கனவிலே மிதக்கும் விழிகள்
அத்தியாயம் - 1
ஆதவனின் அக்னி கரங்கள் தனது உக்கிரம் மொத்தத்தையும் காட்டும் உச்சி வெயில் பொழுது….
தனது அருகில் அமர்ந்திருந்த சதிஷின் தொடையை கிள்ளி "டேய் என்னடா இன்னுமா டைம் ஆகலை' எனக்கு ரொம்ப பசிக்க ஆரம்பிச்சிடுச்சு… அது புரியாம சைன்ஸ் சார் வேற, முடிக்காமல் அவர் பாட்டுக்கு பாடம் நடத்திக்கிட்டே போறாரு... பசியில் காதெல்லாம் அடைத்து ஏதோ ஊமைப்படம் பார்க்கிற மாதிரி இருக்குடா" என்றான் ரமேஷ் .
"இந்த கருப்பன் எங்க போய் தொலைஞ்சான்னு தெரியலை, இன்னும் மணி அடிக்காம... இன்னைக்கு வேற எனக்கு பிடிச்ச சாப்பாடு" என வயிற்றை பிடித்து கொண்டு ஜன்னல் வழியாக தெரியும் மணி அடிக்கும் இரும்பு தட்டு தொங்கும் இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் ஏழாவது படிக்கும் ரமேஷ்.
"டேய்..இன்னைக்கு திங்கட்கிழமை தானே டா, அப்படினா இன்னைக்கு என்ன சாப்பாடு" ? என கேட்ட சதிஷை பார்த்து "ஏண்டா ! என்ன சாப்பாடுன்னு கூட உனக்கு தெரியாதா...? நீயெல்லாம் எப்படி தான் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்ககுற..? எனக்கெல்லாம் எந்த நாளில் எந்த சாப்பாடுன்னு மனப்பாடமா தெரியும்" என பெருமையாக யூனிஃபார்ம் காலரை தூக்கி விட்டுக்கொள்ள…
சதிஷோ "நீ சரியான சாப்பாடு ராமன்' நான் என்ன உன்ன மாதிரியா"...? என நண்பர்கள் இருவரும்...அங்கு ஒருவர் உயிர் போக பாடம் எடுத்துக் கொண்டிருப்பதை கண்டுகொள்ளாமல் தங்களுக்குள் சண்டை போட்டு கொண்டிருந்தனர்.
பின்னர் சற்று நேரத்திலேயே தங்கள் சண்டையை மறந்து…காலையில மட்டும் ஒன்பது மணிக்கு முன்னாடி சீக்கிரமா மணி அடிச்சிடுறாங்க, ஆனால் மதியம் சாப்பிடும் போதும், சாய்ந்திரம் வீட்டுக்கு போகும் போது மட்டும் தான் எப்பவும் இப்படி லேட் ஆகுது.. முதல்ல இந்த கருப்பனை ஒரு வழி பண்ணனும் டா. அவன் தான் எல்லாத்துக்கும் காரணம்" என பள்ளியில் வேலை செய்யும் ஊழியனை திட்டிக்கொண்டே 'புத்தகத்தை எல்லாம் மூடி வைத்துவிட்டு, தட்டை மட்டும் லேசாக பள்ளி பையிலிருந்து இருந்து வெளியே எடுத்து வைத்தவன், மணி அடித்தவுடன் ஓடுவதற்கு தயாராக இருந்தான்.
சரியாக அதேநேரம்.. டிங்.. டிங்.. டிங்.. என மணியோசை கேட்க, இப்போது பார்வை தங்கள் ஆசிரியர் மேல் திரும்பியது…"அய்யயோ ! ஒருவேளை பெல் அடிச்சது சார் காதுல விழலையோ" என பரிதாபமாக அனைவரும் முழித்துக் கொண்டிருக்க, வெளியே மற்றைய வகுப்பு மாணவர்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை ஒரு ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்.
சற்று நேரத்தில் ஆசிரியர் விடைபெற்று செல்ல..கூண்டில் இருந்து பறந்து செல்லும் பறவையை போல சிரித்துக் கொண்டே வெளியில் ஓடினர் அனைவரும். அதற்குள் ஒரு பெரிய வரிசையே உணவு வழங்கும் இடத்தில் நிரம்பி இருக்க,கடுப்புடன் வரிசையில் நின்றனர் இருவரும்.
