அத்தியாயம் 1
"கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்"
அதிகாலை சுப்ரபாதம் இனிதாக அந்நாளை துவங்கி இருக்க, அவ்வீட்டு மக்களும் ஒவ்வொருவராக எழுந்து கொள்ளத் துவங்கினர். அன்றைய ஓட்டத்தை காலை ஐந்து மணிக்கே துவங்கியிருந்தது பரஞ்சோதி பாண்டியன் இல்லம்.
வாசுகி, அந்த வீட்டின் தலைவி, பின்வாசல் தொழுவத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆறு மாடுகளுக்கும் கழனித் தண்ணீரைக் கலக்கி வைத்துவிட்டு, கோழிகள் கூட்டையும் திறந்து விட்டு அதற்கும் தீனிகள் போட்டு விட்டு, ஓராள் உயரத்திற்கு வளர்ந்து நிற்கும் இரண்டு டாபர்மேன்களையும் அதன் சங்கிலியை விடுத்து சுதந்திரமாக்கிவிட்டு, வீட்டை ஓர வழியில் சுற்றிக் கொண்டு முன் வாசல் வந்து விளக்குமாறை கையிலெடுத்து ரெண்டுத் தட்டுத் தட்ட,
"வந்துட்டேன் அத்த கொண்டாங்க இங்குட்டு. தினமு நா வாரதுக்குள்ள இத கையில தூக்கிறணுமோ உங்களுக்கு? எப்படியும் வந்து தூப்பேன்னு தெரியும்ல?" என்றாள் தற்போதைய அந்த வீட்டின் மூத்த மருமகள் ஷீலா.
"குமரிய தெனமு பாட்டா பாடியா நா எழுப்ப முடியும்? டான்னு நேரத்துக்கு முழிப்பு வர வேணாம்? இம்புட்டுக்கும் நா சுப்ரபாதத்த போட்டு வேற எழுப்பி விடுதேனாக்கும் உங்கள. இல்லனா ஒம்போது மணி ஆனாலும் அக்காளும் தங்கச்சியும் எந்திச்சு வரமாட்டீகட்டி" என்றவர் வரட்டியாக காய வைத்திருந்த சாணியை ஒரு வாளியில் தண்ணீரை ஊற்றி எடுத்துக்கொண்டு கரைக்க,
"எங்கள எதாச்சும் சொல்லலனா உங்களுக்கு பொழுது விடியாதே?" என்றவளும் சேலையைத் தூக்கிச் சொருகிக் கொண்டு வாசலை பெருக்கத் துவங்கினாள்.
"ஆமான்டி தினமு உங்கள ஏசிட்டுதேன் அந்த நாள தொடங்கணும்னு மருதமலைக்கு வேண்டிருக்கேன்" என்றவர் அடுத்து அவள் வாசலில் தண்ணீரைத் தெளிக்க ஏதுவாக வைத்து விட்டு வீட்டினுள் செல்லப் போக,
"எக்கா இந்தாக்கா போன மாச பால் காசு" எனக் கூப்பிட்டுக் கொண்டே ஷீலாவையும், முன் கேட்டையும் தாண்டி உள்ளே வந்தார் நாச்சிமுத்து.
"ஏலே என்ன அதிசயமாட்ருக்கு காலங்காத்தாலயே ரூவாய கொண்டு நீட்டுத? கேட்டாலும் குடுக்க மாட்டியே நீயி?" என சந்தேகமாகவே வாங்கியவர் அதை எண்ணிக்கொண்டே கேட்க.
"மூத்தவன விட்டு மிரட்டவிட்டுட்டு இப்படி வேற கேளுக்கா நீ. நா தரேம்னு சொல்லியும் அவன்ட்ட சொல்லி குடுத்துட்டல்ல நீயி?"
