அத்தியாயம் : 2
வேண்டா வெறுப்பாக, அன்னையின் சந்தோஷத்திற்காக மட்டுமே திருமணத்திற்கு தலையை ஆட்டி வைத்த ஜெய்க்கு அன்னையின் ஆர்வ குறைவும் தெரிய வந்தது.
"உங்களுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லையா?" என்று கேட்ட மகன் காதலை அமர காதலாக எண்ணி "எனக்கு விருப்பம் தான் ராசா" என்று சொல்லி சென்றிருந்தார் கலாவதி.
அவனே எப்போ எப்போ என்று அன்னை மனம் நோகாமல் திருமணத்தை நிறுத்த சந்தர்ப்பம் தேட, தொக்காகா வந்து சிக்கிக் கொண்டது பலியாடு.
அவள் உடல் மொழியில் அவளை அறிந்து கொண்டான். பயந்தாகோழி தன் கைபொம்மையாக மாற்றி விடலாம் என்று அவளை பார்த்த அரை நொடியில் ஓநாய் மூளை திட்டம் தீட்டி மான்குட்டிக்கு குடைப்பிடிக்க, அவனைப் பற்றி முழுதாக அறியாமல் வந்து சிக்கி கொண்டது புள்ளி மான்.
மயங்கி சரிந்தவளை இடையில் கைவிட்டு தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான். மீண்டும் கேள்விகளை கேட்டு பத்திரிக்கையாளர்கள் புற்றீசலாக நச்சரிக்க, ஒரே ஒரு பார்வை, ஒரே ஒரு வார்த்தை "அதான் சொன்னாங்கல்ல என் குழந்தை இங்க வளருதுனு. டாக்டர் சர்டிஃபிகேட் வேணுமா?" திமிராக வந்தது பதில்.
"ஜெய்ய்ய்..." அலறியது வேறு யாருமில்லை மனையில் இருந்த மனிஷா தான். எங்கே சொத்துகள் கை நழுவி போய் விடுமோ என்ற பயம். அது அவள் கைநழுவி, கன்னியாகுமரிகாரி இடுப்பு சொருகளுக்கு எப்போதோ போய் விட்டதே.
அப்போ விடியகாலை மூனு மணிக்கே எழுந்து நான் அடிச்ச அரைகிலோ பவுடரும் வேஸ்டா? நியாயம் கேட்க எழுந்து விட்டாள் மனிஷா.
"ஜெய் இது உண்மை இல்லனு சொல்லுங்க. நான் தான் உங்க மனைவி. நீங்க என்னை தான் கல்யாணம் செஞ்சிக்கணும்" வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ள, அவள் கண்ணீர் நாடகம் ஒன்றை அரங்கேற்ற,
"நான் என்ன பண்ணட்டும்? ஒரே மேடையில ரெண்டு கல்யாணம் பண்ணிடவா" என்று பத்திரிக்கையாளர் கூட்டத்தை பார்த்தான்.
"கூட்டத்தில் ஒருவன், அதெப்படி ரெண்டு கல்யாணம் பண்ணுவீங்க" என்று கேட்க
"ஆமா நான் ஒத்துக்க மாட்டேன். நீங்க என்ன மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்கனும்." முழு சொத்தும் எனக்கே எனக்கு. எவளுக்கும் பங்கு கிடையாது பதறினாள் மனிஷா. "முதல்ல அவள கீழ விடுங்க" நடப்பது எதுவும் அறியாது சொகுசாக அவன் நெஞ்சில் சாய்ந்து கிடந்தவளை பிடித்து இழுக்க போனவள் ஜெய்யின் ஒற்ற பார்வையில் அடங்கி, உள்ளுக்குள் கருகி, முகம் சிவக்க நின்றிருந்தாள்.
"ரெண்டு கல்யாணம் பண்ண சட்டத்துல இடம் இருக்கு. உங்க ரெண்டு மனைவிக்கும் சம்மதம்னா தாராளமா பண்ணுங்க" கிசு கிசு நியூஸ் பார்ட்டி ரேட்டிங் ஏத்த பாய்ண்ட் எடுத்து கொடுக்க, "அதெப்படி சூப்பர் மாடல், த்ரீ டைம் மிஸ் இந்தியா மனிஷா மேடம் இதுக்கு ஒத்துப்பாங்க?" மனிஷாவால் பாதிக்கப்பட்ட ஒருவன் அவள் பெருமையை சொல்லி இழுத்து விட,
மனிஷாவும், "ஹாங்... என் இமேஜ் டேமேஜ் ஆகிடும்" என்றால் ஜெய் கை வளைவில் கிடந்த கறுப்பழகியை துட்சமாக பார்த்த படி.