இன்று வெஜிடபிள் ரைஸ்,அவித்த முட்டை ஆசையோடு அதை வாங்கி மரத்தடியில் அமர்ந்த இருவரும்...மீண்டும் யாரையோ தேட தொடங்கினர்.
"இன்னைக்கு நேரமே சரியில்ல டா…. முதலில் ஸ்கூல் பெல்,அப்பறம் நம்ம சயன்ஸ் சார்,இப்போ இவங்க ரெண்டு பேரும்…தட்டுல இருக்குற முட்டை வேற என்னை 'சாப்பிடு சாப்பிடுன்னு சொல்றது போலவே இருக்கு" என தங்கள் நிலையை வெறுத்தப்படி அமர்ந்திருக்க...அப்போது சதிஷ் "டேய் அதோ பாருடா" என ஒரு திசையில் கைகாட்டி சொல்ல…
அங்கே தன் தோழியுடன் அடிமேல் அடிவைத்து பேசிக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தாள் மித்ரவர்ஷினி. பிங்க் கலர் செக்ட் டாப்,சிமெண்ட் கலர் பாண்ட் மற்றும் ஓவர் கோர்ட் என பள்ளி சீருடையில்...இடை வரை தாண்டிய முடியை பின்னலிட்டு மடித்து ரிப்பனால் கட்டியிருக்க... நெற்றியில் சிறிய மெரூன் பொட்டு,காதில் சிறிய ஜிமிக்கி என குழந்தைத்தனம் மாறாத முகத்தில்… தனது பேச்சிலோ செய்யலிலோ கொஞ்சமும் சிறுபிள்ளை தனத்தை வெளிப்படுத்தாமல் ஒரு நிமிர்வுடன் வந்தவள் தன் நண்பர்கள் அருகே அமர்ந்தாள்.
"ஏன் இன்னும் ஆடி அசைஞ்சு வர வேண்டியது தான...மனுஷனுக்கு இருக்குற பசி தெரியாமல்" என வாய்த்திறந்தவனை முந்திக்கொண்டு…"ஏண்டா... உனக்கே நீ கேட்கிற கேள்வி அநியாயமா தெரியலை.
நீ படிகிறது ஏழாவது, நான் ப்ளஸ் டூ " அதுவும் இன்னைக்கு கெமிஸ்ட்ரி பிராக்டிகல் சொல்லிக் கொடுத்தாங்க, அதனால் லேப்ல இருந்தோம், அதான் வர லேட் ஆகிடுச்சு" என அமர முயன்றவள் அப்போது தான் அங்கு இன்னும் ஒருவர் இல்லாததை கண்டு
"டேய் எங்கடா சின்னகுட்டி" என்க...இருவரும் தலையில் கைவைத்து "என்னது திரும்பவும் முதலில் இருந்தா"..? எனக்கு இன்னைக்கு சாப்பாடே வேண்டாம்.நான் விரதம் இருக்க போறேன்" என்றான் ரமேஷ்.
"ஏண்டா நான் தான் வர லேட் ஆகிடுச்சு' நீங்களாவது அழைத்து வந்திருக்கலாம் இல்ல " என சொன்னவாறே ஆறாம் வகுப்பை நோக்கி நடந்தாள் வர்ஷினி.
அங்கு அறையே காலியாக இருக்க..ஒரு இருக்கையில் தலையை கவிழ்த்த நிலையில் படுத்திருந்த தர்ஷினி அருகில் சென்றவள்... "சின்னகுட்டி" என குரல் கொடுக்க...விழியில் நீர் தேங்க தன் அக்காவை பார்த்தவுடன் 'உதடு பிதுக்கி அழ தயாராக,அவளை இடையோடு அணைத்து கண்ணீரை துடைத்தாள் மித்ரவர்ஷினி.
