தூரமே தூரமாய் 1
°ஒரு பிரிவு பெரிதாய் என்ன செய்துவிடப் போகிறது?°
____________________________________
மாலை நான்கு மணி.
அடித்து சாய்க்கும் குளிர் காற்றால், கருமை பூசிக்கொண்ட மேகங்கள் வானத்தை சிறை பிடித்திருக்க, அந்தி செம்மை துறந்து மை பூசிக்கொண்டது.
காற்றும் சற்று வேகமெடுத்தது.
கடற்கரை சாலையோரம் உள்ள அந்த நவீன குளம்பியகத்தில் மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்திருந்தவனின் முகத்தில் கொஞ்சமும் இலகுத் தன்மை என்பதே இல்லை. அப்படியொரு இறுக்கம், அழுத்தம்.
முன்பு எப்போதும் இத்தனை கடிமை இல்லை அவனிடத்தில். கோபம் அதிகம் வரும். முரடன் தான். ஆனால், வசீகர முகத்தில் நிலையாய் தேங்கி நிற்கும் சிறு புன்னகை.
இன்று முழுதாய் சிரிக்கவே தெரியாதவனாக... சிரிப்பினையே மறந்தவனாக தோற்றம் கொண்டுள்ளான்.
அவன் ருத்விக். காத்திருக்கிறான். அவனின் காத்திருப்பும் இன்றோடு முற்றுப்பெறுகிறது. முற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவே இந்த சந்திப்பு.
முன்பென்றால் சூழல் கொஞ்சம் மாற்றம் கொண்டதுமே, தான் காத்திருக்கும் நபருக்கு அழைத்து, "வரவேண்டாம்... மழையில் மாட்டிக்கொண்டால் உனக்கு ஒத்துக்கொள்ளாது" என்று சொல்லியிருப்பான்.
கொண்ட அக்கறையும் காணாமல் போய்விட்டதோ? அவன் மட்டுமே அறிவான். அறிந்து வைத்துள்ளான் என்பதும் அவன் கொண்ட ரகசியமே!
'உனக்காக நொடி நொடியாய் ஜென்மம் முழுக்கக் காத்திருப்பேன்' என்று அவன் காதலாய் பிதற்றிய நாட்கள் யாவும் வீண் என்றானது. இந்த நேர காத்திருப்பும் வீண் எனும் வரையறைக்குள் ஆட்படவே போராடுகிறது.
நொடிக்கு ஒரு தரம் மேசையின் மீதிருந்த தன்னுடைய அலைப்பேசியை எடுத்து மணியை பார்த்துக்கொண்டான்.
'திடீரென காலநிலை கொண்ட மாற்றத்தால் தாமதமாகிறதோ?' சிந்தித்தவன், 'எந்நேரமாகினாலும் வந்துவிடு' என்று புலனம் வழி தகவல் அனுப்பி வைத்தான்.
காதலாய் கசிந்துருகிய நாட்களில் நேரும் காத்திருப்பெல்லாம் இனிய படபடப்புடன் கழியும். அதே படபடப்பு இப்போதும். ஆனால் இந்த படபடப்பின் அர்த்தம் வேறு.
சொல்ல வந்திருப்பதை காயப்படுத்தாது சொல்லி செல்ல வேண்டுமென்ற எண்ணம் அவனிடம்.
'காயம்.' நிச்சயம் தன் வார்த்தைகள் கொடுக்கும். விரக்தியாய் முறுவலித்தான்.
'காயத்தின் ரணம் கொடுக்கும் வலியை ஏற்க எப்படியாகினும் திடம் கொடுத்திடு... அவளின் திடத்தினை என்னுடைய வார்த்தைகள் எப்போதும் உருகுலைத்திடக் கூடாது' என பிரார்த்தித்துக் கொண்டான்.
பூந்தூறலாய் மேகம் மண்ணில் தரை இறங்கியது.
காண்ணாடி தடுப்பின் வழியே வெளியே பார்த்தான்.
அவள் தான். வந்துவிட்டாள். தன்னுடைய இருசக்கர வாகனத்தை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு, கண்ணாடியில் தன் முகம் காண்கிறாள். மென் சாரல் துளிகளால் முன்னுச்சி கேசம் நீர் படிந்து சிலுப்பிக்கொண்டிருக்க, மெல்ல காதோரம் ஒதுக்கி, புடவை தலைப்பால் முகத்தை ஒற்றி, தலைக்கு மேல் ஒற்றை கையை வைத்து மழை நீரை தடுத்தவளாக, மற்றொரு கையால் புடவையை தூக்கி பிடித்து நவீன குளம்பியகத்தினுள் நுழைந்தாள்.
