அத்தியாயம் 3
சாளரத்தின் வழியே சில்லென்று காற்று அவள் மீது பட்டும் படாமல் தீண்டிக் கொண்டிருக்க, வானையே உள்ளிருந்தபடி வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் அமிர்தவர்ஷினி. நேற்று நடந்த கூடலில் சிவந்திருந்தது பெண்ணவளின் வதனம். கழுத்தில் மங்கள நாண் பளிச்சென்று மிளிர்ந்துக் கொண்டிருக்க, மகிழ்ச்சியில் இருந்திட வேண்டியவளுக்கோ, மனம் முழுவதும் பாரம் உழன்றுக் கொண்டிருந்தது.
ஆசைப்பட்டவனை மணம் முடித்த போதும் பெண்ணவளின் மதி முகத்தில் கலக்கம் தோன்ற ஒரே காரணம், அவளது திருமணம் காதல் திருமணம் என்பது மட்டுமே. பெற்றோர்களின் ஆசியோடு தன் திருமணம் நடக்கவில்லையே? என்ற ஏக்கம் திருமணமாகி ஒரு மாதம் கடந்தும் இருக்க, அவளது மலர்ந்த விழிகளுக்குள் உவர் நீர் சுரந்திருந்தது.
பெற்றெடுத்த தந்தையும், தாயும் அவள் மீது வெறுப்பை உமிழ்ந்ததும், என்றும் வர்ஷி என்று உரிமையுடன் சண்டையிடும் தம்பியின் மௌனமும் அவளது மனக் கண்களில் தோன்ற, விழுக்கென்று அவளது கண்களிலிருந்து கண்ணீர் விழுக, அந்நேரம் திடீரென்று அவளது இடையில் பதிந்த அவளவனின் கைகள் தந்த அணைப்பில், தன் கண்ணீரை மறைத்தவளது உடலில் சிறு அதிர்வு தோன்றி மறைந்தது.
"ப்ச் விடுங்க.." என்றவள் சிணுங்க, அப்படி சொல்லிவிட்டால் விடுபவனா அவன்?
"என் பொண்ணு சும்மா இருந்தாலே விடமாட்டேன். இப்படி அழுதா விடுவேனா?" என்றவனின் கூற்றில் அவளது முகம் அதிர்ச்சியில் விரிந்தது. முகம் மறுபுறம் திரும்பி இருந்தும் எவ்வாறு இவர் கண்டு கொண்டார்? என்ற அதிர்ச்சி அவளது நயனங்களில் தெரிய, அதைக் கண்டு அவளவனது முகத்தில் சிறு முறுவல் அழகாய் மலர்ந்தது.
"ஹேய் பொண்ணு ரொம்ப யோசிக்காதடி, போலீஸ்காரன் அப்படி தான் பட்டுனு கண்டுபிடிப்பேன்." என்று கூறிக்கொண்டே தன்புறமாக அவளைத் திருப்பினான் அவன்.
தன்னவனை நிமிர்ந்து பார்த்தவளோ, அவனது கைகளை பிடித்து தன்புறமாக காட்டியபடி தன் பார்வையாலே அவனது கைகளில் ஈரமாக விழுந்திருந்த தனது கண்ணீரினை சுட்டிக் காட்டினாள். அவன் அவளைப் பிடித்த போது மறைக்க முயன்ற கண்ணீரின் ஒரு துளி அவனது கைகளில் பட்டென்று விழுந்திருக்க, அவளது கண்களும் அதனைக் கண்டுக் கொண்டது.
"இப்படி தானே?" என்றாள் புருவம் உயர்த்தி, அவளது சாதுர்யத்தைக் கண்டு புன்னகைத்தவன், "சரியான கேடி பொண்ணு." என்று அவளது நெற்றியில் முட்டினான்.
"போலீஸ்காரர் பொண்டாட்டியாக்கும். இதகூட கண்டுபிடிக்கலைனா எப்படி?" என்று மீண்டும் அவனது தலையை இவள் முட்டிவிட்டு கூற, தன் வெண்பற்கள் தெரிய புன்னகைத்தான் நிரல்யன். அமிர்தவர்ஷினியின் காதல் கணவன்.
