உருகும் சூரியன் 3
நண்பியின் பதிலுக்காக காத்திருந்த தமிழ் அவளின் பதிலில் கோபம் அதிகமாக பனிமலரின் கை பிடித்து இழுத்து அவளின் முதுகில் அடிக்க ஆரம்பித்தாள் அவளின் ஒவ்வொரு அடியும் வலியை கொடுக்க
" ஏய் வலிக்குதுடி தமிழ் விடுடி" என்று அவளின் அடியில் இருந்து தப்ப நினைத்தாலும் முடியாமல் அடிவாங்கிக்கொண்டு இருந்தவள் கத்த அதை காதில் வாங்காமல் அடித்துக்கொண்டே இருந்தாள் தமிழ்.
இதற்கு மேல் அடிவாங்க முடியாது என்று நினைத்த பனிமலர்.
"ஏய் நான் சொன்னது தப்பு தான் பணத்துக்காக கல்யாணம் பண்ண நினைக்கவில்லை" என்றாள் பனிமலர்.
அதன் பிறகு அடிப்பதை நிறுத்தியவள் அமைதியாக கட்டிலில் அமர்ந்தாள் தமிழ்.
அவளின் அருகில் உட்கார்ந்தவள் அவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவள் "சாரிடி தமிழ்" என்றாள்.
அவளின் கண்கள் கலங்கி இருப்பதை கண்ட பனிமலர்
" ஏய் என்னடி தமிழ் இது?..." என்று அவளின் கண்களை துடைத்துவிட்டவளின் கைகளை தட்டிவிட்டவள்
"எப்படி டி அப்படி ஒரு வார்த்தை உன் வாயில் வந்தது. உன் பேரில் இருந்த பணத்தை ஒத்த ரூபாய் இல்லாமல் வழித்து கொடுத்தவள், நீ போய் பணத்துக்கு ஆசைபடுபவளா?... உன் அப்பா அம்மா" என்று பேசியவளின் வாயை கை வைத்து மூடிய பனிமலர்
"ப்ளீஸ் தமிழ் அதை பத்தி பேசவேண்டாம் இப்ப உனக்கு அவரை கல்யாணம் பண்ணிக்க நினைக்கறதுக்கு காரணம் தெரியனும் அவ்வளவு தானே சொல்லுறேன் கேட்டுக்கோ" என்று சொல்ல ஆரம்பித்தாள்.
அதே நேரத்தில் தமிழால் ராட்சசன் என்று கூறியவன் ராட்சசனாகத்தான் அமர்ந்து இருந்தான். எதிரில் இருந்தவனின் உடல் முழுவதும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியில் இருந்தான் அவன்.
ஏற்கனவே அங்கு இருந்த தடியர்களின் அடியில் உடல் முழுவதும் இரத்த காயங்களுடன் அமர்ந்து இருந்தவனின் எதிரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கண்கள் ரத்தமென சிவந்து இருக்க அவனையே ஊடுருவி பார்த்துக்கொண்டு இருந்தான் சூர்யபிரகாஷ்.
பிரகாஷ் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் சிவபிரகாஷம் அவர்களின் இரண்டாவது பேரன் சூர்யபிரகாஷ்.
சிவபிரகாஷம், பத்மாவதி தம்பதியரின் ஒரே மகன் அருளானந்தம் அவரின் மனைவி அம்பிகா இருமகன்கள் சந்திரபிரகாஷ், சூர்யபிரகாஷ்.
சிவபிரகாஷம் சிறிய அளவில் ஆரம்பித்த கார்மெண்ட்ஸ் மகன் தலையெடுத்ததும் சென்னையில் பெயர் சொல்லும் அளவுக்கு வளர்த்தார் அருளானந்தம். அவரின் கையில் பொறுப்பு வந்ததும் ஒன்றாக இருந்த கார்மெண்ட் இரண்டாக விரிவு செய்யப்பட்டது.
படிப்பை முடித்து வந்த சந்திரபிரகாஷ் கம்பெனியை இன்னும் விரிவாக்கம் செய்து நிறைய ஆர்டர்கள் பிடித்து நல்ல லாபத்தில் சென்று கொண்டு இருந்தது. தங்கள் மூன்றாவது கம்பெனி நிறுவும் வேலைகள் நடந்து கொண்டு இருந்த நேரத்தில் தனது ME கம்யூட்டர் படிப்பை முடித்து 23 வயதில் இருந்த சூர்யபிரகாஷ்
தன் தாத்தா தந்தை இடம் புதிதாக திறக்கும் கம்பெனியை தன்னிடம் கொடுக்கமாறு கேட்கவும் அதிர்ந்தனர் குடும்பத்தினர்.
பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் படிக்க சொன்னபோது கம்யூட்டர் சயின்ஸ் படித்து வெளிநாடு சொல்ல விருப்பம் என்று தெரிவித்தவன், தனக்கு குடும்ப தொழிலில் விருப்பம் இல்லை என்று சொன்னவன் இன்று வந்து தன்னிடம் கம்பெனி கொடுக்கச்சொன்னால் அதிர்ச்சி வரத்தானே செய்யும்.
அதுவும் தொழிலைப்பற்றி எதுவும் தெரியாதவன் வந்து கேட்கவும் தயங்கினர்.
ஆனால் என் மீது நம்பிக்கை இருந்தால் ஒரு வருடம் என்னிடம் கம்பெனி பொறுப்பு முழுவதும் கொடுங்கள் யாருடைய தலையிடும் இருக்கக்கூடாது என்பதையும் சேர்த்து சொல்லியிருந்தான்.
அவனின் பிடிவாத குணம் தெரிந்த குடும்பத்தினர் அவனிடம் அந்த புதிய கம்பெனியை ஒப்படைக்க அடுத்த ஒரு வருடத்தில் அவனின் குடும்பத்தினரே ஆச்சரியம் கொள்ளும் அளவுக்கு உயர்ந்து இருந்தான்.
அடுத்த ஆண்டு மற்ற இரு கம்பெனியும் இவனிடமே கொடுக்க அதை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் முக்கிய இருபது இடங்களில் இவர்களின் கார்மெண்ட்ஸ் மிகப்பெரிய அளவில் நடந்ததோடு இல்லாமல்
இவர்களின் தயாரிப்புகள் பிரகாஷ் என்பதை குறிக்கும் விதமாக P என்னும் குறியீடுடன் பிரான்ட் உடைகளாக வெளிவந்தன சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அணியும் உடைகளில் இவர்கள் உடை முன்னிலை வகிக்கின்றன.
இவர்கள் உடைகள் இல்லாத கடைகளே இல்லை என்று நிலையில் உயர்ந்து இருந்தனர். பல வெளிநாடுகளுக்கும் இவர்களின் உடை ஏற்றுமதி செய்கின்றனர்.
புதிய உடைகள் அறிமுக செய்ய சினிமா நட்சத்திரங்கள் இவனை தேடி வருவார்கள். அந்த அளவுக்கு உச்சத்தை தொட்டு இருந்தான்.
இவனின் அசுர வளர்ச்சியை கண்டவர்கள் இவனை வீழ்த்த பல சதிவேலைகள் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். அதில் இருந்து தன்னை காத்துக்கொண்டு தான் இருக்கிறான்.
இவனாக யாரிடமும் பகை வளர்த்தது இல்லை ஆனால் அவர்களாக வருபவர்களை இவன் விட்டதும் இல்லை.
இன்றும் அப்படித்தான் காலை ஓட்டத்திற்காக கடற்கரை வந்தவன் தன் பாதுகாவலர்களை தன் பின்னால் வரவேண்டாம் என்று கூறிவிட்டு ஓடிக்கொண்டு இருந்தவனின் முன்னாள் ஒருவன் பின்னால் நாய் துரத்த ஓடிவந்து கொண்டு இருந்தான்.
அவனின் ஓட்டம் இவனை நோக்கி மட்டுமே வந்து கொண்டு இருக்க வருபவனின் நோக்கம் என்ன என்று புரிந்தவன் திரும்பி தன் பாதுகாவலர் பக்கம் ஒரு பார்வை பார்த்து விட்டு அவனை நோக்கி இவனும் ஓடினான்.
அருகில் ஓடி வந்தவன் தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து சூர்யபிரகாஷ்சை குத்தும் முன்பே அவன் கையை வளைத்து திருப்பி இருந்தான் சூர்யா .
சூர்யாவின் பாதுகாவலர்கள் அருகில் வந்ததும் அவர்கள் இடம் அவனை விட்டு விட்டு அவனின் ஓட்டத்தை தொடர்ந்தான். அடுத்த அரை மணி நேரத்திற்கு பிறகு அவன் வந்த போது இரத்தம் வழிய கட்டிப்போட்டு வைக்கப்பட்டு இருந்தான்.
