ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஏகலைவனின் ஏந்திழையாள்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஏகலைவனின் ஏந்திழையாள்-கதை திரி
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஏகலைவனின் ஏந்திழையாள்


Teaser 1

"மான்சி..." என்று வெண்பா கோபமாக அழைக்க மகள் திரும்பி பார்க்கும் முன் தந்தை மகளுக்கு அரணாக வந்து நின்றார்.

"இப்போ எதுக்கு பாப்பாவ கோபமா கூப்பிட்ட." என்று மனைவியை முறைத்து பார்க்க, அவளது பார்வை கணவன் காலை கட்டிக் கொண்டு நின்ற மகளை தொட்டு பூஜை அறையை நோக்கி திரும்பியது.

மனைவியின் பார்வையை தொடர்ந்த தன் பார்வையை திலகன் செலுத்த பூஜை அறையை முழுவதும் அலங்கோலமாக இருந்தாது.

"இன்னு நல்லா நடக்க கூட வரல அதுக்கே உங்க மக பண்ற அட்டகாசம் தங்க முடியல. சூடம் டப்பா மொத்தமா சிதற விட்டுருக்கா, பத்தி குச்சி எல்லாத்தையும் முறிச்சி போட்டுருக்க. அது கூட பரவாயில்ல சந்தனம், குங்குமம், திருநீறு வைத்து தரைய சூப்பரா முழுகி வச்சி இருக்கா, நல்ல வேலை சாமி போட்டோ எல்லாம் கொஞ்சம் உயரமா சுவர்ல மாட்டி இருந்ததால தப்பிருக்கு..." என்று மகள் பற்றி குற்ற பத்திரிக்கை வாசிக்க, தந்தைக்கு பொறுக்கவில்லை.

"என் தங்க புள்ளைய அவ்வளவு நேரம் தனியா விட்டுட்டு நீ எங்க போன. நீ வாடா குட்டி உங்க அம்மாக்கு வேற வேலையில்லை." என்று மனைவி செய்ததே தவறு என்பது போல கூறி விட்டு மகளுடன் சாமர்த்தியமாக வெளியேறினான்.

அங்கேயே நின்றிருந்தால் மனைவியிடம் தானும் அல்லவா திட்டு வாங்க வேண்டும். மகளுடன் செல்லும் கணவனை பார்வையால் பொசுக்கி விட்டு பூஜை அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு வந்த வெண்பா மகளுக்கு உணவு கொடுக்க வேண்டிய நேரம் என்பதால் வெளியே வர, அவள் கண்ட காட்சியில் சாந்த சுருபி பட்டம் வாங்கும் அளவுக்கு பொறுமை காக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கே கோபம் பொத்து கொண்டு வந்தது.

தோட்டத்தில் இருந்த ஈரமான மண்ணை குழப்பி பொம்மை செய்கின்றேன் என்று அப்பா மகள் இருவரும் சகதியில் விழுந்து எழுந்தவர்கள் போல இருந்தனர்.

இதில் பொம்மை தலைக்கு பூ வைக்க வேண்டும் என்று ஆசையாக வளர்த்த செடியில் இருந்த மலர்களை எல்லாம் பறித்து மகள் கையில் கொடுத்து கொண்டிருந்தார் அவள் அன்பு தந்தை.

கோபத்தில் அடித்து விடலாமா என்று வேகமாக இருவரையும் நெருங்கிய வெண்பாவின் கால்கள் மகளின் சிரிப்பொலியில் அப்படியே நின்றுவிட்டது. புதிதாக முளைத்த அரிசி பற்கள் தெரிய சிரித்த மகளை பார்த்ததும் அவள் கோபம் சூரியனை கண்ட பனி போல மாயமாக மறைந்தது.

வெண்பா வருவதை பார்த்த திலகன் கையில் இருந்ததை கீழே போட்டுவிட்டு அசட்டு சிரிப்புடன் எழுந்து நிற்க, மகளும் நல்ல பிள்ளையாக தந்தையின் கால்களை பிடித்து கொண்டு நின்றாள்.

வெண்பா போலியாக இருவரையும் முறைக்க, மகளை கையில் தூக்கி கொண்ட திலகன் மின்னல் வேகத்தில் மனைவியின் கன்னத்தில் முத்திரை பதித்துவிட்டு வீட்டிற்குள் ஓடி மறைந்தான்.

கருத்து முக்கியம் பிகிலு

 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஏகலைவனின் ஏந்திழையாள்


அத்தியாயம் 1

இந்திய மக்கள் பலரும் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கும் சினிமா துறை நட்சத்திரங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்துக் கொண்டிருந்தது.

ஒரு படம் திரையில் வெளி வந்து வெற்றி பெற பலரின் உழைப்பு தேவையானதாக இருந்தாலும் மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை முதலில் பிடிப்பது என்னவோ அப்படத்தின் கதாநாயகனும் நாயகியும் தான்.