"போலே நா எதுக்குலே உன்ன சொல்லி குடுக்க போறேன்? ஆவாதுன்ற காரியம் மட்டுந்தேன் அவங்காதுக்கு கொண்டு போவேன், புள்ள குட்டிக்காரன் நீ உன்னபோய் சொல்லிக் குடுப்பேனா? உனக்காக இல்லனாலும் உன் பொண்டாட்டிக்காக பாக்கணும்ல? நா சொல்லி குடுக்கலலே"
"அப்ப யாருக்கா சொல்லிக் குடுத்துருப்பா?"
"அதையும் அவனயே விசாரிக்க சொல்லுதேன். நீ கொஞ்சம் பொறு மொத வீட்டுக்கு பால கறந்துக்குறேன், அப்றம் நீ போ. என் இளைய மருமகளுக்கு இன்னும் விடியலயாட்டமிருக்கு" என சொம்பை எடுக்க அடுப்பாங்கரைச் செல்ல,
அவர் பின்னோடே அப்போது தான் எழுந்து வேகமாக தலையை கொண்டையிட்டவாறு நுழைந்த விசாலாட்சி, "நா வாரேன் நீங்க எடுத்துட்டீக அத்த" என அவர் கையிலிருந்த சொம்பை வாங்கிக் கொண்டு பின் வாசல் நடந்தாள்.
"வாழ வந்து மூணு வருஷம் ஓடி போச்சு இன்னும் பொறுப்பு வர க்காணும் ரெண்டு பேருக்கும், பாதிநாளு நா தொடங்கி வச்சுதேன் விடியணும் போல" எனத் திட்டிக் கொண்டு காலை உணவிற்கு அனைத்தையும் எடுத்து வைக்கத் துவங்கினார்.
"ஏத்தா உனக்கு தெரியுமா மகிழுட்ட யாரு சொல்லிகுடுத்ததுன்னு?" எனக் கோலம் போட்டுக் கொண்டிருந்த ஷீலாவிடம் நாச்சிமுத்து கேட்க.
"அவர் வீட்டுப் பக்கம் வந்தே மூணு நாள் ஆகுது. இதுல பால் காசு வரலன்னு ஸ்டேஷன் தேடி போய் சொல்றளவுக்கு இங்க யாருக்கு பெரியப்பு நேரம்? இல்ல இத மெனக்கெட்டு அவரத் தேடிப் போய் சொன்னா சும்மா விட்ருவாரா அவரும்?"
"அதுவுஞ்சரித்தேன் எப்ப என்ன ரோசனைல இருக்கியான்னு யார் கண்டா?"
"நீங்க எங்கன பெரியப்பு பாத்தீக அவுகள?"
"மதுரை பஸ் ஸ்டாண்டுலதேன். வண்டிய ஓரங்கட்டிட்டு வார போறவுக வண்டிய நிறுத்தி பேப்பர்கள கேட்டிட்டுருந்தியான், நம்ம மருமகனாச்சேன்னு போய் ரெண்டு வார்த்தை பேசுனதுக்கு பிடிபிடின்னு பிடிச்சுட்டான்னா பாத்துக்கோத்தா, மூணு மாசமா பால் காசு தரல பின்ன என்ன மாமன் மருமகனுட்டான்த்தா என்னைய பாத்து?"
"அப்ப நீங்களாத்தேன் போய் மாட்டிருக்கீக இங்க யாரும் சொல்லல, உங்க வாய புடுங்கியே உங்கள மிரட்டி விட்ருக்காக"
"அப்டித்தேன் இருக்குமோத்தா?"
