சென்னையிலுள்ள மொத்த மக்களும் ஆடிப் போயிருக்க, அந்த ஒரு சம்பவம் மட்டும் எல்லோருக்கும் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருந்தது.
மொத்த மீடியாகாரர்களும் பத்திரிகையாளர்களும் அந்த பீச் கரையோரத்தில் கூடியிருக்க, போலீஸாரோ அந்த இடத்திலிருந்த மக்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனாலும், அங்கிருந்த அத்தனை பேரின் பார்வையும் அங்கு சிதைக்கப்பட்டு கிடந்த அந்த ஆணின் உடலின் மீதுதான் பதிந்திருந்தது.
ஒரு கண் தோண்டப்பட்டு அந்த ஆணின் பாகம் அறுக்கப்பட்டு உடல் முழுக்க காயங்களோடு மார்பில் கத்தியினால் சிலுவை வடிவம் போல் கிழிக்கப்பட்டு உடல் கிடக்க, முழுதாக இரத்தத்தில் நனைந்திருந்த அந்த உடலைப் பார்த்த சில பேருக்கு கிட்டத்தட்ட வாந்தியும் மயக்கமும் வந்துவிட்டது.
உடனே தத்தமது கேமராக்களில் பதிவு செய்து வலைத்தளங்களுக்கும் இதைப் பரப்பியிருக்க, அந்த உடலை முகத்தை அஷ்டகோணலாக வைத்து பார்த்துக்கொண்டிருந்த ஆராதியாவுக்கு இதயம் வேகமாக படபடக்க ஆரம்பிக்க, வேக மூச்சுக்கள் கிளம்பியது.
உடனே தன் பையிலிருந்த இன்ஹேலரை எடுத்தவள் அதிலிருந்த மருந்தை உறிஞ்சிவிட்டு, "வருண், சீக்கிரம் ஃபோட்டோ எடு! என்னால பார்.. பார்க்க முடியல" என்று சொல்லி சில குறிப்புகளையும் தன் புத்தகத்தில் குறித்துக்கொள்ள, அவள் சொன்னது போல் தன் கேமராவில் அந்த காட்சியின் பல மாதிரிகளை புகைப்படமாக எடுத்துக்கொண்டான் வருண்.
"பார்க்கவே ரொம்ப கொடூரமா இருக்கு... யார் பண்ணான்னு சின்ன ஆதாரம் கூடவா கிடைக்கல. ச்சே! ஐடியில வேலை பார்க்குறான்னு கேள்விப்பட்டிச்சு. இவன் ஃபேமிலிய நினைச்சாதான் ரொம்ப கவலையா இருக்கு" என்று வருண் சொல்ல, அவளோ எந்த பதிலும் பேசவில்லை.
சென்னையின் பிரபலமான செய்தி நிறுவனமாக ஸ்கை சேனல் நிறுவனத்தில் தான் இருவருமே வேலைப் பார்க்கின்றனர். கிட்டத்தட்ட அவள் வேலையில் இணைந்து ஒரு வருடத்திற்கு மேலாகியிருக்க, பிடித்த வேலையாக இருந்தாலும் இரத்தத்தைப் பார்த்தால் மட்டும் சற்று நடுங்கி விடுவாள் ஆராதியா.
"அந்த போலீஸ்காரன் நம்ம ஆளுதானே, ஏதாச்சும் தகவல் தெரிஞ்சதா?" என்று அவன் கேட்க, "விசாரிச்சேன், இப்போதான் ஃபாரன்சீக் டிபார்ட்மென்ட் ஆளுங்க வராங்களாம். இனிமேதான் பாடிய மோர்ச்சரிக்கு அனுப்பணும், இந்த கொலைய பத்தி எந்த தகவலும் தெரியலன்னு சொன்னான். அவனுக்கு தெரியாதுன்னு நான் தெரிஞ்சிக்க கூட அந்த ஆளுக்கு இருநூறுவா லஞ்சம் கொடுக்க வேண்டியதா போச்சு. ச்சே!" என்று சலித்துக்கொண்டவளைப் பார்த்து சிரிப்புதான் வந்தது அவனுக்கு.
"ஆமா... ஹர்ஷத் கூட பேசினியா என்ன! இன்னைக்கு உங்க அன்னிவெர்சரியாச்சே!" என்று வருண் கேலியாகக் கேட்க, சட்டென அவளுடைய முகம் இறுகியது. தொண்டையை அடைத்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அவனைப் பார்த்தாள் அவள்.
அவளின் பார்வையிலேயே நிலவரத்தை அறிந்து, "அய்யய்யோ..." என தலையை சொரிந்தவாறு மெல்ல வருண் அங்கிருந்து நகர்ந்துவிட, அதேநேரம் ஆராதியாவின் அழுகைக்கு காரணமானவனோ மூக்க முட்ட குடித்து விட்டு போதையில் குப்புறப்படுத்துக் கொண்டிருந்தான்.
"ஹர்ஷா... ஹர்ஷா..." என்று வேகமாக ஓடி வந்த யுகன், கட்டிலில் படுத்திருந்த ஹர்ஷத்தின் முதுகைத் தட்டிக்கொண்டே போக, "அடிங்க..." என்றுக்கொண்டு எழுந்தமர்ந்தவன் தன் முன்னே முப்பத்திரெண்டு பற்களையும் காட்டி சிரித்துக்கொண்டு நின்றிருந்தவனை முறைத்துப் பார்த்தான்.
"என்ன வேணும் உனக்கு?" என்று ஹர்ஷத் ஒற்றைப் புருவத்தைத் தூக்கிய தோரணையில் கேட்க, "இக்கட சூடோ..." என்று தான் முதுகுக்கு பின்னே மறைத்து வைத்திருந்த இரண்டு மீன் குஞ்சுகள் கொண்ட பொலித்தீன் உரையைக் காட்டினான் யுகன்.
அதை விழிகளை சுருக்கிப் பார்த்தவன், "என்ன இது?" என்று காட்டமாகக் கேட்க, "மீன்டா ஹர்ஷா, இது நானு இன்னொன்னு என் டார்லிங் நந்து. எப்புடி?" என்று அசடுவழிந்தவாறு சொல்ல, முகத்தை அஷ்டகோணலாக வைத்து அவனைப் பார்த்த ஹர்ஷத்திற்கு அய்யோ என்றிருந்தது.
"காலக்கொடுமை கதிரவா! ஏறின போதை எல்லாம் மொத்தமா இறங்கிருச்சு" என்று மற்றவன் விழிகளை சலிப்பாக சுழற்றியவாறு அப்படியே கட்டிலில் விழ, சரியாக அழைப்பு மணி சத்தம் கேட்டது.
ஹர்ஷத்தோ தன் தோழனைப் பார்க்க, அவனோ எப்போதோ மீன் குஞ்சுகளைக் கொஞ்சியவாறு தன் காதலியோடு கடலைப் போட ஆரம்பித்திருக்க, கலைந்திருந்த ஆடையையும் தலை முடியையும் சரி செய்யக் கூட இல்லாமல் வாய்விட்டு முணங்கியவாறு எழுந்து சென்று படாரென கதவைத் திறந்தான் மற்றவன்.
கலங்கிய விழிகளோடு நின்றிருந்தவளுக்கு அவனின் கசங்கிய சட்டை, சிவந்த விழிகள், கலைந்த தலை முடியே அப்பட்டமாக அவன் குடித்திருப்பதைக் காட்டிக்கொடுக்க, அதிர்ச்சியில் விழிகளை விரித்தவாறு "குடிச்சிருக்கியா நீ, அதுவும் காலையிலயே?" என்று கேட்டாள் திகைத்துப் போய்.
அவளைப் பார்த்ததும் ஒருகணம் விக்கித்துப் போய் நின்றவன் உடனே நடப்பை உணர்ந்து, "அய்யோ ஆரு, தப்பா யோசிக்காத! இது ராத்திரி அடிச்ச சரக்குடா செல்லம், பார்ட்டீ முடிஞ்சு வரும் போது கிட்டத்தட்ட விடிஞ்சிருச்சு. அதான் உனக்கு அப்படி தோனியிருக்கும்" என்று சமாளித்தவாறு அவளை நெருங்க, ஒரு அடி பின்னே வைத்தவள் விழிகளில் கோபம் தெறிக்க அவனை ஏற இறங்கப் பார்த்தாள்.
"இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகமிருக்காடா? நம்ம ஃபிப்த் அன்னிவெர்சரி, நேத்து ராத்திரி உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்னு தெரியுமா! ஆனா நீ க்ளப்புக்கு பார்ட்டீன்னு போய் எவளோ ஒருத்தி கூட இருந்திருக்க. போயும் போயும் உன் பின்னாடி இத்தனை வருஷமா நாய் குட்டி மாதிரி திரிஞ்சிருக்கேனே, ச்சே! இனி ஒரு நிமிஷம் கூட என் மூஞ்சுல முழிக்காத. கெட் லொஸ்ட்!" என்று படபடவென பொரிந்துவிட்டு அவள் அங்கிருந்து செல்ல, 'ஓ காட்! போச்சு போச்சு... இப்படி சிக்கிட்டியே ஹர்ஷா' என்று தலையிலேயே கை வைத்துக்கொண்ட ஹர்ஷத், "ஆரு... ஆரு..." என்று அவளின் பின்னாலேயே ஓடினான்.