"அதான் அவங்களே சொல்லிட்டாங்களே... பெண் குலத்தின் விடிவெள்ளி அவங்க, சிங்க பெண், இன்னொரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்து இனியும் உங்களை கல்யாணம் செஞ்சிக்க மாட்டாங்க" என்று அவள் சொன்ன ஒற்றை வார்த்தையில் அவளை ஸ்க்ரீனில் இருந்து தூக்கி வீசி விட்டான்.
என்றோ ஒருநாள் பேட்டி எடுக்க போனவனை அவள் உதாசீனப்படுத்தி இருக்க, இன்று அவன் நேரம் பார்த்து பழிவாங்கி விட்டான். 'இப்போ தான் டா என் பாரமே குறைஞ்சி இருக்கு' என்ற நிம்மதி அவனுக்கு. யாரையும் எந்த சூழலிலும் உதாசீன படுத்தாதீங்க. நேரம் வந்தா எறும்பு கூட ஹெலிகப்டர்ல வந்து உங்க கனவை கலைக்கும்.
'எத! நான் எப்போ டா கல்யாணம் பண்ண மாட்டேன் சொன்னேன்' அவள் ஙே என்று விழித்துக் கொண்டு நிற்க, அவள் அருகே வர நினைத்த அவள் அன்னைக்கு தன் கரத்தால் கேட் போட்டு தடுதிருந்தான் தினேஷ்.
நடப்பவை யாவையும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தன் அன்னையை மட்டும் ஜெய் விழிகளால் அழைக்க, அவரும் குழப்பம் நீங்கா முகத்துடன் அவன் அருகே வந்தார்.
அவர் அருகே வந்ததும் தன் நெஞ்சில் கிடந்தவளை அவர் கையில் கொடுக்க, அவரும் தன் தோளோடு தங்கி பிடித்துக் கொண்டார். "முகூர்த்த நேரம் முடிய போகுது. யார் கழுத்துலயாவது தாலி காட்டுறேளா?" முழு பேட்டா உண்டா, இல்லை கல்யாணம் கலவரத்துல நின்னு பாதி பேட்டாவோட ஆத்துக்கு போகணுமா? என்னும் வகையில் ஐயர் கேட்க,
ஜெய்யும் "கேள்வி முடிஞ்சதா" என்று கேட்டுக் கொண்டே தாலி கட்ட போனான். "சார் மயக்கமா இருக்க பொண்ண..." பத்திரிக்கையாளனில் மற்றொருவன் ஏதோ சொல்ல வர, "கர்ப்ப கால மயக்கம். கொஞ்ச நேரத்தில சரியாகிடும்" என்று தினேஷ் தன் பாஸின் செயலுக்கு ஒத்து ஊதினான்.
கீழே பேரதிர்ச்சியில் நின்றிருந்த இளமதியை திருப்திகாரமான புன்னகையுடன் பார்த்தவன் விழிகள் எள்ளும் கொள்ளும் வெடிக்க வயிறெரிய முறைத்து கொண்டிருந்த மனிஷா மீது ஏளனமாக படிந்து, தன் அன்னை தோளில் மயங்கி கிடந்த பேதையவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு, பொன் தாலி கொடியை அணிவித்து ஊரார் முன் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான்.
சிறிய சலசலப்பு கூட்டத்தில். கடைசி நேரத்தில் பெண் மாறி விட்டது என்று. 'நீ யார கட்டினா எங்களுக்கு என்ன? பத்திரிக்கை தந்த, தொழில் முறை நட்பில் விரிசல் வந்துவிட கூடாதுனு வந்தோம்' என்று மேல் தட்டு வர்க்கத்தின் ஒதுங்கி நிற்கும் குணத்தால் பெரிதாக எந்த பிரச்சனைகளும் இல்லை.
