென்ஷனாகாதே. நாம யாரோ போல கரெக்டானா நேரத்துக்கு வரமுடியுமா சித்து?” என்றார் மகேந்திரன் மகனை சமாதானம் செய்யும் குரலில்.​

வேறுவழியில்லாமல் கையிலிருந்த போனை நோண்டியபடி நேரத்தை கடத்தினான் சித்தார்த் அபிமன்யூ. ஆனால் தந்தை சொன்ன அரைமணிநேரம் எல்லாம் தான்டி ஒரு மணிநேரம் கடந்திருந்தது. சமூக வலைதளங்களில் ஆழ்ந்திருந்தவன் நேரமாவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான்.​

அங்கே ஆண்களும் பெண்களும் மணமகன் அறைக்கு போவதும் வருவதுமாக பரபரப்பாக இருந்தனர். “என்னாச்சுப்பா?” என்று கேட்டான்.​

“அதான் சித்து எனக்கும் புரியல?” என்றார் மகேந்திரன்.​

அதற்குள் மணமேடையில் அனைத்தும் தயாராக வைத்து காத்திருந்த புரோகிதர், “முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ள மாப்பிள்ளையையும் பெண்ணையும் அழைச்சிட்டு வாங்க” என்று சொல்லி கொண்டிருந்தார்.​

சிவக்குமார் பதட்டத்துடன் அங்கிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். பின்பு மணமகன் அறைக்குள் அவசரமாக கையில் தண்ணீர் குடத்துடன் சென்றார்.​

தந்தையும் மகனும் ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். புரோகிதர் பத்தாவது முறையாக “இப்போ பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சிட்டு வர்றீங்களா? இல்லை நான் கிளம்பட்டுமா?” என்றார் சத்தமாக.​

அதில் அங்கிருந்தவர்கள் தங்களுக்குள் பேசி ஒரு முடிவெடுத்தவர்களாக, மணப்பெண் அறைக்குள் புகுந்தனர். கண்களை கூச வைக்கும் அடர் ஆரஞ்சு நிற புடவையில் அலங்காரத்துடன் இருந்த பெண்ணை அழைத்து வந்து மணமேடையில் அமர வைத்தார்கள்.​

பியூட்டிபார்லரை பற்றிய ஞானமே இல்லாத ஒரு அழகுகலை நிபுணர் அவளை அலங்கரித்திருப்பார்கள் போலும், அதிகமான ரோஸ்பவுடரை அவள் முகத்தில் அப்பி இருந்தார்கள். மாநிறமான தோற்றத்தை மறைத்து அவளை வெள்ளையாக தெரிய வைக்க பெரும் முயற்சி எடுத்திருப்பார்கள் போலும். ஒரு படத்தில் பெயிண்ட் அடித்து வைத்து காமெடி நடிகர் செந்திலுக்கு திருமணம் செய்யப்பட்ட கவுண்டமணியின் தங்கையே அவனுக்கு நினைவில் வந்தது.​

வந்த சிரிப்பை தன் இதழ்கடையில் அடக்கிக் கொண்டு, சரி மாப்பிள்ளை என்ன அலங்காரத்தில் வருகிறார் என்று பார்ப்போம் என்று வேடிக்கை போல மணமகன் அறையை நோக்கி பார்வையை செலுத்தினான்.​

அங்கே இரண்டு மூன்று பேர் ஒரு தடிமனான ஆளை தூக்கிக் கொண்டு குளியலறை நோக்கி சென்றார்கள். அவன் தான் மாப்பிள்ளை போலும். என்னாச்சு அவனுக்கு? என்று டாக்டராக யோசித்தவன் தந்தையை திரும்பி பார்த்தான். அவருமே அதிர்ச்சியுடன் சித்தார்த்தை தான் பார்த்தார்.​

தந்தை மகன் இருவருமே எழுந்து குளியலறை இருந்த பக்கம் சென்றனர். அதற்குள் சிவக்குமார் வாயில் துணியை அடைத்துக் கொண்டு பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கவும், அவரை நோக்கி சென்றனர்.​

மகேந்திரன் சிவக்குமாரின் தோளைப்பற்றி, “சிவா என்னாச்சுடா?” என்று கேட்டது தான் தாமதம் நண்பனின் தோளில் சாய்ந்து கதறி விட்டார் சிவக்குமார்.​

மகேந்திரனுக்கு பதட்டம் அதிகமாக விட, “என்ன ஆச்சு? மாப்பிள்ளை எதாவது குடிச்சிட்டாரா?” என்று சந்தேகமாக கேட்டார்.​

சிவக்குமார் அழுதுக்கொண்டே ஆமாம் என்று தலையாட்டினார்.​

“ஏண்டா மாப்பிள்ளைக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா?” என்று கேட்டார் மகேந்திரன்.​

“அவன் தான்டா என் பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி நச்சரிச்சிட்டே இருந்தான், அவன் விருப்பத்தோட தான் எல்லா ஏற்பாடும் செஞ்சேன்” என்றார் சிவக்குமார் அழுதுக் கொண்டே.​

“அப்போ ஏன் விஷம் குடிச்சார்?” என்றான் சித்தார்த் அபிமன்யூ தன் சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொள்ள​

“என்ன விஷமா? அய்யோ தம்பி, இந்த பய ராத்திரி எல்லாம் தூங்காம சீட்டாடிக்கிட்டு குடிச்சிட்டே இருந்தான். அப்போவே சொன்னேன் காலையில எழுந்திருக்க முடியாது, போய் தூங்குடானு. கேட்டா தானே? குடம் தண்ணியை தலையில் ஊத்தியும் போதை தெளியாம பயபுள்ள எழுந்திருக்க மாட்டேங்கிறான்” என்றார் அங்கிருந்த ஒரு பெரியவர்.​

அதற்குள் புரோகிதர், “முகூர்த்த நேரம் இன்னும் பதினைந்து நிமிஷம் தான் இருக்கு, சீக்கிரம் மாப்பிள்ளையை கூட்டிட்டு வாங்க” என்று தன் கவுன்டவுனை தொடங்கி விட்டார்.​

சிவக்குமார் தலையில் அடித்துக் கொண்டு வெடித்து அழ ஆரம்பித்து விட்டார்.​


2nd எபி தொடர்ச்சி 👇👇👇
 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 2
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
எபி -2 தொடர்ச்சி...