"ஆமாங்குறேன்"
"ஏலேய் வந்த வேலைய விட்டுபோட்டு நின்னு என்ன புரணிங்கேன். வீட்டுவீட்டுக்கு காலைல நீ கொண்டாற பாலுக்கு காத்துகிடக்குறவுகளுக்கு சாயங்காலந்தேன் கொண்டு சேப்பியாட்டம் இருக்கு. போ போயி பால கற" என வாசுகி வந்தவர் முத்துவை விரட்டிவிட்டு,
"உனக்கென்னட்டி ஆடி அசஞ்சு எழுந்து வரவே சூரியன் மேலறிட்டான், இன்னும் வாசல்லயே குடி இருந்தனா எப்ப சமையல் முடிய புள்ளையையும் புருஷனுக்கும் எப்ப சாப்பாடு குடுப்ப? நீ என்னன்னு கிளம்பி வேலைக்கு போவ?" என்கவும்,
"வந்துட்டு தான் இருக்கேன்த்த, புலம்பாதீக" என விளக்குமாறு, வாளி, கோலமாவு டப்பா மூன்றையும் அதனதன் இடத்தில் வைத்துவிட்டு கையைக் கழுவிக் கொண்டு வீட்டினுள் சென்றாள்.
அந்நேரம் தான் கையில் அன்றைய தினத்தந்தியுடன் வேகமாக வந்தார் பரஞ்சோதி பாண்டியன் அந்த வீட்டின் தலைவர். உள்ளே செல்லத் திரும்பிய வாசுகி அப்படியே நின்று, "என்னங்க காட்டுக்கு போன வேகத்துல திரும்ப வந்துட்டீக? அதுக்குள்ள மல்லி எல்லாம் பறிச்சு சந்தைக்கு அனுப்பியாச்சா?" என்றார் வியந்து. இல்லாமல் வீடு திரும்பும் ஆள் அல்லவே அவர் கணவர். காலை ஐந்து மணிக்கு செல்பவர் ஏழு முதல் எட்டு மணிக்குள் தான் பறித்த மல்லியை சந்தைக்கு ஏற்றிவிட்டு வீடு திரும்புவார். மீண்டும் பத்து மணிக்கு மேல் வாழை, தென்னந்தோப்பு சென்று அங்கு நடக்கும் வேலைகளைப் பார்ப்பது அவரின் வழக்கம்.
"யாருடி இவ, செத்த தள்ளு, விவசாய கடன் தள்ளுபடி பத்தி பேப்பர்ல போட்ருக்கான், இந்த வரதன எங்க இன்னும் எந்திக்கலையோ? பொழுது விடிஞ்சு எம்புட்டு நேரமாவுது இன்னும் என்னட்டி தூக்கமா அவனுக்கு? எதாது விவசாய செய்தி வந்தா இவனா வாயத் துறந்து சொல்லுதானா? பேங்குல ஈ வோட்டிட்டு வருவானாட்டமிருக்கு!" என பொரிந்து தள்ள.
"காபிய போட்டு எழுப்பி விடத்தான் அவன் பொண்டாட்டி போயிருக்கா. உங்களுக்கு அவசரமனா நீங்களே சத்தங்குடுங்களேன்" என்றுவிட்டு அடுப்பங்கரை சென்றுவிட்டார் வாசுகி.
"ஏலே வரதா? எந்துச்சுட்டியா இல்லையா?" என அறை வாயிலில் நின்று குரல் கொடுத்தார் பரஞ்சோதி.
"மாமா இருங்க நா எழுப்பியாறேன். உங்க சத்தத்துல பாப்பா முழிச்சுட்டான்னா ஒரு வேலையும் செய்ய விட மாட்டா" என வேகமாக வந்தாள் ஷீலா.
"மூத்தவனுக்கு பொண்ணு பாருங்கன்னு சொன்னா அத விட்டுட்டு மத்த எல்லா வேலையும் செய்வாரு இந்த மனுஷன். திருமங்கலத்துல ஒரு புள்ள இருக்குன்னு அந்த கனகம் சொன்னான்னு அட்ரஸ கொண்டு ராவுக்கே குடுத்துட்டேன். பாரு காட்டுக்கு போய்ட்டு வந்து அங்க கிளம்புவாருன்னு பாத்தா பேங்க்கு போணும்னு வந்து நிக்காரு அந்த பேங்குக்கு போனா நாளும் சோலியும் கெட்டு நாள் பூரா அங்க தான் உக்கார வச்சுருவானுங்கன்னு தெரிய வேணாம்?" என்றார் பொடுபொடுவென.