"ஆரு, ப்ளீஸ் நான் சொல்றதை கேளு!" என்று ஹர்ஷத் அவளின் கரத்தைப் பற்ற, அதை கோபத்தோடு உதறிவிட்ட ஆராதியா, "என்னை தொடாத!" என்று கத்திவிட்டு விழிகளிலிருந்து வழிந்த நீரைத் துடைத்தவாறு, "காலேஜ் முடிஞ்சு இரண்டு வருஷம் ஆகுது, இப்போ வரைக்கும் வேலைக்கு போகணும்னு தோனல. யுகனோட ரூம்ல தினமும் குடிச்சிக்கிட்டு பார்ட்டீ அது இதுன்னு சுத்திக்கிட்டு இருக்க. என்னை பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்தியா?" என்று தழுதழுத்த குரலில் பேசினாள்.
அவனோ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டவன், "அப்படி எல்லாம் இல்லை ஆரு, ஐ ரியலி லவ் யூ! இதுக்கெல்லாம் அந்த யுகாதான் காரணம், அவன் கூப்பிட்டான்னுதான் நான் பார்ட்டீக்கு போனேன், சாரிடீ!" என்று அவளை அணைப்பது போல் வர, அவனின் மார்பில் கை வைத்து தள்ளிவிட்டாள் அவள்.
"வாய திறந்தாலே பொய்யு! நேத்து ராத்திரி பப்புல அந்த ரியா கூட இருந்திருக்க. யூ இடியட்! நான் ஒரு ஜெர்னலிஸ்ட், அதை மறந்துட்டன்னு நினைக்கிறேன்" என்று பற்களைக் கடித்தவள் பேசிக்கொண்டிருக்கும் போதே சரியாக அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதைப் பார்த்தவள், உடனே ஏற்று "இன்னும் டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன் வருண்" என்றுவிட்டு அழைப்பைத் துண்டிக்க, "ஓஹோ.. அவனா! என்னடா இன்னும் கூப்பிடல்லையேன்னு பார்த்தேன். சரியான நந்தி" என்று எரிச்சலாக முணுமுணுத்தான் ஹர்ஷத்.
"நீ திருந்தவே மாட்டியா, அவ என் ஃப்ரென்டு, எத்தனை முறை சொன்னாலும் உன் மர மண்டைக்கு ஏறாது. ச்சே!" என்று அவள் கோபத்தில் வெடிக்க, "ஆம் ஐ லுக் லைக் அ ஜோக்கர்? அவன் பார்க்குற பார்வையே சரியில்ல, கண்டிப்பா என் கையால அவனுக்கு இருக்கு" என்றவன் சட்டைக் கையை மடித்துவிட்டு தன் கைக்காப்பை ஏற்றி விட, ஆராதியாவுக்கு 'இவனை என்ன செய்தால் தகும்?' என்றுதான் தோன்றியது.
உடனே அவனுக்காக வாங்கிய பரிசை அவன் முகத்தில் விட்டெறிந்தவள், "இத்தோட எல்லாமே முடிஞ்சு போச்சு" என்றுவிட்டு விறுவிறுவென்று செல்ல, வேகமாக அதையெடுத்துப் பார்த்தவனுக்கு விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.
சில நாட்களுக்கு முன்னரே வந்த விலையுயர்ந்த ஏயார்பாட்ஸ்தான் அவள் அவனுக்காக வாங்கியிருக்க, நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொண்டவாறு அவளை நோக்கி ஓடியவன், "ஆரு..." என்றழைத்து அவளின் முழங்கையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.
அவன் இழுத்த வேகத்தில் அவனின் மார்பில் அவள் மோதி நிற்க, தன்னவளின் நாடியைப் பற்றி ஹர்ஷத் தன் முகம் நோக்கி நிமிர்த்த, அவனை மூக்கு விடைக்க முறைத்துப் பார்த்தாள் ஆராதியா.
"விடுடீ, சாரி! இனிமே இப்படி பண்ண மாட்டேன் ப்ராமிஸ்!" என்று ஆராதியாவை தன்னிரு கரங்களால் வளைத்தவாறு ஹர்ஷத் விழிகளை சுருக்கி கெஞ்சலாக சொல்ல, "இந்த அஞ்சு வருஷத்துல இந்த வசனத்தை மட்டும் ஒரு ஐம்பதாயிரம் தடவை கேட்டுட்டேன்" என வெடுக்கென்று சொன்னவள் அவனின் பிடியிலிருந்து விலக முயற்சிக்க, அவன் விட்டால்தானே!
"ப்ராமிஸ்ஸா இனி பண்ண மாட்டேன், என்னை விட்டு போகாத ஆரும்மா" என்ற ஹர்ஷத்தின் வார்த்தைகளில் வழக்கம் போல் தன் கோபத்தை விட்ட ஆராதியா, உதட்டை சுளித்தவாறு முகத்தை திருப்பிக்கொள்ள, அவளுடைய கன்னத்தில் அழுந்த முத்தத்தைப் பதித்தான் அவன்.
அவனின் முத்தத்தில் மொத்தமாக உருகிப்போனவளாக மெல்ல அவள் இதழ்களை விரிக்க, அவளின் தாடையைப் பற்றி தன் முகம் நோக்கித் திருப்பியவன் அவளிதழில் தன்னிதழைப் பொருத்தப் போக, இரு இதழ்களுக்குமிடையில் விரலை வைத்துக்கொண்டாள் அவள்.
"யாராச்சும் பார்த்தா அவ்வளவுதான்" என்று அவனை தள்ளிவிட்டு விலகி நின்ற ஆராதியா, "ஈவினிங் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பேன், சீக்கிமா வந்துரு" என்று புன்னகையோடு சொல்லி முடித்து அங்கிருந்து வெளியேறியிருக்க, விழிகள் மின்ன அவளைப் பார்த்த ஹர்ஷத்தோ பறக்கும் முத்தமொன்றைக் கொடுத்துவிட்டு மீண்டும் அறைக்கே வந்தான்.
"ஸப்பாஹ்... இன்னைக்கு எப்படியோ சமாளிச்சாச்சு!" என்று ஹர்ஷத் கட்டிலில் பொத்தென்று விழுந்து பெருமூச்சு விட, அவனெதிரே முறைத்துப் பார்த்தவாறு வந்து நின்றான் யுகன்.
அவனின் முறைப்பிற்கான காரணம் புரியாமல் இவன் விழிக்க, "உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா, உன்னை போய் எப்படிதான் அவ லவ் பண்றாளோ!" என்று யுகன் பொறுமிக்கொள்ள, "எனக்கு என்னடா குறைச்சல்?" என்று தன் காலரை தூக்கி விட்டுக்கொண்டான் மற்றவன்.
"அந்த வருண் கூட அவ சாதாரணமா பேசுறதையே உன்னால அக்செப்ட் பண்ணிக்க முடியல, ஆனா நீ அவள காதலிச்சிக்கிட்டே ஏகப்பட்ட பொண்ணுங்க கூட ஃப்ளர்ட் பண்ணிக்கிட்டும் ரொமேன்ஸ் பண்ணிக்கிட்டும் திரியுற. உனக்கு தியா சலிச்சுட்டான்னா அவள விட்டுட்டு இவளுங்க கூட சுத்த வேண்டியதுதானேடா, ஏன்டா அந்த பொண்ண ஏமாத்திக்கிட்டு இருக்க?" என்று யுகன் கோபமாகக் கேட்க, "யுகா, இதெல்லாம் ஜஸ்ட் ஃபன் டியூட். கல்யாணம் வரைக்கும்தான் எல்லாமே, என்ட், என்னால ஆருவ விட எல்லாம் முடியாது. ஐ ட்ரூலி லவ் ஹெர். எனக்கு அவ வேணும்" என்றான் ஹர்ஷத் அழுத்தமாக.
"அப்போ ஏன்டா மத்த பொண்ணுங்க கூட இருக்க.. அய்யோ! உன் கூட பேசினா எனக்குதான் பைத்தியம் பிடிக்கும். நீ வேணா பாரு, இந்த பொண்ணுங்க சவகாசத்தாலயே நீ பெரிய பிரச்சனையில சிக்க போற" என்ற யுகனின் வார்த்தைகள் கூடிய சீக்கிரம் பழிக்கப் போவதை ஆடவன் அப்போது அறிந்திருக்கவில்லை.
