அத்யாயம்
4
இரவு நேரம் மூவரும் உணவு அருந்தும், மேஜையில், அமர்ந்திருந்தனர், ரத்தினம்,திலகவதி, மிருதுளா.
திலகவதி சாப்பாட்டை பரிமாறிக்கொண்டே பேச ஆரம்பித்தாள் " ஏங்க என்னால முடியல உங்க மகா வீட்டுல ஏவுன வேலை எடுத்த வேலை செய்ய மாட்டிகா, நாளைக்கு என்னிய நல்லா அவமானப்படுத்த காத்துருக்கா, இப்ப படிப்பு வேற முடிஞ்சிட்டு இன்னும் தின்னுட்டு தின்னுட்டு தூங்குறததான் பொலப்பா வச்சிட்டு இருப்பா, இவள எப்படி வீட்டுல வச்சு சமாளிக்க போறேனோ தெரியல " என சாம்பாரோடு சேர்த்து பயன் புலம்பலையும் சேர்த்து ரத்தினம் சாப்பாட்டில் ஊற்றினாள்.
" திலகா இப்பெல்லாம் நீ ரொம்ப புலம்புறன்னு நினைக்கேன், நம்ம புள்ள நம்ம வீட்டுல இருக்குற வரைக்கும் ராசாத்தி மாதிரி இருந்துட்டு போகட்டுமே நாளைக்கு என்னங்குறத அவ பார்த்துபா, நீ மனுசன நிம்மதியா சாப்டவுடு" என சாப்பிட ஆரம்பித்தார் ரத்னம்.
விடுவாளா திலகவதி
" அது சரி நாள்பூராவும் இவ பண்ற அட்டூழியத்தை நான் தானே சமாளிக்கனும்" என்று திலகா பேசி முடிக்கவில்லை ,
" அதற்கு அவசியம் இல்லமா" என தன் சோத்து தட்டில் சோற்றை பிசைந்த வாறே மிருதுளா கூறினாள்.
ரத்னமும், திலகாவும் இவ என்ன சொல்றா என திகைப்புடன் பார்க்க திலகாவோ " ஏன்டி திருந்திட போறீயா " என கேட்டவாறே முட்டை பொறியலை எடுத்து வாயில் போட்டாள்.
" இல்லை ,எனக்கு வேலைகிடைச்சிருக்கு , வேலைக்கு போகப்போறேன்" என மிருதுளா சர்வசாதாரமாக கூற, திலகாவிற்க்குதான், வாயில் போட்ட முட்டை அரைபடவே இல்லை.
" ஏன்னமா சொல்லுற, எப்படி ? " என தலையும் புரியாமல் வாலும் புரியாமல் கேட்ட ரத்தினத்திடம் " அப்பா கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைச்சிருக்கு பா நல்ல வேலை அதான்"
வெடுக்கென மென்னும் மெல்லாமலும் வாயில் வைத்திருந்த முட்டையை விழுங்கிவிட்டு " என்னடி பேசுற வேலைக்கா, அடியே கல்யாணம் பேசியாச்சி விட்டோட அடக்க ஒடுக்கமா இரு, வேலைக்கு அதுக்குன்ன வெளக்கமாறு பிஞ்சுடும் சொல்லிபுட்டேன் ஆமா" என பேசியவளிடம்
" திலகா நீ கொஞ்சம் பேசாம இரு ,அம்மாடி மிரு நீ சொல்லுமா போலான்னு நினைக்கிறீயா இல்லை முடிவே பண்ணிட்டியா? " என தான் சாப்பிடுவது நிறுத்தி விட்டு மகள் முகத்தையே பார்த்தார் ரத்தினம்.
" முடிவு பண்ணிட்டேன் பா" என மிருதுளா கூறவும்.
" எப்படி பேசுறா பாருங்க எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் , வேலையும் வேண்டாம் ஒரு ஓலையும் வேண்டாம்னு சொல்லுவீங்களா ,அத விட்டு அவ கிட்ட டீடெய்லு கேட்கிறீங்க" என திலகா கோபத்தில் கத்த தொடங்கிவிட்டாள்.
" திலகா " என்ற ஒத்த வார்த்தையோடு திலகவதியின் கையை பிடித்து அமுக்கினார் ரத்னம் அதை புரிந்து கொண்ட திலகவதி தன் கணவன் முகத்தை பார்த்து அப்படியே அமைதியாக மிருதுளாவையும் பார்க்க அவள் சாப்பாட்டை பிசைந்தவள், பிசைந்தவள் தான் ஒரு பருக்கை வாயினுள் போக வில்லை .