அவள் இமையாள். ருத்விக்கின் ஆதியும், அந்தமும் அவளே. சிறிது நேரத்தில் ஆதியும் அந்தமும் முற்றுப்பெற உள்ளது.
இமைக்க மறந்து விழிகள் விரித்து அவளையே பார்த்திருந்தான். இனி எப்போதும் இப்படி பார்க்க முடியாது என்பதால் அகத்தில் ததும்ப ததும்ப அவளின் பிம்பத்தை நிறைத்துக் கொண்டான்.
இனி எப்போதும் அவனுக்கு அவள் கிடைக்கப்போவதில்லை. அதற்கு காரணமும் அவனே!
'பிடித்திருப்பதால் கிடைக்க வேண்டுமென்றில்லை. கிடைக்காது என்பதால் கூட அதிகமாக பிடித்திருக்கலாம்.'
நெஞ்சுக்குள் பெரும் ஓலம்.
வலது கையின் பெருவிரலால் இதயத்தில் அழுத்திக் கொண்டான்.
அவள் அருகே வர பார்வையை திசைமாற்றிக் கொண்டான்.
"சாரிப்பா... காற்று இப்படி அடிக்கும் எதிர்பார்க்கல. நடுவில் தூறல் வேற. லேட்டாகிருச்சு" எனக்கூறிக்கொண்டே அவன் அருகிலிருந்த இருக்கையில் அமர முற்பட்டவளை கை நீட்டி தடுத்திருந்தான் ருத்விக்.
"சிட்..." தனக்கு எதிர் இருக்கையை காண்பித்தான்.
விலகலை காட்டிடத் துவங்கிவிட்டான். அவளால் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவனுக்கு எதிரே அமர்ந்தவள், அவனை ஆராய்வாக ரசித்திட்டாள்.
'இத்தனை மாதங்கள் ஏன் பேசவில்லை? முகத்தில் என்ன புதிதாய் இறுக்கம்?' என உள்ளுக்குள் கேள்விகள் அணிவகுத்தாலும் கேட்டிடாது, பல மாதங்கள் பார்க்க தவமிருந்த தன்னவனின் முகத்தை ரசித்து உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.
அவளது பார்வை அவனை அசைத்துப் பார்த்தது.
மெல்ல தன்னை மீட்டுக்கொண்டான்.
"என்னப்பா இத்தனை நாளா ஒரு மெசேஜ் இல்லை?"
அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
என்ன பேச வேண்டும்... எப்படி சொல்ல வேண்டும்? எல்லாம் வரிவரியாய் மனப்பாடம் செய்துகொண்டு வந்திருந்தான். யாவும் அவள் முகம் பார்த்ததும் மொழி மறந்தவனாய் மனதில் காணாமல் போயிருந்தது.
"மெசேஜ் பண்ணமாட்டிங்களா? உங்கக்கிட்டேர்ந்து கால் வராதான்னு மொபைல் கையிலே வச்சிக்கிட்டு சுத்தின நாட்கள், கடந்து சென்ற மாதங்கள்" என்றாள்.
இரவு முழுக்க நீளும் பேச்சுக்கள்... பகல் முழுவதும் தொடர்ந்த குறுந்தகவல்கள் யாவும் சட்டென்று ஒரு நாள் ருத்விக்கிடமிருந்து நின்று போயிருந்தது.
இவளது அழைப்புகள் யாவும் எடுக்கப்படாமலும், தகவல்கள் யாவும் பார்க்கப்படாமலும் உயிர் துறந்திருந்தது.
"ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறதால் சைட் பலமா இருக்கே?"
உள்ளுக்குள் யோசனையாக இருந்தவனின் பார்வை இமையாள் மீதே. அதை அவன் உணரவில்லை. மனதில் தான் ஒரு யுத்தமே நிகழ்த்திக் கொண்டிருக்கிறானே!
அவளின் கேள்வியில் சடுதியில் மீண்டான்.
"எப்படி இருக்க ருது?"
"ம்ம்ம்... நாட் பேட் (Not Bad)." தொண்டையை செறுமிக் கொண்டான்.
