அத்தியாயம் 32
சில மாதங்கள் கழித்து,யாழினியன் முன்னறையில் நிலத்தில் அமர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தான்...
அங்கே தான் வசந்தியும் வேதவல்லியும் தேன்மொழியும் அமர்ந்து இருந்தார்கள்...
யாழினியனை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே இருந்த யாதவ் கிருஷ்ணாவுக்கு ஏதோ ஒரு யோசனை...
கையில் சில்வர் குவளையில் நீர் அருந்தியபடி தான் அமர்ந்து இருந்தான்...
ஆழ்ந்த மூச்சை எடுத்தவன், சட்டென கையில் இருந்த குவளையை நிலத்தில் போட்டான்...
"டங்" என்ற பெரிய சத்தம்...
யாழினியன் சட்டென திரும்பியவன் யாதவ் கிருஷ்ணாவைப் பார்த்து பொக்கை வாயினை திறந்து சத்தமாக சிரித்தான்...
யாதவ் கிருஷ்ணாவுக்கும் சிரிப்பு...
சத்தம் கேட்டு அனைவரும் அவனையே பார்க்க, அவனோ வசந்தியை பார்த்து, "பாப்பாவுக்கு காது கேக்குதும்மா, அண்ணா பாடுறதை அவன் கேட்பான்... அண்ணா போலவே பாடுவான்... என்னை போல ஆயிடுவானோன்னு பயந்துட்டே இருந்தேன்" என்று சைகையால் சொல்லி முடிக்கவில்லை, சட்டென்று எழுந்த வசந்தியோ அவனை நோக்கி வேகமாக வந்தவர் அவனை இறுக அணைத்துக் கொண்டார்...
கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்...
விம்மியதில் அவர் மேனி குலுங்கியது...
தேன்மொழிக்கும் அவன் சொன்னதை கேட்டு கண்ணீர் வந்து விட்டது...
கண்களை துடைத்துக் கொண்டாள்.
வேதவல்லிக்கு புரியவில்லை...
"என்ன சொல்றான்?" என்று வசந்தியிடம் கேட்க, அவரோ கண்களை துடைத்துக் கொண்டே, "குழந்தைக்கு காது கேக்குது... தன்னை போல வர மாட்டான்னு சந்தோஷப்படுறான்" என்றார்...
உடனே வேதவல்லியோ, 'அவனுக்கு இந்த வயசில இருக்கிற அந்த பக்குவம் கூட எனக்கு இவ்ளோ நாள் இல்லாம போச்சே' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே, "சும்மா சும்மா அழுதுட்டு இருக்காத வசந்தி... அழுதுட்டு இருந்தா வீடு விளங்குமா?" என்று திட்ட, அவரோ கண்ணீரை துடைத்துக் கொண்டே யாதவ் கிருஷ்ணாவை பார்த்தவர், "உன்னை போல எனக்கு ஒரு மகன் கிடைக்க நான் கொடுத்து வச்சு இருக்கணும்" என்றார் சைகையில்...
"நிஜமாவா? நான் இப்படி பிறந்துட்டேன்னு உங்களுக்கு கவலை இல்லையா?" என்று சைகையில் கேட்டான் அவன்...
அவரோ, "கவலை இருந்திச்சு தான்... பேசுற சக்தி நிறைய பேர் கிட்ட இருக்கு... ஆனா நல்ல மனசு ரொம்ப ரொம்ப குறைவானவங்க கிட்ட தான் இருக்கு... உன் கிட்ட அந்த நல்ல மனசு இருக்கு... அதனால எனக்கு இப்போ ரொம்ப பெருமையா இருக்கு யாதவ்..." என்று சைகையால் சொல்லிக் கொண்டே, அவன் நெற்றியில் முத்தமிட, அவனோ தாயை அணைத்துக் கொண்டான்...