பாலா தான் மகன் கையால் தாலி ஏறியது கூட உணர்வின்றி, மனைவி தோளில் மயங்கி கிடந்த அப்பாவி பெண் மீது கழிவிரக்கம் கொண்டு பாவமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தார். யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டால் யார் என்ன செய்ய முடியும். (எலி குட்டி சைஸ்ல இருக்க அவ யானையா என்று கேட்க படாது.) மயங்கி விழுந்த புள்ளைய ஹாஸ்பிடல் கூட்டி போகாம தாலிய கட்டி மனைவியாக்கி கொண்டான் கேடி.
திருமணமும் சிறப்பாக முடிந்திருக்க, மேடையை விட்டு இறங்கிய ஜெய் "நைட் வரை அவ கண்ண திறக்க கூடாது" தினேஷ்க்கு உத்தரவிட்டவன், "க்ளியர் பண்ண வேண்டிய ஃபைல்ஸ் கொஞ்சம் இருக்கு" என்று வேக நடையுடன் சென்று விட்டான்.
சிறிது சிறிதாக குளோரோ ஃபார்ம் கொடுத்து அவளை மயக்கத்தில் வைத்தே, இரவுக்கு அவளை தயார் படுத்தி அறையில் போட்டு விட்டு சென்றார்கள்.
இதோ இப்போது மிஸஸ் ஜெய்யாக, அவன் கைகளை தொட்டு அழைத்து வந்ததற்கே உடல் நடுங்கி அமர்ந்து இருந்தவள், அவன் வயிற்றில் கை வைக்கவும் பதறி எழுந்து நின்றாள்... இல்லை இல்லை அவன் காலிலே விழுந்து விட்டாள்.
"நான் காலைல சொன்னதெல்லாம் பொய் தான். என்ன எதுவும் பண்ணிடாதீங்க." ஒப்பாரி வைத்தவள் உயிர் பயத்தில் காலை பிடிக்கவும் தயங்கவில்லை.
அவன் தேவைக்கு எத்தனை உயிரையும் வதைப்பான் என்பதை கண் முன்னே பார்த்தவள். எங்கே கொன்று விடுவானோ என்ற பயம் சூழ்ந்தது.
கண் மூடி கவுந்து கிடந்து கதறியவள், எங்க கால காணோம் என்று கண் திறக்க, அவனோ கால்கள் இரண்டையும் கட்டிலில் நீட்டி, கால் மேல் கால் பிணைய விட்டபடி சாய்ந்து அமர்ந்து அவளை தான் சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தான், சொல்லு உன் கதையையும் கேட்போம் என்ற தோரணையில்.
எச்சில் கூட்டி விழுங்கியவள் "உங்கள பழி வாங்க தான் அப்படி சொன்னேன்" என்றால் எழுந்து நின்று விழிகளில் வழிந்த நீரை புறங்கையால் துடைத்த படி.
உலோகங்களை உருக்கும் தொழிற்சாலை ஒன்றை தென்கோடியில் நிறுவி இருந்தான் ஜெய் கிருஷ்ணா. அவனுக்கு இருக்கும் பல தொழிலில் அதுவும் ஒன்று.
அவன் சொந்த இடத்தில் தான் பல கோடி செலவழித்து ஆலை அமைத்து, செம்பு கம்பி மற்றும் கந்தக அமிலம், பாஸ்பரிக் அமிலம் என உற்பத்தி செய்தான்.
ஆலையில் இருந்து விசவாயு கசிந்து சுற்றி இருந்த மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சுற்றி எங்கிலும் பச்சை பசேலென விவசாய பூமி. அதன் நடுவே இவன் ஆலையை அமைத்து நிலத்தடி நீர் மற்றும் காற்றை மாசுபடுத்தி பெரும் கேடினை ஏற்படுத்தி கொண்டிருந்தான். விளை நிலம் தன் தன்மையை இழந்து உவர் நிலமாக மாற துவங்கியது.
வெள்ளி மலை வெண்கல மலையாக மாறியது.
விவசாயத்தை நம்பி இருந்த கிராம மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்க பட்டது. புகார் செய்தால், 'நிலத்தை எனக்கு வித்துடுங்க. எல்லாருக்கும் என் கம்பெனில நானே வேலை தரேன் பிராப்ளம் சால்வ்' என்று கூறி சென்றான்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி கலெக்டர், மினிஸ்டர் வரை புகார் கடிதம் கொடுத்து ஆலையை மூட சொல்லி கோரிக்கை வைத்தார்கள். அவன் பண பலம் அவர்களின் கோரிக்கைகளை நிராகரிக்க வைத்தது.
