
அத்தியாயம் 16
“அம்மா நான் என் ப்ரண்ட் கல்யாணத்துக்கு போயிட்டு வர்றேன்” என சப்துனிகா தன் பெட்டிக்குள் ஊருக்கு செல்வதற்கான துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள;..
“ஏன் டி.. இங்கே உன் கல்யாண வாழ்க்கையே அந்தரத்துல தொங்குது..” என்றதும் சட்டென சப்துனிகா அண்ணாந்து மேலே பாரக்க, சரணிகாவும் அவளைப் போல் அப்படியே மேலே பார்த்தார்..
“மேல என்னடி பார்க்கிற?..” என அப்பாவியாக கேட்ட அன்னையை பார்த்து உதட்டுக்குள் சிரித்தவள்,
“ஹான்.. நீங்க தானே சொன்னீங்க?.. அந்தரத்துல தொங்குதுன்னு.. அதான் எங்கே தொங்குதுன்னு பார்த்தேன்..” என்றவளின் தலையில் நச்சென்று கொட்டினா சரணிகா..
“அவுச்ச்.. அம்மாஆஆ..” என தலையை சப்துனிகா தேய்த்து விட,
“உன் அப்பாவுக்கு கொஞ்சமும் குறையாம அகங்காரம் பிடிச்ச கழுதை. மாப்பிள்ளையை காணுமாம் டி.. நானே பதறிட்டு இருக்கேன்” என சற்று பதற்றமாக சொல்ல,
“இந்த விஷயத்தை நீ அப்பாக்கிட்ட சொன்னீயா?..” என சற்றும் பதட்டம் இல்லாமல் கேட்டாள் சப்துனிகா
“சொன்னேன் டி, அவுக உனக்கும் மேல, கொஞ்சம் கூட பதட்டப்படாம இருக்காக..” என்றவளுக்கு, கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது..
தன் மகளின் வாழ்வு இனி என்னாகுமோ என்ற பயம் தான் அவருக்கு..
“சரி அழுகாச்சியை விட்டுட்டு, உன் ப்ரண்ட்க்கு போன் பண்ண வேண்டியது தானே..” என்றவளை பார்த்து உதடு சுழித்தாள் சரணிகா..
பின்னே அவரும் எத்தனை நாள் போனில் அழைப்பு விடுப்பது, போன் அணைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி தானே வந்துக் கொண்டேயிருந்தது..
“அவ போன் எடுத்தா, நான் ஏன்டி இப்படி கலங்கி நிற்கப் போறேன்..” என்ற அன்னையை இறுக்கக் கட்டிக் கொண்டாள்..
அவளின் அணைப்பில் ஒரு வித நிம்மதி சரணிகாவிற்கு..
“அம்மா, எதுக்கும் நீ கவலைப்படாதே, சப்துனிகா இருக்க பயமேன்?.” என தன் கைகளை ஆசீர்வாதம் செய்வதை போல் வைத்துக் கொண்டு சொல்ல,
“ம்க்கும். பயமே நீ தான்டி.. புருஷனைக் காணும்னு சொல்லுறேன். கொஞ்சமாவது அசருறீயா பாரு?.. அப்படியே கல்லுருண்டை மாதிரி உங்க அப்பாவை மாதிரியே சுத்துற?..” என திட்டிக் கொண்டே வெளியே செல்ல,
“உனக்கு என்னோடு சேர்த்து, அப்பாவையும் திட்டலைன்னா தூக்கம் வராதே..” என சப்துனிகா தன் போன், வாட்ச் எல்லாம் எடுத்து உள்ளே வைக்க..
“சின்ன மேடம் கார் ரெடியாகிடுச்சி..” என வீட்டில் வேலை செய்யும் ஓர் பெண் வந்து கூறிவிட்டுச் சென்றாள்..
“இதோ வந்திடுறேன்..” என சொல்லிக் கொண்டே வெளியே வர, குடும்பம் மொத்தமும் ஹாலில் தான் அமர்ந்திருந்தது..
“நீ பார்த்த வேலையா இது?.” என சரணிகாவை, சப்துனிகா ஓரக்கண்ணால் பார்க்க.. அவரோ எதுவுமே தெரியாது போன்று நின்றுக் கொண்டிருந்தாள்..