“மாமா, இருங்க எதாவது மெடிசன் கொடுத்து எழ வைக்கமுடியுமானு பார்க்கிறேன்” என்று அந்த மாப்பிள்ளையிடம் சென்றான்.​

கருத்த தடிமனான உருவம், முகம் முழுவதும் ஆங்காங்கே தழும்புகள், பார்க்கவே விகாரமாக இருந்தது. டிரைவராக இருந்தானா? இல்லை யாருக்காவது அடியாளாக இருந்தானா? என்று யோசித்தபடி அவன் தோள்களை லேசாக குலுக்கி எழுப்பி பார்த்தான் சித்தார்த்.​

அவன் எழுவதாக இல்லை. தந்தையிடம் திரும்பி “பக்கத்தில எதாவது ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகலாம்” என்றான்.​

“எதாவது மருந்து கொடுத்து அவனை உடனே எழுப்பிட முடியுமா தம்பி?” என்றார் அங்கிருந்த பெரியவர்​

“அப்படி எல்லாம் எந்த மருந்தும் கொடுக்க முடியாதுங்க, அப்சர்வேஷன்ல வச்சு தான் பார்க்கணும்” என்றான்.​

“அப்போ முகூர்த்த நேரம் முடிஞ்சுடுமே” என்று சொல்லும் போதே புரோகிதர் இன்னும் பத்து நிமிடங்களே இருப்பதாக குரல் கொடுத்தார்.​

“முகூர்த்த நேரம் முடிஞ்சா என்ன? இன்னொரு நாள் கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்றான் சித்தார்த்​

“தம்பி இந்த மாசத்துல இதுதான் கடைசி முகூர்த்தம் கடைசி நாள், நாளையில் இருந்து புரட்டாசி மாதம் ஆரம்பிச்சிரும், அந்த மாசத்துல யாரும் கல்யாணம் பண்ண மாட்டாங்க” என்றாள் ஒரு பாட்டி.​

“இருக்கட்டுமே, அப்புறமாவே கல்ணாணம் செய்துக்கிட்டா என்னாகிட போகுது?” என்றான் சித்தார்த் அந்த பாட்டியிடம்​

“மணமேடை வரைக்கும் வந்து என் பொண்ணோட திருமணம் நின்னு போச்சுனா என் மானம் போயிடுமே அபிமன்யூ, நான் உயிரோடு இருந்து என்ன பயன், என்கிட்ட இருக்கிறது எல்லாம் இந்த கல்யாணத்துக்கு செலவு பண்ணியிருக்கேன். இதுக்கு நான் வாங்கின கடனை அடைக்கவே இன்னும் ஐந்து வருஷம் வயக்காட்டில் உழைக்கணும்” என்று கதறியடி சிவக்குமார் நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்துவிட்டார்.​

மகேந்திரன் நண்பனை தாங்கி பிடித்துக் கொண்டு, “சிவா மனசை தளரவிடாதே, உன்னை அப்படியே விட்டுட மாட்டேன். தைரியமா இரு, என்னை நம்பு, இந்த கல்யாணம் கட்டாயம் நடக்கும்” என்றார் ஒரு முடிவோடு.​

“அப்பா இன்னும் ஐந்து நிமிஷத்துல இந்த மாப்பிள்ளை எழுந்து உட்கார்ந்துடுவானா? இவன் எந்திரிக்கவே இன்னைக்கு சாயங்காலம் ஆயிடும். எதுக்கு வீணா மாமாவுக்கு தவறான நம்பிக்கை கொடுக்கறீங்க” என்று அதட்டினான் சித்தார்த்.​

“அவன் ஐந்து நிமிஷத்துல எழுந்து உட்கார்ந்தாலும் அவனுக்கு என் நண்பன் மகளோட கல்யாணம் நடக்க விடமாட்டேன் சித்து” என்றார் மகேந்திரன் அழுத்தமான குரலில்​

சித்தார்த் கேள்வியாக நோக்கவும், “விடிஞ்சா கல்யாணத்தை வச்சிட்டு இந்தளவு குடிச்சிருக்கான்னா, இவனெல்லாம் அந்த பொண்ணை நல்லாவா பார்த்துப்பான்? நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே அவன் புத்தி தெரிஞ்சதே. இனி அவன் மாப்பிள்ளை இல்லை” என்றார் மகேந்திரன்.​

சிவக்குமாரும் நண்பனை யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தார்.​

“கல்யாணமும் நடக்கும்னு சொல்றீங்க, அவன் மாப்பிள்ளை இல்லைனும் சொல்றீங்க, ஐந்து நிமிஷத்துல சுவிகில கூட ஆர்டர் பண்ண சாப்பாடு வருமானு தெரியலை, நீங்க ஐந்து நிமிஷத்தில மந்திரம் போட்டு மாப்பிள்ளையை வர வைக்கபோறீங்களா?” என்றான் நக்கலாக.​

“நீ இருக்கும் போது, நான் எதுக்கு சித்தார்த் மந்திரம் எல்லாம் போடணும்” என்றார் மகேந்திரன் அமைதியாகவும் அழுத்தமாகவும்.​

“என்ன? தந்தை என்ன சொல்ல வருகிறார்? அவர் சொல்ல வந்ததின் அர்த்தம் என்ன? என்று பல்வேறு கேள்விகளை தனக்குள் கேட்டபடி அவர் கூறிய வார்த்தைகளை தனக்குள் ஓடவிட்டு ஏதோ புரிந்தவனாக அதிர்ச்சியுடன் தந்தையை பார்த்தான்.​

நீ யூகித்தது சரியே என்பது போல மகேந்திரன் கண்களின் இமைகளை மூடித் திறந்தார்.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 03​

சித்தார்த் மெல்ல திரும்பி அதிர்ச்சியுடன் மணமேடையை பார்த்தான். மணமேடையை விட்டு எழுந்திருக்க கூடாது என்று புரோகிதர் சொல்லியிருந்ததால் அங்கேயே அமர்ந்து பார்வையை மட்டும் இங்கே வைத்திருந்தவள் நிறைய அழுதிருப்பாள் போலும், கண்ணீரில் அவள் மேக்கப் எல்லாம் கலைந்து அவள் அழகை மேலும் அலங்கோலமாக்கி காட்டியது.​

இதழ்குவித்து ஊதி தன்னை ஒருவாறு கட்டுப்படுத்திக் கொண்டு, “அப்பா உங்க கிட்ட தனியா பேசணும் இப்படி வாங்க” என்று அழைத்தான்.​

நண்பனின் எண்ணத்தை உணர்ந்தவராக “மகி, அபிமன்யூக்கு விரும்பமில்லாத எதையும் செய்ய சொல்லி வற்புறுத்தாதே” என்றார் சிவக்குமார் நலிந்த குரலில்.​

