அத்தியாயம் 11
சுற்றும் முற்றும் பார்த்தாள்.அவள் ஆடை மாற்றப்பட்டு இருந்தது...
தங்க நிறத்தில் ஒரு சுடிதார் அணிவிக்கப்பட்டு இருந்தது...
அது நிறைய கற்கள் வேறு...
சட்டென குனிந்து பார்த்தாள்.
கழுத்தில் இருந்த தாலியை காணவில்லை... ஆனால் நிறைய நகைகள் உடல் முழுவதும் அணிவிக்கப்பட்டு இருந்தன.
"என்ன கொடுமை டா?" என்று புலம்பிக் கொண்டே எழுந்தவளுக்கு எந்த பக்கம் வாசல் இருக்கின்றது என்றும் தெரியவில்லை...
சுற்றி சுற்றி கதவுகள் போல இருந்தன. கஷ்டப்பட்டு எழுந்து கொண்டவளுக்கு நடக்கவே உடல் பாரமாக இருந்தது...
'இது என்ன இவ்ளோ பாரமா இருக்கு, எப்படி தான் நடக்கிறது? இதெல்லாம் நான் கேட்டேனா?' என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே, அணிந்து இருந்த நகைகளை கழட்டி அங்கிருந்த மேசையில் வைத்து விட்டவளுக்கு அந்த சுடிதாரும் போட கஷ்டமாக தான் இருந்தது... வேறு வழி இல்லை, போட்டு தான் ஆக வேண்டும்...
அதனை தொடர்ந்து கதவுகளை ஒவ்வொன்றாக திறந்தாள்.
ஒன்று குளியலறை, அடுத்தது அவளுக்கான உடைகள், அடுத்தது அவளுக்காக உடற்பயிற்சி செய்யும் இடம்...
அவளுக்கு அவசரமாக கழிப்பறைக்கு செல்ல வேண்டியும் இருக்க, 'அவசரமா வருதே' என்று முணுமுணுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.
எல்லாமே தங்கமாக இருந்தது...
'எல்லாமே தங்கமா? இதுல எப்படி தான் இருந்து போறாங்களோ?' என்று புலம்பியவளுக்கு ஐயோடா என்கின்ற மனநிலை தான்...
தனது தேவைகளை எல்லாம் முடித்துக் கொண்டே வெளியே வந்தவள் தட்டு தடுமாறி அறையின் வாசல் கதவை கண்டு பிடித்து வெளியே வந்தாள்.
இதே சமயம் முன்னறையில் தான் அமர்ந்து இருந்தான் அமரேந்திரன்.
தங்க நிற குர்தா அணிந்து இருந்தான்.
தாடி மீசை அழகாக ட்ரிம் செய்து, கண்ணில் கண்ணாடி அணிந்து இருந்தான்.
கண்ணாடியின் ஃப்ரேம் கூட தங்கம் தான்...
அவனது ஒற்றைக் காதில் வைர கடுக்கன் இருந்தது...
நாடியை நீவிக் கொண்டே அங்கே நின்று இருந்த பெண் வைத்தியர் சுகுணாவை பார்த்தான்.
"சார், அவங்க வெர்ஜின் தான்... கைல சின்ன காயம் இருந்திச்சு... ஆயில்மெண்ட் போட்டு விட்டேன், ஓகே ஆயிடும்... முதுகுல வம்சத்தோட மச்சம் இருக்கு... டி என் ஏ டெஸ்ட் நேத்து கொடுத்தது இன்னைக்கு ரிஸல்ட்ஸ் வந்திருக்கு" என்று சொல்லிக் கொண்டே, தன்னிடம் இருந்த ஃபைலை நீட்ட அதனை வாங்கிப் பார்த்தான்.
மாதுரி அவன் தங்கை என்பதற்கு உறுதியான சாட்சி அது...
டி என் ஏ பொருந்தி இருந்தது...
அவன் இதழ்கள் மெலிதாக விரிய, "குட்" என்று சொன்னான்.
சுகுணாவும், "அப்போ நான் கிளம்பட்டுமா சார்?" என்று கேட்க, "ஓகே" என்று சொன்னவன் அங்கே அமர்ந்து இருந்த அவனது தந்தையான பொன்முடி தேவரை பார்த்தவன், "நம்ம வம்சத்துல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாம் அப்பா" என்றான்.