“அப்பா நான் என் ப்ரண்ட் கல்யாணத்துக்கு போயிட்டு வர்றேன்..” என்றவள், ட்ராலியை இழுத்துக் கொண்டு வெளியே செல்ல,
“கல்யாணம் எத்தனை நாள் மா?..” என தன் போனை நோண்டிக் கொண்டே கேட்டான் சபரீ.
அவனுக்கு மகள் செல்லும் இடம் நன்றாக தெரியும். ஆனாலும் தன் மனைவிக்கு மகள் எங்கே செல்கிறாள்? என தெரிய வேண்டும் என்றே கேள்வி கேட்டான்..
“ஒரு வாரம் பா..” என்ற மகளை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தவனின் பார்வை, அங்கிருந்த பெட்டியில் படிந்தது.. கிட்டத்தட்ட மூன்று பெரிய ட்ராலிகள் அல்லவா அங்கேயிருந்தது..
“ஒரு வாரத்துக்கு ஏன்டி இவ்வளவு பேக் பண்ணியிருக்கு?..” என சரணிகா, அப்பொழுது தான் ட்ராலியைப் பார்த்துக் கொண்டே கேட்டார்..
“இதையே நீ இப்போ தான் கவனிக்கிறீயா?.” என்ற பார்வையை, சபரீ சரணிகா மீது செலுத்த..
“அச்சோ, என்ன கோபம் லைட்டா நம்ம பக்கம் திரும்புது?..” என மனதோடு நினைத்தவள், அதன் பின் கணவனின் புறம் திரும்பினால் தானே..
‘அச்சோ கண்டுபிடிச்சிட்டாரே?..’ என்றவள், இதற்கு மேல் எங்கிருந்து மறைக்க..
“அம்மா.. நான் கல்யாணத்துக்குப் போகலை..” என்றவளை புருவம் சுருக்கிப் பார்த்தார் சரணிகா..
“ஏய்ய்ய்.. இப்போ தானே கல்யாணத்துக்குப் போறேன்னு சொன்ன?.. இப்போ போகலைன்னு சொல்லுற?.” என்ற அன்னையை திரும்பி பார்த்து முறைத்தவள்,
“ம்மா, நான் செளந்தர் ஊருக்குப் போறேன்..”
“செளந்தருக்கு சொந்த ஊர் இருக்கா என்ன?..” என்றதும் தான் தாமதம்,
‘எப்பேர்ப்பட்ட அறிவாளி நீ?’ என்பதை போல் சபரீ அவளை நிமிர்ந்துப் பார்க்க, அவனின் பார்வையில் கள்ளமுழி அவள் முழிக்க, பார்த்துக் கொண்டிருந்த சப்துனிகாவின் இதழ்களில் சிறு புன்னகை..
“ம்மா, நான் செளந்தர் இப்போ புதுசா ட்ரான்ஸ்பேர் ஆகியிருக்கிற, சூரத்க்குப் போறேன்..” என்றதும் ஒரு கணம் அங்கே கணத்த அமைதி நிலவியது..
“என்னடி சொல்லுற?.. பக்கத்துல இருக்கிற அருப்புக்கோட்டை போற மாதிரி சொல்லுற?.. சூரத் டி, அய்யோ அது மேப்ல எங்கேயிருக்குன்னு கூட தெரியாதே..” என்ற அன்னையை விழி விரித்து பார்த்தாள் சப்துனிகா..
“ஏது மேப்ல எங்கேயிருக்குன்னு தெரியாதா?.. மம்மி நீ ஏன் இவ்வளவு டம்மியா இருக்க?..” என கேட்டு முடிப்பதற்குள்,
“சப்துனிகா..” என்ற சபரீயின் கர்ஜனைக்குரல், சட்டென்று அவளை இடைமறித்தது..
‘அச்சோ, அப்பாவை கோபப்படுத்திட்டோமோ.. இந்த அம்மாவை ஏதாவது சொன்னா மட்டும் அப்பாவுக்கு எங்கிருந்தாலும் கோபம் வந்திடுமோ?’ என நினைத்தபடி, “அம்மா நான் சூரத்க்கு போறேன்..” என சற்று மெல்லிய குரலில் சொன்ன மகளை பதட்டமாக பார்த்தாள் சரணிகா..