ஸ்கை சேனல் நிறுவனம்,
"ஐ திங் கண்டிப்பா இந்த கொலைய பண்ணவன் சாதாரண மனநிலையில இருந்திருக்க மாட்டான். இறந்தவன் யாரு என்னன்னு டிபார்மென்ட்ல கண்டுபிடிச்சிட்டாங்களா?" என்று வருண் லாப்டாப்பில் தான் எடுத்த புகைப்படங்களை எடிட் செய்தவாறுக் கேட்க, "ஆமா, பேரு கரண். ஐடிலதான் வர்க் பண்றான். நிச்சயம் பண்ணி இருக்காங்க, இன்னும் சிக்ஸ் மன்த்ல மேரேஜ்னு கேள்விப்பட்டிச்சு" என்று தான் திரட்டிய தகவல்களை அலைப்பேசியை நோண்டியவாறு சொன்னாள் ஆராதியா.
"இப்போ எல்லாம் ஆம்பிளைங்களுக்கும் இந்த ஊருல பாதுகாப்பு இல்லாம போயிருச்சு. ச்சு ச்சு ச்சு... நாளைக்கு பத்திரிகையில ஹெட்லைனே இதுதான்" என்று பேசிக்கொண்டே சென்றவன் அப்போதுதான் அந்த உடலின் நெஞ்சில் சிலுவைப் போல் கிழிக்கப்பட்டிருந்ததை கவனிக்க, அவனுடைய விழிகள் சந்தேகத்தில் சுருங்கின
"ஏய் தியா, டு யூ நோட்டிஸ் தெட்! இந்த க்ரோஸ் சிம்பிள்ள கவனிச்சியா, கத்தியாலயே கிழிச்சிருக்க மாதிரி இருக்கு. சாதாரணமா கொலை பண்றதா இருந்தா சும்மா கொன்னு போட்டுட்டு போயிருக்கலாமே! ஆனா, இது ரொம்ப டிஃபெரன்ட்டா இருக்கு" என்று அவன் தீவிர முகபாவனையோடு சொல்ல, அதை விழிகளை சுருக்கி கூர்மையாகப் பார்த்தவள், "சம்திங் ஃபிஷி" என்றாள் யோசித்தவாறு.
திடீரென ஆராதியாவின் அலைப்பேசி அலற, திரையைப் பார்த்தவள் "ஓகே வருண், நீ எடிட் வர்க் முடிஞ்சதும் கெளம்பு. வெளியில ஹர்ஷா வெயிட் பண்றான், நான் கெளம்புறேன்" என்று படபடவென சொல்லிவிட்டு தன் பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு அவள் வெளியேறப் போக, வருணின் முகமோ சட்டென இறுகியது.
"ஏன் தியா, அவன பத்தி எல்லாமே தெரிஞ்சுமா அவன் பின்னாடி இன்னும் சுத்திட்டு இருக்க?" என்று நக்கலாக அவன் கேட்க, அவனின் வார்த்தைகளில் வெடுக்கென்று திரும்பி அவனைப் பார்த்தாள் ஆராதியா.
"ஆமா, அவன பத்தி எல்லாமே தெரியும். அதனாலதான் அவன் கூடவே இருக்கேன்" என்று அழுத்தமாக சொல்லிவிட்டு அங்கிருந்து அவள் நகர்ந்திருக்க, மூக்குடைக்கப்பட்ட கோபத்தில் மேசை மீதிருந்த பேப்பர் வெயிட்டை ஆவேசமாக தூக்கியெறிந்தான் வருண்.
ஆஃபீஸிலிருந்து வெளியேறிவள் தூரத்திலிருந்தே அவனை ரசித்துக்கொண்டு அவனை நோக்கி செல்ல, பைக் சைட் கண்ணாடியில் தலைமுடியை கலைத்து வாரிக்கொண்டு பப்புள் கம்மை சப்பியவாறு அமர்ந்திருந்தான் ஹர்ஷத்.
தலைமுடி ஸ்பைக் விட்டு காதில் கடுக்கன் இடது கரத்தில் கைக்காப்பு என ஷர்ட் கையை மடித்துவிட்டவாறு அமர்ந்திருந்தவனை ஒருகணம் திரும்பிப் பார்த்துவிட்டுதான் சென்றனர் அங்கிருந்த பெண்களும்.
இவளோ அவன் பின்னால் சென்று நிற்க, ஆராதியாவோடு வேலை செய்யும் ரியாவோ ஹர்ஷத்தை நெருங்கி வந்து, "ஹாய் ஹர்ஷா, என்ன இந்த பக்கம், எனக்கு இந்த பிக்கப் ட்ரோப் சர்வீஸ் பண்ண மாட்டீங்களா?" என்று குழைந்தவாறுக் கேட்க, "அதுக்கென்ன பேபி, தாராளமா பண்ணலாமே! எப்போ ஆரம்பிக்கலாம்?" என்று இவனும் அவளை அப்பட்டமாக ரசித்தவாறு சொல்ல, இங்கு பின்னாலிருந்த ஆராதியாவுக்குதான் பிபி எகிறியது.
"அப்படியா! உனக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லல்ல தியா?" என்று அந்த பெண் போட்டுக் கொடுத்துவிட்டு ஹர்ஷத்தை நக்கலாகப் பார்க்க, அதிர்ந்து விழித்தவன் வேகமாகத் திரும்பிப் பார்த்தான்.
ஆராதியாவோ மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு முறைக்க, ரியாவை முறைத்துப் பார்த்தவன் வண்டியிலிருந்து இறங்கி தோப்புக்கரணம் போட ஆரம்பிக்க, 'இவனை எல்லாம் திருத்தவே முடியாது' என்று சலிப்பாக விழிகளை உருட்டினாள் அவள்.
அதேநேரம் நடந்த கொலையைப் பற்றி தொலைக்காட்சி சேனல்களில் ஓடும் பரபரப்பான செய்திகளைப் பார்த்திருந்த அந்த உருவத்தின் இதழ்கள், "யூ கான்ட் ஃபைன்ட் மீ!" என்று அழுத்தமாக சொல்லி கேலியாக வளைந்தன.
"அம்மா, கதவ திற!" என்ற மகளின் குரலில் வேகமாக கதவைத் திறந்த லலிதா, "மன்னிச்சிரும்மா, சரியா காதுல விழல" என்று விழிகளை சுருக்கி சொல்ல, சலிப்பாக விழிகளை உருட்டினாள் ஆராதியா.
"இன்னுமா உங்க செல்ல பொண்ணு வீட்டுக்கு வரல?" என்று அவள் சற்று கோபமாகக் கேட்க, நேரத்தைப் பார்த்த லலிதாவுக்கு ஆராதியாவிடம் என்ன பதில் சொல்லி சமாளிப்பதென்றே தெரியவில்லை.
"ஃப்ரென்ட் வீட்டுக்கு போறேன்னு தான் சொன்னா, இப்போ வந்துடுவா. நீ மொதல்ல வந்து சாப்பிடு" என்று அவர் சொல்ல, லேசாக முகம் கை காலை கழுவி விட்டு அவள் தரையில் அமர, உணவை எடுத்து வைத்தார் லலிதா.
"தியாம்மா, இந்த மாசம் வாடகை கட்டணும். அந்த ஹவுஸ் ஆனர் வந்து கேட்டுட்டு போனாரு" என்று அவர் யோசனையோடு இழுக்க, புருவத்தை நெறித்து யோசித்தவளோ கேலன்டரில் சம்பள திகதியைதான் பார்த்தாள்.
"இன்னும் இரண்டு நாள்ல கொடுக்குறேன்னு சொல்லும்மா" என்று அவள் சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பிக்க, அப்போதுதான் ஏதோ ஞாபகம் வந்தவராக, "ஆங் தியா, உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். அந்த பக்கத்து வீட்டு கீதா அக்கா இருக்காங்கல்ல, அவங்க தூரத்து சொந்தக்கார பையனாம். நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி ரொம்ப நல்ல பையன்னு சொன்னாங்க. நீ சம்மதிச்சா பேசி முடிச்சிடலாம்" என்று விஷயத்தை சொல்லி முடிக்க, விழிகளை மட்டும் உயர்த்தி தன் தாயைப் பார்த்தாள் அவள்.
"அம்மா, எல்லா தெரிஞ்சும் நீ இப்படி பேசுற. நான் ஹர்ஷத்த காதலிக்கிற விஷயம் உனக்கு நல்லாவே தெரியும்" என்று ஆராதியா அழுத்தமாக சொல்ல, "அந்த பையன் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருவான்னு தோனல தியா, பெரிய இடத்து பையன். இன்னும் வரைக்கும் அவங்க வீட்டால வந்து ஒரு வார்த்தை கூட பேசல. நாம போய் பேசலாம்னு சொன்னா அதையும் வேணாம்னு சொல்ற" என்று கடுப்பாக சொன்னார் லலிதா.
அவளுக்கு தன் அம்மா சொல்ல வருவது நன்றாகவே புரிந்தது. ஆனால், அவளும் என்னதான் செய்வாள்! தன்னவன் பொறுப்பில்லாமல் சுற்ற அவளாலும் என்னதான் செய்ய முடியும்?
