அத்தியாயம் 21
தாரணி தன் டேபிளில் அமர்ந்து நகம் கடித்துக் கொண்டிருந்தாள்.. 9 மணியை தாண்டி அரை மணி நேரம் ஆகியிருந்தது.. சப்துனிகாவும் இன்னும் வரவில்லை.. செளந்தரும் இன்னும் அலுவலகத்திற்கு வரவில்லை..
கார் டிரைவருக்கு அழைத்து விசாரித்தாள்.. அவருக்கும் எதுவும் தெரியவில்லை..
இவள் தான் இருவரையும் எதிர்பார்த்து, எதிர்பார்த்து வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்..
கிட்டத்தட்ட 2 மணியளவில் தான் செளந்தரும், சப்துனிகாவும் ஒன்று போல் உள்ளே நுழைந்தனர்.. அதைப் பார்த்த தாரணியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..
அவர்கள் இருவரையும் ஜோடியாக பார்த்தது பலரின் கண்கள்.. ஒரு சிலர் அவர்கள் ஜோடியை பார்த்து ரசித்து விட்டுப் போக உள்ளுக்குள்ளேயே வெம்பி போனாள் தாரணி..
செளந்தரை அவள் 5 வருடங்களாக காதலித்து வருகிறாள்.. அவன் மேல் காதல் என்பதை தாண்டி, அளவு கடந்த மரியாதையும், பேர் சொல்ல முடியாத ஒரு பாசத்தையும் வைத்திருக்கிறாள்..
இப்படி இருவரையும் சேர்த்து அவளால் பார்க்க முடியவில்லை.. மனம் ஏனோ முரண்டு பிடித்தது..
செளந்தர் வேகமாக தன்னறைக்கு சென்றான்.. சப்துனிகாவிற்கு உடலெல்லாம் அடித்துப் போட்டாற் போன்று வலி..
‘ப்ச்ச. எவ்வளவு ஜாலியா இருந்த நம்மளை இப்படி வேலை வாங்கி பழி வாங்கிட்டாங்களே’ என புலம்பிக் கொண்டே உள்ளே நுழைந்தவளுக்கு, வேலை செய்யவே மனமில்லை..
தன்னை ஒருத்தி முறைத்துக் கொண்டிருப்பதை கூட அவள் அறியவில்லை..
‘இதோ வருகிறேன்..’ என சொல்லி விட்டு கலெக்டர் ஆபீசில் இருந்த பழைய ஸ்டோர் ரூமிற்கு சென்றாள்..
அவள் இங்கு வந்த நாளில் இருந்த அந்த அறையை நோட் பண்ணி வைத்திருந்தாள்..
பழைய பைல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும், சுத்தமாக இருந்தது அந்த அறை..
ஃபேன் இல்லாமலே ஜன்னல் வழியாக சிலுசிலுவென காற்று தென்றலாக வீசும் என்பதையும் அறிந்து வைத்திருந்தாள்..
“ஷப்பபாஆஆ. எம்புட்டு வேலை.. நம்ம உசிரை நாம தான் காப்பாத்திக்கணும் முருகேசா” என சலித்துக் கொண்டே, ஸ்டோர் ரூமிற்குள் நுழைந்தவள் அங்கிருந்த ஜன்னலை திறந்து விட, காற்று தென்றலாக வீசியது..
‘இது போதுமே நாம தூங்க’ என நினைத்துக் கொண்டே, அங்கிருந்த இரு சேரை எடுத்துப் போட்டவள், கால்களை மடக்கி சேரில் அமர்ந்து நன்றாக உறங்க ஆரம்பித்தாள்..
எவ்வளவு நேரம் உறங்கினாள் என்பது அவளுக்கே தெரியவில்லை..
தாரணியோ, சப்துனிகாவை கலெக்டர் ஆபீஸெங்கும் தேடிப் பார்த்து செளந்தரின் முன்பாக வந்து நின்றாள்..
“என்ன தாரணி?..” என்றவனின் கவனமெல்லாம் முன்னே இருந்த ஃபைலின் மீது தான்..
“சார் சப்துனிகாவை காணும்..” என்றதும், ஒரு கணம் தான் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலில் இருந்து விழிகளை திருப்பி, தாரணியின் மேல் நிறுத்தினான்..
“என்ன சொல்லுற?..”