" ம்ம்... எப்போ கிளம்பளான்னு இருக்க"
"இன்னும் ஒருவாரத்தில பா"
"எவ்வளவு நாளுக்கு வேலை செய்ய போற "
"ஒரு ஒருவருஷமாட்டு வேலைபார்த்துகிறேன் பா"
"சரி மா நீ கிளம்ப வேண்டிய ஏற்பாடை பண்ணு, நான் என் பொண்ணை நம்புறேன் அவ எது பண்ணாலும் சரியா தான் இருக்கும் அவ அப்பாவ நாலுபேரு முன்னாடி தலை குனிய விடமாட்டா நீ சாப்டு கண்ணு" என்று கூறிய தன் அப்பாவை சட்டென்று தலை தூக்கி பார்த்த மிரு வின் கண்கள் கலங்காமல் இல்லை , சிறிது சாப்பிட்டவள் ,சாப்பாட்டு தட்டை அடுக்களையில் வைத்து விட்டு கை கழுவி தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
"ஏன்னங்க நீங்க " என குழப்பமாக கேட்ட திலகாவிடம் , "நீ மொதல்ல சாப்பிடு மத்தத ரூம்ல போய் பேசிக்குவோம், சாப்பாட ரொம்ப நேரம் காக்க வைக்க கூடாது" என ரத்னம் கூற இருவரும் சாப்பிட்டனர்.
அறைக்கு சென்ற மிரு தன் தோழி ஜென்சிக்கு அழைத்தாள்.
"ஏய் சொல்லுடி, என்ன இந்த நேரம் ஏதும் முக்கியமான விஷயமா? என ஜென்சி கேட்க.
"ஆமாடி , நான் அந்த ஜாப்க்கு போக போறேன்"
"என்னடி நீ காலையில தான் பேசுறப்போ வீட்டுல இருந்து ஜாலியா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க போறன்னு சொன்ன , இப்ப என்ன ஆச்சு , அதோட ஆன்லைன்ல வேலை பார்த்ததே போரடிச்சுதுன்னு வேற சொன்ன " என ஜென்சி கேட்க.
"அப்போ நான் எதுக்கு வேலைக்கு போகபோறன்னு உனக்கு தெரியாது, அதெப்படி, அந்த பன்னாடையும் நீயும் சொல்லி வந்த மாதிரி ஒண்ணும் தெரியாத மாதிரி ஆக்ட் விடுறீங்க, அந்த மூதேவி ஏற்கனவே உனக்கு கால் பண்ணி எல்லாம் சொல்லிருக்கும், பின் ஏன்டி சீன் போட்டு கடுப்புகள கிளப்பிட்டு இருக்க" என சிடு சிடு வேன் பொரிந்து தள்ள
"ஆத்தா மகமாயி தெரியாம கேட்டுட்டேன், மன்னிச்சு விடுமா தாயே " என மிரு காலில் விழாத குறையாக கெஞ்சினாள் ஜென்சி.
" சரி போய் தொலை, ஒரு வருஷம் இன்னிக்கு அவங்க டைம் கொடுத்தாலும், அவங்கள நம்ப முடியாதுடி கண்ணுக்கு முன்னாடியே இருந்தா, அந்த கிழவி எதாட்டு டிராமா போட்டு கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணிடும், அதான் கிளம்புறேன், சரியா, நீங்க இரண்டு பேரும் ஜாக்கிரதையா இருங்க கூடிய சீக்கிரம் நான் ஒரு பிளான் பண்றேன், அதுக்குள்ள வீட்ல மாட்டிடாதீங்க சரியா? " என அழுத்தமாக மிரு கேட்க
" ம் ம் சரிடி பார்த்து இருந்துகிடுறோம்" என சுரத்தையே இல்லாமல் வார்த்தை வந்தது.
"இங்க பாரு ஜென்சி, அந்த பன்னாட கால் பண்ணி எங்கயாவது கூப்பிடுவான், போயிடாத ,கொஞ்சம் பொறுமையா இருங்க சொல்லிட்டேன்" என மிரு தன் தோழியின் மீதும், தன் தோழன் தன் மாமன் மகன் குணாமீதும் அக்கறையுடன் கூறினாள்.
"சரி சரி பார்த்துகிறேன், அப்புறம் மிரு" என ஜென்சி இழுவையாக கூற
" என்னடி என் இழுவை"
" மிரு...... இப்போ போகப்போற புது இடத்திலயாவது நீ பழச மறக்கப்பாருடி ப்ளீஸ், நடக்காத, இனி நடக்கவும் முடியாத ஒண்ண நினைச்சுகிட்டு இனி எவ்வளவு நாள் தான் அவஸ்த்த படுவ , உன் வாழ்க்கையோட அடுத்த கட்டத்தை பத்தி யோசிடி" என கலங்கும் தன் விழிகளை துடைத்தப்படி ஜென்சி பேசுவது மிருவாள் புரிந்து கொள்ள முடிந்தது.