இந்த சந்தர்ப்பத்தில் யாழினியன் அவர்களைப் பார்த்து சத்தமாக கத்த, "நீங்க ரெண்டு பேரும் கட்டிக்கிறது இந்த குட்டி ராசாவுக்கு பிடிக்கல, பாருங்களேன்... நீ வா தங்கம்" என்று வேதவல்லி சொல்லிக் கொண்டே குழந்தையை தூக்கிக் கொள்ள, தேன்மொழியோ அனைவரையும் ரசனையுடன் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
இந்த சந்தர்ப்பத்தில், "கண்ணம்மா" என்று வம்சி கிருஷ்ணா அறைக்குள் இருந்து தேன்மொழியை அழைக்க, வேதவல்லியோ, "உன் புருஷன் கொஞ்ச நேரம் கூட உன்னை விட்டு இருக்க மாட்டானா? எப்போ பார்த்தாலும் கூப்பிடுட்டே இருக்கிறது... உன் பேர் தேன்மொழியா கண்ணம்மாவான்னு எனக்கு மறந்தே போய்டுச்சு... கொஞ்சிக்க கூப்பிடுறான் போயிட்டு வா" என்று சொல்ல, தேன்மொழியோ கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டே எழுந்தாள்...
அது வம்சி கிருஷ்ணாவின் காதிலும் விழ, சட்டென்று அறைக் கதவை திறந்து கொண்டே கதவு நிலையில் சாய்ந்து நின்றவன், "பாட்டி, எங்களை பார்த்து பொறாமை பட்டது போதும்... இளமையா இருக்கும் போது தாத்தாவும் இப்படி தானே உங்கள கொஞ்சிட்டு இருந்து இருப்பார்? என் பொண்டாட்டியை நான் கொஞ்சுவேன் உங்களுக்கு என்ன வந்திச்சு" என்று கேட்க, அவன் அருகே வந்த தேன்மொழியோ அவன் கையில் செல்லமாக கிள்ள, "ஸ்ஸ், வலிக்குது கண்ணம்மா" என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அவன்...
வேதவல்லியோ பெருமூச்சுடன், "க்கும், உன் தாத்தா என் பின்னாடி வந்துட்டாலும்... வாய கிளறாம கிளம்பு, ஏதாவது சொல்லிட போறேன்... உன் பொண்டாட்டி போல எனக்கு கொடுத்து வைக்கல..." என்று சொல்ல, அவ்வழியால் வந்த கெளதம் கிருஷ்ணாவோ, அவர் அருகே வந்து மண்டியிட்டு அமர்ந்து கொண்டே, "ஃபீல் பண்ணாதீங்க பாட்டி, உங்களுக்கும் வம்சி போல ரொமான்டிக் தாத்தா ஒன்னு ஏற்பாடு பண்ணிடலாம்... வெளிநாட்டுல எல்லாம் உங்க வயசில கல்யாணம் பண்ணிக்கிறாங்க... நீங்களும் பண்ணிக்கோங்க, ஜாலியா இருங்க, வளர்ந்த முடியை மொட்டை அடிச்சு, இப்போ ஷார்ட் ஹெயார் ஓட இன்னும் ஸ்டைலிஷ் ஆஹ் இருக்கீங்க, மாப்பிள்ளை போட்டி போட்டுட்டு வருவாங்க" என்று முடிக்கவில்லை, அருகே இருந்த யாழினியனின் விளையாட்டு பொருளை எடுத்து அவனுக்கு எறிந்து விட்டார்...
அவனோ தன்னில் படாமல் லாவகமாக விலகி எழுந்து கொள்ள, அந்த இடத்தையே சிரிப்பு நிறைத்து இருந்தது...
மேலும் ஒரு வருடம் கழித்து,
யாழினியனுக்கு ஒன்றரை வயது பூர்த்தியாகி விட்டது...
வம்சி கிருஷ்ணாவின் மார்பில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தான்...
"உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடா
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடா" என்று மகனுக்கு தாலாட்டுப் பாடிக் கொண்டு இருக்க, கதவை திறந்து கொண்டே உள்ளே நுழைந்தாள் தேன்மொழி... இருவரையும் ரசித்துப் பார்த்துக் கொண்டே நின்றவளை திரும்பிப் பார்த்தான் வம்சி கிருஷ்ணா...