“ஆமா சார்.. நீங்க வந்ததுக்கப்புறமும் அவுங்களைக் காணும். நானும் ரெஸ்ட் ரூம் போயிருப்பாங்கன்னு அங்கே போய்த் தேடுனேன்.. அங்கேயும் இல்லை..” என்றதும், சட்டென்று தன் இருக்கையை விட்டு எழுந்து நின்றான் செளந்தர்..
“ஆபீஸ் புல்லா ஒரு டைம் தேடிப் பாருங்க..” என்றவனின் மனமோ, ‘இந்த குரங்கு எந்த மரத்துல தொங்குதுன்னு தெரியலையே..’ என மனதுக்குள் அவளை திட்டிக் கொண்டே சென்றவனின் கைகளோ, அவளின் போனுக்கு தன் போன் மூலமாக அழைப்பு விடுத்துக் கொண்டேயிருந்தது..
ரிங் போனதே தவிர அழைப்பை யாரும் எடுக்கவில்லை..
“பிக்கப்.. பிக்கப்.. பிக்கப் த கால்..” என முணுமுணுத்துக் கொண்டே சென்றவனின் காதுகளில் துல்லியமாக அவளின் போன் அடிக்கும் சத்தம் கேட்டது..
அவனுக்காக விசேஷமாக ஒரு பாட்டை ரிங்டோனாக வைத்திருந்தாள்..
கலை கனவில் காதல் கண்டேன்
கண் விழித்தேன் அவன் கனவிலில்லை
கண் விழித்தேன் அவன் கனவிலில்லை
கண் விழித்தேன் அவன் கனவிலில்லை
என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை
என்ன செய்தும் வழி தீரவில்லைய
கண்ணன கண்ணே என் கண்ணால
என் உள் மன காதலை கண்டாயா
கருமை கண்ட கண்ணூக்கி
பொய் சொல்லி நின்றாயா
என்ற பாட்டின் சத்தத்தில் வேகமாக அவன் கால்கள் ஸ்டாஃப் ரூமை நோக்கிச் சென்றது..
பிறந்ததில் இருந்தே உடல் நோகாமல் வளர்ந்தவள் அவள் என்பதை அவன் நன்றாக அறிந்திருந்தான்..
அவ்வளவு சொகுசையும் விட்டுவிட்டு தனக்காக ஒருத்தி, தன்னைத் தேடி ஓடி வருகிறாள் என்பதை நினைக்கும் போதே, கல்லாய் சமைந்த அவனின் இதயம் லேசாக அசைந்தது..
“சப்துனிகா..”
“ப்ச்ச்ச. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன் ப்பா. உடம்பெல்லாம் வலிக்குது..” என்றவள் இன்னும் சுருண்டு படுத்துக் கொள்ள, ஜன்னல் வழியாக வந்த காற்று, அவளின் கற்றைக் கூந்தலை அழகாக வருடிச் சென்றது..
தூங்கும் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் செளந்தர்.. கண்கள் அவளை விட்டு பிரிய மறுத்தது.. இதயமோ அவள் வேண்டும் என்று அடம் பிடித்தது..
அவளையே ரசனையுடன் பார்த்தவன், என்ன நினைத்தானோ படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவளின் நெற்றியில் அழுந்த முத்தம் ஒன்று பதித்தான்..
அவன் மனதில் என்ன இருக்கிறதை என்பதை அவனே இன்னும் அறியவில்லையே..
குழப்பமான மனநிலையுடன் அறையை விட்டு வெளியேறினான்.. அவன் வெளியேறியதும், ஜன்னலின் அருகில் ஒளிந்து கொண்டிருந்த தாரணி மெல்ல எட்டிப் பார்த்தாள்..
அவளும் தானே சப்துனிகாவை தேடி வந்தது.. அவள் கண்ணில் பட்டது, சப்துனிகாவை ரசித்துக் கொண்டிருந்த செளந்தர் தான்..
அதிலும் பேரதிர்ச்சி அவன் முத்தமிட்டது..
இவனை மயக்கத்தான் நேற்றிரவு ஓடினாளே அவர் வீட்டிற்கு என அவளே சப்துனிகாவை தவறாக எண்ணத்தில் புரிந்துக் கொண்டாள்..
முழுதாக இரண்டு மணி நேரம் கடந்த பின்பு தான் சப்துனிகாவிற்கு தூக்கமே தெளிந்தது..