"என்னடா எதுக்கு அழற' யாராவது ஏதாவது சொன்னாங்களா"..? என கேட்க...அவளோ தேம்பியவாறே "மாத்ஸ் சார் என்ன திட்டிட்டாங்க தெரியுமா? நேத்தே புது நோட் வாங்கிட்டு வர சொன்னாங்க.. நான் அம்மா கிட்ட சொன்னேன், ஆனா அம்மா நாளைக்கு வாங்கி தரேன்னு சொல்லிட்டாங்க..?" என திரும்பவும் அழுகையை ஆரம்பிக்க, "சரி அழாதே நாளைக்கு கண்டிப்பா வாங்கலாம். இப்போ என் செல்லக்குட்டி சாப்பிட வருவியாம், அப்போ தான் நானும் சாப்பிடுவேன்" என்க...அவளும் ஆல்ரெடி பசியில் இருந்ததால் உடனடியாக தன் அக்காவுடன் சென்றுவிட்டாள்.
எப்படியும் அக்கா கிட்ட சொன்னால் கண்டிப்பாக நடந்துவிடும் என்பது திவ்யதர்ஷினியின் நம்பிக்கை. அதனால் தான் அதுவரை இருந்த கவலை மறந்து அவளுடன் நடந்தாள். தன் தாயை விட எப்போதும் ஒருபடி மேல் தான் மித்ரா இவளுக்கு. இருவருமே சென்று உணவை வாங்கி வந்தனர்.
அனைவரும் சாப்பிட அமர…"நாங்களே சீக்கிரம் வந்துட்டோம். ஆனா மகாராணி வர இவ்வளவு நேரமா" என கேட்டுக்கொண்டே சாப்பிட தொடங்கினர்.
பள்ளியில் பத்தாவது வரை அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு உண்டு. ஆனால் மேல்நிலை வகுப்பான பதினொன்றாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உணவு இல்லையென்றாலும் விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம்,யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.
அதுவும் தர்ஷினி ஒழுங்காக சாப்பிடாமல் ஒல்லியாக இருப்பாள்.பள்ளியில் தரும் உணவை சாப்பிட்டாலும் வீட்டு உணவு என்றால் ஒரு பிடி அதிகமாக சாப்பிடுவாள். இந்த உணவைவிட வீட்டில் உண்ணும் பழைய சாதம் எல்லாருக்கும் அமுதம் தானே..? அதனால் பிளஸ் ஒன் சேர்ந்தது முதல் வீட்டில் விழும் வசவுகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன் தங்கைக்காக உணவு எடுத்து வந்துவிடுவாள் வர்ஷினி.
அதுவும் இன்று லெமன் ரைஸ்,உருளைக்கிழங்கு பொரியல் இருவருக்குமே பிடித்த லன்ச்..வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவையும் முட்டையையும் தங்கையிடம் கொடுத்துவிட்டு, பள்ளியில் கொடுத்த உணவை சாப்பிட தொடங்கினாள்.
அனைவரும் தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டே உணவை ஒருவழியாக சாப்பிட்டு முடித்தனர்.
மாலை பள்ளி முடிந்தவுடன் நால்வரும் ஒன்றாக பேசிக்கொண்டே தங்கள் வீடு நோக்கி செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தனர். இன்றும் வர்ஷினி தன்னுடைய சைக்கிளை தள்ளிக்கொண்டே, வாண்டுகளோடு அரட்டை அடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
அதுவரை முகத்தில் உறைந்திருந்த புன்னகை, இப்போது துணி கொண்டு துடைத்தது போல் வெறுமையாக இருந்தது. எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் இருவருமே ஏதோ பொம்மை போல் உள்ளே நுழைந்தனர்.
வாசலை கடக்கும் முன்பே 'யாரு கண்ணில் படக்கூடாது' என்று நினைத்தார்களோ அவரே இருவரை தடுத்து நிறுத்தினார்.
