கற்பூரம் அடித்து சத்தியம் செய்தால் கூட அது மினிஸ்டர் என யாரும் சொல்லமாட்டார்கள்.. வீட்டிற்குள் அவ்வளவு கலவரம் நடந்துக் கொண்டேயிருந்தது..
வீட்டினுள் இருக்கும் ஆட்கள், செக்யூரிட்டி கார்ட் எல்லாரும் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் அவளுக்கு சிறிதும் இல்லை.. மற்றவர்களுக்கும் அந்தக் கவலை இல்லை என்றே சொல்லலாம்..
அதைப் பற்றி கவலைப்படுபவர்கள் தான் அங்கு யாருமில்லை.. இது அவள் வீடு, அவளுக்கு கத்திப் பேசும் உரிமைக்கூட இல்லையா? என்ற எண்ணம் தான் அனைவருக்கும்..
“இப்போ எதுக்கு கத்துற சப்துக்குட்டி?” என சற்று அதட்டலாக கேட்ட தன் அப்பாவை ஏறிட்டுப் பார்த்தவளின் விழிகள் சட்டென்று கலங்கி விட்டது..
அவளின் கலங்கிய விழிகளை பார்த்ததும், மனம் இறங்கி அந்தக் கண்ணீரைத் துடைக்க தான் சபரீஸ்வரனின் மனம் துடித்தது..
ஆனால், தான் மட்டும் அப்படி செய்தால், இந்த ஜென்மத்தில் அவளுக்கு கல்யாணம் என்ற ஒன்று நடக்கவே, நடக்காது என்பதை அறிந்தவன் கைகளை கட்டி அமைதியாக நின்றிருந்தான்..
“ப்ச்ச். அம்மா நீங்களாவது ஏதாவது பேச மாட்டீங்களா?” என தன் தாயை துணைக்கு அழைக்க, அவளோ திருதிருவென விழித்தாள்.
பின்னே பிரச்சினைக்கு காரணகர்த்தாவே அவள் தான்.. நேற்றிரவு வரை தூங்கிக் கொண்டிருந்த சபரீஸ்வரனை எழுப்பி, தன் மகளுக்கு மாப்பிள்ளை தேட வேண்டுமென கட்டளையிட்டு, அவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தவள் அல்லவா அவள்..
அவளிடமே பிரச்சினைக்கு ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டால் அவளும் என்னதான் செய்வாள்?..
“இல்லை சப்துக்குட்டிம்மா?” என தடுமாறி நின்ற மனைவியின் விழிகளில் என்ன கண்டானோ?..
“ஏதுனாலும் என்கிட்ட பேசு.. நான் தான் உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கேன்” என்ற சபரீயை என்ன செய்தால் தகும் என்பது தான் அவளின் எண்ணம்..
ஆனால் எதுவும் செய்ய முடியாதே, தன் அன்புக்குரிய தந்தையாயிற்றே.. நேற்று வரை ‘தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’ என வாழ்ந்தவள் ஆயிற்றே அவள்..
சில நிமிடம் பல்லைக் கடித்தாள்.. சில நிமிடம் முகத்தை சுழித்தாள்.. சில நிமிடம் எரிச்சலை தன் முகத்தில் அப்பட்டமாக காட்டினாள். அவளின் முகத்தில் தோன்றிய ஒவ்வொரு உணர்வுகள் மற்றவர்களுக்கு புரியாமல் இல்லை..
ஆனாலும் என்ன செய்வது?. கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்பவளை அனைவரும் கட்டாயப்படுத்தி அல்லவா திருமணம் செய்து வைக்க முயல்கின்றனர்..
அனைவரும் கட்டாயப்படுத்துவதால் அவளுக்கு ஒன்று இளம் வயதோ, இல்லை உலகம் அறியா வயதோ இல்லை.. முழுதாக 26 வயது முடிந்து 27 தொடங்கியிருக்கிறது..
இரண்டு டிகிரி முடித்து மூன்றாவது டிகிரி படித்துக் கொண்டிருக்கிறாள்.. அவள் படிப்பில் கெட்டிக்காரி. எப்பொழுதும் டாப்பில் தான் இருப்பாள்.. ஆனால் காதலில், வாழ்க்கையில் என்றும் பூஜ்ஜியம்,
எந்தவித கவலையுமின்றி ஜாலியாக வாழ வேண்டுமென்பது தான் அவளின் எண்ணம். அதற்கு கல்யாணம் ஒரு தடைக்கல் என்று தான் அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்..
நீண்ட நேரம் சோபாவில் அங்குமிங்கும் யோசித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் தன் பதிலுக்காக எதிர்பார்த்துக் காத்திருந்த தாயின் முகம் தான் தெரிந்தது.
என்னதான் தந்தையின் மேல் அதீத அன்பு கொண்டிருந்தாலும், தாய் என்ற ஒரு ஜீவன் இல்லாமலையா தான் இந்த உலகிற்கு வந்து விட்டோம் என்பதை அந்த நிமிடம் உணர்ந்தாள்..
அமைதியாக இருந்தவள் நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டவாறே வேகமாக தாயின் அருகில் சென்றவள், சரணிகாவின் கழுத்தில் முகம் புதைத்தாள்..
“சப்துக்குட்டி” என்ற தாயின் கன்னத்தில் முத்தமிட்டவள்,
“நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்.” என்றவள் எதிரே நின்றிருந்த தன் தந்தையையும் பார்த்தாள்.. அவனின் கண்களை நேருக்கு நேராக பார்த்துக் கொண்டே, உங்களுக்காக மட்டும்.. என வாய் சொல்லாவிடிலும், கண்கள் சொல்லியது அந்த செய்தியை..
அதை உணர்ந்த சபரீயின் இதழ்களில் மெல்லிய புன்னகை..
“இன்னைக்கு ஈவ்னிங் 5 மணிக்கு பொண்ணு பார்க்க வர்றாங்க” என சபரீ சொல்லி முடிப்பதற்குள்,
“என்னப்பா? மாப்பிள்ளைய பத்தி எதுவுமே சொல்லலை” என்றபடி தன்னறைக்குள் இருந்து வந்தான் பிரகதீஸ்வரன், சபரீயின் மகன்.. கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ் நடத்தி வருகிறான்..
எப்பொழுதாவது தான் வீட்டில் இருப்பான்.
“மாப்பிள்ளையை பத்தி நான் சொல்ல வேண்டியதில்லை. இந்த ஊரே சொல்லும்” என சபரீ புதிர் போட்டு விட்டு போக,
ஊரே சொல்லுமா?.. அப்படி யாரா இருக்கும் க்கா?” என சப்துனிகாவின் அருகில் வந்து அவன் காதில் கிசுகிசுக்க,
“சத்தியமா எனக்கு தெரியலை டா.. யாரந்த மாப்பிள்ளையோ? பார்ப்போம் எனக்கு ஏத்த இழிச்சவாயன் எங்கேயிருக்கான்னு” என அசால்ட்டாக சொன்னவள், தன்னறைக்குள் சென்று விட்டாள்..
கலெக்டர் அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..
செளந்தரபாண்டியன் I.A.S. என பெயர் பலகையை தாங்கியிருந்த வீட்டினுள் பெரும் அமைதியே குடிக் கொண்டிருந்தது..
அங்கிருப்பது மூன்றே மூன்று பேர் தான்.. அங்கு நிசப்தம் தான் அவர்களின் மொழி..
சத்தமாக பேசக்கூட மாட்டார்கள்.. அவர்களுக்கு அது பழக்கமில்லை என்று கூட சொல்லலாம்..
காலை சரியாக எட்டு மணிக்கு தன்னறையில் இருந்து சற்று நிதானமாக வெளியே வந்தான் செளந்தர பாண்டியன் என்கின்ற செளந்தர்..
எந்த வித பதட்டமும், பந்தாவும் இல்லாமல் நேராக டைனிங் டேபிளின் அருகில் சென்றான்..
டைனிங்க் டேபிளில் பரிமாறுவதற்கோ, இல்லை கூட அமர்ந்து சாப்பிடுவதற்கோ யாருமே இல்லை.. பத்து பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய மேஜையில் அவன் மட்டுமே சாப்பிட அமர்ந்திருந்தான்..
அங்கிருந்த துணையாக இருந்தது என்னவோ, அங்கிருந்த சித்திர சுவர்கள் தான்.. .
அவனுக்கு அவனே பரிமாறிக் கொண்டான்.. அந்த வீட்டில் இதுதான் வழக்கம்.. மகன் என்று பரிமாற அவனின் அம்மா யசோதா வரமாட்டார்..
உன் சாப்பாடு, உன் வயிற்றுக்கு சாப்பிடுகிறாய், நீதான் எடுத்துப் போட்டு சாப்பிட வேண்டும் என சொல்லியே வளர்க்கப்பட்டிருந்தான்.. அதனால் பெரிதளவில் குடும்பத்துடன் எந்தவித ஒட்டுதலும் அவனுக்கு இல்லை.
அவன் சாப்பிட்டு வெளியே வந்ததும், சோபாவில் அவனிடம் பேசுவதற்காகவே காத்திருந்தனர் குணசேகரன் - யசோதா தம்பதியினர். அவர்களின் ஒற்றை வாரிசு தான் செளந்தரபாண்டியன்..
“செளந்தர்” என யசோதா அழைத்ததும் அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்தான் செளந்தர்..
“உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்கோம்” என்றவரை அதிர்ந்து பார்த்தான், கோபத்துடன் ஏறிட்டான் என்பது போல் எதுவும் அவனிடத்தில் இல்லை..
சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்தான்.. அவன் ஏதோ யோசிக்கிறான் என்பது மட்டும் அவர்களுக்கு புரிந்தது.. அந்த புரிதல் மீண்டும் அங்கேயொரு அமைதியை பரிசளித்தது..
“என்னப்பா, ஏதாவது சொல்லணுமா?” என குணசேகரன் கேட்க,
“இல்லை” எனும் விதமாய் தலையாட்டினான்..
“அப்போ கல்யாணத்துக்கு ஓகே வா..” என யசோதா சற்று ஆர்வமாக கேட்டார்..
“ம்ம்.” என ஹம்மிங் செய்தபடி, “சரி” என ஒற்றை வார்த்தை உதிர்க்க, அவ்வளவு தான் மளமளவென மடை திறந்த வெள்ளமாய் தன் மனதில் இருப்பதை எல்லாம் கொட்ட ஆரம்பித்தார்..
“பொண்ணு பேரு சப்துனிகா.. மினிஸ்டர் சபரீஸ்வரன் பொண்ணு.. அவுங்க அம்மா காலேஜ்ல ப்ரோபசரா இருக்காங்க.. என்னோட ப்ரண்ட் தான்.. அவளை தான் உனக்குப் பேசியிருக்கோம்.. இன்னைக்கு ஈவ்னிங் 5 மணிக்கு பொண்ணு பார்க்கப் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போறோம்” என்றவரின் முகத்தில் சற்று கூடுதல் ஆர்வம் இருப்பதை செளந்தரும் உணர்ந்தேயிருந்தான்.
அவரின் ஆர்வத்தைப் பார்த்தவனின் இதழில் சிறு புன்னகை மட்டுமே..
வேகமாக மாலை 5 மணிக்கு ஏதும் முக்கியமான மீட்டிங் இருக்கிறதா? என தன் மனதிற்குள்ளேயே தன் செட்டியூலை நினைத்து பார்த்தான்.. அப்படியெதுவும் இல்லை. அலுவலகத்தில் தான் வேலையிருந்தது..
அதனால் அவனுக்கு அது சற்று இலகுவாக இருந்தது..
“சரி.. வர்றேன்” என ஒற்றை வார்த்தை தான் உதிர்த்தான்..
சரி என தலையாட்டிக் கொண்டார் யசோதா.. இத்தனை பேச்சுவார்த்தைகள் நடந்தும் குணசேகரன் அமைதியாக தான் இருந்தார்..