"போஸ்டிங் எங்கே இப்போ?"
அவன் பதில் சொல்லவில்லை.
"சட்டுன்னு காணாமல் போயிட்டிங்க! ஆனால், நம்பிக்கை இருந்துச்சு... என்கிட்ட வருவீங்கன்னு" என்ற இமையாள், அவனின் அமைதியில் பெரும் குழப்பம் கொண்டாள்.
"என்னாச்சு ருது?"
"எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு இமையாள்!"
அவன் சொல்லியதை செவிகள் கிரகித்ததும்,இமையாளின் இதயத் துடிப்பு அதிகரித்தது. கண்கள் நிலைக்குற்றி அவனின் நுனி மூக்கில் நிலைத்தது.
நெஞ்சத்தை தானே நீவிக்கொண்டவளாக மேசை மீது கண்ணாடி குவளையில் வைக்கப்பட்டிருந்த நீரினை எடுத்துப் பருகி ஆசுவாசப்படுத்தினாள். தன் மனதையும் நடுங்கும் உடலையும்.
"பொய் சொல்லாதீங்க ருது. இத்தனை மாதம் கழித்து சந்திக்கிறோம். இப்படியா பயம் காட்டுவீங்க?"
அவள் நம்பாததில் அவன் உணர்ந்ததெல்லாம் அவன்மீது, அவனுடைய காதல் மீது அவள் வைத்திருக்கும் நம்பிக்கையே!
உள்ளுக்குள் சில்லு சில்லாய் நொறுங்கிக் கொண்டிருந்தான். மனதின் ஓலம் விழிகளில் பிரதிபலித்துவிடாமல் காக்க பெரும்பாடுப்பட்டான்.
பக்கமில்லை... பேசிக்கொள்ளவில்லை... இருப்பினும் காதலெனும் பந்தம் இருவருக்குள்ளும் ஆழமாக வேர்பிடித்து... பிரிவென்பதையே உணரவிடமால் வைத்திருந்தது.
இன்று அவன்/அவள் பேசவில்லையா? அழைக்கவில்லையா? தகவல் அனுப்பவில்லையா? ஏதேனும் காரணமிருக்கும். தன்னைப்போல் இருவருக்குள்ளும் அப்படியொரு புரிந்துணர்வு.
அதுவே பல மாதங்கள் அவன் இருக்கின்றானா இல்லையா என்று தெரியாமல் இருந்தபோதும் இமையாளை ருதுவின் மீது கொண்ட காதலில் ஆட்டம் கொள்ளச்செய்யாது, நம்பிக்கையாக அவனுக்காக அவனின் ஒற்றை அழைப்பிற்காகக் காத்திருக்கச் செய்தது.
இமையாள் மீது முதலில் காதல் கொண்டு மனதை வெளிப்படுத்தியது ருத்விக் தான்.
பார்த்த கணம் காதலென்றில்லை. சாலையில் மழையில் மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நனையும் ரோஜாவாக நடந்து செல்பவளை பார்த்ததும் சிறு பிடித்தம். கண்ணுக்கு விருந்தாய் அமையும் அழகின் மீது ஏற்படும் பிடித்தம் போன்றது. அதன் பின்னர் தற்செயலாக அவளை பல இடங்களில் அவனால் பார்க்க நேர்ந்தது. கவனிக்கத் தொடங்கினான். அவளைப்பற்றி மெல்ல மெல்ல யாவும் அறிந்துகொண்டான். ஈர்ப்பு என்பதை கடந்து மனம் காதலென்ற வரையறைக்குள் அடி வைத்திடவும், அவளிடம் சென்று சொல்லிவிட்டான்.
காதலை சொல்லுவதற்காக இமையாளை நேருக்கு நேர் சந்தித்து ருது பேசியது. அதன் பின்னர் இமையாளின் பின்னால் கூட அவன் சென்றது கிடையாது.
தற்செயலாக பார்க்க நேர்ந்தாலும், இதழ் விரிந்ததோ எனுமளவில் புன்னகைத்து கண் சிமிட்டி கடந்திடுவான்.
இமையாளே ஒருமுறை ருதுவை நிறுத்தி,
"உண்மையாவே நீங்க என்னை லவ் பண்றீங்களா?" எனக் கேட்க...
அதற்கு ருது புன்னகைத்தானே தவிர பதில் சொல்லாது மௌனமாக அவளை பார்த்திருந்தான்.