அவர்களுக்கு அடுத்ததாக படத்தின் இசை அனைவரின் மனதையும் வயது வித்தியாசமின்றி வசியம் செய்து விடுகின்றது. முகம் தெரியவில்லை என்றாலும் குரலினால் பலரின் மனதை வெல்ல கூடிய திறமை இசைக்கு மட்டுமே உள்ளது.

இன்னும் சில வினாடிகளில் இளம் பாடகிக்கான விருது யாருக்கு என்று தொகுப்பாளர் கூறும் முன் அரங்கத்தில் இருந்த பலரும் ஒரே பெயரை உரக்க கூற, தொகுப்பாளரும் தான் கூற வந்த பெயரை கூற மறந்து புன்னகையுடன் நின்றுவிட்டார்.

"மான்சி... மான்சி..." என்று அரங்கமே அதிர ஆரம்பிக்க அதில் உணர்வு பெற்ற தொகுப்பாளர் "தி அவார்ட் கோஸ் டூ மான்சி ஏந்திழையாாள்..." என்று ஒலிவாங்கியில் (மைக்) அரங்கத்தை அதிர வைத்த பெயரையே அறிவிக்க இப்போது கை தட்டும் ஒலி காதை கிழித்தது.

இவ்வளவு ஆர்ப்பாட்டத்திலும் அப்பெயருக்கு உரியவள் முதல் முறை தேசிய அளவில் விருது வாங்குவதற்கான பதட்டம் சிறிதுமின்றி மௌன பதுமையாக எழுந்து, ரசிகர்களை நோக்கி கரம் குவித்து விட்டு மேடையை நோக்கிச் செல்ல, அவளிடம் சாதனைக்கான கர்வம் சற்றும் இல்லை.

"மான்சி ஏந்திழையாள்..." கல்லையும் கசிந்துருக செய்யும் தேன் குரலுக்கு சொந்தமானவள். வயது என்னவோ இருபத்தி மூன்று தான். ஆனால் அவளின் சாதனைகளின் எண்ணிக்கை அவள் வயதை விட பல மடங்கு அதிகம்.

பார்த்த உடன் தமிழ் நாட்டுப் பெண் என்று கூறும் படி காஞ்சிப் பட்டு அவள் மெல்லிய உடலை பாந்தமாக தழுவி இருந்தது. மீன் விழிகள் அங்கும் இங்கும் அலைபாய, அவள் விழிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு காதில் இருந்த ஜிமிக்கியும் அசைந்தாடியது.

எட்டு வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாட ஆரம்பித்த போது தொடங்கியது அவள் இசை பயணம். சில வருடங்கள் தடைகளை சந்தித்த போதும் அவளின் குரல் தடைகளை தாண்டி விண் நோக்கி அவளை சிறகடிக்க செய்தது.

பிரபல இசையமைப்பாளர் ஒருவர் விருதினை வழங்க அதை புன்னகையுடன் பெற்றுக் கொண்ட மான்சி திரும்ப, தொகுப்பாளரின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது.

"ஹாய் மான்சி மேம்... நீங்க பாடினா தேன் மாதிரி இனிக்கிற உங்க குரல், பேசினா எப்படி இருக்கும்ன்னு ரசிகர்களோட சேர்த்து எனக்கும் கேட்க ஆசை. சோ எங்களுக்காக இரண்டு வரி பேசணும்." என்று ஆங்கிலத்தில் கூற, அரங்கத்தின் மொத்த விளக்குகளும் மான்சியை நோக்கி திரும்ப அவளிடம் சிறு தடுமாற்றம்.

உள்ளுக்குள் தோன்றிய சிறு நடுக்கத்தை மறைத்துக் கொண்டு மான்சி புன்னகைக்க அவளிடம் ஒலிவாங்கி நீட்டப்பட்டது.

"ஹாய் எவ்ரி ஒன்... எனக்கு இந்த வெற்றி கிடைக்கிறதுக்கு ரசிகர்கள் உங்க ஆதரவு மட்டும் காரணம். தேங்க் யூ சோ மச்." என்று கூறி விட்டு தனது பேச்சை முடிக்க நினைக்க,

"மான்சி மேம் உங்களுக்கு பிடிச்ச விஷயம் எதாவது மூணு சொல்லுங்க." என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

"என் கூடவே எல்லா நேரமும் இருக்கிற என் அம்மா, அப்பா அப்புறம் பாட்டு. இதை தவிர வேற எதுவும் எனக்கு பிடிக்காது. இந்த மூணும் இல்லாம என்னால மூச்சு கூட விட முடியாதுன்னு சொல்லலாம்." என்ற பதில் அவள் மனதிலிருந்தே வந்தது.

"உங்க கல்யாணம் எப்போ?" என்று பிரபலங்களிடம் கேட்கப்படும் வழக்கமான கேள்வி வந்து விழுந்தது.

"அம்மா முடிவு பண்ணும் போது..." என்று நொடியும் தாமதிக்காமல் பதில் வந்து விழுந்தது. வினாடி தாமதித்தாலும் அடுத்த கேள்வி வந்துவிட கூடும் என்பதால் மான்சி வேகமாக தனது இருக்கையை நோக்கி நடையிட்டாள்.