இங்கு பேச்சுக்களே தட்டுப்பாடாய் இருக்க, அங்கு தன் தோழி மானசாவிடம் வளவளவென பேசிக் கொண்டேயிருந்தாள் சப்துனிகா..
“என்னடி சொல்லுற? பொண்ணு பார்க்க வர்றாங்களா?” என அதிர்ந்து கேட்டாள் மானசா..
“அதுக்கு ஏன்டி நீ ஷாக்காக்குற?. என்னவோ உன்னை பொண்ணு பார்க்க வர்ற மாதிரி..”
“இங்கே பாரு நீ எங்கேயும் வர தேவையில்லை.. உன்னைப் போய் என் துணைக்கு அழைச்சேன் பாரு, என் புத்தியை செருப்பால அடிச்சிக்கணும்” என சிடுசிடுக்க,
“ஏய்ய்ய். சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்டி. ஷார்ப்பா 4.30 மணிக்கு உன் வீட்டுக்கு வர்றேன்..” என போனை கட் பண்ணினாள் மானசா..
மானசா போனை கட் பண்ணியதும் சப்துவிற்கு ஏதோதோ யோசனைகள்.. கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டோம், ஆனால் மாப்பிள்ளையின் பெயர் கூட தெரியவில்லை..
என்ன பெயராக இருக்கும்? என அவளுக்குள்ளேயே ஒரு வித ஆர்வம் பொங்கியது.. ஏனோ இன்று காலேஜிற்கும் லீவு எடுத்து விட்டதால் எதுவும் செய்யப்பிடிக்காமல், அவளின் மிகப்பெரிய நண்பனான துக்கத்தை தன் துணைக்கு அழைத்து விட்டாள்..
ஆம். தூங்கினாள்.. தூங்கினாள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.. மதியம் 2 மணியளவில் தான் எழுந்தாள்.. நன்றாக தூங்கியதாலோ என்னவோ, அவளின் முகம் மற்றைய நாளை இன்று சற்று அதிகப் பொலிவுடன் தெரிந்தது..
மெதுவாக சாப்பிட்டு முடித்துக் கொண்டு போனை நோண்ட ஆரம்பித்தாள். அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அவள் பெயர் நிச்சயமாக இருக்கும்..
நான்கு மணியளவில் அவளின் அறைக்குள் நுழைந்தாள் சரணிகா சப்துவை முறைத்துக் கொண்டே,
“என்னம்மா வரும் போதே ரொம்ப பாசமா பார்த்துக்கிட்டு வர்ற?”
“ம்ம். வேண்டுதல்” என முணுமுணுத்துக்கொண்டே அவளின் கபோர்டை ஓப்பன் பண்ணினார்..
அவளுக்கு சேலைகள் அணிவது விருப்பம் என்பதால், சேலைகள் பஞ்சமில்லாமல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.. அத்தனை சேலைகளுக்கு நடுவில் சிகப்பு கலர் புடவையில் தங்க ஜரிகை இழையோடிய ஒரு புடவையை எடுத்தார் சரணிகா..
“ம்மா.. இந்த சேலை கொஞ்சம் ஹெவி வெய்ட்டா இருக்கும்.. நீங்க ஏதாவது சாப்ட் சில்க் காட்டன் எடுத்துக் கொடுங்க. பொண்ணு தானே பார்க்க வர்றாங்க” என தன் மறுப்புக்களை சட்டென்று முன் வைத்தாள்..
“ப்ச்ச். ஏன்டி.. ரொம்ப அழகா இருக்கு. எனக்கு இந்தக் கலர் ரொம்ப பிடிச்சிருக்கு..” என சொல்லி முடிப்பதற்குள்,
“உன்னைய்யா பொண்ணு பார்க்க வர்றாங்க?” என சபரீஸ்வரனின் பின்னால் இருந்த கணீரென்று ஒலித்தது.
“ஆமாமா.. பொண்ணு, கீண்ணு பார்த்துட்டாலும், கல்யாணமே எனக்கு அதிரடி தான்.. இதுல பொண்ணு பார்க்க வர்றது ஒன்னு தான் எனக்கு குறை” என்றவளை தீயாய் முறைத்தனர் அப்பாவும், மகளும்..
“இப்போ என்ன அப்பா மிரட்டிக் கல்யாணம் பண்ணினாலும், உங்களை ராணி மாதிரி தானே வச்சிருக்காங்க..” என்ற சப்துனிகாவிடம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டிய கட்டாயம் தான் சரணிகாவிற்கு..
ஆம்.. ராணி தான்.. அப்படித்தான் ஒவ்வொரு நிமிடமும் அவள் உணர்கிறாள். அதனால் தானே தன் தோழியின் மகன் என்று சொன்ன அடுத்த கணமே தன் மகளைக் கொடுப்பதற்கு சம்மதம் என்று விட்டான்..
“சரிடி. நான் ராணி தான். போதுமா,. சிக்கீரமா ரெடியாகு” என்றவர் வெளியே செல்ல, சரணிகா வெளியே சென்றதும், வேகமாக மகளின் கபோர்டிற்கு சென்ற சபரீஸ்வரன், கண்கள் இடுங்க எதையோ தேடினான்.
சட்டென்று அவன் கைகளில் சிக்கியது சாப்ட் சில்க் காட்டன் புடவை. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அது பட்டுப்புடவை போன்ற தோற்றத்தை தான் கொடுக்கும்.
அதை அணிந்தால் உடலிற்கு நோகாமல் இருக்கும்.. எந்த வித அசெளகரியமும் அந்த புடவையிடத்தில் இருக்காது.. அதை எடுத்து சப்துனிகாவின் கையில் ஒப்படைத்து விட்டு வெளியேறினான்..
அந்தப் புடவையை பார்த்ததும் தன் தந்தையை பார்த்து கண்கள் சிறிது பணித்தது.
சபரீ வெளியே வரவும், சரணிகா அவளை முறைத்துக் கொண்டு நின்றாள்..
“என்ன?” என கண்களால் கேட்க,
“ஐ திங்க்.. கண்டிப்பா சேலையை நீங்க அவளுக்கு மாத்திக் கொடுத்துட்டு வந்திருப்பீங்க?” என தன்னவன் மனம் அறிந்த மங்கையாக அவள் கூறிட, சபரீஸ்வரனின் இதழ்களில் சிறு புன்னகையுடன் சேர்ந்த ஒரு கர்வமும் தோன்றியது..
நீண்ட நேர காத்திருப்புக்குப் பின் அறையை விட்டு வெளியே வந்தாள் சப்துனிகா..
அழகு என்றால் அப்படியொரு சாத்வீகமான அழகு.. ஏனோ பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது போல் ஒரு தோற்றம் அவளுடையது..
அவர்கள் சரியாக கோவிலுக்கு செல்வதற்காக புறப்படும் நேரம், சபரீஸ்வரனை தேடி ஆட்கள் டெல்லியில் இருந்து வந்திருந்தனர்.
எதிர்பாராத வருகையினால் சபரீஸ்வரன் அங்கேயே இருக்கும்படி ஆனது.. அதுவும் கட்சி விஷயமாக வந்திருப்பதால் சபரீயால் எதுவும் மறுக்க முடியவில்லை.
தன்னுடைய வீட்டில் இருந்த அலுவலக அறையில் பேசி முடித்து விட்டு வேகமாக கோவிலுக்கு சென்றனர்.. சரணிகா முதலிலேயே யசோதாவிற்கு தகவல் சொல்லி விட்டாள்..
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்தே அவர்கள் கோவிலுக்கு சென்றனர்.
அவர்கள் புறப்பட்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற நேரம் 6 மணி.. அப்பொழுதும் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை அங்கு வரவில்லை..
ஆறு மணி ஏழு மணியாகியது.. அப்பொழுதும் மாப்பிள்ளை வரவில்லை.. நீண்ட நேரம் காத்திருந்தவர்கள், அப்படியே பேசிக் கொண்டே இரவு டின்னரை அருகிலிருந்த பைவ் ஸ்டார் ஹோட்டலில் முடித்துக் கொண்டனர்..
அவர்களை பற்றிய ஒவ்வொரு தகவலும் யசோதாவின் மூலம் மாப்பிள்ளைக்கு ஆடியோ வாய்ஸ் செல்வதை சப்துனிகாவும் அறிந்தே வைத்திருந்தாள்..
அதை அவன்பார்த்து விட்டான் என்பதற்கு ப்ளூ டிக்கும் உடனுக்குடன் வந்தது.. ஆனால் ஆள் தான் அங்கு வரவில்லை..
தன்னை இப்படி அலங்கரித்து நிற்க வைத்து, அவர்களாய் ஏதோதோ பண்ணிக் கொண்டிருந்த கோபம் சப்துனிகாவிற்கு அளவுக்கடந்த ஆத்திரத்தைக் கொடுத்தது..
வீட்டிற்கு 8.30 மணியளவில் நுழைந்த அடுத்த கணமே அங்கிருந்த 60 இன்ச் பெரிய டிவி சுக்குநூறாக உடைந்தது..
அத்தியாயம் 2
வீட்டில் உடைந்து கிடந்த டிவியை தான் அதிர்ந்து பார்த்தனர் அனைவரும். அதிலும் சபரீஸ்வரனுக்கு சற்று கூடுதல் திகைப்பு தான்.
சப்துனிகா மனதில் பட்டதை பேசக்கூடியவள் தான், ஆனால் இவ்வளவு கோபம், ஆக்ரோஷம் எதையும் வெளிப்படுத்தக்கூடியவள் அல்ல..
தன் கோபத்தை யாரையாவது திட்டி தான் தீர்ப்பாள்.. ஆனால் இன்று தான் முதல் முறையாக இப்படி வீட்டில் பொருட்களை போட்டு உடைத்திருக்கிறாள்..
அவ்வளவு கோபமா? என்ற சபரீஸ்வரன் அறியவில்லை. ஒரு பெண்ணை நாலு பேர் முன்னால் அலங்காரத்துடன் காட்சிப்பொருளாக நிற்க வைத்தால், அவள் மனம் என்ன பாடுபடும் என்பதை..
நாலு பேர் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? தான் கல்யாணத்திற்கு அலைவதாக அல்லவா நினைத்திருப்பார்கள்.. அந்த எண்ணமே அவளுக்கு கண்மண் தெரியாத கோபத்தைக் கொடுத்தது..
“சப்துக்குட்டி என்ன இதெல்லாம்?” என சற்று கடுமையாக கேட்டது என்னவோ சரணிகா தான்..
“என்ன இதுன்னா?.. ஹான் என்னம்மா சொல்லணும்?.. நான் சீவி சிங்காரிச்சு, அலங்காரம் பண்ணி நாலு பேர் வர்ற கோயில்ல ஒருத்தனுக்காக காத்திருக்கேன். ஆனா அவன் என்னை பார்க்கக் கூட விருப்பப் படலைன்னா, அது எனக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா?” என ஆத்திரத்தில் பேசிக் கொண்டிருந்தவளின் கண்கள் அழுகையில் கரைந்தது..
அதுவரை அவளின் மேல் இருந்த கோபம் கூட நீர் பட்ட பனித்துளியைப் போல் உருகிட, முதலில் சப்துனிகாவை அணைத்தது என்னவோ சபரீஸ்வரன் தான்..
“என்ன குட்டிம்மா இது? இதுக்கெல்லாம் அழுவாங்களா? நாளைக்கே அந்தப் பையனை நான் வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றேன்..” என சொன்னதும் தான் தாமதம், மீண்டும் அவளின் கோபம் தலைதூக்க,
“நான் கல்யாணத்துக்கு அவ்வளவு அலையுறேனா ப்பா?” என உடைந்த குரலில், தன் மனதில் இருப்பதை கேட்டே விட்டாள்.
என்னவென்று சொல்வான் அவன்?.. அவன் அப்படி நினைத்து கேட்கவில்லையே..
