போதை மருந்தை பாவித்து விட்டு, அதன் பிடியில் வந்தனாவை ஏதும் செய்து இருப்பேனோ என்று அவனுக்கே தோன்றிய தருணம் அது. ஜீப்பில் ஏறி அமர்ந்து கொண்டவன் அருகே ஜீவிதன் அமர்ந்து இருக்க, நிலத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான் அர்ஜுன்.
"ஏதாவது பேசு அர்ஜுன்... நீ தப்பு பண்ணலன்னா இது எல்லாம் எப்படி உன் கார்ல வந்திச்சு?" என்று ஜீவிதனும் கோபத்தை அடக்கிக் கொண்டு தன்மையாக கேட்க,
அவனை ஏறிட்டுப் பார்த்த அர்ஜுனோ, "எனக்கு எதுவும் தெரியல சார், ஒருவேளை போதை பொருள் பாவிச்சு, நான்தான் அந்த பொண்ண இப்படி பண்ணுனேன்னு ப்ரூஃப் ஆச்சுன்னா" என்றவன் ஒரு கணம் நிறுத்தி, எச்சிலை கூட்டி விழுங்கியபடி, "என்னை கொன்னுடுங்க." என்று வசனத்தை முடித்து விட்டு தலையைக் குனிந்து கொள்ள, அவனை அதிர்ந்து பார்த்தான் ஜீவிதன்.
"அர்ஜுன்..." என்று அவன் அதிர்ச்சியுடன் அழைக்க, "நிதானத்துல இந்த வேலை பார்க்கிற அளவுக்கு அர்ஜுன் மோசமானவன் இல்லை. இது எப்படி ஆச்சுன்னு கூட தெரியல. என் மேல யாருக்குமே நம்பிக்கை இல்லை." என்று சொன்னவன் எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு, "இப்போ எனக்குமே இல்லை..." என்றபடி ஜீவிதனை ஏறிட்டுப் பார்த்தான்...
அவன் விழிகள் சிவந்து, கலங்கி இருந்தன...
இதுவரை ஜீவிதனுக்கு அவன் மேல் கோபமும் ஆதங்கமும் இருந்தது. இப்போது அவன் பேச்சில் இருந்து, நடப்பதில் ஏதோ தவறு இருக்கின்றது என்று புரிய, "ராகவி விஷயம்?" என்று கேட்டான்.
அவனை ஆழ்ந்து பார்த்த அர்ஜுனோ, "அவ விஷயத்துல மோசமா நடந்துக்கிட்டேன் தான். அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு அப்படி நடந்துக்கிட்டேன். ஆனா அவகூட சந்தோஷமா தான் கடந்த கொஞ்ச நாளா வாழ்ந்தேன். ஆனா அதெல்லாம் மறந்துட்டு இன்னைக்கு அவ பேசுனதும் மொத்தமா நொறுங்கிட்டேன்.
இத்தனை நாள் அவகூட சந்தோஷமா வாழ்ந்தது எதுவுமே இல்லன்னு ஆயிடுச்சு. எனக்கு இப்போ எதுவுமே வேணாம். இந்த சாட்சில எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனா இந்த தப்பு நான்தான் பண்ணிட்டேன்னு, வந்தனா மட்டும் வாக்குமூலம் கொடுத்துடான்னா என்னை கொன்னுடுங்க சார். அதுக்கு மேல நான் வாழ்ந்து என்ன பயன்?" என்றான்.
மனதளவில் மொத்தமாக நொறுங்கி விட்டான். என்ன உணர்வென்று அவனுக்கு தெரியவும் இல்லை.
ஜீவிதனுக்கு தடுமாற்றம். அவனைப் புரியாமல் பார்த்துக் கொண்டு, "ஜீப்பை எடுங்க." என்று சொல்ல, ஜீப்பும் புறப்பட்டது.
அங்கே இதனைப் பார்த்துக் கொண்டு நின்றவர்களோ, "சக்திவேல் வீட்டு மருமகனா இத பண்ணுனது? அவன் உயிரோட இருக்கவே கூடாது..." என்று வாய்க்கு வந்தது எல்லாமே பேச ஆரம்பித்து விட்டார்கள்.