மகளின் நடையில் இருந்த பதட்டத்தையும் தடுமாற்றத்தையும் கண்டுக் கொண்ட வெண்பா விரைந்துச் சென்று வாழ்த்து கூறுவது போல அணைத்துக் கொண்டார்.

"ம்மா... பயமா இருக்கு. நாம சீக்கிரம் இங்க இருந்து போயிடலாம்." என்று நடுங்கும் குரலில் கூற, மகளின் முதுகை தடவி கொடுத்த படி இருக்கைக்கு அழைத்து வந்தார்.

"மான்சி ரிலாக்ஸ். இது உனக்கான நாள் மட்டும் இல்ல எனக்கானதும் கூட. என்னோட இருபது வருச தவத்துக்கான பலன் கிடைக்கும் போது அத உன் அர்த்தமில்லாத பயத்தால தடுக்காத. அம்மா உன் கூடவே தான் இருக்கேன் எதுக்கும் பயப்படாத ஓகே. ஸ்டே ஸ்ட்ராங் மை ஏந்திழையாள்." என்று புன்னகை முகமாக கண்டித்து பின் ஆறுதல் கூற, தாயின் வார்த்தையில் மான்சி தன் மன உணர்வுகளை மறைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

விளக்கின் வெளிச்சத்தில் அமர்ந்திருந்த மான்சி விழா முடிந்து வெளியேறும் வரை கூட பயம் விலகவில்லை. தனது பயத்தை மற்றவர்களுக்கு காட்டி விட கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தவள் சுற்றி நடக்கும் எதையும் கவனிக்க தவறினாள்.

தான் ஒருவனின் கண்காணிப்பில் உள்ளோம் என்பது கூட பாவையின் கருத்தில் பதியவில்லை. வேட்டையாட தயாராக இருக்கும் வேங்கையின் கண்ணில் சிக்கிய புள்ளிமான் போலவே மான்சி அவன் கண்களுக்கு தெரிந்தாள்.

நிகழ்ச்சிக்கு மான்சி வந்தது தொடங்கி இப்போது வரை அவள் ஒவ்வொரு அசைவையும் நேரலையாக தனது கணினி திரையில் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் விஜித் ஏகலைவன்.

மகாபாரதத்தில் வரும் ஏகலைவன் குறியை தன் ஒரே அம்பால் வீழ்த்துவதில் சிறந்தவன் என்றால் இந்த விஜித் ஏகலைவனோ எதிரிகளை ஒரே வியூகத்தில் வீழ்த்துவதில் தலை சிறந்தவன்.

தன் மூதாதையர்கள் கோடிகளில் சேர்த்து வைத்த சொத்துக்களை பல மடங்கு பெருக்கி, அதன் மூலம் அவன் கால் ஊன்றாத துறையே இல்லை எனலாம். பணம் சம்பாதிக்க விஜித் தேர்ந்தெடுத்ததில் சினிமா துறையும் ஒன்று தான்.

நேரடியாக சினிமா துறையில் எதையும் செய்வதில்லை என்றாலும் பட பிடிப்பில் தொடங்கி அது வெளியீட்டு விழா வரை அவனின் அனுமதியின்றி எதுவும் அசையாது என்னும் அளவில் அத்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.

தான் விடும் மூச்சுக் காற்று கூட பணமாக மாற்று வித்தையை நன்கு கற்று தெரிந்தவன். ஒன்றை பத்தாக மாற்றும் இடத்தில் மட்டும் பணத்தை செலவு செய்து பழகியவன், இன்று பல கோடி செலவு செய்து இந்த விருது நிகழ்ச்சியை நடத்த ஒரே காரணம் மான்சி ஏந்திழையாள் மட்டுமே.

மான்சியை அவள் இருக்கும் இடத்திலிருந்தே தூக்கியிருக்க அவனால் முடியும். ஆனாலும் அப்படி செய்யாமல் அவளை தன் இடத்திற்கு வரவழைக்க நினைத்தான். அதற்காகவே அவளுக்காகவே இந்த விழா.

மான்சியின் முகத்தை மட்டுமே திரையில் பார்த்துக் கொண்டிருந்த விஜித் தனது கைப்பேசியை எடுத்து "அவார்ட் பங்ஷன் முடிஞ்சதும் மான்சி ஏந்திழையாள் என் சீக்ரெட் கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கணும்." என்று கூறி விட்டு வைக்க, மான்சி முகத்தை திரையில் பார்த்ததும் அவன் விழிகளில் பளபளப்பு கூடியது.

"பாவம் புள்ளி மான் குட்டி இந்த சிங்கத்தோட குகைக்குள்ள வந்து சிக்கிடிச்சே..." என்று பரிதாபப்படுபவன் போல பேசினாலும் வார்த்தையில் வன்மம் மட்டுமே கொட்டி கிடந்தது.

அவன் முகம் பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றினாலும் அதில் இருக்கும் கடினத்தின் அளவை அவனை தவிர யாரும் அறிய முடியாது. சிரித்துக் கொண்டே எதிரிகளை சிதறடிக்க கூடியவனாயிற்றே.