அவனது பார்வையில் அவள் தடுமாற,
"அதிலென்ன டவுட் உனக்கு?" எனக் கேட்டிருந்தான்.
"லவ்வை சொல்லிட்டு ரொம்பவே அமைதியா இருக்கீங்க. பேசவே ட்ரை பண்ணலையே?" என்றாள்.
"மனசுக்கு தோணுச்சு... மிச்ச வாழ்க்கை உன்னோடுன்னு. அடைச்சு வசிக்க முடியல. உன்கிட்ட சொல்லிட்டேன். மனசு லேசாகிடுச்சு. எனக்கு பிடிச்ச மாதிரி உனக்கும் பிடிக்கணும் அவசியமில்லை. பிடிச்சிருந்தால் நீயே வந்து பேசுவன்னு தெரியும்" என்று நிறுத்திய ருது "இப்போ போல" என்றான்.
ருது சொல்வதையே மெல்லிய அதிர்வோடு கேட்டுக் கொண்டிருந்த இமையாள், அவன் இறுதியாக சொன்னதில் சுயம் மீண்டு...
"அப்படியெல்லாம் இல்லை" என படபடக்கும் இதயத்தோடு வேகமாக திரும்பிச் சென்றுவிட்டாள்.
அவளின் இதழோரப் புன்னகையை அவனால் உணர முடிந்தது.
அடுத்த பத்து நாட்களில் அவளே அவனை காதலிப்பதாக அவன் முன் நின்று கொண்டிருந்தாள்.
எட்ட நின்றே மனதால் பக்கம் வர வைத்திருந்தான்.
"வெல்" என்ற ருது, "இந்த இயரோட ஸ்டடிஸ் முடிஞ்சிடும். நெக்ஸ்ட் ஐபிஸ் பாஸ் பண்ணனும். ட்ரீம் அப்படின்னு இல்லை. கொஞ்சம் முரட்டு சுபாவம். கோவம் நிறைய வரும். அதுக்கு போலீஸ் ஜாப் தான் பெர்ஃபெக்ட் தோணுச்சு. சோ, ட்ரை பண்ணலான்னு" என்றவன், "எக்ஸாம் எழுதுறவரை இங்க இருப்பேன். பாஸ் பண்ணிட்டால் ட்ரெயினிங் பீரியட் எந்த ஸ்டேட் போடுறாங்க தெரியாது. மேக்சிமம் டூ இயர்ஸ் இருக்கும். அப்புறம் தான் போஸ்டிங். அதுவும் இந்தியாவுல எங்க போடுவாங்கன்னு சொல்ல முடியாது" என்றான்.
இமையாளுக்கு என்ன கேட்க வேண்டுமென்றே தெரியவில்லை.
"இதெல்லாம் எதுக்குன்னு யோசிக்கிறியா?" எனக் கேட்டவன், "நீ என்னை விரும்புறன்னு தெரியுற வரை என்னைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உனக்கில்லை. ஆனால் இப்போ எல்லாம் தெரியனுமே" என்றதோடு, "இப்போ கரியர் பில்ட் பண்றது ரொம்பவே முக்கியம். கால் பண்ணல, மெசேஜ் பண்ணலன்னு சின்ன சின்ன விடயத்துக்கெல்லாம் ஆர்கியூ பன்ற இம்மெட்சூயோர்ட் லவ்வர்ஸா நாம் இருக்க வேண்டாம். நான் இப்படித்தான்னு உனக்கு முதலிலே என்னைப்பற்றி தெரிவது நல்லது. நான் எங்கயிருந்தாலும் எனக்கானவள் நீ மட்டுந்தான்னு என்னைவிட நீ அதிகம் நம்பனும். அப்போ தான் நம் காதலுக்கே ஒரு அர்த்தமிருக்கும்" என்றான்.
அவன் மீதான வியப்பு அவளுக்கு கூடியது.
அது முதல் மனதால் மட்டுமே நெருக்கம் காண்பித்து காதலுக்கு புது இலக்கணம் ஒன்றை காட்டினான் ருத்விக்.
பயிற்சியில் சேர்வதற்கு முன்பு ஓரிரு முறை இமையாளுடன் வெளியில் சென்றிருப்பான். அதுவும் கோவில் மட்டுமே! இரவில் பேச அவளாக அழைத்தால், அவளுக்கும் ஆசை இருக்குமேயென அவளுக்காக மட்டுமே அவள் பேசும்வரை பேசிடுவான். இமையாளும் அவனின் படிப்பின் மதிப்பறிந்து பல ஆசைகளை விட்டுக்கொடுத்திடுவாள்.