***
இதே சமயம், மெதுவாக கண் விழித்த பார்த்தீபன் அருகே நின்று இருந்த பைரவி அழுகையுடன் அவனைப் பார்க்க, "அர்ஜுன்?" என்றான் கேள்வியாக.
"போலீஸ் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க. வந்தனாவோட ட்ரெஸ் அவன் கார்லதான் இருந்துச்சு..." என்று சொல்ல, பார்த்தீபன் வலியுடன் கண்களை மூடித் திறந்து, அங்கே தன்னைப் பார்க்க வந்த கஜனைப் பார்த்து, "என்னை மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை..." என்று கை கூப்பி கூனிகுறுகி கேட்டான்.
கஜனோ அவன் கையைப் பற்றி இறக்கிவிட்டு, "ரெஸ்ட் எடுங்க." என்று சொல்ல, "இந்த நாயை நான் பெறாமலே இருந்து இருக்கலாம்." என்று வலியுடன் வந்தது அவன் வார்த்தைகள்.
"நீங்க டென்சன் ஆகாதீங்க." என்று சொல்லி எழுந்து வெளியே வர, அவன் கண்ணில் பட்டது என்னவோ, ராகவி கழட்டி எறிந்த தாலி தாலி தான்...
குனிந்து, அதனை எடுத்து பார்த்து விட்டு, பாக்கெட்டில் வைத்துக் கொண்டே திரும்பியவனை பார்த்துக் கொண்டே, அங்கிருந்த இருக்கையில் தொய்ந்து அமர்ந்து இருந்தான் சக்திவேல்...
அவன் அருகே அமர்ந்த கஜனோ, "அப்பா!" என்று சொல்ல, கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்த சக்திவேல், "ராகவி, விதவை ஆனாலும் பரவாயில்லை..." என்று ஆரம்பிக்க, அவன் கையைப் பற்றி கஜனோ, "முதல்ல விசாரிக்கலாம், என்னாச்சுன்னு வந்தனா சொல்லட்டும்." என்று சொல்லிக் கொண்டு எழ, "வந்தனா...?" என்று தழுதழுத்த குரலில் கேட்டான் சக்திவேல்.
கஜனோ எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு சட்டென அவன் அருகே தொய்ந்து அமர்ந்தவன், "ஒரு அண்ணனா தோத்து போய்ட்டேன்பா..." என்று சொன்னபடி தலையைக் குனிந்து இருந்தவனின் கண்ணீர், அவன் கன்னத்தை நனைத்தது.
அவன் முதுகில் கையை வைத்த சக்திவேலோ, "நீயே தளர்ந்து போனா எப்படிடா?" என்று கேட்க, அவனை ஏறிட்டுப் பார்த்து, "முடியலப்பா... நெஞ்சே அடைச்சு போன போல இருக்கு. இந்த வலி நான் அனுபவிச்சு இருக்கேன், அவ உயிரை மீட்டுட்டேன். அவ எப்போ நிதானத்துக்கு வருவான்னே தெரியல. கோமாவுக்கு போய்ட்டாப்பா... ஆனா இந்த மனவலியில இருந்து எப்படி மீட்டு எடுக்க போறேன்னு தெரியல.
நொறுங்கிடுவா... அழுவா... கதறுவா... இத எல்லாம் எப்படி கடந்து போக போறேன்னு தெரியல. எனக்கு சின்ன வயசுல நடந்ததே இன்னும் என்னால் மறக்க முடியல. அவ எப்படிப்பா இத கடந்து வருவா?" என்று சொன்னவனோ, தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் சக்திவேலை அழுகையுடன் அணைத்துக் கொள்ள, அவன் முதுகை மெதுவாக வருடி விட்டான் சக்திவேல்.
குழந்தையைத் தூக்கிக் கொண்டு சற்று தள்ளி அமர்ந்து, மொத்தமாக உடைந்துவிட்ட கஜனையும் சக்திவேலையும் வலியுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் பல்லவி.
ஒரே நாளில் இந்த குடும்பத்தின் மொத்த சந்தோஷமும் துடைத்தெறியப்பட்டு விட்டதே...