ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

திட்டும் பார்வை ... ஒட்டும் இதயம் ❤❤ - கதைத்திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 14


அன்று மட்டுமல்ல அதற்கு அடுத்து கூட நிறைய முறை இருவரும் இதுபோல் காரில் செல்லும் சமயங்களில் முத்தமிட்டு கொண்டனர்..



முன்பிருந்த பயமெல்லாம் இப்போது விக்ரமிடம் இருப்பது கிடையாது அவளுக்கு.. அவனைக் கண்டாலே காதல் மயக்கம் தான் வரும் நறுமுகைக்கு .. என்னத்தான் அவன் வேலையில் கறார் பேர் வழியாக இருந்தாலும் சில சமயங்களில் அவன் சொல்லும் வேலைகள் கடினமாக இருக்கும் பட்சத்தில்,



“ விக்ரம் நீங்களே இதை பண்ணிடுங்களேன்..” என குழைந்தால் நறுமுகை.. மாட்டுவானா அவன் ?



“ஒழுங்கா போய் பண்ணுங்க நறுமுகை.. இது உங்களோட ப்ராஜெக்ட் நீங்கதான் பண்ணனும் அப்பதான் கத்துக்க முடியும்” என திட்டமாக கூறியதும் அவனை உதட்டை சுழித்து பார்ப்பவள்,



“ அதான் நீங்க தெரிஞ்சு வச்சிருக்கீங்களே அது போதாதா? ப்ளீஸ் பண்ணி தாங்களேன் ரொம்ப பண்றீங்க?” என மிரட்டுபவளை முறைக்க மட்டும் தான் முடியும் அவனால்..



சில சமயங்களில் செய்து கொடுப்பான் பல சமயங்களில் செய்து தர மாட்டான்.. அவனிடம் அவளது சினுங்கள்கல் எல்லாம் தோற்றுத்தான் போகும்..



இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஆரம்பித்து நாட்களை அழகாய் கடத்தி வந்தனர்..



கவிதா நறுமுகையிடம் கேட்டு பார்த்து விட்டாள் ,



“ என்ன முகை இப்பல்லாம் முகம் பளிச்சுன்னு இருக்கு? என்னடி போடுற முகத்துக்கு?” என கேட்டதும் நறுமுகை என்ன பதில் கூறுவது என தடுமாறியவள்,



“ அது வீட்டிலேயே கற்றாழை வளருதுல அதுதான்டி போடுற.. அம்மா தினமும் போட சொல்லி இருக்காங்க “



“ம்ம்ம் .. நல்லா பளிச்சுன்னு இருக்குடி வர வர” என கவிதா அவளது கன்னத்தை தொட்டு பார்ப்பாள்.. .



நறுமுகைக்கு சிரிப்பு தான் வரும் இந்த பொலிவு எல்லாம் வீட்டு கை வைத்தியத்தால் வரவில்லை தன்னவனின் அருகாமையில் பூரிப்பால் வருகிறது என அவள் மட்டும் தானே அறிவாள்..



“ திருப்பி ஏதாவது மாப்பிள்ளை பார்த்தாங்களாடி வீட்டுல?” என கேட்ட கவிதாவிடம் முகத்தை சலிப்பாக வைத்துக் கொள்வது போல ,



“ இல்லடி இப்போதைக்கு வேண்டாம்னு சொல்லி இருக்கேன் சரி படிப்பு முடிவும் பார்க்க ஆரம்பிக்கலாம்னு சொல்லி இருக்காங்க பார்ப்போம்” என்பதோடு முடித்துக் கொண்டாள் நறுமுகை..