அவளுக்காக வேலை செய்யத்தான் கலெக்டர் இருக்கிறாரே?..
சப்துனிகா தன்னிடத்திற்கு திரும்பிட, அவளின் முன்னால் கோப மூச்சுக்களுடன் வந்து நின்றாள் தாரணி..
“இவ்வளவு நேரம் எங்கே இருந்தீங்க நீங்க?..” என சற்று அதிகாரமாக கேட்டவளைக் கண்டு சுர்ரென்று ஏறியது சப்துனிகாவிற்கு..
இவள் யார் தன்னை நிற்க வைத்து கேள்வி கேட்க?.. என நினைத்தாள்..
“நாங்க எங்கே இருந்தா? உனக்கென்ன?..” என கேட்க தொண்டை வரை வார்த்தைகள் துடித்தது. தன் கோபத்தை அடக்கிக் கொண்டு, தாரணியை தாண்டிச் செல்ல முயன்றிட, அடுத்ததாக சப்பென்று அறையும் சத்தம் செளந்தரின் அறை வரை கேட்டது..
“என்ன சத்தம் இது?..” என வேகமாக செளந்தர் தன் இருக்கையை விட்டு வெளியே வர, அங்கு தன் கன்னத்தை பொத்திக் கொண்டு நின்றாள் தாரணி..
“இன்னொரு தடவை என் கேரக்டரை பத்தி தப்பா பேசுனா, பேசுன நாக்கை அறுத்துடுவேன்..” என்றவளின் கர்ஜனைக்குரலை மீறியும், “சப்துனிகா..” என்ற செளந்தரின் குரலில் சட்டென்று திரும்பினாள் தாரணி..
அவளுக்கு உடலை நடுங்க ஆரம்பித்தது.. கோழிக்குஞ்சாய் நடுங்கிக் கொண்டிருந்தவளின் அருகில் தான் வந்து நின்றான் செளந்தர்..
“இது என்ன கலெக்டர் ஆபீஸா, இல்லை உன் அப்பாவோட கட்சி ஆபிஸா?.. அடவாடித்தனம் பண்ணிட்டு இருக்க?..” என்ற செளந்தரை, பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்தாள் சப்துனிகா..
வேறு யார் இப்படி பேசியிருந்தாலும், பல்லை பேத்திருப்பாள்.. ஆனால் இப்போது பேசுவது செளந்தர் அல்லவா..
அதனால் தான் இல்லாத பொறுமையை இழுத்துப் பிடித்து நின்றாள்..
“சொல்லு சப்துனிகா.. எதுக்கு இவளை அடிச்ச?..” என தாரணிக்காக, அவன் கேட்க.. தாரணிக்கோ மனதினுள் இன்பச்சாரல்..
சப்துனிகாவிற்கோ அப்படியொரு எரிச்சல்.
“அவ என்ன பேசுனான்னு தெரியுமா?..”
“அவ என்ன பேசியிருந்தாலும், நீ கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கணும்.. கை நீட்டுனது ரொம்ப ரொம்ப தப்பு..” என்றவனை தாண்டி, அருகில் நின்றிருந்த தாரணியை சப்துனிகா முறைக்க..
அவளோ செளந்தரின் முதுகின் பின்னால் ஒண்டிக் கொண்டாள்..
நடக்கும் கலவரத்தில் செளந்தர் இதை உணரவில்லை.. ஆனால் சப்துனிகாவிற்கு, தன்னவன் முதுகோடு ஒட்டி உரசிய தாரணியை, அப்படியே அடித்து பூமியில் புதைத்தாள் என்ன நினைக்கும் அளவிற்கு ஆவேசம் எழுந்தது..
“சப்துனிகா. தாரணிக்கிட்ட சாரி கேளு..”
“முடியாது..” என வெடுக்கென்று சொன்னாள் சப்துனிகா..
அவனின் பின்னால், சற்று பம்மியபடி சென்றாள் தாரணி.. ஆனால் சப்துனிகா அந்த அறைக்குள் வேண்டா வெறுப்பாக சென்றாள்..
“எதுக்கு நீ அவளை அடிச்ச?..” என்ற செளந்தரை எரிப்பது போல் பார்த்தவன், பட்டென்று முகத்தை திருப்பிக் கொள்ள, அவளைப் பற்றி அவனுக்குத் தான் தெரியும்..