நிகழ்ச்சி முடிந்த பின் நட்சத்திர பிரபலங்கள் அனைவரும் சிறப்பு வழியில் வெளியேற்றப்பட, வெண்பா தனது மகளுக்காக காத்திருந்தார். நிமிடங்கள் பல கரைந்த பின்னும் மகள் வராததில் பதட்டமானார். நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் மீண்டும் செல்ல மான்சி சென்ற தடம் தெரியவில்லை.

ஏகலைவனின் ஆட்கள் மான்சியை நெருங்குவதற்கு முன்பே வேறு யாரோ அவளை கடத்தியிருந்தனர். இதை அவன் ஆட்கள் அவனிடம் தெரிவிக்க

"நம்ம வேலை மிச்சம். எங்க போறாங்கன்னு வாட்ச் பண்ணுங்க." என்று கட்டளையிட்டான்.

யாரிடம் கேட்டாலும் மான்சி பற்றிய தகவல் சரியாக கிடைக்கவில்லை. நேரம் செல்ல செல்ல பயத்தில் நடுங்க ஆரம்பித்த வெண்பா தன் கணவன் திலகனுக்கு அழைத்து விசயத்தை கூற, அடுத்ததாக அவர் கூறியதின் பாதகங்கள் புரிந்தாலும் மகளுக்காக செய்ய ஆரம்பித்தார்.

மகளின் பாதுகாப்பிற்கு முன் வரக்கூடிய பின் விளைவுகள் எதுவும் அந்த தாய் தந்தைக்கு பெரிதாக தெரியவில்லை. காவல்துறையில் புகார் அளிப்பதன் மூலம் மான்சி காணாமல் போனது வெளியே தெரிந்தால் அவதூறு செய்திகள் பரவ கூடும் என்றாலும் தற்போது மகளின் நலம் மட்டுமே அவர்களுக்கு முக்கியமானது.

திலகன் நேரத்தை கடத்த விரும்பாது தனது காவல்துறை நண்பனை அழைத்து விசயத்தை கூற அடுத்த நொடி விசாரணை ஆரம்பமானது. நடப்பதை அறிந்த விஜித் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

"அவங்க என்ன செய்யணுமோ செய்யட்டும். யாரும் அவங்கள தடுக்க வேண்டாம்." என்று மட்டும் கூறி விட்டு அலைப்பேசியை வைத்து விட்டான்.

"பரவாயில்ல மானம் மரியாதைன்னு யோசிக்காம உன் அப்பா அம்மா உன்ன பத்தி யோசிக்கிறாங்க. அவ்வளவு பாசம்." என்று இகழ்ச்சியாக கூற, இது எதையும் உணர முடியாது வகையில் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள் வெண்பா திலகனின் செல்ல மகள்.

குடும்பத்தினரிடம் கூட காட்டாமல் பொத்தி பொத்தி வளர்த்த மகள் காணாமல் போனதில் கலங்கி நின்ற இருவரும் வழி தெரியா காட்டில் தனித்து நிற்பது போல தவித்து நின்றனர்.

தவம் போல் வளர்த்த மகளின் நிலையறியாது தவித்தவர்களுக்கு கவலை கொள்ள கூட நேரமில்லாது காவல்துறையும்,ஊடகங்களும் சூழ்ந்துக் கொண்டனர். அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் சமயம் மகளை தேடும் பணியும் இருக்க அதில் மனதின் கவலையை மனதோடு புதைத்துக் கொண்டனர்.

மறந்து விட்ட சொந்தங்கள் இனி தொடர்கதையாக தொடர போவதையும் அதனால் தங்கள் வாழ்க்கை மாற போவதையும் யார் அவர்களிடம் கூறுவது.

பொழுது விடிவதற்கு முன் மான்சி கடத்தப்பட்ட செய்தி காற்றை விட வேகமாக ஊடகங்கள் பரப்ப, செய்தியுடன் வதந்திகளும் சேர்ந்தே பரவியது.

"அந்த வெண்பா நம்ம கிட்ட அடங்காம ஆடுனா. அதான் கடவுள் அவ பொண்ணு மூலமா கூலி கொடுத்துட்டாரு. இந்நேரம் எவன் கூட ஓடி போயிருக்காளோ." என்று உறவுகளே மான்சியை பற்றி முழுதும் தெரியாத போது அவள் ஒழுக்கத்தை களங்கப்படுத்தி பேசிக் கொண்டிருந்தனர்.

இப்படி அனைவரின் சிந்தனையையும் நிறைத்த மான்சி சிந்திக்கும் நிலையில் இல்லாது இருட்டில் மூழ்கியிருந்த பாழடைந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாள்.