அந்தப் பையனையே உன்னத் தேடி வரவைக்கிறேன் என்பதை நினைத்து தான் அவன் பேசினான். ஆனால் அவள் அதையும் தப்பாகவே புரிந்துக் கொண்டாள்..
“இல்லைம்மா” என்ற சபரீஸ்வரனின் முன்பாக ஒற்றைக் கையை உயர்த்தியவள்,
“என்னை பார்க்க விருப்பமில்லாத ஒருத்தனுக்காக நான் என்னைக்கும் காத்திருக்க மாட்டேன்.. எனக்கு வேற மாப்பிள்ளை பாருங்க” என சொல்லி முடிப்பதற்கும்,
“சார்” என வாசலில் குரல் கேட்பதற்கும் சரியாக இருந்தது..
சர்வ அலங்காரத்தில் நின்றிருந்தவளுக்கு, இரவு நேரம் எவனோ ஒருவன் தங்கள் வீட்டில் நடக்கும் விஷயத்தை ஒட்டுக் கேட்டிருக்கிறான் என்பதே, அடக்கப்பட்டிருந்த கோபம் மீண்டும் தலைதூக்க,
“செக்யூரிட்டிஈஈஈஈஈஈ” என அவள் கத்திய கத்தலில், வாசலில் நின்றுக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் அலறியடித்தபடி ஓடி வந்து வாசலில் நின்றனர்..
“இது தான் நீங்க காவல் காக்குற லட்சணமா? நீங்க எல்லாரும் செக்யூரிட்டின்னு எதுக்கு இருக்கீங்க?.. எவனோ ஒருத்தன் எங்க வீட்டுல வந்து நிக்குறீங்க?.. ஹான்.. ஒரு மினிஸ்டர்க்கு நீங்க கொடுக்கிற பாதுகாப்பு இதுதானா? இவன் ஒரு கொலைகாரனா இருந்து என் அப்பாவை கொன்னுட்டா” என கோபத்தில் எகிறிட, கேட்டுக்கொண்டிருந்த அத்தனை பேரும் அதிர்ந்து விட்டனர்.
“சப்துனிகா என்ன பேசுற? அந்தப் பையனை பத்தி தெரியாம எதையும் பேசாதே” என சட்டென்று அவளை அடக்க முயற்சித்தது என்னவோ சரணிகா தான்..
அவளுக்குத் தான் எதிரில் நிற்பவனை நன்கு அடையாளம் தெரியுமே.
“அம்மா.. நீ ஒரு வார்த்தை பேசாதே.. பேசுன அவ்வளவுதான் சொல்லிட்டேன்.. உன் ப்ரண்ட்டோட பையன் தானே என்னை பொண்ணு பார்க்குறேன்னு, பார்க்க வராம இருந்தது.. எனக்கு கோபமெல்லாம் உன் மேல தான் ம்மா..” என சரணிகாவிடம் கடுமையாக சாடியவள், எதிரில் நின்றிருப்பவனை அழுத்தமாக பார்த்தாள்.
அவனும் எதிரில் இருப்பவளை தான் பார்த்தான். பெண்ணா இவள்? பிசாசு என்ற எண்ணம் தான் அவனுக்குத் தோன்றியது.. அவனுக்கு யாராவது சத்தமாக பேசினாலே பிடிக்காது.. அதனால் தானோ என்னவோ முதல் பார்வையிலேயே சப்துனிகாவை பிடிக்காமல் போய் விட்டது.
அதிலும் அவளின் தோற்றம்.. சுத்தமாக பிடிக்கவில்லை.. எதையும் நீட்டாக செய்யும் அவனுக்கு, அலுங்கிய அவளின் தோற்றத்தைக் கண்டாலே ஒரு வித அறுவெறுப்பும் தோன்றியது..
ஆம்.. அப்படியொரு தோற்றத்தில் தான் நடுவீட்டில் தாம்தூம் என குதித்துக் கொண்டிருந்தாள்..
பார்த்து, பார்த்து அலங்கரித்த சேலை கன்னாபின்னாவென்று கசங்கியிருந்தது.. தலையில் வைத்த பூ கோபத்தில் ஆங்காங்கே கலைந்து, தலையில் இருப்பதா, கீழே விழவா? என தலையிலேயே தொங்கிக் கொண்டிருந்தது..
அதற்கு மேல் அவள் அணிந்திருந்த நகை, ஆங்காங்கே பறந்திருந்தது.. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாய் வீட்டின் டிவி சில்லு சில்லாய் உடைந்து கண்ணாடி எங்கும் சிதறியிருந்தது..
அவன் தன்னையும், தன் வீட்டையும் அளவெடுப்பதைப் பார்க்க எரிச்சலோடு கலந்து ஆத்திரம் உண்டானது.
“யார் நீ?..” என்றவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான்.. ஆனால் எதுவும் பேசவில்லை.. அவளின் மரியாதையற்ற பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லை.
“நான் மினிஸ்டர்.சபரீஸ்வரனை பார்க்க வந்திருக்கேன்.. நீ தான் சபரீஸ்வரனா?” என அவளை விட அழுத்தமாக அவனை பார்த்துக் கொண்டே, தன் திருவாய் மலர்ந்து சில வார்த்தைகள் பேசி விட்டான்..
அவனுக்கு மரியாதைக் குறைவாக யாராவது பேசினாலே பிடிக்காது, அதுவும் ஒரு சிறு பெண் தன்னை மரியாதையில்லாமல் பேசுவது அப்படியொரு எரிச்சலை தான் கொடுத்தது..
அவன் சபரீஸ்வரனை பார்க்க வந்திருக்கிறேன் என்று சொன்னதே சரணிகாவிற்கு அதிர்ச்சிதான்..
அவரை பார்க்க வந்திருக்கிறானா? அப்போ தன் மகளை பார்க்க வரவில்லையா?.. என்ற எண்ணம் தான் அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது..
ஆம், வாசலில் வந்து நின்றிருந்தவன் வேறு யாருமல்ல, சப்துனிகாவை பெண் பார்க்க வருவதாக சொல்லிவிட்டு, வராமல் போன செளந்தரபாண்டியன் தான்..
அதே கலெக்டர் செளந்தரபாண்டியன் தான்.. ஆனால் அவனை பற்றிய உண்மை சரணிகா, சபரீஸ்வரனை தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை.
“என்ன பேசணும்?” என்ற சபரீஸ்வரனின் குரலில், பார்வையை மெல்ல சபரீயின் பக்கம் திருப்பினான் செளந்தர்.. ஆனால் அவனின் அனல் பார்வை சப்துனிகாவின் மேல் அழுத்தமாக பதிந்தது.
“கொஞ்சம் அபிசியலா பேசணும் சார்..” என மரியாதை என்பது எந்தவிடத்திலும் குறைவில்லாமல் பேசினான்..
“ஓகே.. என்னோட ஆபீஸ் ரூம்ல வெய்ட் பண்ணுங்க.. நான் பத்து நிமிஷத்துல வந்திடுறேன்..” என்றவர்களின் பேச்சை அங்கிருந்த அனைவரும் கேட்டுக் கொண்டு தான் இருந்தனர்.. சப்துனிகா உள்பட,
அவளுக்கு யார் இவன்? என்ற கோபம் உள்ளுக்குள் கனன்று கொண்டு தானிருந்தது..
“சப்துனிகா. இனிமேல் இந்தமாதிரி எப்பவும் நடந்துக்காதே..” என எச்சரிக்கும் குரலில் சொல்லிவிட்டு, அலுவலக அறையை நோக்கி சபரீஸ்வரன் நடந்து விட்டான்..
“ஏன்டி உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்க?.. என்னமோ நடுவீட்டுல தாடகை மாதிரி குதிக்கிற?” என்ற தாயை ஏகத்துக்கும் முறைத்தவள்,
“நீ ஏன் சொல்ல மாட்டே.. உன் ப்ரண்டோட பையன் தானே அந்த மாப்பிள்ளை.. அதான் என்னை விட உனக்கு அவனை பிடிச்சிருக்கு..” என்றவளின் சத்தம் அலுவலக அறையில் தெளிவாக கேட்டது என்பது தான் சத்தியமான மெய்..
சரணிகாவிற்கு சிறு பயம் வந்தது.. எங்கே இவள் பேசுவதை செளந்தர் கேட்டு விடுவானோ? என்ற பயம்தான் அது..
“சப்து.. இப்போ வந்துட்டுப் போறது யாருன்னு தெரியுமா?” என சற்று கடினக்குரலில் சொன்னவளை ஆதங்கமாக பார்த்தாள்..
“அம்மா வந்துட்டுப் போறவன் பெரிய தேசிங்கு ராஜாவாவே இருந்துட்டுப் போறேன்.. தயவுசெஞ்சு ஆளை விடுங்க.. காலையில இருந்து கல்யாணம்.. கல்யாணம்னு ஒரே மெண்டல் டார்ச்சர் பண்ணிக்கிட்டு” என்றவள் வேகமாக தன்னறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள்..
கதவை மூடியவளுக்கு அழுகை தான் வந்தது.. காரணம் எதுவும் தெரியாமலே அழுதாள்..
சப்துனிகாவும், சரணிகாவும் பேசிக் கொள்ளும் சத்தம் ஆபீஸ் அறை வரைக்கும் கேட்கத்தான் செய்தது..
அப்படியொரு சத்தம் அவள் வாயில் இருந்து.. ஏதோ மைக்கை முழுங்கியது போன்று சத்தம் போட்டாள்.
அவள் போட்ட சத்தத்தில் சட்டென்று தன் பாக்கெட்டில் இருந்த பஞ்சினை எடுத்து காதில் வைத்துக் கொண்டான் செளந்தர். ஐந்து நிமிடங்கள் முழுதாக கடந்த பின்பு தான் காதில் இருந்த பஞ்சினை எடுத்தான்..
அவனையே அழுத்தமாக பார்த்தான் சபரீஸ்வரன்.. அவன் பார்வையை உணர்ந்தாற் போன்று,
“எனக்கு சவுண்ட் அலர்ஜி இருக்கு சார்.. அதிக சத்தம் எனக்கு ஆகாது” என்றவன் தொடர்ந்து, “ரியல்லி ஐயம் சாரி சார்..” என்றான் வருத்தமான குரலில்..
அவனின் மன்னிப்பு படலம் ஏன் என்று சபரீக்கும் புரிந்தது..
ஆனால் இதைப் பற்றி இப்பொழுது பேசி ஒன்றும் ஆகப்போறதில்லை என்பது அவனுக்கு நன்றாக தெரியும்.
அவனது வருத்தமான குரலில் இருந்த வலி, அவனையும் தொற்றிக் கொள்ள, “ஒரு பத்து நிமிஷம் பர்சனலா பேசலாமா? மிஸ்டர்.செளந்தர பாண்டியன்” என கேட்டான் சபரீஸ்வரன்..
செளந்தரும் அதற்கு ஆமோதிப்பாக தலையை ஆட்டினான்..
“ஏன் பொண்ணு பார்க்க வர்றேன்னு சொல்லிட்டு வரலை..” என்றவனின் குரலில் இருந்த ஆதங்கம், செளந்தர பாண்டியனுக்கு புரியாமல் இல்லை..
ஆனால் தன் நிலை பற்றிய விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும் என்று நினைத்தான்.
“சார்.. ஒரு நிமிஷம் என்னோட வேலையை பற்றி யோசிங்க.. நான் ஒரு கலெக்டர்.. இந்த வேலையை எல்லாரையும் மாதிரி பணத்துக்காகவோ, பகட்டுக்காகவோ நான் வரலை.. ரொம்ப நேசிச்சு வந்திருக்கேன் சார்..