தனக்கே உரிய தோரணையும், கம்பீரமும் நிறைந்தவனது இரும்பு திரையை விலக்கி அவனது மனதில் நுழைந்த பெண் அமிர்தவர்ஷினி. முதல் சந்திப்பில் அவனது மனதில் இவள் பதிந்திருக்க, இரண்டாம் சந்திப்பிலேயே அவளிடம் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தான் நிரல்யன். அவனது அதிரடியில் மிரண்டவள், பேயைக் கண்டதுப் போல அவனை மிரட்சியுடன் பார்த்தபடி தெறித்து ஓடியிருந்தாள்.
அன்று அவளைக் கண்டு புன்னகைத்தவன் தான். அந்த புன்னகை மற்றும் அவனது மாறாத நேசம் கொண்டே அவள் மனதிலும் இடம் பெற்றவன், அவளது வீட்டில் பெண் கேட்க, காவல்துறையைச் சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்தினால் மறுத்திருந்தனர் அவர்களது பெற்றோர். அதுமட்டுமின்றி அவரது வரட்டு கௌரவம் கூட காரணமாகி போக, அவசர அவசரமாக வேறு ஒரு வரனை அவளுக்காக பார்த்திருந்தனர். ஆதலால் வேறு வழியின்றி நடந்தது தான் இவர்களது திடீர் திருமணம்.
தன்னவளது முகத்தை தனது இருகரங்களால் ஏந்தியவன், "ஹே பொண்ணு எதுக்கு இந்த அழுகை? உனக்கு நான் இருக்கேன். நான் பார்த்துக்குறேன். சீக்கிரமே உங்க அப்பா அம்மா அப்புறம் உன் சிடுமூஞ்சி தம்பி மூணு பேரையும் உன்னோட சேர்த்து வைக்குறது என் பொறுப்பு." என்றான் உறுதியாக.
"எதுவும் மாறாதுப்பா. அப்பா பத்தி தான் உங்களுக்கே தெரியுமே? ஆனால் என் தம்பி ஒரு வார்த்தை கூட என்னோட பேசலை. அவன் பார்த்த பார்வை இருக்கே? அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு."
"அமிர்தா அவன் ஒரு ஆளுனு இப்படி ஃபீல் பண்ற? மனசுல பெரிய சண்டி வீரன்னு நினைப்பு அவனுக்கு." என்றான் எள்ளல் தொனிக்கும் குரலில். முதன்முதலாக பெண் கேட்க சென்ற போதும் கூட, சாண்டில்யனுக்கும் நிரல்யனுக்கும் இடையில் பார்வையாலே யுத்தம் நடந்தேறியது அல்லவா? அதன் தாக்கம் தான் நிரல்யனது சீண்டல்.
"நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் என் தம்பி சண்டி வீரன் தான். அவனை எதாவது சொன்னீங்க?" என்றவள் ஒற்றை புருவத்தை உயர்த்த,
"பார்ரா.... தம்பியை சொன்னதும் கோபம் வந்திடுச்சோ என் பொண்டாட்டிக்கு...." என்று கடைசி வார்த்தையில் அழுத்தமிட்டுக் கூற, அவளது கோப முகத்தில் நொடியில் வெட்கம் பிரதிபலித்தது.
"போங்க நிரல்." என்றவள் அவனை விட்டு விலகி வர எத்தனிக்க, அவளது இடையை சுற்றி வளைத்தவன், தன்னோடு சேர்த்தபடி இறுக அணைத்துக் கொண்டான். அவனது தீண்டுதலில் பெண்ணவளது தேகம் சிலிர்த்து அடங்கியது. அவனது கைகளோ அவளது மென்மையான சேலை விலகியிருந்த இடையை வருடிக் கொடுக்க, தன்னவனின் செயலில் இன்ப அவஸ்தையில் நெளிந்தாள் பெண். அவனோ, "சோ சாஃப்ட்." என்று கிறக்கமாக உரைக்க, "விடுங்க." என்று வெட்கத்தில் சிவந்தபடி உரைத்தாள் அமிர்தா.