“சிவா, நீ அமைதியா இரு, நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி விட்டு மகனின் பின்னால் சென்றார் மகேந்திரன்.​

காலியாக இருந்த மணமகன் அறைக்குள் தந்தையை இழுத்துச் சென்று கதவை மூடினான் சித்தார்த் அபிமன்யூ, “அப்பா என்ன சொல்றீங்கனு புரிஞ்சு தான் பேசறீங்களா? நீங்க பேசறதை பார்த்த, என்னை மணமேடையில் உட்கார்ந்து தாலி கட்ட சொல்லுவீங்க போல இருக்கே” என்றான் படபடப்பாக.​

“சித்து நீ புத்திசாலிடா, என் மனசில் நான் என்ன நினைக்கிறேனோ அப்படியே புரிஞ்சுக்கிறே? என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கே” என்று நேரம் காலம் தெரியாமல் மகனை பாராட்டினார் மகேந்திரன்.​

இந்த பாராட்டு ரொம்ப முக்கியம் என்று மனதிற்குள் நொடித்தவன், “டாடி ஐயம் சீரியஸ், என்னால எல்லாம் அந்த பெண்ணுக்கு தாலி கட்ட முடியாது. வேணும்னா ஒரு நல்ல படிச்ச மாப்பிள்ளையா பார்த்து, நம்ம செலவிலேயே அந்த பொண்ணுக்கு கல்யாணம் செய்து வச்சிடலாம். உங்க பிரெண்டோட கடனை எல்லாம் நானே அடைச்சிடறேன். அவருக்கு பேசி புரிய வையுங்க” என்றான் சித்தார்த்.​


“என் பிரெண்ட் என்ன உனக்கு பிச்சைகாரனா தெரியறனா? நான் இருக்கும் போது நீ என்ன அவன் கடனை தீர்க்கறது?” என்றார் மகேந்திரன் கோபமாக.​

“சரி யார் கொடுத்தா என்ன? நீங்களே அவருக்கு தேவையான பணத்தை கொடுங்க, நம்ம ஆஸ்பிட்டல்லயே அவ வேலை செய்யட்டும். வேணும்னா ஒரு டாக்டர் மாப்பிள்ளையா பார்த்து நாமளே கல்யாணம் செய்து வச்சிடலாம்” என்றான் சித்தார்த் தந்தையை சமாதானம் செய்யும் நோக்கில்​

“சித்து நீ சிவாவை பத்தி தெரியாம பேசறே. நான் பணமா கொடுத்தா அவன் எதையும் வாங்க மாட்டான் டா, அவனுக்கு தன்மானம் அதிகம். எத்தனையோ கஷ்டம் வந்தாலும் ஒரு முறைக்கூட அவனுக்கு பணத்தேவை இருக்குனு என்கிட்ட காட்டிக்கவே மாட்டான்.​

அவன் பொண்ணு கல்யாணத்துக்கு தடபுடலா சீர் செய்ய நான் தயாரா இருந்தேன், ஆனா அவன் அதை எல்லாம் பிடிவாதமா வேணாம்னு சொல்லிட்டான். என்கிட்ட முதல்முறையா கேட்டது அவன் பொண்ணுக்கு ஒரு வேலை மட்டும் தான். அதனால் தான் வேலைக்கான ஆர்டரை உன்னையே நேரில் கொண்டு வந்து கொடுக்க சொன்னேன்.​

என்னால பணமா கொடுத்துதான் அவனுக்கு உதவி செய்யமுடியலையேனு கல்யாண வேலை எல்லாம் நானே பார்த்தேன். அவன் மட்டும் இந்த கல்யாணம் ஏற்பாடு செய்யறதுக்கு முன்னாடியே என்கிட்ட வந்து அவன் பொண்ணுக்கு வரன் பார்க்க போறதாக சொல்லியிருந்தா போதும், நான் அப்பவே உன்னை தான் அவனுக்கு மாப்பிள்ளை ஆக்கி இருப்பேன்” என்ற தந்தையை எரிச்சலோடு பார்த்தான் சித்தார்த்​

“சும்மா அந்த பொண்ணோடு என்னை சேர்த்து வச்சு பேசாதீங்கப்பா, அந்த பெண்ணை நம்ம ஆஸ்பிட்டல்ல நர்ஸ் வேலைக்கு எடுக்கவே யோசிச்சவன் நான், அவளை எனக்கு லைப் பார்ட்னரா ஒரு நாளும் என்னால ஏத்துக்கவே முடியாது. எல்லார் முன்னாடியும் உங்களை எதிர்த்து பேச வேணாம்னு தான் தனியா கூட்டிட்டு வந்தேன். என்னால அந்த பெண்ணை கல்யாணம் செய்துக்க முடியாது” என்றான் சித்தார்த் அபிமன்யூ தீர்மானமான குரலில்.​

“ஏன் அந்த பெண்ணை கல்யாணம் செய்துக்க முடியாதுனு சொல்றே? எனக்கு சரியான காரணம் சொல்லு?” என்றார் மகேந்திரன் மகனை அழுத்தமாக பார்த்தபடி​

“முன்ன பின்ன யாருனே தெரியாத பெண்ணை திடீர்னு கல்யாணம் செய்துக்க சொன்னால் எப்படிப்பா?” என்றான் சலிப்பாக தந்தையை பார்த்து.​

“அவள் ஒண்ணும் முன்னபின்ன தெரியாத பொண்ணு இல்லை, என் நண்பன் சிவாவோட பொண்ணு. அதுபோதாதா?” என்றார் மகேந்திரன்.​

“அந்த பொண்ணுக்கும் எனக்கும் ஒத்துவராது, உங்க பிரெண்டோட பொண்ணுங்கிறதை ஒதுக்கி வச்சிட்டு யோசிங்க. கொஞ்சமாச்சும் எனக்கு பொருத்தமா இருக்காளானு நீங்களே பாருங்க” என்றான் சித்தார்த் தன் நிலையை தந்தைக்கு விளக்கிவிடும் நோக்கத்தில்.​

“பொருத்தம்னு நீ எதை சாெல்றே சித்து? படிப்பையா இல்லை நிறத்தையா? உன்னோட மருத்துவமனையில் வேலை செய்ய அவளுக்கு தகுதி இருக்கானு நீ யோசிக்கிறதுல நியாயம் இருக்கு. உன்னை கல்யாணம் செய்யறதுக்கு நல்ல படிப்பும், நல்ல நிறம் இருந்தா போதுமா? அது தான் உன்னை கல்யாணம் செய்யறதுக்கான குவாலிபிகேஷனா? அப்போ குணம்? அதெல்லாம் தேவையில்லையா சித்து?” என்றார் மகேந்திரன் கோபமாக.​