தொடரும்...
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
Hi dear
ஒரு வழியா நானும் கதையை ஆரம்பிச்சிடேன். பாதி கதை முடிஞ்சிட்டு. மீதி பாதி முடிக்கிற வரை எந்த ஒரு அமானுஷ்ய சக்தியும் நடுவுல வராம இருக்கனும். நான் கதைய ஒழுங்க முடிக்க கடவுள வேண்டிக்கோங்க மக்களே. அப்புறம் கருத்து முக்கியம் பிகிலு....

https://aadvikapommunovels.com/threads/ஏகலைவனின்-ஏந்திழையாள்-கருத்து-திரி.1739/
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 2

மான்சி ஏந்திழையாள்.

அவளை பற்றிய எண்ணம் தோன்றும் போதே இலவச இணைப்பாக ஏதேதோ எண்ணங்கள் தோன்றி விஜித் ஏகலைவனிடம் வன்மம் பல நூறு மடங்கு அதிகரித்தது. அவன் எண்ணத்தின் நாயகியே யாரிடமிருந்து ஓடுகின்றோம் என்று தெரியாமல் இருட்டில் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தாள்.

பலத்த பாதுகாப்பிற்கு நடுவே இருக்கும் தனது சாம்ராஜ்யத்திலிருந்து ஒரு சிறு பெண் எளிதாக இன்னொருவன் கடத்தியதையே அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதுவும் தான் இருக்கும் போது தன்னிடத்தில் இருந்து எப்படி அவளால் தப்பிக்க முடிந்தது என்னும் கேள்வி அவனை வண்டாக குடைய ஆரம்பித்தது.

தன் பெயர் எந்த வகையிலும் வெளி வராத வகையில் திட்டமிட்டு அனைத்தையும் செய்து முடித்திருக்க, அவனிடத்திலிருந்தே இன்னொருவர் மான்சியை கடத்தியிருந்தனர்.

பாழடைந்த கட்டிடத்தில் அவளை அடைத்து வைத்திருக்க, அங்கிருந்து தன் ஆட்கள் மூலம் அவளை தன்னிடத்திற்கு கொண்டு வந்துவிட்டான்.

இப்படி விஜித் ஏகலைவனின் ஆட்களால் கடத்தப்பட்ட மான்சி ஏந்திழையாள் வெளி உலகிற்கு தெரியாமல் அவனது ரகசிய விருந்தினர் மாளிகைக்கு கொண்டு வரப்பட்டது வரை அவன் திட்டம் சரியாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது.

ஆனால் மாளிகையிலிருந்து அவள் எப்படி வெளியேறினாள் என்று தான் யாருக்கும் தெரியவில்லை. நள்ளிரவில் மை இருட்டில் அடர்ந்த காட்டின் நடுவே பெண்ணவள் தனியாக சென்றிருக்க முடியாது என்று உறுதியாக நம்பியவன் யார் அவளுக்கு உதவியிருக்க கூடும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

ஆறு மணி நேரம் கடந்த பின்னும் மான்சி தன் வீட்டிற்கு வந்து சேரவில்லை என்பதிலே அவள் இன்னும் காட்டை சுற்றியிருக்கும் தன் ஆட்களை கடந்துச் செல்லவில்லை என்பது புரிந்தது.

எப்படியும் அவள் இந்த காட்டிற்குள் தான் இருப்பாள் என்று தன் ஆட்களை அனுப்பி விட்டு தேடுதல் வேட்டையில் இறங்கினான்.

ஒரு மணி நேரம் கடந்த பின்னும் மான்சி இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை. மேலும் காத்திருக்கும் பொறுமையின்றி அவனே நேரில் சென்றான் மான்சியை தேடுவதற்கு.

தன் ஆட்கள் சென்ற இடங்களை தவிர்த்து பிற இடங்களில் அவனும் தேட, அப்போதைக்கு அதிஷ்டம் அவன் வசம் தான் போல. விஜித் தேட ஆரம்பித்த சில மணி நேரத்திலேயே அந்த சிங்கத்தின் இரை அதன் கண்களில் சிக்கியது.

மயக்கம் தெளிந்து எழுந்த மான்சிக்கு தான் கடத்தப்பட்டிருக்கின்றோம் என்பது தெளிவாக புரிந்தது. வெளியே கேட்கும் பேச்சு குரலிலே பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்க கூடும் என்று உணர்த்தியது. கத்தி அழுவதோ, சண்டையிடுவதோ சரியாக இருக்காது என்பதால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தாள்.

அதே நேரம் முக்கியமான தொலைப்பேசி அழைப்பை தவிர்க்க முடியாது தனது அறைக்குச் சென்ற விஜித் சீக்கிரம் வர முடியாது அவன் அலுவலக அறைக்குள்ளே இருக்க வேண்டியதாகிற்று.

மான்சி புத்திசாலி தான். பெற்றவர்களுக்கு சுட்டிப் பெண்ணாக இருந்தாலும், வெளி உலகை தனியாக சந்திக்காத பயந்த சுபாவம் உடையவளுக்கு நிலமையை எப்படி எதிர் கொள்வது என்று தெரியவில்லை.

"ம்மா பயமா இருக்கு. சீக்கிரம் வா ம்மா." என்று மான்சி மனதுக்குள் பேசிக் கொண்டிருக்கும் போதே மின் விளக்குகள் அனைத்தும் அணைந்தது.