"ஏய் நில்லுங்கடி..பள்ளிக்கூடம் முடிஞ்சு எவ்வளவு நேரம் ஆகுது,நானும் வருவீங்க வருவீங்கன்னு வாசலையே பார்த்துட்டு இருக்கேன்.ஊரு பிள்ளைங்க மொத்தமும் வீடு போய் சேர்ந்திருக்கும். ஆனா நீங்க மட்டும் ஆடியசைஞ்சு வரீங்க..? உங்களை சொல்லி குத்தமில்ல, எல்லாம் உள்ள ஒன்னும் தெரியாதவ போல இருந்துக்கிட்டு உங்களை ஆட்டுவிக்கிறா இல்ல, உங்க ஆத்தாகாரி அவளை சொல்லனும்" என இவர்களில் ஆரம்பித்து அவர்களது தாயில் முடித்தார்.
'உன்னை பார்க்க பிடிக்காமல் தான் நாங்களே லேட்டாக வரோம், அது தெரியாமல் பேச்சை பார்' என மரகத பாட்டியின் திட்டிற்கு மனதுக்குள்ளேயே கவுண்டர் கொடுத்து கொண்டு வெளியே பயந்தது போல் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு நின்றிருந்தனர் இருவரும்.
"ஏதோ சொல்லுவாங்களே 'எருமை மாட்டு மேல மழை பெய்த மாதிரின்னு' அது போல என்ன சொன்னாலும் வாங்கிட்டு நிற்க தான் தெரியும்.இனிமே இப்படி பண்ணமாட்டேன்னு வாயை திறந்து சொல்லுதுங்களா" என நிறுத்தாமல் திட்டிக் கொண்டே இருக்க...வாசலில் கேட்ட கார் சத்தத்தில் மரகதம் பாட்டியின் வாய் சட்டென்று மூடிக்கொண்டது.
"ஆஹா !... வில்லி கேரக்டரில் இருந்து நல்லவர் கேரக்டருக்கு நடிக்க ஸ்டார்ட் ஆகிட்டாங்க. நீ வா சின்ன குட்டி இனிமேல் வாயை திறக்காது இந்த ஓல்டு லேடி" என தங்கையோடு உள்ளே நுழைந்தாள்.
கடகடவென அறைக்குள் நுழைந்த இருவரும் மின்னல் வேகத்தில் யூனிபார்மை மாற்றிக்கொண்டு கையில் புத்தகத்தோடு ஹாலில் வந்து அமர்ந்தனர்.
காரில் இருந்து இறங்கிய சண்முகசுந்தரம் வீட்டினுள் நுழைந்தார். வெள்ளை வேட்டி சட்டையில் முறுக்கு மீசையோடு முகத்தில் சிரிப்பென்பது சிறிதும் இன்றி எந்நேரமும் ஓர் முறைப்போடு திரியும் மனிதன். வர்ஷினி,தர்ஷினியின் தந்தை.
பேருக்கு மட்டுமே தந்தை. ஒருநாளும் அன்பாக பேசியதாக இருவருக்குமே நினைவில்லை. இவ்வளவு ஏன் இதுநாள் வரை சாப்டீங்களா என்று கூட கேட்டதில்லை.அவர்களுக்கும் இது வருட கணக்காக பழகிவிட்டது.
அவர்களை பொறுத்தவரை "அப்பா என்பவர் வெறும் ரேங்க் கார்டில் கையெழுத்து போட மட்டும் தான்" என்பது மனதுக்குள் ஆழமாக பதிந்துவிட்டது.
மற்றபடி அவர்களின் மொத்த தேவையையும் பார்த்துக் கொள்வது அவர்களின் தாய் சாந்தி தான். அவர் ஒன்றும் வேலைக்கு சென்று வரும் வருமானத்தில் பிள்ளைகளை பார்த்துக் கொள்ளவில்லை. வீட்டு செலவுக்கு என கொடுக்கப்படும் சொற்ப பணத்தை மிச்சம் பிடித்து மகள்களுக்கு செய்வார்.
அதுவும் இல்லையென்றால் நினைக்கவே மனம் கனத்து போகும் சாந்திக்கு...இது ஒன்றும் பணத்திற்கு கஷ்டப்படும் குடும்பம் இல்லை.
அந்த ஊரிலேயே விரல்விட்டு என்னும் பணக்காரர்களில் ஒருவர்.பெரிய மச்சி வீடு,தோட்டம்,வயல்,சர்க்கரை ஆலை என நல்ல வசதிமிக்க குடும்பம் தான், ஆனால் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் எது தேவை என பார்த்து செய்ய தான் மனம் இல்லை.