இது மாதிரி எல்லாம் பேசி மடக்கினால் அவனும் தான் என்ன செய்வான்? அதிர்ச்சியாக தந்தையை பார்த்தவன், “அப்பா அது மட்டுமில்ல, நான் கனடாவில் எலிசா என்ற பெண்ணை…” என்று அவன் முடிக்கும் முன்பே மகேந்திரன் நெஞ்சை பிடித்துக் கொண்டு தடுமாறினார்.​

“என்னாச்சுப்பா” என்று அதிர்ச்சியுடன் தந்தையை அமர வைத்தான். அவனுக்கு தன் பேண்ட் பாக்கெட்டை கண்களால் காட்டினார் மகேந்திரன். உடனே புரிந்துக் கொண்டு அவர் பாக்கெட்டில் இருந்த மாத்திரையை அவசரமாக எடுத்தவன், அங்கிருந்த தண்ணீர் பாட்டிலையும் எடுத்து மருந்தை தந்தைக்கு புகட்டினான்.​

சற்று நேரத்தில் ஆசுவாசமானவர், அவன் கைகளை பிடித்துக் கொண்டு, “சித்து, உன்னை கெஞ்சி கேட்கிறேன்டா. என் சிவாவுக்கு நான் இதுவரை நன்றிகடனா எதுவுமே செஞ்சதே இல்லடா, அதற்கான வாய்ப்பையே அவன் கொடுக்க மாட்டான். அவனுக்கு இந்த நிலைமையில உதவ முடியலைனா, நான் எல்லாம் என்னடா பிரெண்ட்?” என்றார் மகேந்திரன் கண்கலங்க.​

கண்களை இறுக மூடினான் சித்தார்த் அபிமன்யூ. அவன் கண்களுக்குள் எலிசா மோகனமாய் சிரித்தாள், கூடவே பவிஷ்கா தந்தையின் உடல் நிலையை பற்றி கூறியது, சற்று முன் தந்தை நெஞ்சை பிடித்துக் கொண்டது என எல்லாம் மூடிய விழித்திரையில் ஒவ்வொரு காட்சிகளாக மாறி மாறி வந்தன.​

மூடிய விழியை திறக்காமல், “சரிப்பா உங்க இஷ்டப்படி நடக்கட்டும்” என்று அவன் சொல்லும் போதே புரோகிதரின் குரல் ஓங்கி ஒலித்தது.​

“முகூர்த்த நேரம் முடிய இன்னும் சில வினாடிகளே இருக்கு, இனி இந்த கல்யாணம் நடக்காதுனு தோண்றது, நான் கிளம்பறேன்” என்று அவர் சத்தமாக பேசவும் விறுவிறுவென்று வெளியே வந்தவன் இரண்டே எட்டில் மணமேடையை அடைந்தான்.​

புரோகிதரின் குரலை கேட்ட மற்றவர்கள் அனைவரும் மணமேடையை நோக்கி ஓடி வர, தன் மகளின் திருமணம் நின்று போக போகிறதே என்று கதறி அழுதபடி வந்த சிவக்குமாரின் தோளில் ஆதரவாக கைவைத்து அழுத்தினார் மகேந்திரன். நண்பனை நிராசையோடு ஏறிட்டு பார்த்த சிவக்குமாரை மேடையை பார்க்கும்படி கண்களால் சைகை செய்தார் மகேந்திரன்.​

அங்கே சித்தார்த் அபிமன்யூ தன் கரங்களில் ஏந்தியிருந்த மங்கல நாணை அவர் மகளின் கழுத்தருகே கொண்டு சென்று, “கட்டலாமா?” என்று குனிந்து இருந்தவளிடம் சம்மதம் கேட்டுக் கொண்டிருந்தான்.​

அவளோ குனிந்த தலை நிமிராமல் ஓர விழிகளால் தந்தையை பார்த்தாள். அவர் சம்மதமாக தலையை ஆட்டவும், அவள் தலையும் மேலும் கீழுமாக அசைந்தது. அடுத்த விநாடி சற்றும் யோசிக்காமல் அந்த திருமாங்கல்யத்தை அவள் கழுத்தில் அணிவித்து மூன்று முடிச்சுகளை இட்டு நிமிர்ந்தவன் தன் தந்தையை பார்த்தான்.​

மகேந்திரனும் சிவக்குமாரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டு ஆனந்த கண்ணீரால் அவர்களுடைய சந்தோஷத்தை தங்களுக்குள் பகிர்ந்துக் கொண்டிருந்தனர்.​

அடுத்து நடக்க வேண்டிய சம்பிரதாயங்களை புரோகிதர் விளக்கி கொண்டிருக்க, அதை ஒரு உணர்வற்ற நிலையில் செய்து கொண்டிருந்தான் சித்தார்த் அபிமன்யூ. நிறைய பேர் அவனிடம் வந்து அவனை புகழ்ந்து பேசி சென்றனர், வாழ்த்து தெரிவித்தனர். அனைத்துக்கும் ஒரு தலையசைப்பை மட்டுமே பதிலாக தந்தவன் மறந்தும் தன் அருகில் இருந்தவளை பார்க்கவே இல்லை.​

ஆனால் நேத்ராவோ அவன் அறியாத சமயத்தில் அவனை யாரென்று பார்க்கத்தான் நினைத்தாள். சற்றே திரும்பி பார்த்தால் அவன் சட்டையின் பாக்கெட் மட்டுமே தெரிந்தது.​

அருகில் இருப்பவன் நல்ல உயரம் போல, முகத்தை பார்க்க வேண்டுமானால் நன்றாக தலையை அண்ணாந்து தான் பார்க்கணும். ஆனால் அதற்கு தடையாக இருந்தது, தலையில் இருந்த மலர் அலங்காரமும், கழுத்தில் இருந்த இரண்டு மாலைகளின் பாரமும் தான். அதுமட்டுமல்ல, அனைவரின் முன்னால் அவனை நிமிர்ந்து பார்க்க அவளுக்கு கூச்சமாக இருந்தது.​

தன் தந்தையின் ஒற்றை தலையசைப்பில் அவன் யாரென்றே தெரியாமல் தன்னை அவனுக்கு ஒப்பு கொடுத்துவிட்டாள்.​