"என்னடா இது பாஸ் இருக்கிற நேரத்தில கரண்ட் போயிட்டு. அவர் வந்து திட்ட ஆரம்பிக்கிறதுக்குள்ள யாராவது எமெர்ஜென்சி லைட்ட எடுத்துட்டு வாங்க." என்று முரட்டு குரல் கேட்க, ஆட்கள் அங்கும் இங்கும் நடக்கும் சப்தம் கேட்டது.

தைரியமானவர்களையும் அச்சம் கொள்ள செய்யும் இருள் மான்சிக்கு மட்டும் மன திடத்தை கொடுத்தது. "ம்மா இந்த இருட்டு எனக்கு நீ என் கூடவே இருக்கிற தைரியத்த கொடுக்குது." என்று தனக்கு தானே பேசிக் கொண்டு பதுங்கி பதுங்கி மாளிகையை விட்டு வெளியேறினாள்.

"சினிமால பாட்டு பாடுற அந்த குட்டி ரெம்ப ஜோரா இருக்கிறா. சும்மா தொட்டு பார்த்ததுக்கே ஜிவ்ன்னு இருக்கு. மொத்தமா ஒரு தடவை பார்த்துட்டா போதும்." என்று மதில் சுவருக்கு அருகே காவல் இருந்தவன் தன் உடன் இருப்பவனிடம் கூற, அதை கேட்டுக் கொண்டிருந்த மான்சியின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

தான் மயக்கத்தில் இருக்கும் போது தன் உடலை எங்கெல்லாம் இவர்கள் தொட்டிருக்க கூடும் என்று நினைக்க நினைக்க உடல் முழுவதும் அவமானத்திலும் ஆத்திரத்திலும் பற்றி எரிய ஆரம்பித்தது.

மாளிகைக்குள் கேட்ட ஆரவாரத்தில் இருவரும் உள்ளேச் செல்லும் அவசரத்தில் கதவை பூட்டாமல் காவல் காத்தவர்கள் இருவரும் செல்ல அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மான்சி தப்பி ஓடினாள்.

விஜித் தன் அறையில் இருள் பரவியதும் நேராக ஓடிச் சென்றது மான்சி இருக்கும் இடத்திற்கு தான். அவள் இருந்த இடம் காலியாக அடுத்த நொடி மாளிகை பரபரப்பானது.

காவலர்கள் மீது நம்பிக்கையின்றி மான்சியை தேடிக் கொண்டு வந்தவன் கண்களில் சிக்கிக் கொண்டாள் தூரத்தில் நடந்து வரும் மான் விழிகளின் சொந்தக்காரி. அவள் அணிந்திருந்த வெண்பட்டு இருளிலும் அவளை தனித்து காட்டியது.
வெகு நேரம் எந்த பக்கம் செல்வது என்று தடுமாறிய மான்சி மனதிற்கு சரி என்று தோன்றிய திசையில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். கால்களை பதம் பார்க்கும் முட்களோ, கூரிய கற்களோ அவள் கவனத்தில் இல்லை. எப்படியாவது தாயிடம் சென்று விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.

காட்டிற்குள்ளே சில மணி நேரங்களாக நடந்தவள் அதிஷ்டவசமாக தார் சாலையை கண்டுக் கொண்டாள். சந்தோஷத்தில் புன்னகைத்தவள் எந்த புறம் செல்லலாம் என்று யோசித்து இரு பக்கமும் பார்த்து விட்டு இடபுறம் நோக்கிச் செல்லும் சாலையில் தன் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி ஓட ஆரம்பித்தாள்.

மான்சி தார் சாலையை அடைவதற்கும் விஜித் கார் அவளை நெருங்கி வருவதற்கும் சரியாக இருந்தது. திடீர் என்று தோன்றிய கார் விளக்கின் ஔியில் இருட்ட ஆரம்பித்த கண்களை திறக்க முடியாத மான்சி இரு கைகளையும் உயர்த்தி உதவி கேட்க, அவள் அருகில் கார் நின்றது.

தன்னை தாக்க வரும் வேடனிடமே உயிரை காக்க உதவி கேட்டது மான் குட்டி. விஜித் ஏகலைவன் காரின் கதவை திறந்துக் கொண்டு கீழே இறங்க, அவனிடம் வந்த மான்சி

"சார் ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. என்னை யாரோ கடத்திட்டு வந்திருக்கிறாங்க. அவங்க வர முன்னாடி என்ன பக்கத்தில இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்ல விட்டுடுங்க ப்ளீஸ்." என்று உதவிக்காக கெஞ்ச ஆரம்பித்தாள்.

"ம்ம்..." என்று மட்டும் கூறி காரில் ஏறிக்கொள்ள அனுமதி அளித்தான்.