“என்னடி நீ தனியா அவ்வளவு தூரம் போறேன்னு சொல்லுற?.. இரு நாங்களும் வர்றோம்.. அத்தை, பிரகதி, ஏங்க..” என எல்லாரையும் அழைத்த அன்னையின் கையை இறுக்கமாக பற்றினாள் சப்துனிகா..
தன் கைகளைப் பிடித்த மகளை சற்று பரிதவிப்பாக பார்த்தார் சரணிகா.. மகளை அவ்வளவு தூரம் அனுப்ப அவருக்கு மனமேயில்லை..
“அம்மா, நான் இதுக்காகத் தான் யார்க்கிட்டையும் சொல்லலை.. இப்போ நாம கும்பலா போய் நின்னோம்னா, செளந்தரால அதை ஏத்துக்கவே முடியாது.. அவர் கூட நான் வாழணும்னு நினைச்சீங்கன்னா, ப்ளீஸ் விட்டுருங்க..” என்றவளை, தனியாக அனுப்ப மனமில்லாமல்.. அவளின் தலையைக் கோதிவிட்டவாறே,
“சரி போயிட்டு வா.. அரேன்ஞ்ச்மெண்ட் பண்ணிட்டல்ல..” என சரணிகா கேட்டதும், சப்துனிகா ஒரு கணம் தன் தந்தையைப் பார்க்க..
அந்தப் பார்வையிலே புரிந்துக் கொண்டாள்.. பெண்ணை பற்றிய அத்தனை விஷயமும் அவனுக்குத் தெரியும் என்று..
“ம்க்கும், நம்மக்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா என்ன தான் என்னவாம்?..” என்றவள் சப்துனிகாவை அழைத்துக் கொண்டே சாமியறைக்குச் செல்ல, அவளின் பின்னால் சென்ற சப்துனிகாவும் கடவுளை வேண்டிக் கொண்டு தான் வந்தாள்..
இதுவரை குடும்பத்தின் நிழலிலும், பாதுகாப்பிலும் மட்டுமே வாழ்ந்தவள் அவள்.. இன்று தன் குடும்பத்தை விட்டு, அவன் ஒருவனை மட்டுமே நம்பி தொலைதூரம் செல்கிறாள் என்ற கவலை அவளுக்குமே இருந்தது..
“பார்த்துப் போயிட்டு வா டி..” என கண்களில் கண்ணீர் மல்க நின்ற அன்னையை ஒடிச் சென்று அணைத்துக் கொண்டாள்..
சரணிகாவிற்குமே கண்ணீர் வந்தாலும், அவளை கண்ணீருடன் வழியனுப்ப மனமில்லாமல், அமைதியாக தான் நின்றிருந்தாள்..
“போயிட்டு செளந்தரோட வர்றேன் ம்மா..” என்றவள் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டே புறப்பட்டாள் சூரத்திற்கு..
செல்லும் வழியெங்கும் அவன் காணாமல் போன சிந்தனை மட்டுமே..
அன்று முத்தம் கொடுத்து விட்டு அடுத்த நாள் ஹாஸ்பிடலுக்கு போக, அங்கு செளந்தர் டிஸ்சார்ஜ் ஆகியிருந்தான்.. வீட்டிற்குத் தான் சென்றிருப்பான் என நினைத்து வீட்டுக்குச் செல்ல, அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது..
எங்கே? என செக்யூரிட்டியிடம் விசாரிக்க, தெரியவில்லை என்ற பதில் தான் கிடைத்தது..
ப்ச்ச். அடுத்து என்ன என்கின்ற நிலை வர, அவள் தேடி வந்து நின்ற இடம் தன் தந்தையின் முன்பு..
தன் முன்னால் வந்து நின்ற சப்துனிகாவை, ஏற இறங்க பார்த்தான் சபரீ..
அவள் தான் வாயை திறக்காமல் கமுக்கமாக அமர்ந்திருக்கின்றானே,
“ம்ம்ம். உன் புருஷன் எங்கேயிருக்கான்னு தெரிஞ்சிக்கணும்.. ஆனா அதை வாயைத் திறந்து கேட்க முடியாது என்ன?” என கேட்டுக் கொண்டே அவளின் முன்பாக ஒரு கவரை நீட்டினான்.