இந்த நிறுவனத்திலிருந்து இதுவரை 82 முறை விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கந்தக-டை-ஆக்சைடு எனும் நச்சு வாயு தொழிற்சாலையில் இருந்து வெளியானதால், ஆலையைச் சுற்றியுள்ள பல கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தொண்டை வலி முதலான பாதிப்புகளும் ஆலைப் பகுதியில் இருந்த விவசாய நிலங்கள் முற்றிலும் கருகிப் போனது.
பல பிரச்சனைகள், போராட்டங்கள், பல உயிர் பலிகள் தாண்டி இன்றும் கம்பீரமாக இன்னும் எத்தனை தலையை வேண்டுமாலும் எடுப்பேன் வீழ மாட்டேன் என்று நின்று கொண்டிருக்கிறது.
ஆலையை மூட மாட்டேன் என்று திமிராக நிற்கும் அவனை எதிர்க்க வெளியே பெரிய கூட்டமே நிற்கிறது.
ஆனால் அவனோ அதை எதையும் பொருட்டாக கருதாது திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்தான்.
கிராம மக்கள் அவன் திருமண செய்தி அறிந்து, 'நாங்க இங்க வாழ வழியில்லாம இருக்கோம். உனக்கு கல்யாணம் கேட்குதா?' என்று வஞ்சம் கொண்டு நேத்து இரவு தான் பெரிய லாரியில் சென்னை வந்து இறங்கினார்கள்.
அவர்கள் கூட்டத்தில் ஒருத்தி தான் அறிவு சுடர். பிழைப்பின்றி பாதி பேர் ஊரை விட்டு சென்றிருக்க, பல ஏக்கர் நிலத்தை வைத்து வம்சா வழியாக விவசாயம் மட்டுமே செய்து வந்தவர்களால் திடீரென எல்லாத்தையும் விட்டு செல்ல முடியவில்லை.
அறிவின் தாய் தந்தை சிறு வயதிலேயே இறந்திருக்க, அறிவு சுடர் வளர்ந்தது எல்லாம் தந்தை வழி பாட்டியின் நிழலில் தான். ஏக்கர் கணக்கில் நிலம் இல்லை என்றாலும் தங்கள் வாழ்வாதாரம் கழிந்தது அதில் இருந்த சிறு அளவு நிலத்தில் தான். ஊரில் உள்ள பெண்களுக்கு எல்லாம் பதினெட்டு வயது பிறந்த உடனே கடமை என்று திருமணம் முடித்து அனுப்பி இருக்க, அறிவின் பாட்டியோ அந்த காலத்து பெண்மணி என்றாலும் படிப்பின் மகத்துவம் புரிந்தவர், "நீ படி ஆத்தா... பொம்பள புள்ளைக்கு படிப்பு தான் முக்கியம்" என்று அவளை படிக்க வைத்தார். அப்படிபட்டவரின் ஆசைக்காக தான் அந்த ஊரை விட்டு போகாமல் தங்கள் விளை நிலத்திற்காக போராட கிராம இளைஞர்களுடன் இணைந்தாள்.
ஆலையை மூட எந்த எல்லைக்கும் செல்லும் துணிவில் கிராம இளைஞர்கள். ஆலையை மூட மாட்டேன் என்று திமிரில் அரக்கன். 'என்னை அடக்க இந்த உலகத்தில எவனும் இல்லை' என்ற ஆணவம் அவனுக்கு.
"நாளைக்கு எங்க ண்ணே போராட்டம் பண்ண போறோம்? முதலமைச்சர் அலுவலகம் முன்னயா?" கேட்டவளிடம் "ஜெய் கல்யாண மண்டபத்துக்குள்ள" என்று சொன்ன இளைஞர் அணியின் தலைவன் தினகரனை அதிர்ந்து பார்த்தாள் அறிவு.
நம் உரிமைக்காக போராடுவது சரிதான். ஆனால் அடுத்தவன் வாழ்க்கையை அழிக்க உரிமை இல்லையே "வேணாம் ண்ணே கல்யாணம் முடிஞ்ச பிறகு மண்டப வாசல் நின்னு போராட்டம் பண்ணலாம்" அரக்கன் என்றாலும் அவனும் மனிதன் தானே அவனுக்காகவும் யோசித்தாள்.