தப்பு செய்யவில்லை என்றால், அவளின் திமிரு அதிகமாக இருக்கும் என்று..
“நீங்க சொல்லுங்க தாரணி, அவளை என்ன பேசுனீங்க?..” என அடிக்குரலில் கேட்ட செளந்தரை சற்று பயப்பார்வையுடன் பார்த்தாள் தாரணி..
“சார்..”
“சொல்லுங்க தாரணி… அவளை என்ன பேசுனீங்க?..” என்றவனின் குரலில் இருந்த கடினம், சப்துனிகாவின் மேல் அவன் கொண்ட அன்பினை சொல்லாமல் சொன்னது..
“அது..” என இழுக்க,
“நான் கட்டின புருஷன் இருக்கும் போதே, இன்னொருத்தன் கூட.. அதாவது உங்க கூட அலையுறேனாம்..” என்ற சப்துனிகாவினை அதிர்ந்து பார்த்தான் செளந்தர்..
“வாட்ட்ட்..” என கேட்ட செளந்தருக்கே இது பேரதிர்ச்சி தான்..
அழுந்த நெற்றியைப் பற்றிக் கொண்டவன், “தாரணி, சப்துனிகா ஹஸ்பெண்ட் யாருன்னு தெரியுமா?..” என கேட்டவனின் குரலில் ஒரு வித இளகல் தன்மை இருந்ததை தாரணி அறியவில்லை.. சப்துனிகா அறிந்திருந்தாள்..
“என்ன நம்ம சிட்டி ரோபோ என்னைப் பத்தி பேசுது..” என்றவள், காதுகளை கூர்மையாக்க,
“இல்லை சார்.” என தாரணி சற்று மெல்லிய குரலில் தான் சொன்னாள்..
“நான் தான்..” என தாரணியின் தலையில் இடியை இறக்கிட,
“ஏது நீங்களா?..” என கேட்டவளின் கண்ணாமுழி பிதுங்கி வெளியே வந்தது..
“ம்ம்..” என்றவனை, அப்படியே கட்டியணைத்து முத்தமழை பொழிய சப்துனிகாவிற்கு ஆசை எழுந்தது.. அவனின் அடுத்த வார்த்தையை கேட்கும் வரையில் தான்..
“ஏத… டிவோர்ஸா.. இவனைய்ய்ய்ய..” என நரநரவென பல்லைக் கடித்தவள், சட்டென்று திரும்பி பார்க்க தாரணியோ செளந்தரை முழுங்குவதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தாள்..
“இவ வேற. பார்த்து, பார்த்தே எரிச்சலைக் கூட்டுறாளே” என மனதுக்குள் புழுங்கிக் கொண்டே, “நான் டிவோர்ஸ் பண்ணமாட்டேன்..” என்றவளை நோக்கி திரும்பிய செளந்தர் அவளை அழுத்தமாக பார்த்தான்..
அவனுக்கு சளைக்காமல் இவளும் பார்த்தாள்.. இருவரின் பார்வையும் ஒருவரையொருவர் கொய்ய ஆரம்பிக்க..
“சார் நீங்க இவுங்களை டிவோர்ஸ் பண்ணிட்டா என்னைக் கட்டிப்பீங்களா?..” என கேட்ட தாரணியை அதிர்ந்து பார்த்தனர் மற்ற இருவரும்..
“வாட்ட்ட்..” என செளந்தர் வெளிப்படையாக அதிர்ந்து கேட்க,
‘ஏது கட்டிக்கணுமா?.. கட்டுறதுக்கு கை இருந்தா தானே கட்டுவான்.. வெட்டிற மாட்டேன்.’ என உள்ளுக்குள் கருவியபடி, எதிரில் இருந்தவனை தீப்பார்வை பார்த்தாள் சப்துனிகா..
தாரணியை உரித்து உப்புக்கண்டம் போட்டால் என்ன? எனும் அளவிற்கு யோசித்துக் கொண்டிருந்தாள் சப்துனிகா..
அவளின் தீப்பார்வையை செளந்தரும் உணர்ந்தான்.
“சப்துனிகா கொஞ்சம் வெளியே போ.. நான் தாரணிக்கிட்ட தனியா பேசணும்..” என்ற செளந்தரை பார்த்து முறைத்துக் கொண்டே வெளியே செல்ல.. அங்கிருந்த சேரில் அமர்ந்தான் செளந்தர்..