எனக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது சார்.. மதுரைக்குள்ள ஒரு பிரச்சினைன்னா, மேலிடத்துக்கு பதில் சொல்லுற முதல் ஆள் நானா மட்டும் தான் இருப்பேன்.. இப்பவும் அதே மாதிரி ஒரு பிரச்சினையில் தான் நான் மாட்டிக்கிட்டேன்.. இப்படி அர்த்த ராத்திரியில நான் உங்களை தேடி வர்றதுக்கு காரணமும் நான் ஒரு கலெக்டர்ங்கிறதுனால மட்டுமில்லை.. பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கணும்னு தான் சார்.. அநியாயமா தன் பொண்ணை இழந்துட்டு இருக்கிற ஒரு அம்மாவுக்கு நியாயம் வாங்கித் தர்றதுக்காக மட்டும்தான்.. நீங்க புரிஞ்சிப்பிங்கன்னு தெரியும் சார்.. ஆனா உங்க பொண்ணு” என்றவனின் முகம் சற்று இறுகி,
“புரிஞ்சிக்க வாய்ப்பே இல்லை சார்.. இனி அபிஷியலா பேசலாமா சார்..” என்றவன்,
“சார் *** பள்ளியில் 13 வயசு பொண்ணு மாடியில் இருந்து தற்கொலை பண்ணிக்கிட்டா..” என்றதும் ஒரு நிமிடம் திக்கென்றானது சபரீஸ்வரனுக்கு.
“என்ன சொல்லுறீங்க?. என்னாச்சி எதுனால அந்தப் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டா? போக்சோ.. ஏதாவது” என கேட்டவனுக்கு மனமே ஆறவில்லை. சிறு பிள்ளை அல்லவா, மனம் வலித்தது..
“கண்டிப்பா இது போக்சோ இல்லை சார்.. அதுக்கும் மேல, ஒரு மனிதனை தீண்டாமைன்னு சொல்லுறதே பாவம் சார்.. ஆனா அந்தப் பொண்ணோட ஜாதியை சொல்லி, சொல்லி அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி, அந்தப் பொண்ணை பாத்ரூமெல்லாம் க்ளீன் பண்ண சொல்லி” என சொல்லி முடித்து தான் தாமதம், சட்டென்று தன் சேரை விட்டு எழுந்து விட்டான் சபரீஸ்வரன்.
இப்படியான விஷயம் தன் ஊருக்குள்ளே நடந்திருக்க, நான் என்ன கல்வித்துறை அமைச்சர்? என்ற எண்ணம் தான் அவனுக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது..
“தப்பு பண்ணவங்க யாருன்னு கண்டுபிடிச்சீங்களா?” என கேட்கும் பொழுதே முகம் இறுகியிருந்தது சபரீஸ்வரனுக்கு..
“அங்கே வேலை பார்க்குற டீச்சர் மூணு பேர்.. மூணு பேருமே லேடி ஸ்டாப் தான்..” என சொல்லி முடிக்க, அவனுக்கு அதீத ஆத்திரம் தான் வந்தது..
“அவுங்க மூணு பேரையும் அரெஸ்ட் பண்ணியாச்சா?” என கேட்ட சபரீஸ்வரனின் முகத்தில் கிஞ்சித்தும் இளக்கம் இல்லை..
“இப்போ பிரச்சினையே அது தான் சார்?.. அதுனால தான் நான் உங்களை பார்க்க வந்தேன்..”
“என்னால அவுங்க மேல எந்த ஸ்டெப்பும் எடுக்க முடியலை. அவுங்க லேடீஸ்ங்கிறது அவுங்களோட ப்ளஸ் பாயிண்ட்னா, இன்னொன்னு, அதுல ஒரு லேடியோட ஹஸ்பெண்ட் உங்களோட கட்சியில நல்ல பதவியில் இருக்காரு. சோ அவுங்க மேல கை வைக்க முடியலை.. உங்க கட்சி பேரு அங்கே நிறைய அடிபடுது.. நீங்க தான் ஏதாவது செய்யணும்? இன்னைக்கே விஷயத்தை முடிச்சா நல்லா இருக்கும் சார்..” என்றவன் எழுந்து வெளியே செல்ல, அப்பொழுது தான் தன் தந்தை பேசி முடித்து விட்டாரா என பார்க்க வந்த சப்துனிகாவின் மேல் சட்டென்று மோதி விட்டான்..
“அய்யோஓஓஓ” என அலறியது என்னவோ சப்துனிகா தான்..
தன் மேல் மோதியது மட்டுமில்லாமல், ஏதோ பாறாங்கல்லின் மீது மோதியது போன்று அலறியவளை சலிப்பாக பார்த்தவன், வேகமாக வீட்டை விட்டு வெளியே சென்றான்..
அவன் காரை எடுத்து வெளியே செல்ல அப்பொழுதும் சப்துனிகாவின் குரல் வெளியே நன்றாக கேட்டது.
“இவளுக்கு தொண்டை வலிக்காதா என்ன?..” என்று தான் நினைத்தான் செளந்தர்..
அவன் அந்த வீட்டை விட்டு தாண்டும் வேளையில் அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்த ஒரே எண்ணம், “இவளை இனிமேல் என் கண்ணுலேயே காட்டாதே கடவுளே.. சரியான க்ராக்கு” என வாய் விட்டு சொல்லிவிட்டே அந்த வீட்டை விட்டு வெளியேறினான்..
அய்யோ பாவம் அவன் வேண்டுதலை கடவுள் கேட்கவேயில்லை போல.. அடுத்த முகூர்த்தத்தில் மணவறையில் அமர்ந்திருந்தனர் சப்துனிகாவும், செளந்தரபாண்டியனும் தம்பதி சமேதராய்…
சபரீஸ்வரன் வீட்டை விட்டு வெளியே வந்த செளந்தர் தன் வீட்டிற்கு வந்த நேரம் மணி 11.
அவன் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே, ENT டாக்டரை பார்த்து விட்டு வந்தான் என்பது தனிக்கதை.
ஆம். அவனுக்கு சத்தம் கொஞ்சம் அதிகமானாலும் டாக்டரை சென்று பார்த்து விட்டு தான் வருவான்..
சத்தம் என்பது அவனுக்கு சுத்தமாகாது..
வீட்டிற்குள் நுழைந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு கட்டிலில் விழுந்தவன் தன்னையும் அறியாமல் கண்களை மூடினான்.. “அய்யய்யயோஓஓ..” என சப்துனிகாவின் குரல் திடீரென்று கேட்பதை போல் உணர்ந்தவன், பட்டென்று எழுந்து அமர்ந்தான்..
கண்களோ தூக்கத்திற்காக கெஞ்ச, காதுகளோ அவளின் சத்தத்தையே திரும்ப, திரும்ப ஓலமிட்டுக் கொண்டிருந்தது..
வேகமாக தன் இரு காதுகளையும் தன் கைகளால் மூடியபடி அமர்ந்திருந்தான்.
என்னதான் அவன் காதுகளை மூடினாலும், சப்துனிகா அவன் கண் முன்னால் தோன்றி, ஊஊஊஊஊஊ என ஊளையிடுவது போன்ற ஒரு பிரம்மை ஏற்பட்டது..
“ப்ச்ச்.. நம்மளை தூங்க கூட விடமாட்டா போலேயே” என மனதிற்குள் சப்துனிகாவை திட்டிக் கொண்டே மணியை பார்க்க, மணி 1 என காட்டியது..
“இதுக்கு மேல தூங்குனாப்புல தான்..” என தன் போனை நோண்ட ஆரம்பித்தான்..
போனையே பார்த்துக் கொண்டிருந்தவன், மீண்டும் எப்பொழுது உறங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.
திடீரென்று யாரோ கதவை தட்டும் உணர்வில் தான் எழுந்தான் செளந்தர்..
யார் இந்த நேரத்தில் கதவை தட்டுகிறார்கள்? என கதவை திறந்துப் பார்க்க, அங்கு சற்று கவலை தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தார் குணசேகரன்..
அவரை இந்த நேரத்தில் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்பதை செளந்தரின் அதிர்ந்த முகமே காட்டிக் கொடுத்தது..
“என்ன ப்பா?” என்றவனிடத்தில் ஏதோ சொல்லத் துடித்தார். வார்த்தைகள் தடுமாறியது.. உடல் அனிச்சை செயலாக நடுங்க ஆரம்பித்திருந்தது..
அவர் அதீத பதட்டத்தில் இருக்கிறார் என்பதை அவன் நொடியில் புரிந்துக் கொண்டான்..
“என்னாச்சி ப்பா?.. ஏன் நெவர்ஸா இருக்கீங்க?” என்றவனிற்கு நேராக தங்கள் அறையை நோக்கி கையை தான் காட்டினார்.
“என்னாச்சி ப்பா? அம்மா எங்கே?” என வேகமாக தன் தாய், தந்தை அறையை நோக்கி ஓடினான்.
கிட்டத்தட்ட பல வருடங்களுக்கு பிறகு அந்த அறைக்குள் செல்கிறான் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
உள்ளே நுழைந்தவனின் கண்களில் பட்டது என்னவோ படுக்கையில் படுத்திருந்த தாய் தான்..
பார்ப்பதற்கு சாதாரணமாக படுத்திருப்பதை போல் தான் இருந்தது.. ஆனால் அவரிடம் அசைவு இல்லை என்பதையும் அவன் உணர்ந்தான்..
“அம்மா.. அம்மா” என மென்மையாக அழைத்தான்.. யசோதாவிடம் சிறிதும் அசைவில்லை..
“என்னாச்சிப்பா?” என தன் தந்தையை பார்த்து தான் கேட்டான்..
“தெரியலை செளந்தர்.. யாரோ என்னை எழுப்புற மாதிரி இருந்திச்சி.. எழுந்து பார்த்தேன்.. யசோதாக்கிட்ட அசைவேயில்லை.. எனக்கு பயமா இருக்கு செளந்தர்” என கண்களில் காதலுடன், சொன்னவரின் சத்தமோ ஸ்கூல் பையன் மிஸ்ஸிடம் ஒப்பிப்பது போல் தான் இருந்தது..
அவ்வளவு மென்மையாக தான் ஒலித்தது.. செளந்தருக்காக மென்மையாக பேசக் கற்றுக் கொண்டாரோ என்னவோ?.. அமைதியாக தான் பேசினார்..
நேராக சென்று தன் தாயின் மூச்சை தான் முதலில் பரிசோதித்தான். சீராக வரவில்லை என்பதை நொடியில் கண்டுகொண்டான்..
“அப்பா காரை எடுங்க” என பதட்டமாக சொன்னாலும், அதை சத்தமாக சொல்லவில்லை..
செளந்தர் சொன்ன பின்பு தான் குணசேகரனிற்கு அந்த யோசனையே தோன்றியது..
நேராக சென்று கராஜினுள் இருந்த காரை எடுத்தார். அதை எடுத்துக் கொண்டு வெளியே வருவதற்கும், செளந்தர் கையில் தன் தாயை ஏந்தியபடி வருவதற்கும் சரியாக இருந்தது..
யசோதாவை காரினுள் ஏற்றியவன், பிரபலமான மருத்துவமனைக்கு சென்றான்.
தன் தாயை கையில் ஏந்தியபடி மருத்துவமனைக்குள் நுழைந்தான்.. அங்கு அவனை தெரிந்தவர்கள் பலர் என்பதால், உடனடியாக யசோதாவிற்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
சில நிமிடங்களில் மாரடைப்பு என டாக்டர் சொல்ல தந்தையும், மகனும் உடைந்து போய் விட்டனர்.
அவரின்றி அவர்களின் வாழ்க்கை ஏது? நிர்சலனமாக முகத்துடன் சேரில் அமர்ந்திருந்தான் செளந்தர்..
கண்களில் கண்ணீர் இல்லை. ஆனால் தாய்க்கு என்னவாகுமோ என்ற பதட்டம் அதீதமாக இருந்தது..
நீண்ட நேர காத்திருப்புக்கு பின் டாக்டர்கள் வெளியே வந்தனர்.. சிவியர் அட்டாக் என்றதுடன் அவருக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டுமென்று குணசேகரனிடம் கையெழுத்தும் வாங்கி விட்டு சென்றனர்..