"நான் ஹர்ஷத்கிட்ட பேசி பார்க்குறேன்ம்மா, கூடிய சீக்கிரம் அவங்க வீட்டுல பேச சொல்லி..." என்று அவள் யோசித்தவாறு இழுக்க, "எனக்கென்னவோ அவங்க உன்னை ஏத்துப்பாங்கன்னு தோனல" என்ற தாயின் வார்த்தைகளில் ஆராதியா பாவமாக முகத்தை வைத்துக்கொண்டாள்.
அதேநேரம் அவர் சொன்னது போல் ஹர்ஷத்தின் வீட்டில் பெரிய பட்டிமன்றம்தான் நடந்துக்கொண்டிருந்தது. இரண்டு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பார்கள் போல!
குட்டி மாளிகை போல் அத்தனை பெரிய ஆடம்பரமான போர்டிகாவில் தன் பைக்கை நிறுத்திய ஹர்ஷத், சாவியை விரலில் சுழற்றியவாறு வீட்டுக்குள் நுழைய, அங்கு அவனுக்காகவே காத்திருப்பது போல் அமர்ந்திருந்தார் அவனுடைய தந்தை மானவ். அந்த ஊரிலேயே பிரசித்து பெற்ற உயர்நீதிமன்ற வக்கீல்.
"வாடா, இப்போதான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா? ஐ அம் வெர்ரி டிஸப்பாய்ன்ட்மென்ட் வித் யூ ஹர்ஷா. இப்போ எல்லாம் உன் நடவடிக்கை கொஞ்சம் கூட சரியில்ல. என்னடா இதெல்லாம்?" என்று அவர் கத்திக்கொண்டே போக, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு தரையை பார்த்தவாறு நின்றிருந்தானே தவிர ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை அவன்.
"ஒருவேள அந்த பொண்ணு சொல்லி கொடுத்தாளா, வீட்டுக்கு போகாதன்னு. இந்த மாதிரி பொண்ணுங்களுக்கு எல்லாம் இப்போ இதான் வேலையாம்" என்று காஃபியை எடுத்து வந்தவாறு மஞ்சுளா சொல்ல, அவனோ விழிகளை உயர்த்தி தன் தாயை முறைத்துப் பார்க்க, சரியாக மாடிப்படிகளில் இறங்கி வந்தான் அபிமன்யு.
"மாம், இப்போ எதுக்கு ஆருவ பத்தி தப்பா பேசுறீங்க. அவ ஒன்னும் எனக்கு எதுவும் தப்பா சொல்லி தரதில்ல. பொறுப்பா இருன்னுதான் சொல்றா. சும்மா சும்மா அவள ஏதாச்சும் சொல்லிட்டே இருக்காதீங்க" என்று ஹர்ஷத் பொறுமிக்கொள்ள, "பார்த்தீங்களாங்க, இப்போவே அந்த பிச்சைக்காரிக்கு வக்காலத்து வாங்குறான். நம்ம ஸ்டேட்டஸ் என்ன, அவ தகுதி என்ன... போயும் போயும் ச்சே!" என்று முகத்தை அஷ்டகோணலாக வைத்தார் அவர்.
ஹர்ஷத்திற்கு கோபம் உச்சகட்டத்திற்கு எகிறியது. கை முஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்தியவன், "மாம், யூ க்ரோஸ் யூவர் லிமிட்ஸ்" என்று பற்களைக் கடிக்க, "அவ சொல்றதுல என்னடா தப்பு இருக்கு. நம்ம தகுதிக்கு கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாத வேலையதான் நீ பார்த்துட்டு இருக்க. எனக்குன்னு சொசைட்டில ரொம்ப நல்ல பேர் இருக்கு. அதை நீயே கெடுத்துருவ போல. ஒருவேள, அதை கெடுக்குற மாதிரி ஏதாச்சும் பண்ணேன்னா அவ்வளவுதான்" என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டினார் மானவ்.
ஹர்ஷத்திற்கு பொறுமை காற்றில் கொஞ்சம் கொஞ்சமாக பறந்து செல்ல, அதற்குமேல் அங்கு நிற்க பிடிக்காமல் நகரப் போனவன், "ஆருவ பத்தி நீங்க பேசுறத எப்போவும் பொறுமையா கேட்டுட்டு இருக்க மாட்டேன், நிலையில்லாத பணத்தை நம்பி உண்மையான காதல என்னால விட முடியாது" என்று கத்தி விட்டு நகர, "சூப்பர் ப்ரோ, இந்த வசனத்தை ஆட்டோ பின்னாடி எழுதலாம் போலயே!" என்று மாடிப்படிகளில் நின்றுக்கொண்டு கைத்தட்டினான் அபி.
"ச்சே!" என்று சலித்துவிட்டு மஞ்சுளா அங்கிருந்து நகர்ந்துவிட, சகோதரனின் கேலியில் சிரித்துவிட்டு அறைக்கு வந்தவனோ தொப்பென்று கட்டிலில் விழுந்தான்.
அடுத்தகணமே அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. "ஹெலோ.." என்று திரையைக் கூட பார்க்காமல் அவன் அழைப்பையேற்று பேச, "ஹாய் ஹர்ஷா, திஸ் சன்டே ஒரு பார்ட்டீ இருக்கு. ஷெல் வீ..." என்று குழைந்தவாறு கேட்டாள் ப்ரீத்தி.
"ஏய் ப்ரீத்தி நீயா! அதுக்கென்ன வந்துடலாமே. ஆமா நீ என் கூட வரேன்னு என் தம்பி அபிக்கு தெரியுமா என்ன! இல்லை, அவன் ஃப்ரென்டு என் கூட பார்ட்டீக்கு வரணும்னு ரிக்வஸ்ட் பண்றாளே அதான்..." என்று இவன் கேலியாகக் கேட்க, "அவன் ஃப்ரென்ட்டுன்னு அவன் அண்ணன கரெக்ட் பண்ண கூடாதுன்னு இருக்கா என்ன?" என்று கேட்டுவிட்டு அவள் அழைப்பைத் துண்டிக்க, உடனே தன் அலைப்பேசி கேலன்டரில் அந்த நாள் நடக்கப் போகும் சம்பவத்தை அறியாது திகதியை குறித்துக்கொண்டான் ஹர்ஷத்.
அடுத்தநாள்,
"இந்த மீன் குஞ்ச பொறிச்சு சாப்பிடலாமா என்ன?" என்று யுகன் வளர்க்கும் மீன் குஞ்சு தொட்டியை சுற்றி சுற்றி பார்த்தவாறு ஹர்ஷத் கேட்க, "கொன்னுடுவேன் உன்னை" என்று அவனை முறைத்துப் பார்த்த யுகன், "இங்க ஒரு அரை மென்டல் நந்து, நான் உன்கிட்ட அப்பறமா பேசுறேன்" என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்.
"டேய் யாருடா அந்த மோனிகா, உன்னை தேடி காலையிலயே ரூமுக்கு வந்தா. என் ரூம் நம்பர் அவளுக்கு எப்படிடா தெரியும்?" என்று இவன் கோபமாகக் கேட்க, "ஓ ஷீட்! நெக்ஸ்ட் ஃப்ளாட்ல இருக்குற பொண்ணுடா. அன்னைக்கு டீ போட சர்க்கரை இல்லன்னு சர்க்கரை கேக்க போயிருந்தேன். அதான் அந்த சர்க்கரைய திருப்பி கொடுக்க வந்திருப்பா" என்று அசடுவழிந்தவாறு சொன்னான் மற்றவன்.
தன் தோழனை ஒற்றைப் புருவத்தை தூக்கி முறைத்துப் பார்த்தவனுக்கு 'இவனை என்ன செய்தால் தகும்?' என்றுதான் தோன்றியது.
"எது... டீக்கு சர்க்கரை இல்லன்னு நீ அடுத்த ஃப்ளாட்டுக்கு போயிருக்க. ஏன் இந்த ஃப்ளாட்ல வேற வீடு இல்லையா இல்லன்னா வேற வீட்டுல சர்க்கரை இல்லையா?" என்று யுகன் குறுக்குக் கேள்வி கேட்க, "விடு மச்சான், இதுக்கு போய் சீஐடீ மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டு" என்று அவனின் தோளை சுற்றி கரத்தைப் போட்டவன் வாசலைப் பார்க்க, அங்கு கதவில் சாய்ந்து தன்னவனையே பார்த்தவாறு நின்றிருந்தாள் ஆராதியா.
"ஹிஹிஹி... ஆரு நீயா, நீ எப்போ வந்த?" என்று ஹர்ஷத் அப்பட்டமாக அசடுவழிய, "நீ சர்க்கரை வாங்க போனியே அப்போவே வந்துட்டேன்" என்று முறைத்தவாறு சொன்னவள் வேகமாக வந்து அவனிடம் ஒரு கடிதத்தை நீட்ட, அதை புரியாமல் வாங்கிப் பார்த்தான் ஹர்ஷத்.