“உட்காரு..” என்றதும், எதிர் சேரில் அமர்ந்தாள் தாரணி..
“என்ன பிரச்சினை தாரணி உனக்கு?..” என சுற்றி வளைக்காமல், அமைதியாகவே கேட்டான்..
“சார்.. அது..” என இழுத்தவளின் கண்களோ சடுகுடு ஆடியது..
“என்னைக் காதலிக்கிறீயா?..” என நேரடியாவே கேட்டு விட்டான்..
“சார்..” என்றவளுக்கு பேரதிர்ச்சி தான்..
அவள் காதலிக்கிறாள் தான்.. ஆனால் அதை அவன் வாயால் கேட்கும் போது ஏனோ மனதில் ஒரு குற்றவுணர்ச்சி அவளை சூழ்ந்துக் கொண்டது..
“தாரணி.. நான் ஏன் இந்த வேலையை உனக்கு வாங்கிக் கொடுத்தேன்னு தெரியுமா?..” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் தாரணி..
“நீங்க தான் எனக்கு இந்த வேலையை வாங்கிக் கொடுத்ததா சார்?..” கேட்டவளுக்கு சற்று திகைப்பு தான்...
இந்த வேலைக்காக அவள் எவ்வளவு பாடுபட்டாள் என்பதை அவள் மட்டுமே அறிவாள்.. சிலர் காசு கேட்க, சிலர் அவளையே கேட்டனர்..
தட்டிக் கேட்பதற்கு ஆண் இல்லாத வீடு என்பதால் பந்தாடப்பட்டாள் அவள்.. ஒரு நாள் திடீரென்று அப்பாயின்மெண்ட் ஆர்டர் வீடு தேடி வந்தது..
இவள் அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரித்த பொழுது, அவளுக்கு பெரிய இடத்தில் இருந்து யாரோ சிபாரிசு செய்திருக்கிறார் என்று மட்டுமே அறிவாள்... ஆனால் அது செளந்தராக இருக்கும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை..
“ம்ம்.. ஆமா..” என்றவன், மெல்ல எழுந்துக் கொண்டே நடக்க தாரணியோ அவன் கொடுத்த அதிர்ச்சியில் மீளாமல் அங்கேயே அமர்ந்திருந்தாள்.. கதவின் அருகே வந்து நின்றவன் சட்டென்று கதவை திறந்தான்.. அவன் கைகளில் பூங்கொத்தாய் வந்து விழுந்தாள் சப்துனிகா..
அவளை மறைத்தவள், அவள் நிழலை மறைக்க மறந்து விட்டாள்..
தாரணியிடம் பேசிக் கொண்டே திரும்பியவனின் விழிகளில் கதவோரம் நிழல் தெரிய, அது யார்? என அறிய ஒரு நிமிடம் போதுமே அவனுக்கு.. பேசிக் கொண்டே வந்தவன்.. கதவை பட்டென்று திறந்து விட.. கதவின் மேல் சாய்ந்து நின்றவள், அப்படியே அவன் கரங்களிலும் விழுந்திருந்தாள்..
“இங்கே என்ன பண்ற?.” என கடுமையாக கேட்ட செளந்தரை பார்த்து, ஈஈஈஈ என பல்லைக் காட்டியவள், “அது.. உங்களுக்கு தண்ணீ கொண்டுவந்தேன்..” என்றவளின் கைகளை தான் ஆராய்ந்தான் செளந்தர்..
அவளுடைய கையில் தான் தண்ணீர் கொண்டு வந்ததற்கான எந்த அடையாளமும் இல்லையே..
“இல்லை, தண்ணீ பாட்டில் எடுக்க வந்தேன்.. அதோ டேபிள்ல..” என டேபிளைக் காட்டிட, அங்கு தண்ணீர் பாட்டில் காலியாக தான் இருந்தது..
பண்ணுவது எல்லாம் பிராடுத்தனம், தகிடுதத்தம் தான்.. ஆனாலும் மாட்டிக் கொண்டு முழிக்கும் நேரம், அவளின் கண்ணசைவில் இவன் தன்னை தொலைத்து நிற்கின்றான்..
சப்துனிகா வெற்றுப் பாட்டிலை எடுத்துக் கொண்டு திரும்பினாளே, தவிர அறையை விட்டுப் போவேனா என அடம் பிடித்துக் கொண்டு நின்றாள்.