விஜித் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்ததும் அவன் விழிகள் மான்சியை ஒரு முறை தொட்டு மீண்டது.
குரலை செருமி தன்னை சமாளித்துக் கொண்டவன் "அஜெஸ்ட் யுவர் செல்ஃப்." என்று கூறி விட்டு இறங்கிக் கொள்ள, அதன் பிறகே மான்சி தான் இருக்கும் நிலை உணர்ந்தாள்.

கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் காட்டிற்குள்ளே ஓடிக் கொண்டிருந்தவளின் வெண்பட்டு ஆங்காங்கு கிழிந்திருந்தது. மேலும் ஒற்றையாக விடப்பட்டிருந்த முந்தானை கீழே இறங்கி அவளது இளமையை வஞ்சகமின்றி காட்டிக் கொண்டிருந்தது.

அந்நிய ஆணின் முன் இப்படியான தன் நிலையை நினைத்து வருந்தியவள் முடிந்தளவு தன்னை திருத்திக் கொண்டாள். இடது பக்க கை சட்டை கிழிந்திருக்க முந்தானையால் மூடிக் கொண்டாள்.

கார் கண்ணாடியை இரு முறை தட்டி விட்டு உள்ளே வந்தவன் தண்ணீர் பாட்டிலை நீட்ட "வேண்டாம்" என்று மறுத்து விட்டாள்.

"ஏன்?" என்று கேட்டவனுக்கு

"வேண்டாமே." என்ற கெஞ்சலான பதில் மட்டுமே வந்தது. கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் பட்டினியாக இருந்த போதும் யாரென்று தெரியாதவரிடம் நீர் வாங்கி பருக பயம் கொண்ட மனது இடமளிக்கவில்லை.

அதற்கு மேலும் அவளிடம் இறங்கிச் செல்ல மனமின்றி பாட்டிலை பின்புற இருக்கையில் போட்டு விட்டு வண்டியை தனது மாளிகை இருக்கும் வழியில் திருப்பினான்.

பதட்டத்தில் இருந்த மான்சியும் செல்லும் வழியை கவனிக்கவில்லை. தன்னிடம் கண்ணியமாக நடந்துக் கொண்டவனிடம்

"உங்கள யார் கடத்தினாங்க? எப்படி தப்பிச்சீங்க?" என்று தனக்கு தேவையான பதில் கிடைக்க கேள்விகளை அடுக்க ஆரம்பித்தான்.

மான்சி பயத்திலும் பதட்டத்திலும் அவன் விசாரணை தொனியில் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மற்ற நேரமாக இருந்தால் எதற்காக? என்ற கேள்வியை மட்டுமாவது கேட்டிருப்பாள்.

மான்சி உடன் யாரும் இல்லை. பின் யார் உதவியால் இல்லை எப்படி தப்பினாள் என்று அவனுக்கு தெரிய வேண்டியது இருந்தது. மான்சியும் நடந்ததை ஒன்று விடாமல் கூறி முடிக்க, தனது காவலர்களின் கவனக்குறைவில் ஸ்டேரிங் வீலை பற்றியிருந்த அவனது கரத்தில் அழுத்தம் கூடியது.

"கதவு லாக் பண்ணாம இருந்ததால வெளி வந்துட்டீங்க. பட் தனியா இருட்டில எப்படி இவ்வளவு தூரம் வர முடிஞ்சது." என்று விஜித் கேட்டுக் கொண்டே தனது காரின் திரையை காட்ட மணி நான்கு ஐம்பத்தி எட்டு என்று காட்டியது.

அதிகாலை வேளையிலும் ஓங்கி உயர்ந்த மரங்களை தாண்டி சூரிய கதிர்கள் உள்ளே வர முடியாது அந்த இடமே இரவு போலத்தான் இருந்தது.

"சார்... மான்சிய முதலில் கடத்தின கும்பல பிடிச்சிட்டாங்க. இப்போ போலீஸ் நம்ம இடத்துக்கு பக்கத்தில வந்துட்டாங்க." என்று விஜித் அலைப்பேசிக்கு ரவி எண்ணில் இருந்து தகவல் வந்து சேர்ந்தது.

விஜித் கேள்விக்கு பதிலளிக்க தயங்கிய மான்சி வாயை திறப்பதற்கு முன் அவர்கள் காருக்கு எதிரே இன்னும் இரு கார்கள் நெருங்கி வந்துக் கொண்டிருந்தது.

எதிரே வருவது போலீஸ் வாகனம் என்பதை கண்டுக் கொண்ட விஜித் திட்டத்தின் முதல் தோல்வியில் ஏற்பட்ட கோபத்தில் அருகில் இருப்பவளை பார்க்க அவளோ கண்களை மூடிக்கொண்டு இருந்தாள்.

இனி தான் காரை திருப்பி கொண்டுச் சென்றால் தன் மீதும் சந்தேகம் ஏற்படும் என்பதால் விஜித் தனது காரின் வேகத்தை குறைத்துக் கொண்டான். காரில் இருந்து இறங்கும் முன் என்ன பேச வேண்டும் என்று அவன் மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டான்.