"மகளுக்கு பாடுற பாட்டை மகனுக்கு மாத்தி பாடுறீங்களா?" என்று அவள் சைகையில் சிரித்தபடி கேட்க, அவனோ, "என்ன பண்ணுறது? எல்லாமே அப்பா மகளுக்கு தான் எழுதி இருக்காங்க... அடுத்ததா பொண்ணு ஒன்னு பெத்துக் கொடு, அப்படியே பாடிடுறேன்" என்றவனோ, "தூங்கிட்டானா? இல்லை தூங்குன போல நடிக்கிறானா?" என்று நெஞ்சில் தூங்கிக் கொண்டு இருந்த மகனை கண்களால் காட்டி கேட்க, அவளோ, "தூங்கிட்டான்" என்று சைகை செய்து கொண்டே மகனை அழகாக தூக்கி தொட்டிலில் படுக்க வைத்து இருந்தாள்.
அதனை தொடர்ந்து எழுந்து அமர்ந்த வம்சி கிருஷ்ணாவோ நேரத்தைப் பார்த்தான்... இரவு பதினொன்று அரை...
"ஒரு மணி நேரமா பாடிட்டே இருக்கேன்" என்று அவன் சொல்லி முடிக்க முதல், அவனிடம் நீர்க் குவளையை நீட்டினாள் தேன்மொழி...
அவனோ மென் சிரிப்புடன், அதனை வாங்கிக் குடிக்க, "எனக்காக இன்னும் அரை மணி நேரம் பாடணும்" என்றாள் சைகையில்...
அவனோ, "பேர்த் டே விஷ் ஆஹ்" என்று சிரித்தபடி கேட்க, அவளோ, "சஸ்பென்ஸ் ஆஹ் ஒன்னுமே பண்ண முடில" என்று சைகையால் சொல்லிக் கொண்டே, அவனை நெருங்கி அமர, அவனோ அவள் முகத்தை பார்த்துக் கொண்டே, அவளுக்காக பாட ஆரம்பித்தான்... ஆம் அடுத்தநாள் வம்சி கிருஷ்ணாவின் பிறந்த நாள்...
அவள் ஆசைப்பட்டு கேட்ட பாடல்களை எல்லாமே பாடினான், அவள் மௌனத்தை ரசித்துக் கொண்டே பாடினான்... அவளும் அவனுடன் கைகளை கோர்த்துக் கொண்டே, கண்களை மூடி, அவன் தோள் சாய்ந்து அவன் இசையை ரசித்துக் கொண்டே இருந்தாள்.
அவள் அவனுடைய இசையை ரசித்தாள்...
அவன் அவளுடைய மௌனத்தை ரசித்தான்...
சரியாக பன்னிரண்டு மணியை கடிகாரம் நெருங்கி இருக்க, அவளோ, அவன் கன்னத்தை ஒற்றைக் கையால் பற்றி பாடிக் கொண்டு இருந்த அவன் இதழ்களில் இதழ் பதிக்க, அவனோ கண்களை மெதுவாக மூடிக் கொண்டான்...
இருவரின் விழிகளும் மூடிக் கொள்ள, வார்த்தைகள் அங்கே மௌனித்து விட, அவன் பிறந்த நாள் அன்று அவள் கொடுத்த முதல் பரிசு இந்த முத்தப் பரிசு...
நேரம் கடந்த பின்னரே அவனை விட்டு விலகியவளோ சட்டென்று எழுந்து அங்கே இருந்த நோட் புக்கை எடுத்தவள் அதற்குள் இருந்த அவனுக்கான மடலை அவனிடம் நீட்டினாள்...
அவனுக்கு அவள் மடலை பார்த்தாலே குதூகலம்...
கண்களை சிமிட்டிக் கொண்டே, "தேங்க் யூ" என்று சொன்னவன், அவள் எழுதிய கடித்ததை வாங்கி பிரித்து படிக்க ஆரம்பித்து விட்டான்...