மணமக்கள் இருவரும் சிவக்குமார் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் இருந்து விட்டு, மகேந்திரனின் பூர்வீக வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்ததும் தன் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டான் சித்தார்த் அபிமன்யூ.​

என்ன செய்வது? என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்த தன் மருமகளை பார்த்து, “சித்துக்கு டயர்டா இருக்கும்னு நினைக்கிறேம்மா, நீ அங்கே பூஜையறையில இருக்கிற விளக்கை ஏத்திட்டு, அந்த அறையில கொஞ்ச நேரம் ஓய்வெடும்மா” என்றார் மகேந்திரன்.​

அவளும் சம்மதமாக தலையை மட்டும் அசைத்துவிட்டு, அவர் சொன்னபடி விளக்கேற்றி விட்டு, அங்கிருந்த அறைக்குள் சென்றாள்.​

மனதில் ஒரு பக்கம் நிம்மதியும் ஒரு பக்கம் என்னவென்று தெரியாத குழப்பமும் பயமும் இருந்தது. நிம்மதி எதற்கென்றால் அந்த பாண்டியனோடு திருமணம் நின்று போனதற்கு. ஆம் அந்த பாண்டி எப்போதும் அவள் பின்னால் சுற்றிக் கொண்டு இருப்பான், அப்போதே அவளுக்கு அவனை பிடிக்காது. அவள் சட்டை செய்யவில்லை என்றதும் தன் தந்தையிடம் நயமாக பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டான்.​

அப்போதும் நேத்ரா தந்தையிடம் மறைக்காமல் அவன் தன் பின்னால் சுற்றியதை கூறினாள். “உன்மேல இருக்கிற ஆசையில சுத்தியிருக்கான், அப்புறம் அது தப்புனு புரிஞ்சு நேரடியா என்கிட்ட பெண் கேட்டு வந்ததாக உண்மையை வெளிப்படையா சொன்னான் டா. அதனால் தான் எனக்கு அவனை பிடிச்சது.​

உனக்கு ஒரு பெரிய இடத்தில மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைக்கணும்னு எனக்கும் ஆசை தான். ஆனால் அவங்க எதிர்பார்க்கிறதை நம்மால செய்யமுடியாது, அது மட்டுமில்லாமல் வசதியான குடும்பத்தில வாழ்க்கைப்பட்டு போனால் உனக்கு அங்கே மரியாதை இருக்காது. விரலுக்கேத்த வீக்கம் மாதிரி இவன் நம்ம வசதிக்கேற்ற மாப்பிள்ளையா இருக்கான். கல்யாண செலவை மட்டும் நம்மை பார்த்துக்க சொல்லிட்டான். நீங்க போடுற நகையை போடுங்க உங்க இஷ்டம்னு சொன்னான். அதனால தான் ஒத்துக்கிட்டேன். உனக்கு விருப்பமில்லைனா சொல்லுடா…இப்பவே இந்த பேச்சை நிறுத்திடுறேன்” என்றார் சிவக்குமார்.​

தந்தையின் பேச்சில் இருந்த நிதர்சனம் புரிய, ஒரு வேளை தன் மேல் இருக்கும் ஆசையினால் தன்னை நன்றாக பார்த்துக் கொள்வானோ என்னவோ என்றும் தோன்றிவிட, “உங்களுக்கு எது சரினு தோணுதோ அதையே செய்யுங்க அப்பா” என்று கூறிவிட்டாள் மகள்.​

ஆனால் திருமணத்திற்கு முன்தினம் வரை மனதார அவனை ஏனோ கணவனாக அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. வரவேற்பு நிகழ்ச்சியின் போது அவன் அருகில் நின்றிருந்த போது, அந்த பாண்டியும் இவளின் உயரத்திலேயே இருக்கவும், அவன் முகத்தை அப்போது தான் நன்றாக பார்த்தாள். அவன் கண்களில் தெரிந்த சிவப்பும், உதடுகளில் படிந்திருந்த கருமை நிறமும், எப்போதும் எதையோ மென்று கொண்டிருந்த அவன் வாயிலிருந்து வந்த வாசனையும் அவளுக்கு உவப்பானதாக இல்லை. குமட்டிக் கொண்டு வந்தது.​

அதைப் பார்த்தவன், “என்ன கல்யாணத்துக்கு முன்னாடியே வாந்தி எடுக்கிறே? என்ன விஷயம்? வேறே யாரையாச்சும் காதலிச்சியா?” என்று ஒரு மாதிரி அவளை பார்த்து கண்களை உருட்டி அதட்டலாக கேட்டான். அந்த கேள்விக்கே தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி அவன் முகத்தில் வீசி விடத்தான் தோன்றியது.​

தந்தையின் முகத்தில் இருந்த பூரிப்பை பார்த்து பற்களை கடித்துக் கொண்டு அப்படியே நின்றாள். காலை மணமேடைக்கு அவன் வரவில்லை என்றது நிம்மதியாக இருந்தாலும், தன் தந்தையின் கண்ணீரை பார்த்து அவளுக்கும் தானாக கண்ணீர் சுரந்தது.​

இப்போது தன் கழுத்தில் தாலி கட்டியிருப்பவன், அவள் தந்தையின் நண்பரான மகேந்திரனின் மகன் என்பதை தவிர, அவன் யார், எப்படி பட்டவன்? அவன் பெயர் என்ன? என்று எதுவுமே தெரியாது.​

வீட்டையும் காரையும் பார்த்தால் இவர்கள் பெரிய இடம் போல இருக்கிறதே, இந்த திடீர் கல்யாணத்தால் அவனுடனான வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்கிற குழப்பமும், அவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ? அவன் தன்னை எப்படி நடத்துவானோ என்கிற பயமும் இருந்தது நேத்ராவுக்கு.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 04

நேத்ராவுக்கு பல்வேறு குழப்பங்கள் இருந்தாலும் முன்தினம் சரியாக உறங்காததாலும், அன்றைய திருமண களைப்பினாலும் உறக்கம் வந்தது. தன் அலங்காரத்தை மொத்தமாக நீக்கி விட்டு முகம் கழுவி, தன் நீண்ட கூந்தலை விரித்து விட்டபடி, அப்படியே உறங்கி போனாள்.​

எங்கே இருக்கிறோம்? இது இரவா? இல்லை பகலா? என்றும் தெரியாத அளவிற்கு தன்னை மறந்து தூங்கி கொண்டிருந்தவளின் தூக்கத்தை கலைக்கும் விதமாக வெளியே இருந்து வந்த பேச்சுக்குரல் எங்கேயோ கேட்பது போல இருந்தது.​