"ம்ம், கண்டிப்பா, இத்தனை வருஷம் கடந்து கிடைச்சு இருக்கா, மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு, நம்ம திவ்யன் பத்தி என்ன நினைக்கிற?" என்று கேட்டார்...
"ம்ம். அவன் சரியா இருப்பான், அத்தை கிட்ட பேசிக்கலாம்" என்று சொல்லிக் கொண்டான் அமரேந்திரன்.
தங்கவிழியோ, "அப்படியே என்னை போலவே இருக்கா" என்று மகளை பற்றி பேசி சிலாகித்துக் கொண்டார்.
"ஆமா, குள்ளமா" என்று கிண்டலாக சொன்ன அமரேந்திரனின் விழிகள் அங்கே விறு விறுவென நடந்து வந்த மாதுரியில் படிந்தது...
அவளுக்கு கோபம் தான் வந்தது.
'இவன் யாருன்னு வேற தெரியலையே' என்று நினைத்தவள், "நீங்கெல்லாம் யாரு?" என்று கேட்டாள்.
தங்கவிழியோ, "நான் தான் உன் அம்மா, என்ன போலவே இருக்க" என்றார்.
ஆம் அவள் அவரை போலவே இருக்கின்றாள்.
"இவர் உங்க அப்பா, இது உன் அண்ணா" என்று எல்லாரையும் அவர் அறிமுகப்படுத்த, அவளுக்கு ஐயோடா என்கின்ற மனநிலை தான்.
இத்தனை நாள் தாய், தந்தை, தங்கை என்று ஒரு வட்டத்துக்குள் வாழ்ந்து விட்டாள்.
புதிதாக ஒரே நாளில் இந்த சொந்தங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியவே இல்லை.
"சரி இருக்கட்டும், என் தாலி எங்க?" என்று கேட்டாள்.
"அந்த பிச்சக்காரன் கட்டுன தாலி உனக்கு எதுக்கு?" என்றான் அமரேந்திரன்.
"என்னது பிச்சைக்காரனா? அவர் என் புருஷன்" என்று அவள் சொல்ல, "உன்னை டாக்டர் மொத்தமா செக் பண்ணி நீ வெர்ஜின்னு ரிப்போர்ட் கொடுத்து இருக்காங்க, இதுக்கப்புறம் அவன் எதுக்கு? உனக்கு நம்ம வம்சத்தில ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்றான் அமரேந்திரன்.
அவளுக்கு கோபம் தான் வந்தது...
"நான் இப்போ கர்ப்பமா இருந்து இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க??" என்று கேட்டாள்.
"யோசிச்சு இருப்பேன், சரின்னு விட்டு தள்ளியும் இருப்பேன்" என்றான்.
மாதுரிக்கு மயக்கமே வராத குறை தான்...
'ராவ், ஃபெர்ஸ்ட் நைட்டை நேரத்துக்கே முடிச்சு இருக்கலாம், தப்பு பண்ணிட்டோம், வாயை வச்சுட்டு சும்மா இருந்து இருந்தாலாவது பரவாயில்லை, உளறி வேற வச்சு இருக்கீங்க' என்று முணுமுணுத்துக் கொண்டே, "எனக்கு அவரை பிடிக்கும்" என்றாள்.
"உன் அந்தஸ்துக்கு அவன் செட் ஆக மாட்டான்" என்றார் பொன்முடி தேவர்.
'இவங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலையே' என்று முணுமுணுத்தவளோ, "என்னை வீட்ல கொண்டு விடுங்களேன்" என்றாள்.
"இது தான் உன் வீடு பொன்னிலா, அம்மாவை மறந்துட்டியா என்ன?" என்று தங்கவிழி அணைக்க வர, "என் பேர் மாதுரி" என்றாள்.
"எங்களுக்கு நீ பொன்னிலா தான், நகை எல்லாம் எங்க?" என்று கேட்டுக் கொண்டே அணைத்து நெற்றியில் முத்தம் பதித்தார்.
"எல்லாம் ரொம்ப கனமா இருக்கு, என்னால தூக்க முடியல" என்றாள்.