அவனைத்தான் இப்போது கண்கள் சிவக்க பார்த்து கொண்டு இருக்கிறான்.
"சார்... சார்... நான்.... உண்மையை.. சொல்லிடுறேன்" என்று வார்த்தைகள் திக்கி பேசினான் அடிவாங்கியவன்.
அப்போதும் சூர்யாவின் கண்கள் எதிரில் இருந்தவனின் இரத்தம் வடியும் முகத்திலேயே இருக்க
"சார்... PMC கார்மென்ட் ஓனர் ஆகாஷ் தான்" என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவன் நெற்றியில் துப்பாக்கியை வைத்து இருந்தான் சூர்யா.
நீ சொன்னதை நான் நம்பவில்லை என்ற பாவனை அவனிடம் இருந்தது.
"சார்... சார்... அவர் தான் போனமாதம் அவருக்கு கிடைக்க வேண்டிய ஆர்டர் நீங்க தட்டி பரிச்சிட்டிங்க என்று உங்களை பயமுறுத்த சென்னார்" என்றான் உதறலுடன்
இப்போது சூர்யாவின் முகத்தில் உக்கிரம் அதிகமாக துப்பாக்கியால் எதிரில் இருந்தவனின் காலை பதம்பார்த்து இருந்தான்.
" ஆஆஆஆ..." என வலியில் துடித்தவனின் காலில் இருந்து இரத்தம் பீரிட்டது அதை எந்த சலனமும் இல்லாமல் பார்த்தவன் அடுத்த காலுக்கு குறி வைக்க
"ஆஆ... அம்மா.." என்று வலியில் துடித்துக்கொண்டே " சார்... சார்... சொல்லிடுறேன் என்னை சுட்டுடாதிங்க" என்றவன்
" மும்பை RM பேஷன் & எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஓனர் ராகேஷ், முகேஷ் பிரதர்ஸ் தான் உங்களை பயமுறுத்த மட்டுமே செய்ய சொன்னாங்க" என்றான்.
அவனை காலால் எட்டி உதைக்க அருகில் நின்று இருந்த பாதுகாவலர்கள் அவனை தூக்கிச்சென்றனர்.
அங்கிருந்த தன் பிஏ மாதவனை பார்க்க அதுவரை சற்று தள்ளி இருந்தவன் வேகமாக வந்து தன் லேப்டாப்பில் அந்த கம்பெனி பெயரை தட்டியவன்.
" சார் ராகேஷ், முகேஷ் ரெண்டு பேரும் அவங்க அப்பா செய்திட்டு இருந்த பிஸ்னஸை கடந்த ஐந்து ஆண்டுகளாக எடுத்து நடத்திட்டு வராங்க இவங்களின் பிராண்ட் நேம் RM"
" நிறைய பாரின் ஆர்டர்ஸ் பண்ணாலும் முக்கியமான ஆர்டர் இலண்டன் ஆர்டர் தான் கடந்த பத்து வருசமாக அந்த கம்பெனிக்கு வருஷம் ஆயிரம் கோடி ஆர்டர்ஸ் கொடுக்கிறாங்க."
"இப்ப ஐம்பது கோடி ஆர்டர் சரக்கு நாளைக்கு கப்பல் கொண்டு போக ரெடியாக இருக்கு" என்றதும் சூர்யா அவனை ஒரு பார்வை பார்க்க அதன் அர்த்தம் புரிந்தவன் தன்னிடம் இருந்த வேறு ஒரு போனை எடுத்து யாருக்கே அழைத்தவன் " பொருள் நாளைக்கு கப்பல் ஏற்கக்கூடாது" என்று மட்டும் கூறி வைத்தான் மாதவன்.
அடுத்து தன்னிடம் இருந்த லேப்டாப்பை சூர்யா முன் வைத்து லண்டன் கம்பெனி பற்றிய குறிப்புகளை காட்டினான் மாதவன்.
அனைத்தும் பார்த்தவன் "அடுத்த வாரம் இலண்டன் போக டிக்கெட் போட்டுடு" என்றான் சூர்யா.
" ஓகே சார்" என்னும் முன்னே சூர்யா அந்த இடத்தை விட்டு சென்று இருந்தான்.
சும்மா இருந்த சிங்கத்தை சீண்டி விட்டானுங்க இப்ப அந்த கம்பெனி இருந்த இடமே இல்லாமல் போகப்போகிறது என்று நினைத்துக்கொண்டே அடுத்த வேலை பார்க்க சென்றான் மாதவன்.