சண்முகசுந்தரம் உள்ளே நுழையும் போதே வெளி திண்ணையில் அமர்ந்திருக்கும் அன்னையிடம் "என்னம்மா சாப்பிட்டியா..?" என இரு வார்த்தைகளாக பேசாமல் வரமாட்டார். ஆனால் மனைவியிடமோ மகள்கள் இடமோ பேச மட்டும் இதுவரை வாய்த்திறந்ததில்லை.
உள்ளே நுழைந்தவர் ஹாலின் ஒரு மூலையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சோஃபாவில் அமர்ந்தார்.
அதற்குள் அவர் வந்ததை அறிந்த சாந்தி கையில் செம்பு நிறைய தண்ணீருடன் ஹாலுக்கு வந்துவிட... அவரை நிமிர்ந்து கூட பார்க்காமல் தண்ணீரை வாங்கி பருகியவர் அறைக்குள் நுழைந்து கொண்டவர்,சிறிது நேரத்தில் வெளியே கிளம்பி சென்றும் விட்டார்.
அதுவரை புத்தகமும் கையுமா அமர்ந்திருந்த இருவரும் அதனை கீழே வைத்துவிட்டு எழுந்தனர்.
"அம்மா பசிக்குது மா ஏதாவது செஞ்சி கொடு" என்ற மகளின் தலையை கோதியவாறு கலங்கும் விழிகளை மறைத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தார் சாந்தி.
சொந்த வீட்டில் கூட உரிமையாக பிடித்ததை கேட்டு வாங்கி சாப்பிட கூட முடியாத நிலையில் இருக்கும் மகள்களை நினைத்து கண்ணீர் மட்டுமே அவரால் சிந்த முடிந்தது. ஏனென்றால் அவரும் ஒரு அடிமை வாழ்க்கையை தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
'தன் வயிற்றில் பிறக்காமல் வேறு எங்கேயாவது பிறந்திருந்தால் இந்நேரம் சந்தோஷமா வாவது இருந்திருப்பார்களோ என நினைக்காமல் இருக்க முடியவில்லை'…
அனைத்தையும் எண்ணி கலங்கியபடி அவர்களுக்கு சாப்பிட சிற்றுண்டி செய்ய தொடங்கினார்.
வகை வகையாக செய்து கொடுக்க முடியவில்லை என்றாலும் வீட்டில் உள்ளதை வைத்து அடிக்கடி ஏதாவது செய்து கொடுப்பார், பிள்ளைகள் ஏங்கி போய்விட கூடாதே என்பதால்…
வீட்டில் இருந்த இட்லி மாவில் வெங்காயம், கேரட், பீன்ஸ்,பச்சைமிளகாய் என அனைத்தையும் வதக்கிக் கொட்டி கார குழி பணியாரம் செய்து முடித்தவர் அவர்கள் இருவருக்கும் தட்டிலிட்டு கொடுக்க...அவர்களுக்கு அதுவே மகிழ்ச்சியாக இருந்தது.
இருவரும் பேசியபடி சாப்பிட்டு கொண்ட வெளியே எட்டி பார்க்க...பாட்டி திண்ணையில் அமர்ந்தபடி ரோட்டில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் பேசிக்கொண்டு இருப்பதை கண்டு தன் தங்கையிடம் கையசைக்க... அவளும் சென்று டிவியை ஆன் செய்தாள்.
மரகதம் பாட்டியோ, தந்தையோ இருக்கும் போது தொலைகாட்சி பார்க்க முடியாது. அதுவும் மரகதம் திட்டும் திட்டில் காதில் இருந்து இரத்தமே வந்துவிடும்.அதன்பின் டிவி பார்க்கும் ஆசையே விட்டுவிடும் இருவருக்கும்.
பள்ளியில் தினமும் உடன் பயிலும் பிள்ளைகள் வந்து சொல்லும் டிவி நிகழ்ச்சியை ஒரு நாளாவது பார்க்க வேண்டும் என்ற ஆசையோடு வருபவர்களை... தன் பேச்சாலயே ஒன்றும் இல்லாமல் ஆகிவிடுவார் மரகதம்.