தனது முழு உயரத்துக்கும் எழுந்து நின்றான் அமரேந்திரன்...
அவனை ஏறிட்டு பார்த்த பொன்னிலாவோ, 'இவன் ராவ் போல இவ்ளோ உயரமா இருக்கான்' என்று நினைத்துக் கொள்ள, "எல்லாம் பழகிக்கணும் பொன்னிலா, நீ எங்க வீட்டு இளவரசி, இந்த காதல் எல்லாம் விட்டு தள்ளிட்டு, நான் சொல்ற மாப்பிள்ளையை கட்டிக்கோ, நம்ம ரத்தத்துல அந்நியர்கள் கலக்கவே கூடாது... புரியுதா?' என்று கேட்க, 'இவன் சரியான எலைட் மெண்டாலிட்டியா இருக்கான், இவனுக்கு நான் தங்கச்சியா?' என்று கடுப்பாக நினைத்துக் கொண்டே, "அப்படி எல்லாம் நான் வளரவே இல்லை, எல்லாருமே சமம்னு தான் வளர்ந்தேன்" என்றாள் தன்மையாக.
"ஆனா இங்க இப்படி தான், நீ பழகிக்கணும் பொன்னிலா, முக்கியமா தப்பி செல்ல கனவில கூட நினைக்காதே, என்னை மீறி ஒரு எறும்பு கூட இங்க இருந்து போகவும் முடியாது, உள்ள வரவும் முடியாது, வா சாப்பிடலாம்" என்று சொல்லிக் கொண்டே, அவன் செல்ல, தங்கவிழி அவளை அழைத்து செல்ல, அவளுக்கோ இங்கே இருந்து எப்படி செல்வது என்று தெரியாத தவிப்பு தான்...
உணவு அறையே பிரமாண்டமாக இருந்தது...
அவளுக்கு வேறு பசி வயிற்றை கிள்ளியது...
அதிகமாக யோசிக்கவும் முடியவில்லை...
சாப்பிட்டு விட்டு யோசிக்கலாம் என்று நினைத்து உணவு அறைக்குள் நுழைந்தாள்.
தங்க மேசை, தங்க தட்டு, தங்க கரண்டி...
எல்லாமே பார்த்து மிரண்டு விட்டாள்.
'இதெல்லாம் சவூதி மன்னர் கிட்ட தான் இருக்கும்னு கேள்விப்பட்டு இருக்கேன், இதென்ன தொட்டது எல்லாம் தங்கமா இருக்கு?' என்று நினைத்தவளுக்கு அதனை ரசிக்கும் அளவுக்கு மனநிலை இல்லை...
ஒரு நாற்காலியில் உட்கார்ந்தாள்.
நிறையவே உணவுகள் இருந்தன.
கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேல் இருந்தன.
"இதென்ன இவ்வளவு?" என்று அவள் கேட்க, "மார்னிங் ஃபிப்டி, லன்ச்க்கு ஃபிப்டி, டின்னருக்கு ஃபிப்டி டிஷஸ் பண்ணிடுவாங்க" என்றான் அமரேந்திரன்.
"இவ்வளவும் சாப்பிடுவாங்களா?" என்று கேட்க, "ம்ம், நம்ம குடும்பம் சாப்பிட்டு முடிய, வேலை பாக்கிறவங்க சாப்பிடுவாங்க, அப்புறம் நாய், பூனை எல்லாம் இருக்கு... எப்படியும் வேஸ்ட் ஆகாது" என்றான்.
அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை...
ராவந்த்தின் எண்ணமாகவே இருந்தது...
என்ன செய்வான்? என்று யோசனை தான்...
அதற்காக வயிற்றைக் காய போட முடியுமா? அங்கே இருக்கும் தோசையை எடுத்து வைத்து அவள் சாப்பிட தொடங்க, "இன்னைக்கு வேணும்னா சாப்பிடு, ஆனா இனி எல்லாரும் வந்ததும் தான் சாப்பிட தொடங்கணும்" என்றான்.
"இனி யாரு வரணும்?" என்று அவள் கேட்ட போதே, "மருமகளே உன்னை பார்க்க தான் காத்துகிட்டு இருந்தேன்" என்றபடி அங்கே வந்து சேர்ந்தார் பொன்முடி தேவரின் தங்கை மணிமேகலை...