என்னதான் இறுதி செமஸ்டர் ப்ராஜெக்ட் ஆக இருந்தாலும் ஆப்ஷனல், அலையிடு மற்றும் மெய்ன் சப்ஜெக்ட் என அவர்களுக்கு வகுப்பு பாடங்கள் இருக்கத்தான் செய்தது.. அந்தந்த நேரத்திற்கு மட்டும் வகுப்புக்கு சென்று விட்டு வருவார்கள்.. அப்படித்தான் ஒரு முறை கௌசல்யா நறுமுகியை பார்த்து நக்கலாக,



“ என்ன முகை மூஞ்சியெல்லாம் பல்பா இருக்கு? இப்ப எல்லாம் விக்ரம் சார் கிட்ட திட்டு வாங்கறது இல்லையா ? மாட்டிட்டு முழிக்கிறது இல்ல போல ?” என வேண்டுமென்று அவளை மட்டம் தட்டி பேசிட, நறுமுகைக்கு அதெல்லாம் தெரிந்தாலும் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை,



“ ஒழுங்கா வேலை பார்த்து தந்தா அவர் ஏன் திட்ட போறாரு? ஆமா உனக்கு மலர்விழி மேம் போல? வச்சு செய்றாங்களோ ?’ என பதிலுக்கு நறுமுகை கேட்டுவிட கௌசல்யாவும்,



“ ஆமாம்டி எவ்ளோ வேலை தெரியுமா வாங்குறாங்க?.. முடியவே மாட்டேங்குது... ரொம்ப கஷ்டமா இருக்கு.. உங்களுக்குனா என்ன ஜாலியா இருப்பீங்க!” என அதுக்கும் குறைப்பட்டு கொண்டவளை பெருமூச்சுடன் பார்த்த நறுமுகை சலித்தபடி இரு புறமும் தலையாட்டிக்கொண்டு தலையை திருப்பிக் கொண்டாள்..



நாட்கள் கடந்தன.. அன்று தன்னவளை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு வந்திருந்தான் விக்ரம்.. நறுமுகை ,



“ ஏற்கனவே கீழே யாரும் இல்ல .. இப்ப எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க விக்ரம்?” என்றதும் வேகமாக அவளை சுவற்றில் சாய்த்தவன் இரு பக்கமும் கரம் ஊன்றி அவளை நமட்டு சிரிப்போடு பார்த்து,



“ எதுக்கு கூட்டிட்டு வந்தேன் தெரியாதா ?’ என கிசுகிசுப்பாக கேட்டதும் அவனது பார்வையில் உதடு மடக்கி சிரித்தவள்,



‘ அதான் அடிக்கடி கார்ல கூட்டிட்டு போய் கிஸ் பண்ணிக்கிட்டே இருக்கீங்களே அது போதாதா? இப்ப இங்க வேறயா ?” என போலியாய் குறை பட்டு கூறியதும் மெதுவாய் அவளை நெருங்கி இடையே பிடித்துக் கொண்டவன்,



" என்ன பண்றது உன்னை பார்த்தாலே கண்ட்ரோல் பண்ண முடிய மாட்டேங்குதே ?” என்றவாறு அவளது கன்னம் தாங்கி இதழோடு இதழ் கோர்த்துக் கொண்டான்..



எப்போதும் கரத்தை எல்லை மீறிட வைத்து விடாதவனது கரமோ பெண்ணவளது மேனியில் சற்று எல்லை மீறிட, சட்டென சுதாரித்து அவன் மார்பில் கரம் வைத்து தள்ளிவிட்ட நறுமுகை,



“ம்ச்.. என்ன பண்றிங்க? போங்க நீங்க ரொம்ப மோசம் “ என்று விட்டு குடுகுடுவென ஓடியே விட்டாள் .. செல்பவளை பார்த்து வாய்விட்டே சிரித்து விட்டான் விக்ரம்..



என்னதான் இருவரும் நெருக்கமாக பழகி வந்தாலும் அவளது வேலை என வரும்போது விக்ரம் கண்டிப்புடனே இருப்பான் அல்லவா ! அப்படித்தான் அன்று அவள் ஒரு தட்டில் பாக்டீரியாவை வளர்த்து இவள் தயாரித்த கிரீமை நடுவே வைத்தவள் யூவி (uv) லைட்டில் குறிப்பிட்ட நேரத்திற்கு வைக்க வேண்டும் என விக்ரம் ஒன்றுக்கு நான்கு முறை முன்னாடி நாளே சொல்லியிருந்தான்..



அவளும் அனைத்தையும் செட் செய்து விட நேரத்தை பார்த்த போது தான் ஜான் அவசரமாக அங்கு வந்தான்..