“போ..” என கண்ணாலேயே செளந்தர் அவளை மிரட்ட..
“போ மாட்டேன்.. போடா..” என உதட்டை அலட்சியமாக சுழித்தாள்.
“போடி…” என கண்களாலேயே அவன் உக்கிரமாக பார்க்க..
“போ மாட்டேன்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு..” என இவள் கண்ணால் மிஞ்சிட..
“எனக்கு நிஜமாவே தண்ணீ தாகமா இருக்கு.. போய்த் தண்ணீ கொண்டு வர்றீயா?..” என்றவனை பார்த்து உதட்டை சுழித்துக் கொண்டு வெளியே செல்ல.. கதவு திறந்தே தான் இருந்தது..
“சார்.. நீங்க ஏன் எனக்கு சிபாரிசு பண்ணீங்க?..” என்றவளின் குரலே சற்று தழும்பியிருந்தது..
அந்த வேலை தானே, அவளின் உறவுகள் முன்னால் தலை நிமிர்த்தி வாழ வைக்கிறது..
உடல் நிலை சரியில்லாத அம்மா, பத்தாவது படிக்கும் தங்கை, அப்பா இல்லாத பெண் தான் தாரணி.. அவளின் வாழ்க்கையில் படிப்பைத் தவிர சொல்லிக் கொள்ள சொத்து எதுவுமே இருந்ததில்லை.. வாடகை வீட்டில் தான் அவர்கள் குடித்தனமே..
அதை நினைக்கும் போதே கண்களில் நீர் கோர்த்து நின்றது..
“ஏன்னா, எனக்கு உன்னை பிடிக்கும்..” என சொன்னவனின் பார்வை, வாசலில் வந்து நின்றிருந்த சப்துனிகாவின் மேல் பதிந்தது..
“பிடிக்குமா?..” என தன் அகல கண்களை விரித்தாள் தாரணி..
‘பிடிக்குமா?..’ என கேட்ட சப்துனிகாவின் இதயமோ சுக்குநூறாக உடைந்தது..
செளந்தரின் வாயால் இப்படியொரு வார்த்தையை கேட்கும் போதே மனம் அதிகமாக வலிக்க ஆரம்பித்தது..
அவளைப் பிடித்ததால் தான் என்னைப் பிடிக்கவில்லையா? என்றவளின் கால்கள் தானாக பின்னோக்கி சென்றது..
இது நாள் வரை அவன் மனதில் யாரும் இல்லை என நினைத்து தான், அவன் தனக்கு வேண்டும் என்று அடம் பிடித்தாள்..
நீ எனக்கு வேண்டாம், டிவோர்ஸ் பண்ணுகிறேன் என சொல்பவனை பின்னாலேயே விரட்டிச் சென்று காதலிக்கிறேன்.. உன்னுடன் தான் வாழ்வேன் என அடம் பிடித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவன் மனதில் தாரணி இருக்கிறாள் என அவன் வாயால் கேட்ட பின்பு, இதயத்தை யாரோ பிடுங்கி எடுத்ததை போன்று வலிக்க ஆரம்பித்தது..
அவன் ஒரு வார்த்தை, என் மனதில் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்லியிருந்தால்.. இவளே அவன் வாழ்க்கையில் இருந்து விலகியிருப்பாள்..
“அப்போ நிஜமாவே செளந்தருக்கு தன்னை பிடிக்கவில்லையா?..” என்றவளுக்கு, கண்களில் கண்ணீர் வந்துக் கொண்டேயிருந்தது..
மனதில் ஒரு வித அழுத்தம்..
செளந்தரின் மேல் இனி தனக்கு உரிமை இல்லையா? என மனதின் அழுத்தம் தாங்காமல், போகும் திசை அறியாமல்.. கால் போன போக்கில் நடந்துப் போனவளின் அருகில் ஒரு கார் உரசிக் கொண்டு வந்து நின்றது..
தன்னை ஒட்டி வந்த நின்ற காரைக் கூட அவள் கவனிக்கவில்லை..
ஆனால் காரில் இருந்து வெளியே வந்த ஆளோ, சப்துனிகாவின் கையைப் பிடித்து உள்ளே வாரி இழுத்துப் போட்டுக் கொண்டு சென்றது..