ஆனால் அதற்கு அவசியம் இல்லாதது போல கடத்தியவர்களிடமிருந்து மான்சி தப்பி வந்த போது தனக்கு இவர் தான் உதவினார் என்று கூற, காவலர்கள் மான்சியை அழைத்துக் கொண்டு புறப்பட்டனர்.

மான்சி காவலர்களுடன் புறப்பட்டதும் விஜித் தனது இடத்திற்கு வந்ததும் அனைத்து காவலர்களையும் தன் முன் வர கட்டளையிட்டான்.

இரு விரல் கொண்டு கையில் இருந்த கத்தியின் கூர்மையை பரிசோதித்த விஜித் தன் முன் நின்ற அனைவரையும் அழுத்தமாக பார்க்க, அவன் அம்பு போன்ற கூரிய பார்வையை எதிர்கொள்ள முடியாது தலை குனிந்து நின்றனர்.

"எப்படி?" என்று ஒற்றை வார்த்தையில் அவன் கேள்வி எழுப்ப, அதற்கு விடை தெரிந்தாலும் அதை வாய் திறந்து கூறும் தைரியம் தான் யாரிடமும் இல்லை.

தன் கேள்விக்கு பதில் வராததில் எழுந்து நின்றவன் அனைவரையும் பொதுவாக பார்த்து விட்டு "கோ?" என்று கூற, அதன் அர்த்தம் உணர்ந்த காவலர்கள் அனைவரும் பதறி விட்டனர்.

"சார்... வேண்டாம் சார்... தெரியாம தப்பு நடந்திட்டு. எப்படியாவது அந்த மான்சிய திரும்ப கொண்டு வந்திடுவோம்." என்று காலை பிடித்து மன்றாட, விஜித்தோ எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

தனது உதவியாளன் ரவியை பார்த்து செய்ய வேண்டியதை பார்வையால் கட்டளையிட்டு விட்டு தனது அறைக்கு வந்தான். அடிப்பட்ட வேங்கையாக சீறிக் கொண்டிருந்தவன் எண்ணம் முழுவதும் அந்த ஒருத்தியின் மீது மட்டுமே.

மீண்டும் மீண்டும் மான்சியை பற்றி யோசித்துக் கொண்டிருந்தவன் "ரவி..." என்று கத்த அடுத்த நிமிடம் ரவி அவன் முன் நின்றான்.

"இவ்வளவு சீக்கிரம் போலீஸ் எப்படி இந்த காட்டுக்குள்ள வந்தாங்கன்னு எனக்கு தெரியணும். அண்ட் மான்சி மெடிக்கல் ஹிஸ்டரி அண்ட் ரிப்போர்ட் வித் இன் ஒன் டேல எனக்கு கிடைக்கணும்." என்று கூற, புரியாத பாவனை ரவியிடம்.

"போலீஸ் பத்தி கேட்டது ஓகே. பட் மெடிக்கல் ரிப்போர்ட்???" என்று கேள்வியை சற்று பயத்துடனே கேட்டான்.

"இஃப் ஐ எம் ரைட் மான்சிக்கு எதோ மெடிக்கல் இஷ்யூஸ் இருக்கு. அது என்னன்னு எனக்கு தெரிஞ்சாங்கணும்." என்று கூற, ரவி அதை பற்றி விசாரிக்க புறப்பட்டான்.

"இன்னைக்கு நீ என் கிட்ட இருந்து தப்பிச்சிருக்கலாம். பட் கூடிய சீக்கிரம் தப்பிக்க முடியாத படி நீயா வந்து மாட்டிக்க தான் போற." என்று அடிப்பட்ட வேங்கை போல உறுமலாக கூறியவன் அடுத்த திட்டத்தை தீட்ட ஆரம்பித்தான்.

அதே நேரம் மகள் நலத்துடன் வந்துவிட்டதை உறுதி செய்துக் கொண்ட வெண்பா "உனக்கு இருக்கிற பிரச்சனை யாருக்கும் தெரியல தானே?" என்று கேட்க,

"நோ ம்மா. யாருக்கும் தெரியாது." என்று கூற, தாய் மகள இருவருக்கும் ஒரு வித நிம்மதி. விரைவில் அதை பறிக்க ஒருவன் வர போவதை அப்போது இருவரும் அறிந்திருக்கவில்லை.

தொடரும்...

ஹாய் டியர்.
முந்தய பதிவிற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அடுத்த அத்தியாயம் வெள்ளி கிழமை காலையில் வரும். வாரம் மூன்று அத்தியாயம் வரும்.
திங்கள், புதன் மற்றும் வெள்ளி
சிலர் கதையை முடித்து முழுவதும் ஏழுதுவீர்களா என்று கேட்டாங்க. நிச்சயம் முடித்து விடுவேன். பாதி கதை முடிந்து விட்டது. எழுத்து பிழை சரி பார்த்து மீதி கதையும் எழுதி ஜூலை இறுதிக்குள் கதை முடிந்துவிடும்.
சோ பயப்படாம படிங்க.
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்
வேற என்ன சொல்ல போறேன் கருத்து முக்கியம் பிகிலு

 
Last edited:
Status
Not open for further replies.
Top