“டாக்டர் நாங்க பார்க்க போகலாமா?” என அப்பொழுதும் தன் தந்தையையும் சேர்த்தே கேட்டான் செளந்தர்..
“இல்லை சார்.. இப்போ நீங்க உள்ளே போக முடியாது?.. அவுங்களை ஆப்ரேஷன் பண்றதுக்கு வெளியே அழைச்சிட்டு வருவாங்க.. அப்போ நீங்க பார்த்துக்கோங்க..” என டாக்டர் சொல்லி விட்டு சென்ற பத்தாவது நர்ஸ் ஒருவர், பதைபதைப்பாக டாக்டரின் அறையை நோக்கி ஓடுவதை தான் செளந்தர் பார்த்தான்..
பார்த்துக் கொண்டிருந்தவனின் இதயமோ வெளியே எம்பித் துடித்தது.. தன் தாய்க்கு ஏதாவது ஆகிவிட்டதா? என பதட்டத்தில் விழவா என துடித்த கண்கள் கண்ணீரை சட்டென்று கன்னத்தில் இறக்கி விட, பார்த்துக் கொண்டிருந்த குணசேகரனும் சத்தமில்லாது அழ ஆரம்பித்து விட்டார்..
அவருக்குமே அந்த பயம் இருப்பது எல்லாருக்கும் தெரிந்தது.. டாக்டர் வேகமாக ஐசியூவிற்குள் நுழைய, செளந்தருக்கும் ஒன்றும் புரியவில்லை.. தன் தாயிற்கு ஏதோ ஆகிவிட்டதோ என்று முடிவே செய்து விட்டான்..
“சார்.. நீங்க ரெண்டு பேரும் உள்ளே வாங்க” என்றிட, தந்தை மகன் இருவருமே ஒன்றுபோல் ‘இல்லை’ எனும் விதமாய் தலையாட்டினார்..
ஆம் யசோதாவை உள்ளே உயிரற்ற உடலாய் பார்க்க பயந்தே போயினர்.. அவர்களின் பதட்டம் அவர்களின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது..
“டாக்டர்.. அவுங்க ஆப்ரேஷனுக்கு சம்மதிக்க மாட்டேங்குறாங்க..” என்ற நர்ஸின் குரல் வெளியே கேட்ட பின்பு தான் தந்தையும், மகனும் சற்று நிம்மதியாகினார்..
ஆனாலும் அவர்களுக்கு இன்னொரு கவலை தொற்றிக் கொண்டது.. ஏன் ஆப்ரேஷனுக்கு சம்மதிக்கவில்லை.. ஒரு வேளை ஆப்ரேஷன் என்பதால் சற்று பயப்படுகிறாரோ? என நினைத்துக் கொண்டே இருவரும் உள்ளே நுழைந்தனர்.
யசோதாவின் அருகில் முதலில் சென்றது என்னவோ குணசேகரன் தான்.. யசோதா பேச முடியாமல் ஏதோ பேசுவதும், குணசேகரன் மறுப்பாக தலையை அசைப்பதும் தெளிவாக கண்ணில் பட்டது..
“என்ன பேசுகிறார்கள்?” என நினைத்துக் கொண்டே மெல்ல யசோதாவின் அருகில் வந்து நின்றார்..
“என்னாச்சிம்மா?.. உங்களுக்கு ஒன்னுமில்லை தானே” என கேட்கும் பொழுதே குரல் உடைந்து விட்டது..
“எனக்கு.. உன்னோட கல்யாணத்தை பார்க்கணும் ப்பா..” என திக்கித் திணறி, நா தடுமாறி, இரு முறை நாவை ஈரப்படுத்தி அதன் பின்னே முழுமையாக சொல்லி முடித்தார்..
என்ன சொல்வான் அவன்?.. திடீரென்று கல்யாணம் செய்து கொள் என்றால், அவனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை..
காலையில் திருமணம் செய்து கொள்கிறாயா? என்றனர்.. ‘சரி’ என்று விட்டான்..
மாலை பெண் பார்க்க போகலாம் என்றனர், ஆனால் அவன் வேலை அதற்கு இடம் கொடுக்கவில்லை.
இப்பொழுது என்னடாவென்றால் கல்யாணம் செய்து கொள் என்கிறார்.. தன் தாய் உயிருக்கு போராடும் நிலையில் தனக்கு திருமணமா? என்ற எண்ணம் தான் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது..
“அம்மா நீங்க குணமாகி வந்திருங்க.. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்..” என யசோதாவை மட்டும் மனதில் வைத்து கூறினான்..
“கண்டிப்பா..” என அவர் இன்னும் நம்பாத குரலில் கேட்க,
“சத்தியமா..” என்றான் சிறு கலக்கத்துடன், தன்னைப் பற்றிய கவலையில் தன் தாய்க்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று..
“என் மேல சத்தியமா..” என அப்பொழுதும் விடாமல் கேட்டார் யசோதா..
என்னதிது என்ற எண்ணம் தான் செளந்தருக்கு. சிறு கோபமும் வந்தது யசோதாவின் மேல்..
“உங்க மேல சத்தியமா.. நீங்க கைக்காட்டுற பொண்ணை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்” என அவரின் வலது கரத்தோடு தன் கைக்கோர்த்தபடி சொன்னான்..
“ம்ம்” என சற்று முனகலாக சொல்லியவர், கண்களை மூடி ஆப்ரேஷனுக்கு சம்மதித்தார்..
விடியற்காலையில் ஆரம்பித்த ஆப்ரேஷன் காலை வேளையில் தான் முடிந்தது..
காலை ஏழு மணி வரை சோர்வுடன் அமர்ந்திருந்தான் செளந்தர்..
தன் தாயை இப்படி பார்க்க, பார்க்க, மனதிற்குள் ஒரு வித சோர்வு உண்டானது..
ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்து விட்டது. ஆனால் வார்டுக்கு ஷிப்ட் ஆகவில்லை..
அவருக்காகவே காத்திருந்தான் செளந்தர்..
அவர் நன்றாக இருக்கிறார் என டாக்டர் சொன்னதை கேட்டபின்பு தான் அவனுக்கு நிம்மதியே வந்தது..
முழுதாக பத்து நாட்கள் ஹாஸ்பிட்டலில் இருந்தார் யசோதா.. அவரை இருக்க வைத்தான் செளந்தர் என்பது தான் உண்மை..
அவரை வீட்டில் பார்த்துக் கொள்ள ஆளில்லை.. இங்கே முறையான சிகிச்சை கிடைக்கும், என குணசேகரை ப்ரைன் வாஷ் பண்ணி இங்கேயே அவரும் தங்கிக் கொள்ள ரூம் ஒன்றையும் ரெடி பண்ணிவிட்டான்..
பத்து நாட்கள் கழித்து யசோதா வீட்டிற்குள் நுழைந்தார்.. அவர் தன்னறைக்குள் நுழைந்ததுமே முதலில் அழைத்தது என்னவோ சரணிகாவிற்கு தான்..
“ஹலோ..” என சரணிகா சொன்னதும் தான் தாமதம், படபடவென ஊசிப்பட்டாய் வெடிக்க ஆரம்பித்தார் யசோதா..
“ஏன்டி நீயெல்லாம் ஒரு ப்ரெண்டா., நான் வாழ்வா? சாவான்னு சாகக் கிடந்திருக்கேன். ஒரு எட்டு என்னை வந்து பார்க்கணும்னு தோணலை..” என தன் தோழியிடம் உரிமையாக கேட்க,
“அதான் என் உயிரை எடுக்கிறதுக்கு சாகாம வந்துட்டீயே?.. அப்புறம் எதுக்கு இவ்வளவு பேச்சு?” என்றவளுக்கும் யசோதாவின் மேல் சிறு கோபம்..
தன் மகளை பார்க்க வருகிறேன் என சொல்லி விட்டு ஏமாற்றியதால். ஆனால் அதற்காக அவர்கள் நட்பு இல்லையென்று ஆகிவிடாதே..
“நீ பேசுற வாய்க்கே, உன் பொண்ணு தான்டி என் வீட்டு மருமக.. நான் அவளை படுத்துற பாட்டுல, நீ அய்யோ.. அம்மான்னு அலறுவ பாரு..” என இப்பொழுதே சப்துனிகாவின் மாமியாரைப் போன்று சூளுரைக்க,
“அய்யோ. அம்மான்னு நான் அலற மாட்டேன்.. அப்போவும் நீதான்.. அய்யோ, யம்மா எப்படி இவளை வச்சி சமாளிச்சியோன்னு அலறுவ.. ஏன்னா நான் பெத்த ப்ராடெக்ட் அப்படி” என்ற சரணிகாவின் பேச்சில் கலகலவென சிரித்தார் யசோதா.
அவரின் சிரிப்பை மட்டுமே கேட்ட செளந்தருக்கு, அவனையும் அறியாமல் இதழில் சிறு புன்னகை..
யாரிடம் தன் தாய் பேசுகிறார் என்பது தெரியாததால், தன் தாயை சிரிக்க வைத்தவர்களின் மேல் அவனையும் அறியாமல் ஒரு வித பாசம் தான் தோன்றியது..
“ஆமா எங்கேயிருக்கா என் மருமக” என்றதும், சரணிகா மெல்ல திரும்பி ஹாலை பார்க்க, அங்கே நடுஹாலில் அமர்ந்து டோரா புஜ்ஜி பார்த்துக் கொண்டிருந்தாள் சபரீஸ்வரன் பெத்த அருமை முத்து..
அத்தியாயம் 4
“என்னம்மா போன் கட்டாயிடுச்சி” என்றவாறே சப்துனிகா சரணிகாவிடம் போனை நீட்டினாள்.
“நல்லவேளை போன் கட்டாயிடுச்சி..” என மனதுக்குள் ஆசுவாசமாக உணர்ந்தாள் சரணிகா..
“அம்மா போன் கட்டாயிடுச்சி.. நான் வேலைக்கு போயிட்டு மதியம் வந்திடுவேன் ம்மா” என சொல்லிவிட்டு செளந்தர் அலுவலகத்திற்கு புறப்பட்டு விட்டான்..
பின்னே பிள்ளையை பெத்தால் பரவாயில்லை.. அவள் அதிசிய ஜந்துவை அல்லவா பெற்று வைத்திருக்கிறாள்.. எந்த நேரம் என்ன செய்யும் என்பதை அவளாலேயே அறிந்துக் கொள்ள முடியவில்லை.
“என்னம்மா என்னை மனசுக்குள்ளேய திட்டுறீயா?” என சரணிகாவின் முகத்தை பார்த்தே அவளின் உணர்வுகளை புரிந்துக் கொண்டாள் சப்துனிகா..
“அய்யய்ய்யோ சரணி, இவ உன் புருஷனை விட டேஞ்சர்” என அவள் மனசாட்சி எடுத்துரைக்க,
“அதெல்லாம் ஒன்னுமில்லை.. காலேஜ் முடிச்சிட்டீயே, ஏதாவது வேலைக்குப் போக வேண்டியது தானே..” ‘எப்படியாது தொல்லை சிறிது நேரம் தொலைந்தால் சரி’ என்பதற்காகவே சரணிகா இந்தக் கேள்வியை கேட்டாள்..
“வேலைக்கா..” என சிறிது நேரம் யோசிப்பது போல் பாவனை செய்தவள்,
“வேலைக்கு போறதெல்லாம் அலர்ஜி, யாராவது கஷ்டப்பட்ட பொண்ணுக்கு என் வேலை போய் சேரட்டும்” என ஏதோ பெரிய மனது உள்ளதைப் போல் சொன்னவள், ஒரு சோம்பேறி என்பது தான் அப்பட்டமான உண்மை..
ஆம். அவளால் எந்த இடத்திலும் முழுதாக ஒரு நிமிடம் இருக்க முடியாது என்பது ஒத்துக் கொள்ளக்கூடிய உண்மை.. அங்கிட்டும், இங்கிட்டும் ஆடிக்கொண்டிருப்பவளை பிடித்து ஒரு சேரில் அமர வைத்தால், இருப்பாளா அவள்?.. தாவிக் குதித்து ஓட தான் நினைப்பாள்.. அது தான் சப்துனிகா..