“என்ன சார் சொல்லுறீங்க?.. என்னைப் பிடிக்குமா?.. என்னைக் காதலிக்கிறீங்களா?” என கேட்ட தாரணிக்கு, என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. பேந்த பேந்த முழித்தபடி நின்றாள்..
“பிடிக்கும் தாரணி.. உன்னை மாதிரி நல்ல பொண்ணை யாருக்குப் பிடிக்காது..”
“நல்ல பொண்ணைப் பிடிக்கும்னா, எனக்கு புரியலை சார்.. நீங்க என்னைக் காதலிக்கலையா?..” என இவளும், எந்த வித ஒளிவும் மறைவுமின்றி கேட்டு விட, அவன் இதழ்களில் சிறு புன்னகை..
அவன் புன்னகையில் இவள் தான் குழம்பி நின்றாள்..
“எதுக்கு சார் இப்போ இந்த சிரிப்பு?..” என கேட்டாள்..
“இல்லை ஒரு பொண்ணை பிடிக்கணும்னா, அவளை கண்டிப்பா காதலிக்கணுமா என்ன?..” என்றவனை கண்கள் இடுங்க பார்த்தாள் தாரணி..
“சார் எனக்குப் புரியுற மாதிரி சொல்லுங்க.. நீங்க என்னை பிடிக்கும்னு சொல்றீங்க, ஆனா ஸ்டோர் ரூம்ல அவுங்களை கிஸ் பண்றீங்க?..” என்ற தாரணியை ஒரு கணம் அதிர்ந்து பார்த்தான்..
தான் முத்தமிடுவதை அவள் பார்த்திருக்கிறாள் என்ற அதிர்ச்சி மட்டுமே..
“அப்போ நீங்க யாரை தான் காதலிக்கிறீங்க?..” என்றவளுக்கே தலை லேசாக வலிக்க ஆரம்பித்தது.
“என்ன சார் உளறுறீங்க?.. காதலிக்கிறேன்னு சொல்றீங்க?.. அதே சமயம் டிவோர்ஸ் பண்றேன்னு சொல்லுறீங்க?..” என கடுப்பில் எரிந்து விழுந்தாள்..
“தாரணி.. நான் சப்துனிகாவை எந்தளவு காதலிக்கிறேனோ, அதேயளவு அவ கூட என்னால வாழ முடியாதுங்கிறதும் உண்மை.. நீ என்னை மறந்துட்டு, உனக்கான வாழ்க்கையை தேடிக்கோ..” என்றவனை கண்களில் நீர் கோர்க்க பார்த்தாள்..
“சார் நிஜமாவே, உங்க மனசுல அவுங்க தான் இருக்காங்களா, இல்லை என் காதலை வேண்டாம்னு சொல்ல இப்படி சொல்லுறீங்களா?..” என அழுகுரலில் கேட்ட தாரணியை அழுத்தமாக பார்த்தவன்,
“தாரணி..” என்றவன், தன் பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்து வேகமாக திறந்தான்..
“பர்ஸில் என்ன இருக்கிறது?” என ஆர்வமாக பார்த்த தாரணியின் இதயம் சுக்குநூறாக உடைந்துப் போனது..
அதில் இருந்தது சப்துனிகாவின் புகைப்படம் தான். அவர்களின் கல்யாணத்தின் போனது, இருவர் மட்டும் எடுத்த போட்டோஷூட் அது..
இருவரின் பார்வையும் ஒன்றோடோன்று உரசிக் கொள்வதைப் போன்ற படம் தான் அது..
“இவ்வளவு காதலிக்கிறவங்க, அவுங்க கூட சேர்ந்து வாழலாமே..” என்றதும், அதுவரை இளகியிருந்த முகம் இறுகி.. சட்டென்று அமைதியை தத்தெடுத்துக் கொண்டான்..
“தாரணி.. நீ என்னைக் காதலிக்கிறேன்னு சொன்ன.. நான் உன்னைக் காதலிக்க முடியாதுங்கிறதுக்கு ரீசன் சொல்லிட்டேன்.. தட்ஸ் ஆல்.. போய் வேலையைப் பாரு..” என்றவனுக்கு சப்துனிகாவை பார்க்க வேண்டுமென்று உள்ளம் பரபரத்தது..
வேகமாக எழுந்து வெளியே சென்று சப்துனிகாவை தேட ஆரம்பித்தான்..