"என்ன இது?" என்று அவன் கேட்டதும், "ஆஃபர் லெட்டர், என் ஃப்ரென்டுக்கு தெரிஞ்ச கம்பனி ஒன்னுல ரொம்ப ரிக்வஸ்ட் பண்ணி எடுத்திருக்கேன். நாளைக்கு இன்டர்வியூ இருக்கு, எப்படியாச்சும் இந்த வேலையில செலக்ட் ஆகிரு போதும்" என்று ஆராதியா பேசிக்கொண்டே போக, அவனுடைய முகமோ அஷ்டகோணலாக மாறிக்கொண்டே போனது.
"தியா, இன்னுமா இந்த உலகம் இவன நம்புது?" என்று யுகன் கேலியாகக் கேட்டு சிரிக்க, தோழனை முறைத்துப் பார்த்த மற்றவன், "இப்போ என்ன இந்த வேலைக்கு போகணும், அவ்வளவுதானே! நான் போறேன் பேபி" என்று தீவிர முகபாவனையோடு சமாளித்தான்.
ஆராதியாவும் தலையாட்டிவிட்டு, "சரி அப்போ நான் வரேன், கீழ வருண் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கான். முக்கியமான கேஸ் போகுது அதை பத்தி டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண மோர்ச்சரிக்கு போறோம். நாம ஈவினிங் பார்க்கலாம்" என்றுவிட்டு வெளியேறப் போக, இவனுக்கோ காதில் புகை வராத குறைதான்.
ஆராதியாவும் ஹர்ஷத்துடனே அந்த ஃப்ளாட்டிலிருந்து கீழே இறங்கிச் செல்ல, ஆராதியாவுக்காக காத்துக்கொண்டிருந்த வருணுக்கோ ஹர்ஷத்தை பார்க்கும் போது அத்தனை எரிச்சல். கல்லூரியில் ஹர்ஷத்துடன் படித்தவன்தான், அப்போதிலிருந்தே அவனுக்கும் இவனுக்கும் ஏட்டிக்கும் போட்டி.
"ஹாய் ஹர்ஷா, பார்க்க ரொம்ப நல்லா இருக்குற மாதிரி தெரியுது. பேக்ரவுண்ட் அப்படியே, அப்போ என்ன கஷ்டம் தெரிய போகுது?" என்று வருண் குத்திக் காட்டுவது போல் பேச, ஹர்ஷத்தோ கை முஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டான் என்றால், வருணை முறைத்துப் பார்த்தாள் அவள்.
"டோன்ட் ஜட்ஜ் அ புக் பை இட்ஸ் கவர் வருண், நீ என் முன்னாடி இப்படி பேசுறத நான் பார்த்துட்டு இருக்க மாட்டேன்" என்று வருணுக்கு பதிலடி கொடுத்துவிட்டு அவள் அவன் பின்னால் ஏறிக்கொள்ள, ஹர்ஷத்தோ தன்னவளைப் பார்த்து காலரை தூக்கி விட்டுக்கொண்டான் என்றால், உள்ளுக்குள் நொடிந்துக்கொண்டவாறு வண்டியை செலுத்தினான் மற்றவன்.
இருவரும் மோர்ச்சரியின் முன் நிற்க, அங்கு சில போலீஸ் அதிகாரிகள் வாசலில் கூடியிருக்க, யாருக்கோ அழைப்பதும் மோர்ச்சரியை எட்டிப் பார்ப்பதுமாக நின்றிருந்தாள் ஆராதியா.
திடீரென தான் அழைத்த எண் ஏற்கப்பட, "ஹெலோ ப்ரணவ், நான் வெளியிலதான் வெயிட் பண்றேன்" என்று இவள் சொல்லி முடிக்க, அழைப்பைத் துண்டித்த ப்ரணவ் அடுத்த சில நிமிடங்களில் மோர்ச்சரியிலிருந்து வெளியில் வந்தான்.
"ஹாய் தியா, என்ன விஷயம்?" என்று அவன் கேட்க, போலீஸ் உடையில் இருந்தவனை மேலிருந்து கீழ் பார்த்தவாறு, "அது... இந்த கேஸ் பத்தி சில டீடெயில்ஸ் தேவைப்படுது. அதான்... கொலையாளி யாருன்னு கண்டுபிடிச்சாச்சா என்ன?" என்று ஆர்வமாகக் கேட்டாள் ஆராதியா.
"நோ தியா, ஒரு சின்ன தடையம் கூட கிடைக்கல. ரொம்ப பக்காவா இந்த மர்டர பண்ணியிருக்கான். இறந்த பையனுக்கு எதிரிங்கன்னு யாருமே கிடையாது, அவனோட சம்மந்தப்பட்ட நிறைய பேர விசாரிக்கதான் செய்றோம். எதுவுமே கண்டுபிடிக்க முடியல. கொலைகாரனோட நோக்கம் என்ன, நெக்ஸ்ட் அவன் யாரை கொல்ல ப்ளான் பண்ணியிருக்கான் எதுவுமே தெரிஞ்சிக்க முடியல" என்று அவன் சொல்லி முடிக்க, தீவிரமாக யோசித்தாள் அவள்.
"அப்போ இது ஏதாச்சும் ஒரு நோக்கத்தோட பண்ண கொலையா இல்லன்னா நோக்கமே இல்லாம பண்ண சைக்கோ கொலையா?" என்று வருண் தன் சந்தேகத்தைக் கேட்க, "பண்ணியிருக்குற விதம் கண்டிப்பா நார்மல் மென்டேலிட்டில இருக்குறவன் பண்ற மாதிரி தெரியல, பாஸ்மார்ட்டம் பண்ண டாக்டரே அதைதான் சொல்றாரு. ஆனா, அதை வச்சு எதையும் உறுதியா சொல்ல முடியாது" என்றான் ப்ரணவ் தீவிரமாக.
"தேங்க் யூ சொ மச் ப்ரணவ், கண்டிப்பா இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கும்" என்று உறுதியாக சொல்ல, "நமக்குள்ளயே இருக்கணும், என்ட் என்ன ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம கேளு" என்று அழுத்தமாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் அந்த போலீஸ் அதிகாரி.
"என்ன தியா, இந்த கேஸ்ல எல்லாமே மிஸ்ட்ரியா இருக்கு" என்று வருண் யோசனையோடு இழுக்க, எதேர்ச்சையாகத் திரும்பிய தியாவின் விழிகளுக்கு சிக்கினான் அபிமன்யு.
"இது ஹர்ஷத்தோட தம்பியாச்சே, இவன் இங்க என்ன பண்றான்?" என்று வாய்விட்டே சொன்னவாறு ஆராதியா அவனின் அருகே செல்ல, சட்டென திரும்பிய அபி அங்கு இவளை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
"நீங்களா? நீங்க இங்க..." என்று அவன் பதற்றமாகக் கேட்க, "நானேதான், நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க அபி?" என்று அவள் கூரிய பார்வையோடுக் கேட்க, அவனோ மோர்ச்சரியைதான் பார்த்தான்.
"இறந்தது என்னோட ஃப்ரென்ட்தான் அண்ணி, அதான் பார்க்கலாம்னு வந்தேன்" என்று அவன் சொல்ல, "ஓ ரியலி! ரொம்ப க்ளோஸ் ஃப்ரென்டா அபி, இல்லை ஏன் கேக்குறேன்னா... இதை யாரு பண்ணியிருப்பாங்கன்னு உனக்கு யார் மேலயாச்சும் சந்தேகம் இருக்கா?" என்று அவள் தன் சந்தேகத்தைக் கேட்க, அவனோ நாடியை நீவி விட்டவாறு யோசித்தான்.
"காலேஜ் முடிஞ்சதுலயிருந்து அவ்வளவா நான் இவங்க கூட பழகுறது இல்லை. அப்பப்போ டூர் போறதுன்னா மட்டும் இவங்க கூட பழகுவேன். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவ்வளவா இவனுக்கு விரோதிங்கன்னு யாரும் கிடையாது. யார் கூடவும் அதிகமா பிரச்சனை பண்ணவும் மாட்டான். சத்தியமா இவனுக்கு இப்படி ஒரு நிலைமையான்னு என்னால ஏத்துக்கவே முடியல, ரொம்ப பயமா இருக்கு" என்று அபி தோழனை பிரிந்த மன வேதனையோடு சொல்ல, ஆராதியாவுக்கும் அவனின் மனநிலையை நன்றாகவே புரிந்துக்கொள்ள முடிந்தது.
அதன் பின் சிறிதுநேரம் பேசி விட்டு அவள் ஆஃபீஸுக்கு வருணோடு சென்று விட, இங்கு யுகனோ அவசர அவசரமாக வெளியில் செல்ல தயாராகிக்கொண்டிருக்க, அவனையே பார்த்தவாறு சிப்ஸ்ஸை கொறித்துக்கொண்டிருந்தான் ஹர்ஷத்.
"என்னடா பலமா தேடிட்டு இருக்க?" என்று அவன் புரியாமல் கேட்க, "என்னோட பைக் கீய காணோம்டா, அர்ஜென்ட்டா போகணும், நந்து எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பா. நீ வேணா எனக்கொரு ஹெல்ப் பண்ணு மச்சான், உன் பைக்க கொடுக்குறியா?" என்று யுகன் கேட்க, நாடியைத் தட்டி யோசித்தான் மற்றவன்.