துருதுரு பேர்வழி.. ஓரிடத்தில் அவளை இழுத்து பிடிப்பதற்குள், ஷப்பாஆஆஆ என பெருமூச்சு தான் விடுவாள் சரணிகா..
அப்படியொரு அதிசிய பிறவி அவள்..
‘வேலை கள்ளிக்கு பிள்ளை சாக்காம்’ என வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே சமையல் வேலையை கவனித்த சரணிகாவிற்கு, யசோதாவை பார்க்க வேண்டுமென்று தோன்றிக் கொண்டேயிருந்தது..
சபரீஸ்வரன் இங்கிருந்தால் அழைத்துக்கொண்டு சென்றிருப்பாள், ஆனால் அவன் சென்னையில் இருந்தான்..
பிரகதீஸ்வரன் சொல் தப்பாத பிள்ளை, அவன் வேலை என்றும் நிற்காமல் சரியாக நடக்கும், காலையில் எழுந்து ஆபீசிற்கு சென்று விட்டான்..
வேலைக்கு போ என்றால் போக மாட்டேன் என்பாள்.. அவர்கள் நிலபுலன்களை பார்த்துக் கொள் என்றால் அதற்கும் முடியாது என்பாள்.. அதையாவது பொறத்துக் கொள்பவர்களுக்கு, அவள் வீட்டை களைத்து போடுவதை தான் தாங்கிக் கொள்ளவே முடியாது..
அவளுக்கு வீடு வீடாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்.. அடுக்கி வைத்திருந்தால் அடகு கடை என்பாள்.. பெட்ஷீட்டை களைப்பது, சோபாவில் அமரந்தால், அங்கிருந்த பில்லோவை ஆங்காங்கே பறக்க விடுவது என அவள் செய்யும் அலப்பறை அளப்பரியது..
சபரீஸ்வரன் ஊரில் இருந்தால் சற்று அடங்கியிருப்பாள். அவனும் ஊரில் இல்லையென்றால் சரணிகா பாடு திண்டாட்டம் தான்..
“சப்துக்குட்டி அம்மா கூட ஒரு இடத்துக்கு வர்றீயா?” என சரணிகா கேட்க, முகத்தை இஞ்சி தின்ன குரங்கை போல் ஏதோதோ செய்தவள், “சரிம்மா.. போகலாம்” என்றாள் உடனே..
அவள் உடனே ஓகே சொன்னது சரணிகாவிற்கு சற்று பயம் தான் கொடுத்தது..
ஆனாலும் தன் பெண் வெளியிடத்தில் எந்த வம்பும், தும்பும் வைத்துக் கொள்ள மாட்டாள் என்ற சிறு நம்பிக்கை அவளை அழைத்துச் செல்ல முடிவெடுத்தாள்..
“சரி போய் குளிச்சிட்டு வா..” என சரணிகா சொன்னதும் தான் தாமதம்,
“ஏது குளிக்கணுமா?.. அம்மா நீ வேற ஏன் நிறைய வேலை சொல்லுற?.. என்னால குளிக்க எல்லாம் முடியாது.. ஈஸ்வர், ஆன்லைன்ல ஒரு பெர்ஃப்யூம் ஆர்டர் பண்ணியிருந்தான்.. அது நேத்து தான் வந்திருச்சு.. செம்ம வாசனை, நான் அதையே போட்டுக்கிறேன்” என்றவள், ஈஸ்வர் அறையை நோக்கி ஓடிட,
“ஏய்ய்ய.. அவன் ரூமை களைச்சிப் போட்டுடாதடி.. வந்தா கத்துவான்..” என்ற சரணிகாவின் கதறல் குரல், அவள் காதிலேயே விழவில்லை..
ஒரு சென்ட் பாட்டிலை தேட, ரூமையே தலைகீழாக மாற்றிவிட்டு வந்தாள்..
தேடி எடுத்தவள், தன்னறைக்கு சென்று முகத்தை நன்றாக அடித்துக் கழுவியவள், பவுடர் கூட போடவில்லை.. அப்படியே கீழிறங்கி வந்தாள்..
அவள் குளிக்கவில்லை என்றாலும், அவளின் முகம் ஒரு வித பொலிவினை தான் எடுத்துக் காட்டியது. நேராக சபரீஸ்வரனின் அறைக்குள் தான் சென்றாள்..
சரணிகா, பாத்ரூமிற்குள் இருப்பது தெரிய, “என்னம்மா பண்ற நீ?” என டொக்க். டொக்க்க. கதவை தட்டிக் கொண்டிருந்தாள்..
“உன்னை மாதிரி குளிக்காம என்னை வர சொல்லுறீயா?.. அதெல்லாம் என்னால முடியாது ப்பா” என்றவாறே நன்றாக குளித்து விட்டு வெளியே வந்து ஆடையை மாற்றிக் கொண்டு கிளம்பிட, அப்பொழுதும் தன் தாயை விசித்திரமாக பாரத்தாள் சப்துனிகா..
“எதுக்கும்மா இம்புட்டு மேக்கப்பு?” என சலிப்பாக சப்துனிகா கேட்க,
“ஏய்ய்ய. பேர்னஸ் க்ரீம் மட்டும் தான் போட்டிருக்கேன்..” என சிடுசிடுத்துக் கொண்டே பர்ஸை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்..
“பேர்னஸ் க்ரீம் மட்டும் தான் போட்டிருக்கேனாம், பெரிய அழகுராணின்னு நினைப்பு இந்தம்மாவுக்கு… இந்நேரம் எனக்கு கல்யாணம் ஆகியிருந்தா, இவுங்க கிழவி ஆகியிருப்பாங்க.. அந்த எண்ணம் இருக்கா பாரு கொஞ்சமாவது.. பேர்னஸ் க்ரீமாம்.. பேர்னஸ் க்ரீம்.. எல்லாம் இந்தம்மாவோட புருஷனை சொல்லணும்.. செல்லம்மா, செல்லம்மான்னு ஓவர் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்காரு” என வாய்க்குள் முணுமுணுக்க,
“என் புருஷன் எனக்கு செல்லம் கொடுத்தா, உனக்கு எங்கேடி வலிக்குது” என முறைத்துக் கொண்டு வந்து நின்றாள் சரணிகா..
பின்னே அவள் பேசியது தான் அவருக்கு நன்றாக கேட்டது..
அவள் மெதுவாக பேசுகிறேன் என அவளின் வெண்கல தொண்டையால் கத்திக் கொண்டல்லவா வந்தாள்.. ஒரு வழியாக இருவரும் புறப்பட்டு வந்து நிற்க, மதிய வேளையை கடந்திருந்தது..
அன்று தன் தாயின் உடல்நிலையை பார்ப்பதற்காகவே அரக்க, பரக்க ஓடி வந்தான் செளந்தர்..
அவன் உள்ளே நுழைந்த பத்தே நிமிடத்தில் சரணிகாவின் காரும் கலெக்டர் வீட்டிற்குள் நுழைந்தது.. கார் நுழையும் சத்தத்தில் ஜன்னல் வழியாக செளந்தர் எட்டிப் பார்க்க, அங்கு சரணிகா இறங்கினாள்..
சரணிகா இறங்கும் பொழுது சாதாரணமாக இருந்த அவன் முகம், அவளின் பின்னால் சப்துனிகா இறங்கும் பொழுதே, “அய்யய்ய்யோஓஓஒ.. இவளாஆஆ” என மனம் அலறியே விட்டது..
தன் கைகளில் இருந்த பைலை ஓரம் கட்டி வைத்தவன், வேகமாக தன் டேபிளில் இருந்த பஞ்சை எடுத்து காதில் வைத்தான்.
அதை வைத்த பின்பு தான் அவன் மனம் சற்று நிம்மதியடைந்தது..
அறையை விட்டு வெளியே செல்லவேக் கூடாது என்று நினைத்தவன், மெல்ல பின்பக்க தோட்டத்திற்குள் சென்றாள்..
சப்துனிகா அங்கு யாரை பார்க்க வந்திருக்கிறோம் என்பது சத்தியமாக தெரியவில்லை..
அங்கிருந்த வீட்டின் அழகினை தான் ரசித்தாள்.. பார்க்கும் இடமெங்கும் பூந்தோட்டம், பல பூக்களின் வாசம் அவள் நாசியை தீண்டியது..
“அம்மா, நீ உள்ளே போ.. நான் இந்த தோட்டத்தை பார்த்துட்டு வர்றேன்..” என்றவள், சரணிகா மறுப்பு சொல்வதற்கு முன்பாகவே, வேகமாக அங்கிருந்த தோட்டத்திற்குள் நுழைந்து விட்டாள்..
அதே சமயம் காயத்ரி காரின் சத்தம் கேட்டு வெளியே வந்தவர், சரணிகாவை பார்த்து முகம் மலர, அதற்கு பின் எங்கே சரணிகா, சப்துனிகாவை தடுத்து நிறுத்திட, அவள் போக்கிலேயே விட்டுவிட்டாள்..
“வாடி. உனக்கு என்னைப் பார்க்க வர்றதுக்கு இவ்வளவு நேரமா?” என யசோதா சரணிகாவிடம் சற்று கோபமாக கேட்க, நட்புக்குள், கோபத்திற்கு வேலை இருக்கிறதா என்ன?.
“ஆமா இவ ஹாஸ்பிட்டல்ல கிடக்குறான்னு, நான் மை போட்டு ஜோசியம் பார்த்தேன் பாரு, நான் ஒருத்தியை கட்டி மேய்க்க முடியாம மேய்ச்சிக்கிட்டு சுத்துறேன்..” என சற்று சலிப்பாக சொல்லியவளை ஆழந்து பார்த்துக் கொண்டிருந்த யசோதா,
“உன் பொண்ணை என் பையனுக்குக் கட்டிக் கொடுக்குறீயா?” என சற்று தடுமாறிய விழிகளுடன், கண்களில் நீருடன் கேட்டார் யசோதா..
அதுவரை கலகலப்பாக இருந்த சரணிகாவின் முகம் இப்பொழுது வாடிவிட,
“என்னாச்சி யசோ? ஏதாவது பிரச்சினையா?..” என்ற சரணிகாவின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டார் யசோதா..
“எனக்கு எப்படி சொல்லுறதுன்னே தெரியலை, என் பையன் கல்யாணத்தை சிக்கீரம் பார்க்கணும்னு இருக்கு..” என்றவர், எவ்வளவு தடுத்தும் கண்ணீர் வந்தே விட்டது..
“கண்டிப்பா உன் பையனுக்கு கல்யாணம் நடக்கும் யசோ, நாம பண்ணி வைக்கலாம்.. ஆனா என் பொண்ணு வேண்டாம்” என்றவரை அதிர்ந்து பார்த்தார் யசோதா..
“ஏன்?.. ஏன் வேண்டாம்னு சொல்லுற?.. பார்க்க அழகா தானே இருக்கா?”
“பார்க்க அழகா இருந்தா போதுமா?.. அவளுக்கு எதுவுமே தெரியாது, அட்ஜஸ்ட் பண்ணிட்டு போற டைப் எல்லாம் அவ கிடையாது.. எல்லா பொண்ணு வீட்டுக்காரங்களும், என் பொண்ணுக்கு எல்லாம் தெரியும்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்கக் கிட்ட சொல்லுவாங்க..
ஆனா நான் சொல்றேன் என் பொண்ணுக்கு எதுவுமே தெரியாது.. சகிப்புத்தன்மை எல்லாம் அவக்கிட்ட சுத்தமா இல்லை.. வீணா செலவு பண்ணுவா, அடுக்கி வச்சிருக்கிற வீட்டை எல்லாம் களைச்சிப் போட்டுருவா.. அவளை யாராவது திட்டுனா, எட்டு ஊருக்கு கேட்குற மாதிரி கத்துவா.. இதெல்லாம் விட மெயினான விஷயம் அடிக்கடி குளிக்கக்கூட மாட்டாஆஆஆ” என தன் பெண்ணின் அருமை பெருமையெல்லாம், சொல்லி முடித்து விட்டு எதிரில் இருந்த யசோதாவை தான் பார்த்தார்..