நிரல்யனோ அவளது வெட்கத்தை ரசித்தபடி பெண்ணவளின் கழுத்தில் முகம் புதைத்தான். அவனது சூடான மூச்சுக்காற்று அவளது வெண்கழுத்தில் பட்ட நொடி சிவந்து போனது அவள் தேகம். வெட்கமும் பெண்ணவளின் முக சிவப்பும் போட்டி போட்டுக்கொண்டு தோன்ற, கழுத்தில் பதித்த தன் முகத்தை நிமிர்த்தி அவளைக் கண்டவனது பார்வை வெகுவாக அவளை ரசித்தது.
"இப்படி எல்லாம் வெட்கப்பட்டா, எப்படி என் பொண்டாட்டியை விட முடியும்?" என்றவன் அவளையே குறுகுறுப்பாய் பார்க்க, அவனது பார்வையில் நெளிந்தவள், 'இப்படி பார்த்தே இம்சை பண்றாரே' என்று மானசீகமாக மனதில் புலம்பினாள். அவளது செயலைக் கண்டு லேசாக புன்னகைத்தவன், அதற்கு மேல் அவளை சீண்டாமல் அவளது இடையிலிருந்து கைகளை எடுத்திருக்க, 'அப்பாடா' என்றிருந்தது அவளுக்கு.
"உங்க அப்பா அம்மாவை கன்வின்ஸ் பண்ண செம ஐடியா என்கிட்ட இருக்கு." என்றவன் அவளைப் பார்த்துக் கொண்டே கூறியதும், அவளது முகத்தில் ஆர்வம் தோன்ற, "என்ன ஐடியா?" என்றாள் உற்சாகமாக.
சுற்றி முற்றி பார்த்தவன், "காத காட்டு." என்று ரகசியம் போல் உரைத்த நொடி, அவளும் அவனுக்கு பக்கவாட்டாக நின்று காதினைக் காட்ட, அவன் கூறிய பதிலில் சிவந்தவள், அவனது காலை ஓங்கி மிதித்தாள். அவளது செயலில் அவன் பிடி விலகியிருக்க,
"போடா நீயும் உன் ஐடியாவும்." என்றாள் அமிர்தா முறைத்துக் கொண்டே.
"என்னடி பொசுக்குனு மரியாதை இல்லாமல் பேசிபுட்ட? நியாயப்படி, நீ ச்சீ போங்கனு தான் வெட்கப்படணும்." என்று பாவமாக உரைத்தவனை, கோபமாக உறுத்து விழித்தவள்,
"அடிக்காமல் விட்டனேனு சந்தோஷப்படுங்க. வந்துட்டாரு ஐடியா சொல்ல." என்றவள் அங்கிருந்து சென்றிருக்க,
"பொண்ணு நில்லுடி?" என்றவன் அழைத்த அழைப்பு அவளை எட்டும் முன், இவனுக்கு அழைப்பு வந்திருந்தது கைபேசியில்.
"சொல்லுங்க தணிகாசலம்."
"முக்கியமான கேஸ் விசயமா இன்ஸ்பெக்டர் ஐயா உங்களை வர சொன்னாரு சார்." என்று மறுபுறம் தொடர்பிலிருந்த ஏட்டு கூறியிருக்க,
நிரல்யனின் முகத்தில் யோசனை ரேகை படிய, "சரி வரேன்." என்றவன், விரைந்து தயாராகியபடி, அமிர்தாவிடம் விடைபெற்று சென்றான். தன் கணவனை வழியனுப்பியவள், வீட்டிற்குள் நுழைந்திருக்க, அந்நொடி கண்ணாடி உடைந்த சத்தம் அவளது செவிகளை அடைந்தது.
பதட்டத்துடன் உள்ளே சென்றவள், நாலாபுறமும் கண்களை சுழலவிட, பூனை ஒன்று சாளரத்தின் வழியாக குதித்தபடி ஓடிச் சென்றது. "உன் வேலை தானா? என்னத்த இது உடைச்சிட்டு போகுதோ?" என்று வாய்விட்டு புலம்பியவள் கீழே பார்க்க, அவளது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.