தேர்வில் வெற்றி பெற்று பயிற்சிக்காக ஆந்திரா செல்லவிருக்கிறான் என்ற போதே, முதல் முறையாக தன்னவளின் கையினை இறுகப்பற்றியிருந்தான்.
"இருந்திடுவல?"
ஒற்றை வார்த்தையில் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீரை இமையாள் வெளியேற்றிட, அவளின் பின்னந்தலையில் உள்ளங்கை வைத்து, அவளின் நெற்றி தன் மார்பில் முட்டிட அழுத்தினான்.
"ட்ரெயினிங் முடிந்ததும் கல்யாணம். அதுக்குமேல முடியாது" என்று சொல்லிச் சென்றவன், பயிற்சி காலங்களில் கூட தினமும் ஓரிரு வார்த்தைகள் பேசியபடி இருந்தவன், பயிற்சியின் இறுதியில் மொத்தமாக காணாமல் போயிருந்தவன், இன்று தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று வந்து நிற்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைவிட, நம்பவே முடியவில்லை.
அவளுக்காக அவன் கொண்டிருந்த ஏக்கம், தவிப்பு யாவற்றையும் அவன் சொல்லாவிட்டாலும் அவள் உணர்ந்திருந்தாளே! அதனாலே அவன் வாய்மொழியாக கேட்ட பின்பும், நம்பாது இருக்கிறாள்.
'தன்னுடைய ருது... அவனால் தனக்கு சிறு வலியையும் கொடுத்திட முடியாதே!'
ஆறு மாதங்களுக்கு முன்பு...
"பயிற்சியின் இறுதி கடினமாக இருப்பதால் அழைத்து பேச முடியவில்லை" என்று ஒரு தகவல் அனுப்பியிருந்தான். அது உண்மையும் கூட.
ஐந்து மாதங்களுக்கு முன்பு...
"போஸ்டிங் போட்டாச்சு. உடனே அங்கு வர முடியவில்லை" என அனுப்பியிருந்தான். அன்று அழைத்து அவளிடம் சில நிமிடங்கள் பேசியும் இருந்தான்.
ஆனால் அதன் பின்னர் ருதுவிற்காக இமையளின் காத்திருப்பின் அளவு நீண்டது.
ஒருமுறை அவன் பயிற்சி எடுத்த அகாடமிக்கு அழைத்துக்கூட விசாரித்திருந்தாள். தகவல் அளித்திட முடியாதென நிர்தாட்சண்யமாக மறுத்திருந்தனர்.
அதன் பின்னர் அவனுக்காக, அவனிடமிருந்து ஒற்றை அழைப்பு வந்துவிடாதா என அவள் ஏங்கிய இரவுகளின் நீளம் அதிகம்.
நான்கு மாதங்களுக்கு பின்னர் இன்று அழைத்தவன், அவள் கொண்ட உவகையை கருத்தில் கூட கொள்ளாது, பார்க்க வேண்டுமென இடம், நேரம் சொல்லி வைத்திருந்தான்.
"வேலைப்பளு காரணமாக பேச முடியாது இருந்துவிட்டேன்" என்று காரணம் சொல்லி தன்னுடைய கையினை பற்றிக்கொள்வான், "ஐ லவ் யூ லேஷஸ்" என்று காதலாக உருகுவான் என பல கனவுகளோடு தன்னவனை எதிர்நோக்கி வந்தவள் நிச்சயம் அவனிடமிருந்து வந்த இப்படியானப் பேச்சுக்களை ரசிக்கவில்லை.
"பொய்யாவே இருந்தாலும் நீங்க சொல்லும்போது வலிக்குது ருது."
இமையாளின் உடைந்த குரலில் ருது உடைந்துப்போனான்.
"பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை இமையாள்."
எப்போதும் 'ஐ லேஷஸ்' என்று குரலிலே உருகுபவன், இன்று இமையாள் என்பதில் கொடுத்த அழுத்தம் அவளை நடுங்கச் செய்தது.
வலிக்க வலி கொடுக்கும் நிகழ்வு ஒன்று நடைபெற இருக்கிறது என்பதை அவளின் ஆழ் மனம் வலியுறுத்தியது.