" ம்ம்ம்..... பார்ப்போம் குட் நைட்" என்றதோடு அழைப்பை துண்டித்தாள்..
பழசை மறக்கவா, என்னால் அதை முடிந்தால், கண்டிப்பாக முயலுவேன் ஜென்சி ஆனால்.... என மனதிற்குள் கூறியவள் அப்படியே கலங்கிய கண்களுடன் தலையணையில் சரிந்தாள்..
இங்கு அறையை மூடிவிட்டு தன் கணவன் ரத்தினம் நோக்கி வந்த திலகாவோ, " உங்க மனசில என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க, வயசு பிள்ளைய கால காலத்துல கல்யாணம் பண்ணி அனுப்பாம வேலைக்கு அனுப்புறீங்க" ஆவேசமாக கேட்க சட்டென்று திலகாவை பிடித்து இழுத்து கட்டிலில் அமர வைத்த ரத்தினமோ, தன் மனைவி கைகளை பிடித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார்...
" அட திலகமே கல்யாணம்ங்கிறது அவ்வளவு லேசுபட்ட காரியமா, நீண்ட நாள் பயணம் டி ,நாம பேசி முடிச்சுட்டோம் உன் அண்ணன் பையனுக்கும், நம்ம பொண்ணுக்கும், ஆனா அதுங்க மனசுல என்ன இருக்குன்னு சரியா தெரியலயே"
"என்னங்க நீங்க, குணாவே தானே கேட்டான் மிருவ கட்டி கொடுங்கன்னு பின்ன என்ன?, அதுக்கு மிருவும் மறுப்பு சொல்லலியே "
"அடியே திலகாமா நீ காதல் திருமணம் பண்ணினவ தானா? " என திலகவதி தலையிலேயே தட்டினார் ரத்தினம் .
"இந்தா பாருங்க தலையில தட்டுற சோலி வச்சுகிடாதீங்க ஆமா , நான் ஒண்ணும் அனாத இல்லை, எனக்கு எங்க ஆத்தா அண்ணன் எல்லாம் இருக்காங்க ஆமா" என கோவிச்சவள் கையை மீண்டும் பிடித்து
"அடியே ,நான் சொல்லுறத முழுசா கேளு, இவ்வளவு நாள் ஊதாரியா சுத்திட்டு இருந்த உன் அண்ணன் மவன் ஒரு வருஷத்தில செட்டில் ஆகப்போறானாம் , இவ என்னடான்னா அவன் வீடே கெதின்னு கெடக்கிறவா , கல்யாணம் பேசியாச்சுன்னு தெரிந்தும் வேலைக்கு போறாளாம் அதுவும் ஒரு வருஷம் , இதெல்லாம் விரும்புறவங்க பண்ற வேலையாடி என் மடச்சி" என மீண்டும் தலையில் தட்ட போனவரை ஒரு மொறை முறைத்தாள் திலகா, சட்டென்று கையை இறக்கிய ரத்தினமோ , கட்டிலில் இருந்து இறங்கி ஜன்னல் ஓரம் நின்று ஓய்ந்து போன வீதியை பார்தவர்,
"இரண்டு பேர் மனசுலயும் ஏதோ இருக்கு, சொல்லப்போன இரண்டு பயபுள்ளைகளும் ஏதோ கூட்டு களவானித்தனம் பண்ணுதுக, என்ன விடுடி என் பொண்ணு என்ன பண்ணாலும் நான் அவ பக்கம் தான் ஆனா உன் அண்ணன் இருக்கானே என்னியவே நண்பன்னு பார்க்காம தொவைச்சு தொங்கவிட்டவன் ஏதோ ஒரே சாதி சனம் பாவம் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்தான். ஆனா குணா அவன் மகன் , அந்த பயபுள்ள பாடு தான் என்னாகப்போதோ" என திலகாவதியை பார்த்து கூற அவளோ பேயறைந்தவள்
போல அமர்ந்திருந்தாள்.....
" தூங்கு, நடக்கிறது தான் நடக்கும், கடவுள் இருக்கான் படுடி" என உறங்கபோனார் ரத்தினம்.
வாரம் நிமிடமாக ஓடியது... .
மிரு கிளம்பும் நாளும் வந்தது...
காத்திருப்பு தொடரும்.