அங்கு கீழே உடைந்துக்கிடந்தது என்னவோ, அவளும் அவளது தம்பியும் இருக்கும் சிறிய புகைப்பட ஃப்ரேம். அவளுக்கு மிகவும் பிடித்த புகைப்படமும் கூட. அதை கண்டதுமே அவளுக்கு பதட்டம் அதிகரிக்க, கீழே அமர்ந்தவள் கண்ணாடி சில்லை நீக்கியபடி தனது தம்பியின் புகைப்படத்தை பதட்டம் சிறிதும் குறையாமல் பார்த்தாள்.
அதில் சிரித்த முகத்துடன் அவளை அணைத்தபடி நின்றிருந்த தம்பியைக் கண்டவளுக்கு, கண்கள் கலங்கிப் போனது. அவளது கண்ணீர் அவனது புகைப்படத்தில் விழ, பெண்ணவளின் உதடுகளோ, "சாண்டில்யா." என்று அவனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ? என்ற அச்சத்தில் உரைக்க, அமிர்தாவின் இதயமோ பயத்தில் வேகமாக துடித்தது.
இங்கு அதைவிட பயத்திலும் பதட்டத்திலும், இருந்தனர் விதுரனும் சாண்டில்யனும். ஏற்றுக் கொள்ள இயலாத இழப்பு ஒரு புறமிருக்க, அந்த மனிதன் உரைத்த செய்தி வேறு இடியாக தலையில் இறங்க, அவ்விடம் நடக்கும் மர்மம் அறியாது தவித்துப் போய் அமர்ந்திருந்தான் சாண்டி.
வீட்டில் நடந்த பிரச்சினையில் விரக்தியில் இருந்தவனுக்கு அடுத்தடுத்து வந்தவை அனைத்தும்
சோதனைகளே. அக்காவின் காதல் திருமணம் வீட்டையே உலுக்கியிருக்க, அதிதியின் பிரச்சினை அவனைப் பாடாய் படுத்தியிருக்க, இதோ அடுத்த சோதனையும் வந்துவிட்டது. வருணை எண்ணி கலங்கவா? இல்லை மற்றவர்களுக்கு ஏதேனும் நேர்ந்திடுமோ?என்று கவலைக் கொள்வதா? என்று பதில் தெரியாத கேள்விகளுக்கு விழி பிதுங்கி போய் அமர்ந்திருந்தவனுக்கோ, பழைய நினைவுகள் அனைத்தும் மனத்திரையில் வந்து சென்றது.
வருண் விதுரன், மாதங்கி, அதிதி மற்றும் சாண்டி ஐவரின் நட்பும் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே தோன்றியிருக்க, அதிதியிடம் மட்டும் நட்பில் தொடங்கிய உறவு காதலாக மலர்ந்திருந்தது. காதல் தந்த சுகத்தில் இருவருமே லயித்திருந்தனர். இந்நிலையில் தான் அதிதியின் திருமண பேச்சுக்கள் வீட்டில் எழுந்தது.
"சாண்டி, என் டாட் கிட்ட நம்ம லவ் பத்தி சொல்லிட்டேன். டாட் உன்னை மீட் பண்ணனும்னு சொல்றாரு. சீக்கிரமே டாடிகிட்ட வந்து பேசுடா." என்று ஆர்வத்துடன் கூறுபவளை காதலோடு பார்த்தான் சாண்டில்யன்.
அதிதியின் பெற்றோர்கள் இன்றைய நாகரீக வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்கள் என்பதால் எளிதாகவே எடுத்துக் கொண்டனர். ஆனால் சாண்டில்யனின் வீட்டில் அவ்வாறு இல்லை. பாரம்பரியம், கௌரவம் இது தான் அவர்களது வீட்டினருக்கு மிக முக்கியமானதாக இருக்க, ஏற்கனவே அக்காவின் காதல் விவகாரம், அவ்விடம் பூகம்பம் போல் சென்றுக் கொண்டிருந்தது. அதை எல்லாம் மனதில் வைத்தவன்,
"அதி கொஞ்சம் வெயிட் பண்ணு பேபி. மொதல்ல எங்க வீட்டுல இருக்க பிராப்ளம் சரியாகட்டும். அப்புறம் உங்க வீட்டுல வந்து பேசுறேன்." என்றான் நிதானமாக.