அதனால் எப்போதும் அவர் இல்லாத நேரத்தில் தான் திருட்டு தனமாக டிவி பார்ப்பது. வயலில் வேலை நடந்தால் மட்டுமே அங்கு செல்வார்,மற்ற நேரத்தில் எப்போதும் வீட்டில் தான் இருப்பார் என்றாலும் சத்தமாக பேசினால் மட்டுமே காதில் விழும்.அதுவும் திண்ணையில் அமர்ந்திருந்தால் சாப்பிடும் போது தான் உள்ளே வருவார். அதனால் அந்த நேரத்தை இருவரும் தினமும் பயன்படுத்தி கொள்வார்கள்.இன்றும் அதுவே தொடர்ந்தது.
ஒலியின் அளவை மட்டும் குறைத்து இருவரும் பார்க்க தொடங்கினார்கள். அவர்களுக்கு காவலுக்கு இருப்பது போல் வாசல் கதவின் அருகில் அமர்ந்து கொண்டு தன் மாமியார் மேல் ஒரு கண்ணை பதித்தபடி இருந்தார் சாந்தி. அவரால் முடிந்தது மகள்களின் இதுபோன்ற சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்ற தன்னால் முடிந்ததை செய்வது ஒன்று தானே…
டிவி பார்க்கும் போது தான் மித்ராவிற்கு தங்கை சொன்னது நினைவு வந்தது.
"அம்மா.. திவ்யா ஏதோ நோட் வாங்கனும்னு சொன்னா...இன்னைக்கு டீச்சர் வேற திட்டிடாங்கனு ஒரே அழுகை" என சொல்ல, அவரும் பெருமூச்சை வெளியிட்டவர் உள்ளே சென்று பணம் எடுத்து வந்து கொடுத்தார்.
"இன்னைக்கு தான்டா பால்காரர் காசு தந்தார், நேத்தே திவ்யா சொன்னா ஆனா அப்போ காசு இல்ல" என சொல்லியபடி சின்ன மகளை அணைத்துக் கொண்டார்.
அவருக்கு கவலை முழுவதும் சின்னவள் மீது தான்.பெரியவள் எந்த சூழ்நிலைக்கும் தன்னை உடனடியாக பழகிக் கொள்வாள்.மிகவும் தைரியமானவள், இந்த வயதிலேயே தாய்க்கும் சேர்த்து ஆறுதல் சொல்லுவாள்.
ஆனால் சின்னவள் பயந்த சுபாவம் உடையவள் எதற்கும் சகோதரியின் துணையை நாடுவாள். ஆறாவது தான் படிக்கிறாள் என்றாலும் பார்க்க என்னவோ இப்போது தான் நான்காவது படிக்கும் பிள்ளை போல் இருப்பாள். அதுவும் தந்தையை கண்டாள் அப்படி ஒரு பயம். அதனாலேயே அவள் மேல் தாயும் மித்ராவும் அதிகமாக கவனம் கொள்வார்கள்.
அதன்பின் நேரம் செல்ல... பாட்டி உள்ளே வரும் நேரத்தில் டிவியை அணைத்துவிட்டு மீண்டும் புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டனர்.
முதலில் மரகதம் தனது இரவு உணவை முடித்துக் கொண்டு உள்ளே சென்றுவிட...அதற்குள் வெளியே சென்ற அவர்களின் தந்தையும் வந்துவிட்டார்.
அவரும் உண்டுவிட்டு டிவி பார்க்க அமர்ந்துவிட்டார்.அதன் பின்னரே மகள்கள் இருவருக்கும் உணவை எடுத்துக் கொண்டு பின் வாசலுக்கு வந்தார். அங்குள்ள படிகளில் தோட்டத்தை பார்த்தபடி அமர்ந்திருந்த இருவர் அருகே அவரும் அமர்ந்தார்.
இது மொத்தமும் அவர்களுக்கான நேரம்..தங்கள் அன்னையோடு காலை முதல் நடந்தது அனைத்தையும் பகிர்ந்தபடி உணவை உண்டனர். மித்ரா தனியாக சாப்பிட சின்னவளுக்கு சாந்தியே ஊட்டிவிட்டார்.