இதற்கு பிறகு, தன் பெண்ணை கேட்பாள்? என்பதை போன்று.. ஆனால் அவரோ, “பரவாயில்லை.. நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்.” என்றவரை சற்று அயர்ந்து தான் பார்த்தாள் சரணிகா..
“புரிஞ்சு பேசு யசோ, இது விளையாட்டு விஷயமில்லை.. இரண்டு பேரோட வாழ்க்கை.. உன் பையனுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா?” என சற்ற தெளிந்த குரலில் கேட்டாள் சரணிகா..
“என் பையன் எனக்குப் பிடிச்ச பொண்ணை வேண்டாம்னு சொல்ல மாட்டான்..” என அடித்துச் சொன்னவரை சற்று எரிச்சலாக பார்த்தாள் சரணிகா..
பைத்தியம் மாதிரி உளறாதே யசோ, உன் பையன் நீ சொல்லுற பொண்ணைக் கட்டிக்கிறது வேற, என் பொண்ணை கட்டிக்கிறது வேற.. இம்புட்டு அழிச்சாட்டியம் பண்ற பொண்ணை, மிஸ்டர் பெர்பெக்ட் மாதிரி இருக்கிற உன் பையன் எப்படி கட்டிப்பான்.. அது மட்டுமில்லாம உன் பையனுக்கு சவுண்டு அலர்ஜி வேற இருக்கு” என்ற சரணிகாவை சற்று பதட்டமாக பார்த்தார் யசோதா..
“உனக்கு எப்படி இது தெரியும்’ என்பதை போல்,
“இதை அவர் தான் சொன்னாரு.. அது மட்டுமில்லாம, நல்லவேளை நம்ம பொண்ணு கூட, அந்தப் பையன் கல்யாணம் நடக்கலை.. நடந்திருந்தா அந்த பையன் பாவம்னு சொன்னாரு” என தன் கணவனை பற்றி சிறிதாக சொல்ல, யசோதா அங்கேங்கே பார்த்துக் கொண்டே சரணிகாவை தன்னறைக்குள் இழுத்துக் கொண்டு சென்றார்..
“புடவை தட்டி கீழே விழுந்திருவேன் டி..” என்றவரின் கதறல் குரல் யசோதாவின் காதில் விழவேயில்லை..
நீண்ட நேரம் கழித்து யசோதாவின் அறையை விட்டு வெளியே வந்த சரணிகாவின் முகத்தில் பலத்த யோசனை தான் இருந்தது.
“நான் அவர்க்கிட்ட பேசிட்டு சொல்லட்டுமா?” என ஒற்றை வார்த்தையுடன் தன் பேச்சு வார்த்தையுடன் முடித்துக் கொண்டு வெளியே வர, அங்கு தோட்டத்து சகதி மணலில் உருண்டுக் கொண்டிருந்தாள் சப்துனிகா, அவளை அறுவெறுப்பாக நின்றுக் கொண்டிருந்தான் செளந்தர்..
அவளைப் பார்த்த யசோதா, சரணிகா இருவருமே வெகுவாக அதிர்ந்து விட்டனர்.
யசோதாவிற்கோ பேரதிர்ச்சி.. அவரின் கண்கள் நேராக தன் மகனை தான் பார்த்தது, இன் பண்ணிய சட்டை கசங்காமல் நின்றுக் கொண்டிருந்தவனுக்கும், சேற்றில் புரண்டுக் கொண்டிருந்த சப்துனிகாவிற்கும், மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம் தான்..
அவருக்கே ஒரு நிமிடம் மனம் கலங்கிப் போனது..
“என்ன சப்து இது?” என சரணிகா அடிக்குரலில் சீறிட,
“இவன்தான் ம்மா, என்னை தள்ளி விட்டுட்டான்..” என சிறு பிள்ளை போல் புகார் வைத்தாள் செளந்தரின் மீது.
இப்பொழுது இருவரின் பார்வையும் செளந்தரின் மீது செல்ல,
“அம்மா இவ பொய் சொல்லுறா, இவ தான் வேணும்னே அந்த சகதியில போய் குதிச்சா.. ச்சைக்க்க். உவ்வேக்க்க்க.. இவளை பார்க்கும் போதே எனக்கு வாமிட் வர்ற மாதிரியிருக்கு” என முகத்தை அஷ்டகோணலாக செளந்தர் மாற்றிட,
‘இவர்கள் இருவருக்குமா கல்யாணம் பேசுகிறாய் நீ’ என்பதை போல் சரணிகா, யசோதாவை ஒரு பார்வை பார்த்தாள்..
அவருக்குமே சற்று பீதியாகிப் போனது..
“என்ன செளந்தர் இது?” என்ற தன் தாயின் கடினக்குரலில் முகம் வாடிப் போனான்.
இதுவரை தன் தாய் அதட்டியதில்லை.. ஆனால் இவள் யாராே?. இவள் முன்பாக தன்னை அதட்டுகிறாரா? என்ற நினைப்பே அவனுக்குள் சப்துனிகாவின் மேல் அதீத கோபத்தையும் ஏற்படுத்தியது..
அவனின் முக வாட்டம் சரணிகாவிற்கு நன்கு தெரிந்தது.. நல்ல பிள்ளை திட்டுவதை பொறுக்க முடியவில்லை அவளால்..
“நீ ஏன்டி அந்தப் புள்ளையை திட்டுற?.. இந்த சேத்துல பன்னி மாதிரி உருண்டுக்கிட்டு கிடக்கா பாரு, இவளை திட்டு.. ஏய்ய்ய்ய. எந்திரிடி முதல்ல.. உன்னை ஒருத்தர் தள்ளி வேற விடுறாங்க போல, நீயே சேத்த பார்த்தும் ஓடிப் போய் விழுந்துருப்ப.. பிள்ளையை பெத்தா பரவாயில்லை. நான் சரியான தொல்லையை பெத்து வச்சிருக்கேன்.?” என சரணிகா சப்துனிகாவை திட்டித் தீர்க்க, க்ளுக்கென்று ஒரு சிரிப்பு செளந்தரிடம் இருந்து..
யசோதா சட்டென்று திரும்பி தன் மகனை தான் பார்த்தார். சிரிக்கிறான், தன் மகன் சிரிக்கிறான்.
சிரிப்பு என்பதையே காணாத உதடு சிரிக்கிறது என்றால், அது யாரால்? எல்லாம் இவளால்?.. என இப்பொழுது யசோதாவின் பார்வை சப்துனிகாவை கனிவுடன் பார்த்தது..
“நீதான் என் மகனை மாற்றக்கூடியவள்.. அவன் வாழ்நாள் முழுவதும் சிரிக்க நீ வேண்டும்” என மனதில் அஸ்திவாரம் போட்டு, இருவருக்கும் கல்யாணம், குடும்பம், குழந்தை, வாழக்கை என்ற கோட்டை கட்ட ஆரம்பித்தார் யசோதா..
அய்யோ பாவம் அவர் கட்டிய கோட்டையை, சப்துனிகாவே சில்லு சில்லாய் உடைத்து எறிவாள் என்று அறியாமல்,
அத்தியாயம் 5
“ஏய்ய்ய்.. சேறை விட்டு வாடி வெளியே..” என சரணிகாவின் சீற்றமான குரலில் சகதியில் இருந்து வெளியே வந்தவளின் பார்வை, ஒரு நொடியேனினும்.. அங்கு நின்றிருந்த செளந்தரின் மேல் தான் வன்மத்துடன் படிந்தது..
“உன்னால தான்டா நான் விழுந்தேன்.. எங்கம்மாக்கிட்ட சொல்லு” எனும் விதமாய் பார்வையால் அவனை சுட்டெரிக்க,
அவனோ ‘நீ பார்த்தால் நான் பயந்து விடுவேனா.. போடி’ என்பதை போல் எதிர்பார்வை பார்த்தான்..
“என்ன சப்துனிகா இதெல்லாம்?” என கேட்கும் பொழுதே சரணிகாவின் குரல் சற்று தழுதழுத்தது..
தன் தாயின் வருத்தமான குரல் அவளுக்குப் புரியாமல் இல்லை..
“அம்மா.. ப்ளீஸ் நான் வேணும்னே எதுவும் பண்ணலை.. இந்தப் பூவெல்லாம் அழகா இருக்குன்னு பார்த்துக்கிட்டே வந்தேன்” என்றவள் சற்று முன்பாக நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்..
பூந்தோட்டம் பார்ப்பதற்கு மட்டுமில்லாது, மனதையும் ரம்மியாக வைக்க உதவியது..
“ப்ச்ச்.. எவ்வளவு அழகா இருக்கு..” என அங்கிருந்த பூக்களின் இதழ்களை தன் கரங்களால் வருடிவிட்டே வந்தவளின் விழிகளில் விழுந்தான் செளந்தர்..
அவனை பார்த்த அடுத்த கணமே அவளுக்கு, தான் அன்று இரவு செய்த தவறு தான் ஞாபகத்திற்கு வந்தது..
“அச்சோ, அன்னைக்கு மாப்பிள்ளை மேல இருந்த கோபத்துல இவர்க்கிட்ட கத்திட்டோமே.. ஒரு மன்னிப்பு கேட்டுரு சப்து, அப்போ தான் நைட்டு தூக்கம் வரும்” என மனதுக்குள் சொல்லிக் கொண்டே, வேகமாக அவ்விடத்தை விரைந்து சென்றாள்..
அவள் தன்னை நோக்கி விரைந்து வருவதைப் பார்த்த செளந்தருக்கு திக்கென்று ஆனது..
“ஆஹா, இதென்னா சாத்தான் நம்மளை நோக்கி வருது, ஓடிரு செளந்தர்.. அன்னைக்கு மாதிரி வீல் ன்னு கத்திட போறாரா, இந்த சவுண்டு சரோஜா” என்றவன், அப்பொழுது தான் கவனித்தான்.. அவள் ஹீல்ஸ் அணிந்திருப்பதை.
‘இவ்வளவு பெரிய ஹீல்ஸ் போட்டுட்டு யாராவது தோட்டத்துக்குள்ள வருவாங்களா?.. வழுக்கி விழுந்துட்டா என்ன பண்றது” என ஒரு மனம் தவித்தாலும், ‘விழுந்தா விழட்டும் உனக்கென்ன?’ என ஒரு மனம் துட்சமாக கேட்க, அவனோ கைகளை கட்டியபடி நின்ற இடத்தில் தான் நின்றிருந்தான்..
அவள் போட்டியிருந்த அரையடி ஹீல்ஸில் நடக்க முடியாமல் நடந்து வந்தவளின் முன்பாக தண்ணீர் பைப் ஒன்று தான் கண்ணில் பட்டது.. தோட்டக்காரன் மோட்டாரை ஆஃப் பண்ணாமல் சென்று விட்டான் போல, அது பாட்டுக்கு தண்ணீர் சென்றுக் கொண்டேயிருந்தது..
அங்கு எதற்காக வெட்டப்பட்டிருந்த குழி முழுவதும் தண்ணீரால் நிறைந்து, அந்த இடமே சேறாய் காட்சியளித்தது..
அவள் என்னமோ கேட் வாக்கில் நடந்து வருவதை போன்று ஆடியாடி நடந்து வர, சட்டென்று அந்த பைப்பை தன் ஷூவினால் தூக்கி விட்டான் செளந்தர்..
அவன் பைப்பை தூக்கவும், ஹீல்ஸ் தடுமாறி தொப்பென்று அந்த சேற்றின் குழிக்குள் சென்று விழுந்தாள் சப்துனிகா.