பழக்கமான ஒரு குரல், அது மகேந்திரனுடையது. மற்றொரு குரல் சற்றே புதியதாய் இருந்தது. ஆனாலும் அந்த குரலை எங்கேயோ கேட்டிருக்கிறாள். எங்கே? ஆழ்மனதில் தேடினாள், அது அவனின் குரல் அல்லவா?​

திருமாங்கல்யத்தை அவளின் முன்னே நீட்டியபடி, “கட்டலாமா?” என்று கேட்டானே, திடுக்கிட்டு கண் திறந்தாள். வெளியே தந்தை மகன் இருவருக்குள்ளும் ஏதோ வாக்குவாதம் போல. இப்போது எழுந்து வெளியே சென்றால் நன்றாக இருக்காது என்று எண்ணியவளாக அப்படியே படுத்திருந்தாள்.​

“நீங்க சொன்னதை கேட்டு உங்களுக்காக இந்த கல்யாணத்தை நான் செஞ்சுகிட்டேன் தானே, இப்போது நான் சொல்றதை நீங்க கேட்டு தான் ஆகணும். உங்க உடம்பு சரியில்லைனு பவி உங்களை பக்கத்தில் வச்சு கவனிச்சுக்கணும்னு நினைக்கிறாள். இதோ இப்போ ப்ளைட் டிக்கெட் அன்ட் விசா இரண்டும் அனுப்பி வச்சிருக்காள். நீங்க கனடா போய் கொஞ்ச நாள் ஓய்வு எடுத்துட்டு வாங்க, நான் ஆஸ்பிட்டல்ல பார்த்துக்கிறேன்” என்றான் அவள் கணவன்.​

“அதெல்லாம் முடியாது, இப்போ தான் கல்யாணம் நடந்திருக்கு, நான் எப்படி என் மருமகளை விட்டுட்டு போகமுடியும். அவ என்னை பார்த்துக்குவாள்” என்றார் மகேந்திரன்.​

“ஓ அப்போ உங்களை பார்த்துக்க தான் அந்த பெண்ணை எனக்கு கல்யாணம் செய்து வச்சீங்களா?” என்று தந்தையை மடக்கினான் மகன்.​

“ஏய், சித்து என்னடா பேசறே? நான் போய் அப்படி செய்வேனா? அந்த பெண்ணுக்கு எல்லாமே புதுசா இருக்கும் டா, சென்னை புதுசு, நம்ம வீடு புதுசு, அவ்வளவு ஏன் உன்னை யாருன்னே அவளுக்கு தெரியாது. எதுவும் பழகாததுக்குள்ளே என் மருமகளை எப்படி தனியா உன்னை நம்பி விட்டுட்டு போக முடியும்?” என்றார் மகேந்திரன் தவிப்புடன்.​

“ஓ என்னை நம்பி தனியா விட்டுட்டு போக முடியாதவரு, எதுக்காக எனக்கு கல்யாணம் செய்து வச்சீங்க? என் மேலே அவ்வளவு தான் நம்பிக்கையா? என் பெண்டாட்டியை பார்த்துக்க எனக்கு தெரியும், நீங்க முதல்ல உங்க ஹெல்த்தை கவனியுங்க, கனடாவுக்கு கிளம்புற வழியை பாருங்க” என்றான் சித்தார்த் அபிமன்யூ சுவாதீனமாக, அதன் பின்பு தான் தன்னையும் அறியாமல் தவறுதலாக வந்து விழுந்த அவளின் மீதான உரிமை பேச்சை எண்ணி நாக்கை கடித்துக் கொண்டான்.​

அதற்குள் அவன் வார்த்தையின் அர்த்தம் புரிந்து, முகம் கொள்ளா பூரிப்புடன் மகனை ஆரத்தழுவி கொண்டார் மகேந்திரன். “சித்து, நான் கூட பயந்துட்டே இருந்தேன்டா, என்னடா கடைசி நிமிஷத்துல கத்திமுனையில நிறுத்தற மாதிரி உன்னை நிறுத்தி கல்யாணம் செய்து வச்சிட்டோமேனு உள்ளுக்குள்ள கவலையா இருந்துச்சுடா. ஆனால் என் பெண்டாட்டியை எனக்கு பார்த்துக்க தெரியும்னு நீ சொன்ன வார்த்தை உன் மேலே எனக்கு பரிபூரண நம்பிக்கையை கொடுத்திருக்கு, ரொம்ப நன்றிடா” என்றார் மகேந்திரன்.​

சித்தார்த் அபிமன்யூ பதில் பேசாமல் இறுக்கமான முகத்துடன் நின்றிருந்தான்.​

“ஆனால் நான் அங்கே போறதை விட, பவியை இங்கே வரச்சொல்லு, சென்னையில் எல்லாரையும் அழைச்சு ஒரு ரிசப்ஷன் வச்சிடுவோம். அப்புறமா நான் அவ கூடவே போய் ஒரு ஆறு மாசம் இருந்துட்டு வர்றேன்” என்றார் மகேந்திரன்.​

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், ஏற்கனவே இந்த கல்யாணத்துல அட்டாக் வந்த உடம்போட அலைஞ்சு இருக்கீங்க. முதல்ல நீங்க கனடா போய் நல்ல ஓய்வெடுத்துட்டு, அப்புறமா பவியையும் மாமாவையும் கையோட அழைச்சிட்டு வாங்க. நாளை உங்களுக்கு பிளைட்” என்றான் சற்றும் இளகாமல்.​

அதற்குள் பவிஷ்காவும் போன் செய்து தந்தையை வரச்சொல்லி வற்புறுத்தவும் அரைமனதாக ஒத்துக் கொண்டார்.​

ஹாலில் நடந்த இவர்களின் உரையாடல் முன்னறையில் இருந்த நேத்ராவுக்கு தெளிவாக கேட்டது. “என் பெண்டாட்டியை பார்த்துக்க எனக்கு தெரியும்” என்ற கணவனின் வார்த்தையில் அவளின் குழம்பியிருந்த மனம் சற்று தெளிந்தது.​

ஆனால் இப்போது அவளுக்கு வேறொரு குழப்பம், வெளியே செல்வதா வேண்டாமா? அவனாக அவளை அழைப்பானா? அல்லது இவளாக சென்று அவனுக்கு என்ன தேவை என்று கவனிக்க வேண்டுமா? அவனை எப்படி எதிர்கொள்வது? என்று புரியாமல் தவித்தாள்.​