“ நறுமுகை ..” என்றவனது குரலில் திரும்பிப் பார்த்தவள்,



“ஏய் ஜான் .. என்ன இந்த பக்கம்?”



“ இன்னிக்கி குமாருக்கு பிறந்தநாள் கேக் கட் பண்ணனும் வா..”



“ இப்பவேவா ?”



“ஆமா அதுக்கப்புறம் ஆப்ஷன் கிளாசுக்கு போகணும்ல?” என்றதும் நறுமுகை தலை திருப்பி தான் செய்து வைத்திருந்ததை ஒருமுறை பார்த்துவிட்டு இன்னும் தான் நேரம் இருக்கிறதே பார்த்துக் கொள்ளலாம் என ஜான் உடன் சென்று விட்டாள்..



அவள் சென்ற நேரத்திற்கு அங்கு யாரும் இல்லை.. விக்ரம் கூட தனது தீசஸ் விடயமாக காலையில் இருந்து கல்லூரிக்கு வராது வெளியே சென்றிருந்தான்..



ஜானுடன் அங்கு சென்றிட இவர்களுக்கு முன்பு படித்த சீனியர் மாணவர்கள் ஆண்களும் பெண்களுமாய் சிலரும் வந்திருந்தனர் ..



அவர்களை கண்டதும் இன்னும் மகிழ்ச்சி அடைந்த நறுமுகை ஒவ்வொருவரிடமும் மகிழ்ச்சியாக பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்... அப்போது தான் ஒருவர் ,



"ஏய் பீச்சுக்கு போய் கேக் கட்டிங் பண்ணலாம் ...எல்லாரும் மீட் பண்ணி ரொம்ப நாள் ஆச்சுல..?" என்றதும் நறுமுகையோ அதிர்ந்து போய் ஜானை பார்த்து ,



"டேய் ஜான்.. ஆப்ஷ்னல் கிளாஸ் இருக்கு.." என்றதும் அவனும்,



" விடு மச்சான்.. இன்னிக்கு ஒருநாள் கட் அடிச்சிடலாம்.. எல்லாரும் வந்திருக்காங்கல.." என்றதும் அவளுக்கும் தான் மட்டும் மறுத்தால் நன்றாக இருக்காது என்பதால் சரி என்று விட்டாள்..



மற்ற டிபார்ட்மென்ட்டில் இருக்கும் ஜான் மற்றும் குமாரின் நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர் ...குமார் அடிக்கடி கார் கொண்டு வருவான் அதிலேயே வந்திருந்த சீனியர்கள் சில பேர் நறுமுகை ஜான் என அனைவரும் ஏறிக்கொள்ள... ஒரு சிலபேர் இருசக்கர வாகனத்தில் அருகே இருக்கும் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்...



ஐஸ் கேக் என்பதால் உருகிவிடும் என முதலில் கேக்கை தான் வெட்ட ஏற்பாடு செய்தனர்... காரின் பேனட்டின் மீது கேக்கை வைத்து ஜானும் இன்னொருவரும் குமாருக்கு இருபுறமும் பாப்ர்ஸை கையில் வைத்துக் கொண்டு நின்றிட, இன்னொருவர் இவற்றையெல்லாம் போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார்..



அனைவரும் சேர்ந்து குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடிட புன்னகையுடன் கேக்கினை வெட்டியவன் முதலில் ஜானுக்கு தான் ஊட்டினான்..



பாப்பஸ் வெடித்து சிதறிட அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர் ..பின் ஒவ்வொருவரும் குமாருக்கு ஊட்டினார்களோ இல்லையோ அனைவரும் அவனது முகத்தில் கேக் பூசி விட்டனர்..



அவற்றையெல்லாம் அழகாய் புகைப்படங்களை எடுத்து கொண்டனர்... பின்பு கடற்கரையில் ஆட்டம் போட்டுவிட்டு நேரத்தை பார்த்தாள் நறுமுகை...