அவ்வளவு தான், சப்துனிகா போட்ட சத்தத்தில் யசோதாவும், சரணிகாவும் வந்து விட்டனர்..
சப்துனிகாவிற்கு நன்றாக தெரிந்தது பைப் தடுக்கித் தான் தான் விழுந்தோம் என்று, அதனால் சரணிகாவிடம் உண்மையை சொன்னால், ஆனால் அவள் அதை நம்பினால் தானே,
தன் மகளின் குறும்புத்தனத்தை அறிந்தவள், தன் மகள் தான் பொய் சொல்லுகிறாள் என்று தப்பாக நினைத்துக் கொண்டாள்..
சப்துனிகா சேற்றில் இருந்து வெளியே வருவதற்காக, யசோதா கை நீட்டிட, சட்டென்று அவரின் கையை பற்றிக் கொண்டான் செளந்தர். “அம்மா” என்ற அதட்டலுடன்..
அப்பொழுது தான் சப்துனிகா யசோதாவையும், செளந்தரையும் மாறி மாறி பார்த்தாள்..
“அம்மா, புள்ளையா?.. அப்படின்னா?.. அப்படின்னா…” என நினைத்தவளின் பார்வை, தன் தாயின் மீது அழுத்தமாக பதிந்தது..
“இல்லைம்மா, நான் மனசுக்குள்ள நினைக்கிறதை மட்டும் சொல்லிடாதே ம்மா” என தலையாட்டிக் கொண்டிருக்கும் வேளையிலேயே,
“இவர் தான் நான் உனக்கு பார்த்து வச்ச மாப்பிள்ளை சப்துக்குட்டி..” என்றதும் தான் தாமதம், சேற்றில் இருந்து அப்படியே எழுந்து நின்றாள் சப்துனிகா..
அவள் எழுந்தால் அவள் ஹீல்ஸ் எழுமா என்ன? சேற்றினுள் நன்றாக புதைந்து விட்டது..
கோபத்தில் தன் தாயை எரிப்பது போல் பார்த்தவள், செளந்தரை வன்மத்துடன் பார்த்துக் கொண்டே வேகமாக அங்கிருந்து வெளியே சென்று விட்டாள்..
அவளுக்கோ தன் தாயின் மீது அப்படியொரு கோபம்.. அவள் நினைத்ததெல்லாம், தன் தாய் தான் தனக்கு தெரியாமல், தன்னை பெண் பார்க்க அழைத்து வந்திருக்கிறார் என்று..
அவளுக்குத் தான் யசோதா உடல் நிலை சரியில்லாத விஷயம் தெரியாதே.. சரணிகா வா என்றால் இவள் வந்துவிட்டாள்.. அம்புட்டுத்தான், மற்றபடி இங்கு நடப்பதை பற்றி துளிக்கவலை அவளிடத்தில் இல்லை.
வேகமாக தன் காரினுள் ஏறியமர்ந்துக் கொண்டே ஜன்னல் வழியாக, சரணிகாவை பார்த்தாள்.. ‘இப்பொழுதே நீ காரில் ஏற வேண்டும்’ என்ற கட்டளையும் அதில் இருந்தது..
யசோதாவிற்கு சப்துனிகாவின் நடவடிக்கையில் மனம் சற்று அடிபட்டுப் போனது..
அவரின் வாடிய முகத்தைப் பார்த்த சரணிகா, “யசோ, நீ கவலைப்படாதே, உன் பையனுக்குத் தான் என் பொண்ணு” என்று விட்டு செல்ல, கேட்டுக் கொண்டிருந்த செளந்தர் அதிர்ந்து விட்டான்..
“மறுபடியும் இவளா?” என்பது தான் அவனின் எண்ணம்..
“அம்மா அவுங்க என்ன சொல்லிட்டுப் போறாங்க?” என மெல்லிய குரலில் என்றாலும், சற்று அழுத்தமாக கேட்டான்.
“எனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கு” என்ற தாயை அயர்ந்து பார்த்தான் செளந்தர்..
“எப்போ ம்மா, உங்களுக்கு இந்த மாதிரி லூசு எல்லாம் பிடிக்க ஆரம்பிச்சது?” என சற்று ஏறிய குரலில் கேட்டே விட்டான் செளந்தர்.. அவனைப் பொறுத்தவரை சப்துனிகா ஒரு க்ராக்..
“சரிம்மா நான் எந்தப் பொண்ணை பத்தியும் தப்பா பேசலை.. பட் இந்த மாதிரி பொண்ணுக்கூட என்னால கல்யாண வாழ்க்கைங்கிற ஒரு விஷயத்தைப் பத்தி யோசிக்கக் கூட முடியலை.. இவ கல்யாண வாழ்க்கைக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டா ம்மா..” என்ற செளந்தரை சற்று கோபத்துடன் ஏறிட்டுப் பார்த்தார் யசோதா..
“ஓஹோ, அப்போ அந்தப் பொண்ணு கல்யாண வாழ்க்கைக்கு சரிப்பட்டு வரமாட்டா?.. அப்போ நீ..” என்ற ஒற்றை வார்த்தை தான் செளந்தரின் இதயத்தில் கல்லை விட்டு எறிந்தது போன்று வலிக்க ஆரம்பித்தது..
“அம்மாஆஆ..” என கம்மிய குரலில் அழைத்த செளந்தரின் வார்த்தையில் யசோதாவிற்கு கண்கள் கலங்கியது..
ஆனால் இப்பொழுது அவருக்கு காரியம் தான் பெரியதாக இருந்தது..
“சொல்லு செளந்தர், நீ வெளியில பார்க்க வேணும்னா ரொம்ப நல்ல பையன், சமத்துப் பையன், பெரிய கலெக்டர் இப்படி என்ன வேணும்னா பேசிக்கலாம்.. ஆனா உள்ளுக்குள்ள உன்னோட பிரச்சினை என்னன்னு உனக்குத் தெரியும்ல.. உனக்காக நாம எத்தனை டாக்டர் பார்த்திருப்போம், எத்தனை ஹாஸ்பிட்டல் ஏறி இறங்கியிருப்போம்.. எனக்கு என்னவோ இவ தான் உனக்கு சரியானவன்னு படுது” என சற்று கலங்கிய குரலில் சொன்ன யசோதாவை அழுத்தமாக பார்த்தான் செளந்தர்..
அவனால் இம்மியளவுக் கூட சப்துனிகாவை தன் துணை என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
“அம்மா ப்ளீஸ், புரிஞ்சிக்கோங்க.. இவளைத் தவிர நீங்க இந்த உலகத்துல எந்த பொண்ணை காட்டினாலும், நான் கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கேன்..” என்றவனின் மேல் அப்படியொரு கோபம் எழுந்தது யசோதாவிற்கு..
“ஆனா இவளைத் தவிர இன்னொருத்தியால உன்னை சரி பண்ணவே முடியாது செளந்தர்” என்றவரின் குரலோடு சேர்ந்து, பிடிவாதமும் சற்று உயர்ந்தது.
“அம்மா..” என செளந்தர் ஏதோ சொல்ல வர,
“இதுவே உன்னைப் பெத்தவளா இருந்திருந்தா, இப்படியெல்லாம் வாக்குவாதம் பண்ணுவீயா செளந்தர்” என்ற ஒற்றை வார்த்தையில் அப்படியே நின்று விட்டான் செளந்தர்.
அவனுக்கு அடுத்து என்ன பேசுவது என்றே தெரியவில்லை. கண்கள் கலங்கி தானாக கண்ணீர் வந்தது..
அவனின் கண்ணீரைப் பார்த்த யசோதா தான் திகைத்து விட்டார்.. அப்படியொரு தோற்றத்தில் நின்றிருந்தான் செளந்தர்.. ஓய்ந்து அலைந்து திரிந்த ஒருவன் நிற்கதியாக நிற்பதை போன்று தோன்றியது அவனுக்கு..
“நான் சப்துனிகாவை கல்யாணம் பண்ணிக்கிறேன் ம்மா” என்றவன், எதுவும் பேசாமல் நேராக தன்னறைக்கு சென்று விட்டான்..
யசோதாவின் மனமே வெகுவாக கலங்கி விட்டது. சத்தியமாக செளந்தரை காயப்படுத்த வேண்டுமென்று அவர் அதை சொல்லவில்லை..
தன் மகனை இனியாவது சிரித்த முகத்துடன் பார்க்க வேண்டுமென்ற அவாவில், அவரையும் அறியாமல் வார்த்தைகள் வந்து விட்டது..
காருக்குள் ஏறிய நிமிடத்தில் இருந்து,
“என்ன நம்பலையா ம்மா?.. என்னை நம்பலையா?.. என்னை நம்பக்கூட உனக்குத் தோணலையா ம்மா.. என்னை நம்பாத அளவுக்கு நான் என்னம்மா தப்பு பண்ணினேன்..” என ஒரே பொருள் கொண்ட வார்த்தையை மாற்றி மாற்றிக் கேட்டு சரணிகாவை வதைத்துக் கொண்டிருந்தாள்..
“ப்ச்.. வாயை மூடு சப்து, இப்போ என்னை உனக்கு?” என்ற தாயை அழுத்தமாக பார்த்தவள்,
“உனக்கு நல்லா தெரியும் தானே, இவன் தான் என்னைக் கோயில்ல பார்க்க வர்றேன்னு சொல்லிட்டு வராம போனது..” என்றவளின் குரல், எப்பொழுதும் போல் எட்டுத் திக்கும் கேட்டது.
“சப்து மெதுவா பேசு..”
“நான் ஏன் மெதுவா பேசணும்?.. ஹான் நான் ஏன் மெதுவா பேசணும்?.. என்னைப் பொண்ணு பார்க்க வர்றேன்னு சொல்லிட்டு, கோயிலுக்கு வராம விட்டது அவன் தப்பு.. அது மட்டுமா? நான் சீவி சிங்காரிச்சு நிக்கும் போது பார்க்க வரலை..
நான் பஜாரி மாதிரி நடு வீட்டுல ஆடும் போது வந்து என்னைப் பார்த்துட்டு போயிருக்கான்..” என்றவளுக்கு செளந்தரின் மேல் அப்படியொரு கோபத்தைக் கொடுத்தது..
எனக்குத் தான் உன்னைப் பற்றித் தெரியவில்லை.. உனக்கு என்னைப் பற்றித் தெரியுமல்லவா?.. என நினைத்திருந்தாள்..
அவளைப் பற்றிய தகவல் மட்டுமே செளந்தருக்கு சென்றது.. அவளின் புகைப்படம் அல்ல..
“சப்துக்குட்டி, நான் அப்பாக்கிட்ட பேசிட்டு ஒரு முடிவு எடுக்கலாம்னு இருக்கேன்.. உனக்கு அது நல்லதோ, கெட்டதோ நீ ஒத்துக்கிற..” என்றவாறே காரை விட்டு இறங்கினாள் சரணிகா..
ஆம் இருவரும் போட்ட சண்டையில் கார் கூட சிக்கீரம் வந்து விடடது.
“என்னால ஒத்துக்க முடியாதுன்னா?..” என்றவளை அழுத்தமாக பார்த்த சரணிகா,
“உனக்கு அம்மான்னு சொல்லுறதுக்கு போட்டோ மட்டும் தான் இருக்கும். நான் இருக்க மாட்டேன்” என்ற சரணிகா, வேறெதுவும் பேசாமல் வீட்டிற்குள் சென்ற விட்டார்..
அவர் சென்ற பின்பும் பேயடித்தாற் போன்று நின்றது என்னவோ சப்துனிகா தான்..
தன் தாயின் வார்த்தையை எண்ணி இரவெல்லாம் உழன்று தவித்துக் கொண்டிருந்தவள், அடுத்த நாள் காலையில் சரணிகாவிடம் தனக்கு திருமணத்திற்கு சம்மதம் என்று விட்டாள்.
அதற்கு வேறு பல காரணங்களும் இருந்தது சப்துனிகாவிற்கு..