"ப்ச் சாண்டி, ஜஸ்ட் டாட் கூட மட்டும் பேசு ப்ளீஸ்." என்றவள் கெஞ்சுதலாக உரைத்த நொடி, அவள் உதட்டை பிதுக்கிக் கொண்டு கூறிய பாவனையிலேயே எப்போதும் போல அவளிடம் விழுந்தான் சாண்டி.
"ஓகே மை டியர் பேபி." என்றவன் அடுத்த நொடியே மறுப்பின்றி கூற, அவனை தாவி அணைத்திருந்தாள் அதிதி. அவளது தலையை வருடியவனோ, பெண்ணவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டிருக்க, அவளும் பதில் முத்தம் அவனது கன்னத்தில் கொடுத்திருந்தாள். அன்றைய அணைப்பு தான் இருவருக்கும் கடைசி அணைப்பாக இருக்க, அதன்பின் விதி அவர்களது வாழ்வில் பெரிதாக விளையாடியது.
அதிதியின் தந்தையை சந்திக்கும் நாளில் தான், சாண்டில்யனின் அக்காவின் திடிர் திருமணம் நடந்தேறியது. வீட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் அவன் எவ்வாறு செல்வான்? தந்தையுடன் அதிதி வெகுநேரம் காத்திருந்து, தந்தையிடமிருந்து அவளுக்கு அவப்பெயர் கிடைத்தது தான் மிச்சம்.
அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து சாண்டில்யனும் அதிதியும் சந்திக்க, தனது கோபத்தை அவனிடம் மொத்தமாகக் காட்டினாள் அதிதி.
"என்ன நடந்துச்சுன்னு முழுசா தெரியாமல் பேசாத அதிதி" என்றவன் உறுத்து விழிக்க,
"தெரிஞ்சதுனால தான் பொறுமையாக பேசுறேன் சாண்டி. ஒரு போன் கால் கூட பண்ணலை நீ? அட்லீஸ்ட் இதுதான் பிரச்சினைனு சொல்லியிருக்கலாம். எத்தனை கால் நான் உனக்கு பண்ணேன்னு தெரியுமா?..." என்றவள் கூறும் போதே அவளது முகத்தில் வேதனையின் வடுக்கள் அப்பட்டமாக தெரிய, நிதானித்தவள் மூச்சினை இழுத்து விட்டபடி, "சரி முடிஞ்சது பேசி ஒன்னும் ஆகப் போறதில்லை. எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்? இப்போவே பதில் சொல்லு சாண்டி. எனக்கு இப்போ கூட ஓகே தான்" என்றாள் உறுதியாக.
"வாட் அதிதி என்ன பேசுற? ஆர் யூ மேட்? எங்க வீட்டுல என்ன பிரச்சினை போகுதுனு தெரிஞ்சும் இப்போ இப்படி கேட்குற? உனக்கு யாரை பத்தியும் கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. ஓடி போய் கல்யாணம் பண்ணா வீட்டுல எத்தனை பிராப்ளம் வரும்னு கண்கூடா பார்த்தவன் நான். இப்போ நீ பேசுறது ரொம்ப செல்பிஸ்ஸா இருக்கு"
"வாவ் நான் முட்டாள் தான் சாண்டி. உன்னையே நம்பிட்டு இருந்தேன்ல முட்டாள் தான் நான். உங்க அக்காக்கு இருக்க தைரியம் கூட உனக்கு இல்லையா?"
"ஸ்டாப்பிட் அதிதி. எடுத்தோம் கவுத்தோம்னு செய்றதுக்கு இது ஒன்னும் விளையாட்டு இல்லை. வாழ்க்கை... எங்க அப்பா அம்மா மனசு நார்மல் ஆகட்டும். அப்புறம் மெதுவா பேசுவோம்."
"நினைச்சேன்டா. எங்க அப்பாவும் இததான் சொன்னாரு. நீ இப்படி தான் சொல்வேனு. கோபம் மட்டும் இருந்தால் பத்தாது? தைரியம் வேணும். தைரியம் இல்லாத உன்னை போய் காதலிச்சிருக்கேன் பாரு என்ன சொல்லணும்." என்றவள் கோபமாக பேசிய கணம் கைகளை நீட்டியிருந்தான் சாண்டி. அவனது அந்த செயலைக் கண்டு பயத்தில் அதிர்ந்தவள் பார்க்க, ஒருபுறம் மழை வேறு பொழிந்தது.