"நாம ***மணமா ஓடினா கூட நம்ம பிரச்சனையை இங்க எவனும் கேட்க மாட்டான். நாளைக்கு அவன் கல்யாணத்துக்கு பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வருவாங்க. பிரச்சனை பண்ணி நியாயம் கேட்கலாம்" என்று ஏதேதோ பேசி தங்கள் திட்டத்தை சொல்ல, அதிர்ந்து விட்டாள் அறிவு சுடர்.
"இல்ல என்னால பண்ண முடியாது. பயமா இருக்கு" என்று பின் வாங்கிவளை, "இங்க இருக்கிறதுலயே நீ தான் தைரியமான பொண்ணு. நீயே இப்படி பயந்தா எப்படி? நீ குரல் விட்டு எல்லார் கவனத்தையும் உன் மேல திருப்பு. நாங்க புகுந்து பொண்ணுக்கு கற்பு எவ்வளவு முக்கியமோ அதே போல மண்ணுக்கு அதோட தன்மை முக்கியம். தாய் நாட்டு வளத்தை கெடுக்கிறான்னு நம்ம கோரிக்கைகளை அங்க இருக்கிற பெரிய மனுஷங்க முன்ன வைப்போம். என்னவெல்லாம் முயற்சி பண்ணியும் பாதி கிராமத்தை இழந்து நிற்கிறோம். மீதி காப்பாத்துறதும், முதலை வாய்க்கு போறதும் உன் கையில தான் இருக்கு" என்று ஏதேதோ இரத்தம் கொதிக்க பேசி அவளை அரை மனதாக சம்மதிக்க வைத்திருந்தனர்.
இந்த திட்டங்கள் அனைத்தும் இளைய தலைமுறைகளுடையது மட்டுமே. 'பொம்பள புள்ளையை வச்சி என்ன வேலை பார்க்கிறீங்க?' என்று பெரியவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே அவர்களிடம் மண்டப வாசலில் போராட்டம் என்று சொல்லி விட்டு, சிலர் மட்டும் வேலையாட்களோடு இணைந்து உள்ளே செல்ல திட்டம்.
திட்டப்படி இலை எடுக்க வந்த பெண்கள் மத்தியில் புகுந்து இளமதியுடன் அறிவும் உள்ளே வந்து சேர்ந்து விட்டாள். பாதுகாப்பு கெடுபிடியில் ஆண்கள் மாட்டிக் கொள்ள, அவர்களை நம்பி உள்ளே வந்து குரல் கொடுத்த அறிவுசுடர் அரக்கன் பிடியில் வாழ்நாள் கைதியாக மாட்டிக் கொண்டாள்.
வெளியே கூட்டம் கூடிய போதே, அசப்பு தெரியாது தினேஷ் லாரியில் எல்லாரையும் அள்ளி போட்டு அப்புற படுத்தி விட்டான். அவர்கள் நிலை என்னவென்று அறியாமல் இவள் இப்போது அரக்கன் முன் கண்ணை கசக்கி கொண்டு நிற்கிறாள்.
அவள் சொன்ன கதைகளை நிதானமாக கேட்டு முடித்தவன், "எனக்கு எதிரா இவ்வளவு பெரிய சதி வேலை நடக்கது தெரியாம நான் அப்பாவியா இருந்திருக்கேன் பாரேன்" என்று எதுவும் அறியா பச்சப்புள்ள போல அவன் தாடியை நீவிக் கொண்டே கேட்க, தவறு செய்த உணர்வில் தலை கவிழ்ந்து நின்றாள் அறிவு சுடர். "தினேஷ் நல்ல வேலைக்காரன்ல இந்த மாதிரி அனாவசிய கேஸ் எல்லாம் என் காதுக்கு கொண்டு வர மாட்டான். அடுத்த மாசத்துல இருந்து ஒரு பத்தாயிரம் ரூபா அவனுக்கு ஏத்தி கொடுக்கணும்" என்று சொன்ன வாய் மறுநொடியே "புலிக்கு காவல் இருந்து, எலியை கொட்டைய விட்டான். அதுக்கு என்ன பண்ணலாம்?" என்று அவளிடமே கேட்க மரண பீதி அவள் கண்ணில். கூடவே இளமதி நினைவு "இளா எங்க?" தொண்டையை விட்டு வெளிவராத குரலில் மெதுவாக கேட்டாள்.