அவளுக்கு சங்கடத்தை தராமல் நேத்ராவின் தந்தை சிவக்குமார் தன் சொந்த பந்தங்களோடு அங்கே வந்திறங்கினார். சத்தமாக ஒலித்த ராணி இல்லையில்லை மேக்கப் ராணியின் குரலிலேயே அவர்களின் வரவை உணர்ந்துக் கொண்டாள் நேத்ரா.​

ஆம் ராணி தான் திருமணத்தில் நேத்ராவிற்கு மேக்கப் செய்தவள், அவர்கள் பகுதியில் யாருக்கு திருமணம் என்றாலும் அவர்கள் அழைக்காமலே சென்று விடுவாள். அவளுக்கு மேக்கப் போடுவதில் அலாதி பிரியம். அதனாலேயே அவளை எல்லாரும் மேக்கப் ராணி என்று கிண்டல் செய்வார்கள். நேத்ராவுக்கு மேக்கப்பில் எல்லாம் எப்போதும் நாட்டம் இருப்பது இல்லை. ஆனால் ராணி ஆசையாக வந்து கேட்கவும் அவளால் மறுக்க முடியவில்லை.​

“வாடா சிவா வா, என்ன எல்லாரையும் அழைச்சிட்டு வந்திருக்க?” என்று கேட்டார் மகேந்திரன்.​

“என்ன மகி தெரியாத மாதிரி கேட்கிறே? இன்னைக்கு ராத்திரி நடக்க வேண்டியது எல்லாம் நடக்கணும் இல்ல? நம்ம வீட்டுல தான் இதை எல்லாம் பார்த்து பார்த்து செய்ய பொம்பளைங்க இல்லயே, அதனால தான் இவங்களை எல்லாம் அழைச்சிட்டு வந்தேன்” என்றார் சிவா.​

அதைக் கேட்டதும் சட்டென அறைக்குள் சென்று விட்டான் சித்தார்த் அபிமன்யூ​

கேள்வியாக பார்த்த சிவக்குமாரை, “என்ன சிவா, இதெல்லாம் அவன் முன்னாடி சொன்னா வெட்கமாயிருக்காதா, அதான் கால் பிடறில படுற மாதிரி ஓடுறான்” என்று சிரித்தார் மகேந்திரன்.​

இப்போது சிவக்குமாரும் சிரித்துக் கொண்டு, “நேத்ராவை தயார் செய்யுங்க, கொண்டுவந்த பூக்களை எல்லாம் மாப்பிள்ளை அறைக்கு எடுத்துட்டு போய் அலங்காரம் செய்யுங்க” என்றார்.​

இரண்டு ஆண்கள் அறைக்குள் நுழைவதை கண்டதும், சித்தார்த் பின் பக்க தோட்டத்திற்கு சென்று இலக்கின்றி இங்கும் அங்குமாக நடை பயின்று கொண்டிருந்தான். அவன் முகம் தீவிர யோசனையில் இருந்தது.​

மேக்கப் ராணியோ நேத்ரா இருந்த அறைக்குள் வந்தவள், “என்ன நேத்ரா? ராத்திரிக்கு தூங்க முடியாதுனு உன் புருஷன் இப்பவே தூங்கி எழுந்துக்க சொன்னாரா?” என்று கிளுக்கி சிரித்தாள்.​

“அய்யோ ராணி, இப்படி எல்லாம் பேசாதே” என்று அதட்டினாலும் நேத்ராவின் முகம் சிவந்து விட்டது.​

“என்ன நேத்ரா, அதுக்குள்ள வெட்கம் எல்லாம் படுறே? உன் மாநிறமே இவ்வளவு சிவக்குதுனா? மாப்பிள்ளை என்ன செஞ்சாரு?” என்று புருவம் உயர்த்தினாள் ராணி.​

“அய்யோ ராணி, அவர் முகத்தை கூட இன்னும் நான் முழுசா பார்க்கலை, நீ வேற என்னை கலாய்க்காதே” என்று சிணுங்கினாள் நேத்ரா.​

“அதான் இன்னிக்கு ராத்திரி மொத்தமா அவரை பார்க்க போறீயே” என்று சொன்ன ராணியின் வாயை அவசரமாக பொத்தினாள் நேத்ரா.​

“இதுக்கு மேலே பேசாதே ப்ளீஸ்” என்றாள் நேத்ரா கெஞ்சுதலாக.​

“சரிசரி, குளிச்சிட்டு வா, நான் உனக்கு மேக்கப் போடுறேன்” என்றாள் ராணி​

“என்ன? ராத்திரில தூங்கறதுக்கு எதுக்கு மேக்கப் அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நானே ரெடியாகிக்கிறேன் நீ கிளம்பு” என்றாள் நேத்ரா.​

“நீ என்ன தூங்கவா போறே?” என்று மேலும் பேச எத்தனித்த ராணியை நோக்கி கை கூப்பியவள், “அம்மா, தாயே, குளிச்சுட்டு வரேன், நீயே மேக்கப் போடு, போதுமா?” என்று சொல்லி விட்டு குளியலறைக்குள் சென்றாள்.​

குளிக்கும் போது என்னவோ புதுவித சிலிர்ப்பாக இருந்தது. என் பெண்டாட்டியை பார்த்துக்க எனக்கு தெரியும் என்றானே, அந்த ஒற்றை வாக்கியம் கொடுத்த நம்பிக்கையில் முகத்தை கூட சரியாக பார்த்திராத தன் கணவனை எண்ணி உடல் சிலிர்த்தாள் நேத்ரா.​

நேத்ரா குளித்து முடித்து வந்ததும், ராணி தன் கைவரிசையை காட்ட தொடங்கினாள். அவளின் மேக்கப்பில் நேத்ராவிற்கு ஏனோ திருப்தி இல்லை.​

“ராணி எதுக்கு இவ்வளவு அதிகமா மேக்கப் போடுறே? நம்ம ஊருக்கு கூத்து கட்ட வருவாங்களே, அந்த மாதிரி இருக்கு. கொஞ்சம் கம்மியா போடு” என்றாள் நேத்ரா சிணுங்கி கொண்டே.​

“என்ன? நம்ம ஊருலயே என்னை விட அழகா மேக்கப் போட ஆள் இருக்காங்களா என்ன? என்னை பார்த்து இப்படி சொல்லிட்டியே நேத்ரா? ஏய் மாலா நான் போட்ட மேக்கப் நேத்ராவுக்கு நல்லா இல்லையாடி?” என்று அருகில் இருந்தவளை கேட்டாள் ராணி.​