சிரிப்பை அடக்கிக் கொண்டுத் தேங்காயைத் துருவிக் கொண்டிருந்தாள் விசாலாட்சி. அவர் திட்டும் வேலையில் தான் அவர் இரண்டாவது மகன் அதிக சம்பளத்தில் வேலையில் இருக்கிறான். அவர் நினைத்து புலம்பும் மூத்த மகனுக்கு இளையவர்கள் இருவரின் திருமணத்திற்கும் முன்பிருந்தே ஏழெட்டு வருடங்களாக பொண்ணு பார்க்கிறார்கள் பார்க்கிறார்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒன்னும் முடிவுக்கு தான் வந்தபாடாக காணும். ஊரில் இல்லாத ஜோசியர்கள் ஆரம்பித்து கோவில் பரிகாரங்கள் வரை அனைத்தும் செய்தாயிற்று வரன் மட்டும் கூடி வர மாட்டேன் என்கிறது.
"ஜாதக பொருத்தம் பாத்துட்டீகளாத்தே?" என விசாலாட்சிக் கேட்க,
"நக்கலாடி உனக்கு? இந்த வீட்டுக்குள்ள தான இருக்க நீயும்? உனக்கு தெரியாமத்தேன் நா மட்டுமா போய் பாக்கேனாக்கும்?" அவர் கணவர் மேலுள்ள கடுப்பைக் காட்ட, வெளியே கணவரும் வரதபாண்டியனும் பேசுவது கேட்டது. மாமியாரும் ரெண்டு மருமகள்களும் அவ்வளவு நெருக்கம். எதையும் சொல்லாமல் செய்யும் வழக்கம் மூவருக்குமில்லை. செல்லுமிடத்தில் வேலை இடத்தில் நடந்ததைக் கூட இப்படி சேர்ந்து சமைக்கும் பொழுதுகளில் பகிர்ந்து கொள்வது அவர்களின் இயல்பாகியிருந்தது.
"அப்ப நேரா பொண்ணு தான் பாக்க போறோமா?" என்றாள் விசாலாட்சி.
"யாருக்கு பொண்ணு பாக்க போறோம்?" எனக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்து வெங்காயத்தை அரிய ஆரம்பித்தாள் ஷீலா.
அவளை முறைத்துப் பார்த்த வாசுகி, "உங்களுக்குலாம் என் புள்ள வாழ்க்கை அவ்வளவு இளக்காரமா தெரியுதுல்லட்டி. அவனும் புள்ளையும் குட்டியுமா இதே வீட்ல வாழத்தாம்டி போறான், அந்நேரம் வயிறு எரியாம இருங்கடி போதும்" என்றவருக்கு கண்ணே கலங்கி விட்டது.
"என்னத்தே இப்படி பேச்சிட்டீக? அத்தான் நல்லா இருக்கக் கூடாதுன்னு நாங்க நினப்போமா?" என்றாள் ஷீலா பதறிக்கொண்டு.
"நானும் எப்பையும் போல தான் த்தே கிண்டல் பண்ணேன் நீங்க இன்னைக்கு சட்டுன்னு கோவபட்டுட்டீக" என்ற விசாலாட்சி முகமும் அரண்டு போயிருந்தது.
"என் பையன் வாழ்க்கை நீங்கலாம் கிண்டல் பண்ற அளவுல தானே இருக்கு" என்றார் வாசுகி அதற்கும்.
இரு பெண்களுக்கும் அவர்கள் மாமியாரை நன்கு தெரியும், மனதில் பட்டதை அப்படியே பேசிவிடும் கள்ளமில்லாதவர் என்று. அதட்டுவதென்றாலும் சரி புகழ்வதென்றாலும் சரி முகத்திற்கு நேராக பேசத்தான் தெரியும் அவருக்கு. அதனாலேயே அவரோடு எளிதாக ஒன்றி விட்டிருந்தனர் மருமகள்கள் இருவரும். அவர் ஏசினாலும் பேசினாலும் அந்த நிமிடத்திற்கு மட்டும் தான், அடுத்து அவரே வந்து பேசிக் கொள்வார்.