"எனக்கு கொடுக்குறதுல எந்த ஆப்ஜெக்ஷனும் இல்லைடா, பட் நானும் ஆருவ பார்க்க போகணும்" என்று ஹரி தயக்கமாக இழுக்க, "அப்போ என்னை நான் சொல்ற இடத்துல ட்ரோப் பண்ணிரு அது போதும்" என்றான் யுகன் முடிவாக.
ஹர்ஷத்தும் சரியென யுகனை அழைத்துக்கொண்டு அவன் சொன்ன இடத்திற்கு செல்ல, அங்கு வண்டியை நிறுத்தியவனுக்கு ஏனோ அந்த இடமே சரியாக புலப்படவில்லை.
அதிகமாக பராமரிக்கப்படாத வீடு அது. காடு போல் சுற்றி மரங்கள் வளர்ந்திருக்க, இருளடைந்து தென்பட்டது அந்த இடம். ஏனோ ஹர்ஷத்திற்கு அந்த இடத்தைப் பார்க்கும் போதே மனம் நெருடலாக இருக்க, புருவ முடிச்சுகளோடு தன் தோழனை திரும்பிப் பார்த்தான்.
"என்னடா இது, உன் நந்து இந்த மாதிரி ஒரு இடத்துலயா இருக்கா? பார்க்கவே பேய் படத்துல வர வீடு மாதிரி இருக்கு" என்று அவன் சொல்ல, "பாவம்டா, அவ தங்கச்சி இறந்ததுலயிருந்து அவ நார்மலாவே இல்லை. நான்தான் அவளுக்குன்னு இருக்கேன். சீக்கிரமா அவள சரி பண்ணணும்" என்றுவிட்டு வண்டியிலிருந்து இறங்கி உள்ளே சென்றான் யுகன்.
ஹர்ஷத்தோ அதற்குமேல் அங்கு நிற்க பிடிக்காமல் மின்னல் வேகத்தில் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு வண்டியை பறக்க விட, அதேநேரம் அந்த இருட்டு அறையினுள் கெமிக்கல் நீரில் ஒருவனுடைய புகைப்படத்தை கழுவி எடுத்து சுவற்றில் ஒட்டிய அந்த உருவமோ தன் அடுத்த குறி என்பது போல் அதை வட்டமிட்டுக்கொண்டது.
"இதெல்லாம் ரொம்ப டூ மச்டா, உனக்காகதான் தியா கஷ்டப்பட்டு ஒரு வேலைக்கு அர்ரேன்ஜ் பண்ணியிருந்தா. ஆனா நீ இன்டர்வியூக்கு போகாம ஓடி வந்திருக்க. இடியட்!" என்று யுகன் காதைக் கிழிக்கும் பப்பின் பாடல் ஒலியை மீறி தொண்டைக் கிழிய கத்த, மதுக்குவளையை வாயில் இறக்கிய ஹர்ஷத்தோ அவனை முறைத்துப் பார்த்தான்.
"அதெல்லாம் ஆஃபீஸுக்கு போனேன், இன்டர்வியூ நடக்குற இடத்துக்கு போய் பார்த்தா அங்க ஜெனிஃபர் மச்சான், என் எக்ஸ்ஸு... அவ அப்பன் கம்பனி போல, என் ப்ரெஸ்டிஜ விட்டுக்கொடுத்து அவளுக்கு கீழ வேலை பார்க்குறதா நெவர்!" என்று அவன் காலரை தூக்கி விட்டுக்கொள்ள, "நீயெல்லாம் குடும்பத்தை நடத்துவன்னு உன்னையெல்லாம் ஒருத்தி நம்பிட்டு இருக்கா பாரு.. அவள சொல்லணும்" என்று வெளிப்படையாக தலையிலடித்துக்கொண்டான் மற்றவன்.
ஹர்ஷத்தோ அவன் பேசுவதை எல்லாம் கண்டுகொள்ளாது நான்கைந்து மது க்ளாஸை வாயில் சரித்துவிட்டு மேடையில் ஆடிக்கொண்டிருந்த கூட்டத்திற்குள் நுழைந்து அங்கிருக்கும் பெண்களோடு உரசிக்கொண்டு நடனமாட, சரியாக பப்பிற்குள் தன்னவனை தேடி நுழைந்தாள் ஆராதியா.
முகத்தை அஷ்டகோணலாக வைத்துக்கொண்டு சுற்றி முற்றி பார்த்தவள், 'ச்சீ... இதுங்கள எல்லாம் வீட்டுல கேக்க மாட்டாங்களா. தண்ணீ தெளிச்சு விட்ட மாதிரி விட்டுட்டாய்ங்க போல, இந்த ஆட்டம் ஆடுதுங்க' என்று மனதிற்குள் நினைத்தவாறு கூட்டத்திற்கு நடுவே நுழைந்தாள் அவள்.
தன் மேல் உரசுவது போல் வருபவர்களிடமிருந்து ஒதுங்கி ஒட்டாமல் செல்பவளின் விழிகள் தன்னவனைத் தேடி அலைய, சரியாக அவளுடைய விழிகளுக்குச் சிக்கினான் யுகன்.
"அண்ணா..." என்ற குரலில் விழிகளை சுருக்கி யோசித்தவாறு திரும்பிப் பார்த்த யுகனுக்கு அங்கு ஆராதியாவைப் பார்த்ததும் பக்கென்று இருக்க, "நீ இங்க என்னம்மா பண்ற?" என்று கேட்டான் அதிர்ந்த குரலில்.
அவளோ அப்படியே திரும்பி அங்கு இரண்டு பெண்களோடு ஒட்டி உரசி நடனமாடிக்கொண்டிருந்த ஹர்ஷத்தைப் பார்க்க, வேகமாக தன் நண்பனை நோக்கி ஓடினான் மற்றவன்.
"டேய் ஹர்ஷா... ஹர்ஷா..." என்ற தன் நண்பனின் குரலில் தன்னோடு ஆடிக்கொண்டிருந்த பெண்களிடமிருந்து பார்வையைத் திருப்பி எட்டி யுகனைப் பார்த்தவன், ஆடுவதை நிறுத்தாமல் இரு புருவங்களை ஏற்றி இறக்கி என்னவென்று கேட்க, அவனோ பெருவிரலால் தன் பின்னே காண்பித்தான்.
புருவ முடிச்சுகளோடு அவனின் பின்னே எட்டிப் பார்த்த ஹர்ஷத்திற்கு அடுத்தகணம் விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிய, தலையை சொரிந்து அசடுவழிந்தவாறு தன்னவளை நோக்கி வரப் போக, "ச்சீ..." என்று முகத்தை சுளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறப் போனாள் ஆராதியா.
"ஏய் ஆரு... ஸ்டாப்! ஆரு..." என்று அவள் பின்னே ஹர்ஷத் செல்ல, அதேநேரம் நன்றாக மது அருந்தியிருந்த ஒருவனோ ஆராதியாவின் கரத்தைப் பற்றி, "லெட்ஸ் டான்ஸ் பேபி?" என்று போதையில் குளற ஆரம்பிக்க, இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை அவள்.
"லீவ் மை ஹேன்ட்... இடியட், விடுடா என்னை!" என்று இவள் கத்த, சட்டைக் கையை மடித்து விட்டவாறு வந்த ஹர்ஷத்தோ தன்னவளின் கரத்தைப் பற்றியிருந்தவனின் முகத்திலேயே ஓங்கி குத்த, தரையில் விழுந்தவனோடு வந்திருந்த ஆடவர்களோ அவனை அடிக்க பாய்ந்தனர்.
அவனும் பதிலுக்கு அடிக்க, யுகனும் தன் நண்பனுக்காக அவர்களை அடிக்க என்று சண்டை பெரிதாக இறுதியில் அங்கு பப்பில் இருந்த பவுன்சர்ஸ் மொத்தப் பேரையும் வெளியில் துரத்தி விட, ஆராதியாவின் முன் கசங்கிய சட்டையும் முகத்தில் காயமுமாக பாவமாக நின்றிருந்தான் ஹர்ஷத்.
அவளோ மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டு நிற்க, "இப்போ எதுக்கு நீ இங்க வந்த தியா,? இந்த இடம் இப்படி தான்னு உனக்கு தான் முன்னாடியே தெரியுமே, கால் பண்ணா நானே வர போறேன்" என்று அவன் சொல்ல, யுகனோ 'க்கும்!' என்று மானசீகமாக நொடிந்துக்கொண்டான்.