கலங்கிய கண்கள் கரை உடைக்க சட்டென்று கன்னத்தை துடைத்திருந்தாள்.
ஐந்து வருட நேசம்... ஐந்து நொடிகளில் கானலாக்கியிருந்தான்.
"மேரேஜ் ஆகி ஃபைவ் மன்த்ஸ் ஆகுது. நவ், ஷீ இஸ் பிரெக்னென்ட்." தொண்டை அடைத்த போதும், சிறு பிசிறின்றி சொல்லியிருந்தான்.
"ருது." கடினப்பட்டு அவளின் பூவிதழ்கள் வறண்டு ஒலித்தது.
"நான் ஏதும் தப்பு பண்ணிட்டனா ருது? அதுக்காக பொய் சொல்றீங்களா?"
இமையாளுக்கு அவனால் தன்னைத்தாண்டி ஒரு பெண்ணை பார்வையால் கூட தீண்டிட முடியாதென்கிற அசைக்க முடியாத நம்பிக்கை.
'எதுக்குடி இத்தனை நம்பிக்கை?' உள்ளே மருகினான்.
"பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை இமையாள்." முன்பைவிட அதீத அழுத்தமாகவும், அடர்த்தியாகவும் மொழிந்தான்.
"நிஜமாவா?"
அவனுக்கு அய்யோ என்றானது.
அவனது பார்வையில் என்ன கண்டாளோ?
"ஹேப்பி மேரிட் லைஃப்" என்று இருக்கையிலிருந்து எழுந்துகொண்டாள்.
"அழகான காதலை காட்டியதுக்கு நன்றி" என்று நடந்தவள்,
திரும்பி அவனை ஏறிட்டாள்.
இமையாள் எழுந்தது முதல் ருது அவளை அசையாது பார்த்திருந்தான். இந்நொடியும்.
"நீங்க சொல்றது உண்மையாவே இருக்கட்டும்" என்றவள், தன் இடது பக்க நெஞ்சத்தில் உள்ளங்கை வைத்து தேய்த்தவளாக... "இங்க பொய் சொல்றீங்கன்னு தோணுது" என்றுவிட்டு கன்னம் உருண்ட நீரோடு விறுவிறுவென வெளியேறிவிட்டாள்.
மழையில் நனைந்தபடி செல்லும் அவளின் உருவத்தை வெறிக்க பார்த்திருந்தான். கண்ணாடி தடுப்பைத் தாண்டி, மழை நீருக்குள் ஊடுருவியவளை அவனின் கண்கள் காண தவித்தது. முடியவில்லை. கலங்களாய் சிதறிப்போனாள்.
இருக்கையில் பின் தலை சாய்த்து இமைகளை மூடியவனின் விழியோரம் கண்ணீர் கசிந்தது.
இமையாள் ஏன் இப்படியென்றோ, என்னை ஏமாற்றிவிட்டிர்கள் என்றோ, அவனின் சட்டடையை பிடித்து உளுக்கியிருந்தாலோ அவனுக்கு இத்தனை வலி ஏற்பட்டிருக்காதோ?
மொத்தமாக நிலைகுலைந்து தவித்தான்.
காதலை சொல்லியதும் அவனே! காதலை உடைத்ததும் அவனே!
காதலின் வலியை சுமக்க இருப்பவனும் அவனே!
ருது திருமணம் ஆகிவிட்டது என்பதையே நம்ப முடியவில்லை. இதில் அவன் மணம் செய்துகொண்ட பெண் தாய்மை அடைந்துள்ளாள் என்பதை முற்றிலும் ஏற்கவே முடியவில்லை.
ருதுவின் முன்பு தைரியமாகக் காட்டிக்கொண்டு வந்துவிட்டாள்.
ஆனால் அவளால் நிலைகொள்ள முடியவில்லை. அவளின் கைகளில் நடுக்கம். வண்டியில் பிரதிபலித்திட, எதிரே வந்த வாகனத்தை கவனியாது அதனுள்ளே விட்டிருந்தாள்.
மழைநீரில் குருதி கலந்து ஓடியது.
"லேஷஸ்" என்கிற ருதுவின் ஓலம் காற்றெங்கும் பரவியது.
'யாரை நீ அதிகம் தேடுகிறாயோ அவர்களின் தேடல் நீயாக இருக்கமாட்டாய்.' நிதர்சனம்.