அவள் அந்த சோதனைக்காக வைத்திருந்த தட்டினை எடுக்கும் நேரம் கடந்து இருக்க அதிர்ந்து போனவள் வேகமாக குமாரிடம் வந்து,



" குமார் சீக்கிரமா லேபுக்கு போகணும்டா.. டைம் வேற ஆயிடுச்சு.. நான் வேற டெஸ்டுக்கு சேம்பல் எடுத்து வைத்திருந்தேன்..." என்றதும்,



"ஹான்.. போலாம் போலாம்.. முகை எனக்கும் லேப்ல வொர்க் இருக்கு ..நல்ல வேலை ஞாபகப்படுத்துன.." என்றதும் அனைவரும் மீண்டும் கல்லூரிக்கு வந்து சேர்ந்தனர்..



நறுமுகை, குமார் மற்றும் ஜான் மூவரும் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு அவசர அவசரமாய் அவரவர் லேபிற்கு சென்றிட... நறுமுகையும் அடித்து பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்தாள் ..



அங்கு விக்ரமின் முதுகை தான் கண்டாள்...அவன் இருப்பதைக் கண்டவள் மகிழ்ச்சி அடைந்து லேபினை பார்க்க அனைவரும் அங்கு தான் நின்றிருந்தனர்..



நறுமுகை வந்ததும் அவளைப் பார்த்து சிறு சலசலப்பு எழுந்தது.. சூழ்நிலையை கிரகித்துக் கொள்ள முடியாது நறுமுகை அனைவரையும் பார்த்தவாறே வர ஏதோ ஒன்று மட்டும் தவறாகப்பட்டது..



சடாரென்று கவிதாவை பார்த்திட அவளோ கைகளை உதறி,



" போச்சு..." எனும் விதமாக உதட்டசைவில் கூறியதும் நறுமுகைக்கு விக்ரம் இருக்க பயமேன் எனும் ரீதியாக அவனை நோக்கி சென்றவள் நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்த்ததும் தான் தாமதம் உள்ளுக்குள்ளே பயம் புகுந்து விட்டது அவளுக்கு...



ஆம் ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தான் விக்ரம் ...



இருந்தும் விக்ரம் தானே சமாளித்துக் கொள்ளலாம் எனும் ரீதியில் திரும்பி தான் செய்து வைத்த இந்த தட்டினை பார்த்தாள்...



கலர் மாறி விட்டிருந்தது... அதை கண்டதும் திகைத்துப் போனவள் விக்ரமிடம் அதற்கான விளக்கத்தை கொடுக்கும் பொருட்டு,



" அது... சார் ..."



"வாயை மூடு ..." .என அந்த லேபே அதிரும் வண்ணம் கர்ஜித்து இருந்தான் விக்ரம்..



அதில் அனைவரது கவனமும் இவர்களிடம் திரும்பிட விக்ரமோ அதைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலை கொள்ளாது,



" என்ன நினைச்சுகிட்டு இங்க வந்து இருக்கீங்க நறுமுகை....??? ஒரு டெஸ்ட் பண்ண சொன்னா அதை உருப்படியா பண்றது கூட உங்களுக்கு துப்பு இருக்காதா..??? அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேலை உங்களுக்கு..??" என வார்த்தைகள் சுள்ளென வந்து விழுந்தது அவனிடமிருந்து...



அவனது பேச்சில் நறுமுகைக்கு கை கால் எல்லாம் கிடுகிடுவென நடுங்கி விட்டது...



"அ... அது... நான்..." என்ன பதில் கூறுவது என திணறியவள் முன்பு வேகமாக வந்து நின்றவன்,



" பீச்சுக்கு போயிட்டு ஆட்டம் போட்டு வந்தீங்களா...??" என அடிக்குரலில் கேட்டதும் விலுக்கென அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு கண்ணில் முனுக்கென்று கண்ணீர் தேங்கிவிட்டது ...



"இல்ல..சா.. சார்... அது.. குமாருக்கு.. பிற..ந்தநாள்... அதா..ன் ..அவனுக்கு.. பிறந்தநாள்... அது ...எப்படியாவது..."