"உன்னை எல்லாம் என்ன சொல்லி திட்டுறதுன்னே தெரியல, நீ திருந்த போறதும் இல்லை. உனக்கு இப்படிதான் இருக்கணும்னா நான் எதுக்குடா உனக்கு? போய் அவளுங்க கூடவே இரு, வீட்டுல இப்போ வரைக்கும் எல்லாத்தையும் சமாளிச்சுட்டு இருக்கேன். ஆனா நீ அந்த அக்கறை கொஞ்சம் கூட இல்லாம பொறுப்பே இல்லாம சுத்திட்டு இருக்க. சத்தியமா என்னால இதுக்கு மேல முடியல ஹர்ஷா. எனக்கு ஒரு உண்மைய சொல்லு, நிஜமாவே என்னை நீ காதலிக்கிறியா, இல்லன்னா இவ ஒரு பைத்தியக்காரி இவளுக்கு என்ன தெரியப் போகுதுன்னு என்னை ஏமாத்துறியா?"
என்று விழிகளில் நீர் மிதக்க ஆராதியா கேட்க, ஹர்ஷத்தோ அவளின் வார்த்தைகளில் பதறித்தான் போனான்.
வேகமாக தன்னவளை நெருங்கி அவளின் இரு கன்னங்களை தாங்கிக்கொண்டவன், "பேபி, சத்தியமா நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன்டீ, ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாத! என்னால தாங்க முடியல. உனக்கென்ன, நான் வேலைக்கு போகணும் அவ்வளவுதானே! நானே நல்ல வேலை ஒன்னு தேடி சீக்கிரமா போறேன். ப்ளீஸ் ட்ரஸ்ட் மீ ஆரு" என்று அவளின் நெற்றியோடு தன் நெற்றியை முட்டிக்கொண்டு சொல்ல, அவனின் மார்பில் கை வைத்து தள்ளி விட்டாள் அவள்.
"இதுக்கு மேலயும் உன்னை நம்ப சொல்றியா? வேணாம்.. இனி எதுவுமே வேணாம்" என்று ஆராதியா ஆக்ரோஷமாகக் கேட்க, "ப்ளீஸ் ஆரு, இனி இப்படி பண்ண மாட்டேன். ஐ அம் ரியலி சாரி! வேணாம்னு எல்லாம் சொல்லாத, எனக்கு நீ வேணும் ஆரு ப்ளீஸ்!" என்று கெஞ்சத் தொடங்கினான் ஹர்ஷத்.
அவளோ இல்லையெனும் விதமாக அழுத்தமாக தலையசைத்து விட்டு நகரப் போக, "தியா, இந்த ஒரு தடவை அவனுக்கு வாய்ப்பு கொடு. நானே அவனுக்கு வேலை தேடி கொடுக்குறேன். இனிமே பப்பு க்ளப்னு அவன் போக மாட்டான், அதுக்கு நான் பொறுப்பு" என்று தன் நண்பன் கெஞ்சுவதைப் பார்த்து பாவப்பட்டு முன்னே வந்து சொன்னான் யுகன்.
ஹர்ஷத்தோ தன்னவளை எப்படி சமாளிப்பதென்று தெரியாமல் பாவமாக முகத்தை வைத்திருந்தான்.
"அண்ணா, ஒரு வாய்ப்புதான். இதுக்கப்பறம் இந்த மாதிரி பண்ணான்னா அவ்வளவுதான். வீட்டுல வேற மாப்பிள்ளை பார்க்குறாங்க, அவங்க பார்க்குற யாரையாச்சும் நான் கல்யாணம் பண்ணிருவேன் சொல்லிட்டேன்" என்று மிரட்டுவது போல் அவள் சொன்னதும், ஆராதியாவின் கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தான் அவளவன்.
"என்னை மீறி உன்னை எவனும் நெருங்க முடியாது ஆரு, நெருங்கவும் விட மாட்டேன்" என்று அவளை தன் கை வளைவுக்குள் வைத்தவாறு விழிகளில் தீர்க்கத்தோடு அவன் சொல்ல, "உன்னை மீறி நெருங்க முடியாதுதான்" என்று அவனின் முகத்திலிருந்த காயத்தைக் காட்டி நக்கலாக சிரித்தாள் ஆராதியா.
"இது.. இதெல்லாம் வீரத் தழும்பு" என்று கெத்தாக சொன்னவன், "நீ நினைச்சா இந்த காயத்துக்கு மருந்தாகலாம்..." என்றுக்கொண்டே அவளின் இதழை நெருங்க, "நோ.. நோ ஹர்ஷா..." என்று பெண்ணவளோ தலையை பின்னே சாய்த்தாள் .
அவனோ விடாமல் அவளின் கீழுதட்டை இரு விரல்களால் பற்றி அதை நோக்கி குனிய, திடீரென அவனின் செயலை தடுப்பது போல் ஒலித்தது தியாவின் அலைப்பேசி.
அதில் வேகமாக ஹர்ஷத்திடமிருந்து அவள் பதறிக்கொண்டு விலக, 'அப்பாடா! இல்லன்னா இந்த கருமத்தையெல்லாம் நான் பார்க்க வேண்டி இருந்திருக்கும்' என்று யுகன் பெருமூச்சு விட்டுக்கொண்டான் என்றால், எரிச்சலாக விழிகளை உருட்டினான் மற்றவன்.
"ஹெலோ வருண்..." என்று ஆராதியா சொன்னதும், "ஓஹோ இவனா.. அதானே பார்த்தேன். என்னடா இன்னும் நந்தி குறுக்க வரலன்னு" என்று ஹர்ஷத் இங்கு பொறுமிக்கொள்ள, மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ!
"என்ன சொல்ற வருண், இப்போவே வரேன்" என்ற ஆராதியாவின் அதிர்ந்த குரலில் அவளை புரியாமல் பார்த்தான் அவளவன்.
"என்னாச்சு ஆரு?" என்று ஹர்ஷத் புருவ முடிச்சுகளோடு கேட்க, "ஹர்ஷா, சீக்கிரம் என்னை நான் சொல்ற இடத்துக்கு கூட்டிட்டு போ, அர்ஜென்ட்" என்று ஆராதியா பதற்றமாக சொன்னதும் உடனே பார்க்கிங் ஏரியாவிலிருந்த தன் புல்லட்டை எடுத்து வந்தான் அவன்.
அடுத்த பத்தே நிமிடங்களில் அந்த நகரத்திலுள்ள குப்பைகள் கொட்டப்படும் இடத்திற்கு முன் முகத்தை அஷ்டகோணலாக வைத்துக்கொண்டு ஹர்ஷா வண்டியை நிறுத்த, சுற்றி மக்கள் கூட்டம் பரபரப்பாக நின்றிருக்க, ஏகப்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர்.
ஃபாரன்சீக் டிபார்ட்மென்ட் ஆட்களும் வந்திருக்க, அந்த பரபரப்பான சூழலில் ஆராதியாவைப் பார்த்ததும் வேகமாக அவளை நோக்கி வந்தான் வருண்.
"தியா, அதே பெட்டர்ன்ல இன்னொரு மர்டர். ஆனா இது ஒரு பொண்ணு. பார்க்கவே முடியல உடம்பு ரொம்ப அழுகிப்போய் இருக்கு. குப்பையோட குப்பையா இருந்ததால சுத்தியிருந்தவங்களுக்கு தெரியாம போயிருக்கு" என்று அவன் சொல்லிக்கொண்டே போக, வருணோடு வேகமாக உடலை பார்க்க ஆராதியா செல்ல, அவளின் பின்னாலேயே சென்றான் ஹர்ஷா.
முதல் கொலை செய்யப்பட்டது போலவே இந்த உடலும் நெஞ்சில் சிலுவை வடிவமாக கிழிக்கப்பட்டு கொடூரமாகக் கிடக்க, ஆராதியாவுக்கோ மூச்சு வாங்க ஆரம்பித்தது.
"ஓ ஷீட்!" என்று அவன் ஆராதியாவை அணைத்தவாறு ஒருவித பயத்தோடு அந்த சிதைக்கப்பட்ட உடலை பார்த்துக்கொண்டிருக்க, வருணோ வேகமாக தன் கேமராவில் அந்த உடலையும் சுற்றியுள்ள துருப்புக்களையும் சுற்றியிருந்த சில காட்சிளையும் புகைப்படம் எடுத்துக்கொண்டான்.
"தியா, நாளைக்கு ஹெட்லைனுக்கு தேவையான ஃபோட்டோஸ் எல்லாம் எடுத்தாச்சு. ஆனா ஒன்னு, இந்த கொலைய யாரு பண்றாங்கன்னுதான் தெரியல. இன்னும் வரைக்கும் போலீஸால சின்ன க்ளூ கூட கண்டுபிடிக்க முடியலன்னா பாரேன்" என்று வருண் ஆச்சரியக் குரலில் சொல்ல, ஹரிக்கோ தான் பார்த்த காட்சியிலிருந்து வெளியிலேயே வர முடியவில்லை.
"வருண், காலையில ப்ரணவ மீட் பண்ண போகலாம். அவர்கிட்ட விசாரிச்சா ஏதாச்சும் தகவல் தெரியலாம்" என்று ஆராதியா சொல்ல, "இந்த கேஸ் பத்திதான் நீ டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிக்கிட்டு இருக்கியா ஆரு, என்னாலயே இதை பார்க்க முடியல. ஹவ் கென் யூ?" என்று அதிர்ந்த குரலில் கேட்டான் ஹர்ஷத்.