தைரியம் இல்லாதவன் என்று நினைத்துவிட்டாளே? தன்னை காதலித்ததே தவறு என்கிறாளே? என்ற கோபம் மட்டுமே அவனை கை ஓங்க வைத்தது. இருந்தும் காதல் கொண்ட மனம் அடிக்கவிடாமல் தடுத்து பிடித்திருந்தது.
"என்ன அடிக்க உனக்கு மனசு வருதா சாண்டி. நீ முன்ன மாதிரி இல்லைடா. மாறிட்ட..." என்றவளது கண்ணீரை மழைநீர் மறைத்தது.
"மாறிட்டேன்ல அப்புறம் இன்னும் ஏன் நிற்குற, போடி...." என்றவன் கோபத்தில் கத்த,
"அப்போ நான் உனக்கு வேண்டாமா? உன் காதல் பொய்யா சாண்டி?" என்றவள் கேட்ட நொடி ஏற்கனவே கோபத்தில் நின்றவனுக்கு கோபம் சுள்ளென்று பாதம் தொடங்கி உச்சந்தலை வரை ஏறியது.
"ஏய் கடுப்பேத்திட்டு இருக்காத? எங்க உன்னை அடிச்சிடுவேனோனு பயமா இருக்கு போடி இங்க இருந்து." என்றவன் கர்ஜிக்க, அவனது சிவந்த விழிகளைக் கண்டு அதிர்ந்தாள் அதிதி.
"போதும் சாண்டி. இனி நீ கோபப்பட வேண்டிய அவசியமே இல்லை. நான் போறேன். நமக்குள்ள இனி எதுவுமே இல்லை." என்றவள் விழி நீர் கலங்க கூறினாலும், அவள் மனமோ, 'போகாதனு சொல்லு சாண்டி.' என்று துடித்தது.
ஆனால் அவனோ எதுவும் பேசாது கை முஸ்டியை இறுக மடித்துக் கொண்டு நிற்க, அவனையே வலியுடன் பார்த்தாள் அதிதி.
"சாண்..." என்று அவள் உதிர்க்கும் முன்னர் கை நீட்டி தடுத்தவன், "அதுதான் ஒன்னும் இல்லைனு சொல்லிட்டியே கிளம்பு. டைம் பாஸ்க்கு லவ் பண்ணா இப்படி தான் சொல்லத் தோணும்." என்று இவனும் வார்த்தையை விட, அந்த வார்த்தை அவளை முழுவதும் காயப்படுத்தியிருந்தது.
"ஐ ஹேட் யூ சாண்டி. ஜஸ்ட் பிரேக் அப்." என்று கோபத்தில் உரைத்தவள், கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி அங்கிருந்து வேகமாக சென்றாள்.
தன்னிலையைப் பற்றி புரிந்துக் கொள்ளாது சுயநலமாக பேசுபவளைக் கண்டு கோபம் கொண்டவன், மழையில் நனைந்தபடி, "அதிதி" என்று பற்களை நறுநறுவென கடித்தபடி கத்தினான். இருவருக்குமே கோபம் கண்களை மறைத்திருக்க, அங்கு ஊசலாடியது என்னவோ இருவரது காதல் மட்டுமே.
கடந்த சில வாரங்களாக கோபத்துடனே உழன்றுக் கொண்டிருக்கும் தன் நண்பனின் மனதை சரி செய்திடவும், மீண்டும் அதிதி, சாண்டில்யனை சேர்ப்பதற்காகவுமே அவனது நண்பர்கள் மூவரும் இருவரிடமும் தனிதனியே வெவ்வேறு காரணங்களை கூறி வெளியே அழைத்து வந்திருக்க, அதிதியைக் கண்டதும் கோபம் கொண்டான் சாண்டி. பின் அவனை சமாதானம் செய்து காரில் அழைத்து வரும் வழியில் தான் அவர்களது மொத்த பயணமும் திசை மாறியது.