" இஷ்டத்துக்கு எங்க வேணாலும் போயிட்டு வந்துட்டு இருக்க வேண்டியது ...... உங்களுக்கு வேலை இருக்குல்ல அதை விட்டுட்டு ஆட்டம் போட போயிட்டீங்க...???? இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன் படிக்க தானே இங்க வந்து இருக்கீங்க..??? இல்ல வேற எதுக்காகவா...???" என வார்த்தைகள் ஒவ்வொன்றையும் அமிலமாய் அவள் மீது வீசி இருந்தான் விக்ரம்...



பாவம் நறுமுகை அவனது பேச்சில் நிலை குலைந்து போய் இருந்தாள்...



"ப்ராஜெக்ட் முடிக்கிற சுட்டுவேஷன்ல இருக்கோம்.. நீங்க என்னடானா இஷ்டத்துக்கு ஆடிட்டு இருக்கீங்க... நான் ஒன்னும் உங்கள மாதிரி வெட்டியா இருக்கலை நறுமுகை... எனக்கும் வேலை இருக்கு ..நான் எல்லாத்தையும் விட்டுட்டு உங்களுக்கு சொல்லி தரேன்... அதுக்கு ஏத்த மாதிரி நீங்களும் பிக்கப் பண்ணிக்கணும்.. இப்படி எனக்கு என்ன வந்துச்சுன்னு உங்க இஷ்டம் போல இருக்க முடியாது... படிக்கறதுக்கு இஷ்டம் இல்லனா நீங்களும் எதுக்கு காலேஜுக்கு வரீங்க..?? பர்த்டே செலிபிரேஷன் ரொம்ப முக்கியம் பாருங்க...!



இப்ப உங்க வேலை இங்க கெட்டடுச்சு... உங்க ஃப்ரண்டு வந்து பண்ணுவாங்களா..??? கொஞ்சமாவது பொறுப்புன்னு ஒன்னு இருக்கா ..??? எதிலையும் கவனம் கிடையாது.. எல்லாத்துலையும் அலட்சியம்.. உங்களை மாதிரி ஒரு ஜென்மத்தை நான் பார்த்ததே இல்லை..." என வார்த்தைகளால் அவளது மனதை சுக்குநூறாக உடைத்து இருந்தான் விக்ரம் ...



அனைவரையும் ஒரு கணம் பார்த்தவன் கண்களை இறுக மூடி திறந்து,



"நீங்க என்ன பண்ணுவீங்க ஏது பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது... எனக்கு இந்த டெஸ்ட் கம்ப்ளீட் பண்ணிட்டு தான் நீங்க வீட்டுக்கு போகணும் இன்னிக்கு ..." என கை சட்டையை மடித்து விட்டவாறு அவளைத் தாண்டி விறுவிறுவென சென்று விட்டான் விக்ரம் ...
நறுமுகையின் கண்களில் வெல்லம் போல கண்ணீர் சுரந்தது....


கவிதாவிற்கு அவளை பார்க்கவே பாவமாக இருந்தது போல...

வேகமாக அவள் அருகே வந்து,



" எங்கடி போன..??? டெஸ்டுக்கு வச்சிருக்கல டைம் கீப்அப் பண்ணனுமா பண்ண கூடாதா..??? லூசு மாதிரி ஏன் முகை இப்படி பண்ணிட்டு இருக்க ..?? இப்ப பாரு நீதானே ஃபர்ஸ்ட்ல இருந்து பண்ணனும்..?" என பொறுப்பாய் கூறியதும் நறுமுகைக்கு அழுகையாக வந்தது ...

அவளுக்கு யாரையும் நிமிர்ந்து பார்க்க துணிவு இல்லை...

அவள் பேச்சையும் மீறி கண்ணீர் மட்டும் சரசரவென கன்னங்களில் இறங்கிட, தலை குனிந்தவாறு அனைத்தையும் எடுத்து சுத்தம் செய்தவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்...



பின்னிருந்து அவளைப் பார்த்த சாமுவேலின் இதழ்களில் நக்கல் புன்னகை ஒன்று மட்டும் பூத்தது இதழில்...பின்னே இதற்கு காரணகர்த்தாவே அவன் தானே..!
 
Status
Not open for further replies.
Top