அன்புள்ள வம்சி கிருஷ்ணாவுக்கு,
நீங்கள் நலமாக இருக்கின்றீர்கள் என்று நான் அறிவேன்... இறைவன் தொடர்ந்து இந்த நலத்தை உங்களுக்கு வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்...
உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
உங்களிடம் நிறைய விடயங்கள் இந்த மடலில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்...
நீங்கள் நல்ல கணவர், நல்ல மகன் மற்றும் நல்ல அண்ணன் என்று தான் இத்தனை நாட்கள் நினைத்து இருந்தேன்... நீங்கள் சிறந்த தந்தையும் கூட என்று இப்போது நிரூபித்து விட்டீர்கள்...
யாழியனுக்கு நீங்கள் பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு விடயங்களிலும் நெகிழ்ந்து போகின்றேன்... மேலும் மேலும் உங்களை காதலித்து களைத்தே போய் விட்டேன்...
குழந்தை பிறந்த பிறகு கணவன் மனைவிக்கு இடையான நெருக்கம் குறைந்து விடும் என்று தான் நான் கேள்விப்பட்டு இருக்கின்றேன்...
நாம் வித்தியாசமானவர்கள் போலும்...
நமது நெருக்கமும் காதலும் அதிகரித்து இருக்கின்றதே தவிர கொஞ்சம் கூட குறையவே இல்லை...
இன்னுமே உங்களை நினைத்தால் என் இதயம் வேகமாக துடிக்கும்... உங்களுக்கும் அதே உணர்வு இருக்கின்றது என்று எனக்கு தெரியும்...
எனக்கு என்ன தேவை என்று பார்த்து பார்த்து செய்கின்ற உங்களுக்கு என்ன தேவை என்று நான் சமீப காலமாக புரிந்து கொண்டேன்...
ராஜாவான உங்களுக்கு இளவரசி தேவைப்படுகின்றாள் என்று தெரிந்து கொண்டேன்...
என் திருமண பரிசு உங்களுக்கு அது தான்...
ஆம் நம் காதலின் அடுத்த சின்னம் என் கருவில்...
உங்கள் கண்ணம்மா மீண்டும் கர்ப்பமாக இருக்கின்றாள்...
உங்கள் அத்தியாயத்தில் மகனதிகாரம் கண்டு விட்டேன், இனி மகளதிகாரம் காண ஆசைப்படுகிறேன்...
இது மீண்டும் இளவரசனாக இருந்தாலும் பரவாயில்லை, அடுத்தாக இளவரசிக்கு முயற்சிப்போம்...
உங்கள் ஆசை நிறைவேறும்வரை நம் காதலின் சின்னங்களை நான் சுமந்து கொண்டே இருப்பேன்...
என் வம்சி கிருஷ்ணாவுக்காக நான் இது கூட செய்யவில்லை என்றால் எப்படி?
என் பிறந்த நாள் பரிசு பிடித்து இருக்கின்றதா?
ஆம் என்று தலையசைத்து சொல்லாமல் முத்தமிட்டு சொல்லி விடுங்கள்... உங்கள் காதல் முத்தங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கும்
உங்கள் கண்ணம்மா
என்று முடித்து இருந்தாள்.
கடிதத்தை வாசித்தவன் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு...
"பெஸ்ட் கிஃப்ட் எவர் கண்ணம்மா" என்று சொல்லிக் கொண்டே, அவள் முகத்தை தாங்கியவன் அவள் கேட்ட முத்தமழையை பொழிய ஆரம்பித்து விட்டான்...
மடல் மூலம் ஆரம்பித்த அவர்கள் காதல், மடல் மூலமே இன்று வரை தொடர்ந்தது... இன்று மட்டுமல்ல, என்றுமே தொடரும்...
"இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை"
அவர்கள் காதலுக்கும் மொழியே தேவையில்லை...
அவர்கள் காதலில், அவள் மௌனமே அவன் இசையாக...
முற்றும்.