அதைப் பிரித்து பார்த்தவளின் முகமெல்லாம் புன்னகையில் மலர்ந்தது..
“போய்ப் பாரு, அவன் உனக்குப் பயந்து ட்ரான்ஸ்பேர் வாங்கி சூரத்க்கு போயிட்டான்..” என மெல்லிய புன்னகையுடன் சொல்ல,
“சூரத்க்கு போயிட்டா விட்டுருவேனா அவனை.. தேடிப் போறேன்..” என்றவள், தன் தந்தையைப் பார்க்க.. அவளின் ஒற்றைப் பார்வைக்கு, அவள் சூரத் போவதற்கான அத்தனையையும் ரெடி பண்ணி வைத்திருந்தான் சபரீ…
ஒரு மாதம் உடல்நிலையைக் காரணம் காட்டி, தன் நண்பனின் வீட்டில் தங்கியவன், செய்த முதல் வேலை யசோதாவின் போன் நம்பரை ஸ்வீட்ச் ஆஃப் பண்ணியது தான்..
என்னடா? என கேட்டவர்களை அமைதியாக ஒரு பார்வை பார்த்தே அடக்கினான்.. அவன் தான் வாய்விட்டு பேச மாட்டானே..
“இவனைப் பத்தி தெரிஞ்சும் கேட்டோம் பாரு..” என புலம்பிக் கொண்டே யசோதா அவனுடன் சூரத்க்கு சென்றனர்..
அங்கு கலெக்டருக்கு புதிதாக குவாட்டர்ஸ் கொடுத்திருக்க, அவனுடன் கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும், அவர்களுக்கு தக்க சிறு சிறு வீடுகளை கவர்மெண்ட் கொடுத்திருந்தது..
சூரத் கலெக்டர் அலுவலகத்தில் தன் பணியில் அன்று சேர்வதற்காக, நிதானமாக புறப்பட்டுக் கொண்டிருந்தான் செளந்தர்..
ஒன்பது மணிக்கு செல்ல வேண்டிய வேலைக்கு, ஆறு மணியில் இருந்தே ரெடியாகி இருந்தான்.. அவனுக்கு நேரம் தவறாமை என்பது தொன்று தொட்டு வந்த பழக்கம்..
அறைக்குள் ரெடியாகி அமர்ந்திருந்தவனின் பார்வை, அங்கு எதிரில் இருந்த சிறு வீட்டின் மேல் அழுத்தமாக படிந்தது..
அவன் இங்கு வந்த நாளில் இருந்து பூட்டியிருந்த வீட்டை ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தனர்..
என்ன இத்தனை நாள் இல்லாம இப்போ ஒட்டடை அடிக்கிறாங்க? யாராவது வரப் போறாங்களா?.. இது கலெக்டர் அசிஸ்டெண்ட் தங்கும் வீடு என்று தானே சொன்னாங்க?.. அப்போ எனக்கு அசிஸ்டெண்ட் அப்பாயின்ட்மெண்ட் பண்ணிட்டாங்களா? என பல கேள்வி நார்மல் மனிதனுக்கு வரும்.
ஆனால் இவனுக்கு எதுவுமே தோன்றவில்லை.. ஒட்டடை சுத்தமாக அடிக்கிறார்களா என்பதை போல் வேடிக்கப் பார்த்தான்..
அவர்கள் அடித்து முடிக்கவும், காலையில் சாப்பிட வேண்டும் என்ற நினைவு வந்தது..
நேராக கீழிறங்கிச் செல்ல, எப்பொழுதும் போல குணசேகரனும், யசோதாவும் சாப்பிட்டு முடித்து வெளியே அமர்ந்திருந்தனர்..
இவனும் சாப்பிட்டு முடித்து வெளியே வந்தான்.. அவனுக்கு நேர் எதிரில் கலெக்டர் கார் நின்றிருந்தது..
அதில் ஏறியவன், கலெக்டர் ஆபீஸ் நோக்கிச் சென்றான்.. அனைவரும் அவனுக்கு சிரித்த முகமாக வணக்கம் வைத்தனர்.