மணி பத்தை நெருங்க...அனைவரும் உறங்க சென்றனர்.ஆல்ரெடி சண்முக சுந்தரம் அவர் அறைக்கு சென்றுவிட இவர்களும் தங்கள் அறைக்குள் நுழைந்தனர்.
மெத்தையில் வர்ஷினி தர்ஷினி இருவரும் உறங்கிவிட...கீழே தரையில் பாய் விரித்து சாந்தி உறங்க தொடங்கினார்.
மறுநாள் காலையில் உறக்கம் களைந்து எழுந்த மித்ரவர்ஷினி...தன் மேல் ஒரு காலும் கையும் போட்டு உறங்கும் தங்கையை பார்த்து சிரித்தபடி அவள் நெற்றியில் முத்தமிட்டு அறையைவிட்டு வெளியே வந்தாள்.
முகம் கழுவி வந்தவள் படிக்க அமர்ந்தாள்…. பிளஸ் டூ என்பதால் எப்போதும் காலையில் சிறிதுநேரமாவது படிக்க ஒதுக்குவாள்.
அவளை பொறுத்தவரை படிப்பு ரொம்ப முக்கியம். ஒருவேளை தன் தாய் படித்திருந்தால் அவருக்கு இந்த நிலை வந்திருக்காது என பலமுறை எண்ணியிருக்கிறாள். அதனாலேயே படிப்பிற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பாள்.மாலை தங்கையொடு செலவழிப்பவள் காலை அவள் தூங்கும் நேரத்தில் படிப்பாள்.பள்ளியிலும் எப்போதும் படிப்பில் முதல் இடம் தான்.
பின்னர் மணி ஆறரை என காட்ட எழுந்து தன் காலைக்கடன்களை முடித்துவிட்டு தங்கையை எழுப்பினாள். "சின்ன குட்டி... சின்ன குட்டி... எழுந்துறுடா, ஸ்கூலுக்கு டைம் ஆய்டுச்சு" என எழுப்ப...அக்கா இன்னும் கொஞ்சநேரம் என மீண்டும் தூக்கத்தை தொடங்க,அவளுக்காக கொஞ்ச நேரம் பொருத்தாள்.
சற்றுநேரம் கழித்து திரும்பவும் எழுப்ப..அவளும் எழுந்து அமர்ந்தாள். அவள் எழுவதற்கு முன்பே மித்ரா குளித்து ஸ்கூல் யூனிஃபார்ம் அணிந்து தயாராக இருக்க…"அய்யோ அக்கா ரொம்ப டைம் ஆகிடுச்சா" என்றபடி கடகடவென பல் துலக்கி, காக்கா குளியல் ஒன்றை போட்டுவிட்டு பத்துநிமிடத்தில் யூனிஃபார்ம் போட்டு தயாராகிவிட்டாள் சின்னவள்.
"நீ வேகமா செய்ற ஒரே வேலை குளிக்கிறது மட்டும் தான் சின்னகுட்டி" என பேசியபடி அவளுக்கு தலையை வாரிவிட்டு பள்ளி பையோடு வெளியே வந்தனர்.
அந்த நேரத்திற்கு எல்லாம் அவர்களின் தந்தை சென்றிருக்க...அரக்க பறக்க ஆளுக்கு இரு இட்லிகளை முழுங்கிவிட்டு பள்ளிக்கு சென்றனர்.
"சின்ன குட்டி பத்தரமா பிடிச்சிக்கோ" என சொன்னவாறே மித்ரா சைக்கிளை செலுத்த... 'அவளும் விழுந்து விடுவோமோ' என்ற பயத்தில் மித்ராவின் இடையை சுற்றி கைகளை கோர்த்து கட்டிக்கொண்டாள் தர்ஷினி.
சற்றுநேரத்தில் அவர்களின் வாண்டு கூட்டமும் இணைத்துக்கொள்ள.. அதுவரை தொலைந்திருந்த சிரிப்பு தானாக வந்து ஒட்டிக்கொண்டது இருவரிடமும்.