இதற்கு முன்னரும் இதைப் போல் மூத்த மகனின் திருமணத்தைப் பற்றி பேசிப் புலம்புவார் தான், இவர்கள் எதும் கிண்டலாக சொன்னாலும், "போங்கட்டி என் மூத்த மருமக வரட்டும் அப்றம் இருக்குட்டி உங்க ரெண்டு பேருக்கும். அவள எப்டி கொண்டாறேன்னு மட்டும் பாருங்க" என பதில் பேசி சென்றுவிடுவார், இன்று அவரின் எதிர்பார்ப்பு நடக்காமலே போய்விடுமோ என்ற பயத்தில் தான் இந்த அழுகையும் கோபமும்.
"சாரித்த. அத்தானுக்கு இந்த வருஷம் கண்டிப்பா கல்யாணத்த முடிக்கிறோம். முப்பத்து மூணு ஒற்றபடை தான கண்டிப்பா அமஞ்சுரும்" என்றாள் ஷீலா.
"இனி ஜாதகம்லாம் பாக்றதா இல்ல, அவனையும் கேக்றதா இல்ல, கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு தான் அவனுக்கு சொல்லணும். தட்டி தட்டி போவுது இனி வெளிலயே சொல்லாமதேன் செய்யணும்" என அவரும் சொல்ல.
"கண்டிப்பா த்தே. நானும் என் பேங்க்ல கூட வேலைபாக்றவங்க சைடெல்லாம் சொல்லி வச்சுட்டேன். இந்த வருஷம் எதாது அமையும் பாருங்களேன்" என அழுத்திச் சொன்னாள் ஷீலா.
"நானும் ஹாஸ்பிடல்ல எங்கூட வேலை பாக்குறவங்கட்டலாம் சொல்லி வச்சுட்டேன்த்தே" என்றாள் விசாலாட்சியும். இரு பெண்களின் வீட்டு வலசலில் கூட அத்தனை ஜாதகம் பொருத்தம் பார்த்தாயிற்று. பத்து பொருத்தம் பொருந்தி வந்தாலும் கூட அவன் உத்தியோத்தை கேட்டதும் வேண்டாம் என்று விடுவர். மீதி ஒன்றிரண்டு சரி என வருவதை மகன் உள்ளே புகுந்து கெடுத்து விடுவான். இப்படி தான் போய்க்கொண்டிருக்கிறது வரும் வரனெல்லாம்.
"சரிசரி இப்ப வேலையப் பாருங்க. உங்க மாமாவும் இனி சாப்ட்டு தான் கிளம்புவாக போல, நானாது காட்டுக்கு போய் பாக்கணும் இல்லனா ஏச்சு புடுவாளுக" என்ற வாசுகி தோசை சுட துவங்கினார். இட்லி, தோசை இருவகை சட்னி, உளுந்த வடை என காலை உணவும், சாதம் வத்தல் குழம்பு, பீன்ஸ் கேரட் பொரியல் மதியத்திற்கும் தயாராகியது. பாத்திரம் விளக்கி எடுக்க மட்டுமே, சாணம் அள்ள வரும் செல்வி பார்த்து செல்வாள். மற்ற வேலைகளை இந்த மூன்று பெண்களும் பார்த்து விடுவர்.
காலை வேலை பரபரப்பாக முடியவும், "விசாலா போய் உன் புருஷனயும் எழுப்பு, அவனா ஒருநாளும் எந்திக்க மாட்டியான், தொழில் பண்ணுதேன்னு சொல்லிட்டே திரியுறானே தவிர வீட்டுக்கு ஒரு வருமானத்த காணும்" என்க, விசாலாட்சி அவள் கணவன் அரசுவை எழுப்பச் சென்றாள்.