அதை சிரிக்காமலே ஏற்றுக் கொண்டது இவனாகத் தான் இருக்கும்..
உள்ளே நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தான்.. அங்கிருந்த சில குறிப்பேடுகளை பார்த்துக் கொண்டிருக்க, காலை பத்து மணியளவில், “சார் உள்ளே வரலாமா?..” என அழகான தமிழில் ஒரு குரல் கேட்க, தூக்கிவாரிப் போட்டது செளந்தருக்கு..
அவனின் அதிர்ச்சி அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. தொண்டைக் குழி ஏறியிறங்க, பேசாமல் அமர்ந்திருந்தவனின் முன்பாக அந்த நபர் சென்று நின்றனர்..
தன்னெதிரில் நிற்பவளை முறைக்க ஆரம்பித்தான் செளந்தர்.. ஆனால் எதிரில் இருப்பவளோ முப்பத்தி ரெண்டு பல்லை ஈஈஈஈஈ என காட்டியபடி சிரிக்க, அவனோ இறுக்கமாக அமர்ந்திருந்தான்..
“சார்..” என மெல்லிய குரலில் அழைக்க, மறுபடியும் பல்லைக் கடித்தான் செளந்தர்..
“கோபமா சார்?.” என அழகான தமிழ்க்குரலில் மதுரைப் பைங்கிளி கிசுகிசுக்க,
“உனக்கு என்னதான் வேணும்?..” என சற்று கோபமாக கேட்டான் செளந்தர்..
“நீங்க தான் சார்..” என பட்டென்று சொல்லியது மதுரையில் பிறந்த வண்ணமயில்..
“வாட்..” என அதிர்ந்தவன், நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டவாறே,
“இங்கே பாரு தாரணி..” என்ற சொல்லில், எதிரில் இருந்த நபரின் முகம் பளிச்சென்று மின்னியது..
ஆம்.. எதிரில் இருப்பது சப்துனிகா அல்ல, தாரணியே தான்..
செளந்தரை விரட்டி, விரட்டி காதல் செய்பவள்..
கிட்டத்தட்ட 5 வருடக் காதல் அவளுடையது.. மிடில் க்ளாஸ் பொண்ணு தான்..
ஆனால் செளந்தரின் மேல் அதிக காதல் அவளுக்கு..
“என்னை ஞாபகம் எல்லாம் வச்சிருக்கீங்களா சார்?..” என்றவளை சற்று அயர்ந்து பார்த்தான்.
தலை லேசாக வலிக்க ஆரம்பித்தது செளந்தருக்கு..
“மே ஐ கமின் சார்..” என மேல்நாட்டு ஆங்கிலத்தில் ஒரு பெண் கேட்க, திரும்பிப் பார்த்த செளந்தரின் உதடுகள் ஏளனத்தில் வளைந்தது..
“நீயுமா” என்பதை போல்..
வாசலில் நின்றிருந்தவளின் கண்கள் இப்பொழுது செளந்தரையும், அவனின் எதிரில் இருக்கும் பெண்ணையும் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தது..
அவளைப் பார்த்ததும் செளந்தருக்கு எப்படியோ, ஆனால் தாரணிக்கு அளவில்லாத மகிழ்ச்சி..
“அக்கா, நீங்க மினிஸ்டர் சபரீஸ்வரன் பொண்ணு தானே..” என மறுபடியும் கொஞ்சும் குரலில் கேட்க,
“ம்ம். ஆமா..” என பல்லைக் கடித்து உறுமினாள் சப்துனிகா.. செளந்தரின் மேல் இருந்த கோபத்தை அவள் மேல் காட்டினாள்..
அவள் எங்கே தாரணியைப் பார்த்தாள்?.. எதிரில் அமைதியாக உட்கார்ந்திருந்தவனை அல்லவா கோபத்தில் எரிப்பது போன்று பார்த்துக் கொண்டிருந்தாள்..
ஆமாங்க, இப்போ உள்ளே வந்தது நம்ம ஆள் சப்துனிகாவே தான்..
“இருக்கிற தலைவலியில ரெட்டைத் தலைவலி வேற..” என தன் நெற்றியை நீவி விட்டான் செளந்தர்..