எங்கும் அவள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.. கண்டிப்பாக கோபத்தில் வீட்டிற்கு சென்றிருப்பாள் என நினைத்துக் கொண்டே வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்..
மாலை 7 மணி வேளையில் வீட்டிற்குள் நுழைந்த செளந்தர் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு சாப்பிட அமர்ந்தான்.. சாப்பிடும் நேரமெல்லாம் சப்துனிகாவின் நினைவுகள் தான்..
நேற்று ஷிவாங்கி இருந்ததால் இருந்த சப்தம் இன்று சுத்தமாக இல்லை..
இன்று காலையில், ஷிவாங்கியின் உறவினர் ஒருவரிடம் அவளை ஒப்படைத்து விட தான் செளந்தரும், சப்துனிகாவும் ஒன்றாகப் போனது..
ஷிவாங்கிக்கு தேவையான படிப்பு, ஸ்கால்ர்ஷிப் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்திருந்தான் செளந்தர்..
அவள் பனிரெண்டு முடித்து, ஒரு டிகிரி முடியும் வரைக்கும்.. அவளுக்குத் தேவையான ஏற்பாடு செய்து விட்டு ஆபீஸிற்கு செல்லத்தான் லேட்டாகிப் போனது..
அவன் செல்லும் இடங்களில் எல்லாம் சப்துனிகாவும் உடன் செல்ல.. மிகவும் சோர்ந்துப் போய் விட்டாள் அவள்..
அன்று அவளைப் பற்றி நினைத்தாலே வேப்பங்காயாய் கசந்தவள், இன்று வேப்பம்பூவில் இருக்கும் தேன்துளியாய் அவனை இனிக்க வைத்தாள்.
அவன் சாப்பிட்டு முடித்து விட்டு வர, அரக்க பரக்க ஓடி வந்தாள் தாரணி..
“அக்காவை காணும்..” என்றவனுக்கு, யார் இவளின் அக்கா என்ற எண்ணம் தான் எழுந்தது.
“அய்யோ.. சார்.. அக்கா.. உங்க ஒய்ஃப்.. சப்துனிகா..” என்றதும் ஒரு கணம் அதிர்ந்து விரிந்தன அவன் விழிகள்..
“என்ன சொல்லுற?. எங்கே போனா?..” என்றவனின் கால்கள் நேராக அவர்கள் தங்கயிிரந்த இடத்தை நோக்கிச் சென்றது..
அங்கு அவளின் அறைக்குள் செல்ல, காலையில் எப்படி அலங்கோலமாக போட்டுச் சென்றாளோ, அப்படியே இருந்தது..
அவள் மாலை வந்ததற்கான அடையாளம் சிறிதும் இல்லை..
“ரெண்டு பேரும் வேலையை விட்டு ஒன்னா தானே வருவீங்க?..” என்ற செளந்தரை தலை தாழ்த்திப் பார்த்தாள் தாரணி..
என்னவென்று சொல்வாள்?.. சப்துனிகாவின் மேல் இருக்கும் இனம் புரியாத கோபமும், பொறாமையும் அவளுடன் சராசரியாக பேசக்கூட முடியவில்லை என்பதை..
“சொல்லு தாரணி.. ஒன்னா தானே வருவீங்க?..” என்றவனுக்கு, ‘இல்லை’ எனும் விதமாய் தலையாட்டினாள் தாரணி..
அதைக் கண்டு பல்லைக் கடித்தான்…
இதற்கு மேல் அவளிடம் என்ன பேச.. நேராக ஜீப்பை எடுத்துக் கொண்டு, கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றான்.. ஸ்டோர் ரூம் எங்கேயாவது தூங்கிக் கொண்டிருக்கிறாளோ? என்ற பயம் வேறு அவனை ஆட்கொள்ள ஆரம்பித்தது..
கலெக்டர் ஆபீஸையே அலசி ஆராய்ந்தான்.. அப்பொழுதும் சப்துனிகா இருக்கும் இடம் தெரியவில்லை..
அவனின் தேடல் தொடங்கியது அவளுக்காக..
அதே சமயம் இருட்டறையில் ஒரு பழைய கட்டிலில் மயக்கத்தில் இருந்தாள் சப்துனிகா.. அவளின் அருகில் இருந்த சேரில் அமர்ந்து, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ராகுல் என்கின்ற ராகுல் திவான்..