"வேலையாச்சே, இதையெல்லாம் சந்திச்சுதான் ஆகணும். என்ட் வருண், முதல் கொலைக்கும் இரண்டாவது கொலைக்கும் கண்டிப்பா ஏதோ சம்பந்தம் இருக்கு, இரண்டு கொலைய பண்ணதும் ஒரே ஆள்தான். அதை பத்தி ஏதாச்சும் தகவல் கிடைச்சா எனக்கு உடனே இன்ஃபார்ம் பண்ணு" என்று அவள் சொல்ல, அவனோஆராதியாவை அணைத்திருந்த ஹர்ஷத்தை விழிகளில் பொறாமையோடு பார்த்துக்கொண்டிருந்தான்.
ஹர்ஷத்தின் பார்வையிலும் சரியாக வருணின் பார்வை சிக்கிக்கொள்ள, அவனோ ஒற்றைப் புருவத்தை தூக்கி முறைத்துப் பார்த்தான் என்றால், வருணோ பதிலுக்கு முறைத்துவிட்டு பார்வையை திருப்பிக்கொண்டான்.
அங்கிருந்து நகர்ந்த இருவரும் செல்லும் வழியில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆராதியா நடந்த இரண்டாவது கொலையைப் பற்றி யோசித்துக்கொண்டு வந்தாள் என்றால், வருண் பார்த்தை விதத்தை தான் தீவிரமாக யோசித்துக்கொண்டு வந்தான் ஹர்ஷத்.
'ச்சே! அவன் பார்வையே சரியில்ல. வயிறெரிய நானும் ஆருவும் ஒன்னா இருக்குறத பார்க்குறான். இவன பத்தி இவ கிட்ட சொன்னாலும் நம்ப மாட்டா. இதுக்காகவே சீக்கிரமா வேலைக்கு போய் இவள கல்யாணம் பண்ணிடணும். இல்லன்னா...' என்று அவன் தனக்குள் புலம்பிக்கொண்டு வர, சில நிமிடங்களில் ஆராதியாவின் வீடும் வந்துவிட்டது.
"ரொம்ப யோசிக்காத, மூளை உருகிற போகுது. இப்போ போய் தூங்கி காலையில பொறுமையா யோசி" என்று கேலியாக ஹர்ஷத் சொல்ல, பக்கென்று சிரித்தவாறு பைக்கிலிருந்து இறங்கியவள், அவனை நெருங்கி அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு "கவனமா போ, நான் வரேன்" என்றுவிட்டு நகரப் போக, அவளிடையில் கைக் கொடுத்து தன்னோடு நெருக்கினான் ஆடவன்.
ஆராதியாவோ விழி விரித்து அவனைப் பார்க்க, "என்ன நீ, கன்னத்துல கிஸ் பண்ற. எனக்கு இது பத்தாதே ஆரும்மா..." என்றுக்கொண்டே அவளிதழை விழிகளால் காட்ட, "நடுரோட்ல நின்னுகிட்டு என்ன கேக்குற ஹரி?" என்று உதட்டை சுழித்தாள் அவள்.
"அதான் யாரும் இல்லல்ல, ஒன்னே ஒன்னு ப்ளீஸ்டீ!" என்று இவன் விழிகளை சுருக்கி அவளிதழையே பார்த்தவாறு கெஞ்ச, தன் ரோஜா இதழ்களை விரித்து சிரித்தவள் சுற்றி யாராவது இருக்கின்றனரா என பார்த்துவிட்டு அவன் விழிகளைப் பார்க்க, அந்த பார்வைக்கான அர்த்தத்தை புரிந்துக்கொண்டு அவளிதழை நோக்கி குனிந்தான் ஹர்ஷத்.
இரு இதழ்கள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ள, இரு உடல்களிலும் மின்சாரம் பாய்ந்த உணர்வு.
"இது முதல் தடவை இல்ல. ஆனா ஒவ்வொரு தடவை உன்னை கிஸ் பண்ணும் போதும் மொதல் தடவை பண்ற மாதிரியே ஃபீல் ஆகுதுடீ. சலிக்கவே மாட்டேங்குது" என்று கிறக்கமான குரலில் அவன் சொல்ல, செந்தாமரையாய் அவளுடைய கன்னங்கள் வெட்கத்தில் சிவக்க, அந்த ஆண்மகனை அது மேலும் கிறங்கடித்தது.
அதை ரசித்தவாறே அவளிதழை கவ்விக்கொண்டவன் தன்னை மறந்து அவளிதழை சுவைத்துக்கொண்டே போக, ஆராதியாவும் விழிகளை மூடிக்கொண்டாள்.
இருவரும் மாறி மாறி இதழ்தேனை உறிஞ்சிக்கொண்டே செல்ல, திடீரென 'ஹ்ர்ம் ஹ்ர்ம்...' என்று குரலை செருமும் சத்தம் கேட்க, பதறியடித்துக்கொண்டு தன்னவனிடமிருந்து விலகி நின்றாள் ஆராதியா.
அவளுடைய இதயம் படுவேகமாகத் துடிக்க, பயத்தில் வேகமூச்சுகள் வாங்க ஆரம்பித்துவிட்டது. உடனே தன் இன்ஹேலரை எடுத்து மருந்தை உறிஞ்சியவாறு அவள் திரும்பிப் பார்க்க, அங்கு மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு நின்றிருந்தாள் வைஷ்ணவி.
ஹர்ஷத்திற்கும் ஒருகணம் திக்கென்றுதான் இருந்தது. அவனும் பதற்றத்தில் நெஞ்சை நீவி விட்டவாறு வைஷ்ணவியைப் பார்த்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டவன், "இப்படிதான் பேய் மாதிரி வந்து பயமுறுத்துவியா பிசாசு... பிசாசு..." என்று கடிந்துக்கொள்ள,
"இப்படிதான் ரூமுக்குள்ள பண்ண வேண்டியதை எல்லாம் வீட்டு வாசல்ல நின்னு பண்ணிக்கிட்டு இருப்பாங்களா, யாராச்சும் பார்த்தா இதோ இவளோட சேர்த்து என்னையும்ல தப்பா நினைப்பாங்க. ச்சே!" என்று வைஷ்ணவியோ போலியாக விழிகளை உருட்டினாள்.
ஆராதியாவோ அவளை முறைத்துப் பார்த்து, "அதுக்காக இப்படிதான் பார்ப்பியா, இது மட்டும் அம்மாவுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்" என்று கிட்டத்தட்ட மிரட்ட, சரியாக சத்தம் கேட்டு வெளியில் வந்த லலிதாவோ பைக்கில் சாய்ந்து நின்றிருந்த ஹர்ஷத்தை யோசனையோடு பார்த்தார்.
"வாங்க தம்பி..." என்ற அவரின் குரலிலேயே அவரின் மனநிலை ஆராதியாவுக்கு நன்றாக புரிய, "ஹாய் ஆன்ட்டி, எப்படி இருக்கீங்க? ஆருவ ட்ரோப் பண்ணதான் வந்தேன், உள்ள எல்லாம் கூப்பிட்டுராதீங்க. ஐ ஹேவ் நோ டைம், அர்ஜென்ட்டா போகணும் அதான்..." என்று ஹர்ஷத் அவன் பாட்டிற்கு பேசிக்கொண்டு போக, அவரோ புரியாமல் பார்த்தார்.
"நான் உங்கள உள்ள கூப்பிடவே இல்லையே தம்பி, நீங்க எந்த உறவும் இல்லாம வாசல்ல நின்னு பேசுறதையே யாராச்சும் பார்த்தாங்கன்னா தப்பா பேசுவாங்க. இனிமே இந்த நேரத்துல ட்ரோப் பண்றேன் அப்படி இப்படின்னு வராதீங்க" என்று முகத்திற்கு அடித்தாற் போல லலிதா சொல்லி விட, அவனோ ஆராதியாவை ஒரு பார்வைப் பார்க்க, கிளுக்கி சிரித்தாள் மற்றவள்.
அதற்குமேல் எதுவும் பேசாமல் ஹர்ஷத் அங்கிருந்து சென்றுவிட, "ஏன்ம்மா அவன்கிட்ட அப்படி பேசின?" என்று தன் தாயின் பக்கம் கோபமாகத் திரும்பினாள் ஆராதியா.
"ஊர்வாய மூட முடியாது தியாம்மா, அதான்..." என்று லலிதா சொல்ல, "அப்போ உங்க சின்ன பொண்ணயும் அதுக்கேத்த மாதிரி நடந்துக்க சொல்லுங்க" என வெடுக்கென்று சொன்னவள் விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட, தோளைக் குலுக்கி சிரித்துக்கொண்ட வைஷ்ணவியின் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதைப் பார்த்தவளின் விழிகள் அதிர்ச்சில் விரிய, "அக்கா..." என்று அந்த இடமே அதிரக் கத்தினாள் அவள்.