இல்லை என்று சொன்னால், தனக்கு அவள் கொடுத்திருக்கும் மேக்கப் அசிஸ்டென்ட் என்ற அந்தஸ்தும், சம்பளமும் கிடைக்காது என்பதால், “அருமையா இருக்கு நேத்ரா. எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா? நம்ம ராணி அக்கா உன்னை சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு மேக்கப் போட்டிருக்கு. அத போயி குறை சொல்றீயே” என்று ஒரே போடாக போட்டாள் மாலா.​

“அப்படி சொல்லு மாலா. இந்த நேத்ராவுக்கு என்னோட அருமை தெரியலை” என்றபடி ராணி தன் வேலையில் மும்மரமாக இருந்தாள்.​

சரி இன்று ஒரு நாள் தானே மேக்கப் போட போகிறாள். அதன் பிறகு கணவனோடு சென்னை போய்விட போகிறோம். அவள் ஆசையை கெடுப்பானேன் என்று அமைதியாகி விட்டாள் நேத்ரா.​

ஒரு வழியாக நேத்ராவிற்கு மேக்கப்பை முடித்துவிட்டு ராணி ஹாலுக்கு சென்று எல்லாம் தயார் என்று கூறவும், சித்தார்த்தை அழைத்து அறைக்குள் போக சொன்னார் மகேந்திரன்.​

முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அறைக்குள் சென்றவன், அங்கிருந்த கட்டிலில் அவர்கள் பூக்களால் செய்திருந்த அலங்காரத்தை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தான்.​

சிவக்குமாரின் சித்தி அத்தை முறை கொண்ட வயதான பெண்மணிகள் நேத்ராவின் காதில் சில புத்திமதிகளை சொல்லி, ஆசிர்வதித்து, அவள் கையில் பால் சொம்பை கொடுத்து, அறைக்குள் போக சொன்னார்கள்.​

கணவன் சற்றுமுன் சொன்ன “என் பெண்டாட்டியை பார்த்துக்க எனக்கு தெரியும்” என்ற வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கையோடு, கண்களில் கனவுகளோடு, அந்த அறைக் கதவை மெல்ல தட்டினாள்.​

“கம் இன்” என்ற அழுத்தமான குரல் கேட்டது, அந்த குரலில் தெரிந்த கடினத் தன்மையில் அவள் நெஞ்சுக்குள் திக்கென்று இருந்தது.​

ஆபிஸ் அறையை தட்டும் ஊழியருக்கு, உள்ளே வரச்சொல்லி உத்தரவிடும் முதலாளியின் ஆணை போல தோன்றியது.​

பின்னால் திரும்பி பார்த்தாள், என்ன என்று கேட்ட அப்பத்தாவிடம், “எனக்கு பயமா இருக்கு, நான் போக மாட்டேன்” என்றாள் பள்ளிக்கு செல்லும் சிறுமி போல.​

கிளுக்கி சிரித்தவர்கள், “இப்போ இப்படி தான்டி சொல்லுவ, காலையில எவ்வளவு சீக்கிரமா வர்றேனு நாங்களும் பார்க்கிறோம், போடி உள்ளே” என்று அதட்டினார்கள் அந்த பெண்கள்.​

படபடப்புடன் உள்ளே நுழைந்தாள், அவன் அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தான். அவள் பால் செம்பை வைத்து விட்டு, கதவை சாத்தி தாழ் போட்டாள்.​

அவள் உள்ளே நுழைந்ததிலிருந்து, அவள் அசைவுகளை திரும்பாமலே உணர்ந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் இறுக்கமாக நின்றிருந்தான்.​

நேத்ராவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவன் முதுகையே பார்த்து கொண்டு கைகளை பிசைந்தபடி நின்றிருந்தாள். அவன் திரும்புவது போல அவனிடம் அசைவு தெரியவும், சட்டென்று குனிந்து கொண்டாள்.​

குனிந்து இருந்த அவளின் வதனம் முழுமையாக அவனுக்கு தெரியாவிட்டாலும், அவள் போட்டிருந்த அதீத மேக்கப்பை அவனால் பார்க்க முடிந்தது.​

முகம் மற்றும் கழுத்துக்கு மட்டும் வெள்ளை அடித்திருக்கிறாளே, முழங்கைகளில் தெரியும் மாநிறத்தை மறைக்காமல் மறந்து விட்டாளோ? என்று ஏளனமாக பார்த்தான் சித்தார்த் அபிமன்யூ.​

“இங்கே நடந்த திடீர் கல்யாணத்துல நான் குழம்பி போய் இருந்தா, இந்த நேரத்திலயும் இவ்வளவு மேக்கப்போட வந்திருக்காளே” என்று எண்ணியபடி அவளை நெருங்கினான்.​

குனிந்திருந்தவளின் கண்களில் அவன் கைகள் தன்னை நோக்கி நீளுவது தெரிந்தது. ஒரு வித படபடப்புடன் கால்விரல்களை தரையில் அழுத்தியபடி, புடவை முந்தானையை முடிச்சிட்டு கொண்டிருந்தவளின் முகம் ரத்தமென சிவந்து கொண்டிருந்தது.​

ஆனால் அவன் கைகள் தலையணையை அவளை நோக்கி நீட்டியது. யோசனையோடு அதை வாங்கியவள் கேள்வியாக அவனை நிமிர்ந்து பார்த்த போது, அவன் திரும்பி கொண்டான்.​

“எனக்கு இந்த கல்யாணத்தில சுத்தமா விருப்பம் இல்லை. என் அப்பாவோட கட்டாயத்துனால தான் கல்யாணம் செஞ்சுகிட்டேன். எனக்கு நீ பொருத்தமா இருப்பேனு எனக்கு தோணல” என்று அவன் மேலும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்.​

அவன் கூறிய வார்த்தைகளின் தாக்கத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உறைந்து போன நேத்ராவின் காதுகளில் “நீ எனக்கு பொருத்தமா இருப்பேனு எனக்கு தோணலை” என்ற வார்த்தைகளுக்கு பிறகு வேறு எந்த வார்த்தைகளும் அவள் காதுகளில் விழவில்லை. அதிர்ச்சியில் மொத்தமாக காது அடைத்துக் கொண்டது போல இருந்தது அவளுக்கு​

ஆனால் அந்த வார்த்தைகளுக்கு பிறகு அவன் சொன்ன முக்கியமான வார்த்தைகளை அவளும் சற்றே காது கொடுத்து கேட்டிருக்கலாம்!​

(தொடரும்)​

 
Status
Not open for further replies.
Top