இந்த ஐந்து வருடங்களில் தொழிலை மட்டும் கற்காமல் அதில் உள்ள நெளிவு சுளிவுகளையும் கற்றிருந்தான் சூரியபிரகாஷ். அவனின் பணிக்கு சிறு இடைஞ்சல் கொடுப்பவர்களையும் அவர்கள் வழிமுறையிலே அவர்கள் தொழிலை இல்லாமல் செய்பவன்.
அவனின் இந்த செயலை குடும்பத்தினர் கண்டித்த போது அவர்களிடம் இருந்து தன்னை விலக்கி கொண்டான் சூர்யபிரகாஷ். ஒரே வீட்டில் இருந்த போதும் தேவைக்கு மட்டுமே பேசினான். தந்தை அண்ணனிடம் சில கம்பெனி பொறுப்புகள் இருந்ததால் தொழில் முறை பேச்சுக்கள் மட்டுமே அவர்களிடம் இருந்தது.
வீட்டில் பாட்டி, தாய் இடம் மட்டுமே சில வார்த்தைகள் பேசுவான். அடுத்து அவன் பேசுவது அவனின் அண்ணன் மகள் ஆறு வயது மகள் காருண்யாவிடம் தான்.
அண்ணி சாருமதி இவனிடம் எதாவது பேசினால் கூட ஆம் இல்லை என்ற ஒற்றை பதில் தான் கொடுப்பான். மற்ற வீடுகளில் உள்ளது போல் தன்னிடம் நட்பாக தன் மைத்துனர் இருக்கவேண்டும் என்று நினைப்பவள் சாருமதி. அவள் கொஞ்சம் கலகலப்பாக இருப்பவள் அவளாக அவனிடம் பேச்சை வளர்க்க நினைத்தாள் அவளுக்கு முறைப்பை கொடுத்து விட்டு சென்று விடுவான் சூர்யா.
இதற்கும் அவள் உறவு முறையில் அத்தை பெண்தான் சிறிய வயதில் இருந்தே தெரியும். அப்போது எல்லாம் நன்றாக கேலி கிண்டல் செய்பவன் தான் வீட்டினருடனும் ஜாலியாக பேசி இருந்தவன் தான், தொழிலில் என்று இறங்கினானோ அன்று முதல் அவனுக்குள் இறுக்கம் வந்திருந்தது.
சந்திரபிரகாஷ்க்கு இருபத்தி ஐந்து வயது முடிந்த போது திருமணம் முடித்துவிட்டனர். இப்போது ஆறுவயதில் காருண்யா இருக்கிறாள்.
சாருமதி குழந்தை பெற்ற போது பட்ட வலியை கண்ட சந்திரபிரகாஷ் ஒரு குழந்தை போதும் என்று சாருமதியிடம் சொல்லிவிட்டான்.
தாய், பாட்டி இன்னொரு குழந்தை பற்றி கேட்டபோது மறுத்தவன் தம்பிக்கு திருமணம் செய்து வையுங்கள் அவன் குழந்தை வந்தால் காருண்யாவுக்கு தம்பியே தங்கையே வரும் என்று கூறிச்சென்றுவிட்டான்.
அடுத்து சூர்யாவிடம் சென்று திருமணம் பற்றி பேசிய போது அவன் அவர்களுக்கு பதில் கூட சொல்லாமல் சென்று கொண்டு இருந்தான்.
நான்கு வருடங்களாக அவனிடம் கெஞ்சியவர்களுக்கு இப்போது அவனின் இருபத்தி ஒன்பதாவது வயதில் தான் சம்மதம் கூறினான். அடுத்த ஒரு வாரத்திலேயே பெண் புகைப்படம் அவன் முன் நீட்டப்பட்டது.
மறுநாள் சொல்வதாக போட்டோவை வாங்கியவன் மறுநாள் மதியம் பாட்டிக்கு சம்மதம் சொல்லியிருக்க உடனே கிளம்பி சென்று நிச்சய தேதியை குறித்து வந்து இருந்தனர்.
அதற்கும் அவனிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை யாருக்கோ என்னும் பாவனையில் சென்றுவிட்டான்.
நிச்சயதார்த்தமும் முடிந்து அடுத்த இரு மாதங்களில் திருமணம் என்று இருவீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.