அவரை தொடர்ந்து ஒருவன் வந்தான்...
அவளை மென் சிரிப்புடன் பார்த்துக் கொண்டே, "எப்படி இருக்க பொன்னிலா?" என்று கேட்டபடி இருக்கையில் அமர, அவளோ வாய்க்குள் தோசையுடன் இருவரையும் புரியாமல் பார்த்தாள்.
அவள் நெற்றியில் முத்தமிட்ட மணிமேகலையோ, "என்னை தெரியலையா? நான் தான் உன் அத்தை, இவன் தான் என் பையன்... உனக்கு முறைப்பையன்" என்று அங்கே அமர்ந்து இருந்த திவ்யனைக் காட்ட, அவனும் ஒரு சிறிய புன்னகையுடன் சாப்பாட்டு தட்டை எடுத்து வைத்தான்...
அமரேந்திரனோ, அங்கே அமர்ந்த மணிமேகலையிடம், "திவ்யனை பொன்னிலாவுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்" என்று சொல்ல, 'பொன்னிலா யாரு?' என்று யோசித்த மாதுரியோ, 'ஐயோ அது நான் தான். என்னது கல்யாணமா?' என்று அதிர்ந்து விட்டாள்.
திவ்யனோ, "ஆனா அவ கல்யாணம்" என்று ஆரம்பிக்க, அவனை திரும்பி ஒரு பார்வை தான் அமரேந்திரன் பார்த்தான்.
"எனக்கு சம்மதம்" என்றான் தட்டு தடுமாறி...
"ம்ம்" என்று அழுத்தமாக சொல்லி விட்டு, இன்னும் மூணு மாசத்துல கல்யாணம்" என்றான்.
அங்கே அவன் வார்த்தைகள் தான் இறுதி வார்த்தைகள்...
அதனை மீற யாருக்கும் தைரியம் இல்லை...
"சரிப்பா" என்று சொல்லிக் கொண்டார் மணிமேகலை...
தோசையை சாப்பிடலாம் என்று எடுத்த மாதுரிக்கு இதனை கேட்டதும் தோசையை மெல்ல கூட முடியாமல் போனது...
ஏதோ தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட உணர்வு...
'என்ன கொடுமையா இருக்கு எனக்கு... பிடிக்காமலே ராவ் வை கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க, சரின்னு அவர் மேல லவ் வந்து கூட வாழ ஆரம்பிக்கலாம்னா மீண்டும் ஒரு இன்ஸ்டன்ட் மாப்பிள்ளை... என் இஷ்டப்படி நான் வாழவே முடியாதா?' என்று தனக்குள் புலம்பியவளோ, 'ராவ் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? சீக்கிரம் என்னை அழைச்சிட்டு போங்க, இல்லன்னா இந்த டெர்ரர் பீஸ் என்னை இன்னொருத்தனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துடுவான், கண்ணாலேயே எல்லாரையும் ஆட்டி வைக்கிறான் ராஸ்கல்' என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டாள்.
இதே சமயம் ராவந்த்தின் ஹாலில் தான் எல்லாருமே யோசனையுடன் அமர்ந்து இருந்தார்கள்...
"அவ முதுகுல இருக்கிற மச்சம் தெரியாம அவ தான் ஆளுன்னு கண்டு பிடிக்க முடியாது, அது எப்படி தெரிஞ்சு இருக்கும்?" என்று வடிவேல் கேட்க, யாருக்கும் எதுவுமே புரியவில்லை...
"நம்ம யாருக்குமே தெரியாத விஷயம் அங்கே போயிருக்கு... சோ நம்மள சுத்தி தான் காட்டி கொடுத்த ஆளும் இருக்கனும்... யாரா இருக்கும்?" என்று யோசித்த ராவந்த்துக்கு தூக்கமே இல்லை...
போலீஸ் நிலையத்துக்கு சென்றால், "ஆஹ் தேடுறோம்" என்று மொட்டையாக முடித்து விட்டார்கள்...
போலீசை நம்பி பயன் இல்லை என்று மட்டும் அவனுக்கு தெளிவாக தெரிந்தது...
அடுத்த நாள் யோசனையுடன் தான் அலுவலகத்திற்கு சென்றான் ராவந்த்.